2005 பாதியில் ஐரோப்பா வந்தது முதல் இது வரை திரையரங்குக்குப் போய் தமிழ்ப் படம் பார்த்தது இல்லை. முன்சனை விட்டு வரும்போது தான் அங்க தமிழ்ப் படம் போடுவாங்கங்கிறது தெரியும். நெதர்லாந்தில், ரஜினி, கமல், விஜய், விக்ரம், அஜீத் போல பெரிய நடிகர்கள் படம் மட்டும் ஒரு காட்சி காட்டுவாங்கன்னு கேள்விப்பட்டு இருந்தோம். லைடன்ல இருந்து 30 நிமிட ரயில் பயண தூரத்தில் இருக்கும் பீவர்வைக்கில் சிவாஜி இன்னிக்கு ஒரு காட்சி போட்டு இருந்தாங்க. நெதர்லாந்து முழுக்க மொத்தம் கிட்டத்தட்ட 10 காட்சிகள். ஒரு நாளைக்கு இல்ல. எல்லா இடங்களிலும் வெவ்வேறு நாட்களில் போடுற எல்லா காட்சிகளையும் சேர்த்து 10 காட்சிகள் தான். சனி, ஞாயிறுகளில் மட்டும் திரையிடுகிறார்கள். நாடு மொத்தத்துக்கும் இரண்டு படப்பெட்டிகள் வாங்கி மாற்றி மாற்றி ஓட்டுகிறார்கள். ஒரு நுழைவுச் சீட்டு விலை 20 ஐரோ. நாங்க பார்த்த திரையரங்கில் 200 இருக்கைகள். குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், ஈழத் தமிழர்கள், இந்தியத்தமிழர்கள்-அவர்களின் அண்டை மாநில நண்பர்கள் என்று அரங்கு நிறைந்து இருந்தது.
படம் பார்க்கும்போது மூனு மணிநேரம் ஓடுனது தெரில. ஆனா, வெளிய வந்து யோசிச்சா மனசில தாக்கம் உண்டு பண்ணுற மாதிரி ஒன்னும் இல்ல. இந்தியன், முதல்வன் மாதிரி கதையின் தீவிரத்தை உணர வைக்கிற, படம் பார்க்கிறவரைக் கதையுடன் ஒன்ற வைக்கிற ஷங்கரையும் காணோம். ரஜினியின் பாட்சா, படையப்பா, அண்ணாமலை போல திரும்பப் பார்க்கப் போனால் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் காட்சிகளையும் காணோம். கூடுதலாவே hype பண்ணி விட்டுருக்காங்கன்னு நினைக்கிறேன். ஒரு பாட்டுக்கு 2 கோடி செலவுன்னு வைச்சாலும் மிச்ச காசு எல்லாம் எங்க போச்சுன்னு தெரில. சண்டைக் காட்சிகள்ல ஒரு பரபரப்பும் இல்லை. நினைச்சு நினைச்சு சிரிக்க வைக்கிற நகைச்சுவையும் இல்லை. சாலமன் பாப்பையா பண்ணுறது மட்டமான நகைச்சுவை. வீணா ஒரு வில்லன்.
மொட்டை ரஜினி நல்லா இருக்கார். காசு சுண்டுற, பபுள் கம் தூக்கிப் போடுற ஸ்டைல் நல்லா இருக்கு. ஷ்ரியா அழகா இருக்கார். முகம் சுளிக்க வைக்காத, அழகுணர்ச்சி கூடிய கவர்ச்சி காட்டி இருக்காங்க.
ஒரு முறை திரையங்கில் பொழுதுபோக்குகாகப் பார்க்கலாம். ஷங்கர் இயக்கி (?) இருக்கும் ரஜினி படம். பாபா, சந்திரமுகிக்கு இது பரவால. வேற ஒன்னும் பெரிசா சொல்லுறதுக்கு இல்லை.
தமிழ்ல பேர் வைச்சா வரி விலக்குங்கிற அரசு கொள்கையிலயே உடன்பாடு இல்லாதப்ப சிவாஜி – The Bossஐத் தமிழ்ப் பெயராக்கி முழு வரி விலக்கு தருவது பகல் கொள்ளை மாதிரி தான் இருக்கு. நகைக் கடைல இருந்து சாலையோரத்துல இருக்கும் உணவகம் வரைக்கும் தமிழ்ல தான் பேர் இருக்கு. தமிழ்ல பேர் வைச்ச காரணத்துக்காக எல்லாத்துக்கும் வரி விலக்கு தந்தா அப்புறம் அரசுக்கு வரி எங்க இருந்து வரும்? தமிழ்நாட்டுல தமிழ்ல பேர் வைக்க காசு கொடுத்தா தான் நடக்கும்ங்கிறது அரசின் கையாலகாதனத்தையும் அந்தச் சலுகையைப் பெறுகிற தமிழனின் அல்பத்தனத்தையும் தான் காட்டுது. கடைக்கோடி தமிழன் எல்லாம் சாலை வரி, வீட்டு வரின்னு உழலும்போது கோடிகள்ல புரளுகிற திரைப்பட முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் வரி விலக்கு எதுக்கு?