குட்டிம்மா

முடிதிருத்தும் அண்ணன்

ஆச்சரியப்பட்டு இருக்க வேண்டும்.

குட்டிம்மா பதுவிசாய்ப் போவாள்.

எட்டிப் பிடித்து,

இருக்கையில் அமர்ந்து கொள்வாள்.

அவர் கேட்பார் “ஷாலினி cutting வெட்டட்டா”

இவள் சொல்வாள்:

‘ம், அப்படியே shavingம்’

முடிதிருத்தும் அண்ணன்

ஆச்சரியப்பட்டுத்தான் போவார்.

குட்டிம்மா என்றால் குறும்பு.

“அண்ணா… Monkey அண்ணா”

கூவிக்கொண்டே வருவாள்

குட்டிம்மா.

பின், என் காதுக்கு மட்டும் சொல்வாள்

“Monkey ன்னா கொரங்கு !

ஒனக்குத் தெரியாதா?”

குட்டிம்மாவை கண்டா

அடிடா ராமா பல்டி !

குட்டிம்மா முன் யாரும்

‘Biscuit’ என்று சொல்லக்கூடாது.

‘Biscuit’ என்றால் அணுக்கரு !

அணுக்கருவை இரண்டாகப் பிளப்பாள் (அதாவது, உடைப்பாள்)

இப்பொழுது “சக்தி பிறக்கிறது” என்பாள்.

நான் “எப்படி?” என்பேன்.

இப்படி:

குட்டிம்மாவின்

வாயில் கொஞ்சமும்

வயிற்றில் கொஞ்சமும்

அணுக்கரு

பிளந்து கட்டிக் கொண்டு இருக்கும்.

குட்டிம்மா என்றால் ஆற்றல் !

என் வேதியியல் புத்தகம்

அவள் மயிலிறகு மெத்தை !

வேதி வினைகள் மறைக்கப் பட்டாலும்

மயிலிறகின் தூக்கம் கெடக்கூடாதாம் !

மகாராணி குட்டிம்மாவின் உத்தரவாம் !

தெரியாத அணுத்தொகையால்

சரியான வினையும் மூச்சுத் திணறும்

குட்டிம்மா வைத்தியம் சொல்வாள்

“அணுவைப் பெருக்கஞ் செய்”

குட்டிம்மா என்றால் ஞானம் !

அவள் நர்த்தனம் புரியும் போதும் புரிந்த பின்னும்

என்னை நான் சிலிர்த்துக் கொள்வேன்.

ஆரத் தழுவி அன்புடன் சொல்வேன்.

“குட்டிம்மா, உனக்குள் ஒளி இருக்கிறது.”

அவள் சிரித்துக் கொண்டே சொல்வாள்.

“ஒளிக்குள் தான் உயிர்கள் இருக்கின்றன.”

குட்டிம்மா என்றால் ஒளி.

குட்டிம்மா

குட்டி குட்டிம்மாவாக

இருந்த காலந் தொட்டே

அவளுக்கு ஓடிப் பிடித்து விளையாடுவதும்

எனக்கு இனிப்பு வகைகளும் விருப்பம்.

அவள் இனிப்பு வாங்கி வருவாள்.

எட்ட நின்று காட்டி “கிட்ட வா என்பாள்”

நெருங்குவேன்.

ஓடுவாள்.

“சரி, உன் ஆசை தீர்ந்தது. எங்கே எனக்கு இனிப்பு?”

“அஸ்கு, ஆச தோச அப்பள வடம்.”

குட்டிம்மா என்றால் குழந்தை !

பேரம் பேசும் சுவாரசியத்தில்

சந்தையில்

குட்டிமாவை தொலைத்து விட்டிருந்தேன்.

தூக்கி வளர்த்த தோளும்

தழுவிப் பழகிய மார்பும்

மலர்ந்து மகிழ்ந்த மனமும்

வேரறுந்து போயின.

சேர்ந்து திரிந்த நிஜங்களும்

சேரத் துடிக்கும் கனவுகளும்

சேர்ந்தே என்னைத் துன்புறுத்தும்

தொலைந்து போன குட்டிம்மாவுக்கு

ஒரு கடிதம் எழுதுவேன்.

அன்புள்ள குட்டிம்மாவுக்கு

பெரிய குட்டிம்மா

எழுதும் கடிதம்

………………………….

நீ எங்கு இருக்கிறாய்?


முதலில் http://ravikavithaigal.blogspot.com/2007/02/blog-post_17.html என்ற முகவரியில் பதிப்பிக்கப்பட்டது.

இதை வாசிக்கவாவது நீங்கள் இருக்கிறீர்கள்… (கவிதை)

ஒரு மேசை, ஒரு நாற்காலி, ஒரு கட்டில்.

அப்புறம் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி

அடைந்து கிடக்கும் என் அறையில்,

இன்னும் எதை வாங்கி வைத்தாலும் கேட்கப் போவதில்லை.

சாப்பிட்டாயா என்று.



பட உதவி: LynGi
பட உரிமம்: கிரியேட்டிவ் காமன்ஸ் – வணிகமல்லா, மேற்படிப் பயன்பாடு – 2.0

தனிமையின் பெயர்

உறக்கம் வரா ஆம்சுடர்டாம் இரவு 11.30 மணி.
ஏதோ பேசித்தீர்க்க விழையும் மனம்.

பெல்சியம், செருமனி, லக்சம்பர்க், பிரான்சு..

”இத எல்லாம் நாங்க TVல தான் பார்க்கணும்..நீ நேர்லயே பார்க்கிற..” – அப்பா.
“எந்த TVயும் உங்கள காட்டுதில்லையே..” – நான்.

சின்ன வயசுல உலகம் பார்ப்பது சாதனையாம்.
பறவை கூட தான் நாடு விட்டு நாடு போகிறது.

சாதனையா என்ன?

பிழைப்பு !

பார்க்க, பேச வலைப்படக் கருவியும் தொலைபேசியும் உண்டு.
அக்கா மகனை தூக்கிக் கொஞ்சத் தான் தொழில்நுட்பம் இல்லை.

மீந்த பருக்கைகள் தின்ன வரும் குருவிகளுக்கு என் மொழி தெரியாது.
வாரக் கடைசி நண்பர்களுக்கு என் வலி புரியாது.
மது விற்கும் இரவுக்கடைக்காரனுக்கு சிரிக்கத் தெரியாது.

என் கண்ணாடி சன்னலின் வழி
காற்றும் மாசும் இரைச்சலும் எப்போதும் வந்தாலும்
ஒருபோதும் வருவதில்லை ஒரு பறவையும்..

திருமணம் செய்யலாமா, புது நண்பர் பிடிக்கலாமா – அக்கறையோடு கேட்கும் அக்கா.
ஒரு container நிறைய என்னோடு மனிதர்களை போட்டு அடைத்தால் சரியாகி விடுமா என்ன?
இது வெட்ட வெளியில் ஒரு மூச்சுத் திணறல்.

வருகிறார்கள். நுழைகிறார்கள். திரை மூடுகிறது. திரை விலகுகிறது. செல்கிறார்கள்.
20 நிமிடங்கள் – 50 ஐரோ மட்டுமே.
”என்ன செய்யலாம்?”
”என்ன வேண்டுமானாலும்..Su** and F***, two positions..”


ஏதாவது பேசுவாயா என்றா கேட்க முடியும்?
நகர்கிறேன்.

குளிர் நாட்டில் நடுநிசி நாய்களைக் காணோம்.
மனிதர்கள், வண்டிகள், கடைகள் மட்டுமே.

இன்னொரு சன்னல். இன்னொரு பெண்.
அதே உரையாடல்.
நகரப் பார்த்தபோது கேட்டாள்:

”யாரும் வருகிற பாட்டை காணோம்… விடியல் வரை கண் முழிக்கணும்…
சும்மானாச்சும் கொஞ்ச நேரம் ஏதாச்சும் பேசேன்”?


என்ன பேசி விட முடியும்?

போதை, புகை, மாது, கேளிக்கை, கொண்டாட்டம் நிறைய கிடைக்கிறது.
வாழ்க்கை மட்டுமே விற்பனைக்கு கிடைப்பதில்லை.

அலைந்த களைப்பில் உறக்கம் வரலாம்.
அப்போதும் யாரும் வரப்போவதில்லை பேசித் தீர்க்க –
எனக்கும் அவளுக்கும் அனைவருக்கும்.

தமிழ்நாட்டில் கவிதை ரசனை

இப்பொழுது எல்லாம் நான் கவிதை எழுதுவேன் என்று சொல்லிக்கொள்ளவே தயக்கமாக இருக்கிறது. ஓ நீயுமா என்று அலட்சியப் பார்வை பார்ப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.

இந்த நிலைக்கு நான்கு பேர் தான் முக்கியக் காரணம் என நினைக்கிறேன்.

1. மலிவு விலை வார இதழ்களில் வரும் கவிதைகள்
2. யாருமே வாங்காத இலக்கிய இதழ்களில் வரும் யாருக்குமே புரியாத கவிதைகள்
3. FM வானொலிகளில் ஏதாவது நகைச்சுவை, பாடல் அல்லது கவிதையாவது சொல்லத்தூண்டும் தொகுப்பாளர்கள்
4. T. ராஜேந்தர், விவேக் தேவர், பார்த்திபன், அப்துல் கலாம் (இவர் எழுதுவன பாடல்கள் தான், கவிதைகள் அல்ல) போல் எசகு பிசகாக எதையாவது எழுதி விட்டு அதை கவிதை என்று விளம்பரப்படுத்துபவர்கள்.

மலிவு விலை இதழ்கள் என்பதில் வாரமலர், குடும்பமலர், ராணி, பாக்யா வகையறாக்கள் எல்லாம் அடக்கம். குமுதம், விகடனில் தப்பித்தவறி அவ்வப்பொழுது நல்ல கவிதைகள் வந்து விடுகின்றன. அதனால் அவற்றை மன்னித்து விடுகிறேன். மேற்குறிப்பிட்டுள்ள வகையறா இதழ்களில் வருவன பெரும்பாலும் புலம்பல் அல்லது அறிவுரை கவிதைகள் தான். ஓ மானிடா என்று ஆரம்பித்து ஒரு பக்கத்துக்கு அறிவரை கூறி அறுக்கும் சமுக சீர்திருத்த பிதற்றல் காரர்களின் அறிவுரை கவிதைகள் (!) வாரமலரில் ரொம்ப பிரசித்தம். அல்லது, என் அன்பே என்று தொடங்கி புலம்புகிறார்கள். ஒரே வரியில் எழுதாமல் வரிக்கு ஒரு வார்த்தையாக பிய்த்து பிய்த்து எழுதினாலே கவிதை என்று கூறிக்கொள்ளுமளவுக்கு தான் சராசரி தமிழனின் கவிதை இலக்கியத்தின் ரசனை இருக்கிறது என்று நினைக்கிறேன். அது மாதிரி கவியரங்கத்தில் ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை மூன்று முறை படிக்கும் இம்சையான வழக்கத்தை எந்த கவி ராசன் தொடங்கி வைத்தார் எனத்தெரியவில்லை. ஒரு வேளை ஒலி பெருக்கி கோளாறினால் யாராவது இந்த வழக்கத்தை தொடங்கி வைத்து இருக்கலாம். இந்த மாதிரி இதழ்கள், கவியரங்கங்கள் மூலம் கவிதைக்கு அறிமுகமாவதனால் இப்படித்தான் கவிதை என்று புரிந்து கொண்டு அதே மாதிரி எழுதத் தொடங்கி விடுகிறார்கள். நல்ல தேடல் இருப்பவர்கள் மட்டும் நல்ல கவிதைகளை தேடிப் பிடித்துப் படித்து தங்களை செம்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.

எனக்கு பிடிக்காத இன்னொரு போக்கு தீபாவளி, பொங்கலுக்கு தவறாமல் அருளுரை வழங்கும் சாமியார்கள் போல் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ready made கவிதைகள் எழுதும் பிரபலக் கவிஞர்கள் பற்றியது. சுனாமி நிகழ்வுக்கு ஒவ்வொரு கவிஞராக கவிதாஞ்சலி எழுதிய போது எனக்கு கடுப்பாக வந்தது. உண்மையான சோகம் உடையவன் எவனும் அந்த நேரத்தில் கவிதை எழுதவும் மாட்டான். அதை பத்திரிக்கைக்கு அனுப்பி பிரசுரிக்கச் சொல்லவும் மாட்டான். அந்தக் கவிஞர்களின் குழந்தைகளும் சுனாமியில் செத்திருந்திருந்தால் இப்படித்தான் கவிதை எழுதிக் கொண்டிருந்திருப்பார்களா எனத் தெரியவில்லை.

ஆன்மத்திருப்திக்காக செய்யும் எந்த ஒரு கலை வடிவத்திலும் மட்டும் தான் உண்மையும் நேர்மையும் இருப்பதாக கருதுகிறேன். நடன அரங்கேற்றமாகட்டும் பாட்டுக்கச்சேரியாகட்டும் கைத்தட்டலை எதிர்பார்த்து அதை தொடங்கும்போதே அதில் உள்ள ஆன்ம அர்ப்பணிப்பு செத்துவிடுவதாகத்தான் நினைக்கிறேன். ஒரு பாடகியின் மிகச்சிறந்த பாடல் அவள் குழந்தைக்கு பாடும் தாலாட்டாகத் தான் இருக்க முடியும். ஒரு நர்த்தகியின் மிகச்சிறந்த நடனம் அவள் காதலனுக்காக மட்டும் ஆடிக்காட்டுவதாகவோ இறைவன் சந்நிதியில் ஆடுவதாகத்தான் இருக்க முடியும். நல்ல கவிதையும் அப்படித்தான். இப்படி எழுதினால் பிரசுரிப்பார்கள், இப்படி எழுதினால் பாராட்டுவார்கள் என்று நினைக்கும் போதே கவிதையின் நேர்மை செத்து விடுகிறது. கலைஞனுக்கு ஊக்க மொழிகள் தேவை தான்..ஆனால், அதை மட்டும் கருத்தில் கொண்டு அவன் வெளியிடும் கலைப்படைப்பில் தரம், உண்மை இருக்காது என்று நம்புகிறேன். யாராவது எழுதச்சொல்லி கேட்டு சிறுகதை, கட்டுரை எழுதலாம். ஆனால், கவிதை எழுத முடியாது; கூடாது. ஏனெனில் கவிதையின் இலக்கணம் அதன் வடிவத்தில் இல்லை. அதன் உயிரில், உணர்வில் இருக்கிறது.

பாடல் வேறு, செய்யுள் வேறு, கவிதை வேறு என்ற தெளிவு வரும்போது தான் நல்ல கவிதைகள் வெளி வரும். இனங்கண்டு ரசிக்கப்படும். நல்ல பாடலில், செய்யுளில் நல்ல கவிதையும் ஒளிந்திருக்கலாம். ஆனால், அவற்றின் வடிவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நல்ல கவிதை பிறப்பதில்லை. எதுகை, மோனையோடு நான்கு வரி உளறினாலே அதை கவிதை என்று வாங்குகிற சம்பளத்திற்கு வஞ்சகமில்லாமல் பாராட்டும் FM வானொலி தொகுப்பாளர்கள் இன்னொரு வகை கொடுமைக்காரர்கள். இதைக் கேட்டு புல்லரித்துப் போய் பக்கத்துக் கடை தையல்காரர்கள், மளிகைக் கடை காரர்கள் எல்லாரும் நானும் கவிதை சொல்கிறேன் என்று கிளம்பிவிடுகிறார்கள். பெரும்பாலும் இக்கவிதைகள் என் பேரு காசி, எனக்கில்லை ராசி என்பது போன்ற T.ராஜேந்தர் பாணியில் தான் இருக்கின்றன. தொகுப்பாளர்களும் நேரம் போகாவிட்டால் நகைச்சுவை துணுக்கு, கடி ஜோக், ஒரு பாட்டு அல்லது ஒரு கவிதையாவது சொல்லுங்களேன் என்கிற rangeக்கு கவிதை எழுதுவதைக் கொண்டு வந்து விட்டார்கள்.

ஒருவன் எவ்வளவு பெரிய கவிஞன் ஆனாலும் பார்ப்பதை பற்றியெல்லாம் கவிதை எழுதி விட முடியாது. அப்படி எழுதினால் அது வார்த்தை விளையாட்டு தானே தவிர கவிதையாகாது. பா. விஜய் ஒரே நாளில் 12 கவிதை தொகுப்புகள் வெளியிட்ட பொழுது ஆடிப்போய் விட்டேன். அவர் கவிதை எழுதுகிறாரா இல்லை அச்சு நிறுவனம் நடத்துகிறாரா தெரியவில்லை.

இது ஒரு புறம் என்றால், புரியாத கவிதைகள் எழுதும் நவீன கவிஞர்கள் இன்னொரு புறம். பத்திரிக்கை ஆசிரியரையும் சேர்த்து தமிழ் நாட்டில் நான்கு பேருக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய தமிழ் சொற்களை கொண்டு இவர்கள் எழுதும் கவிதைகளை என்னவென்று சொல்வது? ஒரு வேளை, பத்திரிக்கை ஆசிரியருக்கே புரியாவிட்டாலும், எழுதித் தந்தவர் பெரிய ஆள் என்பதால் பிரசுரித்து விடுகிறாரா எனத்தெரியவில்லை. ஆனால் எந்த சமரசமும் செய்யாமல் எனக்குப் புரிந்தால் போதும் என்ற ரீதியில் எழுதும் அக்கவிஞர்களை நிச்சயம் பாராட்டுகிறேன். இல்லை, இந்தப் பத்திரிக்கைகளில் கவிதை பிரசுரமாக இப்படி மேதாவித்தனமாக எழுதுவது தான் தர நிர்ணயமா? சில கவிதைகளை படிக்கும் போது நிச்சயமாக கடைசி வரை எதைப்பற்றி தான் எழுதி இருக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு வேளை, என் இலக்கிய அறியாமை தான் இதற்கு காரணம் என்றால் தயவு செய்து அக்கவிஞர்களின் பேனா என்னை மன்னிக்குமாக..இது போன்ற எனக்கு மட்டுமே புரியும் கவிதைகளை நானும் எழுதி நண்பர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது உண்டு என்றாலும், அவை என் ஆன்ம திருப்திக்காக எழுதியவை. யாருக்கும் புரிந்து என்னை பாராட்ட வேண்டும் என்று எழுதியதில்லை. இந்தக் கவிஞர்களும் அப்படி ஆன்ம திருப்திக்காக எழுதியிருந்தால் பத்திரிக்கைகளுக்கு அனுப்பாமலாவது இருக்கட்டும்.

குழந்தையின் சிரிப்பை போல் எந்த விளக்கமும் விளம்பரமும் தேவைப்படாமல் நேர்மையாக மனதை தொடுவது தான் நல்ல கவிதை என நினைக்கிறேன். நான் எழுதியவற்றில் நல்ல கவிதைகள் என்று கருதுவன எல்லாம் தானாக வந்து விழுந்தவை தான். யோசித்து, வார்த்தை திருகி எழுதப்படவை அல்ல. அதை எழுதி முடிக்கா விட்டால் வேறு ஒன்றும் செய்ய இயலாது என்ற தவிப்பில் தான் எழுதியிருக்கிறேன்.

போன வாரம் பெர்லின் போயிருந்த போது ஒரு ரயில் நிலையத்தில் 20, 25 குழந்தைகள் தரையில் கால் நீட்டி உட்கார்ந்து சுவாரசியமாக ice cream சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். உயிருள்ள பொம்மைகள் போல் இருந்த அவர்களின் அழகைப் பார்க்கவே கண்கொள்ளாமல் இருந்தது. அந்தக் காட்சியை புகைப்படம் எடுக்க நினைத்தேன். பின்னர், நான் அப்படி செய்வதால் அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளக் கூடும் என்பதால் ஒளிந்திருந்து அவர்களை பார்த்து விட்டு வந்தேன். அதுவும் இல்லாமல், அவ்வளவு அற்புதமான காட்சியை அனுபவிக்காமல் புகைப்படம் எடுத்தும் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. இது போன்று அன்றாட வாழ்வில் எத்தனையோ விடயங்கள் கவி எழுத உந்துகின்றன. ஆனால், அப்படியெல்லாம் இல்லாமல் stereotypeஆக வெகுஜன இதழ்களில் வரும் கவிதைகள் தமிழ் மக்களின் கவி ரசனையை மழுங்கடிக்கிறது என்று தான் நினைக்கிறேன்.

எல்லாவற்றையும் மொழிக்குள் அடக்கி விட முடியம் என்று தோன்றவில்லை. புகைப்படமாகட்டும், திரைப்படமாகட்டும், இசையாகட்டும் எதிலும் கூட கவித்துவத்தை உணர்த்த முடியும் என்று நினைக்கிறேன். கவித்துவம் என்ற உணர்ச்சி மேலிடும் போது கவிதையின் வடிவம் அவசியம் இல்லாமல் போகிறது . கண்ணீரும் மௌனமும் புன்னகையும் உணர்த்தாத கவித்துவத் தருணங்களை எந்த கவிதை உணர்த்திவிட முடியும்? ஆக, என்னைப் பொறுத்த வரை கவிதையின் இலக்கணம் அதன் உயிரில், உணர்ச்சியில் இருக்கிறது. அப்படி இல்லாதவைகளை கவிதை என்று தப்பாக அடையாளப்படுத்தாதீர்கள்; அங்கீகரிக்காதீர்கள்.

காதலியின் முதல் முத்தம் போல், குழுந்தை அம்மா என்று அழைக்கும் முதல் முறை போல் எத்தனேயோ கவித்துவமான தருணங்கள் வாழ்வில் வருகின்றன. அவற்றை எல்லாம் கவிதை எழுதி ஆவணப்படுத்தாமல் அந்தத் தருணத்தை அப்படியே ரசிப்பது உசிதம் என்ற மனநிலை சில மாதங்களாக இருக்கிறது. அதனால் நான் கவிதை எழுதுவதே குறைந்து வருகிறது.

எந்த ஒரு கவிஞனும் அவனுடைய மிகச்சிறந்த கவிதையை எழுதிச்சென்றதாய் தோன்றவில்லை. நல்ல கவிதை இது வரை எழுதப்பட்டு காட்சிப்படுத்தப்பட வில்லை என்று தான் கருதுகிறேன். எத்தனையோ நல்ல கவிதைகள் கவிஞனுக்குள்ளேயே வாசிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டு இருக்கலாம்.

சரி, இவ்வளவு சொல்கிறேனே..நல்ல கவிதை என்று நான் நினைப்பதில் இரண்டை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்..பாரதி எழுதிய காக்கைச் சிறகினிலே பாட்டும், தேடிச்சோறு நிதம் தின்று பாட்டும் எனக்குப் பிடித்தவை. உங்களுக்கு பிடித்த கவிதைகளையும் எனக்கு சுட்டிக்காட்டுங்கள்.

ரவி