ஏன் ஒரு ஆங்கிலச் சொல்லை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தமிழாக்கக்கூடாது?

ஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல சூழல்களில் இருக்கும் ஒரு சொல்லின் மூலத்தை ஆய்ந்து பார்த்து எல்லா இடங்களிலும் ஏன் அதைப் பிடித்துத் தொங்க வேண்டும்? என்னைக் கேட்டால் இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சு பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம் தமிழாக்கத்தை நியாயப்படுத்த முடியாது. இங்கு ஆளப்படும் தமிழ்ச் சொல் என்பது ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு மாற்று போல் இருக்கிறதே தவிர, தமிழர்களின் சுதந்திரமான சிந்தனைக்கு வித்திடுவதாகத் தெரியவில்லை.

பண அட்டைகள் குறித்த தமிழாக்கங்கள் பற்றி இராம.கி எழுதி இருந்தார். இது தொடர்பான உரையாடல் தமிழ் விக்சனரி குழுமத்தில் நடந்தது.

ஒரு ஆங்கிலச் சொல் வெவ்வெறு சூழல்களில் வந்தாலும், தமிழிலும் எல்லா இடங்களிலும் ஒரே சொல் கொண்டு தான் மொழிபெயர்க்க வேண்டும் என்பது இராம. கி.யின் பரிந்துரை. இது தொடர்பில் என் கருத்துக்கள்:

ஆங்கிலத்தில் ஒரு வேர்ச்சொல் பல இடங்களில் வரும்போது அவ்வெல்லா இடங்களுக்கும் ஒரே தமிழ்ச் சொல்லை ஆளத் தேவை இல்லை.

தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கிறோம் என்று வைப்போம். கண், கண்ணாடி, கண்ணீர் என்பதை eye, eye glass, eye water என்றா மொழிபெயர்ப்போம்? eye, glass, tear என்று அந்த ஊர் மொழிச் சொல்லை வைத்து தானே மொழிபெயர்க்கிறோம்.

ஏன் ஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல சூழல்களில் இருக்கும் ஒரு சொல்லைப் பிடித்து தொங்க வேண்டும்? இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சு பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம் தமிழாக்கத்தை நியாயப்படுத்த முடியாது. இங்கு தமிழ்ச் சொல் என்பது ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு மாற்று போல் இருக்கிறதே தவிர, தமிழர்களின் சுதந்திரமான சிந்தனைக்கு வித்திடுவதாகத் தெரியவில்லை. ஒரு புதிய சிந்தனையைச் சூழலைப் புரிந்து கொள்ள ஆங்கிலச் சொல் ஒரு கருவியாக இருக்கலாமே தவிர,  தமிழின் அனைத்துப் புதுச் சொற்களும் ஆங்கில அடிப்படை, சார்பு உடையதாக இருப்பது சரி இல்லை.

ஆங்கிலச் சொற்களை நேரடியாக மொழிபெயர்ப்பது செயற்கையாக இருக்கிறது. ஒரே பொருளை இரு வேறு மொழியினர் வேறு விதமாகப் பார்ப்பது இல்லையா? rainbow – ஆங்கிலேயேனுக்கு மழையின் வில்லாகிறது; நமக்கு வானின் வில்லாகிறது.  இரண்டும் குறிக்கும் பொருள் ஒன்று தான். இரு சக்கர வண்டி, துவி சக்கர வண்டி போன்ற சொற்கள் இருந்தாலும் மிதிவண்டி என்ற சொல்லே நிலைத்தது. மக்களைப் பொருத்தவரை அது மிதித்தால் நகரும் வண்டி. அவ்வளவு தான். 

நாம் பயன்படுத்தும் சொற்கள் நம் சமூகத்தை, பண்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அஞ்சலி, condolence meeting, இரங்கல் கூட்டம்  போன்ற சொற்கள் இருக்க,  அக வணக்கம், வீர வணக்கம்  போன்ற சொற்களை ஈழத்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சொற்களின் ஊடாக வெளிப்படும் அம்மக்களின் பண்பாட்டைத் தலைகீழாக நின்றாலும் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து விட முடியாது. 

சொற்கள் உள்ளூர் சிந்தனையை வெளிப்படுத்த வேண்டும். சொல்லைத் தமிழாக்காமல் சிந்தனையைத் தமிழாக்க வேண்டும். ஆங்கிலச் சொல்லையே அறியாவிட்டாலும், தமிழ்ச் சிந்தனைக்கு ஏற்ப சொல் ஆக்குவது தான் மொழி மரபு என்பது என் நம்பிக்கை, நிலைப்பாடு.

ஏன் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக ஏற்றுக் கொள்ளக்கூடாது?

Video என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சலனப்படம், அசைபடம், நிகழ்படம், காணொளி, விழியம், ஒளியம் என்று எண்ணற்ற சொற்கள் தமிழ் இணையத்தில் புழங்கி வருகின்றன. இப்படிப் பட்ட சொற்களைப் பயன்படுத்தாது ஏன் வீடியோ என்பதையே தமிழ்ச் சொல்லாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று மயூரன் தமிழ் விக்சனரி குழுமத்தில் கேட்டிருந்தார்.

ஆங்கிலச் சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனைக்கு ஆதரவாக இருப்பவை:

1. இவை மக்கள் வாழ்வில் ஏற்கனவே புழங்கும் சொற்கள் என்பதால் மக்களால் எளிதாகப் புரிந்து கொள்ளப்படும்.

2. ஒரே ஆங்கிலச் சொல்லுக்கு பல்வேறு தமிழ்ச் சொற்கள் இருப்பதால் வரும் குழப்பத்தைத் தவிர்க்கலாம்.

3. பல நேரங்களில் ஒற்றை ஆங்கிலச் சொல்லுக்கு ஏற்கனவே இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்களை ஒட்டு போட்டுப் புதுத் தமிழ்ச் சொல் உருவாக்குகிறோம். எடுத்துக்காட்டுக்கு, photo = புகை + படம், video = நிகழ் + படம் என்று. இவ்வாறு செய்வது மொழியின் வளர்ச்சியா குறுக்கமா என்று தெரியவில்லை. ஏற்கனவே இருக்கிற எளிய சொற்களைக் கொண்டு புதிய கருத்துக்களைப் புரிந்து கொள்வது வரவேற்கத்தக்கது. அதே வேளை, ஒரு குழந்தை குறைந்த சொல் தொகையை வைத்துக் கொண்டு புரிய வைக்க முயல்வது போலவும் ஒரு குற்றவுணர்ச்சி உண்டு. முக்கியமாக, இவை வேர்ச்சொல்லாக்கத்துக்குப் பயன்படுவதில்லை. photo, video போன்றவை எல்லாம் வேர்ச்சொல் போல் செயல்பட்டு இன்னும் பல கூட்டுச் சொற்களை உருவாக்கும். தமிழில் ஏற்கனவே ஒட்டுப்போட்டு தான் இச்சொற்களை உருவாக்கி வைத்திருப்பதால், இவற்றில் இருந்து புதிதாக உருவாகும் சொற்கள் இன்னும் நீண்டு கொண்டே போகின்றன.

4. ஆங்கிலச் சொற்கள் பல சமயங்களில் சுருக்கமாகவும் ஓசை நயம் மிக்கதாகவும் இருப்பதாகக் கருதப்படுகிறது. ரயில் மேல் மயில் வருது என்று கவிதை எழுதலாம் அல்லவா 😉

5. பிற மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்வது ஒரு மொழியின் வளர்ச்சிக்கு உதவும். இது எல்லா மொழிகளிலும் எல்லா காலங்களிலும் நிகழ்வது தான் என்று சிந்தனை.

6. தமிழில் சொல் இல்லை என்பதற்காக சில சமயம் நவீன துறைகளைக் குறித்து எழுதத் தயங்குகிறோம். அதற்கான கலைச்சொல் உருவாகும் வரை காத்திருக்கிறோம். இது புது சிந்தனைகளைத் தமிழர்கள் அறிந்து கொள்வதில் தேவையற்ற தாமதத்தை உண்டாக்குகிறது.

சரி, ஏன் இவ்வாறு ஆங்கிலச் சொற்களைத் தமிழாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று என் மனதில் எழும் சிந்தனைகள்:

1. சொற் தொடர்பு:

மொழி என்பது ஒரு ecosystem போல் என்று பேராசிரியர் செல்வகுமார் சொல்வார். ஒவ்வொரு சொல்லுக்கும் இன்னொரு சொல்லுக்கும் தொடர்பு இருக்கும் போது தான் அந்த மொழி உயிர்ப்புடன் இருக்கும். video என்ற ஆங்கிலச் சொல்லுடன் visual என்பதைப் பொருத்தலாம். audio என்ற சொல்லுடன் audible என்ற ஆங்கிலச் சொல்லைப் பொருத்தலாம். இந்தச் சொற்களைப் பொருத்திப் பார்த்துப் புரியாத சொல்லைப்புரிந்து கொள்ள முடியும் வசதி ஆங்கிலேயருக்கு இருக்கிறது.

ஆனால், இந்தச் சொல் தொடர்பைக் கணக்கில் எடுக்காமல் தனிச்சொற்களை மட்டும் கடன் வாங்கினால் ஒன்று அந்தச் சொல் புரியாமல் தனித்து நிற்கும். அல்லது, அதைத் தொடர்ந்த சொற்களும் ஆங்கில மூலமாகவே மாறும். கலைச்சொல்லாக்கத்தில் இந்தத் தொடர்பை முக்கியமாக கருதுகிறேன். வலைப்பதிவு என்று சொன்னால், பதிவர், பதிவுலகம், பதிப்பித்தல் என்று தொடர்பு வருவதைப் பாருங்கள். அதே வேளை வலைப்பூ என்றால் பூக்காரன், பூவுலகம், பூப்பூத்தல் என்றா சொல்ல முடியும்? ஆகவே, தமிழ்ச்சொல்லாகவே இருந்தால் கூட இந்த சொல் தொடர்பைப் பேணுவது அவசியம்.

video என்ற ஒற்றைச் சொல்லைப் புகுத்துவது மூலம் வீடியோக்காரர், வீடியோக்கலை, வீடியோ கடை என்று எத்தனை இடங்களில் ஒரு சொல்லைப் புகுத்துகிறோம் பாருங்கள்.

2. இலக்கணச் சிதைவு:

தமிழ் இலக்கணப்படி ஒவ்வொரு சொல்லும் தன்னாலேயே பொருளுடையது. ஒவ்வொரு சொல்லின் ஒலிப்பும் சில இலக்கணங்களுக்கு உட்பட்டது. இப்படி தேவையே இல்லாமல் கடன்வாங்கப்படும் சொற்கள் தமிழின் ஒலிப்பையும் பொருட்செறிவையும் குறைப்பதைக் காணலாமே? எடுத்துக்காட்டுக்கு, photo என்ற சொல்லைக் கடன் வாங்கி அதைத் தமிழில் எழுதிக் காட்ட ஃபோட்டோ என்று எழுதுகிறோம். ஆனால், இப்படி ஆய்த எழுத்தை முதலில் எழுதுவதால் ஆய்த எழுத்தின் ஒலிப்பையும் ஆய்த எழுத்து சொல் முதலில் வராது என்ற தமிழ் இலக்கணத்தையும் சிதைக்கிறோம். ballஐ பால் என்று எழுதுகிறோம். paal என்று வாசிக்க வேண்டியதை baal என்று வாசிக்கிறோம். ஆங்கிலச் சொற்றொடர்கள் எழுதும் போது இலக்கணத் திருத்திகள் கொண்டு எல்லாம் பயபக்தியுடன் சரி பார்த்து தானே செயற்படுகிறோம். ஆனால், தமிழ்ச் சொற்களை எழுதும்போது மட்டும் தமிழின் இலக்கணத்தைப் பொருட்படுத்தாது அலட்சியமாக இருப்பது சரியா? பிற மொழிச் சொற்களைக் கடன் வாங்குவதை நிறுத்தினாலே பாதி தமிழ்ச் சிதைவு குறையும் என்று நம்புகிறேன். இலக்கணத்தைக் காலத்துக்குக் காலம் மாற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கலாமோ? எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஒவ்வொரு மொழியும் ஒரு உயிரினம் போன்று அதற்கென தெளிவான கட்டமைப்புடன் தான் உருவாகிறது. உயிரினங்கள் தங்களுடன் கலந்து புது இனங்கள் உருவாவது போல் மொழிக்கலப்பால் புதிய மொழிகள் உருவாகலாம். ஆனால், அது முந்தைய மொழிகளின் இருப்புக்கு உறுதி அளிப்பதில்லை. உயிரினப் பல்வகைமையைப் பேண எப்படி விழைகிறோமோ அதே போல் மொழிப் பல்வகைமைகளையும் தனித்துவத்தையும் காக்க முற்படுவதும் அவசியம்.

3. சொல் இழப்பு:

ரயில் என்ற சொல்லுடன் சேர்ந்து ரயில்வே என்ற சொல்லையும் உறுத்தல் இல்லாமல் பயன்படுத்துகிறோம். ரயில் பாதை என்றாவது சொல்லலாம் என்று தோன்றுவதில்லை. இல்லாத சொல் என்று கடன் வாங்கி, அந்தப் புதுச் சொல்லுடன் இணைந்து வரக்கூடிய பிற தமிழ்ச் சொற்களையும் இழந்து விடுகிறோம். rail=இருப்பு என்றே பயன்படுத்தி இருந்திருந்தோமானால் இருப்புவே என்று எழுதுவது உறுத்தி இருப்புப் பாதை என்று இயல்பாக எழுதி இருப்போம்.

4. ஓசை நய அரசியல்:

ரயில், கார் எல்லாம் ஓசை நயமாக இருக்கிறதே? தமிழ் ஒலிப்புக்கும் ஒத்தும் வருகிறதே? எனவே அப்படியே இவற்றை ஏற்றுக் கொள்ளலாமே? என்று சிந்திக்கத் தூண்டுதலாக இருந்தாலும், இந்த ஓசை நயத்துக்குப் பின் ஒளிந்திருக்கும் அரசியல் உறுத்துகிறது. ஒரு மொழியின் சொற்களைக் காட்டிலும் இன்னொரு மொழியின் சொல் ஓசை நயமாகவும் இனிமையாகவும் இருக்கிறது என்று தொடங்கும் மொழிக் கலப்பு, பிறகு, இருக்கும் மொழியைக்காட்டிலும் புகுந்த மொழி மேம்பட்டது, புகுந்த மொழியைப் பேசுவோர் மேலோர் என்ற அரசியலில் போய் முடிகிறது. வடமொழிக்கலப்பின் இன, சமூக, அரசியல் வரலாறு இந்தப் பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது. உதவுகிறேன் என்று புகும் மொழி ஒரு இனத்தையே இப்படி அடிமை மனநிலைக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் தள்ளுவதை ஏற்க இயலாது.

5. பல சொற்கள் இருப்பது நன்மை தான்:

ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு பல தமிழ்ச் சொற்கள் இருப்பது நன்மை தான். தொலை நோக்கில், ஏதாவது ஒரு சொல் மக்கள் ஏற்பு பெற்று நிலைக்கும். நிச்சயம் குழப்பம் வராது. பொருளே தெரியாமல் அப்படியே ஆங்கிலச் சொல்லை ஏற்றுக் கொள்வதைக் காட்டிலும், இப்படி முயன்று பார்க்கப்படும் பல தமிழ்ச் சொற்கள் தமிழனின் பார்வையில் எப்படி ஒரு சிந்தனை உள்வாங்கப்படுகிறது என்று புரிய உதவும். bicycle என்ற சொல்லின் நேரடிப் பொருளுக்கே தொடர்பு இல்லாமல் மிதி வண்டி என்ற சொல் நிலைப்பதைக் காணலாம். இது குறிப்பது என்னவென்றால், ஒருவேளை தமிழனே bicycleஐக் கண்டுபிடித்திருந்தால் மிதி வண்டி என்றே பெயர் வைத்திருக்கக்கூடும். இன்று நாம் பல சொற்களைக் கடன் வாங்க வேண்டி இருப்பதற்கு முக்கிய காரணம், அச்சொற்கள் குறிக்கும் சிந்தனைகள், புத்தாக்கங்கள் நம் மண்ணில் தோன்றாமை தான். இந்த அடிப்படைப் பிரச்சினையைக் களைய முனையாமல் சொற்களைக் கடன் வாங்கி காலத்தை ஒப்பேற்றுவது மழுங்கிய சமூகத்தின் அறிகுறியாகவே தோன்றுகிறது.

சிந்தனைகளுக்கு மட்டும் அறிமுகம் ஆகாமல் அதோடு சேர்ந்து சொற்களையும் கடன் வாங்குவது தான் பிழையாகப் போய் விடுகிறது. தரமான தாய்மொழிக் கல்வி, தாய்மொழி வழிச் சிந்தனை இவற்றின் மூலம் புத்தாக்கங்களின் ஊற்றுக்கண்ணாக தமிழகம் இருக்கும் என்றால் தமிழகத்தில் இருந்து எழும் புதிய சிந்தனைகள், புத்தாக்கங்கள் இவற்றுக்குத் தமிழிலேயே பெயர் வைப்பது எளிதாகி விடும். பிற மொழிச் சொற்களைத் தமிழில் சேர்க்கலாமா என்ற நிலை மாறி தமிழ்ச் சொற்கள் உலக மொழிகளில் புதுச் சொற்களாகச் சேரும் நிலை வந்தால் எப்படி இருக்கும்? WordPress உலகளாவிய மென்பொருள் தான். ஆனால், பாலம், பால்நிலா, நிகரிலா என்று பெயரில் பிரபலமான WordPress வார்ப்புருக்கள் இருப்பதை அறிவீரா? மென்பொருளாக்கம் போன்ற துறைகளில் உலக அளவில் தமிழர் முன்னணியில் இருக்கையில் நாம் செய்யும் புத்தாக்கங்களுக்கான சிந்தனைகளையும் பெயர்களையும் தமிழிலேயே செய்வோமானால் எவ்வளவோ தமிழ்ச் சொற்கள் உலக அளவில் புழங்கும்.

தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்துக்களில் எழுதலாமா?

என் விருப்ப வலைப்பதிவரும் குட்டித் தோழியுமான அஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கடிதம் ஒன்று அனுப்பி இருந்தேன்:

Dear Anjali kutty, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

வாழ்த்துக்கு நன்றி சொல்லிவிட்டு அவள் கேட்ட முதல் கேள்வி:

குட்டி என்பது தமிழ்ச் சொல். அதை எப்படி நீங்கள் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு எழுதலாம்?

அஞ்சலிக்கு வயது 9. பிறந்தது முதல் வளர்வது நோர்வேயில்.

எதிர்ப்பாராத இடத்தில் இருந்து எதிர்ப்பாராத நேரத்தில் வந்த கேள்வி திகைக்க வைத்தது. ஒரு சிறு பிள்ளைக்குப் புரியும் அபத்தம் ஆறு கோடித் தமிழருக்கு உறுத்தாமல் போனதே என்று நினைக்க வைக்கிறது.

நோர்வே மொழி, ஆங்கிலம் அறிந்திருந்தாலும் தமிழர் என்றால் தமிழில் கதைக்கத் தான் அஞ்சலிக்கு விருப்பம் என்று அவர்கள் அம்மா சொன்னார்கள்.

இனி முதற்கொண்டு Busபஸ் என்று எழுதாமல் Bus என்று எழுதவும் “எப்படி இருக்க” என்பதை “eppadi irukka” என்று எழுதாமல் “எப்படி இருக்க” என்றே மறக்காமல் எழுதவும் உறுதி பூண்டிருக்கிறேன். இப்படி எழுதும் போது தேவையில்லாமல் ஆங்கில எழுத்தகளில் எழுதப்பட்ட ஆங்கிலச் சொற்கள் கட்டுரை முழுக்க கண்ணை உறுத்தும் என்பதால், இயன்ற அளவு தமிழில் எழுத முனைவோம். ஸ்கூல், ரைஸ், டீவீ, ஹேப்பி பர்த்டே என்று தமிழில் எழுதப்படும் சொற்கள் எல்லாம் தமிழ்ச் சொற்கள் என்று எண்ணி வளரும் ஒரு கவலைக்குரிய தலைமுறை வந்து கொண்டிருக்கையில் குறைந்த பட்சம், இது ஆங்கிலச் சொல் என்பதையாவது வாசிப்பவருக்கு நினைவூட்டும். இதே போல் பல வேற்று மொழிச் சொற்கள், ஒலிகளையும் தமிழில் எழுதிக் காட்டுவதற்காக கிரந்த எழுத்துகளை அதிகமாகப் பயன்படுத்தித் தமிழைக் கொல்லாமல் தமிழ் ஒலிப்புக்கு ஏற்பவே எழுதி விட்டு, தேவைப்பட்டால் அடைப்புக்குறிகளுக்குள் அந்தந்த மொழி எழுத்துக்களாலேயே எழுதிக் காட்டவும் நினைத்து இருக்கிறேன். (கிரந்த எழுத்துக்களை ஏன் இயன்ற அளவு தவிர்க்க நினைக்கிறேன் என்பது இன்னொரு பெரிய தனிக்கதை. அது தனி இடுகையாக வரும்.)

இன்று முதல் இந்த கொள்கை முடிவு நடப்புக்கு வருகிறது 🙂

தொடர்புடைய இடுகை:

English words in spoken Tamil

Englishland

குறிப்பு: amma not equal to அம்மா என்ற படிமத்தைச் சொடுக்கி இங்கு வருபவர்கள், சிறந்த தமிழ் விசைப்பலகை எது? என்ற தமிழ்99 விசைப்பலகை விளக்கக் கட்டுரைக்குச் செல்லவும். தவிர்க்க இயலாத காரணங்களால் பக்கம் வழ மாறியதற்கு வருந்துகிறேன்.

தமிழ்நாட்டில் தமிழர் தத்தம் பெயர்ச்சுருக்கங்களை ஆங்கிலத்திலேயே எழுதுகிறோம்.

தமிழ்நாட்டில் தமிழர் ஆங்கிலத்தில் தான் கையெழுத்து இடுகிறோம்.

பிற மொழி, ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டும் பேசத் தெரியாது. ஆனால், பலரும் ஒரு தமிழ்ச் சொல்லும் கலக்காமல் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுகிறோம். அதற்கு காசு கொடுத்துப் பயிற்சியும் பெறுகிறோம்.

ஆங்கிலத்தில் பேசுபவன் அறிவாளி. தமிழில் மட்டும் பேசத் தெரிந்தவன் முட்டாள். தமிழில் மட்டுமே பேசுவேன் என்பவன் தமிழ் வெறியன்.

பாலத்தீனப் பிரச்சினைக்குப் பரிந்து பேசுபவனை அறிவுசீவி என்கிறோம். ஈழத்துக்கு ஆதரவாகப் பேசினால் விடுதலைப் புலி.

eppadi irukkada. paaththu romba naal aachchuதமிழை ஆங்கிலத்தில் எழுதிக் கொல். ரோட்ல டிராபிக் ஜாம் – ஆங்கிலத்தைத் தமிழில் எழுதித் தமிழாக்கு.

ஒரு ஆங்கில உரையின் நடுவிலோ நேர்முகத் தேர்விலோ ஆங்கிலச் சொல் அறியாவிட்டால் வெட்கம் பிடுங்கித் திங்கத் தலை குனி. ஆனால், வெட்கமோ வருத்தமோ இன்றித் தமிங்கிலம் பேசு.

தமிழ்நாட்டில் தமிழ்க் குழந்தை 10ஆம் வகுப்பு வரையாவது தமிழ் படிக்க வேண்டும் என்பதற்கு அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழன் உயர்படிப்பில் பொறியியலும் நுட்பமும் மருத்துவமும் படிக்க வேண்டும் என்றால் முதலில் ஆங்கிலம் படிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழரின் கோயிலில் தமிழில் வழிபாடு நடத்த அரசு ஆணை வர வேண்டும்.

அப்பா, அம்மா என்ற சொற்கள் மட்டுமே தெரிந்த சில தமிழ்க் குழந்தைகள்.

பணத்தில் புரளும் பல ஆங்கில வழியப் பள்ளிகள். கூரை கூட இல்லாத தாய்த் தமிழ்ப் பள்ளிகள்.

தமிழ் மட்டுமே தெரிந்திருந்தால் செல்பேசி முதல் கணினி வரை இயக்க முடியா நிலை.

தமிழ்நாட்டு உயர்நீதி மன்றங்களில் தமிழில் வழக்கை நடத்த முடியா நிலை.

தமிழன் மட்டுமே பொருள் வாங்க வரும், தமிழன் நடத்தும் கடையில் பெயர்ப்பலகைகள் மட்டும் ஆங்கிலத்தில். விற்பனைச் சீட்டும் ஆங்கிலத்தில்.

தமிழ்நாட்டில் இருக்கும் வங்கியின் தொலைபேசிச் சேவையை அணுகுகையில் “தமிழில் பேசலாமா” என்று அனுமதி கேட்க வேண்டும். “ஆங்கிலத்தில் தான் பதில் அளிப்போம்” என்று வரும் மறுமொழியைச் சொரணையற்றுக் கேட்டுக் கொள்.

Deutschlandல் (செருமனியில்) Deutsch (செருமன் மொழி) தெரியாமலும் Nederlandல் (நெதர்லாந்தில்) Nederlands (நெதர்லாந்து மொழி) தெரியாமலும் சிரமப்படும் போது தோன்றி மறையும் எண்ணங்கள் இவை.

இவற்றை எல்லாம் மாற்ற முடியாமல் போனாலும் நாட்டின் பெயரிலாவது தமிழ் இருந்து தொலைக்கட்டும் என்று நினைத்துப் பெயர் வைத்தார்களோ என்னவோ தமிழ்நாடு என்று?

Englishland என்று யாராவது பெயரை மாற்றித் தந்தால் குற்றவுணர்வையாவது கழுவிக் கொள்ளலாம் 🙁