தமிழ் TuxPaint

குழந்தைகள் வரைவதற்கான TuxPaint மென்பொருளைத் தமிழாக்கி உள்ளோம். 2004ல் தமிழா குழுவினர் வெளியிட்ட தமிழாக்கம் TSCIIயில் இருந்தது. அதை ஒருங்குறிக்கு மாற்றி, கூடுதலாக இருந்த புதிய சரங்களைத் தமிழாக்கி உள்ளோம்.

1. TuxPaint மென்பொருளைத் தரவிறக்கி நிறுவுங்கள்.

2. நிறுவுகையில் configurationல் Languages என்பதில் தமிழைத் தெரிவு செய்யுங்கள். ஏற்கனவே நிறுவி இருந்தால், (விண்டோசு கணினியில்) C:\Program Files\TuxPaint போய் Tuxpaint-config என்பதைச் சொடுக்கி அமைப்பை மாற்றலாம்.

3.  C:\Program Files\TuxPaint\locale\ta\LC_MESSAGES என்ற இடத்தில் உள்ள Tuxpaint.mo கோப்பை நீக்குங்கள்.

4. புதிய TuxPaint.mo கோப்பைத் தரவிறக்கி C:\Program Files\TuxPaint\locale\ta\LC_MESSAGES ல் சேருங்கள்.

தமிழாக்க உதவிக்கு நன்றி: சுந்தர், மயூரன், இராம. கி, புருனோ, கட்டற்ற தமிழ்க் கணிமை குழுமம், தமிழ் விக்சனரி குழுமம்.

பிற மொழியாளர் கண்டுபிடிப்புகளுக்குத் தமிழ்ப் பெயர் தரலாமா?

“பிற மொழியாளர் கண்டுபிடிப்புகளுக்கு அவர்கள் இட்ட பெயரே தர வேண்டும். அதுவே அவர்களுக்குத் தரும் மதிப்பு. தமிழில் பெயர் தருவது அவர்கள் அறிவைத் திருடுவது போல. கண்டுபிடிக்க வக்கில்லாத நாம் ஏன் பெயரை மட்டும் தமிழில் வைக்க வேண்டும்” என்பது போன்ற சிந்தனைகளைச் சில இடங்களில் கண்டேன்.

இச்சிந்தனை தவறு.

* கண்டுபிடிப்பின் பெயரில் கண்டுபிடித்தவர் பெயர், வணிக உரிமை பெற்ற பெயர் இருந்தால் மட்டுமே தமிழாக்கக்கூடாது. எடுத்துக்காட்டுக்கு, Diesel எல்லா மொழிகளிலும் Diesel தான். ஏனெனில், Diesel என்பது கண்டுபிடிப்பாளர் பெயர்.

* Computer is a thing that computes என்று ஆங்கிலம் அறிந்தவனுக்குப் புரியும். அது போல் கணினி என்றால் கணிப்பது / கணக்குப் போடுவது என்று தமிழனுக்கும் புரிவது முக்கியம்.

கண்டுபிடிப்புகளின் பெயர் காரணப்பெயராக இருந்தால் கண்டிப்பாகத் தமிழாக்க வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, Petroleum = Petro (கல் / பாறை) + Oleum (நெய் / எண்ணெய்) என்பதைத் தாராளமாக கல்நெய் என்பது போல் தமிழாக்கலாம்.

* தமிழில் எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்பது இலக்கணம். எனவே, Bus போன்ற இடுகுறிப்பெயர்களையும், வாயில் நுழையாத பெயர்களையும் தமிழாக்கலாம்.

* அறிவியற் சிந்தனைகள், கோட்பாடுகள் எல்லா நாடுகள், மொழிகளுக்கும் பொதுவானவை. இவற்றுக்கு ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொல் இருப்பது உலக வழமையே.

ஆன்

counter, filter, reader போன்று -er இல் முடியும் ஆங்கிலச் சொற்களையும் இன்ன பல சொற்களையும் எண்ணுவான், வடிகட்டுவான், படிப்பான் என்று -ஆன் விகுதி போட்டு தமிழாக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இதைத் தவிர்க்கலாம்.

இத்தகையை சொற்களுக்கு -இ விகுதி உதவலாம். சுருக்கமாகவும் மேற்கண்ட குறைகள் இல்லாமலும் இருக்கும். எ.கா: Counter – எண்ணி, Washer – துவைப்பி, கழுவி.

counter, filter, reader போன்று –er இல் முடியும் ஆங்கிலச் சொற்களையும் இன்ன பல சொற்களையும் எண்ணுவான், வடிகட்டுவான், படிப்பான் என்று –ஆன் விகுதி போட்டு தமிழாக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இதைத் தவிர்க்கலாம்.

* –er விகுதி எந்தப் பாலையும் குறிப்பதில்லை. –ஆன் விகுதி ஆண்பாலைச் சுட்டுகிறது. அனைத்து பாலருக்கும் பொதுவாக தமிழாக்குவது அவசியம்.

* இந்த –ஆன் விகுதி சொற்கள் பெரும்பாலும் அஃறிணைகளையே குறிக்கின்றன. இவற்றுக்கு -ஆன் விகுதி உயிருள்ளது போல் மயக்கம் தருகிறது.

* எதைப் பார்த்தாலும் -ஆன் என்று தமிழாக்கப் புகும்போது ஏற்கனவே உள்ள சொற்களை மறந்து விடுகிறோம். Gmail தமிழாக்கத்தில் Filter = வடிகட்டுவான் என்ற பிழையைக் காணலாம். Filter = வடிகட்டி என்பதே சரி.

இத்தகையை சொற்களுக்கு – விகுதி உதவலாம். சுருக்கமாகவும் மேற்கண்ட குறைகள் இல்லாமலும் இருக்கும். எ.கா: Counter – எண்ணி, Washer – துவைப்பி, கழுவி.

ஏன் பாடநூல் கலைச்சொற்களை அப்படியே பின்பற்றத் தேவையில்லை?

பீடபூமி என்ற சொல்லுக்குப் பதில் மேட்டுநிலம் என்ற சொல்லை ஆளலாமா என்றொரு உரையாடல் தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழ்ந்தது.

“பீடபூமி என்ற சொல் பாடநூல் வழக்கில் இருப்பதால் இச்சொல்லையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்; ஒவ்வொரு கலைச்சொல்லிலும் குற்றம் கண்டுபிடித்து மாற்றிக் கொண்டிருந்தால் மாணவர்கள் குழம்ப நேரிடும்” என்று  ஒரு பக்க வாதம் இருந்தது.

குழப்பங்களைத் தவிர்க்க கலைச்சொற்களில் ஒருங்கிணைவு அவசியம் என்றாலும் எல்லா இடங்களிலும் பாடநூல் கலைச்சொற்களை மாற்றாமல் அப்படியே பயன்படுத்தத் தேவையில்லை.

ஏன்?

1. தற்போதும் கூட தமிழ்நாடு, இலங்கை, மலேசியா ஆகிய நாட்டுத் தமிழ் வழி பாடநூல்களுக்கும் இந்தியாவிலேயே கேரளம், தமிழ்நாடு, இன்ன பிற மாநிலங்களில் உள்ள தமிழ் வழி பாடநூல்களுக்கும் கலைச்சொல் பயன்பாட்டில் வேறுபாடுகள் இருக்கின்றன.

2. தமிழ்நாட்டுப் பாடநூல்களிலேயே கூட வெவ்வேறு வகுப்புகளில், வெவ்வேறு பாடங்களில் ஒரே பொருளுக்கு வெவ்வேறு சொற்களை ஆள்கின்றனர். எடுத்துக்காட்டுக்கு ஒரு வகுப்பில் திரிகோணவிதி என்பதை இன்னொரு வகுப்பில் முக்கோணவியல் என்கிறார்கள். பாடநூல்களுக்குள்ளேயே கலைச்சொல் குழப்பங்கள் இருக்கையில், குழப்பம் வரும் என்ற காரணம் காட்டி பொருத்தமான புதிய மாற்றுக் கலைச்சொற்களைத் தடுப்பது சரி இல்லை.

பெரும்பாலான இவ்வகை மாற்றுக் கலைச்சொல் பரிந்துரைகள் இரண்டு அடிப்படையில் எழுகின்றன:

– மொழி அடிப்படை – இரசயாணம் –> வேதியியல்; பௌதீகவியல் –> இயல்பியல்.

– கருத்து அடிப்படை – complex number என்பதை சிக்கல் எண் என்று நேரடியாக மொழிபெயர்த்து வைத்திருக்கிறார்கள். இதற்கு மாற்றாக கலப்பு எண், பலக்கிய எண் போன்று பல்வேறு பரிந்துரைகள் வருகின்றன.

1960கள், 1970களில் தமிழகத்தில் ஏராளமான மொழி அடிப்படை கலைச்சொல் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால், தமிழ்நாட்டுக் கலைச்சொற்கள் அனைத்தையும் தமிழுக்கு மாற்றி விடவில்லை. பீடபூமி என்ற சொல்லை முன்பே தமிழாக்கி இருந்தால் தற்போது உறுத்தலாக இருந்திருக்காது.

சரி, பீடபூமியைத் தமிழ்ச் சொல்லாக மாற்றி அப்படி என்ன சாதிக்கப் போகிறோம்?

ஞான பீடம், பலி பீடம், பீடாதிபதி என்று பல இடங்களில் இந்த பீடம் வந்தாலும் பீடம் + பூமி = பீட பூமி என்று புரிந்து கொண்டாலும் பீடம் என்றால் என்ன என்று சட்டென புரிபடுவதில்லை. வட மொழிப் புலமையும் சேர்ந்தோருக்குப் புலப்படலாம். பள்ளியில் படித்த எனக்கே இந்த நிலை என்றால் பள்ளிக்கே போகாத பாமரனுக்கு பீடபூமி என்றால் எப்படி புரியும்? பள்ளிக்குப் போகாத வட மொழிப் பாமரனுக்கு பீடம் என்ற சொல் புரியக்கூடியதாக இருக்கையில் ஏன் தமிழ்ப் பாமரன் மட்டும் அதைப் பள்ளிக்குப் போய் புரிந்து கொள்ள வேண்டும்?

மேட்டுநிலம் என்ற சொல் பாமரருக்கும் புரியும். அவர்களாக இத்தகைய ஒரு நிலப்பரப்பை விவரிக்க முற்பட்டார்கள் என்றால் நிச்சயம் மேட்டு நிலம் என்று தான் சொல்வார்கள். களத்து மேடு, ஆத்து மேடு என்று சிற்றூர்களில் புழங்கும் சொற்களைக் கவனியுங்கள். பீடபூமி என்றெல்லாம் சொல்வார்கள் என்று கற்பனை கூட செய்ய இயலாது. சிற்றூரில் வளர்ந்தவன் என்ற முறையில் உலகம், மண், நிலம் என்ற சொற்கள் தான் மக்கள் பேச்சில் புழங்கக் கண்டிருக்கிறேன்.

மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் பல இலகுவான சொற்கள் இருந்தாலும் பாடப்புத்தக்கங்களிலும் எழுத்து வழக்கிலும் தேவையின்றி அளவுக்கு மீறிய வடமொழிக் கலப்பு இருப்பதாகப் படித்தும் நண்பர்கள் மூலமாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். பீடபூமி போன்ற சொற்கள் முதன் முதலில் தமிழ்நாட்டு அச்சுப் படைப்புகளில் ஆளப்பட்ட போது அவற்றை ஆக்கியோர் வடமொழிப் புலமையும் பெற்றிருந்திருப்போராக இருக்கலாம். அதனால், அத்தகைய ஒரு சொல்லை ஆக்கி இருந்தது அவர்களுக்கு எந்த உறுத்தலும் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவற்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று இல்லை. இது நாம் புலமைச் சொற்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த மதிப்பே. தமிழ்நாட்டில் ஒரு plateau இருந்திருந்தால் கண்டிப்பாக மேட்டு நிலம் போன்ற சொற்களை ஆக்கியிருப்போம். அல்லது, இந்த நிலப்பரப்புக்களுக்குத் தமிழன் பயணம் மேற்கொண்டிருந்தால் அதைப் பற்றி ஒரு நல்ல தமிழ்ச் சொல்லை ஆண்டிருப்பான். ஒருவேளை, இலக்கியங்களில் இதற்கான சொல் ஒளிந்து கொண்டும் இருக்கலாம்.

ஆப்பிள் போன்ற இடுகுறிப் பெயர்ச்சொற்கள் எல்லாவற்றையும் தமிழாக்குவது சில வேளை செயற்கையாக இருக்கலாம். ஆனால், பீடபூமி போன்ற காரணப்பெயர்களைத் தமிழாக்கிப் பயன்படுத்துவதில் தவறு இல்லை.

ஆனால், இவ்வாறான முயற்சிகள், மொழியைச் ‘செயற்கையாகத்’ தூய்மைப்படுத்தித் தமிழ்ச் சொற்களைத் திணிக்க முற்படுவதாகக் குற்றம் சாட்டப்படுவதுண்டு.

இது குறித்த சுந்தர் சொன்ன கருத்து:

செயற்கையாகத் திணிப்பது என்பது ஒரு பார்வை. ஆனால் எண்ணிப் பார்த்தால், பெரும்பான்மைத் தமிழர்கள் செய்தித்தாள், திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்களில் பங்களிக்கும் வாய்ப்பு இன்னும் வரவில்லை. ஆக எந்த ஒரு பயன்பாடும் இந்த குறுகிய வட்டத்தினரின் செயற்கைத் திணிப்பு தான். அப்படி திணிப்பது என்று வந்துவிட்டால் குறைந்தது வெவ்வேறு தமிழ்ச்சொற்களையாவது புழக்கத்தில் விடும் கடமை நமக்கு உள்ளதாகவே எண்ணுகிறேன். அப்படிப் பார்த்தால் இந்த வடமொழிச் சொற்களும் ஒரு நாளில் புகுத்தப்பட்டவைதானே? (திணிக்கப்பட்டவை என்ற வலிய சொல்லைப் பயன்படுத்தவில்லை)

ஒவ்வாரு மொழியும் கீழ்காணும் மூன்று வழிகளில் ஒன்றில் செல்கிறது.

  1. எழுத்து மொழி அவ்வளவாகப் புழங்காமல் அல்லது அவரவர் பேசும்வகையிலேயே எழுதும் வழக்கைக் கொண்டிருத்தல். இதனால் நாளடைவில் ஒரு மொழி பல மொழிகளாகப் பிரிகிறது. அல்லது ஒரேயொரு புதியமொழி உருவாகிறது.
  2. இறுக்கமான பரிந்துரை இலக்கணங்களைப் பேச்சிலும் எழுத்திலும் கடைப்பிடிக்க வலியுறுத்தும் மொழி செத்து விடுகிறது.
  3. இருதர நிலைப்பாடு (diglossia) கொண்டு மொழியும் உயிர்ப்புடன் விளங்கி பழைய சொற்கள் மற்றும் நூல்கள் வழக்கில் இருந்து ஒரு தொடர்ச்சி பேணப்படுகிறது.

தமிழ் இதில் மூன்றாம் வழியில் இதுவரை இருந்து வந்துள்ளது. அதை நாம் தொடர வேண்டுமா மாற்ற வேண்டுமா?

வடமொழி X தனித்தமிழ் என்று நோக்காமல் கடினமான சொல் X எளிய சொல் என்று நோக்கினாலே பல இடங்களில் நல்ல புதிய பொருத்தமான கலைச்சொற்களைப் புழக்கத்துக்குக் கொண்டு வர முடியும்.

வாழ்த்துகள்

இன்னைக்கு அக்கா கிட்ட இருந்து “காலை வணக்கம்” என்று “தமிழில்” மடல் வந்தது.

இப்படி காலை வணக்கம், மதிய வணக்கம்னு சொல்றது சரியா? ஏன்னா அது good morning என்பதன் நேரடித் தமிழாக்கமே தவிர, நம் பண்பாட்டில் இப்படி நேரத்தோடு சேர்த்து வணக்கம் சொல்வது இல்லையே? நெருங்கிய உறவுகளுக்குள் வணக்கம் சொல்லும் வழக்கமும் இல்லை. தவிர, good morning என்ற வாழ்த்து தரும் பொருளும் வணக்கம் என்ற சொல் தரும் பொருளும் வேறு வேறு அல்லவா?

இன்னைக்கு அக்கா கிட்ட இருந்து “காலை வணக்கம்” என்று “தமிழில்” மடல் வந்தது.

இப்படி காலை வணக்கம், மதிய வணக்கம்னு சொல்றது சரியா? ஏன்னா அது good morning என்பதன் நேரடித் தமிழாக்கமே தவிர, நம் பண்பாட்டில் இப்படி நேரத்தோடு சேர்த்து வணக்கம் சொல்வது இல்லையே? நெருங்கிய உறவுகளுக்குள் வணக்கம் சொல்லும் வழக்கமும் இல்லை. தவிர, good morning என்ற வாழ்த்து தரும் பொருளும் வணக்கம் என்ற சொல் தரும் பொருளும் வேறு வேறு அல்லவா?

இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயேர்கள் வேளைக்கு ஏற்ப வாழ்த்து சொல்வதைப் பார்த்து நாமும் சூடு போடத் தொடங்கிய தமிழ்ப்’படுத்தல்’, எல்லாவற்றுக்கும் ‘வாழ்த்து’ சொல்கிறேன் பேர்வழி என்று போய் முடிகிறது.

எடுத்துக்காட்டுக்கு,

Happy Pongal – ஆங்கில வழக்கம்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் – ஆங்கில வழக்கத்தின் ‘தமிழ்ப்படுத்தல்’?

பொங்கலோ பொங்கல் – தொல் தமிழர் வழக்கம்?

**

வேற என்னவெல்லாம் வருங்காலத்தில் தமிழ்ப்படுத்தலாம்?

Have a nice weekend –  இனிய வாரக்கடைசி வாழ்த்துக்கள் / உங்கள் வாரக்கடைசி இனிதே அமைக !

Bon appetite – இனிதே சாப்பிட வாழ்த்துக்கள் !

😉

**

நீடுழி வாழ்க, நல்லா இருப்பா, மகராசனா இருப்பா போன்ற தமிழ் வாழ்த்துக்கள் எல்லாம் வினைச்சொற்களாக இருப்பதைக் கவனிக்க இயல்கிறது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள், மண நாள் வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று ‘வாழ்த்துக்கள்’ என்ற பெயர்ச்சொல் கூடி வருவன எல்லாம் ஆங்கில வாழ்த்துச் சொற்றொடர்களின் ‘தமிழ்ப்படுத்தலாகவே’ தோன்றுகின்றன.

**

வாழ்த்து சொல்வது, நன்றி சொல்வது முதலியவை நல்ல பழக்கங்கள் என்று நம் சிறு பிள்ளைகளுக்குக் கற்றுத் தருகிறோம். ஆனால், நம் ஊர்களில் ஏன் இந்தப் பழக்கம் குறைவாக இருக்கிறது? குறிப்பாக, கடைகளில் நமக்கு சேவை ஆற்றுவோருக்கு நாம் ஏன் நன்றி சொல்வதில்லை? அவர்களும் ஏன் ஒரு சிறு புன்னகையும் சிந்தாமல் வேலை செய்கிறார்கள்?

கூட்ட நெரிசல் ஒரு முக்கிய காரணம். இன்னொரு முக்கிய காரணமாக என்ன தோன்றுகிறது என்றால், நம் பண்பாட்டில் சொல்லப்படுவதை விட உணரப்படுவது முக்கியமானதாக இருக்கலாம். குறிப்பாக, நன்றி நவிலல். நன்றி சொல்வதை விட நன்றி உடையவனாக வாழ்வதையே நம் பண்பாடு சிறப்பித்துக் கூறுகிறதோ?

முற்காலங்களில் சிற்றூர்களில் குழுமி வாழ்ந்த போது அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்களோ உறவுகளாகவோ இருந்திருக்கலாம். அந்த ஊரின் பணிகளை ஆளாளுக்குப் பகிர்ந்து செய்திருக்கலாம். எனவே, ஒருவருக்கு ஒருவர் நன்றி சொல்லும் அவசியம் இல்லாமல் இருந்திருக்கலாமோ?