சராசரி வாழ் நாள் எதிர்பார்ப்பு

அந்தக் காலத்தில் மரபார்ந்த மருத்துவம் இருந்த போது, நமது தாத்தா பாட்டிகள் 100 ஆண்டுகள் நோயின்றி வாழ்ந்தார்கள். இப்போது, நவீன மருத்துவம் வந்த பிறகு புற்றுநோய், சர்க்கரை நோய் என்று புதுப்புது நோய்கள் வருகின்றன என்கிறார்களே?

* 100 வயது வாழ்ந்த உங்கள் பாட்டி, உங்கள் தாத்தாவுக்கு இரண்டாவது மனைவி. முதல் மனைவி பிரசவத்தில் இறந்து போய் விட்டார்.

* உங்கள் தாத்தா 30 வயதில் காலராவுக்கு இறந்து விட்டார். எஞ்சிய 70 ஆண்டுகள் பாட்டி கைம்பெண்ணாக வாழ்ந்திருப்பார்.

* உங்கள் பாட்டிக்கு 8 குழந்தைகள் பிறந்திருக்கும். 2 அல்லது 3 தப்பிப் பிழைத்திருக்கும்.

* உங்கள் சித்தப்பாவோ மாமாவோ குழந்தை இல்லை என்று சொல்லி இன்னொரு திருமணம் செய்திருப்பார்கள்.

* பாம்பு கடித்தோ மஞ்சு விரட்டு மாடு குத்தியோ ஒரு மாமா இறந்திருப்பார்.

* உங்கள் அத்தைக்கும் மாமாவுக்கும் நெருங்கிய உறவில் பிறந்த குழந்தை ஊனமாகப் பிறந்திருக்கும்.

* உங்கள் அம்மாக்களும் சித்திகளும் மாத விலக்கின் போது சேலைத் துணி அணிந்து வீட்டுக்கு வெளியே தீட்டுக்கு உட்கார்ந்திருப்பார்கள். அதனால் ஏற்பட்ட தொற்று நோய்களில் காலம் முழுக்க உழன்றிருப்பார்கள்.

****

உங்கள் பாட்டி, தாத்தா காலத்தில் பிறக்காத குழந்தைகள் இன்று பிறக்கிறார்கள். பிறந்த குழந்தைகள் அவரவர் உடல் திறனுக்கு ஏற்ப 60, 70 வயது கூட வாழ்வார்கள். இன்னும் சிலர் 100 வயது வரை கூட வாழலாம். 30 வயதில் வருகிற சர்க்கரை நோய் பிறந்து 1 வயதில் இறந்து போன உங்கள் மூதாதையருக்கு வராது.

ஒன்று புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு கிரிக்கெட் அணியிலும் என்றாவது ஒரு நாள் சதம் அடிக்கிற சச்சின்கள் இருக்கலாம். ஆனால், மற்ற ஆட்டக்காரர்கள் எல்லாம் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினால், அந்த அணி வெல்வதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஆளுக்கு 50, 60 அடித்தாலும் எல்லாரும் அடித்தாடுகிற அணி தான் வெல்லும். நவீன அறிவியல் மருத்துவம் வெல்லும் மருத்துவம்.

காண்க – முகநூல் உரையாடல்

தனியாரா அரசா? எந்த மருத்துவமனைக்குச் செல்வது?

நவீன அறிவியல் மருத்துவத்தின் (அல்லோபதி என்கிற ஆங்கில மருத்துவம்) மீது மக்கள் வைக்கும் இரு பெரும் குற்றச்சாட்டுகள் என்ன?

* தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற சோதனைகள், மருந்துகள் தந்து காசு பிடுங்குகிறார்கள்.
* தவறான மருத்துவம் பார்க்கிறார்கள். ஒரு மருத்துவமனையில் குணம் ஆகாதது இன்னொரு மருத்துவமனையில் குணமாகிறது. இவர்களை எப்படி நம்புவது?

இது தான் உங்கள் பிரச்சினை என்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் அரசு பொது மருத்துவமனை. அங்கு மருந்து, அறுவை சிகிச்சை, சோதனை முதற்கொண்டு அனைத்தும் இலவசம். தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் பாடம் நடத்தும் பேராசிரியர்கள் தான் அங்கு மருத்துவம் பார்க்கிறார்கள். எனவே, அவர்கள் சரியாக மருத்துவம் பார்ப்பார்களா என்ற ஐயமே உங்களுக்கு வேண்டாம்.

ஆனால், உங்கள் குறை என்ன?

அரசு மருத்துவமனையில் கூட்டமாக இருக்கிறது. காக்க வைக்கிறார்கள். சுத்தமாக இல்லை. என்னைக் கனிவுடன் கவனித்துப் பொறுமையாகப் பதில் சொல்வதில்லை (இந்தக் குற்றச்சாட்டு உண்மை இல்லை என்பது வேறு விசயம்)

முதலில், இப்படிப்பட்ட குறைகளே பலருக்கு ஊடகம் எழுப்பும் பிம்பங்களால் வந்தது தான். நேரடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்ப்போர் சிலரே. அப்படியே இது தான் உங்கள் குறை என்று நீங்கள் தனியாருக்குச் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் அங்கு செலுத்தும் தொகை உங்கள் egoவுக்கும் சேர்த்து தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எவ்வளவு பெரிய தனியார் மருத்துவமனைக்குச் செல்கிறீர்களோ, அந்த அளவு காசு வாங்கிக் கொண்டு உங்கள் egoவைக் குளிர்விப்பார்கள். தனியறை, AC, TV மற்றும் இன்ன பிற வசதிகள் இருக்கும். இருக்கிற குறைந்த நிதியில் கோடிக்கணக்கானோர் உயிரைக் காப்பாற்றுவது தான் அரசின் முதல் கடமை. உங்கள் egoவைக் குளிர்விப்பது அன்று.

ஒன்று புரிந்து கொள்ளுங்கள். அரசு பேருந்தில் ஏறினாலும் தனியார் பேருந்தில் ஏறினாலும் இலக்கு ஒன்று தான். நீங்களே உங்களைப் பணக்காரர் என்று நினைத்து தனியாக helicopter வாடகைக்கு எடுத்து ஆண்டி ஆகாதீர்கள். அதை விட மோசம், போகாத ஊருக்கு வழிகாட்டும் ஏமாற்று மருத்துவத்தில் சிக்கி சுடுகாட்டுக்குப் போகாதீர்கள்.

காண்க – முகநூல் உரையாடல்

மந்தை நோய் எதிர்ப்புத் திறன்

தங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடவில்லை, அது நன்றாகத் தான் இருக்கிறது. எனவே, தடுப்பூசி என்பதே ஒரு மோசடி என்கிறார்களே?

…ஒரு ஊரில் 100 பேர் இருக்கிறார்கள். அந்த ஊருக்குத் தீவிரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே, ஆளுக்கு ஒரு கைத்துப்பாக்கி எடுத்துக் கொண்டு ஊரைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கிறார்கள். இதில் ஒருத்தர் தான் மட்டும் சூராதி சூரர் வீராதி வீரர் தனக்கு துப்பாக்கி தேவையில்லை, பாரம்பரிய வேல் கம்பு போதும் என்று நிற்கிறார். ஒரு ஆள் மட்டும் இப்படி நிற்கும் போது அவரைச் சரியாகக் கண்டு பிடித்து ஊடுருவுதல் சிரமம் என்று தீவிரவாதக் கும்பல் திரும்பிப் போகும். இந்த ஒருத்தரைப் பார்த்து, “அட, நம்ம ஊருக்கு ஏதும் ஆபத்து இல்லை போல், நாம் தான் வீணாக பீதியாகி துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம், இதனால் ஆயுதம் விற்கும் கும்பல் தான் பயன் அடைகிறது” என்று எண்ணி ஒவ்வொருத்தராக துப்பாக்கியைக் கீழே போடும் போது ஊடுருவுவது எளிது. என்ன தான் கையில் துப்பாக்கியைப் பிடித்து இருந்தாலும், ஒவ்வொருவரும் சிறப்பாகச் சண்டை போடக் கூடிய தேர்ந்த வீரர்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, துப்பாக்கி இருந்தும் சிலர் மாளக் கூடும். இப்போது அதே வேல் கம்பு ஆள் என்ன சொல்வான்? “பார்த்தியா, துப்பாக்கி இருந்தால் கூட சாவு நிச்சயம், துப்பாக்கி விற்பதற்காக நம்மை ஏமாற்றி விட்டார்கள்”.

பட உதவி: Tkarcher, CC-BY-SA 4.0

இப்போது, இந்த ஊரைக் காக்க என்ன செய்ய வேண்டும்?

* எல்லோரும் துப்பாகி ஏந்த வேண்டும்.
* பாரம்பரிய வேல் கம்பு ஆட்களைத் தனித்தீவுக்கு நாடு கடத்த வேண்டும். அவர்களை விட்டு வைத்தால் தானும் செத்து மற்றவர்களையும் சாகடிப்பார்கள்.

இன்னும் புரியவில்லை என்றால் Herd Immunity என்னும் மந்தை நோய் எதிர்ப்புத் திறன் பற்றிப் படித்துப் பாருங்கள்.