பேச்சுத் தமிழ்

நேத்து கல்லூரி நண்பன் ஒருத்தன் கிட்ட பேசினேன். என்னோட பதிவுகளைப் படிச்சு பிடிச்சுப் போய், “ரவிசங்கர், இனி நாம் தூய தமிழிலேயே பேசுவோம், சரியா?” அப்படின்னு சொல்லி கொஞ்ச நேரம் “தூய” தமிழில் பேசப் பார்த்தான். அதைத் “தூய” தமிழ்னு சொல்லுறத விட உரைநடைத் தமிழ் / மேடைப் பேச்சுத் தமிழ் / மேடை நாடகத் தமிழ் / பழங்காலத் திரைப்படத் தமிழ் – னு சொல்லலாம்.

அவன் கிட்ட நான் பகிர்ந்துகிட்ட கருத்துக்களும் அதுக்கு அப்புறம் மனசில தோணினதும்:

* பேச்சுத் தமிழ் வேற. உரைநடைத் தமிழ் வேற. தமிழ்ல எல்லா காலத்திலயும் இது ரெண்டுக்கும் தெளிவான வேறுபாடு இருந்திருக்கு. தமிழ் தொடர்ந்து நிலைச்சு நிக்கிறதுக்கு இதுவும் ஒரு காரணம். இதை Diglossia அப்படிங்கிறாங்க. ஒரு மொழியோட பயன்பாடு இளக்கத்தன்மையோட இருக்க இது முக்கியம்.

* நல்ல தமிழில் பேசுறதுங்கிறது உரைநடைத் தமிழ்ல பேசுறது இல்ல. அப்படி பேசுறது செயற்கையாவும் உறுத்தலாவும் அமைஞ்சிடுது. இதனாலேயே நல்ல தமிழ் பேச நினைக்கிறவங்களைப் பார்த்து மத்தவங்க கேலியும் கிண்டலும் செய்ய வாய்ப்பாயிடுது.

ஆங்கிலமே அறியாத நாட்டுப்புறத்துக் காரங்க பேசுறது முழுக்கத் தமிழ் தான். ஆனா, ரொம்ப ஆராஞ்சு பார்த்தா ஒழிய அவங்க ஆங்கிலம் கலக்காம பேசுறாங்கங்கிறது நமக்கு தோணவே தோணாது. தமிழ்ல பேசுறோங்கிறதே உறுத்தாம பேசுறது தான் நல்ல தமிழ். மிச்ச எல்லாம் மொழிபெயர்ப்புத் தமிழ் தான்.

– புது சொற்களைக் கடன் வாங்குறத விட இருக்கிற சொற்களையே பயன்படுத்தாம விடுறது தான் பெரிய ஆபத்து. Current trends in Nonotechnology போன்ற விசயங்களை எல்லாம் தமிழ்ல பேச முற்படுறதுக்கு முன்னாடி, எனக்கு Call பண்ணு, ஒரு walk போனேன்னு சொல்லுறதையாவது மாத்தி தமிழ்ல பேசப் பார்க்கணும். ஏற்கனவே தமிழ்ல இருக்க இலகுவான விசயங்களைத் தமிழ்ல பேசினாலே போதும். பாதித் தமிழைக் காப்பாத்திடலாம்.

– தமிழ்ல பேசும் போது மட்டும், “language is just a communication medium, அடுத்தவனுக்கு நாம சொல்லுறது புரிஞ்சா போதும்”னு சாக்குப் போக்கு சொல்றோம். ஆனா, ஒரு தமிழர் கிட்ட ஆங்கிலத்தில பேசம்போது கூட ஏன் “i was நடந்துfyingனு” சொல்லுறதில்லை? அப்படி சொன்னாலும் அவருக்குப் புரியும் தானே? ஏன்னா, ஆங்கிலம் என்றால் என்ன, அது எப்படி பேசப்படணும்னு தெளிவான கட்டளைகளை நம் மூளைக்குத் தெரிவிக்கிறோம். ஆனா, நம்ம மொழி குறித்த இந்த வரையறைகளை மதிக்காம அலட்சியப்படுத்திடுறோம்.

எந்த மொழியில் கணினி விசைப்பலகையில் எழுதப் போறோம்னு முடிவெடுக்கிற மாதிரி, எந்த மொழியில் பேச நினைக்கிறோம்கிறது நாம நம்ம மூளைக்குத் தரும் ஒரு முக்கியமான தெளிவான கட்டளை. நல்ல தமிழ் பேசணுங்கிற உணர்ச்சிப்பூர்வமான ஆவலுக்கும் மேல இந்தத் தெளிவான முடிவுக்கு மூளையைப் பழக்காவிட்டால், தொடர்ந்து நல்ல தமிழ்ல பேசுறதும் கை கூடாது.

– எந்த வகைத் தமிழைக் கேட்கிறோம், பார்க்கிறோம், படிக்கிறோம்கிறது நம்ம பேச்சையும் எழுத்தையும் பெருமளவில மாத்துது. தொடர்ந்து சன், விசய் மாதிரி தொலைக்காட்சிகள், மிர்ச்சி, சூரியன் மாதிரி வானொலிகள், தினமலர், விகடன் மாதிரி இதழ்களைப் பயன்படுத்தினால் தமிங்கிலம் கூடுவது நிச்சயம். நல்ல தமிழ் விரும்புறவங்க இந்த சேவைகளைப் புறக்கணிக்கிறது நல்லது.

சில பேருக்கு பள்ளிக்கூடத்தில் இல்லாத தமிழ் ஆர்வம் கூட தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் வலைப்பதிவுகள் படிச்சு வருவதைக் கண்டிருக்கேன். அதுக்கு இந்தத் தளங்கள்ல பயன்படுத்துற நல்ல தமிழும் ஒரு முக்கிய காரணம்.

– ரெண்டு ஆண்டு முன்னாடி எங்க ஊர் பள்ளி விழாவுல என்னைப் பேசச் சொன்னாங்க. முடிஞ்ச அளவு ஆங்கிலம் கலக்காம பேசினேன். வெளிநாட்டுல வாழ்ந்திட்டு வந்து எப்படி இப்படி ஆங்கிலம் கலக்காம பேசுறேன்னு ஆச்சர்யப்பட்டாங்க. தங்களால அப்படி பேச இயலலையேங்கிற அவங்க இயலாமையும் அந்தச் சொற்களில் தென்பட்டுச்சு. இப்ப எல்லாம் அப்பாவுக்கு மக்கள் தொலைக்காட்சி பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. காரணம், அதில பேசுற தமிழ் தான். உண்மைல நல்ல தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி தருது. ஏதோ இழந்த சொத்து திரும்பக் கிடைச்ச மாதிரி. அப்படி பேசுறது பல பேருக்குப் புடிச்சிருக்கு. ஆனா, அவங்களுக்கு அப்படி பேசத் தெரியலை; பேச வர்றதில்லை. அதுக்கான போதுமான முயற்சி, முடிவு, பயிற்சி எடுக்கிறதில்லை.

– தமிழ்நாடு, இலங்கையின் பகுதிகளில் உள்ள உள்ளூர் வழக்குத் தமிழ் என்பது கலப்புத் தமிழ் இல்லை. இந்த வழக்குத் தமிழ்ச் சொற்கள் எல்லாம் தமிழோட சொத்து. பல பழைய தமிழ்ச் சொற்கள், தமிழர் வரலாறு எல்லாம் இந்த வழக்கு மொழியில தான் புதைஞ்சு கிடக்கு.

இப்ப இந்த வழக்கு மொழிகளுக்கு வந்திருக்க பெரிய ஆபத்து என்னன்னா, தொலைக்காட்சி தான் !!
இந்த வழக்கு மொழிகள் உயிர்ப்போட இருக்க சிற்றூர்கள்ல வீட்டுக்கு வீடு இப்ப தனியார் தொலைக்காட்சி வந்து உக்கார்ந்திக்கிட்டுருக்கு. இந்தத் தொலைக்காட்சிகளில் புழங்குற தமிழ் அவங்களோட வாழ்க்கைக்கு சற்றும் பொருந்தாத தமிழ். நகரத்தில 10 ஆண்டுகளா தொலைக்காட்சி நாடகங்களைப் பார்த்து அலுத்துப் போய் தொலைக்காட்சி பார்க்கிறதை நிறைய பேர் குறைச்சுக்கிட்டு வர்றாங்க. ஆனா, சிற்றூர்களுக்குத் தனியார் தொலைக்காட்சி ஊடகம் புதுசு. அதைப் பார்த்து தங்கள் உள்ளூர் வழக்குத் தமிழ் பத்தி தாழ்வு மனப்பான்மை கொண்டு நகர மேட்டுக்குடி ஊடகத் தமிங்கிலத்துக்கு மாற முற்படுவாங்க. செல்வி, அமுதான்னு பேர் வைச்ச குடும்பங்கள் எல்லாம் இப்ப தொலைக்காட்சி நாடகங்களில் வர்ற நடிகைகளைப் பார்த்து வர்ஷிணி, தர்ஷிணின்னு பேர் வைக்க ஆரம்பிச்சிருக்காங்க 🙁

வழக்குத் தமிழின் களஞ்சியம் போல இருக்கவங்க பாட்டி, தாத்தாங்க தான். ஆனா, தொலைக்காட்சி வந்த பிறகு இப்ப அவங்க கூட பேசி மகிழ யாருக்கும் நேரம் இல்லை. எல்லாரும் ஒன்னா உக்கார்ந்து தொலைக்காட்சி நாடகங்களை உத்துப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. இதனால, அவங்க கிட்ட இருந்து சொற்கள் அடுத்த தலைமுறைக்கு நகர்வது நின்னு போகுது 🙁

* இலக்கியம், உரை நடைலயும் பேச்சுத் தமிழ்ல எழுதலாம். தவறில்லை. இயல்பாவும் இருக்கும். தவிர, பேச்சுத் தமிழ்ல எழுதுறது என்பது ஒரு கலை. சில சமயம் கூட மெனக்கெட வேண்டியும் இருக்கும். எல்லாருக்கும் அது கை கூடாது.

பின் குறிப்பு: இது ஊருக்கு அறிவுரை இல்லை. நானும் இந்த விசயத்தில் எவ்வளவோ முன்னேற வேண்டியிருக்கு 🙁

உனக்கு English தெரியாதா?

ஐரோப்பியப் பெரு நகரங்களில் ஆங்கிலத்திலும் உரையாடி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று யாரும் அதிகாரம் செய்ய முடியாது. “தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுவீர்களா” என்று பணிவுடன் தான் கேட்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர் தான் வேறு ஆங்கிலம் பேசக்கூடிய கடைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இல்லை, அத்தகையை கடைகளைத் தேடி ஓய்ந்து கடைசியில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார். ஆங்கிலம் என்பது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தலாம். ஒரே ஊரில் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு உள்ளூர் மொழியை மதிக்காமல், கற்காமல் இருப்பது உள்ளூர்க்காரர்களுக்கான அவமானம் தான்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள முடி திருத்தகம் ஒன்றில் ஆங்கிலம் தெரியாத காரணத்தால் ஒருவர் வேலை இழந்த கதையை இராம. கி எழுதி இருந்தார். “இது ஏதோ ஒரு மேல்தட்டு முடிதிருத்தகத்தில் நடந்த கதை தானே, இது குறித்து கவலைப்படுவது மிகைப்பட்ட உணர்ச்சியாக இருக்கிறதே” என்று காசி கூறி இருந்தார். ஆனால், வளர்ந்தும் விரிந்தும் வரும் இந்தியப் பெருநகரங்களில் இந்தப் போக்கு தொடர்வது கவலைக்குரியது.

ஐரோப்பியப் பெரு நகரங்களில் ஆங்கிலத்திலும் உரையாடி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று யாரும் அதிகாரம் செய்ய முடியாது. “தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுவீர்களா” என்று பணிவுடன் தான் கேட்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர் தான் வேறு ஆங்கிலம் பேசக்கூடிய கடைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இல்லை, அத்தகையை கடைகளைத் தேடி ஓய்ந்து கடைசியில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார். ஆங்கிலம் என்பது சுற்றுலாப் பயணிகள், குறுகிய காலம் உள்ளூரில் வசிப்பவர்களின் வசதிக்காகவே பயன்படுகிறது.

வெளியாட்களை உள்ளூர் மொழி கற்க விடாமல் செய்வதில் உள்ளூர்க்காரர்களுக்கும் பங்குண்டு. இடாய்ட்சுலாந்தில் எட்டு மாதங்கள் வசித்த போது, கல்லூரிக்கு வெளியே இடாயிட்ச் மொழி தெரியாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்ற காரணத்தால் இரவும் பகலும் இடாயிட்சு அகரமுதலியோடு சுற்றித் திரிந்தது நினைவு வருகிறது.

நெதர்லாந்துக்கு வந்த பிறகு இரண்டு ஆண்டுகள் ஆகியும் நெதர்லாந்து மொழி கற்றுக் கொள்ளத் தூண்டுதல் இல்லை. நெதர்லாந்து மக்களுக்கு ஆங்கிலம் நன்கு தெரிவதாலும் உதவும் மனப்பான்மை இருப்பதாலும் ஆங்கிலத்திலேயே நம்முடன் பேசுகிறார்கள். அரை குறையாக நாம் நெதர்லாந்து மொழி பேசிக் கொலை செய்தாலும் அதைக் காணச் சகிக்காமல் ஆங்கிலத்துக்குத் தாவி விடுகிறார்கள். இதனால் நெதர்லாந்துக்கு வரும் பல வெளிநாட்டவர்கள் நெதர்லாந்து மொழியில் தேர்ச்சியும் பயிற்சியும் இன்றி இருக்கிறார்கள். ஆனால், இந்நாட்டின் பொருளாதாரமே நெதர்லாந்து மொழியால் இயங்குவதால் ஆங்கிலம் அம்மொழியை அழிக்கும் நிலைக்குச் செல்லவில்லை.

தமிழ்நாட்டில் அண்டை, அயல் மாநிலத்தவர்களுக்கு உதவுகிறோம் பேர்வழி என்று நமக்குத் தெரிந்த அரை குறை ஆங்கிலத்திலாவது பேசுகிறோமே ஒழிய அவர்கள் தமிழ் கற்றுக் கொள்வதற்கான போதுமான தூண்டுதலைத் தருவதில்லை. அவர்கள் வசதிக்காக ஆங்கிலத்தில் எழுத, பேச, அறிவிக்கப் போய் எங்கும் ஆங்கிலமாகி, இறுதியில் “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று நம்மையே திரும்பக் கேட்கும் நிலை.

Sirக்குத் தமிழ் தெரியாதாம்ப்பா” என்ற கனிவான குரல்; “என் பொண்ணுக்கு Tamil எல்லாம் வராது” என்ற அலட்சியமும் பெருமிதமும் கலந்த குரல்; “உனக்கு English தெரியாதா” என்ற ஏளனமான குரல்… மாற்றி மாற்றி தமிழ்நாட்டில் எங்காவது கேட்டுக் கொண்டே இருக்கிறது.

English தெரியாதவன் மரியாதை இழந்து தமிழ்நாட்டிலேயே அவன், இவன், உன் என்றாகிப் போனது எப்போது? இந்த நிலையை எப்படி மாற்றுவது? என்று இந்த நிலை மாறும் ??

ஏன் ஒரு ஆங்கிலச் சொல்லை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தமிழாக்கக்கூடாது?

ஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல சூழல்களில் இருக்கும் ஒரு சொல்லின் மூலத்தை ஆய்ந்து பார்த்து எல்லா இடங்களிலும் ஏன் அதைப் பிடித்துத் தொங்க வேண்டும்? என்னைக் கேட்டால் இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சு பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம் தமிழாக்கத்தை நியாயப்படுத்த முடியாது. இங்கு ஆளப்படும் தமிழ்ச் சொல் என்பது ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு மாற்று போல் இருக்கிறதே தவிர, தமிழர்களின் சுதந்திரமான சிந்தனைக்கு வித்திடுவதாகத் தெரியவில்லை.

பண அட்டைகள் குறித்த தமிழாக்கங்கள் பற்றி இராம.கி எழுதி இருந்தார். இது தொடர்பான உரையாடல் தமிழ் விக்சனரி குழுமத்தில் நடந்தது.

ஒரு ஆங்கிலச் சொல் வெவ்வெறு சூழல்களில் வந்தாலும், தமிழிலும் எல்லா இடங்களிலும் ஒரே சொல் கொண்டு தான் மொழிபெயர்க்க வேண்டும் என்பது இராம. கி.யின் பரிந்துரை. இது தொடர்பில் என் கருத்துக்கள்:

ஆங்கிலத்தில் ஒரு வேர்ச்சொல் பல இடங்களில் வரும்போது அவ்வெல்லா இடங்களுக்கும் ஒரே தமிழ்ச் சொல்லை ஆளத் தேவை இல்லை.

தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கிறோம் என்று வைப்போம். கண், கண்ணாடி, கண்ணீர் என்பதை eye, eye glass, eye water என்றா மொழிபெயர்ப்போம்? eye, glass, tear என்று அந்த ஊர் மொழிச் சொல்லை வைத்து தானே மொழிபெயர்க்கிறோம்.

ஏன் ஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல சூழல்களில் இருக்கும் ஒரு சொல்லைப் பிடித்து தொங்க வேண்டும்? இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சு பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம் தமிழாக்கத்தை நியாயப்படுத்த முடியாது. இங்கு தமிழ்ச் சொல் என்பது ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு மாற்று போல் இருக்கிறதே தவிர, தமிழர்களின் சுதந்திரமான சிந்தனைக்கு வித்திடுவதாகத் தெரியவில்லை. ஒரு புதிய சிந்தனையைச் சூழலைப் புரிந்து கொள்ள ஆங்கிலச் சொல் ஒரு கருவியாக இருக்கலாமே தவிர,  தமிழின் அனைத்துப் புதுச் சொற்களும் ஆங்கில அடிப்படை, சார்பு உடையதாக இருப்பது சரி இல்லை.

ஆங்கிலச் சொற்களை நேரடியாக மொழிபெயர்ப்பது செயற்கையாக இருக்கிறது. ஒரே பொருளை இரு வேறு மொழியினர் வேறு விதமாகப் பார்ப்பது இல்லையா? rainbow – ஆங்கிலேயேனுக்கு மழையின் வில்லாகிறது; நமக்கு வானின் வில்லாகிறது.  இரண்டும் குறிக்கும் பொருள் ஒன்று தான். இரு சக்கர வண்டி, துவி சக்கர வண்டி போன்ற சொற்கள் இருந்தாலும் மிதிவண்டி என்ற சொல்லே நிலைத்தது. மக்களைப் பொருத்தவரை அது மிதித்தால் நகரும் வண்டி. அவ்வளவு தான். 

நாம் பயன்படுத்தும் சொற்கள் நம் சமூகத்தை, பண்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அஞ்சலி, condolence meeting, இரங்கல் கூட்டம்  போன்ற சொற்கள் இருக்க,  அக வணக்கம், வீர வணக்கம்  போன்ற சொற்களை ஈழத்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சொற்களின் ஊடாக வெளிப்படும் அம்மக்களின் பண்பாட்டைத் தலைகீழாக நின்றாலும் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து விட முடியாது. 

சொற்கள் உள்ளூர் சிந்தனையை வெளிப்படுத்த வேண்டும். சொல்லைத் தமிழாக்காமல் சிந்தனையைத் தமிழாக்க வேண்டும். ஆங்கிலச் சொல்லையே அறியாவிட்டாலும், தமிழ்ச் சிந்தனைக்கு ஏற்ப சொல் ஆக்குவது தான் மொழி மரபு என்பது என் நம்பிக்கை, நிலைப்பாடு.