பொருளகம், தங்கும் விடுதி, பெரு அங்காடி, காலணியகம், இனிப்பகம், உணவகம், மின்னணுப் பொருளம், எழுது பொருளகம், கணினி பயிற்சி மையம்.. இப்படிச் சென்னையின் சில கடைகளில் புதிய தமிழ்ப் பெயர்ப் பலகைகள் தென்படுகின்றன. என்னடா, இது தமிழ்நாடு தானா இல்லை இலங்கை, சிங்கப்பூரா என்று குழப்பமாகப் போய் விட்டது 🙂
தமிழில் பெயர் எழுத வேண்டும் என்று முன்பே அரசு உத்தரவு இருந்தாலும், இப்போது செம்மொழி மாநாட்டை முன்னிட்டு அந்த உத்தரவைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துகிறார்களாம். நல்ல மாற்றம்.
இருந்தும், பல கடைகளில் மாற்றத்தைக் காணோம். சில கடைகள் ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழ் எழுத்துகளில் எழுதி உள்ளன. இப்போது மாறியுள்ள சில கடைகளும் தற்காலிகப் பெயர்ப் பலகைகளை வைத்துள்ளன. சென்னைக்கு வெளியே இந்த நடவடிக்கைகளைக் காணவில்லை. மாநாட்டுக்குப் பிறகும் மாற்றம் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.