என் வலைப்பதிவுப் போக்குகள்

2007 ஆம் ஆண்டை “வலைப்பதிதல் ஆண்டு” என்று நாட்குறிப்பில் எழுதத்தக்க அளவு வலைப்பதியும் வேகம் கூடுகிறது!! 2007 தொடக்கத்தில் துறை சார் பதிவுகள் என்று ப்ளாகரில் எண்ணற்ற புதுப் பதிவுகள் தொடங்கி, பராமரிப்பில் விழி பிதுங்கி, தொடக்க ஆர்வம் குன்றி நிறைய பதிவுகளை அழித்து விட்டேன். இனி புதிதாய் ஒரு வலைப்பதிவையும் எங்கும் திறக்கும் ஆர்வம் இல்லை. இருக்கிற வலைப்பதிவுகள் போதும் 🙂 தனித்தளத்துக்கு நகர்வது, திரட்டிகளில் இருந்து விலகுவது வலைப்பதியும் வேகத்தைக் குறைக்கும் என்று நினைப்பு பொய்த்துப் போனது 🙂 திரட்டிகளில் இருந்த போது இருந்ததை விட மறுமொழிகள் எண்ணிக்கை குறைந்தது. ஆனால், அவற்றின் தரம் கூடியது. வருகையாளர் எண்ணிகையும் கூடியது.

எச்சரிக்கை: நாட்குறிப்பு / சொந்தக் கதை 🙂

* 2005 சனவரியில் முதல் எழுத்து . அதற்கு ஆறு மாதம் முன்னரே தமிழில் எழுதக் கற்றிருந்தேன். ஆனால், அப்போது எங்கு, என்ன தமிழில் எழுதினேன் என்று நினைவில்லை. விக்கி அறிமுகம் மார்ச் 2005ல்,

* 2005 பிற்பகுதியில் ஜெர்மனிக்கு நகர்ந்த பிறகு தமிழ்மணம் அறிமுகமானது. இடுகைகள் எண்ணிக்கையும் கூடியது. பெரும்பாலும் செய்தி விமர்சனங்களே எழுதினேன்.

* 2006 தொடக்கம் பிற்பகுதி வரை அறவே வலைப்பதியவே இல்லை எனலாம். நெதர்லாந்துக்கு நகர்வு, வாழ்க்கைச் சூழல், விக்கி ஈடுபாடுகள் காரணம். பிற்பகுதியில் தமிழ் விக்கி திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டி மீண்டும் வலைப்பதிவுகள் பக்கம் எட்டிப் பார்க்கிறேன். அன்று தொடங்கி செய்தி விமர்சனங்கள் எழுதுவதைப் பெரும்பாலும் தவிர்த்து விடுகிறேன். (காரணம்) . தமிழ், கணினி, வலைப்பதிதல், கட்டற்ற மென்பொருள், தமிழ்99 என்று கொஞ்சம் கொள்கை பரப்பு வேலைகளில் தீவிரமடையத் தொடங்குகிறது.

* 2007 ஆம் ஆண்டை “வலைப்பதிதல் ஆண்டு” என்று நாட்குறிப்பில் எழுதத்தக்க அளவு வலைப்பதியும் வேகம் கூடுகிறது!! 2007 தொடக்கத்தில் துறை சார் பதிவுகள் என்று ப்ளாகரில் எண்ணற்ற புதுப் பதிவுகள் தொடங்கி, பராமரிப்பில் விழி பிதுங்கி, தொடக்க ஆர்வம் குன்றி நிறைய பதிவுகளை அழித்து விட்டேன். இனி புதிதாய் ஒரு வலைப்பதிவையும் எங்கும் திறக்கும் ஆர்வம் இல்லை. இருக்கிற வலைப்பதிவுகள் போதும் 🙂 தனித்தளத்துக்கு நகர்வது, திரட்டிகளில் இருந்து விலகுவது வலைப்பதியும் வேகத்தைக் குறைக்கும் என்று நினைப்பு பொய்த்துப் போனது 🙂 திரட்டிகளில் இருந்த போது இருந்ததை விட மறுமொழிகள் எண்ணிக்கை குறைந்தது. ஆனால், அவற்றின் தரம் கூடியது. வருகையாளர் எண்ணிகையும் கூடியது.

ஆண்டின் நடுவில் படிப்புக் காரணங்களுக்காக வலைப்பதியும் வேகம் குறைந்தது. ஆனால், விடாமல், மாற்று!, வலைப்பதிவர் பட்டறை, வேர்ட்பிரெஸ் தமிழாக்கம், திறந்த OPML திட்டம் என்று என் வலைப்பதிவுகளுக்கு வெளியேயான வலைப்பதிவர் சமூகச் செயற்பாடுகள் கூடுகின்றன.

வேர்ட்பிரெஸ் தரும் சுதந்திரம் வலைப்பதிவு நுட்பம் குறித்து நிறைய நோண்டிப் பார்க்கத் தூண்டியது. மாற்று! பங்களிப்புகள் காரணமாக நாள் விடாமல் தமிழ் வலைப்பதிவுகளைப் படிக்க நேர்ந்தது. இப்போது என் கூகுள் ரீடரில் 700ஐத் தொடும் தமிழ்ப் பதிவுகள். எல்லாவற்றையும் படிக்கிறேன் என்றில்லை. ஜெயமோகன் படிக்கத்தக்க வகையில் நாளும் நிறைய எழுதுகிறார் என்றாலும் ஒருவரிடம் இருந்தே நிறைய இடுகைகள், அதுவும் seriousஆன இடுகைகள் வந்தால் படிக்க அயர்ச்சியாய் இருக்கிறது. நானும் ஒரே நாளில் 4,5 இடுகைகளைப் போட்டுத் தாக்குகையில் இதை நினைத்துத் தயங்குவது உண்டு. ஆனால், எல்லா நாட்களும் எழுத மனநிலை வாய்க்குதில்லை. வாய்க்கையில் ஒன்றோடு நிறுத்த ஒப்புவதில்லை 🙂 வரும் நாட்களில் பதிப்பிக்குமாறு செய்யும் வசதி இருந்தாலும் எழுதிய உடனே பதிப்பித்துப் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி 🙂

* சில சமயம் என் பதிவைப் பார்த்தால் எனக்கே கொள்கை பரப்பு வாடை தூக்கலா இருக்கு 🙁 ரொம்ப seriousஆ இருக்கோ? “ரொம்ப தமிழாராய்ச்சி பண்ணாம நானும் கருத்து சொல்வது போல் ஏதாவது எழுதேண்டா”ன்னு அக்கா சொன்னாங்க 🙁 அதுக்காக, எத்தனை தடவை தான் ஜட்டி, பனியன் காயப்போட முடியும் 🙂 வாசகர்களை மகிழ்விப்பதற்காக என்றே எழுதத் தொடங்கினால், அப்புறம் நாம எழுத விரும்புவதைக் கொஞ்சம் கொஞ்சமா விட்டுடுவோம்னு நினைக்கிறேன். ஆனால், பிற தளங்களில் என் இடுகைகளை மேற்கோள் காட்டி சிலர் எழுதும் போது, சில விசயங்களைக் கசப்பாக இருந்தாலும் சொல்லித் தான் ஆக வேண்டும் என்று நினைக்க வேண்டி இருக்கிறது.

* திருக்குறள் உரை, உயிர்ப்பேணியலுகை தொடங்கியதோடு நிற்கின்றன. இனி வரும் காலத்தில் சிரமம் எடுத்து அவற்றை முடிக்க வேண்டும். தமிழ் இணையத்தில் அதிகம் தென்படுவது திருக்குறள் உரை தான். இருந்தாலும், என் தனிப்பட்ட புரிதலுக்காகவாவது கொஞ்சம் கொஞ்சமாக எழுதி முடிக்க வேண்டும். இது போன்ற இடுகைகள் தேடு பொறிகளில் மூலம் தொடர் வாசகர்களையும் தர வல்லன.

* இனி திரைப்பட, இசை, நூல் விமர்சனங்கள் எழுதும் எண்ணம் இல்லை. அவற்றைப் பார்க்கும் போது, படிக்கும் போது ரசித்துப் பார்க்க இயலாமல், “விமர்சனக் கண்ணோடே” பார்ப்பது கடுப்பளிக்கிறது. நல்லாயிருக்கு, நல்லா இல்லை என்று ஒரு வரியில் நண்பர்களுக்குச் சொல்ல தான் Twitter இருக்கே ! செய்தி விமர்சனம் முதல் பல விசயங்களில் ‘நானும் கருத்து சொல்கிறேன்” என்று எழுதுவதை விட யாரும் எழுதாத விசயங்களைப் பற்றி கொஞ்சமாவது எழுத நினைக்கிறேன்.

* விக்கிப்பீடியா, விக்சனரி போன்ற பட இடங்களிலும் பங்கு கொள்வது புதிய இடுகைகள் எழுதுவதற்கான கருப்பொருள்களைத் தருகிறது.

* பெரிது பெரிதாய் உள்ள விளம்பரத் தட்டிகளால் எவ்வளவு இலாபம் வரும் என்று தெரியவில்லை. தரமான தமிழ் கூகுள் adsense வந்தால் ஒழிய தொடர்பில்லாத விளம்பரங்களைப் போடுவதில் ஆர்வம் இல்லை. வலைப்பதிவுகள் மூலம் பணம் ஈட்டுவது என்பது பெரிய நோக்கமாய் இல்லை.

* 3 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட இடுகைகள் எழுதி உள்ளேன். இதற்காக விழா எடுக்க, வாழ்த்து மடல் பெறும் எண்ணம் ஏதும் இல்லை 😉

* எத்தனை widget, gadgetகளை நோண்டினாலும் ஒரு மாதத்துக்குள் அலுத்துத் தூக்கி விடுகிறேன் 🙂

* 2, 3 மாதங்களுக்குப் பிறகும் தொடர்ந்த பயன்படுத்தத் தோன்றுபவையே நல்ல நீட்சிகள், வார்ப்புருக்கள்.

* வார்ப்புரு மாற்றுவது, மறுமொழிகள் வந்திருக்கிறதா என்று பார்ப்பது, வருகை எண்ணிக்கையைப் பார்ப்பது வலைப்பதிவர்களைத் தாக்கும் வழமையான நோய் 🙂 வார்ப்புரு மாற்றும் நோயில் இருந்து மட்டும் தப்பி இருக்கிறேன் 🙂 கணிமை, தமிழ்த் தென்றல் பதிவுகளில் இருந்த புள்ளி விவர நிரல்களை நீக்கி விட்டு பதிந்த போது ஏதோ ஒரு நிம்மதி தோன்றியது. ஏன்? எத்தனை பேர் வருகிறார்கள் என்று கவலைப்படாமல் விரும்பிய போது விரும்பிய அளவு பதிவதும் ஒரு சுகம் தான் ! வேர்ட்பிரெஸ் புள்ளி விவரங்கள் நம்மை மேம்படுத்திக் கொள்ளத் தக்க விரிவான தகவல்களைத் தருவதால் அதை விட மனமில்லை.

* இப்போது என் வலைப்பதிவுகள் அனைத்திலும் மட்டுறுத்தல் இல்லாத மறுமொழிப் பெட்டிகள் இருக்கின்றன. இத்தனை ஆண்டுகளில் 2,3 ஆபாச மறுமொழிகளே வந்துள்ளன. மற்றபடி, எவ்வளவு மாற்றுக் கருத்தாக இருந்தாலும் அனுமதித்தே வருவதால் எதற்கு வீணாய் மட்டுறுத்தல் வேலை என்று விட்டு விட்டேன். எப்போதாவது haplog வகையறா எரிதங்கள் வந்தால் தற்காலிகமாக மட்டுறுத்தலாம். நான் சென்று மறுமொழி அளிக்கும் பதிவுகளில் மட்டுறுத்தல் இல்லாவிட்டால் எனக்குப் பிடித்திருக்கிறது. அதே போன்ற அனுபவத்தை என் வாசகர்களுக்கும் தர விரும்புகிறேன். மட்டுறுத்தல் இல்லா நேரத்தில் மறுமொழிகள் ஊடான உரையாடல்களும் வாசகர்களுக்கு இடையே விரைவாக நடைபெறும் தானே?

* திரட்டிகள் குறித்த விமர்சனத்தை கணிமையில் எழுதிய போது மாற்றுக் கருத்துக்கள் என்பதை விட விதண்டாவாதங்களே அதிகம் வந்தன. அப்போது மறுமொழிப் பெட்டியை மூடி வைத்த போது கொஞ்சம் நிம்மதி வந்தது. எவ்வளவு தான் கருத்துச் சுதந்திரம், இணைய ஊடகப் புரிதல் இருந்தாலும் விதிவிலக்கான நேரங்களும் இருக்கின்றன போலும், மிகவும் சர்ச்சைக்குரிய விசயங்களில் நம் கருத்தைப் பதிவது மட்டுமே நோக்கம் என்றால் மறுமொழிப் பெட்டியை மூடி வைப்பது சரியே. மறுமொழிகளை எதிர்ப்பார்க்காமல் சும்மா வலைப்பதிவது கூட பிடித்ததாகவே இருந்தது.

* நீட்டி முழக்கி எழுதும் வலைப்பதிவுகளை விட twitter குறும்பதிவுகள் பிடித்திருக்கிறது. அங்கு என்ன வேண்டுமானாலும் எழுத இயல்கிறது. பிம்பங்கள், மறுமொழிகள், புள்ளிவிவரங்கள், பராமரிப்பு என்று ஒன்றும் கிடையாது.

* என் கல்லூரி நண்பர்கள் சிலரும் என் பதிவுகளைப் படிக்கிறார்கள் போலும். அவர்கள் மறுமொழிகள் இடுவதில்லை என்பதால் அறியாமல் இருந்தேன். தொலைப்பேசியில் சொன்ன போது மகிழ்ந்தேன்.

* பல இடங்களில் ஒரே மறுமொழி அளிக்க வேண்டி வந்தால் அதைப் பற்றி ஒரு இடுகை எழுதி வைத்துக் கொண்டு தகுந்த இடங்களில் தொடுப்பாகவே கொடுத்து விடுவது உதவுகிறது.

* தமிழ் இணையம் முழுக்க கருத்துக்களுக்குப் பஞ்சம் இல்லாமல் இறைந்து கிடக்கின்றன. தகவலுக்குத் தான் பஞ்சம் ! இனி எழுதும் வலை ஆக்கங்களில் தகவல் முக்கியத்துவம் தந்து எழுத வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.

* கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாய் தமிழ் வலைப்பதிவுகளைப் படிக்கிறேன். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது போகிறது. ஆனால், இதனால் பெற்ற அறிவு, பயன் என்ன என்றால் ஏமாற்றமாக இருக்கிறது. பல சமயங்களில் தவறாமல் குமுதம், விகடன் படிப்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்று புரியவில்லை. ஒரு வேளை இந்த நேரத்தை, புத்தகங்கள் படிப்பது போன்றவற்றில் செலவழித்திருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்குமோ? 🙁 உலக இணையத்தில் தகவல் முக்கியத்துவம் உள்ள தளங்களைத் தெரிந்தெடுத்து வாசிக்க இயல்கிறது. தமிழில் இன்னும் அந்த அளவு தகவல் தளங்கள் பெருகவில்லை 🙁 தமிழ் வலைப்பதிவுகளைப் படிக்கச் செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டும். திரட்டிகளுக்கு வெளியே பல நல்ல பதிவர்கள் இயங்குகிறார்கள். தேடிப் பிடிக்க கொஞ்சம் முயற்சி வேண்டும். தமிழ் வலைப்பதிவுகளில் அதிகம் பதிவுகள் பின்வருவனவற்றைக் குறித்து இருக்கின்றன: கவிதை (பெரும்பாலும் புலம்பல் 🙂 ), அரசியல், திரைப்படம், ஈழம், செய்தி விமர்சனம்.

* இது வரை எனக்குப் போலிகள் இல்லை. அதனால் இன்னும் மூத்த பதிவராகலைன்னு நினைக்கிறேன் 😉 ஆனால், யாரோ ஒரு சிலர் என்னைக் கண்டாலே பிடிக்கவில்லை என்று மட்டும் புரிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் எங்கோ இட்ட எனக்கே மறந்து போன மறுமொழிகளையும் குறிப்பெடுத்து எனக்கே நினைவூட்டுகிறார்கள். “அங்க அப்படி சொன்னீல்ல” என்று மிரட்டுகிறார்கள் 🙂 நல்ல நினைவாற்றல் உள்ள தரமான எதிராளிகள் 🙂 அடையாளம் காட்டாமல் ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களைச் சொல்கிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் அவர்களை எரிச்சல்படுத்தி இருக்கிறேன். ஆனால், ஏன் என்று துல்லியமாகப் புரிந்து கொள்ள இயலவில்லை.

* Technology பிதாமகன் என்றொரு பட்டம் கிடைத்திருக்கிறது 🙂 ஆனா, சேது, நந்தா படங்கள் எனக்கு இன்னும் கூடப் பிடிக்கும் 🙂

* 99% சொந்தப் பெயரிலேயே பிற பதிவுகளில் கருத்து சொல்லி வருகிறேன். ஒரு சில இடங்களில் அடையாளம் காட்டாமல் மறுமொழி இட்டிருக்கிறேன்: அதற்கு முக்கிய காரணம் – சில சமயம் ஏனோ இணையம் முழுக்க என் பெயரை அள்ளி இறைப்பது போல் தோன்றுகிறது. இணையத்தில் என் படங்களை வெளியிடுவதைத் தவிர்ப்பதும் இதனாலே. “படிக்காம ஏன் நேரத்தை வீண்டிக்கிற”ன்னு அக்கா காதை திருகுவாங்க என்பதாலும் சில இடங்களில் பெயரைக் காட்டுவதில்லை 🙂 சிலர் என் பெயர் உள்ள மறுமொழிகளை அனுமதிப்பதில்லை 🙂 அங்கும் அடையாளமின்றி எழுத வேண்டி இருக்கிறது. சில இடங்களில் நான் சொல்கிறேன் என்பதை விட சொல்லவரும் கருத்து முக்கியம் என்று தோன்றினால், பெயர் இல்லாமல் கருத்து சொல்வதுண்டு.

* முடிவில்லாமல் நீளும் உரையாடல்கள் அயர்ச்சி அளிக்கின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். எல்லா இடங்களிலும் போய் நாம் வாதம் செய்வதில்லை. அது போல் இணையத்திலும் ஏற்பில்லாத கருத்தைக் கண்டாலும் புறக்கணிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு கருத்தைப் பதிந்தோம் என்றால் தொடர்ந்து அதன் மறுமொழிகளைக் கவனிப்பதில் நிறைய நேரம் போகிறது. நம் மறுமொழிகளைத் தாமதப்படுத்தினால், எப்படியும் நம் கருத்தை யாராவது ஒருவர் சொல்லி இருப்பார்கள் என்பதால் நேரம் மிஞ்சும்.

* சில மூத்த (!?) பதிவர்கள் மாற்றுக் கருத்துக்களைப் பதிப்பிப்பதில்லை. பதிப்பித்தாலும் பதில் சொல்வதில்லை. அட, நான்கு, ஐந்து இடுகைகளில் நல்ல மாதிரி கருத்து சொன்னாலும் “மரியாதைக்கு கூட” ஒரு சொல் திரும்ப வருவதில்லை. இனி இத்தகைய பதிவுகளில் கருத்திடலைத் தவிர்க்க வேண்டும்.

* தமிழ் இணையத்தில் சில pyscho பதிவர்களும் இருக்கிறார்கள் ! அவர்கள் என்ன சொன்னாலும் கண், காது, வாய் பொத்திக் கொள்வது நல்லது.

* “எந்த ஊரில் இருந்து எந்தப் பேருந்து பிடித்து வந்தார்கள்” என்ற அளவுக்கு Feedjit போன்றவை போட்டு IP கண்காணித்து விளம்பரப்படுத்தும் பதிவுகளைக் கண்டாலே பிடிக்கவில்லை.

* தமிழ் வலைப்பதிவர்களிடம் இருந்து தமிழ் இணைய முன்னேற்றம், தமிழ்க் கணிமை பங்களிப்புகளைப் பெரிதாக எதிர்ப்பார்க்கலாகாது. பலர் வாய்ச்சொல் வீரர்கள், புகழ் விரும்பிகள், பொழுது போக்கு விரும்பிகள்.

* நுட்பம் சாரா அறிவுரை இடுகைகள் வீண். தேவையும் இல்லை. போன ஆண்டு நானே வலைப்பதிவர் சமூகத்தை விமர்சித்து சில இடுகைகள் போட்டிருக்கிறேன். இனி அந்தத் தவறைச் செய்யப் போவதில்லை.

* தமிழ் வலைப்பதிவர்கள், தமிழ் வலைப்பதிவுகளில் ஏதும் விரும்பத்தகா போக்கு இருந்தால் அது சமூகத்தின் குறையே. சமூகத்தை மாற்றாமல் வலைப்பதிவு ஊடகத்தின் உள்ளடக்கம், செயற்பாடுகளை மாற்ற இயலாது. வலைப்பதிவு என்பது தனி மனித உணர்வுகள், சமூகத்தின் எதிரொளிப்பே. எனவே, தமிழ்ப்பதிவுகள் அதிர்ச்சி அளிப்பது போல் தோன்றினால் நிகழ் உலகச் சமூகமும் அவ்வளவு அதிர்ச்சிக்குரியது என்று புரிந்து கொள்ள வேண்டியது தான். சமூகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான பல கருவிகளில் ஒன்று தான் இணையம்.

* இது வரைக்கும் பொறுமையாகப் படித்து இந்த இடுகையில் எத்தனை smileyகள் இருக்கின்றன என்று எண்ணிச் சொல்பவர்கள் வலைப்பதிவுக்கு நிறைய மறுமொழிகள், வருகையாளர்கள் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன் !

பிற தளங்களில் எழுதியவை..

இந்தத் தனிப்பதிவு போக, அப்பப்ப பிற தளங்களில், கூட்டுப் பதிவுகளில், நண்பர்களின் பதிவுகளில் எழுதுவதும் ஒலி உரையாடல்களில் பங்குபெறுவதும் உண்டு. அவற்றில் சிலவற்றை ஒரு குறிப்புக்காக இங்கு தொகுத்து வைக்கிறேன்.

அண்மைய இடுகைகள்

தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள்

தமிழாக்கத் தொனி குறித்த உங்கள் கருத்து தேவை

ஆன்மிகப் பதிவுகளால் தமிழ் இணையத்துக்கு நன்மை உண்டா?

பதிவர் சுதந்திரமும் போலித்தனமும்

தமிழ்99 – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தமிழ் வலைப்பதிவுலகம்

2 நிமிடத்தில் செய்த திரட்டி

2680+ தமிழ் வலைப்பதிவுகள் பட்டியல், OPML வெளியீடு

பதிவுகளைத் திரட்ட பதிவரின் அனுமதி தேவையா?

பதிவரா திரட்டியா? திரட்டி அரசியல், திரட்டிச் சார்பின்மை, திரட்டிகளின் தாக்கம் – பதிவர் பட்டறை உரையாடல்

தமிழ்ப்பதிவுகளைக் கடத்தும் Thatstamil.com

திரட்டி எத்தனை திரட்டியடா?

திரை விமர்சனம்

தாரே சமீன் பர், பில்லா, ஓரம் போ,

பதேர் பாஞ்சாலி, Catch me if you can, Munich, Schindler’s List, சக் தே இந்தியா, அம்முவாகிய நான், நாளைய பொழுது உன்னோடு,

பொல்லாதவன், வேல், அழகிய தமிழ் மகன், மச்சக்காரன், மலைக்கோட்டை, மருதமலை, வீராப்பு, சபரி, நம்நாடு, சிவி,

அதிதி, ஆர்யா (2004), சத்தம் போடாதே

தமிழ்

ஆய்த எழுத்தைக் கொல்வது முறையா?

தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்

தமிழ் விக்கிபீடியா அறிமுக நிகழ்படம்

தமிழ் விக்சனரி அறிமுக நிகழ்படம்

எப்படி?

கூகுள் ரீடர் பயன்படுத்துவது எப்படி? – விளக்க நிகழ்படம்

தமிழ்99 தட்டச்சு விளக்க நிகழ்படம்

WordPressல் பதிவிடுவது எப்படி? – விளக்க நிகழ்படம

Bloggerல் பதிவிடுவது எப்படி? – விளக்க நிகழ்படம

தனித்தளத்தில் வலைப்பதிவு தொடங்குவது எப்படி?

தனித்தளப் பதிவுகள் தேவையா?

ஒலி உரையாடல்கள்:

சிவாஜி திரைப்படம், தமிழக ஈழ உறவுகள் என்று பலதரப்பட்ட விசயங்கள் குறித்து சயந்தனுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்.

தமிழ்ப் பதிவுலகம், கட்டற்ற மென்பொருள்கள், மாற்று! என்று இன்னும் பல விசயங்கள் குறித்து சயந்தனுடன் மேற்கொண்ட உரையாடல்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நெதர்லாந்தில், இந்தியா குறித்து:

1. சாதின்னா என்ன? ஏன் சாதி இருக்கு? யார் சாதியை உருவாக்கினாங்க?

பதிலை முழுசா விளக்குவதற்குள் மண்டை காய்ந்து ஓடி விடுவார்கள்!

2. நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை எப்படி ஏத்துக்கிறீங்க? பெண்ணைத் தெரியாம எப்படி கூட வாழ்றது? திருமணத்துக்கு மதம், சாதி, மொழி-ன்னு என்னென்ன தடைகள் வரும்? நெருங்கிய சாதிப் பெண் என்றால் மணந்து கொள்ளலாமா? அது எப்படி அத்தை மகளை மணக்கிறீங்க?

நான் சொல்றது – நெருங்கிய சாதி என்ன, அத்தை மகளே ஆனாலும் எந்தப் பிரச்சினையும் இல்லாம காதல் திருமணம் கைகூடுறது ஒரு கொடுப்பினை தான் !

3. இந்தியால பல மொழி இருக்கே? எப்படி தொடர்பு கொள்றீங்க? அது என்ன ஒரு நாட்டுல இருந்து வந்துட்டு ஒருவருக்கு
ஒருவர் ஆங்கிலத்துல பேசிக்கிறீங்க?

4. இந்தியாவுல ஏன் பணக்காரன் – ஏழைக்கு இடையில் இவ்வளவு பெரிய பிரிவு இருக்கு?

5. இந்தியாவுல பாம்பு இருக்கா? வேற என்ன எல்லாம் விலங்கு இருக்கு? ஏன் மாட்டுக் கறி சாப்பிட மாட்டீங்க? எந்தெந்த சாமிக்கு என்னென்ன வாகனம்?

6. இந்தியா ஏன் இலங்கைப் பிரச்சினையில் தலையிட மாட்டேங்குது?

7. கிரிக்கெட்னா என்ன? அத எப்படி விளையாடுறது? இந்தியால ஏன் கால்பந்து பிரபலமாகலை?

கிரிக்கெட்னா குதிரை மேல ஏறி ஆடுற ஆட்டமான்னு ஜெர்மனில ஒருத்தன் கேட்டான்..அடப்பாவிகளா!

8. இப்ப இருக்க காந்தி எல்லாம் மகாத்மா காந்தியின் உறவுகள் தான?

9. எப்படி இந்து மதத்தில் இவ்வளவு கடவுள்கள்? உனக்கு யாரைப் பிடிக்கும்? ஏன் பிடிக்கும்? ஒரு கடவுகளுக்கு இன்னொருவர் என்ன உறவு?

அலுவலகத்தில்:

வார இறுதி எப்படி போச்சு? விடுமுறைக்குப் போறியா? அம்மா அப்பாவை எப்ப இங்க அழைச்சிட்டு வர்ற? weather மோசமா / நல்லா இருக்கு இல்ல?

Project meetingல்:

So how about the results?

#$%&* 🙁

தமிழர் அல்லாத இந்தியர்கள்:

ஏன் இந்தி கத்துக்க மாட்டீங்கிறீங்க? ஏன் இந்தி மேல வெறுப்பு? சமசுகிருதத்துல இருந்து தான தமிழ் வந்துச்சு? தமிழ் எவ்வளவு பழமையானது? தமிழ் எப்படி செம்மொழியாகும்? ஏன் உங்க மொழித் தூய்மையை வலியுறுத்துறீங்க? இந்தி படிச்சா நாட்டு ஒற்றுமை கூடும்ல?

உண்மையிலயே அறியாமையால கேட்டா விளக்கம் சொல்வேன். விதண்டாவாதத்ததுக்குக் கேட்டால், “போடா, புண்ணாக்கு”-னுட்டுப் போய்டுவேன். தமிழ், மொழி தொடர்பில நான் கொஞ்சம் sensitive தான். தெலுங்கு, கன்னடக் காரர்களுக்கு அவர்கள் மொழி தமிழில் இருந்து வந்தது என்று சொல்லிக் கொள்வது ஏதோ அவர்கள் உடம்பில் கம்பளிப்பூச்சி ஊர்வது போல் இருக்கும் போல. சமசுகிருதத்தில் இருந்து அவர்கள் மொழி வந்தது என்று சொல்லும் போது அவர்கள் முகத்தில் ஒரு 100 watts ஒளி பார்க்கலாம். தனித்தமிழ் இயக்கம், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் நடத்தியே தமிழின் நிலை இந்த அளவில் இருக்கிறது. பிற மாநிலத்தவர் போக்கைப் பார்த்தால், இன்னும் 50 ஆண்டுகளில் அவர்கள் மொழிகளின் நிலை பின்வருமாறு இருக்கலாம் – மெத்தப்படித்தவர்கள், ஆங்கில எழுத்துக்களில் தெலுங்குச் சொற்களை எழுதிக் கொண்டிருப்பார்கள். படிக்காதவர்கள், ஆங்கிலச் சொற்களைத் தெலுங்கில் எழுதி அதை தெலுங்காக்கி விட்டிருப்பார்கள். தமிழின் வளர்ச்சியை எந்த அளவு வலியுறுத்துகிறேனோ அதே அளவு வங்காள, தெலுங்கு நண்பர்களிடம் அவர்களின் மொழியின் இருப்பு, வளர்ச்சி, தொடர்ச்சி குறித்து வலியுறுத்தினால் வரும் பதில் – “Why unnecessarily think about all this..see the world is changing and we better learn english..these things all need to be done by government..blah blah blah” மொழி மீதான அறிவு, பற்று, காதல், உணர்வு, பிணைப்பு நம்மவர்களுக்கு ரொம்பவே கூட என்று தான் தோன்றுகிறது.

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்புகையில் கேட்கப்படுவது:

அபத்தா, அமத்தா, அத்தை, சித்திகள்:

உங்க நாடு எவ்வளவு தொலைவில இருக்கு? எவ்வளவு நேரம் பயண நேரம்? உங்க நாட்டுல சாப்பாடு, குளிர் எப்படி? அங்க மாட்டுக் கறி, பன்னிக்கறி திம்பீங்களா? நீயா தான் சமைக்கணுமா? என்ன சமைப்ப? நம்ம ஊர் சாப்பாடு கிடைக்குமா? என்ன விலை? கோயில் இருக்கா? அதில என்ன சாமி இருக்கு? அது எவ்வளவு தொலைவு? எப்பெப்ப கோயிலுக்கு போவ? தண்ணி கிண்ணி அடிச்சுப் பழகிட்டியா? phone பேசுறதுக்கு ரொம்ப செலவு வராதா? நம்ம ஊர் ஆளுங்க எல்லாம் இருக்காங்களா? போய் பத்து மாசத்துல வந்துட்ட? அங்கனயே இருந்தா காசு மிச்சப்படுத்தலாம்ல?

மாமாக்கள்:

என்ன மாப்ளே படிச்சுக்கிட்டே போறீங்க? எப்ப சம்பாதிக்கிறது, கல்யாணம் கட்டுறது? நம்ம புள்ளைகளை எல்லாம் கட்டுவீங்களா? உங்களுக்குப் படிச்ச புள்ளை தானே ஒத்து வரும்?

டீக்கடை பெரிய மனுசர்கள்:

அங்க வேலை எப்படி தம்பி? எவ்வளவு நேரம் வேலை? எவ்வளவு சம்பளம்? மிச்சப்படுத்தலாமா? நம்ம வீட்டுத் தம்பி Polytechnique படிச்சிருக்கான்? அங்க வேலை கிடைக்குமா? Agent மூலமா போனீங்களா? Ticket செலவு எவ்வளவு? அதுவும் உங்க companyல கொடுப்பாங்களா? நெதர்லாந்து எங்க இருக்கு?

நண்பர்கள்:

மச்சான், CD- கீடி, P*** magazines, சரக்கு வாங்கி வந்திருக்கலாம்ல? அங்க figureங்க எல்லாம் எப்படி? என்னென்ன ஊர் பார்த்த? இன்னும் virgin-னு சொல்லாத? தண்ணி அடிக்காம, சிகரெட் புடிக்காம, ****** பண்ணாம நீ எல்லாம் ஏன்டா europeல இருக்க? பல் இல்லாதவனுக்குத் தாண்டா பக்கோடா கிடைக்குது? அடுத்து என்ன பண்ற மச்சி? பார்த்து, பேசி ரொம்ப நாளாச்சுல்ல?

அம்மா, அப்பா, அக்கா, தங்கை:

இன்னும் கொஞ்சம் நாள் இருக்க மாதிரி வந்திருக்கலாம்ல? வந்த உடன போற? எப்ப திரும்ப வர்ற? வந்தா வீட்ல இருக்காம ஏன் friends friendsனு நாய் மாதிரி சுத்திக்கிட்டுத் திரியுற? சாப்பிட என்ன செஞ்சு தரட்டும்? இங்க இருந்து என்ன வாங்கிட்டுப் போகணும்? காசு இல்லைன்னு சொல்லிட்டு அங்க இருந்து ஏன் இவ்வளவையும் வாங்கிட்டு வர்ற?

காணாமல் போன நண்பர்கள் orkutல் கண்டுபிடித்தால்:

How’s life machaan? what’s up da? no scraps? what’s ur research about da? where r u da now?

நெதர்லாந்தில் இருந்து வீட்டுக்கு phone பேசும்போது:

சாப்டியா? என்ன சாப்ட? நல்லா இருக்கியா? உடம்பு நல்லா இருக்கா? அடுத்து எப்ப ஊருக்கு வர்ற? என்னாச்சும் வாங்கி அனுப்பவா? அங்க என்ன மணி இப்ப? படிப்பு எப்படி போகுது? வெயில் அடிக்குதா, குளிரா? மழை பெய்யுதா? அந்த DVD வாங்கி அனுப்புறியா? எனக்கு என்ன வாங்கிக் கொடுத்து விடுற? என்ன படம் பார்த்த? செலவுக்கு காசு இருக்கா?

இணையத்தில்:

விக்கிபீடியாவை எப்படி நம்புவது? விக்கிபீடியாவுக்கு எப்படி, ஏன் பங்களிக்க வேண்டும்? உங்கள் வலைப்பதிவை ஏன் திரட்டிகளில் இணைக்கவில்லை?

நான் அடிக்கடி கேட்கும் கேள்விகள்:

வீட்டுக்குப் பேசும் போது:

அக்கா பேசிச்சா? harish எப்படி இருக்கான்? உடம்பு நல்லா இருக்கா, அம்மா? அப்பா எங்க? பணம் கிடைச்சுச்சா? மழை பேஞ்சுச்சா? வயல்ல என்ன போட்டிருக்கு? மாடு கன்னுக்குட்டி போட்டிருச்சா? எங்க போனீங்க? வீட்டுக்கு யார் வந்தாங்க ? என்ன சாப்பாடு?

எனக்குள் நான்:

அன்புன்னா என்ன? நட்புன்னா என்ன? கற்புன்னா என்ன? உண்மைன்னா என்ன? காதல்னா என்ன? What’s the purpose of living? Is this all worth it?

விடையே இல்லாத கேள்விகள்:

ஏன் இப்படி பண்ண? நான் என்ன தப்பு பண்ணேன்? சொல்லிட்டு செஞ்சிருக்கலாம்ல?

abcd, அஆஇஈ, 123, டேய் போலீஸ்காரா, நாய்க்குட்டி, பூனைக்குட்டி, ஆட்டுக்குட்டி !

அஞ்சலிக்குப் போட்டியாய் ஒரு குட்டிப் பதிவரை இறக்கலாம்னு என் அக்கா பையனை ”தாஜா” 😉 பண்ணேன். பெரிய மனசு பண்ணி, ஒலிப்பதிவாவே போட்டுக் கொடுத்துட்டான் 🙂

குழலினிது யாழினிது என்பர் தன் அக்கா மகன் மழலைச்சொல் கேளா தவர் !

நாடி ஜோசியம் !

இந்த முறை ஊருக்குப் போனப்ப, மருதமலை அடில உள்ள ஒரு நாடிஜோசிய மையத்துக்கு அக்கா என்னை அழைச்சுக்கிட்டுப் போனாங்க. தம்பி ஆராய்ச்சி பண்ணாம இணையத்துலயே கிடக்குறானே, தேறுவானானு அவங்க கவலை..என்னடா வெளிநாட்டுல ஏதாச்சும் girl friend கிடைக்குமான்னு என் கவலை 😉 ஆக, திருமணக்காண்டம், வேலை காண்டம் இரண்டும் பார்க்குறதுன்னு முடிவு. ஏற்கனவே, அக்காவப் பத்தின விவரங்கள் எல்லாம் அந்த மையத்துல தெளிவா சொல்லி இருந்ததால, நம்மள பத்தி எப்படி சொல்லுறாருன்னு ஒரு பரபரப்பு.

போன உடன என் வயசு, கட்டை விரல் ரேகை ரெண்டும் வாங்கிக்கிட்டு ஒரு disclaimer கொடுத்தாரு. அதாவது, எனக்கான ஓலை அந்த மையத்துல இல்லாட்டி அன்னிக்கு குறி சொல்ல முடியாதுன்னும் அதுனால பணமும் வாங்க மாட்டம்னும் சொன்னாரு. நேர்மை, நேர்மை!

அதிர்ஷ்ட்ட வசமா 🙂 நம்ம விதி எழுதின ஓலை மருதமலை அடிவாரத்தில் துயில் கொண்டிருந்தது. தொடர்புடைய பல ஏடுகள்ள இருந்த என்னைப் பற்றின விவரங்கள் உள்ள ஏட்டைக் கண்டுபிடிச்சார். அது ஒரு knock-out round மாதிரி..எனக்கு ரெண்டு மனைவியா, எங்க அப்பாவுக்கு ரெண்டு மனைவியா, அப்பா பேர்ல சாமி இருக்கா, நான் சிறைக்குப் போயிருக்கனா, எனக்கு உடல் ஊனமா, என் பெயர்ல வடமொழி எழுத்து இருக்கா, ங் இருக்கா, ச் இருக்கான்னு அப்படின்னு வரிசையா பல கேள்விகள். எல்லாம் இல்லை, இல்லைன்னு சொல்லச் சொல்ல கழிச்சுக் கட்டிக்கிட்டே வந்தார். அதுவே, ஒரு game மாதிரி நல்லா இருந்துச்சு. கடைசியா நம்ம ஏடு சிக்கிக்குச்சு.

அப்புறம், அதுல அவரு போட்ட bit என்னன்னா, அன்னிக்கு அந்த ஏடு பத்தி நான் தெரிஞ்சுக்கிணும்னு பிராப்தம் 😉 இருப்பதால் தான் அந்த ஏடு அன்னிக்குக் கிடைச்சதாம். அவர் சொல்லுற விவரங்கள் எல்லாத்தையும் ஒலிநாடாவில் வேற பதிந்தார். ரொம்ப professional தான் !

அப்புறம், என் பேர், பிறந்த நாள், மாதம், ஆண்டு, நேரம், உடன் பிறந்தவர் எத்தனை, அப்பா தொழில், என் தொழில், அப்பா பேர், அம்மா பேர், இருக்கும் இடம் எல்லாம் துல்லியமா சொன்னார் !!

<<இப்ப, நான் வாயைப் பிளந்து கதை கேட்டது மாதிரி ஒரு smiley போட்டுக் கொள்ளவும்>>

எனக்கு அடுத்த ஆண்டு நல்ல வேலை வாய்ப்பு ஒன்று வரும் எனவும் 29 வயதுக்குள் settle (!) ஆகிடுவேன்னும் சொன்னார்.
கல்யாணத்துக்குப் பிறகும் அக்காவுடன் பாசமா இருப்பேன்னு சொன்னார்.

<<இங்க அக்கா முகத்தில் bulb எரிவது போல் ஒரு smiley போட்டுக் கொள்ளவும்>>

நான் பொறுமை இழப்பது கண்ட ஜோசியர் திருமண காண்டத்துக்கு வந்தார். அவர் அடுத்தடுத்து அடுக்கிய குண்டுகள்:

* 29 வயசுல தான் திருமணம் ! (இன்னும் 4 வருசமா 🙁 !!)
* அப்பா அம்மா பார்க்குற பொண்ணு தான் (ஹ்ம்ம்)
* உள்ளூர்ப் பொண்ணு தான் (வெளிநாட்டு வாழ்க்கை வீணா?)
* ஏகப்பட்ட பொண்ணு பார்த்துத் தள்ளிப் போய் தான் திருமணம் இறுதியாகும் (இது வேறயா??)
* பொண்ணுக்கு முழங்கைல மச்சம் இருக்கும் (நல்ல வேளை முழங்கைல இருக்கு. கொஞ்சம் தேடிப் பார்க்கலாம்)

அப்புறம், பொதுவா எனக்குப் பரிகாரம் பார்க்க வேண்டும் என்று சொல்லி ஒரு தொகையைக் கேட்டார். ஏற்கனவே, திருமணத்துக்குப் பிறகு அக்காவுடன் பாசமாக இருப்பேன் என்று ஒரு bit நங்கூரம் போலப் பாய்ச்சப் பட்டிருந்ததால் அக்கா ஒப்புக்கொண்டார். அப்புறம் consulting charge 250 INR+per காண்டம் @ 200 INR ஐ சாமி சாட்சியாக பவ்யமாக அவரிடம் தந்து விட்டு வந்தோம்.

ஜோசியத்துக்குப் பின்:

– இது மூட நம்பிக்கையாகவோ ஏமாற்று வேலையாகவோ இருக்கட்டும். ஆனால், என் பிறந்த நாள் உள்ளிட்ட விவரங்களை எப்படிச் சொல்ல முடிகிறது? இது என்ன technique? mind reading என்று உண்மையிலேயே இருக்கிறதா? இருந்தால் பாராட்டத்தான் வேண்டும்.

– ரெண்டு மனைவிக் காரன், அது தெரியாத முதல் மனைவியுடன் ஜோதிடம் பார்க்க வந்தால் எப்படி உண்மையான பதிலைச் சொல்வது? 😉

– கடந்த காலத்தை அவர் துல்லியமாகச் சொல்வதால் எதிர் காலம் பற்றி அவர் சொல்வதிலும் ஒரு நம்பகம் கலந்த எதிர்ப்பார்ப்பு வருவது உண்மை.

– என்னைப் பற்றி எனக்கு ஏற்கனவே தெரிந்த பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை அவர் வாயால் கேட்பதற்கு நானே காசு தருகிறேன். நல்ல comedy, முட்டாள்த்தனம். ஆனா, இது ஒரு நல்ல அனுபவம்.

– இந்த அனுபவத்தைச் சொல்லி இன்னும் ஓரிரு நண்பர்களாவது அந்த மையத்துக்குப் போய் இருப்பார்கள்.

– இந்த மச்ச விவரம், மணப்பபெண் பற்றிய பல விவரங்கள் பொதுவாக பலருக்கும் ஒரே மாதிரி அடித்து விடப்படுகிறது என்று கேள்விப்பட்டேன்.

– திருமணம் என்று ஆனால் என்ன, என்றோ ஆவதற்கான scope இருப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்று சில நண்பர்கள் positive thinking உடன் ஆறுதல் சொன்னார்கள் 😉

– தமிழகத்தில் இதற்கு நல்ல craze இருக்கிறது. இதற்காக தஞ்சை கோயிலில் வைத்து ஒரு பட்டயப்படிப்பே நடத்துவதாகக் கேள்வி !

அடுத்துப் பார்க்க விரும்பும் நபர்கள் – லாட்ஜ் மருத்துவர்கள், ஆசிரமச் சாமியார்கள் 😉

நாடி ஜோதிடம் குறித்த விக்கிபீடியா கட்டுரை.