F

தமிழர்கள் Form, Friend, Fan, Firefox, Frame, Fried rice, Figure, Photo, Phenol போன்ற எண்ணற்ற ஆங்கிலச் சொற்களை அன்றாட வாழ்வில் புழங்குகிறோம். ஆனால், மற்ற இந்திய, இலத்தீன-கிரேக்க-ஐரோப்பிய மொழிகளைப் போல் F ஒலியைத் தமிழில் எழுதிக் காட்ட இயலாதது பெரும் குறை.

தொல்காப்பியம், நன்னூல் எழுதியோர் வெளிநாடு சென்ற கடவுச்சீட்டு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே, அக்காலத்தில் F அறிமுகம் ஆகாமல் இருந்திருக்கலாம். எனினும், காலம் காலமாக அடுப்பு, சுருட்டு பற்ற வைத்து நெருப்பை அணைக்கும் போது, தமிழர்கள் அனைவரும் ‘foo… foo’ என்றே ஊதுகின்றனர். தற்காலத்திலும், குடித்து விட்டு சாலையில் வருகையில் காவலர்கள் மறித்து ஊதிக் காட்டச் சொன்னால் ‘foo… foo’ என்றே ஊதுகின்றனர். இதில் இருந்து F ஒலி தமிழர்களுக்கு அறிமுகமானதே என்று அறியலாம்.

தமிழர்களுக்கு அறிமுகமான இந்த F ஒலியைத் தமிழில் எழுதிக் காட்ட முடியவில்லை என்றால், வரும் தலைமுறை தமிழைப் புறக்கணித்து தமிழ் அழியும் நிலைக்குச் செல்லும். எனவே, நமக்குத் தேவையான F ஒலியை ஆங்கிலத்திடம் இருந்து பெற்று தமிழில் சேர்த்துக் கொள்ளத் தயங்கக்கூடாது. புதிய எழுத்துகளைச் சேர்த்துக் கொள்வது எம்மொழிக்கும் அழகு. இதுவே மொழி வளர்ச்சியாகும். இது வல்லினமா, மெல்லினமா, இடையினமா, அகர வரிசையில் எங்கு சேர்ப்பது, எவ்வளவு மாத்திரை, புணர்ச்சி விதி என்ன என்று யாரும் கவலைப்பட வேண்டாம்.

இனி, fரான்சு, fரெட்ரிக், fரெஞ்சு என்றே எழுத வேண்டும். முன்னர் பல காலமாக பிரான்சு, பிரெட்ரிக், பிரெஞ்சு என்றெல்லாம் எழுதி வந்திருந்தாலும் அனைவரும் இனி கட்டாயம் F எழுத்து கொண்டே எழுத வேண்டும். அப்படி எழுதியும் F உச்சரிக்க வராதவர்கள் நாட்டுப்புறத்தான்கள், பாமரர்கள், படிப்பறிவற்றவர்கள், நாகரிகம் தெரியாதவர்கள், காட்டான்கள். F எழுத மறுப்பவர்கள் தனித்தமிழ் வெறியர்கள், முட்டாள்கள், தமிழரை அறியாமையில் மூழ்கடிப்பவர்கள், பழமைவாதிகள், ஆணவம் பிடித்தவர்கள், Fல் தொடங்கும் பெயருடையவர்களை அவமதிப்பவர்கள், Fஆசிசுட்டுகள், நார்சியவாதிகள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஆங்கில-வெளிநாட்டு-கிறித்தவ-fரெஞ்சு வெறுப்பாளர்கள்.

இனிமேல் F தமிழ் எழுத்து.

முற்றும்.

கிரந்தம்

பல நாடுகள், சமயங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றியது. பல நாட்டினரும் பல சமயத்தினரும் தமிழ் பேசுகின்றனர். ஒரே பிறப்பில் நாட்டையும் சமயத்தையும் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், தாய்மொழியை மாற்றிக் கொள்ள இயலாது. எனவே, நாடுகள், சமயங்களைக் காட்டிலும் மொழி பெரிது என்று கருதாவிட்டாலும், அவற்றுக்குத் தருவதற்கு ஈடான மதிப்பை மொழிக்கும் தர வேண்டும்.

கிரந்த எழுத்துப் பயன்பாடு குறித்து சிந்திக்கையில் எழும் எண்ணங்கள்:

* thamiழ், thiruஞaanasambandhar, vaள்ள்i, faன், hஆட், jஓக், shஅவர், பs என்று எழுதுவதற்கும் விஜய், ஹாரி, ஜெய் என்று எழுதுவதற்கும் என்ன வேறுபாடு? ஆங்கிலத்தோடு தமிழ் கலந்து எழுதுவது உறுத்துகிறது; கிரந்தத்தோடு தமிழ் கலந்து எழுதுவது மட்டும் ஏன் உறுத்த வில்லை? பழகிப் போவதால் ஒரு பிழை சரியாகுமா?

* இடாயிட்சு, நெதர்லாந்து மொழிகளில் ஓசை இல்லை. ramanujan என்று எழுதினால் ராமானுயன் என்று தான் வாசிப்பார்கள். தமிழில் இராமானுசன் என்று எழுதினால் மட்டும் ஏன் மரியாதைக் குறைவு என்று நினைக்கிறார்கள்?  thamil என்று கூட எழுதாமல் tamil என்று ஆங்கிலேயர் எழுதுவது தமிழரை அவமதிப்பதாகுமா? கிரந்தம் கலந்து ஒலிப்பு பிசகாமல் எழுதி ஒருவரைக் காறித் துப்பவும் முடியும். கிரந்தம் தவிர்த்து எழுதி ஒருவரைப் போற்றவும் முடியும். ஒருவரைப் போற்றவோ தூற்றவோ ஒலிப்பு ஒரு பொருட்டே இல்லை.

* இந்து, பௌத்த, இன்னும் பல சமய மந்திரங்களின் ஒலிப்பில் மந்திர ஆற்றல் உள்ளதாகவும் அதைக் காக்க கிரந்தம் அவசியம் என்றும் சொன்னால், சீன, சப்பானிய மொழிகளில் இந்த ஒலிப்புகளுக்குத் தொடர்பே இல்லாமல் இம்மந்திரங்கள், பெயர்களைச் சொல்லி வழிபடுகிறார்களே? அவர்களுக்கு அருள் கிடைக்காதா? கிரந்த எழுத்துகளே கலக்காமல் பாடல் பாடிய நாயன்மார்கள், ஆழ்வார்கள் வீடுபேறு அடையவில்லையா? பக்திக்கு ஒலிப்பு எவ்விதத்தில் முக்கியமாகிறது? மொழியின் இயல்பு, கவனக் குறைவு, இயலாமை காரணமாக ஒருவர் ஒலிப்புப் பிசகிப் பேசினாலும் பாடினாலும் பக்தனின் உள்ளத்தை அறிந்து அருள இயலாத மூடரா கடவுள்? ஒரு கடவுளுக்குப் பல அவதாரங்கள், ஒவ்வொரு அவதாரத்துக்கும் பல பெயர்கள், ஒவ்வொரு மொழி, நாட்டிலும் ஒவ்வொரு ஒலிப்பு என்று இருக்கையில் ஒரு கடவுளின் பெயரை ஒலிப்பு கெடாமல் எழுதுவது அவசியமா? கண்ணன், திருமகள் என்று கிரந்த எழுத்துத் தேவையின்றி பிற மொழிச் சமயப் பெயர்களையும் தமிழாக்கிக் கூட எழுதலாமே? எல்லாம் கடந்த ஒரு ஓசையில் தான் கடவுள் தங்கி இருக்கிறாரா? ஒலிப்பை மாற்றிச் சொன்னால் மதிப்புக் குறைவு என்று கோபப்படுவரானால், பக்கத்துத் தெரு அரசியல்வாதிக்கும் கடவுளுக்கும் அவரது தூதர்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு?

* கிரந்தம் கலக்காமல் தமிழ் எழுத்துகளில் மட்டும் எழுத வேண்டும் என்று சட்டம் இல்லை. அதே போல், கிரந்தம் கலந்து தான் எழுத வேண்டும் என்றும் சட்டம் இல்லை. தமிழ் இலக்கணப் படி பள்ளியில் சொல்லித் தரப்பட்ட தமிழ் எழுத்துகளை மட்டும் கொண்டு எழுதுவதற்கு எவருக்கும் முழு உரிமை உண்டு.

* “தமிழ் இயல்புக்கு ஏற்ப ஒலிகளை உள்வாங்கியும் கிரந்தம் தவிர்த்தும் எழுதுவது தங்களை, தங்கள் நம்பிக்கைகளை அவமதிப்பதாகும்” என்று எவரும் சொல்வது ஒரு தொன்மையான இனத்தின் தன்மானத்துக்கு விடப்படும் நேரடி மிரட்டலாகும்.

* தமிழில் எழுதும் போது தமிழ் ஒலிகளை மட்டும் பயன்படுத்துங்கள் என்று தமிழரிடம் வேண்டுவது எவ்வாறு தமிழ்த் திணிப்பாகும்?

* பிற மொழி ஒலிப்புகள், அதை எழுதுவதற்கான தேவை ஏதோ புதிதாய் எழுந்தது இல்லை. தொல்காப்பியக் காலத்தில் தமிழருக்கு பிற மொழி, வட மொழியினருடன் தொடர்பு உண்டு. அதனாலேயே அச்சொற்களை எப்படி ஆள்வது என்று இலக்கணம் இயற்றப்பட்டது. வரலாற்றுக் காலம் நெடுகிலும் உலகம் முழுக்க வணிகத் தொடர்புகளைத் தமிழர் கொண்டிருந்திருக்கின்றனர். இத்தனைக் காலமும் கிரந்தம் இன்றி இருக்க வல்லதாய் இருந்த தமிழுக்குத் தற்போது மட்டும் கிரந்தத்தின் தேவை என்ன?

* புஷ்பா, ஹரீஷ் என்று எழுதினாலும் எங்கள் ஊர்க்காரர்களுக்கு புசுப்பா, அரீசு என்றே அழைக்க வருகிறது. அதை ஏன் புசுப்பா, அரீசு என்றே எழுதி விட்டுப் போகக்கூடாது? சார்ச்சு புசு, சாக்கி சான் என்று எழுதினாலும் அவர்கள் யாரும் நம்மோடு சண்டைக்கு வரப் போவதில்லை. அவர்களே கண்டு கொள்ளாத போது நாம் ஏன் விழுந்து விழுந்து ஒலிப்புத் துல்லியம் காட்ட வேண்டும்? கிரந்த ஒலிகள், எழுத்துகள் தேவைப்படுவோரைக் காட்டிலும் அவற்றின் தேவையின்றி வாழும் தமிழர் எண்ணிக்கை மிகக் கூடுதல். கிரந்தத்தை வலியுறுத்துவது தான் அவர்கள் மேலான உண்மையான திணிப்பு.

* கிரந்த எழுத்துகளைப் பொது ஊடகங்களில் பயன்படுத்துவது என்பது ஒரு சிலர் முடிவு எடுத்த, ஒருவரைப் பார்த்து இன்னொருவர் கண்மூடித்தனமாகப் பின்பற்றிய மரபு. கிரந்த எழுத்துப் பயன்பாடு என்பது திறந்த முறையில் மொழியிலாளர்களைக் கலந்துரையாடி எடுக்கப்பட்ட இறுதி முடிவு அன்று. கிரந்த எழுத்து அறிமுகத்தில் பிற மொழி, சமய, இனத்தினர் நலமே மிகுந்துள்ளதே தவிர தமிழ், தமிழர் நலம் காக்கப்படவில்லை.

* அச்சூடகங்களைக் காட்டிலும் இணைய ஊடகத்தில் ஒலிப்பைச் சுட்ட எழுத்துகளின் தேவை குறைவு. ஒலிக்கோப்புகள் மூலம் ஒலிப்பை எளிதாகச் சுட்ட முடியும். வருங்காலம் முழுக்க முழுக்க இணைய மயமான உலகாக இருக்கும் என்பதால் ஒலிப்பைக் கற்பதற்கு எழுத்துகளை மட்டும் தங்கியிருக்கத் தேவை இல்லை.

* “ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் மட்டும் இருப்பது கற்றுக் கொள்ள குழந்தைகளுக்கு இலகுவாக இருக்கிறது.  தமிழில் 247 எழுத்துகள் இருப்பது சிரமமாக இருக்கிறது. அதைக் குறைத்து எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்” என்று சொல்பவர்கள் மேற்கொண்டும் கிரந்த ஒலிகளுக்காக (ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ) 66 மேலதிக எழுத்துகளைக் கற்கச் செய்வது ஏன்?

* பல நாடுகள், சமயங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றியது. பல நாட்டினரும் பல சமயத்தினரும் தமிழ் பேசுகின்றனர். ஒரே பிறப்பில் நாட்டையும் சமயத்தையும் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், தாய்மொழியை மாற்றிக் கொள்ள இயலாது. எனவே, நாடுகள், சமயங்களைக் காட்டிலும் மொழி பெரிது என்று கருதாவிட்டாலும், அவற்றுக்குத் தருவதற்கு ஈடான மதிப்பை மொழிக்கும் தர வேண்டும்.

கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுவது எப்படி?

கிரந்தம் தவிர்த்துத் தமிழில் எழுதுவது தற்போதும் பெரு ஊடகங்களிலும் வழக்கில் உள்ளதே. சில சொற்களைக் கிரந்தம் தவிர்த்தும் சிலவற்றில் கிரந்தம் தவிர்க்காமலும் எழுதுவதற்கு போதிய தமிழாக்க முயற்சிகளும் பழக்கமும் இல்லாததே காரணம். எனவே, கிரந்தம் தவிர்த்து எழுதுவதை ஏதோ புதிய நடைமுறையாகக் கருதத் தேவை இல்லை.

கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுதுவது எப்படி?
* கிரந்தம் தேவைப்படும் பிற மொழிச் சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல் இருந்தால் ஆளலாம்.

இஷ்டம் -> விருப்பம்.

சந்தோஷம் – > மகிழ்ச்சி

ஹேபிட் – > பழக்கம்

கஷ்டம் – > துன்பம், முடை, இடர், இடர்ப்பாடு, இன்னல், தடை, இடைஞ்சல்

ஸ்மைல் – > புன்னகை

* ஜ, ஷ, ஸ, ஹ ஆகியவற்றுக்குப் பதிலாகத் தமிழில் வழமையாக ஈடு கொடுக்கப்படும் எழுத்துகளைப் பயன்படுத்தலாம்.

வருஷம் – > வருடம்; வருசம். (ஆண்டு)

விஷயம் – > விசயம்; விதயம்; விடயம். (இது இன்னதென்று பொருள் புரியாது பயன் படுத்தும் ஒரு சொல். பெரும்பாலான இடங்களில் செய்தி (“சேதி”,) குறிப்பு, நிகழ்வு என்று பொருள்படும்)

விசேஷம் – > விசேசம்; விசேடம். (சிறப்பு, கொண்டாட்டம்)

விஷம் – > விசம், விடம் (நஞ்சு என்று தமிழில் சொல்லாம். விசம், விடம் என்று ஒலிப்பைத் திரித்துச் சொன்னாலும் பாம்பு கொத்தினால் உயிர் போவது உறுதி 🙂 )

ஷாந்தி -> சாந்தி

ஷங்கர் – > சங்கர்

ஹனுமான், ஹிந்தி, ஹிந்து, ஹோட்டல், ஹொகேனக்கல் – > அனுமான், இந்தி, இந்து, ஓட்டல், ஒகேனக்கல் (ஹகரத்தை விடுத்து அதை அடுத்து வரும் உயிர் ஒலியைக் கொள்ள வேண்டும்)

ராஜா, ரோஜா, ஜாதி, ஜோதிடம், ஜோதி – > ராசு, ராசா, ரோசா, சாதி, சோதிடம், சோதி.  (முதல் சகரத்தை வல்லினமாக பலுக்கினால், ஒலித்திரிபு குறைவே)

மேல் உள்ள எடுத்துக்காட்டுகளைக் கொண்டு, கிரந்தம் தவிர்த்துத் தமிழில் எழுதுவது தற்போதும் பெரு ஊடகங்களிலும் வழக்கில் உள்ளதே என அறியலாம். சில சொற்களைக் கிரந்தம் தவிர்த்தும் சிலவற்றில் கிரந்தம் தவிர்க்காமலும் எழுதுவதற்கு போதிய தமிழாக்க முயற்சிகளும் பழக்கமும் இல்லாததே காரணம். எனவே, கிரந்தம் தவிர்த்து எழுதுவதை ஏதோ புதிய நடைமுறையாகக் கருதத் தேவை இல்லை.

எழுத்துக்களை விடுத்து எழுதுவதற்குப் பின்வரும் விதிகளைப் பின்பற்றலாம்.

ஸ் – சு
ஸ – ச; ஸா – சா …

(விதிவிலக்காக சில இடங்களில் ஸ் – > சி ஆகும். எடுத்துக்காட்டுக்கு, ஸ்நேகா – > சிநேகா)

ஷ் – சு
ஷ – ச; ஷா – சா ..

ஜ் – சு
ஜ – ச; ஜா – சா ..

ஸ்ரீ – சிறி (அல்லது) சிரி

க்ஷ் – க்சு
க்ஷ – க்ச; க்ஷா – க்சா ..

ஹ் – சொல் முதலில் வந்தால் இகரம் கொண்டு எழுதவும்.

ஹ்ருதயம் – > இருதயம்

ஹ் – சொல்லின் இடையில், கடைசியில் வந்தால் புறக்கணிக்கவும்.

தேஹ்ராதூன் – > தேராதூன்
ஹ – சொல் முதலில் வந்தால் – > அ ( ஹ் புறக்கணித்து அதை ஒட்டிய உயிரொலியைக் கொள்ளவும்); ஹா – ஆ; ஹி – இ ..

ஹிந்து – இந்து; ஹனுமன் – அனுமன்; ஹோட்டல் – ஒட்டல்

ஹ் – சொல் இடையில் வந்தால் – >  க; ஹா – கா ..

மோஹன் – மோகன்; மஹாத்மா – மகாத்மா.

* பொருளுள்ள பெயர்ச்சொற்களுக்கு சீனம், சப்பானிய மொழி போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் முற்காட்டு இருந்தால், நாமும் சொற்களை மொழிபெயர்த்து பொருள் விளங்குமாறு வழங்கத் தயங்கக்கூடாது.

* இடுகுறிப் பெயர்ச்சொற்களை இயன்ற வரை தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதி அடைப்புக்குறிகளில் ஆங்கிலம், மூல மொழியின் எழுத்துகளைக் கொண்டு எழுதிக் காட்டலாம். ஒலிக்கோப்புகள் தரலாம்.


ஸ்ரீ X சிறீ X சிரீ

திரு என்னும் சொல்லை ஸ்ரீ என்னும் சொல்லுக்கான மொழிபெயர்ப்பாக மட்டுமே அனைத்து இடங்களிலும் கருதி விட இயலாது. ஸ்ரீ என்னும் சொல் மற்றும் எழுத்துப் பயன்பாடு தமிழ்ச்சூழலில் புகும் முன்னரே திரு என்னும் பெயரைத் தாங்கிய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாட்டில் இருந்திருப்பதை அறியலாம்

தமிழ் விக்கிப்பீடியாவில் மஞ்சுஸ்ரீ என்ற கட்டுரை இயற்றப்பட்ட போது அதை ஏன் மஞ்சுசிறீ என்றோ மஞ்சுசிரீ என்றோ எழுதக் கூடாது என்றொரு சுவையான உரையாடல் வந்தது. முழு உரையாடலுக்கு பேச்சு:மஞ்சுஸ்ரீ பார்க்கவும்.

ஸ்ரீ கட்டுரையில் இருந்து முக்கியமான தகவல்:

தமிழுடன் கலந்து எழுதப்படும் பிற கிரந்த எழுத்து வடிவங்களைப் போலன்றி, ஸ்ரீ என்பது ஒரே பொருள் குறித்து மட்டுமே அனைத்து இடங்களிலும் பயன்படுவதும் பிற உயிர், மெய் ஒலிகளுடன் சேராது எப்போதும் தனி எழுத்தாகவே பயன்படுவதும் குறிப்பிடத்தக்கது. தெளிவாகச் சொல்வதானால், ஒரே ஒரு சொல்லுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கூடுதல் எழுத்து. தமிழில் பிற மொழிச் சொற் கலப்பை தவிர்த்து எழுதுவோர் ஸ்ரீ என்னும் சொல்லுக்கு இணையான திரு, திருமிகு, அருள்மிகு போன்ற சொற்களை இடத்துக்குத் தகுந்தவாறு பயன்படுத்துகின்றனர். எனினும், திரு என்னும் சொல்லை ஸ்ரீ என்னும் சொல்லுக்கான மொழிபெயர்ப்பாக மட்டுமே அனைத்து இடங்களிலும் கருதி விட இயலாது. ஸ்ரீ என்னும் சொல் மற்றும் எழுத்துப் பயன்பாடு தமிழ்ச்சூழலில் புகும் முன்னரே திரு என்னும் பெயரைத் தாங்கிய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாட்டில் இருந்திருப்பதை அறியலாம். தற்காலத்தில் ஸ்ரீரங்கம் என்று குறிப்பிடப்படும் ஊர் முற்கால வைணவ இலக்கியங்களிலேயே திருவரங்கம் என்று குறிக்கப்பட்டு இருப்பதும், திரு + அரங்கம் என்னும் சொற்கூட்டு தரும் பொருளும் ஸ்ரீ + ரங்கம் என்னும் சொற்கூட்டுத் தரும் பொருளும் முற்றிலும் வேறாக இருப்பதையும் காணலாம். எனவே, முற்காலத்தில் தமிழில் ஏற்கனவே திரு என்னும் சொல் இருந்த இடங்கள் தவறுதலாக ஸ்ரீ என்ற மொழிமாற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததாகவும் கருதலாம்.

கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து எழுதுவோர் ஸ்ரீ என்ற எழுத்துக்கு மாறாக அதற்கு நெருங்கிய ஒலிப்பு தரும் சிறீ, சிரீ என்ற எழுத்துக்களைப் பயன்படுத்துவது உண்டு. தமிழ் இலக்கியத்தில் சிரீ என்று எழுதும் வழக்கம் காணப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, திருவாய்மொழி இரண்டாம் பகுதியில் (பாடல் 2858ல்)

தூமனத் தனனாய்ப் பிறவித்

துழதி நீங்க என்னைத்
தீமனங் கெடுத்தா யுனக்கென்

செய்கேனென் சிரீதரனே!

என்று வருவதைக் கவனிக்கலாம்.

இலங்கையில், ஸ்ரீ என்பதற்கு மாறாக சிறீ என்று எழுதும் வழக்கம் இருக்கிறது. எனினும், இந்த மாற்றத்துக்கு அந்நாட்டு அரசியல் சூழலும், வரலாற்று நிகழ்வுகளும் ஒரு காரணமாகும்.