Test of Tamil as a foreign language

இந்தியாவின் தேசிய மொழி / இணைப்பு மொழியாக கன்னடத்தை அறிவித்தால் கன்னடர்களுக்கு நல்லதா மற்ற மொழிக்காரர்களுக்கு நல்லதா? கன்னடர்களுக்குத் தான் நல்லது.

இந்தியாவின் தேசிய மொழி / இணைப்பு மொழியாக வங்க மொழியை அறிவித்தால் வங்காளிகளுக்கு நல்லதா மற்ற மொழிக்காரர்களுக்கு நல்லதா? வங்காளிகளுக்குத் தான் நல்லது.

இதே போல் இந்தியாவின் தேசிய மொழி / இணைப்பு மொழியாக இந்தியை அறிவித்தால் இந்திக்காரர்களுக்கு நல்லதா மற்ற மொழிக்காரர்களுக்கு நல்லதா?

இந்திக்காரர்களுக்குத் தான் நல்லது.

எனவே, இந்தி தொடர்பு மொழி ஆனால் மட்டும் இந்தியா ஒன்றுபடும், வளரும், தமிழனுக்கு நல்லது, வேலை வாய்ப்பு கூடும் என்பது எல்லாம் இந்தித் திணிப்பை நியாயப்படுத்துவதற்கான திட்டமிட்ட கட்டுக் கதை.

என்னதான் பள்ளிக்கூடத்தில் இந்தி சொல்லித் தந்தாலும் இந்தி பிரச்சார சபைகளில் போய் படித்தாலும் தாய்மொழியாக இந்தியைக் கொண்டுள்ளவர்களோடு மற்ற மொழிக்காரர்களால் போட்டி போட முடியாது.

LKG முதற்கொண்டு ஆங்கில வழியத்தில் எல்லா பாடங்களையும் படித்த பின்னும், தமிழ்நாடு முழுக்க எல்லா இடங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் ஆங்கிலம் நிறைந்திருந்தாலும், இன்னும் சரியாக ஆங்கிலம் பேசத் தெரியாததால் வேலை கிடைக்கவில்லை என்று விழிபிதுங்கும் இன்றைய தலைமுறையே இதற்கு சாட்சி.

ஆகவே, இந்தி படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற வாதத்தை விட்டு விடுவோம். இது 1960களில் வங்கிகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் ஏதாவது குமாசுத்தா வேலையை இலட்சியமாக கொண்டு வளர்க்கப்பட்ட தலைமுறையின் மனநிலை. இன்று பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் அடிமட்ட வேலை முதல் உயர்நுட்ப வேலைகள் வரை செய்வதற்காக குவியும் காலத்துக்குப் பொருந்தாது.

அனைவரும் இந்தியைப் படிக்க வைப்பது எதற்கு உதவும் என்றால் காலப்போக்கில் இந்தி பேசுவோரின் எண்ணிக்கையைக் கூட்டிக் காட்டி இன்னும் வெகு தீவிரமாக இந்தித் திணிப்பை நியாயப்படுத்துவதற்கே உதவும்.

இந்தியைத் தாய்மொழியாக கொண்ட இந்தியர்கள் 26% மட்டும் இருக்கும் போது அதனை 45% ஆக எப்படித் திருக்கிறார்கள் என்று இங்கு பாருங்கள்:

http://scroll.in/article/667570/read-the-fine-print-hindi-is-the-mother-tongue-of-only-26-of-indians.

நாடு முழுக்க இந்தி படிக்க வைத்து விட்டால், இரண்டாம் மொழியாக இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 100% என்று கணக்கு காட்டி மொத்தமாக “இந்தி”யாவாக மாற்றி விடலாம்.

சரி, இதே போல் இந்தியாவின் தேசிய மொழி / இணைப்பு மொழியாக ஆங்கிலம் தொடர்வதால் ஆங்கிலம் பேசும் மேலை நாட்டவர்களுக்கு நல்லதா என்று கேட்டால்…

ஆம், நாம் ஆங்கிலம் பேசுவதால் மேலை நாட்டவர்களுக்கு நல்லது தான். அவர்கள் பொருட்களை இங்கு விற்கவும், குறைவான செலவில் நம்முடைய மனித வளத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் உதவும். நாம் இதனை ஏற்றுமதி / இறக்குமதி, வணிகம், சேவைத் துறை, அமெரிக்காவில் ஆராய்ச்சிப் படிப்பு / வேலை என்று நமக்கு வசதியான பெயர்களில் சொல்லிக் கொண்டாலும், இது தான் உண்மை.

சரி, அப்ப வெளிநாட்டுக்காரனுக்குப் பயன்படக்கூடிய ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ளும் நாம் ஏன் இந்தியை ஏற்றுக் கொள்ளக்கூடாது?

ஏன் என்றால்,

1. இன்று வெளிநாட்டுக்காரர்கள் சட்டம் போட்டா நம்மை அடிமை ஆட்சி செய்தோ நம் மீது ஆங்கிலத்தைத் திணிக்கவில்லை. எது உலகப் பொது மொழியாக இருக்கிறது என்பது காலத்துக்கு காலம் மாறி வருகிறது. இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு கோலோச்சியது. இப்பொழுது ஆங்கிலம். அடுத்து சீனம் வரலாம் என்றும், இல்லை, ஆங்கிலமும் செல்வாக்கை இழந்து, நுட்பத்தின் வசதியால் பல மொழிகள் ஊடாடுவது இலகுவாகும் என்றும் கூறுகிறார்கள். Nicholas Ostler எழுதிய The Last Lingua Franca: English Until the Return of Babel படியுங்கள்.

அதே போல் இந்தியும் தன் இயல்பான வலுவால் இந்தியாவின் தொடர்பு மொழியாக மாறினால் அது வேறு விசயம். ஆனால், மக்கள் தேர்ந்தெடுத்த கூட்டாட்சி முறையில் இயங்குகிற இந்திய அரசு மற்ற பல மொழிகளை இரண்டாந்தரமாக வைத்து இந்தியை மட்டும் வளர்ப்பதும் திணிப்பதும் தவறு.

2. இந்தியா என்ற நாடு 60+ ஆண்டுகளாகத் தான் இருக்கிறது. அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னரும் தமிழர்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுக்கவும் கடல் கடந்து உலகம் முழுக்கவும் வணிகத் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அப்போது எல்லாம் வணிகம் செய்ய நம் நாடு முழுக்க அயல் மொழியை கற்பதற்கான தேவை எழவில்லை. ஏன் எனில், அப்போது நாம் மரபறிவு மூலம் விளைந்த பொருட்களை விற்றோம். இப்போது நம் உழைப்பை விற்று கூலிகளாக இருக்கிறோம். இது தான் வேறுபாடு.

எனவே,

ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி இல்லை. அந்தந்த மக்களின் தாய்மொழி தான் மாற்று.
இது தான் நிலையான தீர்வாக இருக்கும்.

இன்று பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் சீனர்கள், ஐரோப்பியர்கள், கொரியர்கள், சப்பானியர்கள் என்று யாராக இருந்தாலும் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்தும் தாய்மொழியில் தான். வணிகத்துக்காக ஒரு சிலர் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக கல்லூரிப் படிப்புக்குப் பிறகு கூட கற்கிறார்களே தவிர, ஆங்கிலத்தை வாழ்க்கை முழுக்க பிடித்துத் தொங்குவதில்லை. அவர்களுடன் வணிகம் செய்ய வரும் வெளிநாட்டவர் அவர்கள் மொழியில் பேசக்கூடிய மொழிபெயர்ப்பாளர்களையும் மொழிபெயர்ப்பு நுட்பங்களையும் வைத்து உரையாடுகிறார்களே தவிர, ஆங்கிலம் தெரியவில்லை என்ற காரணத்தால் அவர்களைப் புறக்கணித்துச் செல்வதில்லை. புறக்கணிக்கவும் முடியாது. சுருக்கமாக, உங்கள் திறமையும் உங்கள் பொருளாதார பலமும் பேச வேண்டும். மாறாக, நீங்கள் அவர்கள் மொழியைப் பேசினால் தான் வேலைவாய்ப்பு என்று இறங்கும் போது, நீங்கள் விற்பது உங்களைத் தான். அதாவது மனித வளம் என்ற பெயரில் உங்கள் உழைப்பைத் தான் குறைந்த விலைக்கு விற்கிறீர்கள். இப்படி காலத்துக்கும் இந்த மொழியைப் படித்தால் வேலை கிடைக்கும் அந்த மொழியைப் படித்தால் வேலை கிடைக்கும் என்று திரிந்தால் பஞ்சம் பிழைக்க போன பரதேசிகள் மாதிரி அலைய வேண்டியது தான்.

உள்ளூர் மொழிகளை வளர்ப்போம். உள்ளூர் தற்சார்பு பொருளாதாரத்தை வளர்ப்போம். தொழில் முனைப்பையும் மொழி நுட்பத்தையும் வளர்ப்போம். மனித வளத்தை ஏற்றுமதி செய்யாமல் நாம் விளைவித்த பொருட்களை ஏற்றுமதி செய்வோம்.

அப்போது தமிழ்நாட்டில் தமிழ் அழியுமோ என்று எண்ணி அஞ்சி தமிழை வளர்க்க போராடத் தேவையில்லை.

ஏனெனில், அப்போது Test of Tamil as a foreign language தேர்வு எழுத பிற மொழிக்காரர்கள் முண்டியடித்துக் கொண்டிருப்பார்கள்.

இந்தி மொழிக் கல்வி

இந்தி ஒரு தேசிய மொழி இல்லை. இந்தியாவுக்குத் தேசிய மொழி என்று ஏதும் இல்லை. ஒருவர் இந்தி கற்று தான் இந்தியன் என்று நிரூபிக்க வேண்டுமா? ஒழுங்காக வரிகள் கட்டி, சட்டத்தை மதித்து நடந்தால் போதாதா? தமிழ்நாட்டில் இருந்து இந்தி தெரியாத இளைஞர்கள் இந்தியப் படைகளில் சேர்ந்து நாட்டுக்குப் பங்களிப்பதில்லையா?

தமிழரல்லாத இந்தியர்களும் கூடும் எல்லா இடங்களிலும் தவறாது வரும் “தமிழ்நாட்டில் இந்தி” குறித்த சில கேள்விகளும் பதில்களும்:

தேசிய மொழியான இந்தி தெரியாமல் இருப்பது அவமானமில்லையா?

இந்தி ஒரு தேசிய மொழி இல்லை. இந்தியாவுக்குத் தேசிய மொழி என்று ஏதும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்கிறது. அதாவது பெரும்பான்மை மக்களிடம் தொடர்பு கொள்ள அந்த மொழி உதவுகிறது. அது போல இந்திய நடுவன் அரசின் ஆட்சி மொழிகளாக இந்தியும் ஆங்கிலமும் விளங்குகின்றன. இவ்விரு மொழிகளும் நடுவண் அரசு மாநிலங்களுடன் உரையாட உதவுகின்றன.

எனினும், இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்று திட்டமிட்டு நன்றாகப் பரப்பப்படும் பொய்க்கருத்தை நம்புவோருக்குக் கூறிக் கொள்வது:

ஒருவர் இந்தி கற்று தான் இந்தியன் என்று நிரூபிக்க வேண்டுமா? ஒழுங்காக வரிகள் கட்டி, சட்டத்தை மதித்து நடந்தால் போதாதா? தமிழ்நாட்டில் இருந்து இந்தி தெரியாத இளைஞர்கள் இந்தியப் படைகளில் சேர்ந்து நாட்டுக்குப் பங்களிப்பதில்லையா?

புலி இந்தியாவின் தேசிய விலங்கு என்பதற்காக அதை எல்லாரும் வீட்டில் வைத்து வளர்க்கத் தேவை இல்லை. வளர்க்கவும் முடியாது. காட்டில் காணும்போது அடித்துக் கொல்லாமல் இருந்தால் சரி.

இந்தி இந்தியாவின் பெரும்பான்மை மொழி இல்லை. 40% மக்களாலேயே பேசப்படுகிறது. 10 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கிறது.

நாடு என்னும் அமைப்பு நமது பாதுகாப்புக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு தற்காலிக காலத்துக்குக் காலம் மாறும் நில வரையறை. அதுவும், இந்தியா என்னும் நாடு செயற்கையாக உருவாக்கப்பட்டே 60 ஆண்டுகள் தான் ஆகின்றன. ஆங்கிலேயர்கள் ஒட்டு மொத்தமாய் சில பகுதிகளைப் பிடித்து போகும் போது இந்தியா என்று பெயரிட்டு விட்டு விட்டுப் போனார்களே தவிர, இந்தியா என்பது வரலாற்றில் எப்போதும் ஒரு ஒற்றை நாடாக இருந்ததில்லை. அதற்கு என்று ஒற்றைக் குணங்கள் ஏதும் இல்லை.

ஒரு வேளை சீனாவையும் சேர்த்து இந்தியாவோடு ஒரு நாடாக சேர்த்துத் தந்து விட்டு ஆங்கிலேயர்கள் போயிருந்தால், கணிசமான மக்களால் சீனம் பேசப்படுகிறது என்ற காரணத்துக்காக அதைத் தேசிய மொழியாக அறிவித்து எல்லாரையும் அதைக் கற்கச் சொல்ல வற்புறுத்த முடியுமா? அதே அளவு அபத்தம் தான் இந்தியாவில் இருப்பதற்காக இந்தி கற்கச் சொல்லி வற்புறுத்துவதும்.

இந்தியா முழுதும் ஒரே மொழியைப் புரிந்து கொள்ள இயன்றால் நாட்டு முன்னேற்றத்துக்கு உதவுமே?

நாடு முழுவதும் ஒரே மொழி பேசியும் முன்னேறாமல் இருக்கும் எத்தனையோ நாடுகளைக் காட்ட முடியும். நாட்டு முன்னேற்றத்துக்கு வேறு எவ்வளவோ முக்கிய காரணிகள் உள்ளன. ஒரே மொழி பேசுவது ஒரு பொருட்டு இல்லை.

நாட்டு மக்களுக்கு எல்லாம் ஒரு மொழி புரிந்தால் ஒருவருக்கு ஒருவர் பேசிப் பழக உதவுமே? என்ன இருந்தாலும் இந்தியர்களுக்கு என்று ஒரு மொழி அடையாளம் வேண்டாமா?

இதற்கு அண்ணாத்துரை சொன்ன பதில் தான் பொருந்தும்:

ஒரு வீட்டுக்குள் சின்ன நாய் புகுவதற்கு என்று ஒரு சின்னக் கதவும் பெரிய நாய் புகுவதற்கென்று ஒரு பெரிய கதவும் வைப்பதில்லை. பெரிய கதவு வழியாகவே சின்ன நாயும் வரலாம். உலகம் முழுவதற்கும் பேசுவதற்கு என எல்லா இந்தியர்களும் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முனைகையில் இந்தியாவுக்குள் பேசுவதற்கு என்று மட்டும் ஒரு மொழி தேவை இல்லை.

இந்தியாவே வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு நாடு தான். இதில் அடையாளத்துக்காக என்று ஒரு மொழி தேவை இல்லை. மொழிகளைத் தாண்டி சமயம், இனம் என்று வேறு எத்தனையோ தனித்த அடையாளங்களைக் கொண்டே இருக்கிறோம்.

பிற மொழிகள், மொழி பேசுவோர் மேலான வெறுப்பு தானே இந்தி மொழி கல்லாததற்குக் காரணம்?

இந்தி கற்பிக்கப்படும் மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் பிற மொழியினர், குறிப்பாக வடநாட்டவர் மிகப் பாதுகாப்பாக, வளமாக, மரியாதையுடன் தான் இருக்கின்றனர். நாம் இன்னொருவர் மொழியை மதிக்கிறோம் என்பதற்காக அதைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்று அவசியமில்லை. இன்னொரு மொழி பேசும் மாநிலத்துக்குச் செல்கையில் வாழ்வியல் காரணங்களுக்காக அந்தந்த இட உள்ளூர் மொழிகளைக் கற்றுக் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு வரும் பிற மொழியினர் தமிழ் கற்றுக் கொள்வது தான் சரியாக இருக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் வட மொழினரைக் காட்டிலும் வட நாட்டில் இருக்கும் தமிழர்கள் நன்றாகவே இந்தி பேசுகிறார்கள்.

இந்தி, பிற மொழிகளைக் காட்டிலும் தமிழ் மேலானது என்ற எண்ணம் தான் தமிழ்நாட்டில் இந்தி கல்லாததற்குக் காரணமா?

இதில் மேல், கீழ் என்ற வாதத்தை விட்டு விடுவோம். தமிழ், கொஞ்சம் ஆங்கிலம் தவிர, தமிழ்நாட்டில் வாழ, வேலை செய்ய, பிழைக்க வேறு எந்த மொழியும் தேவையில்லை என்பதே முக்கியம். தேவையில்லாத ஒன்றைக் கற்பதாலும் கற்பிப்பதாலும் என்ன பயன்? கிரிக்கெட் போன்ற விளையாட்டுப் போட்டி வர்ணனைகள், இந்தித் திரைப்படங்கள், விடுதலை நாள் – குடியரசு நாள் உரைகள் கேட்க மட்டுமே உதவும். அதுவும் ஆங்கில உரைகள் கிடைக்கையில் இதற்காக மெனக்கெட்டு இந்தி படிக்க வேண்டுமா? சீனம், ஆங்கிலப் படங்களைத் தமிழாக்கிப் பார்ப்பது போல் இந்திப் படங்களையும் தமிழாக்கிப் பார்க்கலாமே? அல்லது, ஆங்கில உரைத்துணையோடு பார்த்து விட்டுப் போகிறோம். இந்திய மொழிகள் சொற்றொடர் அமைப்புகள் பெரிதும் தொடர்புள்ளவை என்பதால் 2, 3 மாதங்கள் எந்த மொழிப் படங்களைத் தொடர்ந்து பார்த்தாலும் விரைவில் அந்த மொழியைக் கற்றுக் கொள்ள முடியும்.

தமிழ்நாடு தாண்டி பிற மாநிலங்களுக்குப் போவோர் சிரம்பபட மாட்டார்களா? இந்தி கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்புகள் கூடாதா?

பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் தொழிலாளர்கள் தமிழ் கற்றுக் கொண்டா வருகிறார்கள்? ஒரு வாழ்வியல் தேவை வரும்போது எந்த மொழியையும் ஓரிரு மாதங்களில் கற்றுத் தேற முடியும். எத்தனையோ பேர் பஞ்சம் பிழைக்க ஒரு மொழியும் தெரியாமல் சீனா, சிங்கப்பூர், அரபு நாடுகள், வட மாநிலங்கள் என்று செல்கின்றனர். அவர்கள் பிழைக்க மொழி தடையாய் இருப்பதில்லை. ஓரிரு மாதங்களில் உள்ளூர் மொழியைப் பேசிக் கற்றுத் தேர்ந்து விடுகிறார்கள். அதிகம் படிக்காத பாமரர்களுக்குத் தங்களுக்குத் தேவையானதைத் தாங்களே கற்றுத் தேரும் திறன் இருக்கிறது.

இந்தி கற்பிக்கப்பட வில்லை என்று குற்றம் சொல்பவர்கள் என்றால் அரசு. தனியார் வேலைகளில் இருப்பவர்கள் தான். ஒரு வேலையில் சேரும்போதே, அவ்வேலையில் பதவி உயர்வு பெற இந்தி தேவையென்றால் முன்னரே ஓய்வு நேரத்தில் அதைக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டியது தானே? அதை விடுத்து அரசைக் குற்றம் சொல்வது நியாயம் இல்லை. தாய்மொழியையும் அதன் மூலம் அறிவையும் கற்பிப்பது மட்டுமே அரசின் கடமை.

இந்தி கற்றுக் கொள்ளாததால் தமிழ்நாடு பின்தங்கி விடாதா?

இந்தி பேசும், இந்தி கற்பிக்கும் மாநிலங்களை விட தமிழ்நாடு எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் பிறகு ஏன் வட நாடுகளில் இருந்து இங்கு சோன் பப்படி விற்கவும் கூலி வேலை செய்யவும் வருகிறார்கள்? ஒரு மாநில வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் அங்கு பேசப்படும் மொழிக்கும் பெரிய தொடர்பு இல்லை. ஒரு நாட்டு முன்னேற்றத்தைப் போலவே, ஒரு மாநில முன்னேற்றத்துக்கும் வேறு முக்கிய காரணிகள் உள்ளன.

இந்தி கற்பிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன?

வெளிமாநிலம் செல்வோர், இந்தியை அடிப்படையாகக் கொண்டு வேலை / பதவி உயர்வு பெறுவோர் என்று இந்தி அறிவின் தேவை உடையோர் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் மிகக்குறைவான விகிதத்தினர். இவர்கள் தேவைக்காக ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இந்தி கற்பிக்கத் தேவை இல்லை. பள்ளிக்கு ஓரிரு இந்தி ஆசிரியர்கள், அவர்களைப் பயிற்றுவிக்கும் செலவு, இந்திப் பாடப்புத்தகங்கள் அச்சிடும் செலவு, தேர்வுச் செலவு போன்றவற்றில் செய்யப்படும் முதலீடு பயனுள்ளது தானா?

ஏற்கனவே பாடச்சுமையால் அல்லல்படும் மாணவர்களுக்கு மூன்று வெவ்வேறு எழுத்து முறைகளைக் கொண்ட மொழிகளைக் கற்பிப்பது பாடச் சுமையைக் கூட்டும். தமிழ்நாட்டில் பொது வழக்கில் கொஞ்சம் ஆங்கிலம் புழங்கும் போதே அதைக் கற்றுக் கொள்ளச் சிரமப்படும் மாணவர்களுக்கு ஒரு அறிமுகமும் இல்லாமல் இந்தி கற்றுக் கொள்வது சிரமமாக இருக்கும்.

கல்லூரி ஆண்டு இறுதி வரை ஆங்கில வழியில் படித்த பிறகும் கூட ஆங்கிலம் பேச, புரிந்து கொள்ளத் தடுமாறுபவர்கள் இருக்கையில், வெறுமனே இந்தியை மொழிப்பாடமாகப் படித்து மட்டும் அதில் பெரிய புலமை ஏதும் அடையப்போவதில்லை. இந்தி பிரச்சார சபா எல்லாம் போய் இந்தியில் பட்டங்கள் வாங்கிய நண்பனுக்கு இந்திப் படங்களில் பேசும் இந்தி புரியவில்லை. பேச்சு இந்தியைப் புரிந்து கொள்ள பாடப் புத்தக இந்தி பெரிய உதவி புரிவதில்லை. எனவே, கற்பித்தாலும் உதவாக்கரை மொழியாகத் தான் இருக்க வாய்ப்புண்டு. தவிர, சொந்த விருப்பினால் இந்தி கற்றுக் கொள்ள விரும்புபவர்களை எந்த விதத்திலும் அரசு தடை செய்யவில்லை.

இந்தி கற்பிப்பதால் வரும் வேறு முக்கிய பின்விளைவுகள் என்ன?

ஏற்கனவே ஆங்கில வழிக்கல்வி, ஆங்கில மோகத்தால் தமிழ்நாட்டில் தமிங்கில நோய் பெருகி வருகிறது. இதில் இந்தியும் கலந்தால் அது மேலும் மொழிச் சிதைவுக்கே இட்டுச் செல்லும். தமிழ்நாட்டில் வாழ தமிழ் தேவை இல்லை என்ற நிலை தமிழின் இருப்பையும் தொடர்ச்சியையுமே கேள்விக்குள்ளாக்கும்.  இந்தியா முழுதும் இந்தி தெரியும் என்ற நிலை வந்தால், அனைத்துச் செயற்பாடுகளையும் இந்தியிலேயே செய்யும் நடவடிக்கைகள் வேகம் பெறும். இது இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டு புலமை பெற்றிராத பிறருக்கு சம வாய்ப்பைத் தராது. நாளடைவில் இந்தி சரிவரத் தெரியாத பிற மொழியினர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படும் நிலைக்கு இட்டுச் செல்லும்.ஒரு தேசிய மொழியை வலியுறுத்திப் பிற மொழிகளைப் புறக்கணித்த நாடுகள் பலவற்றிலும் இந்நிலையைக் காணலாம்.

தமிழ்நாட்டில் தொழில்புரிய, வாழ இந்தி தெரிந்தால் போதும் என்ற நிலை தமிழ், தமிழர் புறக்கணிப்புக்கு வித்திட்ட பிற மொழி ஆதிக்கத்தினருக்கு வழி வகுக்கும். மும்பை, பெங்களூர் போன்ற இடங்களில் உள்ளூர் மொழி புறக்கணிக்கப்படுவதை எடுத்துக்காட்டாக நோக்கலாம். திரைப்படம், வணிகம், ஊடகம் என்று அனைத்து மட்டங்களிலும் உள்ளூர் மொழி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும். உள்ளூர்ப் பொருளாதாரம் அடி வாங்கும். உள்ளூர் நலன்களை முன்னிறுத்தும் கட்சிகளைக் காட்டிலும் தேசியக்கட்சிகள் முன்னிலை பெறலாம்.

தமிழருக்கு இந்தி தெரியவில்லை என்பது தமிழர்களைக் காட்டிலும் பிற மொழியனருக்குத் தான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் இந்தி கற்பிக்க வேண்டும் என்று சொல்வது பிற மொழியனரின் நலன்களை முன்னிட்டே ஒழிய தமிழர்களின் நலன்களை முன்னிட்டு அல்ல.