நீத்தார் பெருமை – திருக்குறள் உரை

1.1.3. நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. 21

இந்த உலகத்தில் பெரியவங்க எழுதுன எல்லா நூல்லயும், ஆசையை விட்ட, ஒழுக்கத்தில சிறந்த துறவிகளைப் பத்தி தான் உயர்வா எழுதி இருக்கும்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22

ஆசை, விருப்பு, பிடிப்புகளை விட்டவங்க பெருமைய அளக்கிறது, உலகத்தில இது வரைக்கும் இறந்து போனவங்கள எண்ணுற மாதிரி இயலாத, முடியவே முடியாத செயல்.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. 23

நல்லது எது, கெட்டது எதுன்னு ஆராய்ந்து நல்லதை மட்டும் பின்பற்றுறவங்க தான் பெருமை அடைவாங்க.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 24

மன உறுதி, அறிவு கொண்டு தன்னோட ஐந்து புலன்களையும் அடக்குறவனே, துறவறம், அதனால் கிடைக்கும் பேரின்பத்துக்குத் தகுதியானவனா தன்னை மாத்திக்கிறான்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. 25

இந்திரனே கூட தன் புலன்களைக் கட்டுப்பட்டுத்த இயலாம போனது நமக்குத் தெரியும். அப்படின்னா, தன் புலன்களைக் கட்டுப்படுத்தி புகழ் அடைஞ்சவங்க எல்லாம் எவ்வளவு ஆற்றல் மிக்கவங்களா இருந்திருக்கணும் !

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். 26

பெருமை தரக்கூடிய, செய்வதற்குச் சிரமமான செயல்களைச் செய்யுறவங்க பெரியவங்க. அப்படி ஒன்னும் செய்ய இயலாம இருக்கவங்க சிறியவங்க.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. 27

(சுவை, ஒளி, ஓசை, தொடுதல், மணம் இப்படி) ஐந்து புலன்களோட இயல்பு அறிஞ்சு அதைக் கட்டுப்படுத்தி வாழ்றவனுக்கு இந்த உலகமே கட்டுப்பட்டு இருக்கும்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். 28

நல்லா வாழ்ந்தவங்களோட பெருமையை, உலகத்தில் என்னைக்கும் அழியாம இருக்கிற அவங்களோட நூல்கள் மூலமா அறிஞ்சிக்கலாம்.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. 29

மலை மாதிரி குணத்தில் உயர்ந்து இருக்கவங்க மனசில, கோபம் ஒரு நொடி அளவு தோன்றி மறைஞ்சா கூட, அத நம்மளால தாங்கிக்க முடியாது.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். 30

எல்லா உயிர்கள் கிட்டயும் அன்பா இருக்கவங்களைத் தான் அந்தணர் அப்படின்னு அழைக்கிறோம்.

**

பார்க்கவும் – திருக்குறள் உரை பட்டியல்

வான்சிறப்பு – திருக்குறள் உரை

1.1.2 வான்சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. 11

உலகம் என்னிக்கும் உயிரோட இருக்க மழை தான் காரணம். அதனால, மழைய அமுதம்னே சொல்லலாம்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 12

நல்ல சுவையான உணவைத் தர்ற பயிர்களை விளைவிக்க மழை உதவும். தாகத்தை தணிக்க தண்ணியாகவும் உதவுறதால, மழையே உணவாகவும் கூட இருக்கும்.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. 13

ரொம்ப நாள் மழை வராம ஏமாத்திடுச்சுன்னா, அப்புறம் உலகமே பசியால வாட வேண்டியது தான்.

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால். 14

மழை இல்லாமப் போச்சுன்னா, அப்புறம் விவசாயம் செய்ய முடியாது.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. 15

சில சமயம் பெய்யாம இருக்கிறதால மக்களுக்கு கேடு் செய்யுறதும் மழை தான். அதே வேளை, நல்லா பெய்யும் போது மக்களுக்கு நன்மை செய்யுறதும் அதே மழை தான்.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. 16

மழை பெய்யாட்டி ஒரு பசுமையான புல்லைக் கூடப் பார்க்க முடியாது.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். 17

மழை பெய்யாட்டி கடலே கூட வத்திப் போயிடும்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. 18

வானத்தில் இருந்து வர்ற மழையே பெய்யாட்டி, அப்புறம் அந்த வானத்துல இருக்கிறதா சொல்லபடுற சாமிகளுக்குப் நாளும் கோயில்ல பூசையும் நடக்காது. ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவும் நடக்காது.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். 19

மழை பெய்யாட்டி, இந்த உலகத்தில தானம், தவம் போன்ற நல்ல விசயம் எல்லாம் தொடராது.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. 20

நீரில்லாம உலகம் செயல்பட முடியாது. அது போல, மழை இல்லாம யாரும் தன் கடமையை ஒழுங்கா செய்ய முடியாது. மனிதர்களிடம் ஒழுக்கமும் நிலைக்காது.

**

பார்க்கவும் – திருக்குறள் உரை பட்டியல்

கடவுள் வாழ்த்து – திருக்குறள் உரை

1.1 பாயிரவியல்
1.1.1 கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1

அ தான் முதல் எழுத்து. அதுக்கு அப்புறம் தான் எல்லா எழுத்தும். அது மாதிரி முதல் கடவுள் ஒருத்தர் இருக்காரு. அவருக்கு அப்புறம் தான் உலகத்துல எல்லாமுமே.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 2

அறிவு பெறுவதற்காகத் தான் படிக்கிறோம். ஆனா, அறிவே உருவமானவர் கடவுள். அப்படிப்பட்டவரோட காலைத் தொட்டு வணங்காம இருந்தா, அப்புறம் நாமெல்லாம் படிச்சு என்ன பயன்?

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 3

கடவுளை வணங்குறவங்க இந்த உலகத்துல நீண்ட நாட்கள் நல்லா வாழ்வாங்க.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 4

விருப்பு வெறுப்பு இல்லாதவர் கடவுள். அவரை வணங்குறவங்களுக்கு என்னிக்கும் துன்பம் வராது.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

கடவுளோட புகழ் பாடி மகிழ்கிறவங்க, அவங்களோட செயல்களின் விளைவா வர்ற நன்மை தீமை இரண்டையுமே ஒரே மனநிலையோட எதிர்கொள்வாங்க.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். 6

கண், காது, மூக்கு, வாய், தொடுறதுன்னு ஐந்து புலன்களில் இருந்தும் விடுபட்டவர் கடவுள். அதனால அவர் தவறு இழைக்கிறதில்ல. இப்படிப்பட்ட அவரைப் பின்பற்றுறவங்களும் நீண்ட நாள் வாழ்வாங்க.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. 7

தனக்கு ஈடு இணையே இல்லாதவர் கடவுள். அவர் கிட்ட சரணைடைஞ்சா ஒழிய நம்ம மனக்கவலையை ஒழிக்கிறது ரொம்ப சிரமம்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. 8

அறக் கடல் போன்றவர் கடவுள். அவரோட காலைச் சேர்ந்தவங்க மட்டுமே பிறவிக் கடலை நீந்த முடியும்.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 9

கடவுளோட காலைத் தலை வணங்கி கும்பிடாதவங்களுக்கு, சிந்தனை, உணர்வு, உயிர் இருந்தும் இல்லாத மாதிரி தான் கணக்கு.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். 10

பிறவிங்கிறது பெரிய கடல் மாதிரி. அத நீந்தித் கடக்கணும்னா, இறைவனோட காலைப் பிடிச்சுக்கிட்டா மட்டும் தான் முடியும்.

**

பார்க்கவும் – திருக்குறள் உரை பட்டியல்

எளிய திருக்குறள் உரை

எளிய திருக்குறள் உரை:
1. கடவுள் வாழ்த்து

2. வான் சிறப்பு

3. நீத்தார் பெருமை

7. மக்கட்பேறு

11. செய்ந்நன்றி அறிதல்

40. கல்வி

60. ஊக்கமுடைமை

67. வினைத்திட்பம்

***

இப்படி ஒரு எளிய உரையை எழுதிப் பார்க்கத் தூண்டிய நண்பர் கார்த்திக்பாபுவுக்குகு நன்றி.