உயிரின் விலை – இன்றைய சந்தை நிலவரம்

சாலையில் போகிற வண்டியில் புகை வந்தால், சாலையோர மரத்தில் புளியம்பழம் பறிப்பதை விட்டு விட்டு வண்டியை நிறுத்தி எட்டிப் பாருங்கள். வண்டியில் குண்டு இருந்து வெடித்து நீங்கள் செத்தால் 1 இலட்சம் கிடைக்கும்.

ஆளில்லா ரயில் சந்திப்பில் உங்கள் வாகனம் ரயிலோடு மோதி செத்தால், நீங்கள் அரசு ஊழியராயிருக்கும் பட்சத்தில், 2 இலட்சம் கிடைக்கும். இல்லாவிட்டால், 1 இலட்சம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

CNN, BBC, நம்ம ஊர் தொலைக்காட்சிகள் எல்லாம் மாய்ந்து மாய்ந்து காட்டுவதற்குத் தகுந்தவாறு யாராவது கொலைகாரனை ஏற்பாடு செய்து அவன் கையால் சாகுங்கள். உங்கள் இறுதிச் சடங்குக்கு வர உறவினர்களுக்கு அரசு காசு கொடுக்கும். இது பல இலட்சம் பெறும்.

ஆழ்குழாய் கிணற்றில் மாட்டி உங்கள் பிள்ளை சாவதை விட பிழைத்துக் கொள்வது நல்லது. எப்படியாவது காப்பாற்றி விடுங்கள். பிழைத்துக் கொண்ட குழந்தை அதிசயக் குழந்தையாகக் கருதப்பட்டு கூடுதல் உதவித் தொகை கிடைக்கும்.

அண்மையில் அரசியல் கட்சித் தொண்டர்கள் தீக்குளித்ததாகத் தெரியவில்லை. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் 1 லட்சமாவது கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். அப்போது எனக்கு அவ்வளவு விவரம் தெரியாது.

நன்றாக விற்பனையாகும் நாளிதழ் ஊழியராக இருந்து அலுவலகத்துக்குள் வைத்துக் கொழுத்தப்பட்டால் 15 இலட்சம் கிடைக்கும்.

சுனாமி, நிலநடுக்கம் வந்து செத்தால் அரசு போக நடிகர்களும் காசு தருவதாக சொல்லுவார்கள். சொன்ன மாதிரி தந்தும் விட்டால், கிடைத்த வரை இலாபம்.

உயிருக்கான இழப்பீட்டுத் தொகை தவிர, ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்குப் பூ வைத்து அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என்று விரும்பினால் அமெரிக்காவிலோ இலண்டனிலோ பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சாகுங்கள்.

பொதுவாக, உங்கள் உயிருக்கு அதிக விலை கிடைக்க வேண்டுமானால் கொஞ்சமாவது பரபரப்பாக, ஊடகங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வகையில் சாக வேண்டும். ரொம்ப கும்பல் சேர்க்காமல் கொஞ்சம் பேர் மட்டும் செத்தால் கூடுதல் தொகை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஒன்றுமே குடும்பத்துக்கு செய்யாமல் குற்ற உணர்வுடன் இறப்பவர்கள், தற்கொலை செய்து கொள்பவர்கள் இது போன்ற தருணங்களுக்குக் காத்திருந்து சாவது நலம்.

இதை எல்லாம் விட்டு விட்டு முட்டாள்த்தனமாக பாக்தாத்தின் அன்றாடக் குண்டு வெடிப்புகளால், உலக நாட்டுப் போர்த் தாக்குதல்களால், தீரா நோய்களால், ஊட்டக்குறைவால், பஞ்சம் பிழைக்கப் போன நாட்டில் முதலாளியால் அடித்தே கொல்லப்பட்டால், இன்று இங்கு 135 பேர் பலி என்று வானிலை அறிக்கை போல் தான் ஊடகங்கள் சொல்லும். பைசா தேறாது.

ஆண்டு முடிவில் ஒரு நாளைக்கு எத்தனை பேர் இப்படி இறந்தார்கள் என்று புள்ளிவிவரங்கள் வெளியாகும்.

வேறொன்றுக்கும் உதவாது.

தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு இரத்து சரியா?

எண்ணற்ற நுழைவுத் தேர்வுகள், அவற்றுக்காகத் தனிப்பட்ட முறையில் பயிற்சி எடுக்க வேண்டியிருப்பது அனைத்து மாணவர்களுக்கும் உளைச்சலைத் தருவதும், கிராமப்புற மாணவர்களுக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கும் இத்தேர்வுக்குத் தயார் செய்வதற்கான வசதிகள் குறைவாக இருப்பதும் உண்மைதான். எனவே நுழைவுத் தேர்வுகளை மொத்தமாக இரத்து செய்வது எளிமையான, நேரடியான, அனைவராலும் மனமகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகத் தெரியலாம். ஆனால், நீண்ட கால நோக்கில் இது பள்ளிக் கல்வித் தரத்தையும், தலைசிறந்த தொழிற்கல்விக்ககூடங்களில் நுழையும் மாணவர்களின் தரத்தையும் பாதிக்கும் என்பது உறுதி.

தற்பொழுது உள்ள மாநிலப் பள்ளி பாடத்திட்டமும் பொதுத் தேர்வு முறையும் தேர்வுத்தாள்கள் திருத்தப்படும் முறையும் எந்த விதத்திலும் மாணவர்களின் புரிந்துணர் திறனை வளர்ப்பதாக இல்லை. ஆகையால் நகரம், கிராம வேறுபாடின்றி அனைத்து பள்ளிகளிலும் பாடங்களை உருப்போட ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவிக்கிறார்கள். கட்டாயப்படுத்துகிறார்கள் என்று கூட சொல்லலாம். நுழைவுத் தேர்வுகளை இரத்து செய்தால், தன்னார்வம் இல்லாத பெரும்பாலான மாணவர்கள் பாடங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல் மனனம் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தக்கூடும். சரியாகப் பாடம் சொல்லித் தரத் தெரியாத ஆசிரியர்களுக்கும் இது வசதியாகப் போய்விடும். கடைசியில் பள்ளிக் கல்வியின் தரம் குறைவதில் தான் போய் முடியும்.

கிராமப் புற மாணவர்களால் போட்டியிட முடியவில்லை என்று மேம்போக்காக இந்த நுழைவுத்தேர்வு விடயத்தை நோக்கக்கூடாது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திறன் வாய்ந்தவர்களாகவும் உண்மையாகக் கடமையாற்றுபவர்களாகவும் இருந்தால் அந்த மாணவர்களாலும் நுழைவுத் தேர்வுகளில் திறம்பட போட்டியிட முடியுமே! அப்படி திறன் வாய்ந்த ஆசிரியர்களை நியமிப்பதின் மூலமும் அவர்கள் OP அடிக்காமல் பணியாற்றுகிறார்களா என்று கண்காணிப்பதின் மூலமும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த முடியுமே! அதை விடுத்து தேர்வுகளையே இரத்து செய்வது மீன் பிடிக்கக் கற்றுத் தராமல், தினமும் இலவசமாக மீன் தருவது போல் இருக்கிறது. இந்த மாணவர்களை மேலும் மந்தமடையச்செய்வதில் தான் போய் முடியும்.

நுழைவுத் தேர்வு பயிற்சிக்கூடங்கள் பெரும் பணம் கறக்கின்றன என்பதும் அவற்றில் பிள்ளைகளை சேர்த்துப் படிக்க வைப்பது பெற்றோருக்குப் பணச்சுமையைத் தருவதும் உண்மை தான். ஆனால் இம்மாதிரியான பயிற்சிக்கூடங்கள் திறன் வாய்ந்த ஆசிரியர்களால் நடத்தப்படுவதும் அவர்கள் பள்ளியில் ஒழுங்காகப் பாடம் சொல்லித் தராமல் நுழைத்தேர்வுப் பயிற்சிகளில் சேர மாணவர்களைத் தூண்டுவதும் தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்துவதும் கவனிக்கத்தக்கது. இம்மாதிரி ஆசிரியர்களை வாங்கும் ஊதியத்திற்கு உண்மையாக உழைக்கச்செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது? நுழைவுத் தேர்வு இரத்து ஆனாலும் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தி ஆசிரியர்கள் பணம் பண்ணுவதை தடுக்க அரசு முனையாதது ஏன்?

நுழைவுத் தேர்வு இரத்து மூலம் இன்னொரு முக்கியப் பிரச்சினை – எல்லாரும் மனனம் செய்து மதிப்பெண் வாங்கி விடுவதால் யார் உண்மையிலேயே தொழிற்கல்விகளுக்கான புரிந்துணர் திறனும் aptitudeம் கொண்டுள்ளார்கள் என்பது நிர்ணயிக்க இயலாமல் போய்விடும். இதனால், தலைசிறந்த தொழிற்கல்விக்கூடங்களில் தரம் குறைந்த மாணவர்கள் நுழைய வாய்ப்புண்டு.

தவிர, நுழைவுத் தேர்வு இரத்துடன் இணைந்து improvement தேர்வு முறை இரத்தும் ஏற்றுக்கொள்ள இயலாதது. நன்றாகப் படிக்கும் மாணவர் ஒருவர் தேர்வுக் காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனால் அதற்காக அவரது careerஐயே தொலைத்து விட வேண்டியது தானா? அதே வேளையில் improvement மாணவர்களை ஒழுங்குபடுத்த வேண்டியதும் அவர்களுக்கான முன்னிரிமையை குறைப்பதும் அவசியம் தான். இல்லாவிட்டால் வழமையான முறையில் போட்டியிடும் மாணவர்கள் சற்று மனம் தளரக்கூடும். பெரும்பாலான மருத்துவக் கல்வி இடங்களை improvement மாணவர்களே அள்ளிக்கொண்டு போகும் போக்கை கருத்தில் கொண்டு improvement தேர்வு முறையை ஒழுங்குபடுத்துவது அவசியமே தவிர முழுமையாக இரத்து செய்ய அவசியமில்லை.

ஆக, நுழைவுத் தேர்வு முறையை இரத்து செய்யாமல் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நீண்ட கால நோக்குடன் செயல்பட வேண்டியது தான் அரசும் அனைத்துக்கட்சிகளும் வருங்காலத் தலைமுறைக்கு செய்யும் உண்மையான உதவியாக இருக்கும்.

ரவி