நிலவேம்பு விற்பனை

நிலவேம்பின் பக்க விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்தால், நிலவேம்புக் குடிநீர் என்பது மேலும் எட்டு வகையான மூலிகைகள் கலந்த நீர் என்கிறார்கள். ஆனால், கடைகளிலோ நிலவேம்புப் பொடி, பவுடர், குடிநீர் என்று வெவ்வேறு பெயர்களில் கடைகளில் விற்பனையாவதைக் கீழே காணலாம். வெறும் நிலவேம்புப் பொடியை வாங்கி மக்கள் கரைத்துக் குடித்தால் வரும் விளைவுகள் என்ன? எந்த வித தரக்கட்டுப்பாடும் ஒழுங்கு முறையும் இல்லாமல் இப்படி விற்பனையாகும் பொருள்களில் கலப்படம் இல்லை என்பதற்கு என்ன உறுதி?

புரதம், மாவுச் சத்து, நார்ச் சத்து நிறைந்தது, சக்தி தரும், தெளிவான புத்தி தரும் என்று விளம்பரப்படுத்தப்படும் இது உணவா மருந்தா? இது எப்படி டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்தும்?

காண்க – முகநூல் உரையாடல்

அரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது?

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி இவை எல்லாம் மருத்துவமே இல்லை, நவீன அறிவியல் மருத்துவம் தான் உண்மையான மருத்துவம் என்றால் பிறகு அரசு ஏன் இவற்றை தனி மருத்துவக் கல்லூரிகளில் கற்பிக்கின்றனது? AYUSH என்று தனி அமைச்சகம் வைத்திருக்கிறது?

…இந்தியாவைப் பொருத்தவரை யுனானி, சித்தா, ஆயுர்வேதம் ஆகியன மதம், இனக்குழுப் பெருமை ஆகியவற்றோடும் தொடர்பு உடையது. எனவே, அரசியல் காரணங்களுக்காக ஒரு அரசு இவற்றில் தலையிட விரும்பாது.

அது மட்டும் இன்றி, தனிப்பட்ட பல அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் போக இங்கு பல கட்சிகளும் மக்களும் கூடவே, பொதுவுடமை, தேசிய, தற்சார்பு இயக்கங்களை ஆதரித்து அறிவியலுக்கு முரணான ஏமாற்று மருத்துவத்தை அதற்கான வழிமுறையாக காண்கிறார்கள்.

ஏமாற்று மருத்துவ முறைகள் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் உள்ளன. பொதுவாக, ஒரு அரசு இவற்றை அனுமதிப்பதன் மூலம் இத்துறையை ஒழுங்குபடுத்தி தன் கண்காணிப்பில் வைக்க இயலும். தக்க வேளையில் ஆபத்தான நோயாளிகளை நவீன மருத்துவத் துறையின் கீழ் கொண்டு வந்து சிகிச்சை அளிக்க முடியும். இல்லை எனில், நம் மக்கள் குகைகளில் வாழும் சித்தரைத் தேடி காட்டுக்குப் போவார்கள். முட்டை மந்திரிப்பார்கள். எதை மருந்தாக கொடுக்கிறார்கள், என்ன உண்கிறார்கள் என்றே அறிய இயலாது. அரசு TASMAC நடத்தாவிட்டால் நம்ம ஆட்கள் கள்ளச் சாராயம் காய்ச்சத் தொடங்கி விடுவார்கள் என்பதை ஒப்பு நோக்குக.

என்ன தான் தீர்வு?

இந்தியாவில் அமைகிற ஒரு அறிவுள்ள அரசு, இந்த மாற்று மருத்துவ முறைகளை பல் பிடுங்கிய பாம்பாகவே வைத்திருக்க வேண்டும். நவீன அறிவியல் மருத்துவம் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே அறிவியல் மனப்பான்மையையும் வளர்க்க வேண்டும். அடிப்படை அறிவியலில் ஆய்வுகளை ஊக்குவிக்க வேண்டும்.

செடிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட எத்தனையோ மருந்துகள் உலக அளவில் பயன்பாட்டில் உள்ளன. மலேரியா மருந்தே ஒரு மரத்தில் இருந்து வந்தது தான். ஆனால், அந்த மரத்தை அரைத்துக் குடித்தால் நோய் தீராது. இது தான் அறிவியல்.

இந்திய செடிகள், உயிர்களில் இருந்து உலகளவில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய மருந்துகளைக கண்டுபிடிப்பதற்குச் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அவற்றுக்குத் தக்க அறிவு சார் உரிமையையும் பெற வேண்டும். சித்த மருத்துவமோ மற்ற மருத்துவமோ அது தன்னை நிறுவும் நாளில் அதுவும் நவீன அறிவியல் மருத்துவமாகவே ஏற்றுக் கொள்ளப்படும்.

காண்க – முகநூல் உரையாடல்

டெங்கு தடுப்பூசி

உலகின் 10 நாடுகளில் டெங்குக்குத் தடுப்பு மருந்து கொடுத்து வருகிறார்கள். ஆனால், இந்தியாவில் இதை அறிமுகப்படுத்த இன்னும் கூடுதல் சோதனைக்ள தேவை என்று சொல்லி இந்திய அரசு மருந்தை நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் பாருங்கள், சித்த மருத்துவம் என்றால் எந்தச் சோதனையும் தேவையில்லை. நேராக மனிதர்களுக்குக் கொடுக்கலாம். சித்த மருத்துவத்தில் மனிதர்கள் தான் சோதனை எலிகள்.

//Globally the most advanced is a vaccine made by pharma giant Sanofi and recommended by the WHO that is only effective in the age group 9 years to 45 as a tool to tackle dengue.

Earlier this year the Indian health ministry rejected the introduction of the Sanofi dengue vaccine to India as the company wanted fast track introduction and sought a waiver of the Phase III clinical trial in India.

The Ministry of Health and Family Welfare noted that “the evidence was not sufficient to waive conducting a clinical trial in India.”

In the last few weeks the company has approached the regulatory authorities to re-consider the rejection and a committee headed by clinicians from the All India Institute of Medical Sciences and Maulana Azad Medical College have suggested that the vaccine be introduced under strict post marketing surveillance. But there are hoops still to be overcome.//

செய்தி – Indian Express

காண்க – முகநூல் உரையாடல்

நிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா? ஆய்வுக் கட்டுரை அலசல்

தமிழக அரசின் கீழ் உள்ள கிங் மருந்தாய்வு நிறுவனமும் தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் டெங்குக்கு நிலவேம்பு மருந்தாகும் என்று எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்று சமூக ஊடகங்களில் சுற்றி வருகிறது (அனைத்து இணைப்புகளும் மறுமொழியில்).

PROTECTIVE EFFECT OF POLYHERBAL SIDDHA FORMULATION-NILAVEMBU KUDINEER AGAINST COMMON VIRAL FEVERS INCLUDING DENGUE – A CASE-CONTROL APPROACH

இந்தக் கட்டுரையின் முடிவுகளை முன்வைத்தே டெங்குக்கு நிலவேம்பு தரலாம் என்று வாதிடுகிறார்கள்.

இந்தக் கட்டுரை சொல்வது என்ன?

* நிலவேம்பு குடித்தால் டெங்கு வராமல் இருக்கலாம்.
* இது பெண்களை விட ஆண்களுக்குக் கூடுதலாக வேலை செய்வது போல் உள்ளது. பெண்களுக்கு ஏன் அந்த அளவு வேலை செய்வதில்லை என்று உறுதியாகத் தெரியவில்லை.
* நில வேம்புடன் இணைந்து பப்பாளி சாறும் கொடுத்தால் தட்டணுக்கள் எண்ணிக்கை சட்டென உயர்கிறது. ஆனால், ஏற்கனவே தட்டணுக்கள் சீராக இருந்தவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.

சரி, இந்த முடிவுகளை எந்த அளவு நம்பலாம் என்று காணும் முன், அறிவியல் உலகில் ஒரு ஆய்வுக் கட்டுரையின் மதிப்பு எப்படி அளவிடப்படுகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ஆய்விதழுக்கும் Impact factor என்ற தர மதிப்பீடு என்பது. இது அந்த ஆய்விதழின் கட்டுரைகளை மற்ற ஆய்வுகள் எந்த அளவு மேற்கோள் காட்டியுள்ளன என்பதைப் பொருத்து கூடுதலாக அமையும். எடுத்துக்காட்டுக்கு, Science, Nature, Cell போன்றவை உலகின் முன்னணி ஆய்வு இதழ்கள். இவற்றில் ஒரு கட்டுரை வெளியாகும் முன் உலகின் முன்னணி ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் கட்டுரைகளைப் படித்து திருத்தங்களைக் கோருவார்கள். அவர்களுக்கு ஏற்புடையவாறு மீண்டும் ஆய்வு செய்து அறிவியல் அடிப்படைகளுடன் நிறுவினால் ஒழிய கட்டுரையைப் பதிப்பிக்க முடியாது. ஒரு ஆய்வாளரின் மதிப்பும், அவர் பெறக்கூடிய ஆய்வு நிதியும் அவர் இத்தகைய உயர் மதிப்பு மிக்க ஆய்விதழ்களில் எத்தனைக் கட்டுரைகளைப் பதிப்பித்துள்ளார் என்பதைப் பொருத்தே அமையும்.

ஆனால், இத்தகைய உயர் மதிப்பு இதழ்களில் பதிப்பிக்க இயலாதவர்கள் எண்ணிக்கை கணக்கு காட்டுவதற்காக, சில உப்புமா இதழ்களில் ஆய்வுகளைப் பதிப்பிப்பார்கள். இவற்றை யாரும் படிப்பதும் இல்லை. மேற்கோள் காட்டுவதும் இல்லை. அதாவது, இந்த ஆய்வு இத்துறையில் உள்ள வேறு யாருக்கும் பயன்படாது. அறிவியலையும் நுட்பத்தையும் முன்னெடுக்க உதவாது.

குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரை International Journal Of Pharmaceutical Sciences And Research என்ற இதழில் வெளிவந்துள்ளது. இதன் Impact factor 0.2 மட்டுமே. ஒருவர் உண்மையிலேயே டெங்குக்கு மருந்து கண்டுபிடிக்கக்கூடிய ஆய்வைச் செய்தால் அவருக்கு நோபல் பரிசே கொடுப்பார்கள். அவருடைய கட்டுரை Nature போன்ற முன்னணி இதழ்களில் வெளிவரும். அவற்றின் Impact factor 25-33ஐத் தொடும்.

பெயர் என்னவோ International என்ற பெத்த பெயராக இருந்தாலும் இது இந்தியாவில் இருந்து வெளியிடப்பட்டது. ஆம், 2010-2016 காலங்களில் வெளிவந்து நின்று விட்டது.

சரி, இந்த குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரைகளை டெங்கு தொடர்பாக எத்தனைப் பேர் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்? பூச்சியம்! மருந்து கண்டுபிடிப்பு பற்றி நன்கு அறிந்த அறிஞர்கள் உலகில் இது யாருக்கும் ஒரு பொருட்டாகவே இல்லை.

Impact factor, citation குறித்து ஏன் இவ்வளவு விளக்குகிறேன் என்றால், இது போல் ஏதாவது ஒரு கட்டுரையை எடுத்துப் போட்டு, “இதோ பார் ஆதாரம்” என்கிறார்கள். இவற்றைப் புரிந்து கொண்டால், இனி ஒரு குறிப்பிட்ட துறையில் உங்களுக்கு அறிமுகம் இல்லை என்றாலும், குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரையை எந்த அளவு நம்புவது என்று புரிந்து கொள்ளலாம்.

ஆக, அம்பத்தூர் Timesல் கடைசிப் பக்கத்தில் வரும் கட்டுரைக்கு உள்ள மதிப்பு கூட இதற்குக் கிடையாது.

சரி, இனி “ஆய்வுக் கட்டுரையின்” உள்ளடக்கத்துக்குப் போவோம்.

* நிலவேம்பு குடித்த 100ல் 24 பேருக்கு மட்டுமே டெங்கு வரலாம். அதுவும் பெண்கள் என்றால் 100ல் 47 பேருக்கு வரலாம் என்கிறது. இப்படி எக்குத் தப்பாக ஆய்வு முடிவுகள் வருவதே நிலவேம்புக்கும் டெங்கு வராமல் இருப்பதற்கும் ஏதாவது அறிவியல் தொடர்பு இருக்கத் தான் முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

* நிலவேம்பு குடிநீர் என்ற பெயரில் நிலவேம்புடன் சேர்த்து இன்னும் பல மூலிகைகள், போதாக்குறைக்கு பப்பாளி சாறு கொடுத்திருக்கிறார்கள். ஒரு வேளை நோய் குணமானாலும் எதனால் குணமாகிறது என்று உறுதி இல்லை.

* டெங்கு பாதித்த பத்தே பத்து பேரை வைத்து மருத்துவ ஆராய்ச்சி செய்து முடிவுக்கு வருவது சிறுபிள்ளைத்தனம். இந்த ஆய்வைப் புறக்கணிக்க இது ஒன்றே போதுமானது. குறைந்தது 1000 பேரையாவது வைத்து பல கட்டப் பரிசோதனைகள் அவசியம்.

மனிதர்களை வைத்து சோதிக்கும் முன் செல் வரிசையிலும் பிறகு எலி/நாய் முதலிய விலங்குகளிலும் சோதிக்க வேண்டும். இந்த மருந்தால் யாருக்கும் நஞ்சேறுமா (toxicity test), இது மருந்தாக வழங்கும் அளவு நிலைத்தன்மை உடையதா (stability test), தூய்மைச் சோதனை (purity test), அதன் கரையும் தன்மை எத்தகையது (solubility test), உடல் மருந்துக்கு எப்படி வினையாற்றுகிறது (pharmacodynamics), மருந்து உடலில் எப்படி வினையாற்றுகிறது (pharmacokinetics) என்று பல கட்டச் சோதனைகளைக் கடக்க வேண்டும். இவ்வாறு சோதிக்கப்படும் 5000 மருந்து மூலக்கூறுகளில் 1 மட்டும் தான் இறுதியில் ஒப்புதல் பெற்ற மருந்தாக வர வாய்ப்பு உள்ளது.

இந்த ஆய்வைப் பொருத்த வரை நேரடியாக மனிதர்கள் மீதான சோதனை தான்! முற்கட்டச் சோதனை எதுவும் இல்லை!

* அடுத்து முக்கியமாக, மருந்துகள் பற்றிய ஒவ்வொரு சோதனையிலும் கட்டுப்பாட்டுக் குழு (control group), ஆறுதல் மருந்து குழு (placebo group), மருந்து உண்ணும் குழு (medicine group) என்று மூன்று குழுக்கள் கட்டாயம் இருக்க வேண்டும். தான் உண்பது மருந்தா ஆறுதல் மருந்தா என்பது உண்பவருக்கும் தெரிக்கூடாது, கொடுப்பவருக்கும் தெரியக்கூடாது. அப்போது தான் ஆறுதல் மருந்தைக் குடித்தாலும் மருந்தைக் குடிக்கிறோம் என்ற நம்பிக்கையின் விளைவாக ஒருவர் குணமாகிறாரா இல்லை மருந்தின் தன்மையின் காரணமாக குணமாகிறாரா என்று தெரியவரும். இந்த ஆய்வில் டெங்கு பாதித்த அனைவருக்கும் கசாயம் கொடுத்திருக்கிறார்கள். கட்டுப்பாட்டுக் குழுவும் இல்லை. ஆறுதல் மருந்துக் குழுவும் இல்லை. ஆய்வு செய்த முறையே தவறு.

இந்தக் கட்டுரையை ஆய்வு எனக் குறிப்பிடுவதே தவறு. ஏன் எனில், இது ஒரு நோக்கு மட்டுமே. ஒரு மருந்தைப் பற்றி எழுத வேண்டும் என்றால், அதில் என்ன மூலக்கூறுகள் உள்ளன, அது எப்படி உடலுடன் வினையாற்றி நோயைக் கட்டுப்படுத்துகிறது என்பதற்கான மருத்துவ வேதியியற் செயற்பாட்டு விளக்கம் தேவை.

இந்தக் கட்டுரையை நம்புவதும் ஒன்று தான். சோடா குடித்தால் ஏப்பம் குணமாகும் என்று நம்புவதும் ஒன்று தான். ஆனால், அதனை நம்பி 7 கோடி மக்கள் உள்ள நாட்டில் டெங்குக்கு மருந்தாக கசாயம் குடியுங்கள் என்று சொல்ல முடியாது.

காண்க – முகநூல் உரையாடல்

டெங்கு சிகிச்சை

டெங்குக்கு மருந்தே இல்லை என்கிறார்கள். பிறகு மருத்துவமனைக்கு அழைத்து என்ன தான் சிகிச்சை அளிப்பார்கள்?

1. காய்ச்சல் என்று வருபவர்களுக்கு முதலில் இரத்தப் பரிசோதனை செய்வார்கள். நோய் தாக்கிய ஒருவருக்கு டெங்கு இருக்கிறதா என்று தெரிய மூன்று நாட்கள் ஆகும். அது வரை உடல்வலி போக்க paracetamol தருவார்கள். தக்க நீராதாரம் உண்ண அறிவுறுத்துவார்கள். தீவிர டெங்கு தாக்குதல் வந்தால் என்னனென்ன அறிகுறிகள் இருக்கும் என்று எடுத்துச் சொல்லி, இந்த நிலை தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று எடுத்துச் சொல்வார்கள்.

இந்த அறிகுறிகளாவன:

* கடும் தலைவலி, எலும்பு/மூட்டு வலி, கண்ணின் பின்புறம் வலி, வாந்தி, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் முதலியன.

2. இரத்தப்பரிசோதனையின் அடிப்படையில் உங்களுக்கு வந்திருப்பது ஆபத்தற்ற முதல் நிலை டெங்குவா (90% பேருக்கு) ஆபத்தான இரண்டாம் நிலை டெங்குவா (10% பேருக்கு) என்று அறிவார்கள். முதல் நிலை என்று கண்டறிந்தால் மீண்டும் மேலே உள்ள வலி நீக்க மருந்து, அறிவுரைகளைச் சொல்லி வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். இரண்டாம் நிலை டெங்கு என்றால் உடனே உள்நோயாளியாக அனுமதிப்பார்கள்.

* உங்கள் இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு முதலிய முக்கிய செயற்பாடுகளைக் கவனிப்பார்கள்.

* வலி நீக்க மருந்துகள் தருவார்கள்.

* தட்டணுக்கள் (platelets) எண்ணிக்கை 50,000க் கீழ் குறைந்தால் மாற்று இரத்தம் அளிப்பார்கள்.

* உடல் உறுப்புகளில் இரத்தக் கசிவு இருக்கிறதா என்று கண்காணிப்பார்கள்.

* தொடர்ந்து saline ஏற்றுவதன் மூலம் உங்கள் உடலில் நீர்ச்சத்தைப் பாதுகாப்பார்கள்.

டெங்குவைக் குணப்படுத்தும் மாயமருந்து தான் இல்லையே தவிர, நிச்சயம் உங்கள் உயிர் காக்கும் இந்த ஆதரவுச் சிகிச்சை (supportive care) உண்டு. காய்ச்சல் வந்த உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வாருங்கள். சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வந்து இச்சிகிச்சையைப் பெற்றால் உயிர் இழப்பில் இருந்து தப்பிக்கலாம். டெங்குக்கு மருந்து இல்லை என்று எண்ணி வீட்டிலேயே கசாயம் குடித்தோ ஏமாற்று மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளை உண்டோ சாகாதீர்கள்!

காண்க – முகநூல் உரையாடல்