பெண் பார்க்கப் போவது எப்படி?

திருமணத்துக்குப் பெண் பார்க்கப் போவது எப்படி?

1. பெண் பார்க்கச் செல்லும் முன்னரே பெண்ணின் அப்பா / அண்ணன் போன்றோரிடம் தொலைப்பேசி மூலம் சுருக்கமாக பேசி ஒரு அறிமுகம் பெற்றுக் கொள்ளுங்கள். வரும் நேரம், வழி ஆகியவற்றை ஒப்புக்குக் கேட்கலாம். இதனால் முன் பின் அறியாமல் போய் விழிப்பதைத் தவிர்க்கலாம். பெண்ணிடமே முன்கூட்டிப் பேசி விட முடியுமானால் இன்னும் அருமை. பெண்ணின் படிப்பு, வேலை, குடும்பப் பின்னணி இவற்றை வைத்து இதைக் கேட்டுப் பார்க்கலாமா என முடிவு செய்யலாம்.

2. கூட்டமாகச் செல்ல வேண்டாம். நம் பக்கத்தில் இருந்து முடிவெடுக்கக்கூடிய முக்கியமான உறவினர்கள் 4, 5 பேர் செல்லலாம். கண்டிப்பாக ஒரு பெண்ணாவது இருக்க வேண்டும். பல திருமணங்களை நடத்தி வைத்த அனுபவம் உள்ள பெரியவர் ஒருவர் இருந்தால் நன்று. நிறைய பேர் சென்றால் பெண் வீட்டாருக்கும் ஏற்பாடு செய்வது சிரமம். அந்தப் பெண்ணுக்கு இதற்கு முன்னரே நிறைய வரன்கள் வந்து சென்றிருந்தால், நாம் படை சூழப் போவது அவர்களுக்குத் தர்ம சங்கடமான நிலையைத் தரும். பெண் நிச்சயமானால், அடுத்த முறை இன்னும் நிறைய பேரை அழைத்துச் சென்று முறைப்படி பேசும் சூழல் வரும். குழந்தைகளை அழைத்துச் சென்றால் அவர்களை வைத்துச் சற்று கலகலப்பாக பேச்சை வளர்க்கலாம். வாயாடிப் பிள்ளைகள் விளையாட்டுத் தனமாகப் பேசி நமது மானத்தை வாங்கலாம் என்பதால் இதில் சற்று கவனம் தேவை 🙂

3. பை நிறைய பூ, பழம், இனிப்புகள் வாங்கிச் செல்லலாம். நாம் எவ்வளவு வாங்கிச் செல்கிறோம் என்பதை வைத்து நமது தாராள குணத்தை அளக்கக்கூடும்.

4. கோயில், உணவகம் போன்ற இடங்களிலும் பெற்றோர்கள் உடன் மட்டும் சென்று பார்க்கலாம். இதில் சற்று இறுக்கம் குறைவாக இருக்கும். எனினும், எல்லா குடும்பங்களும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். வீட்டுக்கே சென்று பார்ப்பதால், நாமும் அவர்களின் பழக்க வழக்கங்கள், உறவு முறைகளை அறிந்து கொள்ள முடியும்.

5. பெண் பார்க்கப் போகும் அன்று நன்கு தூங்கி எழுந்து, சவரம் செய்து, நன்றாகத் துவைத்துத் தேய்த்த ஆடையை அணிந்து செல்லுங்கள். விரல் நகங்களை வெட்டிச் சென்றால் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் என்று எனக்கு ஒரு தோழி சொன்னாள் 🙂 தேவைப்பட்டால், வாடகைக்காவது ஒரு வண்டி எடுத்து அலைச்சல், உளைச்சல் இல்லாமல் சரியான நேரத்துக்குச் செல்லுங்கள்.

6. தனியாக இல்லாவிட்டாலும், மற்றவர்கள் முன்னிலையிலாவது பெண்ணிடம் ஏதாவது பேச்சு கொடுக்க முயலுங்கள். எல்லா கேள்விகளுக்கும் பெற்றவர்கள் முந்திக் கொண்டு பதில் சொன்னாலும், விடாமல் பெண்ணிடமே பேச்சு கொடுங்கள். நிமிர்ந்து உட்கார்ந்து நேராகப் பார்த்துப் பேசுங்கள். வள வள என்று பேசாமல் சுருக்கமாக, தெளிவாக பேசுவது நன்று. ஒரு சில நிமிடங்கள் பேசினாலும், பெண்ணைப் பற்றிய ஏதாவது ஒரு புரிதல் கிட்டும். பெண் பிடித்திருந்தால், அவர்களின் தொலைப்பேசி எண் கேட்டு வாங்கி மேலும் பேசிப் புரிந்து கொண்டு முடிவைச் சொல்லலாம்.

7. பெண் பிடித்திருக்கிறதா என்று கேட்டால், ஆமாம் / இல்லை என்று பட்டெனச் சொல்லி விடாதீர்கள். உங்கள் பெற்றோர், பெரியவர்களிடம் பேசி விட்டுச் சொல்வதாகச் சொல்லுங்கள். வாக்கு கொடுத்து மீறுவது போல் ஆனால் சிக்கலாகும். நமக்குப் பிடிக்கும் பெண் ஊகிக்கவே முடியாத காரணங்களுக்காக நமது பெற்றோருக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.

8. தரகர் மூலம் ஏற்பாடு ஆன பெண் என்றால், இயன்ற அளவு தரகரை கழற்றி விட்டு விட்டுச் செல்லவும். இரண்டு பக்கமும் மாற்றி மாற்றிப் பேசி குழப்புவதில் தரகர்கள் வல்லவர்கள். எந்த அளவுக்கு நேரடியாகப் பெண் வீட்டாரிடம் பேசுகிறோமோ அந்த அளவு நல்லது.

9. பணம், வரதட்சணை முதலிய தீவிரமான கேள்விகளைத் தவிருங்கள். இது ஒரு அறிமுக சந்திப்பே.

10. ஒரு மணி நேரத்துக்கு மேல் தங்காதீர்கள். தேநீர், இனிப்புகள் மட்டும் சாப்பிடுங்கள். பெண் நிச்சயமான பிறகே விருந்து சாப்பிடுவது பல ஊர்களிலும் உள்ள முறை.

செருமன் நாட்கள்

 

சிங்கப்பூரில் பாதிப்படிப்பை முடித்து மீதிப்படிப்புக்காக வந்துள்ள இடம் செருமன் மாநகரமான முன்சன் (ஆங்கிலத்தில் Munich – மியூனிக்).

முதல் ரெண்டு வாரம் அரிசிச்சோறே சாப்பிடவில்லை. இத்தனை நாட்களுக்கு அரிசி சோறு சாப்பிடாமல் வாழ முடியுமா? அரிசி விற்கும் கடையைக் காட்டுவதாக பக்கத்து அறையிலுள்ள சீன நண்பர் சொல்லியிருக்கிறார். ஒரு வாரமாக முட்டையை வேக வைத்தே தின்ற பின் தான் அதை வைத்து ஆம்லெட் கூட போட முடியும் என நினைவு வந்தது. நான் ஆம்லெட் செய்வதைப் பார்த்த சீனாக்காரன், இது என்ன இந்திய பீட்சாவா என்றான். பன்னிக் கறி நிறைய கிடைக்கிறது. ஆனால் சாப்பிட மனம் ஒப்பவில்லை. பிரட் செய்வதில் ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு நிறைய பிரெட் வகை வைத்திருக்கிறார்கள். விருந்து என்றால் கண்டிப்பாக மது, வைன் உண்டு. ஆண், பெண் பாகுபாடின்றி ரசித்து ரசித்து குடிக்கிறார்கள். புகைக்கிறார்கள். 

எப்போதாவது தான் இந்தியர்கள் தென்படுகிறார்கள். பார்த்தால், மறக்காமல் புன்னகைக்கிறார்கள். நேரம் இருந்தால் கை குலுக்கி ஊர், பெயர், வேலை அறிந்து விடை பெறுகிறார்கள். பெரும்பாலும் மாணவர்களும் மென்பொருள் வல்லுனர்களும் தான். இந்தியப் பெண்கள் ரொம்பக் குறைவு. அப்படியே இருந்தாலும் திருமணமானவர்களாக இருக்கிறார்கள். ம்ம்.. 🙂 பஞ்சாபி உணவகங்களில் நம்மவர்களை விட வெளி நாட்டவர்கள் தான் கூடுதலாக விரும்பிச் சாப்பிடுகின்றனர். இந்தி, தமிழ்த் திரைப்படங்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. கொஞ்சம் ஆப்பிரிக்கர்கள், வளைகுடா பகுதி ஆட்கள் தவிர எல்லாரும் வெள்ளையாக இருப்பதால் எந்த நாட்டவர் என்று சொல்ல முடியாது. கல்லூரியில் நிறைய நாட்டவர்கள் இருக்கிறார்கள். 

பத்து மணி வரை சூரியன் இருப்பது புதுமை. குளிர் காலத்தில் 4 மணிக்கு எல்லாம் இருட்டி விடுமாம். போன வாரம் எல்லாருடனும் சேர்ந்து பக்கத்திலுள்ள ஆசுத்திரியா நாட்டுப்பகுதியில் உள்ள ஆல்ப்சு மலைத் தொடருக்கு சென்று வந்தோம். முதன் முறையாக பனி மலை பார்க்கிறேன். நான் ஏன் இன்னும் இமய மலையைப் பார்க்கவில்லை என்று எல்லாரும் கேட்டார்கள். நம்ம ஊர் ஊட்டி, கொடைக்கானல் இன்பச் சுற்றுலா போல் இல்லை. கொஞ்சம் கடினச் சுற்றுலாவாக இருந்தது. பெரிய பெரிய மூட்டைகளை முதுகில் கட்டிக்கொண்டு மலை உச்சி வரை ஏறிச் சென்றோம். அங்கு ஒரு மரக் குடிசையில் இரண்டு நாள் தங்கியிருந்து சமைத்துச் சாப்பிட்டு, விளையாடி, கலந்து பேசி திரும்பினோம். கூட இரண்டு பிரஞ்சுக் காரர்கள் வந்திருந்தார்கள். பிரஞ்சு மொழி தவிர வேறு ஒன்றும் அறியாத நல்லவர்கள்.

பேருந்து, தொடர்வண்டி, ட்ராம் வண்டி எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமாக மாதச் சீட்டு தந்து விடுகிறார்கள்.  ஞாயிற்றுக் கிழமை இங்கு உண்மையிலேயே ஓய்வு நாள் போல. பெரும் பாலான கடைகளை மூடி விடுகிறார்கள். பேருந்து வசதியும் குறைவு தான்.

நல்ல அழகான மரபு மிக்க பழங்காலக் கட்டிடங்கள், நிறைய ஏரிகள், ஒரு ஆறு உள்ளன. உலகிலேயே வாழ்க்கைத்தரம் கூடிய நகரங்களில், முன்சனுக்கு ஐந்தாவது இடம். இங்க தான் அடுத்த  உலகக் கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. கல்லூரிக்கு வெளியில் இருப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்து இருந்தால் “என் தாத்தா செய்த நல்வினை” என்று மகிழலாம். வேற்று மொழி உதவியே இல்லாமல் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள்!

அறையில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் 20 செருமன் மொழிக் காட்சிகள். போனால் போகிறது என்று சி. என். என் மட்டும் வருகிறது. கொஞ்சமாவது மொழியைக் கற்றுக் கொள்ளலாமே என்று,  செருமன் தொலைக்காட்சிகளையும் பார்க்கிறேன். நல்ல வேளையாக செருமன் மொழி எழுத்துக்கள் ஆங்கில எழுத்துகளைப் போல் இருக்கின்றன. சில சொற்களும் ஆங்கிலத்தை ஒத்து இருக்கின்றன. ஒரு நாளைக்கு 10 முறையாவது செருமன் அகரமுதலியைப் பார்க்கிறேன். அது இல்லாமல் வெளியில் செல்வது இல்லை.

சென்னையைத் தாண்டாத என் சில நண்பர்கள் நான் உலகம் சுற்றும் இளைஞனாகி விட்டதாக பெருமூச்சு விடுகிறார்கள். ஆனால் , நான் அடிக்கடி கேட்கும் பாட்டு என்னவோ “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா” தான். இப்பொழுது கொஞ்ச நாட்களாக தேசம் படத்திலிருந்து ” உந்தன் தேசத்தின் குரல்” பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன்.

இன்னும் நிறைய சொல்லலாம். சொல்வேன். ஏனெனில் இங்கு தமிழ் பேச அவ்வளவாக ஆட்கள் இல்லை !!!