ஏன் ஒரு ஆங்கிலச் சொல்லை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தமிழாக்கக்கூடாது?

ஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல சூழல்களில் இருக்கும் ஒரு சொல்லின் மூலத்தை ஆய்ந்து பார்த்து எல்லா இடங்களிலும் ஏன் அதைப் பிடித்துத் தொங்க வேண்டும்? என்னைக் கேட்டால் இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சு பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம் தமிழாக்கத்தை நியாயப்படுத்த முடியாது. இங்கு ஆளப்படும் தமிழ்ச் சொல் என்பது ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு மாற்று போல் இருக்கிறதே தவிர, தமிழர்களின் சுதந்திரமான சிந்தனைக்கு வித்திடுவதாகத் தெரியவில்லை.

பண அட்டைகள் குறித்த தமிழாக்கங்கள் பற்றி இராம.கி எழுதி இருந்தார். இது தொடர்பான உரையாடல் தமிழ் விக்சனரி குழுமத்தில் நடந்தது.

ஒரு ஆங்கிலச் சொல் வெவ்வெறு சூழல்களில் வந்தாலும், தமிழிலும் எல்லா இடங்களிலும் ஒரே சொல் கொண்டு தான் மொழிபெயர்க்க வேண்டும் என்பது இராம. கி.யின் பரிந்துரை. இது தொடர்பில் என் கருத்துக்கள்:

ஆங்கிலத்தில் ஒரு வேர்ச்சொல் பல இடங்களில் வரும்போது அவ்வெல்லா இடங்களுக்கும் ஒரே தமிழ்ச் சொல்லை ஆளத் தேவை இல்லை.

தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கிறோம் என்று வைப்போம். கண், கண்ணாடி, கண்ணீர் என்பதை eye, eye glass, eye water என்றா மொழிபெயர்ப்போம்? eye, glass, tear என்று அந்த ஊர் மொழிச் சொல்லை வைத்து தானே மொழிபெயர்க்கிறோம்.

ஏன் ஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல சூழல்களில் இருக்கும் ஒரு சொல்லைப் பிடித்து தொங்க வேண்டும்? இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சு பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம் தமிழாக்கத்தை நியாயப்படுத்த முடியாது. இங்கு தமிழ்ச் சொல் என்பது ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு மாற்று போல் இருக்கிறதே தவிர, தமிழர்களின் சுதந்திரமான சிந்தனைக்கு வித்திடுவதாகத் தெரியவில்லை. ஒரு புதிய சிந்தனையைச் சூழலைப் புரிந்து கொள்ள ஆங்கிலச் சொல் ஒரு கருவியாக இருக்கலாமே தவிர,  தமிழின் அனைத்துப் புதுச் சொற்களும் ஆங்கில அடிப்படை, சார்பு உடையதாக இருப்பது சரி இல்லை.

ஆங்கிலச் சொற்களை நேரடியாக மொழிபெயர்ப்பது செயற்கையாக இருக்கிறது. ஒரே பொருளை இரு வேறு மொழியினர் வேறு விதமாகப் பார்ப்பது இல்லையா? rainbow – ஆங்கிலேயேனுக்கு மழையின் வில்லாகிறது; நமக்கு வானின் வில்லாகிறது.  இரண்டும் குறிக்கும் பொருள் ஒன்று தான். இரு சக்கர வண்டி, துவி சக்கர வண்டி போன்ற சொற்கள் இருந்தாலும் மிதிவண்டி என்ற சொல்லே நிலைத்தது. மக்களைப் பொருத்தவரை அது மிதித்தால் நகரும் வண்டி. அவ்வளவு தான். 

நாம் பயன்படுத்தும் சொற்கள் நம் சமூகத்தை, பண்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அஞ்சலி, condolence meeting, இரங்கல் கூட்டம்  போன்ற சொற்கள் இருக்க,  அக வணக்கம், வீர வணக்கம்  போன்ற சொற்களை ஈழத்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சொற்களின் ஊடாக வெளிப்படும் அம்மக்களின் பண்பாட்டைத் தலைகீழாக நின்றாலும் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து விட முடியாது. 

சொற்கள் உள்ளூர் சிந்தனையை வெளிப்படுத்த வேண்டும். சொல்லைத் தமிழாக்காமல் சிந்தனையைத் தமிழாக்க வேண்டும். ஆங்கிலச் சொல்லையே அறியாவிட்டாலும், தமிழ்ச் சிந்தனைக்கு ஏற்ப சொல் ஆக்குவது தான் மொழி மரபு என்பது என் நம்பிக்கை, நிலைப்பாடு.

தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்துக்களில் எழுதலாமா?

என் விருப்ப வலைப்பதிவரும் குட்டித் தோழியுமான அஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கடிதம் ஒன்று அனுப்பி இருந்தேன்:

Dear Anjali kutty, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

வாழ்த்துக்கு நன்றி சொல்லிவிட்டு அவள் கேட்ட முதல் கேள்வி:

குட்டி என்பது தமிழ்ச் சொல். அதை எப்படி நீங்கள் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு எழுதலாம்?

அஞ்சலிக்கு வயது 9. பிறந்தது முதல் வளர்வது நோர்வேயில்.

எதிர்ப்பாராத இடத்தில் இருந்து எதிர்ப்பாராத நேரத்தில் வந்த கேள்வி திகைக்க வைத்தது. ஒரு சிறு பிள்ளைக்குப் புரியும் அபத்தம் ஆறு கோடித் தமிழருக்கு உறுத்தாமல் போனதே என்று நினைக்க வைக்கிறது.

நோர்வே மொழி, ஆங்கிலம் அறிந்திருந்தாலும் தமிழர் என்றால் தமிழில் கதைக்கத் தான் அஞ்சலிக்கு விருப்பம் என்று அவர்கள் அம்மா சொன்னார்கள்.

இனி முதற்கொண்டு Busபஸ் என்று எழுதாமல் Bus என்று எழுதவும் “எப்படி இருக்க” என்பதை “eppadi irukka” என்று எழுதாமல் “எப்படி இருக்க” என்றே மறக்காமல் எழுதவும் உறுதி பூண்டிருக்கிறேன். இப்படி எழுதும் போது தேவையில்லாமல் ஆங்கில எழுத்தகளில் எழுதப்பட்ட ஆங்கிலச் சொற்கள் கட்டுரை முழுக்க கண்ணை உறுத்தும் என்பதால், இயன்ற அளவு தமிழில் எழுத முனைவோம். ஸ்கூல், ரைஸ், டீவீ, ஹேப்பி பர்த்டே என்று தமிழில் எழுதப்படும் சொற்கள் எல்லாம் தமிழ்ச் சொற்கள் என்று எண்ணி வளரும் ஒரு கவலைக்குரிய தலைமுறை வந்து கொண்டிருக்கையில் குறைந்த பட்சம், இது ஆங்கிலச் சொல் என்பதையாவது வாசிப்பவருக்கு நினைவூட்டும். இதே போல் பல வேற்று மொழிச் சொற்கள், ஒலிகளையும் தமிழில் எழுதிக் காட்டுவதற்காக கிரந்த எழுத்துகளை அதிகமாகப் பயன்படுத்தித் தமிழைக் கொல்லாமல் தமிழ் ஒலிப்புக்கு ஏற்பவே எழுதி விட்டு, தேவைப்பட்டால் அடைப்புக்குறிகளுக்குள் அந்தந்த மொழி எழுத்துக்களாலேயே எழுதிக் காட்டவும் நினைத்து இருக்கிறேன். (கிரந்த எழுத்துக்களை ஏன் இயன்ற அளவு தவிர்க்க நினைக்கிறேன் என்பது இன்னொரு பெரிய தனிக்கதை. அது தனி இடுகையாக வரும்.)

இன்று முதல் இந்த கொள்கை முடிவு நடப்புக்கு வருகிறது 🙂

தொடர்புடைய இடுகை:

English words in spoken Tamil