உயிரின் விலை – இன்றைய சந்தை நிலவரம்

சாலையில் போகிற வண்டியில் புகை வந்தால், சாலையோர மரத்தில் புளியம்பழம் பறிப்பதை விட்டு விட்டு வண்டியை நிறுத்தி எட்டிப் பாருங்கள். வண்டியில் குண்டு இருந்து வெடித்து நீங்கள் செத்தால் 1 இலட்சம் கிடைக்கும்.

ஆளில்லா ரயில் சந்திப்பில் உங்கள் வாகனம் ரயிலோடு மோதி செத்தால், நீங்கள் அரசு ஊழியராயிருக்கும் பட்சத்தில், 2 இலட்சம் கிடைக்கும். இல்லாவிட்டால், 1 இலட்சம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

CNN, BBC, நம்ம ஊர் தொலைக்காட்சிகள் எல்லாம் மாய்ந்து மாய்ந்து காட்டுவதற்குத் தகுந்தவாறு யாராவது கொலைகாரனை ஏற்பாடு செய்து அவன் கையால் சாகுங்கள். உங்கள் இறுதிச் சடங்குக்கு வர உறவினர்களுக்கு அரசு காசு கொடுக்கும். இது பல இலட்சம் பெறும்.

ஆழ்குழாய் கிணற்றில் மாட்டி உங்கள் பிள்ளை சாவதை விட பிழைத்துக் கொள்வது நல்லது. எப்படியாவது காப்பாற்றி விடுங்கள். பிழைத்துக் கொண்ட குழந்தை அதிசயக் குழந்தையாகக் கருதப்பட்டு கூடுதல் உதவித் தொகை கிடைக்கும்.

அண்மையில் அரசியல் கட்சித் தொண்டர்கள் தீக்குளித்ததாகத் தெரியவில்லை. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் 1 லட்சமாவது கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். அப்போது எனக்கு அவ்வளவு விவரம் தெரியாது.

நன்றாக விற்பனையாகும் நாளிதழ் ஊழியராக இருந்து அலுவலகத்துக்குள் வைத்துக் கொழுத்தப்பட்டால் 15 இலட்சம் கிடைக்கும்.

சுனாமி, நிலநடுக்கம் வந்து செத்தால் அரசு போக நடிகர்களும் காசு தருவதாக சொல்லுவார்கள். சொன்ன மாதிரி தந்தும் விட்டால், கிடைத்த வரை இலாபம்.

உயிருக்கான இழப்பீட்டுத் தொகை தவிர, ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்குப் பூ வைத்து அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என்று விரும்பினால் அமெரிக்காவிலோ இலண்டனிலோ பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சாகுங்கள்.

பொதுவாக, உங்கள் உயிருக்கு அதிக விலை கிடைக்க வேண்டுமானால் கொஞ்சமாவது பரபரப்பாக, ஊடகங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வகையில் சாக வேண்டும். ரொம்ப கும்பல் சேர்க்காமல் கொஞ்சம் பேர் மட்டும் செத்தால் கூடுதல் தொகை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஒன்றுமே குடும்பத்துக்கு செய்யாமல் குற்ற உணர்வுடன் இறப்பவர்கள், தற்கொலை செய்து கொள்பவர்கள் இது போன்ற தருணங்களுக்குக் காத்திருந்து சாவது நலம்.

இதை எல்லாம் விட்டு விட்டு முட்டாள்த்தனமாக பாக்தாத்தின் அன்றாடக் குண்டு வெடிப்புகளால், உலக நாட்டுப் போர்த் தாக்குதல்களால், தீரா நோய்களால், ஊட்டக்குறைவால், பஞ்சம் பிழைக்கப் போன நாட்டில் முதலாளியால் அடித்தே கொல்லப்பட்டால், இன்று இங்கு 135 பேர் பலி என்று வானிலை அறிக்கை போல் தான் ஊடகங்கள் சொல்லும். பைசா தேறாது.

ஆண்டு முடிவில் ஒரு நாளைக்கு எத்தனை பேர் இப்படி இறந்தார்கள் என்று புள்ளிவிவரங்கள் வெளியாகும்.

வேறொன்றுக்கும் உதவாது.

இணையத் தமிழ் உள்ளடக்க உருவாக்கம் – தமிழ்நாடு அரசு கவனிக்குமா?

என்றாவது, தமிழ் வளர்ச்சித் துறை தொடர்புடைய தமிழக அரசு அமைச்சர் / அதிகாரி கண்ணில் படலாம் என்ற பேராசையில், தமிழக அரசுக்கு சில வேண்டுகோள்கள்.

* தமிழ்நாடு அரசு இணையத்தளத்தின் அனைத்துத் தகவல்களையும் முழுக்கத் தமிழில் தாருங்கள். TSCII வடிவில் இருந்தாலும், கூடவே ஒருங்குறித் தமிழிலும் ஒரு பதிப்பு தாருங்கள். இதன் மூலம் தமிழக அரசுத் தகவல்களை கூகுள் போன்ற தேடுபொறிகளின் மூலம் தேட இயலும்.

* தமிழ்நாடு அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி பாட நூல்கள் அனைத்தையும் ஒருங்குறி உரையாகவும், Pdf கோப்புகளாகவும் தாருங்கள். ஆங்கில வழியத்தில் படித்தவர்கள், தமிழ் வழியத்தில் படித்திருந்தாலும் அத்தகவல்கள்-தமிழ்க்கலைச்சொற்கள் மறந்தவர்கள், இலங்கை-சிங்கப்பூர்-மலேசியா வாழ் தமிழர்கள் ஆகியோருக்கு உதவும். இந்நாடுகளின் கலைச்சொல்லாக்கத்திலும் தமிழ்நாட்டுடன் இசைவு இருக்கும். தமிழ்நாட்டுப் பாட நூல்கள் நாட்டுடைமை என்பதால் இவற்றைப் பொதுக் களத்தில் எவருக்கும் பயன்படுவது போல் வைக்க வேண்டும்.

செய்தி: தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடப் பாடநூல்கள் இப்போது இணையத்தில் pdf வடிவில் கிடைக்கின்றன !

* நாட்டுடைமையாக்கப்பட்ட அனைத்துத் தமிழ் நூல்களையும் ஒருங்குறி உரையாகவும், Pdf கோப்புகளாகவும் தாருங்கள். உலகம் முழுக்க எண்ணற்ற ஆர்வலர்கள் மதுரைத் திட்டம் போன்றவை மூலம் தங்கள் பொன்னான நேரத்தைச் செலவிட்டு இந்நூல்களை மென்னூலாக்கி வருகிறார்கள். இது தேவையற்ற காலம் மற்றும் உழைப்பு விரயமாகும்.

* தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளத்துக்கும் ஒருங்குறித் தமிழ்ப் பதிப்பு தாருங்கள். அத்தளத்தில் உள்ள தேவையற்ற பயனர் எளிமையைக் குலைக்கும் கூறுகளை நீக்கி, எளிமையான உரை வடிவத் தளமாகத் தாருங்கள்.

* தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் இணையத்தளங்கள் அனைத்திலும் தமிழ்ப் பதிப்பு கொண்டு வரப் பணியுங்கள்.

* கடந்த இரண்டு ஆண்டாகத் தமிழ் இணைய மாநாடு நடைபெறவில்லை. அதனை மீளத் தொடங்குங்கள்.

* தமிழ்நாட்டுத் தமிழ்ப் பாடம், கணினி அறிவியல் பாடங்கள் ஆகியவற்றில் கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்துப் பாடங்களைச் சேருங்கள். பள்ளிகளுக்கு வாங்கும் கணினிகளில் தமிழ்99 தமிழ் விசைப்பலகை அச்சிப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள். பள்ளிக் குழந்தைகளுக்கு கணினியை அறிமுகப்படுத்தும்போதே தமிழ்த் தட்டச்சையும் சேர்த்து அறிமுகப்படுத்துங்கள். தமிழ் லினக்ஸ், தமிழ் Firefox, தமிழ் Open Office என்று திறமூலத் தமிழ் மென்பொருள்களை ஊக்குவியுங்கள். இதனால் அரசுக்குச் செலவும் மிச்சம். குழந்தைகளும் ஆங்கிலம் மீதான மருட்சி இல்லாமல் எளிதில் கணினியைக் கையாளத் தொடங்குவார்கள்.

* தமிழ்நாட்டில் புதிதாகப் படித்து வெளிவரும் தமிழாசிரியர்களின் தரம் மெச்சிக் கொள்ளும் மாதிரி இல்லை. மிகச் சிறந்த மாணவர்களை தமிழ்ப் படிப்புக்கு ஈர்க்க கல்லூரியில் தமிழ்ப்பட்டப்படிப்பு முழுக்க இலவசமாகவும் (விடுதிச் செலவு உட்பட) அதில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்குங்கள். இதனால், தமிழ்ப் படிப்புக்குப் போட்டி ஏற்பட்டுச் சிறந்த மாணவர்கள் அப்படிப்பை நாடுவார்கள்.

தமிழ்நாட்டில் குழந்தைகளின் பெயர்கள்

நல்ல, தூய தமிழ்க் குழந்தைப் பெயர்கள் தரும் இணையத்தளங்கள்:

1. http://peyar.in

குறிப்பு: தூய தமிழ்ப் பெயர்களைத் தரும் இணையத்தளங்களை அறியத்தருவதும், தமிழ்நாட்டில் தமிழ்ப் பெயர்கள் குறைந்து வருவது குறித்த விழிப்புணர்வையும் பரப்புவதே இக்கட்டுரையின் நோக்கம். தயவு செய்து, உங்கள் குழந்தைக்குப் பெயரிடுவது குறித்த ஆலோசனைகளைக் கேட்க வேண்டாம். நாள், நட்சத்திரம் பார்க்காமல் மனதுக்கினிய பெயரை வைப்பதே சிறந்தது என்பதே என் நிலைப்பாடு. நன்றி.

**
தமிழர் பெயர்களில் பிற மொழித் தாக்கம்:

முந்தா நேத்து காலையில தூங்கிட்டிருந்தப்ப அண்ணன் அழைச்சார். அண்ணனுக்கு முதல் குழந்தை பிறந்திருக்கு.

“தம்பி, பையனுக்கு பேர் வைக்கணும். ர-வுல ஆரம்பிக்கிற நல்ல பேரா சொல்லுப்பா”

காலாங்காத்தால அண்ணன் எழுப்பி விட்ட கடுப்பு எனக்கு.

“ரவிசங்கர்-னு வையுங்க” 🙂

“தம்பி, புதுசா உள்ள பேரு சொல்லுப்பா. ராம், ராஜா-னு பழைய பேர் எல்லாம் வேண்டாம்”

“சரிண்ணே, இணையத்தில பார்த்து சொல்றேன்”

வலையில தேடினப்புறம் தான் தெரியுது. இந்த எழுத்தில் புதுப் பெயர்கள் ரொம்பக் குறைவு. இருந்தாலும் ரோஷன், ரோஹித்-னு எல்லாம் வட நாட்டுப் பெயரா இருக்கு. அதையும் மீறி புதுசா வைக்கணும்னா rembrandt-னு டச்சு ஓவியர் பேரை தான் வைக்கணும். கண்டிப்பா, இந்தியால இது புதுப் பேர் தான் 🙂

முன்ன எல்லாம் சாமிப் பெயர், குலசாமிப் பெயர், முன்னோர் பெயர், புகழ் பெற்றவர் பெயர், அரசியல்வாதி பெயர், தலைவர் பெயர்னு வைப்பாங்க. செட்டியார் வீட்டுப் பிள்ளைகள் பலர் இப்படி அழகம்மை, வள்ளியம்மை-னு இப்பவும் பேர் வைச்சிருக்கிறத பார்த்திருக்கேன். இப்ப நிறைய பேர் தொலைக்காட்சித் தொடர்கள்ல வர்ற பாத்திரங்கள் பேர் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஹர்ஷினி, வர்ஷினி, தர்ஷினி-னு எல்லாம் நாடக நடிகர் பேர். ஸ, ஷ, ஜ, ஹ கலந்து பேர் வைச்சா இன்னும் ரொம்ப மகிழ்ச்சி மக்களுக்கு.

தொலைக்காட்சித் தொடர்களும் எண் ராசி, சோதிட நம்பிக்கைகளும் பெருமளவில் ஊர்ப்புறங்களை கெடுத்து வைச்சிருக்கு. எங்க சித்திப் பையன் பேர் ஹர்ஷத். ஏன் ஹர்ஷத் மேத்தான்னே வைச்சிருக்கலாமேன்னு கேட்டேன் 😉 200 மக்களும் 50, 60 மாடுகளும் இருக்க ஒரு பட்டிக்கு எதுக்கு இந்தப் பெயர்?

புதுசா பேர் வைக்க வேண்டாம்னு இல்ல. ஆனா,முதல்ல வீட்ல உள்ளவங்க அதக் கூப்பிட முடியுற மாதிரி வைக்க வேண்டாமா? ஏற்கனவே சத்யாங்கிற எங்க உறவினர் பொண்ணுக்கு வீட்டுப் பெயர் வேலாயி. காயத்ரிங்கிற பொண்ணுக்கு வீட்டுப் பெயர் காயம்மா.  இந்த வீட்டுப் பெயர்கள் எல்லாம் அப்பத்தாக்கள், அமத்தாக்கள் வசதிக்காக வைச்சது. வாயுல நுழையுற மாதிரி ஒரு பேர முதல்லயே வைச்சிருக்கலாம்ல. எங்க அக்கா பையன் பேரு ஹரீஷ்.  இருந்தாலும் அப்பத்தா அரீசு-னு தான் கூப்பிட முடியும். கிரந்த எழுத்து குறித்த எந்தக் கொள்கையும் அவங்களுக்கு கிடையாது 🙂 ஆனா, அவங்க வாயுல இப்படி தான் வருதுன்னா எது இயல்பான ஒலியமைதி கெடாத தமிழ், எது திணிக்கப்பட்ட ஒலின்னு எளிமையா புரிஞ்சுக்கிடலாம்.

பிள்ளை பிறந்த பிறகு எழுத்துப் பார்த்து பெயர் வைக்கிறத விட பிள்ளை பிறக்கிறதுக்கு முன்னாடியே அம்மாவும் அப்பாவும் இந்தப் பேர் தான்னு யோச்சிச்சு வைச்சு பேர் வைச்ச பிள்ளைங்களையும் பார்த்து இருக்கேன். அந்த குழந்தைகள்ட்ட ஒரு மகிழ்ச்சியையும் பார்த்திருக்கேன். எனக்கு எங்க அப்பா முன்னமே யோசிச்சாரான்னு தெரில. ஆனா, இந்தப் பெயர் தான் வைக்கணும்னு வைச்சாராம். மகிழ்ச்சி. அது என்ன அரும்பாடு பட்டு சுமந்து பெத்துட்டு பேரு வைக்க சோதிடனையும் அகராதியையும் பக்கத்து வீட்டுக் காரனையும் ஆலோசனை கேட்கிறது?

எங்க அம்மா ஒரு பழமொழி சொல்லுவாங்க..”ஒன்னு மண்ணும் இல்லையாம்..புள்ளைக்குட்டி அஞ்சாறாம்”-னு 🙂 அதனால் என்னோட இந்த தொலைநோக்குக் கவலைய நிறுத்திக்கிறேன். எனக்கு கல்யாணம் ஆகி, புள்ளைக் குட்டி பிறக்கும் போது பார்த்துக்கிறேன் 😉

தொடர்புடைய இடுகை: தமிழர் பெயர்கள்

தமிழ்நாட்டில் கவிதை ரசனை

இப்பொழுது எல்லாம் நான் கவிதை எழுதுவேன் என்று சொல்லிக்கொள்ளவே தயக்கமாக இருக்கிறது. ஓ நீயுமா என்று அலட்சியப் பார்வை பார்ப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.

இந்த நிலைக்கு நான்கு பேர் தான் முக்கியக் காரணம் என நினைக்கிறேன்.

1. மலிவு விலை வார இதழ்களில் வரும் கவிதைகள்
2. யாருமே வாங்காத இலக்கிய இதழ்களில் வரும் யாருக்குமே புரியாத கவிதைகள்
3. FM வானொலிகளில் ஏதாவது நகைச்சுவை, பாடல் அல்லது கவிதையாவது சொல்லத்தூண்டும் தொகுப்பாளர்கள்
4. T. ராஜேந்தர், விவேக் தேவர், பார்த்திபன், அப்துல் கலாம் (இவர் எழுதுவன பாடல்கள் தான், கவிதைகள் அல்ல) போல் எசகு பிசகாக எதையாவது எழுதி விட்டு அதை கவிதை என்று விளம்பரப்படுத்துபவர்கள்.

மலிவு விலை இதழ்கள் என்பதில் வாரமலர், குடும்பமலர், ராணி, பாக்யா வகையறாக்கள் எல்லாம் அடக்கம். குமுதம், விகடனில் தப்பித்தவறி அவ்வப்பொழுது நல்ல கவிதைகள் வந்து விடுகின்றன. அதனால் அவற்றை மன்னித்து விடுகிறேன். மேற்குறிப்பிட்டுள்ள வகையறா இதழ்களில் வருவன பெரும்பாலும் புலம்பல் அல்லது அறிவுரை கவிதைகள் தான். ஓ மானிடா என்று ஆரம்பித்து ஒரு பக்கத்துக்கு அறிவரை கூறி அறுக்கும் சமுக சீர்திருத்த பிதற்றல் காரர்களின் அறிவுரை கவிதைகள் (!) வாரமலரில் ரொம்ப பிரசித்தம். அல்லது, என் அன்பே என்று தொடங்கி புலம்புகிறார்கள். ஒரே வரியில் எழுதாமல் வரிக்கு ஒரு வார்த்தையாக பிய்த்து பிய்த்து எழுதினாலே கவிதை என்று கூறிக்கொள்ளுமளவுக்கு தான் சராசரி தமிழனின் கவிதை இலக்கியத்தின் ரசனை இருக்கிறது என்று நினைக்கிறேன். அது மாதிரி கவியரங்கத்தில் ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை மூன்று முறை படிக்கும் இம்சையான வழக்கத்தை எந்த கவி ராசன் தொடங்கி வைத்தார் எனத்தெரியவில்லை. ஒரு வேளை ஒலி பெருக்கி கோளாறினால் யாராவது இந்த வழக்கத்தை தொடங்கி வைத்து இருக்கலாம். இந்த மாதிரி இதழ்கள், கவியரங்கங்கள் மூலம் கவிதைக்கு அறிமுகமாவதனால் இப்படித்தான் கவிதை என்று புரிந்து கொண்டு அதே மாதிரி எழுதத் தொடங்கி விடுகிறார்கள். நல்ல தேடல் இருப்பவர்கள் மட்டும் நல்ல கவிதைகளை தேடிப் பிடித்துப் படித்து தங்களை செம்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.

எனக்கு பிடிக்காத இன்னொரு போக்கு தீபாவளி, பொங்கலுக்கு தவறாமல் அருளுரை வழங்கும் சாமியார்கள் போல் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ready made கவிதைகள் எழுதும் பிரபலக் கவிஞர்கள் பற்றியது. சுனாமி நிகழ்வுக்கு ஒவ்வொரு கவிஞராக கவிதாஞ்சலி எழுதிய போது எனக்கு கடுப்பாக வந்தது. உண்மையான சோகம் உடையவன் எவனும் அந்த நேரத்தில் கவிதை எழுதவும் மாட்டான். அதை பத்திரிக்கைக்கு அனுப்பி பிரசுரிக்கச் சொல்லவும் மாட்டான். அந்தக் கவிஞர்களின் குழந்தைகளும் சுனாமியில் செத்திருந்திருந்தால் இப்படித்தான் கவிதை எழுதிக் கொண்டிருந்திருப்பார்களா எனத் தெரியவில்லை.

ஆன்மத்திருப்திக்காக செய்யும் எந்த ஒரு கலை வடிவத்திலும் மட்டும் தான் உண்மையும் நேர்மையும் இருப்பதாக கருதுகிறேன். நடன அரங்கேற்றமாகட்டும் பாட்டுக்கச்சேரியாகட்டும் கைத்தட்டலை எதிர்பார்த்து அதை தொடங்கும்போதே அதில் உள்ள ஆன்ம அர்ப்பணிப்பு செத்துவிடுவதாகத்தான் நினைக்கிறேன். ஒரு பாடகியின் மிகச்சிறந்த பாடல் அவள் குழந்தைக்கு பாடும் தாலாட்டாகத் தான் இருக்க முடியும். ஒரு நர்த்தகியின் மிகச்சிறந்த நடனம் அவள் காதலனுக்காக மட்டும் ஆடிக்காட்டுவதாகவோ இறைவன் சந்நிதியில் ஆடுவதாகத்தான் இருக்க முடியும். நல்ல கவிதையும் அப்படித்தான். இப்படி எழுதினால் பிரசுரிப்பார்கள், இப்படி எழுதினால் பாராட்டுவார்கள் என்று நினைக்கும் போதே கவிதையின் நேர்மை செத்து விடுகிறது. கலைஞனுக்கு ஊக்க மொழிகள் தேவை தான்..ஆனால், அதை மட்டும் கருத்தில் கொண்டு அவன் வெளியிடும் கலைப்படைப்பில் தரம், உண்மை இருக்காது என்று நம்புகிறேன். யாராவது எழுதச்சொல்லி கேட்டு சிறுகதை, கட்டுரை எழுதலாம். ஆனால், கவிதை எழுத முடியாது; கூடாது. ஏனெனில் கவிதையின் இலக்கணம் அதன் வடிவத்தில் இல்லை. அதன் உயிரில், உணர்வில் இருக்கிறது.

பாடல் வேறு, செய்யுள் வேறு, கவிதை வேறு என்ற தெளிவு வரும்போது தான் நல்ல கவிதைகள் வெளி வரும். இனங்கண்டு ரசிக்கப்படும். நல்ல பாடலில், செய்யுளில் நல்ல கவிதையும் ஒளிந்திருக்கலாம். ஆனால், அவற்றின் வடிவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நல்ல கவிதை பிறப்பதில்லை. எதுகை, மோனையோடு நான்கு வரி உளறினாலே அதை கவிதை என்று வாங்குகிற சம்பளத்திற்கு வஞ்சகமில்லாமல் பாராட்டும் FM வானொலி தொகுப்பாளர்கள் இன்னொரு வகை கொடுமைக்காரர்கள். இதைக் கேட்டு புல்லரித்துப் போய் பக்கத்துக் கடை தையல்காரர்கள், மளிகைக் கடை காரர்கள் எல்லாரும் நானும் கவிதை சொல்கிறேன் என்று கிளம்பிவிடுகிறார்கள். பெரும்பாலும் இக்கவிதைகள் என் பேரு காசி, எனக்கில்லை ராசி என்பது போன்ற T.ராஜேந்தர் பாணியில் தான் இருக்கின்றன. தொகுப்பாளர்களும் நேரம் போகாவிட்டால் நகைச்சுவை துணுக்கு, கடி ஜோக், ஒரு பாட்டு அல்லது ஒரு கவிதையாவது சொல்லுங்களேன் என்கிற rangeக்கு கவிதை எழுதுவதைக் கொண்டு வந்து விட்டார்கள்.

ஒருவன் எவ்வளவு பெரிய கவிஞன் ஆனாலும் பார்ப்பதை பற்றியெல்லாம் கவிதை எழுதி விட முடியாது. அப்படி எழுதினால் அது வார்த்தை விளையாட்டு தானே தவிர கவிதையாகாது. பா. விஜய் ஒரே நாளில் 12 கவிதை தொகுப்புகள் வெளியிட்ட பொழுது ஆடிப்போய் விட்டேன். அவர் கவிதை எழுதுகிறாரா இல்லை அச்சு நிறுவனம் நடத்துகிறாரா தெரியவில்லை.

இது ஒரு புறம் என்றால், புரியாத கவிதைகள் எழுதும் நவீன கவிஞர்கள் இன்னொரு புறம். பத்திரிக்கை ஆசிரியரையும் சேர்த்து தமிழ் நாட்டில் நான்கு பேருக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய தமிழ் சொற்களை கொண்டு இவர்கள் எழுதும் கவிதைகளை என்னவென்று சொல்வது? ஒரு வேளை, பத்திரிக்கை ஆசிரியருக்கே புரியாவிட்டாலும், எழுதித் தந்தவர் பெரிய ஆள் என்பதால் பிரசுரித்து விடுகிறாரா எனத்தெரியவில்லை. ஆனால் எந்த சமரசமும் செய்யாமல் எனக்குப் புரிந்தால் போதும் என்ற ரீதியில் எழுதும் அக்கவிஞர்களை நிச்சயம் பாராட்டுகிறேன். இல்லை, இந்தப் பத்திரிக்கைகளில் கவிதை பிரசுரமாக இப்படி மேதாவித்தனமாக எழுதுவது தான் தர நிர்ணயமா? சில கவிதைகளை படிக்கும் போது நிச்சயமாக கடைசி வரை எதைப்பற்றி தான் எழுதி இருக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு வேளை, என் இலக்கிய அறியாமை தான் இதற்கு காரணம் என்றால் தயவு செய்து அக்கவிஞர்களின் பேனா என்னை மன்னிக்குமாக..இது போன்ற எனக்கு மட்டுமே புரியும் கவிதைகளை நானும் எழுதி நண்பர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது உண்டு என்றாலும், அவை என் ஆன்ம திருப்திக்காக எழுதியவை. யாருக்கும் புரிந்து என்னை பாராட்ட வேண்டும் என்று எழுதியதில்லை. இந்தக் கவிஞர்களும் அப்படி ஆன்ம திருப்திக்காக எழுதியிருந்தால் பத்திரிக்கைகளுக்கு அனுப்பாமலாவது இருக்கட்டும்.

குழந்தையின் சிரிப்பை போல் எந்த விளக்கமும் விளம்பரமும் தேவைப்படாமல் நேர்மையாக மனதை தொடுவது தான் நல்ல கவிதை என நினைக்கிறேன். நான் எழுதியவற்றில் நல்ல கவிதைகள் என்று கருதுவன எல்லாம் தானாக வந்து விழுந்தவை தான். யோசித்து, வார்த்தை திருகி எழுதப்படவை அல்ல. அதை எழுதி முடிக்கா விட்டால் வேறு ஒன்றும் செய்ய இயலாது என்ற தவிப்பில் தான் எழுதியிருக்கிறேன்.

போன வாரம் பெர்லின் போயிருந்த போது ஒரு ரயில் நிலையத்தில் 20, 25 குழந்தைகள் தரையில் கால் நீட்டி உட்கார்ந்து சுவாரசியமாக ice cream சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். உயிருள்ள பொம்மைகள் போல் இருந்த அவர்களின் அழகைப் பார்க்கவே கண்கொள்ளாமல் இருந்தது. அந்தக் காட்சியை புகைப்படம் எடுக்க நினைத்தேன். பின்னர், நான் அப்படி செய்வதால் அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளக் கூடும் என்பதால் ஒளிந்திருந்து அவர்களை பார்த்து விட்டு வந்தேன். அதுவும் இல்லாமல், அவ்வளவு அற்புதமான காட்சியை அனுபவிக்காமல் புகைப்படம் எடுத்தும் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. இது போன்று அன்றாட வாழ்வில் எத்தனையோ விடயங்கள் கவி எழுத உந்துகின்றன. ஆனால், அப்படியெல்லாம் இல்லாமல் stereotypeஆக வெகுஜன இதழ்களில் வரும் கவிதைகள் தமிழ் மக்களின் கவி ரசனையை மழுங்கடிக்கிறது என்று தான் நினைக்கிறேன்.

எல்லாவற்றையும் மொழிக்குள் அடக்கி விட முடியம் என்று தோன்றவில்லை. புகைப்படமாகட்டும், திரைப்படமாகட்டும், இசையாகட்டும் எதிலும் கூட கவித்துவத்தை உணர்த்த முடியும் என்று நினைக்கிறேன். கவித்துவம் என்ற உணர்ச்சி மேலிடும் போது கவிதையின் வடிவம் அவசியம் இல்லாமல் போகிறது . கண்ணீரும் மௌனமும் புன்னகையும் உணர்த்தாத கவித்துவத் தருணங்களை எந்த கவிதை உணர்த்திவிட முடியும்? ஆக, என்னைப் பொறுத்த வரை கவிதையின் இலக்கணம் அதன் உயிரில், உணர்ச்சியில் இருக்கிறது. அப்படி இல்லாதவைகளை கவிதை என்று தப்பாக அடையாளப்படுத்தாதீர்கள்; அங்கீகரிக்காதீர்கள்.

காதலியின் முதல் முத்தம் போல், குழுந்தை அம்மா என்று அழைக்கும் முதல் முறை போல் எத்தனேயோ கவித்துவமான தருணங்கள் வாழ்வில் வருகின்றன. அவற்றை எல்லாம் கவிதை எழுதி ஆவணப்படுத்தாமல் அந்தத் தருணத்தை அப்படியே ரசிப்பது உசிதம் என்ற மனநிலை சில மாதங்களாக இருக்கிறது. அதனால் நான் கவிதை எழுதுவதே குறைந்து வருகிறது.

எந்த ஒரு கவிஞனும் அவனுடைய மிகச்சிறந்த கவிதையை எழுதிச்சென்றதாய் தோன்றவில்லை. நல்ல கவிதை இது வரை எழுதப்பட்டு காட்சிப்படுத்தப்பட வில்லை என்று தான் கருதுகிறேன். எத்தனையோ நல்ல கவிதைகள் கவிஞனுக்குள்ளேயே வாசிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டு இருக்கலாம்.

சரி, இவ்வளவு சொல்கிறேனே..நல்ல கவிதை என்று நான் நினைப்பதில் இரண்டை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்..பாரதி எழுதிய காக்கைச் சிறகினிலே பாட்டும், தேடிச்சோறு நிதம் தின்று பாட்டும் எனக்குப் பிடித்தவை. உங்களுக்கு பிடித்த கவிதைகளையும் எனக்கு சுட்டிக்காட்டுங்கள்.

ரவி