நிலவேம்பு குடித்தால் டெங்கு குணமாகுமா?

கேள்வி: நிலவேம்பு/பப்பாளி ஆறுதல் மருந்து தான், அதில் மருத்துவ குணங்கள் இல்லை என்கிறீர்கள். ஆனால், அதை நானே குடித்தேன். எனக்கு #டெங்கு சரியானது. மருத்துவமனையில் மருத்துவர்களே நிலவேம்பு/பப்பாளி சாறு குடிக்கச் சொல்கிறார்கள். இதனை எப்படி புரிந்து கொள்வது?

பதில்: டெங்கு முதலிய பல்வேறு வைரசு மூலமான காய்ச்சல் நோய்கள் பெரும்பாலானோருக்குத் தானாகவே குணமாகக் கூடியது தான். உங்கள் குழந்தைக்குக் காய்ச்சல் என்று மருத்துவரிடம் போனால், இது வைரசு காய்ச்சல், ஒரு வாரத்தில் தானாகவே குணமாகும், அதற்குப் பிறகும் நீடித்தால் வாருங்கள் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். காய்ச்சலால் வரும் உடல்வலிக்கு மட்டும் paracetamol மருந்து தருவார்கள்.

ஆறுதல் மருந்து தருவதும் நவீன அறிவியல் மருத்துவத்தின் ஒரு பகுதி தான். எனவே, தானாகவே நோய் குணமாகும் நேரத்தில் நீங்கள் நிலவேம்பு/பப்பாளி சாறு குடித்தால், அதன் காரணமாகத் தான் நோய் குணமாகியது என்று உறுதியாகச் சொல்வதற்கு இடம் இல்லை. அவ்வாறு இது நோயைக் குணப்படுத்தும் என்றை நிறுவுவதற்கு முறையான அறிவியல் ஆய்வுகள் தேவை. முதலில் ஆய்வகத்தில் சோதனைத் தட்டுகளில் நிறுவி, பிறகு எலிகள் உள்ளிட்ட மற்ற விலங்குகளில் சோதனை செய்து, அதன் பிறகு பல்வேறு கட்ட மனிதச் சோதனைகளைக் கடந்து தான் மருந்து என்று பரிந்துரைக்கும் நிலைக்கு வர முடியும். இது குறைந்தது 10 முதல் 20 ஆண்டுகள் எடுக்கக் கூடிய ஒரு சோதனை முறை.

நில வேம்பின் அறிவியல் பெயர் Andrographis paniculata.

இதன் டெங்கு ஒழிப்பு குணங்கள் குறித்த ஆய்வுகளை Google Scholar தளத்தில் தேடிப் பாருங்கள் (மறுமொழிகளில் இணைப்பு தருகிறேன்).

ஒரு சில முதற்கட்ட ஆய்வுகள் நிலவேம்புக்கு டெங்கு ஒழிப்பு குணங்கள் இருக்கலாம், மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறுகின்றனவே ஒழிய இதனையே மருந்தாகப் பரிந்துரைக்கும் நிலை இன்னும் வரவில்லை.

ஒரு செடியில் மருத்துவக் குணம் இருக்கிறது என்பது வேறு. அதுவே மருந்து என்பது வேறு. எடுத்துக்காட்டுக்கு, எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று வகுப்பறையில் பாடம் நடத்தலாம். ஆனால், car batteryஐக் கழற்றி வைத்து விட்டு எலுமிச்சம் பழ மூட்டையை வைத்து வண்டி ஓட்ட முடியாது.

செடி இயற்கையானது. அதைக் குடித்தால் எந்தப் பக்க விளைவும் வராது என்று எண்ணுவது தவறு. ஒருவருக்கு மருந்தாகும் ஒரு மூலக்கூறு அனைவருக்கும் ஒத்து வரும் என்றும் சொல்ல முடியாது. மேயோ மருத்துவமனை வெளியிட்டுள்ள நூற்குறிப்பு மாசமாக உள்ள பெண்கள் நிலவேம்பு அருந்துவதைத் தவிர்க்க வேண்டும், அது கருவைக் கலைக்கும் என்கிறது (மறுமொழிகளில் இணைப்பு தருகிறேன்).

வெளிநாட்டுக் கம்பெனிக்காரன் நம்மைச் சோதனை எலிகளாகப் பயன்படுத்துகிறான் என்று அலறும் ஆட்கள், எந்த வித ஆய்வும் இன்றி கண்ட கசாயத்தைக் குடிக்கச் சொல்வது ஏற்புடையதா?

ஆகவே, நிலவேம்பு, பப்பாளி முதலியன டெங்குவைத் தடுக்கும் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மாறாக, அது ஒரு சிலருக்கு நோயை இன்னும் தீவிரப்படுத்தி விடும் ஆபத்தும் இருக்கலாம். போலியோ வைரசுக் காய்ச்சலுக்கே இன்னும் எந்த மருந்தும் இல்லை. தடுப்பூசி தான் உள்ளது. அதாவது, தடுப்பூசி போட்டால் தப்பலாம். ஆனால், போலியோ வந்த பிறகு குணப்படுத்த மருந்து இல்லை.

எனவே, காய்ச்சல் வந்தால் MBBS படித்த மருத்துவர்களை நாடுங்கள். அவர்கள் தரும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள். அவர்கள் பிழையான மருத்துவம் பார்த்தால் சட்டத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை உண்டு. ஏமாற்று மருத்துவ ஆட்களிடம் இந்தப் பாதுகாப்பு இல்லை.

காண்க – முகநூல் உரையாடல்

நிலவேம்பு என்னும் ஆறுதல் மருந்து

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் கசாயம், பப்பாளி சாறு முதலியன மருந்தாகுமா? நவீன அறிவியல் மருத்துவத்தில் (அதாவது பொது மக்கள் ஆங்கில மருத்துவம் என்று சொல்கிற அலோபதி மருத்துவம்) இதற்கு மருந்து இல்லை என்கிறார்களே? அரசு ஏன் இவற்றைப் பரிந்துரைக்கிறது?

…டெங்கு காய்ச்சலுக்கு இது வரை எந்த மருத்துவ முறையிலும் மருந்து இல்லை. டெங்கு தாக்கிய அனைவரும் இறப்பதில்லை. நோயின் தீவிரத்தைப் பொருத்து 1-5% பேர் இறக்கிறார்கள். ஆனால், ஊர் முழுக்க இது போல் கொள்ளை நோய் வரும் போது இறப்பதற்கு வாய்ப்பில்லாத எஞ்சிய பெரும்பகுதி மக்களும் பீதி அடைவார்கள். இந்தப் பெரும் பீதியைக் கட்டுக்குள் வைக்க அரசும் மருத்துவத் துறையும் placebo என்னும் ஆறுதல் மருந்தைக் கொடுக்கும். அதாவது, இதனால் ஒரு மருத்துவ விளைவும் இருக்காது. ஆனால், தான் மருந்து உண்கிறோம் என்ற நிம்மதியில் பீதியடையாமல் இருப்பார்கள். பிறகு, இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தியின் காரணமாக நோய் குணமாகும். நிலவேம்பும் பப்பாளியும் இது போன்ற ஒரு ஆறுதல் மருந்து தான். அவற்றைக் குடிப்பதற்குப் பதில் மருந்து என்று நினைத்து பச்சைத் தண்ணீரைக் குடித்தாலும் அதே விளைவைப் பெறலாம். ஓமியோபதி, அக்குபங்சர் உள்ளிட்ட பல்வேறு ஏமாற்று மோசடி மருத்துவர்கள் தரும் மருந்துகளால் சில நோய்கள் சில வேளைகளில் குணமாவதற்கும் இதே ஆறுதல் மருந்து அணுகுமுறை தான் காரணம்.

ஆனால், ஆறுதல் மருந்தே நோய் தீர்க்கும் மருந்து ஆகாது. டெங்குக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் எழுந்தால் தாமதிக்காமல் நவீன அறிவியல் மருத்துவர்களை நாடுங்கள். “டெங்குக்கு மருந்தில்லை என்கிறீர்கள், பிறகு ஏன் மருத்துவ மனைக்குச் செல்லச் சொல்கிறீர்கள்” என்கிறீர்களா? மருந்து என்பது வேறு. நோயின் விளைவுகளைப் பகுத்துணர்ந்து அதனை எதிர்த்துப் போராடும் வகையில் உடலுக்குச் சிகிச்சை அளிப்பது வேறு. தீவிர டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளானவர்களுக்குத் தொடர்ந்து போதிய அளவு நீர்ச்சத்து தர வேண்டும். இரத்த அழுத்தத்தையும் platelet எண்ணிக்கையும் சீராகப் பேண வேண்டும். இதற்காகத் தேவைப்பட்டால், இரத்தம் மாற்றுவார்கள். இவை எல்லாம் டெங்குச் சாவுகளைக் குறைக்கும்.

கடவுள் இல்லை என்பவனை நம்பலாம். இருக்கிறார் என்பவனைக் கூட நம்பலாம். ஆனால், தான் தான் கடவுள் என்பவனை நம்ப முடியாது. அது போலத் தான், மருந்தே இல்லை என்று உலக சுகாதார நிறுவனமே சொல்லிய டெங்கு நோய்க்கு தங்களிடம் மருந்து இருப்பதாக போலி, ஏமாற்று மருத்துவக் கும்பல் வலை விரிக்கிறது. அரசே கசாயம் குடிக்கச் சொல்வது இவர்களுக்குத் தோதாக இருக்கிறது. உலகெங்கும் டெங்குத் தாக்குதலால் ஏற்படும் பொருளாதாரச் சுமை 9 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருக்கும் என்று அளவிடப்படுகிறது. அப்படிப் பட்ட அதிசய மருந்தை வைத்திருக்கும் இந்த ஏமாற்று மருத்துவக் கும்பல் வாளி வாளியாக உலகெங்கும் நிலவேம்புக் கசாயத்தை ஏற்றுமதி செய்து சம்பாதிக்கலாமே?