கிரந்தம்

பல நாடுகள், சமயங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றியது. பல நாட்டினரும் பல சமயத்தினரும் தமிழ் பேசுகின்றனர். ஒரே பிறப்பில் நாட்டையும் சமயத்தையும் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், தாய்மொழியை மாற்றிக் கொள்ள இயலாது. எனவே, நாடுகள், சமயங்களைக் காட்டிலும் மொழி பெரிது என்று கருதாவிட்டாலும், அவற்றுக்குத் தருவதற்கு ஈடான மதிப்பை மொழிக்கும் தர வேண்டும்.

கிரந்த எழுத்துப் பயன்பாடு குறித்து சிந்திக்கையில் எழும் எண்ணங்கள்:

* thamiழ், thiruஞaanasambandhar, vaள்ள்i, faன், hஆட், jஓக், shஅவர், பs என்று எழுதுவதற்கும் விஜய், ஹாரி, ஜெய் என்று எழுதுவதற்கும் என்ன வேறுபாடு? ஆங்கிலத்தோடு தமிழ் கலந்து எழுதுவது உறுத்துகிறது; கிரந்தத்தோடு தமிழ் கலந்து எழுதுவது மட்டும் ஏன் உறுத்த வில்லை? பழகிப் போவதால் ஒரு பிழை சரியாகுமா?

* இடாயிட்சு, நெதர்லாந்து மொழிகளில் ஓசை இல்லை. ramanujan என்று எழுதினால் ராமானுயன் என்று தான் வாசிப்பார்கள். தமிழில் இராமானுசன் என்று எழுதினால் மட்டும் ஏன் மரியாதைக் குறைவு என்று நினைக்கிறார்கள்?  thamil என்று கூட எழுதாமல் tamil என்று ஆங்கிலேயர் எழுதுவது தமிழரை அவமதிப்பதாகுமா? கிரந்தம் கலந்து ஒலிப்பு பிசகாமல் எழுதி ஒருவரைக் காறித் துப்பவும் முடியும். கிரந்தம் தவிர்த்து எழுதி ஒருவரைப் போற்றவும் முடியும். ஒருவரைப் போற்றவோ தூற்றவோ ஒலிப்பு ஒரு பொருட்டே இல்லை.

* இந்து, பௌத்த, இன்னும் பல சமய மந்திரங்களின் ஒலிப்பில் மந்திர ஆற்றல் உள்ளதாகவும் அதைக் காக்க கிரந்தம் அவசியம் என்றும் சொன்னால், சீன, சப்பானிய மொழிகளில் இந்த ஒலிப்புகளுக்குத் தொடர்பே இல்லாமல் இம்மந்திரங்கள், பெயர்களைச் சொல்லி வழிபடுகிறார்களே? அவர்களுக்கு அருள் கிடைக்காதா? கிரந்த எழுத்துகளே கலக்காமல் பாடல் பாடிய நாயன்மார்கள், ஆழ்வார்கள் வீடுபேறு அடையவில்லையா? பக்திக்கு ஒலிப்பு எவ்விதத்தில் முக்கியமாகிறது? மொழியின் இயல்பு, கவனக் குறைவு, இயலாமை காரணமாக ஒருவர் ஒலிப்புப் பிசகிப் பேசினாலும் பாடினாலும் பக்தனின் உள்ளத்தை அறிந்து அருள இயலாத மூடரா கடவுள்? ஒரு கடவுளுக்குப் பல அவதாரங்கள், ஒவ்வொரு அவதாரத்துக்கும் பல பெயர்கள், ஒவ்வொரு மொழி, நாட்டிலும் ஒவ்வொரு ஒலிப்பு என்று இருக்கையில் ஒரு கடவுளின் பெயரை ஒலிப்பு கெடாமல் எழுதுவது அவசியமா? கண்ணன், திருமகள் என்று கிரந்த எழுத்துத் தேவையின்றி பிற மொழிச் சமயப் பெயர்களையும் தமிழாக்கிக் கூட எழுதலாமே? எல்லாம் கடந்த ஒரு ஓசையில் தான் கடவுள் தங்கி இருக்கிறாரா? ஒலிப்பை மாற்றிச் சொன்னால் மதிப்புக் குறைவு என்று கோபப்படுவரானால், பக்கத்துத் தெரு அரசியல்வாதிக்கும் கடவுளுக்கும் அவரது தூதர்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு?

* கிரந்தம் கலக்காமல் தமிழ் எழுத்துகளில் மட்டும் எழுத வேண்டும் என்று சட்டம் இல்லை. அதே போல், கிரந்தம் கலந்து தான் எழுத வேண்டும் என்றும் சட்டம் இல்லை. தமிழ் இலக்கணப் படி பள்ளியில் சொல்லித் தரப்பட்ட தமிழ் எழுத்துகளை மட்டும் கொண்டு எழுதுவதற்கு எவருக்கும் முழு உரிமை உண்டு.

* “தமிழ் இயல்புக்கு ஏற்ப ஒலிகளை உள்வாங்கியும் கிரந்தம் தவிர்த்தும் எழுதுவது தங்களை, தங்கள் நம்பிக்கைகளை அவமதிப்பதாகும்” என்று எவரும் சொல்வது ஒரு தொன்மையான இனத்தின் தன்மானத்துக்கு விடப்படும் நேரடி மிரட்டலாகும்.

* தமிழில் எழுதும் போது தமிழ் ஒலிகளை மட்டும் பயன்படுத்துங்கள் என்று தமிழரிடம் வேண்டுவது எவ்வாறு தமிழ்த் திணிப்பாகும்?

* பிற மொழி ஒலிப்புகள், அதை எழுதுவதற்கான தேவை ஏதோ புதிதாய் எழுந்தது இல்லை. தொல்காப்பியக் காலத்தில் தமிழருக்கு பிற மொழி, வட மொழியினருடன் தொடர்பு உண்டு. அதனாலேயே அச்சொற்களை எப்படி ஆள்வது என்று இலக்கணம் இயற்றப்பட்டது. வரலாற்றுக் காலம் நெடுகிலும் உலகம் முழுக்க வணிகத் தொடர்புகளைத் தமிழர் கொண்டிருந்திருக்கின்றனர். இத்தனைக் காலமும் கிரந்தம் இன்றி இருக்க வல்லதாய் இருந்த தமிழுக்குத் தற்போது மட்டும் கிரந்தத்தின் தேவை என்ன?

* புஷ்பா, ஹரீஷ் என்று எழுதினாலும் எங்கள் ஊர்க்காரர்களுக்கு புசுப்பா, அரீசு என்றே அழைக்க வருகிறது. அதை ஏன் புசுப்பா, அரீசு என்றே எழுதி விட்டுப் போகக்கூடாது? சார்ச்சு புசு, சாக்கி சான் என்று எழுதினாலும் அவர்கள் யாரும் நம்மோடு சண்டைக்கு வரப் போவதில்லை. அவர்களே கண்டு கொள்ளாத போது நாம் ஏன் விழுந்து விழுந்து ஒலிப்புத் துல்லியம் காட்ட வேண்டும்? கிரந்த ஒலிகள், எழுத்துகள் தேவைப்படுவோரைக் காட்டிலும் அவற்றின் தேவையின்றி வாழும் தமிழர் எண்ணிக்கை மிகக் கூடுதல். கிரந்தத்தை வலியுறுத்துவது தான் அவர்கள் மேலான உண்மையான திணிப்பு.

* கிரந்த எழுத்துகளைப் பொது ஊடகங்களில் பயன்படுத்துவது என்பது ஒரு சிலர் முடிவு எடுத்த, ஒருவரைப் பார்த்து இன்னொருவர் கண்மூடித்தனமாகப் பின்பற்றிய மரபு. கிரந்த எழுத்துப் பயன்பாடு என்பது திறந்த முறையில் மொழியிலாளர்களைக் கலந்துரையாடி எடுக்கப்பட்ட இறுதி முடிவு அன்று. கிரந்த எழுத்து அறிமுகத்தில் பிற மொழி, சமய, இனத்தினர் நலமே மிகுந்துள்ளதே தவிர தமிழ், தமிழர் நலம் காக்கப்படவில்லை.

* அச்சூடகங்களைக் காட்டிலும் இணைய ஊடகத்தில் ஒலிப்பைச் சுட்ட எழுத்துகளின் தேவை குறைவு. ஒலிக்கோப்புகள் மூலம் ஒலிப்பை எளிதாகச் சுட்ட முடியும். வருங்காலம் முழுக்க முழுக்க இணைய மயமான உலகாக இருக்கும் என்பதால் ஒலிப்பைக் கற்பதற்கு எழுத்துகளை மட்டும் தங்கியிருக்கத் தேவை இல்லை.

* “ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் மட்டும் இருப்பது கற்றுக் கொள்ள குழந்தைகளுக்கு இலகுவாக இருக்கிறது.  தமிழில் 247 எழுத்துகள் இருப்பது சிரமமாக இருக்கிறது. அதைக் குறைத்து எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்” என்று சொல்பவர்கள் மேற்கொண்டும் கிரந்த ஒலிகளுக்காக (ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ) 66 மேலதிக எழுத்துகளைக் கற்கச் செய்வது ஏன்?

* பல நாடுகள், சமயங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றியது. பல நாட்டினரும் பல சமயத்தினரும் தமிழ் பேசுகின்றனர். ஒரே பிறப்பில் நாட்டையும் சமயத்தையும் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், தாய்மொழியை மாற்றிக் கொள்ள இயலாது. எனவே, நாடுகள், சமயங்களைக் காட்டிலும் மொழி பெரிது என்று கருதாவிட்டாலும், அவற்றுக்குத் தருவதற்கு ஈடான மதிப்பை மொழிக்கும் தர வேண்டும்.

86 thoughts on “கிரந்தம்”

  1. —அதை ஏன் புசுப்பா, அரீசு என்றே எழுதி விட்டுப் போகக்கூடாது? சார்ச்சு புசு, சாக்கி சான் என்று எழுதினாலும்—

    இவ்வாறு எழுதினால் யாரை சொல்கிறீர்கள் விளங்காது என்பதுதான் என்னுடைய இயலாமை. ஹ்ம்ம்!

  2. //சார்ச்சு புசு, சாக்கி சான் என்று எழுதினாலும் அவர்கள் யாரும் நம்மோடு சண்டைக்கு வரப் போவதில்லை. அவர்களே கண்டு கொள்ளாத போது நாம் ஏன் விழுந்து விழுந்து ஒலிப்புத் துல்லியம் காட்ட வேண்டும்?//

    ஆமாம்ல 🙂 🙂

    //இவ்வாறு எழுதினால் யாரை சொல்கிறீர்கள் விளங்காது என்பதுதான் என்னுடைய இயலாமை. ஹ்ம்ம்!//

    பாலாசி என்று எழுதினால் !!!

    அது சரி, திருச்சிராப்பள்ளியை ட்ரிச்னாபோலி என்று ஆங்கிலேயர்களில் சிலர் எழுதியது ஆங்கிலேயரில் மற்றவர்களுக்கு புரிந்தது என்று நினைக்கிறேன்

    திருநெல்வேலி -> டின்னெவெல்லி

  3. //ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் மட்டும் இருப்பது கற்றுக் கொள்ள குழந்தைகளுக்கு இலகுவாக இருப்பதாகவும் தமிழில் 247 எழுத்துகள் இருப்பது சிரமமாக இருப்பதால் அதைக் குறைத்து எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் சொல்பவர்கள் மேற்கொண்டும் கிரந்த எழுத்துகளுக்காக (ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ) 66 மேலதிக எழுத்துகளைக் கற்கச் செய்வது ஏன்?//

    நானும் விடையை எதிர்பார்க்கிறேன்

  4. balaji – இது கிரந்த எழுத்துகளுக்குப் பழகியதால், முதன் முதலில் தமிழ்ப் பெயர்களைக் காணும் போது வரும் குழப்பமே. தேவையென்றால், இப்பெயர்களை முதன்முதல் எழுதும் போது தெளிவுக்காக அடைப்புக்குறிகளுக்குள் ஆங்கிலத்தில் எழுதலாம்.

    //திருச்சிராப்பள்ளியை ட்ரிச்னாபோலி என்று ஆங்கிலேயர்களில் சிலர் எழுதியது ஆங்கிலேயரில் மற்றவர்களுக்கு புரிந்தது என்று நினைக்கிறேன்//

    என்று புருனோ சொல்லுவதும் நியாயமான விடை. ஆங்கிலத்தில் Emirtaes, தமிழில் அமீரகம் என்று புரிந்து கொள்வது போல் தமிழ்வயப்படுத்தப்பட்ட பெயர்கள் நாளடைவில் இயல்பாகவும் புரிந்து கொள்வது போலவும் மாறிவிடும்.

  5. //அச்சூடகங்களைக் காட்டிலும் இணைய ஊடகத்தில் ஒலிப்பைச் சுட்ட எழுத்துகளின் தேவை குறைவு. ஒலிக்கோபுகள் மூலமே ஒலிப்பை எளிதாகச் சுட்ட முடியும். வருங்காலம் முழுக்க முழுக்க இணைய மயமான உலகாக இருக்கும் என்பதால் ஒலிப்பைக் கற்பதற்கு எழுத்துகளை மட்டும் தங்கியிருக்கத் தேவை இல்லை.//
    ஒரு சொல் கூட புரியலை. விளக்க இயலுமா?

  6. //பழகிப் போவதால் ஒரு பிழை சரியாகுமா?//
    சரி தவறு என்று சொல்ல நாம் யார். 100 வருடம் முன் உள்ள தமிழ் எப்படி என்று உங்களுக்கு தெரியுமா. கல்வெட்டுகளிலுள்ளது தமிழென்றால் நாம் ஏன் அதனைப் படிக்க முடிவதில்லை? மொழி மாருவதே அழகன்றோ?

    //தமிழில் இராமானுசன் என்று எழுதினால் மட்டும் ஏன் மரியாதைக் குறைவு என்று நினைக்கிறார்கள்?//

    //தமிழில் இராமானுசன் என்று எழுதினால் மட்டும் ஏன் மரியாதைக் குறைவு என்று நினைக்கிறார்கள்?//
    இது மரியாதைக்குறைவல்ல தவறான பயன்பாடு. ஸ்டாலின் எப்படி எழுதுவீர்கள்? பெயர்சொல் தானே இது. ‘ர’ என்பது உயிர் மெய் அதனால் ‘இ’ உபயோகம் செய்யுங்கள் என்பதை எப்படி மக்கள் இயல்பாக ஏற்கவில்லையோ அது போலத்தான். இயல்பாக இருக்கும் வரை யாரும் தானாக பயன்படுத்துவர். மிக சிறந்த எடுத்துக்காட்டு இந்த பதிவிலிருந்தே காட்டலாம் – //சப்பானிய மொழிகளில் இந்த ஒலிப்புகளுக்குத் தொடர்பே இல்லாமல் இம்மந்திரங்கள்// ஜப்பானிய மொழியா? அல்லது சப்பானியர்களின் மொழியா?

    //தமிழில் எழுதும் போது தமிழ் ஒலிகளை மட்டும் பயன்படுத்துங்கள் என்று தமிழரிடம் வேண்டுவது எவ்வாறு தமிழ்த் திணிப்பாகும்?//
    முதலில் கூறியது போல் யார் யாரை வேண்டுவது. ஏன் யூ.எஸ். இங்கிலிஸ் மற்றும் யூ.கே. இங்கிலிஸ் என்று உள்ளது? முதலில் இந்த சரியா தவறா வாதமே அடிப்படையற்றது.

    //கிரந்த ஒலிகள், எழுத்துகள் தேவைப்படுவோரைக் காட்டிலும் அவற்றின் தேவையின்றி வாழும் தமிழர் எண்ணிக்கை மிகக் கூடுதல்.//
    இந்த வரியின் உள்ளர்த்தம் கசப்பாக உள்ளது. இருப்பினும் என் மனத்தில் படுவது , இது அத்தாட்சியற்ற முடிவு. உங்கள் கணக்கேடுப்பு சென்னையல்லாத தமிழ்நாடு மட்டுமா?

    //கிரந்த எழுத்துப் பயன்பாடு என்பது திறந்த முறையில் மொழியிலாளர்களைக் கலந்துரையாடி எடுக்கப்பட்ட இறுதி முடிவு அல்ல. //
    அது தான் சொல்லிட்டாங்களே மொழி சீர்திருத்தத்தில் இனி இது கூடாது என்று. அப்போது அனைவரது கருத்தும் கேட்கப்பட்டதா?

    பதிவில் நான்கு ஐந்து இடங்களில் கவனித்தது – யாரும் கிரந்த எழுத்துக்களை ஏற்க சொல்லவில்லை. ஆனால் கிரந்த ஏற்க கூடாது என்று பரபலங்களின் அலம்பல் தான் அதிகம்.

    //எனவே, நாடுகள், சமயங்களைக் காட்டிலும் மொழி பெரிது என்று கருதாவிட்டாலும், அவற்றுக்குத் தருவதற்கு ஈடான மதிப்பை மொழிக்கும் தர வேண்டும்.//
    மொழி ஒரு மனிதனுக்கு கருவியே. இதில் மதிப்பு, தாங்கல…

    மொழியின் இலக்கணம் முறண்பாடு மூட்டை. இது தான் சரி என்றும் இது தவறு என்றால் நாம் நம்மை சிறு வட்டத்தில் அடைத்துக்கொள்ளும் சிந்தனையைத்தான் தூண்டும். ஆக இயல்பான மாற்றங்களை அறவனைப்போம். கிளை மொழிகளை உருவாக்குவோம். சுத்தத் தமிழ் அதன் தாயாக இருக்கட்டுமே!

    1. உங்களது மிகவும் வரவேற்க்கத்தக்கது.

  7. முரளி –

    //கல்வெட்டுகளிலுள்ளது தமிழென்றால் நாம் ஏன் அதனைப் படிக்க முடிவதில்லை? மொழி மாருவதே அழகன்றோ? //

    காலத்துக்கு காலம் ஒரு எழுத்தின் வடிவம் மாறுவது வழமை தான். இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். ஆனால், ஒரு மொழியில் புதிதாக கூடுதல் எழுத்துகள் வருவது இயல்பன்று. இப்படி எழுத்துகளைச் சேர்ப்பதும் விடுப்பதும் பிற மொழிகளில் மொழியியல் அறிஞர்களால் தீர ஆராயப்பட்டு எடுக்கப்படும் முடிவாகவே இருக்கிறது. கிரந்த எழுத்துகளைப் பொருத்த வரை யாரும் அப்படி ஆய்ந்து எடுத்ததாக ஆதாரத்தைக் காணோம்.

    //ஏன் யூ.எஸ். இங்கிலிஸ் மற்றும் யூ.கே. இங்கிலிஸ் என்று உள்ளது? முதலில் இந்த சரியா தவறா வாதமே அடிப்படையற்றது.//

    தமிழிலும் ஈழத்தமிழ், இந்தியத் தமிழ் என்று சொற்கள், பேச்சு வழக்குகளில் வேறு பாடு உண்டு. அதை யாரும் மறுப்பதில்லை. ஆனால், அடிப்படை எழுத்துகள் வேறு. சொல் இலக்கணம், எழுத்து இலக்கணம், பொருள் இலக்கணம் என்று தமிழ் இலக்கண வரையறை உடைய மொழி. இது போன்ற இலக்கணங்கள் ஆங்கிலத்துக்கு உண்டா? தமிழ் தளைத்து இருப்பதற்கு இந்த இலக்கண ஒழுங்கு ஒரு முக்கிய காரணம் என்பதால் அதனைச் சீராக்கும் எதனையும் இலக்கண அடிப்படையில் தவறு என்று சொல்லலாம்.

    //உங்கள் கணக்கேடுப்பு சென்னையல்லாத தமிழ்நாடு மட்டுமா?//

    சென்னைக்கு வெளியே இருக்கும் தமிழர்கள் 7, 8 மடங்கு கூட. சென்னையோடு மற்ற நகரங்களையும் உங்கள் வசதிக்குச் சேர்த்தாலும் நகரங்களிலும் கீழ்த்தட்டு, நடுத்தட்டு, மேல்த்தட்டு மக்கள் என்று பலர் இருக்கிறார்கள். கிரந்த எழுத்துகள் இவர்களில் எத்தனை பேருக்குத் தேவை?

    //யாரும் கிரந்த எழுத்துக்களை ஏற்க சொல்லவில்லை. ஆனால் கிரந்த ஏற்க கூடாது என்று பரபலங்களின் அலம்பல் தான் அதிகம்.//

    இராமனுஜத்தை இராமனுசம் என்று எழுதப்போய் கிரந்த எழுத்தை வலியுறுத்தி எவ்வளவு பெரிய உரையாடல் நடந்தது என்று இராமானுசன் பற்றிய விக்கிப்பிடீயா கட்டுரை பாருங்கள்.

    //மொழியின் இலக்கணம் முறண்பாடு மூட்டை.//

    என்ன முரண்பாடு கண்டீர்கள் என்று விளக்குவீர்களா? தமிழ் அளவுக்குத் தெளிவான எழுத்து இலக்கணம் உடைய மொழிகளைக் காட்டுவீர்களா?

  8. முரளி – //ஒரு சொல் கூட புரியலை. விளக்க இயலுமா?//

    Web media doesn’t need letters as much as print media to explain the pronunciation. Audio files can easily explain the pronunciation. As the future would rely on web media a lot, we don’t need to depend entirely on letters to explain pronunciation.

  9. Nothing is lost in writing புஷ்பா, ஹரீஷ் as that makes clear what these names are.Some people may have trobule in pronounciation.
    Languages like Hindi have more than one ka,
    ja and Sanskrit has more influence in their development than in Tamil.When Tholkappiam
    was composed we did not have contact with
    English or with French.
    Web media doesn’t need letters as much as print media to explain the pronunciation. Audio files can easily explain the pronunciation. As the future would rely on web media a lot, we don’t need to depend entirely on letters to explain pronunciation.
    But the way words are pronouced varies from
    country to country. American English is different from British English in many ways
    including pronounciation.BBC and CNN do not adhere to same style in pronounciation.English as spoke in continental europe is distinct from
    english spoken in U.K.About other countries
    like China and India the less said the better it is.
    The way Tamils and Malayalees speak English varies.So your hypothesis is not acceptable.

    Purity is language should not result in being a zealot.I think you are more bothered about
    purity and sticking to grammar rules of the
    earlier centuries than about providing a pragmatic response to issues. Sometimes
    too much respect for the past can be a hurdle in understanding and finding solutions.

  10. ‘கிரந்த எழுத்துகளைப் பொது ஊடகங்களில் பயன்படுத்துவது என்பது ஒரு சிலர் முடிவு எடுத்த, ஒருவரைப் பார்த்து இன்னொருவர் கண்மூடித்தனமாகப் பின்பற்றிய மரபு. கிரந்த எழுத்துப் பயன்பாடு என்பது திறந்த முறையில் மொழியிலாளர்களைக் கலந்துரையாடி எடுக்கப்பட்ட இறுதி முடிவு அல்ல. கிரந்த எழுத்து அறிமுகத்தில் பிற மொழி, சமய, இனத்தினர் நலமே மிகுந்துள்ளதே தவிர தமிழ், தமிழர் நலம் காக்கப்பட்டதாகத் தெரியவில்லை.’

    what have tamils or the language has lost
    by that.
    Who are these மொழியிலாளர்களைக்?
    I think you sound like a purist than like a
    pragmatist.

  11. periyar critic,

    தயவு செய்து உங்கள் கருத்துகளைத் தமிழில் பதிந்தால் இன்னும் பலருக்குப் புரியும்.

    //Nothing is lost in writing புஷ்பா, ஹரீஷ் //

    //what have tamils or the language has lost
    by that.//

    என்ன இழந்தோம் என்பதை அடுத்தடுத்த இடுகைகளில் விளக்குகிறேன்.

    //But the way words are pronounced varies from
    country to country. //

    இதைத் தானே நானும் கேட்கிறேன்? ஆங்கிலம், பிற மொழிப் பெயர்களுக்கு ஊருக்கு ஊர் ஒலிப்பும், எழுத்துக்கூட்டலும் மாறுபடுவதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், பிற மொழிப் பெயரைத் தமிழில் எழுதும் போது மட்டும் ஏன் கண்டிப்பாக ஒரே மாதிரி உச்சரிக்கவும் எழுதவும் வேண்டும்? harsih, pushpa என்பதை வேண்டுமென்றே அரீசு, புசுப்பா என்று திரித்து எழுதவில்லை. குறிப்பிடத்தக்க, தமிழ்மக்கள் வாயில் இந்தப் பெயர் இப்படித் தான் ஒலிக்க வருகிறது என்றால் அதை ஏன் அப்படியே எழுதிக் காட்டவும் கூடாது?

    //Who are these மொழியிலாளர்கள்//

    தமிழறிஞர்கள்.

  12. //When Tholkappiam
    was composed we did not have contact with
    English or with French.//

    அப்படி என்றால் ஏன் ஆங்கிலேயர்கள் மற்றும் பிரஞ்சு தேசத்தவர்கள்

    tamiழ் என்று எழுதாமல் tamil என்று எழுதுகிறார்கள்

  13. //Nothing is lost in writing புஷ்பா, ஹரீஷ் as that makes clear what these names are.//

    உங்களுக்கு இந்தி தெரியுமா

    தமிழ் என்பதை எப்படி எழுதுகிறார்கள்

    तमिल என்றா
    அல்லது
    तमिழ் என்றா

    இந்தி தெரிந்தால் நீங்களே பதில் கூறுங்கள்

    அல்லது யாரிடமாவது கேட்டு கூட கூறலாம்

    1. तमिऴ् – என்று – ऴ = ழகரத்திற்கு இணையாக புது எழுத்து

  14. //Purity is language should not result in being a zealot.//
    तमिழ் என்று எழுதாத zealotகள் குறித்து உங்கள் கருத்து என்ன. அப்படியென்றால் இந்தியாவில் zealot அல்லாதவர்கள் எத்தனை பேர் என்று கூற முடியுமா

  15. //.I think you are more bothered about
    purity and sticking to grammar rules of the
    earlier centuries than about providing a pragmatic response to issues. //

    तमिழ் என்று தான் இந்தியில் எழுதவேண்டும். இந்தியில் ஒரு எழுத்தை சேர்க்க வேண்டும். pragmatic ஆக இருக்க வேண்டும் என்று எத்தனை இந்தி அல்லது ஆங்கில இடுகைகளில் நீங்கள் மறுமொழி எழுதியுள்ளீர்கள். சில சுட்டிகளை தந்தால் அது குறித்து இந்தி மக்கள் உங்களின் zealot , pragmatic கருத்துகளுக்கு என்ன விளக்கம் அளிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும்

  16. ம்… ரவி, மொழிக்கும் எழுத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புறக்கணிப்பது வருத்தமளிக்கிறது.

    மேலும் உங்களின் முந்தைய இடுகையில் நான் கேட்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் விடையளிப்பீர்கள் என்று நினைத்தேன்.

    வடமொழி, ஆங்கிலச் சொற்களை (நிகரான தமிழ் சொற்கள் இருக்கும்போது) தவிர்க்க வேண்டும் என்பதை யாரும் எதிர்க்கப் போவதில்லை. நீங்கள் அதனோடு கிரந்தத்தை தேவையில்லாமல் குழுப்பிக்கொள்கிறீர்கள்.

    தமிழ் எழுத்து என்று நாம் சொல்லிக்கொள்ளும் எழுத்தையே தமிழர்கள் கண்டுபிடித்திருப்பார்களா என்று இன்னும் தெரியவில்லை. நடுகற்களில் எழுதப்பட்ட எழுத்தே இப்போது நாம் பயன்படுத்தும் எழுத்தின் முன்னோடி என்று நிரூபணம் ஆகும் வரை மகதத்திலிருந்து சமண மதத்தார் கொண்டு வந்த பிராமி எழுத்தே தமிழ் எழுத்தின் முன்னோடியாக கருதப்படும்.

    பார்க்கப்போனால் கிரந்தமே தமிழரின் கண்டுபிடிப்பு. அதை மலையாளிகளும், சிங்களவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்!

    மேலும் தமிழ் மொழியில் புதிய ஒலிகள் ஏன் சேர்க்கப்படக்கூடாது என்பதும் எனக்கு விளங்கவில்லை. C R செல்வகுமார்கூட தமிழில் புதிய ஒலிகளை diacritics கொண்டு எழுதலாம் என்கிறார். அதை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புதிய மெய்யெழுத்துக்களாக சேர்த்திருக்கிறார்கள் என்பதை ஏனோ ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.

    ஹாஹா உள்ளிட்ட ஒலிகளை தமிழர்கள் சாதாரணமாகப் பயனபடுத்தும் போது அதை எப்படி எழுதுவது என்ற என் கேள்விக்கும் நீங்கள் விடையளித்திருக்கலாம்.

    ன் இருக்கும் போது ண் எதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது என்று விளக்கியிருக்கலாம்.

    1, 2, 3 என்னும் அரபிய எழுத்துகள் பற்றிய எனது கேள்விக்கும் நீங்கள் விடையளித்திருக்கலாம்.

    தமிழ் பற்றி அளவுக்கு அதிகமாகவே ஆர்வம் கொண்டுள்ள நீங்கள் கிரந்தம், மணிப்பிரவளம் (வந்துண்டு 🙂 ) பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள மறுப்பது வியப்பளிக்கிறது.

    கிட்டத்தட்ட தமிழ் “கல் தோன்றி, மண் தோன்றா காலத்துக்கு முன்பே தோன்றியது” என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் நீங்கள் நெதர்லாந்து மக்கள் செய்யவில்லை, அதனால் தமிழரும் செய்யக்கூடாது என்று சொல்லுவது எதன் அடிப்படையில் என்பதும் விளங்கவில்லை!

  17. >> தமிழ் அளவுக்குத் தெளிவான எழுத்து இலக்கணம் உடைய மொழிகளைக் காட்டுவீர்களா?

    >> Audio files can easily explain the pronunciation.

    உங்களின் இந்த இரண்டு வாக்கியங்களில் உள்ள முரண்பாடு உங்களுக்கு விளங்குகிறதா? தமிழில் எழுதியதயே படிக்கவேண்டும், அவ்வாறு இல்லாதபோது குறுக்கம் உள்ளிட்ட இலக்கண விதிகளுக்கு உட்பட்டு ஒலிக்கவேண்டும். எதையாவது எழுதிவிட்டு ஒலிப்பை ஒலித்துண்டுகள் கொண்டு தெரிவிக்கலாம் என்பது விந்தையான அணுகுமுறை.

    கிரந்த எழுத்துகள் சேர்த்தபோது பெரிய ஆராய்ச்சி செய்யப்படவில்லையாம்?!!! தமிழ் எழுத்துகள் கொண்டு சமஸ்கிரதம் எழுதியவர்களுக்கு மொழியியல் தெரியவில்லையா? யப்பா ….

    18 மெய்களோடு புதிய மெய்கள் சேர்த்தால் குறைபட்டுப்போகும் தமிழ் இலக்கண விதிகளை நீங்கள் தெரிவிக்கலாமே? அத்திசூடி பாட்டா?

    சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துகள் உசத்தி. ஆனால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சேர்த்த எழுத்துகள் தாழ்வு என்பது என்ன வாதமோ? இல்லை “தமிழ் ‘இறைவன்’ சிவன் அகத்தியர் வழியாய் நமக்கு அருளியது” என்பது மாதிரியான நகைச்சுவைகளையும் நீங்கள் நம்ப ஆரம்பித்துவிட்டீர்களா. தமிழ் இறைவன் கொடுத்தது என்கிற அபத்த வாதம்தான் தமிழில் புதிய ஒலிகள், எழுத்துகள் சேர்ப்பதை எதிர்க்க தக்க சாக்காக இருக்கமுடியும்!!!

  18. balaji, உங்கள் கேள்விகள் வருவதற்குப் பல நாள் முன்பே கிரந்தம் குறித்து அவ்வப்போது எழும் எண்ணங்களை இங்கு எழுதி வைத்திருந்தேன். அதையே இங்கு மீள இட்டிருக்கிறேன். கிரந்தம் குறித்து இன்னும் ஒன்றிரண்டு இடுகைகளாவது எழுத வேண்டி உள்ளது. கண்டிப்பாக உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்வேன்.

    //மொழிக்கும் எழுத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புறக்கணிப்பது வருத்தமளிக்கிறது//

    மொழியும் அதன் ஒலிகளும் வரையறுக்கப்படும் போதே அதன் எழுத்துகளும் வரையறுக்கப்பட்டு விடுகின்றனவே? மொழி வேறு. எழுத்து வேறு அல்ல. எந்த ஒரு மொழியும் தன் மொழியின் ஒலிகளை எழுதிக் காட்டத் தான் எழுத்துகளை உருவாக்கும். பிற மொழிகளின் ஒலிகளை எழுதிக் காட்டுவதற்காக அல்ல.

    தமிழ் எழுத்து வடிவம் எங்கிருந்து தோன்றியது என்பது பிரச்சினை இல்லை. 70களில் லை, ணா வின் எழுத்து வடிவம் வேறு. தற்போது வேறு. இது போல் காலத்துக்கு காலம் எழுத்து வடிவம் மாறி வருகிறது. ஆனால், ஒரு மொழியின் ஒலிகளும் அதை எழுதிக் காட்டும் எழுத்துகளின் எண்ணிக்கையும் வரையறுக்கப்பட்டவை என்பதே என் புரிதல். நான் அறிந்தவரை தேவையில்லாத எழுத்துகள், ஒலிகளை நீக்கும் மொழிகளைக் கண்டிருக்கிறேனே தவிர, சேர்த்துக் கொண்ட மொழியைக் காணோம்.

    பிற மொழி ஒலிகளை எழுதிக் காட்டுவதற்காக புதிய எழுத்துகளைச் சேர்த்துக் கொண்ட ஒரு பெரிய மொழியையாவது காட்டுங்களேன்? IPA குறியீடுகள் வேறு. ஆங்கில எழுத்துகளின் எண்ணிக்கை என்றுமே 26ஆகத் தான் இருக்கும். 26 ஆங்கில எழுத்துகளைக் கொண்டு பெயரை வளைத்து நெளித்து எழுதிவிட்டு அடைப்புக்குறிக்குள் IPA விளக்கம், ஒலிக்கோப்புகள் தருவது போல் தமிழுக்கும் தரச் சொல்கிறேன்.

    புசுப்பா என்று எழுதி புஷ்பா என்று வாசிக்கச் சொல்லவில்லை. அது தமிழ்க் கொலை. புசுப்பா என்று மக்கள் பேச்சில் புழங்குவதால் புசுப்பா என்றே எழுதலாம் என்று சொல்கிறேன். புசுப்பா என்று எழுதியதை புசுப்பா என்றே வாசிக்கலாம் என்கிறேன். மூல மொழியின் உச்சரிப்பு தெரிந்தே ஆக வேண்டும் என்பவர்களுக்காக அடைப்புக்குறிக்குள் ஒலிக்கோப்புகள் தரலாம். இதில் எங்கே முரண்? ஆங்கில விக்கிப்பீடியாவில் சீன, அரேபிய பெயர்களுக்கு இது போல் செய்திருப்பதைக் காணலாம். thamil, thooththukkudi போன்ற பெயர்கள் ஆங்கிலேயர்கள் வாயில் நுழைவதற்காக tamil, tuticorin என்று ஒரு ஆங்கிலப் பெயர் இருப்பது போல் தமிழர்கள் (நகரத்தில் இருப்பவர்கள் மட்டுமே தமிழர்கள் இல்லை!) வாயில் நுழைவதற்காக ஒரு தமிழ்ப் பெயர் ஏன் இருக்கக்கூடாது? எப்பாடு பட்டேனும் மூல மொழி ஒலிப்பை ஒலிக்க வேண்டும், எழுதிக் காட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

    //கிட்டத்தட்ட தமிழ் “கல் தோன்றி, மண் தோன்றா காலத்துக்கு முன்பே தோன்றியது” என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் நீங்கள் நெதர்லாந்து மக்கள் செய்யவில்லை, அதனால் தமிழரும் செய்யக்கூடாது என்று சொல்லுவது எதன் அடிப்படையில் என்பதும் விளங்கவில்லை!//

    நேற்று வந்த மொழிகளே தங்கள் இயல்பைக் காக்க முற்படும் போது பழமை வாய்ந்த மொழிகள் எவ்வளவு மெனக்கெட வேண்டும் என்று நாம் உணர வேண்டாமா?

    ஆங்கிலேயன், டச்சுக்காரன் செய்யவில்லையென்றால் நாமும் ஏன் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது ஊரெல்லாம் நிமிர்ந்து நிற்கிறது என்பதற்காக நாம் ஏன் குனிந்து கூழைக்கும்பிடு போடக்கூடாது என்பது போல் இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் மொழியை எவ்வாறு காக்கிறார்கள் என்பதை அறியும் போது தானே, நாம் செய்யும் தவறுகள் புலப்படுகின்றன?

    //கிரந்த எழுத்துகள் சேர்த்தபோது பெரிய ஆராய்ச்சி செய்யப்படவில்லையாம்?!!! தமிழ் எழுத்துகள் கொண்டு சமஸ்கிரதம் எழுதியவர்களுக்கு மொழியியல் தெரியவில்லையா? யப்பா ….//

    தமிழ்ப் பாடல்களை சமசுகிருதம், பிற இந்திய மொழிகளில் எழுதிக் காட்டி இருக்கிறீர்களா? அப்படி எழுதிய தங்கள் “மொழியிலாளர்கள்” தமிழ் ஒலிகளை சரியாக எழுதிக் காட்டுவதற்காக எத்தனை புது எழுத்துகளை தங்கள் நெடுங்கணக்கில் சேர்த்தார்கள் என்று சொல்வீர்களா? மற்ற மொழிகள் மாற்றக் கூடாத அளவுக்கு “உசத்தி”, நினைத்தபடி மாற்றுவதற்கு தமிழ் மட்டும் கிள்ளுக்கீரையா?

    //தமிழ் இறைவன் கொடுத்தது என்கிற அபத்த வாதம்தான் தமிழில் புதிய ஒலிகள், எழுத்துகள் சேர்ப்பதை எதிர்க்க தக்க சாக்காக இருக்கமுடியும்!!//

    தேவையில்லாமல் திசை திருப்புகிறீர்கள். எனக்கு தெய்வ நம்பிக்கையும் இல்லை. தமிழ் தெய்வம் தந்தது என்று நினைக்கவும் இல்லை.

    உண்மையில், “மாற்றி ஒலித்தால் மந்திரம் பலிக்காது. மாங்காய் பழுக்காது” என்று தமிழில் கிரந்த எழுத்துகளைப் புகுத்தியவர்கள் வேண்டுமானால் தெய்வ குற்றத்துக்கு அஞ்சிச் சேர்த்திருக்கலாம் 🙂

    கடைக்குப் போய் அரை கிலோ கத்தரிக்காய், அப்புறம் கொஞ்சம் மிளகாய், பூண்டு என்று சமையலுக்குத் தேவைப்படுவதை கூடையில் அள்ளிப்போட்டு வருவது போல் பழந்தமிழர்கள் ஒலிகள், எழுத்துகளை masala mixஆகச் சேர்க்கவில்லை. தமிழ் இலக்கணத்தின் ஒவ்வொரு விதியும் தன்னார்ந்த அறிவியல் ஒழுங்கு கொண்டது. அத்தகைய ஒழுங்கும் தேவையும் “கிரந்தச் சீர்திருத்தத்தில் காணவில்லை”

  19. கிரந்தம் பற்றிய உங்களுடைய பிற இடுகைகளுக்காகக் காத்திருக்கிறேன்!

    >> ஆங்கில எழுத்துகளின் எண்ணிக்கை என்றுமே 26ஆகத் தான் இருக்கும்.

    ஆங்கிலம் எழுதப்பயன்படும் 26 லத்தின் எழுத்துகளும்கூட கிரேக்க எழுத்துகளிலிருந்து வந்தவையே. அந்த 26இல் W (double u = uu) உள்ளிட்ட எழுத்துகள் பின்னர் சேர்க்கப்பட்டவையே.

    உலகின் பெரும்பாலான மொழிகளில் அ – a, இ – e, ஐ- i, ஒ – o, உ – u உள்ளிட்ட உயிர்கள் பொதுவானதாகவே இருக்கும். மெய்கள் சேர்ப்பது மொழிகளைப் பொருத்தது.

    >> நகரத்தில் இருப்பவர்கள் மட்டுமே தமிழர்கள் இல்லை!

    என்னால் கிரைஸ்டாப் கெஸ்லாவ்ஸ்கி என்று ஒலிக்க முடிகிறதென்றால் தமிழ் நாட்டிலுள்ள ‘கிராமத்தவர்’களால் ஒலிக்கமுடியாதா? பழக்கமின்மை ஒரு பிழையா? அதே கிராமத்தார் தேவைப்பட்டால் புதிய ஒலிகளைக் கற்றுக்கொள்வதற்கு தயங்கவோ, சிரமப்படவோ போவதில்லை. தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் தமிழக கிராமத்தவர்களை நீங்கள் பார்த்ததேயில்லையா? தமிழர்களை தமிழொலி தவிர்த்த எதையும் ஒலிக்கத் தெரியாதவர்கள் என்று சித்தரிப்பது அருவறுக்கத்தக்கது.

    >> மொழியும் அதன் ஒலிகளும் வரையறுக்கப்படும் போதே அதன் எழுத்துகளும் வரையறுக்கப்பட்டு விடுகின்றனவே?

    மிகவும் தவறான வாதம். உலகிலுள்ள பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்துகளே இல்லை. தமிழ் உள்பட பல மொழிகள் பிறரிடமிருந்தே எழுத்துகளைப் பெற்றிருக்கின்றன. எழுத்துமுறை தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொழிகள் தோன்றிவிட்டன. சித்திர எழுத்துகள் (hieroglyphs) தோன்றி பின்னர் அவை standardize ஆகும் போது தான் எழுத்து பிறக்கிறது.

    எழுத்துகள் கண்டுபிடிப்பது சாதாரணமான காரியமில்லை. சுமார் 2500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதத்தெரிந்த சமூகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த எண்ணிக்கையில் தமிழர் இருந்தனரா என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

    >> பிற மொழி ஒலிகளை எழுதிக் காட்டுவதற்காக புதிய எழுத்துகளைச் சேர்த்துக் கொண்ட ஒரு பெரிய மொழியையாவது காட்டுங்களேன்?

    அரபு மொழி உள்பட பல உதாரணங்கள் காட்ட முடியும்.

    >> தமிழ்ப் பாடல்களை சமசுகிருதம், பிற இந்திய மொழிகளில் எழுதிக் காட்டி இருக்கிறீர்களா?

    இது என்ன தாழ்வு மனப்பான்மையோ? தமிழை மற்றவர்கள் படிக்கவில்லை என்பதற்காக நாம் யாரை கோபித்துக்கொள்ள முடியும்?

    வேண்டுமானால் தமிழர் கண்டுபிடித்த கிரந்தம் சிங்களம், மலையாளம், Khmer, Javanese, Mon உள்ளிட்ட எழுத்துகளை பாதித்தது என்று பெருமைபட்டுக் கொள்ளலாம்.

    >> தமிழ் இலக்கணத்தின் ஒவ்வொரு விதியும் தன்னார்ந்த அறிவியல் ஒழுங்கு கொண்டது. அத்தகைய ஒழுங்கும் தேவையும் “கிரந்தச் சீர்திருத்தத்தில் காணவில்லை”

    18 மெய்களோடு இன்னும் பிற மெய்கள் சேர்த்தால் என்ன குறை என்று நீங்கள்தான் விளக்கவேண்டும். மற்றவர் செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது நல்ல சப்பைக்கட்டு.

    கிரந்த எழுத்துகள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. தமிழர்களுக்கு புதிய ஒலிகளும் அவைகளுக்குத் தேவையான எழுத்துகளும் தேவைப்படும்போது diacritics போன்று மீண்டும் ஆராய்ச்சியில் இறங்காமல் கிரந்த எழுத்துகளை பயன்படுத்திக்கொள்வது மிகவும் இயல்பானதே.

    பேசுவதற்கு கடினமாக இருப்பதால் தமிழன் ஏற்கனவே ஆங்கிலம் கலந்து பேசிக்கொண்டிருக்கிறான். இந்த அழகில் கிரந்த எழுத்து புறக்கணிப்பு, தனித்தமிழ் இயக்கம் போன்ற தேவையற்ற பிடிவாதங்கள் ஒரு நாள் தமிழ் எழுத்துகள் ஒழிந்து 26 ஆங்கில எழுத்துகள் கொண்டு தமிழை எழத வழிசெய்யப்போகின்றன.

  20. //ஆங்கிலம் எழுதப்பயன்படும் 26 லத்தின் எழுத்துகளும்கூட கிரேக்க எழுத்துகளிலிருந்து வந்தவையே. அந்த 26இல் W (double u = uu) உள்ளிட்ட எழுத்துகள் பின்னர் சேர்க்கப்பட்டவையே.//

    ஆங்கிலம் போல் தமிழ் எதிலிருந்தும் வந்த மொழி அல்லவே? மூல மொழி அல்லவா? தமிழ் போன்ற செம்மொழிகளில் இப்படி புது எழுத்துகள் சேர்க்கிறார்களா? அம்மொழிகளில் எழுத்திலக்கணம் உண்டா?

    //மெய்கள் சேர்ப்பது மொழிகளைப் பொருத்தது.//

    அது தான் தமிழைப் பொருத்தவரை 18 மெய்கள் என்று வரையறுத்து தெளிவாக இலக்கணம் எழுதி வைத்திருக்கிறார்களே? பிற மொழி ஒலிகள், சொற்களை எப்படித் தமிழ் வயப்படுத்தி எழுத வேண்டும் என்பதற்கும் இலக்கண வழிகாட்டுதல் இருக்கின்றதே?

    //என்னால் கிரைஸ்டாப் கெஸ்லாவ்ஸ்கி என்று ஒலிக்க முடிகிறதென்றால் தமிழ் நாட்டிலுள்ள ‘கிராமத்தவர்’களால் ஒலிக்கமுடியாதா? பழக்கமின்மை ஒரு பிழையா?//

    சில மொழிகளில் r, j போன்ற ஒலிகள், எழுத்தே கிடையாது. அது என்ன அவர்களால் ஒலிக்க இயலாது என்றா விட்டார்கள்? அவர்கள் மொழியில் இல்லை. அதனால் ஒலிக்கவும் தேவை இல்லை என்று விட்டுவிட்டார்கள். பிற மொழி ஒலியா தன் மொழி இயல்பா என்று வருகையில் தன் மொழி இயல்புக்கு முன்னுரிமை கொடுப்பதே நலம்.

    குறிப்பிடத்தக்க எண்ணிக்கை மக்களால் ஒலிக்க முடியவில்லை என்பது முதல் பிரச்சினை. அப்படி ஒலிக்க இயன்றாலும் கண்டிப்பாக அப்படித் தான் ஒலிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. roja – ரோசா, raja – ராசா எல்லாமே இரு வழக்கிலும் பொதுப் புழக்கத்தில் உள்ளவையே. இரண்டு வழக்கமும் இருக்கையில் தமிழ் வழக்கத்துக்கு முன்னுரிமை கொடுப்பதில் தவறில்லை.

    முடியுமா முடியாதா என்பதை விட தேவை இல்லை என்பதே சொல்ல வருவது. ஆங்கிலப் பெயர் china. தமிழ்ப் பெயர் சீனா என்று இருப்பது போல் கிரந்தம் தாங்கிய சொற்களுக்கும் ஏன் ஒரு தமிழ்ப் பெயர் இருக்கக்கூடாது?

    //தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் தமிழக கிராமத்தவர்களை நீங்கள் பார்த்ததேயில்லையா?//

    இவர்கள் மொத்த தமிழ் மக்கள் தொகையில் எத்தனை வீதம்? எல்லையோரப் பகுதிகளில் இருப்பவர்கள், மேற்கண்ட மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு இது எளிதே. என்னால் raja என்று ஒலிக்கத் தெரியாமல் ராசா என்று எழுதவில்லை. தமிழில் எழுதும் போதும் ஒலிக்கும் போதும் ராசா என்பதே தமிழின் இயல்புக்கு இயைவதாய் மதிப்பதாய் இலகுவாய் இருக்கும் என்பதாலேயே. இழவு வீட்டில் போய் ஒப்பாரி கேட்டிருக்கிறீர்களா? “என்னைப் பார்த்த ராசா” என்று தான் அழுவார்கள். “என்னைப் பெத்த ராஜா” என்று அழுபவர்களைக் கண்டதில்லை.

    //தமிழர்களை தமிழொலி தவிர்த்த எதையும் ஒலிக்கத் தெரியாதவர்கள் என்று சித்தரிப்பது அருவறுக்கத்தக்கது.//

    உண்மையைச் சொல்வதில் என்ன அருவருப்பு? ஒருவருக்கு கிரந்தம் ஒலிக்க வராவிட்டாலே “இவன் நாட்டுப்புறத்தான், நாகரிகம் தெரியாதவன், படிக்காதவன்” என்று முத்திரை குத்தும் போக்கு இருக்கா இல்லையா? இது தான் அருவருப்பானது. தமிழகத்தில் எத்தனை பேருக்கு (நான் உட்பட) ல, ள, ழ, ண, ந, ன, ற, ர வேறுபாடுகளைத் தெளிவாக உச்சரிக்க வருகிறது? தாய் மொழியையே ஒழுங்காக உச்சரிக்காமல் இருக்கிறோம் என்பதை விடவா பிற மொழி ஒலிகளை ஒழுங்காக ஒலிக்காதது ஒரு பிரச்சினை?

    //

    >>மொழியும் அதன் ஒலிகளும் வரையறுக்கப்படும் போதே அதன் எழுத்துகளும் வரையறுக்கப்பட்டு விடுகின்றனவே?<< மிகவும் தவறான வாதம். உலகிலுள்ள பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்துகளே இல்லை. தமிழ் உள்பட பல மொழிகள் பிறரிடமிருந்தே எழுத்துகளைப் பெற்றிருக்கின்றன. // தங்கள் வாதம் தான் தவறு என்று கருதுகிறேன். தமிழில் எழுத்து, பொருள், சொல் இலக்கணம் என்று தனித்தனியாக இல்லையா? தமிழ் எழுத்துகள் அ முதல் ன வரையானவை, அவற்றின் வகைப்பாடு என்ன, அவற்றை ஒலிக்கும் முறை என்ன என்றெல்லாம் தெளிவாக வரையறுக்கவில்லையா? எழுத்து என்பது இப்படி வரையறுக்கப்பட்ட ஒலிகளை எழுதிக் காட்டும் கருவி தானே? எல்லா மொழிகளிலும் முதலில் ஒலி தோன்றிய பிறகே எழுத்துகள் தோன்றின. அந்த எழுத்து வடிவங்கள் சொந்தமாக இருக்கலாம், கடன்பெற்றும் இருக்கலாம். அண்மைக் காலத்தில் தான் எழுத்து வடிவமும் வந்திருக்கலாம். நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சட்டை போடுவது காலத்துக்கு ஏற்ப எழுத்து வடிவங்களும் மாறலாம். ஒரு காலத்தில் நாம் சட்டை போடாமல் தான் இருந்தோம். ஆனால், நாம் பிறந்த கணமே நாம் யார் என்று வரையறுக்கப்பட்டு விடுகிறோம். சட்டையை மாத்துவதற்குப் பதில் ஆளையே மாத்தி குடும்பத்தைக் குழப்பக்கூடாது 🙂 மொழியின் ஒலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலக்கியம் வளர்ந்து இலக்கணம் எழுதும் காலகட்டத்திலேயே அதன் இயல்பும் வரையறை செய்யப்பட்டு விடுகிறது. அதற்குப் பிறகு எழுத்தைத் தானே திணிக்கிறோம் என்ற பெயரில் புது புது எழுத்துகள் ஊடாக புதுப்புது ஒலிகள், மெய்கள் என்று சேர்ப்பது மொழியைச் சிதைப்பதே அன்றி வளர்ப்பது ஆகாது. ஏதோ கிரந்தம் என்பது இன்றைய தேவை, கண்டுபிடிப்பு போல ஏன் சொல்ல வேண்டும்? தொல்காப்பியர் காலத்திலும் பிற சொல், ஒலிகள் குறித்து அறிந்து தானே அவற்றை எப்படித் தன்வயப்படுத்த வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார்? தற்கால "முற்போக்கு மொழியிலாளர்களை" விட தொல்காப்பியர் மேல் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. //இது என்ன தாழ்வு மனப்பான்மையோ? தமிழை மற்றவர்கள் படிக்கவில்லை என்பதற்காக நாம் யாரை கோபித்துக்கொள்ள முடியும்?// இது தாழ்வு மனப்பான்மை இல்லை தன்மானம் / விழிப்புணர்வு. எப்படியாவது பிற மொழி ஒலிகளைப் பிசகாமல் ஒலித்து விட வேண்டும் என்று எண்ணுவது தான் தாழ்வு மனப்பான்மை. பிற மொழியினர் தமிழ் இலக்கியங்களை அறிவதற்காக தங்கள் மொழியில் எழுதிப் படித்தாலும் ஒரு போதும் அதற்காகப் புது எழுத்துகளை உருவாக்கிக் கொள்ள மாட்டார்கள். நாம் தான் வருகிற மொழிகளுக்கு எல்லாம் "சலாம்" போடுகிறோம். //18 மெய்களோடு இன்னும் பிற மெய்கள் சேர்த்தால் என்ன குறை என்று நீங்கள்தான் விளக்கவேண்டும்.// நாம் ஒரு வாலும் சிறகும் உடம்பில் பொருத்திக் கொண்டால் என்ன குறை என்று நீங்கள் விளக்கலாமே? //தமிழர்களுக்கு புதிய ஒலிகளும் அவைகளுக்குத் தேவையான எழுத்துகளும் தேவைப்படும்போது diacritics போன்று மீண்டும் ஆராய்ச்சியில் இறங்காமல் கிரந்த எழுத்துகளை பயன்படுத்திக்கொள்வது மிகவும் இயல்பானதே.// diactrics பயன்படுத்துவதிலும் எனக்குத் தயக்கங்கள் உண்டு. அதற்கு தனி இடுகை எழுதுவேன் (இப்படியே எழுதுறேன்..எழுதுறேன்னு முன்னோட்டம் விட்டுக்கிட்டே இருக்கேன் !! 🙂 )

  21. ரவி,

    நீங்கள் எனக்கு அளித்துள்ள பதில்களை நீங்களே மீண்டும் படித்தால், நீங்கள் செய்து கொண்டிருப்பது விதண்டா வாதம் என்பது விளங்கும்.

    >> தொல்காப்பியர் காலத்திலும் பிற சொல், ஒலிகள் குறித்து அறிந்து தானே அவற்றை எப்படித் தன்வயப்படுத்த வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார்?

    தொல்காப்பியர் காலத்தில் தமிழருக்கு பழக்கமாயிருந்த ஒலிகளையும், எழுத்துகளையும் குறித்து அவர் இலக்கணம் எழுதியிருக்கிறார். தொல்காப்பியர் தமிழை கண்டுபிடித்தவரல்ல. பிற்காலத்தில் தமிழர் சேர்த்துக்கொண்ட ஒலிகளுக்கும் எழுத்துகளுக்கும் பின்னர் வந்தவர்கள்தாம் இலக்கணம் எழுதவேண்டும். எழுதியும் இருக்கிறார்கள்.

    பல மாதங்களாகவே நீங்கள் வைத்துவரும் ஒரே வாதம் எங்கள் ஊர் கிராமத்தவருக்கு உச்சரிக்கத் தகுந்ததே தமிழாகமுடியும் என்பது தான்.

    இத்தனைக்கும் யாரும் அவர்களை கிரந்த எழுத்துகள் பயன்படுத்தச் சொல்லவில்லை. பிறமொழிகள் தெரிந்தவர்கள் அம்மொழி சொற்களை (குறிப்பாக பெயர்களை) தமிழில் எழுத கிரந்தம் பயன்படுத்தலாம் என்பதே விவாதம். ஜலம், ஹஸ்தம், ஜாஸ்தி போன்ற தேவையற்ற பிறமொழி கலப்பை யாரும் ஊக்குவிக்கச் சொல்லவில்லை.

    ஆங்கிலமும், வடமொழியும் தெரிந்தவர்கள், சென்னை உள்ளிட்ட நகரவாசிகள், இப்போது எல்லையோர மாவட்டங்களில் வாழ்பவர்கள், நான் மலேசியா, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஆந்நாட்டு மொழிகளை அறிந்திருப்பதை சுற்றிக்காட்டினால் அவர்களையும் என்று எத்தனை தமிழர்களைதான் ‘அரைகுறை’ தமிழர்களாக ஆக்குவீர்களோ தெரியவில்லை!

    நான் மொழியியல் அடிப்படையில் கேட்கும் எந்த கேள்விக்கும் நீங்கள் பதில் அளிப்பதில்லை. சீக்கிரம் உங்களுடைய மற்ற பதிவுகளையும் எழுதுங்களேன்!!

    “ஒரே ஒரு உதாரணம் கொடு” என்று சல்லியடித்துக் கொண்டிருந்தீர்கள். நான் அரபு மொழி, ஆங்கிலம் என்று அடுக்கினால் அவை செம்மொழி அல்ல என்று கோல் போஸ்டை நகர்த்துகிறீர்கள்.

    நான் w உள்ளிட்ட எழுத்துகள் சேர்க்கப்பட்டது என்று சொன்னது லத்தீன் என்னும் செம்மொழியில்தான். ஆதி லத்தினில் 21 எழுத்துகளே இருந்தன. அது ஜெர்மானிய மற்றும் நோர்டிக் மொழிகளோடு உறவாடி புதிய எழுத்துகளைப் பெற்றது.

    செம்மொழிகளில் தமிழ் தவிர்த்த மற்றவை வழக்கொழிந்து போனதுபோல் தமிழும் ஆவதற்கு உங்களுடைய கிரந்த எதிர்ப்பு நிச்சயம் உதவும். முயன்று பாருங்கள்!

  22. //தொல்காப்பியர் காலத்தில் தமிழருக்கு பழக்கமாயிருந்த ஒலிகளையும், எழுத்துகளையும் குறித்து அவர் இலக்கணம் எழுதியிருக்கிறார்.//

    நீங்கள் சொல்வது படி பார்த்தால் தொல்காப்பியர் காலத்தில் தமிழனுக்கு கிரந்த ஒலிகள், வட ஒலிகள் அறிமுகமாக வில்லையா? ஒலிகளே அறிமுகமாகி இருக்காவிட்டாலும் பிறர் ஏன் திசைச்சொல், வட சொல் குறித்து இலக்கணம் எழுத வேண்டும்? வராத நோய்க்கு மருந்து எழுதிக் கொடுப்பாரா எந்த மருத்துவரும்?

    //பிறமொழிகள் தெரிந்தவர்கள் அம்மொழி சொற்களை (குறிப்பாக பெயர்களை) தமிழில் எழுத கிரந்தம் பயன்படுத்தலாம் என்பதே விவாதம்//

    நீங்கள் எழுதுவது பிரச்சினை இல்லை. மாற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்தப் போவதும் அது பலன் அளிக்கப் போவதும் இல்லை. ஆனால், ஏதாவது ஒரு இடத்தில் தமிழில் எழுத முற்பட்டாலும், வரும் எதிர்ப்புகளே எரிச்சல் ! கிரந்தம் கலந்து எழுத உங்களுக்கு எவ்வளவு நியாயங்கள் உண்டோ, அதைக் காட்டிலும் கிரந்தம் கழித்து எழுதவும் நியாயங்கள் உண்டு.

    கிரந்தத்தைச் சேர்த்தால் என்ன குறை என்று கேட்டிருந்தீர்கள். கிரந்தத்தைச் சேர்க்காவிட்டால் என்ன குறை என்றும் நினைக்கலாமே? ஒரே குறை பிற மொழி ஒலிகளைத் துல்லியமாக எழுத இயலாது. அது எனக்கு பெரிய பிரச்சினையாகத் தோன்றவில்லை. எந்த ஒரு மொழியாலும் உலகின் பிற எல்லா மொழி ஒலிகளையும் எழுத இயலாது. தேவையும் இல்லை. நாளை சீனம் உலகம் முழுக்கப் பரவினால் அதை எழுதிக் காட்ட எத்தனை தமிழ் எழுத்துகளை உருவாக்க இயலும்?

    //செம்மொழிகளில் தமிழ் தவிர்த்த மற்றவை வழக்கொழிந்து போனதுபோல் தமிழும் ஆவதற்கு உங்களுடைய கிரந்த எதிர்ப்பு நிச்சயம் உதவும். முயன்று பாருங்கள்!//

    கிரந்தம் தவிர்த்தும் அழகாய் அற்புதமாய் வாழும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. 2000+ ஆண்டுகளாகவும் தமிழ் அப்படியே வாழ்ந்து இருக்கிறது. போன நூற்றாண்டில் நடந்த தனித்தமிழ் இயக்கத்தால் மாண்டதாய் காணவில்லை. மீண்டே வந்திருக்கிறது. தற்போதைய தமிழின் தொய்வு நிலைக்கு அரசியல், சமூக காரணங்களே முக்கியமே ஒழிய, மொழியின் இயல்பு அல்ல.

    கிரந்தம், புது ஒலிகளைச் சேர்க்காவிட்டால் தமிழ் அழியும் என்று சொல்லும் நீங்கள் இந்த ஒலிகள், எழுத்துகளை இயல்பாகவே கொண்டுள்ள வட மொழி ஏன் அழிந்தது என விளக்குவீர்களா? நீங்கள் சொல்வது போல் புதிய எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டாலும் இலத்தீனம் ஏன் அழிந்தது? ஏற்கனவே இவ்வொலிகளை உடைய மொழிகளே அழிந்து போய் இருக்கையில் என்ன நம்பிக்கையில் இந்த ஒலிகளைச் சேர்த்தால் தமிழ் தப்பிப் பிழைத்து விடும் என்று எண்ணுவது?

    புதுப் புது ஒலிகளையும் எழுத்துகளையும் சொற்களையும் சேர்ப்பதால் தான் மொழி வாழும் என்றால் செயற்கை மொழியான esperanto தான் உலக மொழியாக இருக்க வேண்டும்.

    ஒரு செம்மொழி அழிவதற்கு எண்ணற்ற காரணங்கள் உள. அதை எல்லாம் விடுத்து கிரந்தம் நீங்கினால் தமிழ் அழியும் என்று சொல்வது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் உள்ளது. சாபம், மிரட்டல் போன்றும் தோன்றுகிறது !!!

    “காலம் பதில் சொல்லும்” என்று பல இடங்களில் உள்ள உரையாடல்களுக்குச் சொல்லி வருகிறேன் 🙂 இதற்கும் அப்படித் தான் சொல்ல வேண்டும்.

  23. //எந்த ஒரு மொழியும் தன் மொழியின் ஒலிகளை எழுதிக் காட்டத் தான் எழுத்துகளை உருவாக்கும். பிற மொழிகளின் ஒலிகளை எழுதிக் காட்டுவதற்காக அல்ல.//

    இதைத்தானே நாங்கள் திரும்ப திரும்ப கூறுகிறோம்

    //செம்மொழிகளில் தமிழ் தவிர்த்த மற்றவை வழக்கொழிந்து போனதுபோல் தமிழும் ஆவதற்கு உங்களுடைய கிரந்த எதிர்ப்பு நிச்சயம் உதவும். முயன்று பாருங்கள்!//

    உங்களுக்கு இந்தி தெரியுமா

    தமிழ் என்பதை எப்படி எழுதுகிறார்கள்

    तमिल என்றா
    அல்லது
    तमिழ் என்றா

    இந்தி தெரிந்தால் நீங்களே பதில் கூறுங்கள்

    அல்லது யாரிடமாவது கேட்டு கூட கூறலாம்

    நீங்கள் கூறுவதை பார்த்தால் இந்தி அழிவை நோக்கி போகிறது 🙂 🙂

    ஏன்

    ஆங்கிலம் கூட அழிவை நோக்கித்தான் போகிறது ஏனென்றால் tamiழ் என்று எழுதாமல் tamil என்று எழுதுகிறார்கள்

    🙂 🙂

  24. ரவி,

    மொழியல் குறித்த, அறிவிப்பூர்வமான எந்த கேள்விக்கும் பதில் அளிப்பதில்லை. உணர்வுப்பூர்வமான பதில்களே அளிப்பது என்று கொள்கை வைத்திருக்கிறீர்கள். நடத்துங்க!

    >> நீங்கள் சொல்வது படி பார்த்தால் தொல்காப்பியர் காலத்தில் தமிழனுக்கு கிரந்த ஒலிகள், வட ஒலிகள் அறிமுகமாக வில்லையா?

    தொல்காப்பியர் காலத்தில் என்ன, மணிமேகலை எழுதிய காலத்திலேகூட வேதமத்தாரும், சமணரும் ஊருக்கு வெளியதான் வசித்துக்கொண்டிருந்தர்கள். அதனால் பின்னர் நடந்த அளவுக்கு தமிழில் பிறமொழித் தாக்கத்தை தொல்காப்பியர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இத்தனைக்கும் அவர் முன்னெச்சரிக்கையாகவே திசைச்சொல்களையும் சேர்த்தே இலக்கணம் எழுதியிருக்கிறார்.

    >> இந்த ஒலிகள், எழுத்துகளை இயல்பாகவே கொண்டுள்ள வட மொழி ஏன் அழிந்தது என விளக்குவீர்களா?

    மொழியியல் குறித்து துளியாவது தெரிந்த எவரும் சமசுகிரதம் எப்போதுமே பெரிய பேச்சுமொழியாய் இருந்தத்தில்லை என்பதை அறிந்திருப்பார்கள். அது இந்தியாவில் எப்போதுமே இலக்கிய (literary) மொழியாகத் தான் இருந்தது. பிராகிரதம் (prakrit), ஹிந்துஸ்தானி, இந்தி என்று மக்கள் பயன்படுத்திய பேச்சுமொழிகள் வேறாகவே இருந்திருக்கின்றன.

    அவ்ஸ்தன் (avestan), old persion மற்றும் சமசுகிரதம் ஆகிய மூன்றும் மத்திய ஆசியாவிலிருந்த நாடோடிகளிடம் மட்டுமே பேச்சு மொழியாய் இருந்தது. நாடோடிகளின் மொழி வழக்கொழிந்து போனதில் வியப்பில்லை. சமசுகிரதம் இன்றும் பிழைத்திருப்பதற்குக் காரணங்களில் சாரதா (sarada – kashmir), தேவநகரி (north india), கிரந்தம் (south india) என்று பல எழுத்துமுறைகளை சமசுகிரதம் ஏற்றுக்கொண்டதே முதன்மையான காரணம். தமிழிலிருந்துகூட சமசுகிரதம் சில எழுத்துகளைப் பெற்றிருக்கிறது.

    மந்திரங்கள் கடவுளிடமிருந்து வந்தது என்ற நம்பிக்கையால் கிரந்தம் கொண்டு வேதத்தை எழுதினார்கள் என்று நீங்கள் நக்கலிடித்துக் கொண்டிருக்கலாம். வேத காலத்தில் சமசுகிரததுக்கு எழுத்தேயில்லை. வேதப்பாடல்களை வாய்வழியாகவே காக்கவேண்டிருந்தது என்ற practical காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும். அவ்வளவு கஷ்டப்பட்டு காப்பாற்றியதை தமிழர் மெனக்கெட்டு கிரந்தம் கொண்டு தொடர்ந்து எழுதியதில் வியப்பில்லை. எழுத்தில் எழுதமுடியாத வேதப்பாடல்கள் இன்றும் இருக்கின்றன.

    ஆயிரமாயிரம் ஆண்டு பாரம்பரியத்தை காக்க எடுக்கும் முயற்சிகளை யார் நக்கலடித்தாலும் ஒரு தமிழன் நக்கலடிக்கக்கூடாது.

    சமண மதத்தார் கொண்டுவந்த பிராமி எழுத்தில் சிலபல சங்கப் பாடல்கள் கிடைத்ததாலேயே இன்று தமிழின் வயதுகுறித்து நாம் அலட்டிக்கொண்டிருக்கிறேம். அன்று மற்றவர் கொண்டுவந்த எழுத்துக்களை புறக்கணிப்போம் என்று ‘தமிழர்’ அடம்பிடித்திருந்தால், புராதனம் வேண்டி இன்று கன்னடம் படும்பாட்டை நாம் அனுபவித்துக் கொண்டிருந்திருப்போம்.

    >> கிரந்தத்தைச் சேர்க்காவிட்டால் என்ன குறை என்றும் நினைக்கலாமே?

    கிரந்தம் சேர்ப்பதால் மட்டும் தமிழ் பிழைக்கும் என்று சொல்லவில்லை. பிறமொழி சொற்களையும் ஒலிகளையும் தமிழர் தெரிந்திருந்தும், பெருமளவில் பயன்படுத்தியும்கூட அதை எழுத முடியாவிட்டால் நிச்சயம் தமிழ் அழிந்துபோகும்.

    இஸ்திரி, ஹாஹா, ஜல்ஜல், புஸ்வானம் உள்ளிட்ட தமிழ் சொற்களை எப்படி எழுதுவீர்கள் என்ற கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கப்போவதில்லை!

    அன்று தமிழையும் வடமொழியையும் சேர்த்து எழுதியதால்/பேசியதால் மணிப்பிரவளம் வந்து தமிழிலிருந்து மலையாளம் பிரிந்துபோனது. இன்று ஆங்கில வார்த்தைகளை, ஆங்கிலத்தில்தான் எழுதுவேன் என்று நீங்கள்கூட ஆரம்பத்தீர்கள்.

    அதே போல எக்கச்சக்கமான வடமொழி சொற்கள் தமிழை மூழ்கடித்ததால்தான் தனித்தமிழ் இயக்கம் தொடங்கவேண்டியதாகியது. இன்று தமிழன் கிட்டத்தட்ட ஆங்கிலத்தில்தான் பேசிக்கொண்டிருக்கிறான்.

    மேர்கூரிய பிரச்சனைகளை ஓரளவு சரிசெய்ய கிரந்தம் உதவும். நாம் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டாலும் அதை எழுதும்போது தமிழில் எழுத முடிந்தால் சமசுகிரதம் போல தமிழ் இலக்கிய மொழியாகவேணும் பிழைக்கும்.

    முந்தைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

  25. //மொழியல் குறித்த, அறிவிப்பூர்வமான எந்த கேள்விக்கும் பதில் அளிப்பதில்லை. உணர்வுப்பூர்வமான பதில்களே அளிப்பது என்று கொள்கை வைத்திருக்கிறீர்கள். நடத்துங்க!//

    மொழியும் உணர்வும் பிரிக்கக்கூடியதா? தமிழில் தலை எழுத்து எழுதுங்கள் என்பதில் மொழியியல் நோக்கில் என்ன தவறு? ஆனாலும், “மரியாதை, ஆணவம், அநாகரிகம், பண்பு’ என்று உணர்வு அடிப்படையில் தானே உங்கள் வாதத்தை முன்வைக்கிறீர்கள்? உங்களுக்கு உள்ள நியாயம் எனக்கு இருக்கக்கூடாதா?

    //தொல்காப்பியர் காலத்தில் என்ன, மணிமேகலை எழுதிய காலத்திலேகூட வேதமத்தாரும், சமணரும் ஊருக்கு வெளியதான் வசித்துக்கொண்டிருந்தர்கள். அதனால் பின்னர் நடந்த அளவுக்கு தமிழில் பிறமொழித் தாக்கத்தை தொல்காப்பியர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இத்தனைக்கும் அவர் முன்னெச்சரிக்கையாகவே திசைச்சொல்களையும் சேர்த்தே இலக்கணம் எழுதியிருக்கிறார்.//

    ஆதாரம் கொடுங்கள். படித்துப் பார்க்கிறேன்.

    //மொழியியல் குறித்து துளியாவது தெரிந்த எவரும் சமசுகிரதம் எப்போதுமே பெரிய பேச்சுமொழியாய் இருந்தத்தில்லை என்பதை அறிந்திருப்பார்கள்//

    பிறகு ஏன், பேச்சு மொழிகளாய் இருந்திராத இலத்தீனம், வட மொழியின் அழிவை பேச்சு மொழி, ஆட்சி மொழியாக உள்ள தமிழுடன் ஒப்பிட்டு பயம் காட்டிக் குழப்புகிறீர்கள்? தமிழை ஒத்த பரவலான மொழி ஒன்று இருந்து அது பேச்சு மொழி, பிற மொழி ஏற்புக்கு முறையான ஒப்புதல் தராமல் அழிந்து போன வரலாறு இருந்தால் சொல்லுங்கள்.

    //வேதப்பாடல்களை வாய்வழியாகவே காக்கவேண்டிருந்தது என்ற practical காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும். அவ்வளவு கஷ்டப்பட்டு காப்பாற்றியதை தமிழர் மெனக்கெட்டு கிரந்தம் கொண்டு தொடர்ந்து எழுதியதில் வியப்பில்லை.//

    யார் காப்பாற்ற வேண்டாம் என்றார்கள்? வட மொழிக்கு எழுத்து கண்டுபிடித்து வட மொழியிலேயே சொல்லிக்கொடுத்து காத்திருக்க வேண்டியது தானே? இப்போது எழுத்துகள் வந்த பிறகும் அந்த மந்திரங்களை எழுதும் பொருட்டு ஏன் தொடர்ந்து தமிழிலேயே எழுதிக் கொண்டிருக்க வேண்டும்? எந்த ஒரு மொழி படிக்கும் மாணவனும் முதலில் எழுத்துகளைத் தானே படிக்க வேண்டும்? அவ்வளவு மந்திரங்களை மனனம் செய்பவர்கள் ஒரு எழுத்து முறையை கற்றுக் கொள்ள இயலாதா? எழுத்துகள் இல்லாத போது தமிழில் கிரந்தத்தில் எழுத வேண்டி இருந்த தேவை, தற்போது வட மொழிக்கு எழுத்துகள் உள்ளபோது இல்லை தானே?

    //ஆயிரமாயிரம் ஆண்டு பாரம்பரியத்தை காக்க எடுக்கும் முயற்சிகளை யார் நக்கலடித்தாலும் ஒரு தமிழன் நக்கலடிக்கக்கூடாது//

    ஒரு பாரம்பரியத்தைக் காப்பதற்காக இன்னொரு பாரம்பரியத்தைச் சிதைக்கக்கூடாது. ஒரு மொழியின் ஒலிப்புத் துல்லியம் காக்க விரும்புபவர்கள் எங்கள் மொழியின் எழுத்திலக்கண ஒழுங்கை மதிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதில் என்ன தவறு?

    //அன்று மற்றவர் கொண்டுவந்த எழுத்துக்களை புறக்கணிப்போம் என்று ‘தமிழர்’ அடம்பிடித்திருந்தால், புராதனம் வேண்டி இன்று கன்னடம் படும்பாட்டை நாம் அனுபவித்துக் கொண்டிருந்திருப்போம்.//

    தமிழனுக்கு எழுத்தே இல்லாமல் ஆங்கிலேயரிடம் இருந்து கடன்பெற்று ammaa என்று எழுதிக் கொண்டிருந்தாலும் எனக்கு ஒரு **** இல்லை. ஆனால், தமிழ் ஒலிகளுக்குத் தேவையான எழுத்துகளைத் தான் பெற வேண்டும். தமிழில் இல்லாத ஒலிகளான x, z, f எல்லாவற்றையும் கடன் வாங்கத் தேவை இல்லை.

    //பிறமொழி சொற்களையும் ஒலிகளையும் தமிழர் தெரிந்திருந்தும், பெருமளவில் பயன்படுத்தியும்கூட அதை எழுத முடியாவிட்டால் நிச்சயம் தமிழ் அழிந்துபோகும்.//

    பிற மொழி ஒலிகளையும் சொற்களையும் தமிழில் எழுத முடியாவிட்டால் அம்மொழிச் சொற்கள், ஒலிகள் தானே அழிந்து போகும்? தமிழ் அப்படியே தானே இருக்கும்?

    //இஸ்திரி, ஹாஹா, ஜல்ஜல், புஸ்வானம் உள்ளிட்ட தமிழ் சொற்களை எப்படி எழுதுவீர்கள் என்ற கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கப்போவதில்லை!//

    நீங்கள் கேட்டதிலேயே ‘மிகவும் அறிவார்ந்த’ கேள்வி இது தான். பல இடங்களில் கேட்டு விட்டீர்கள். மறப்பேனா? கண்டிப்பாக விடை சொல்வேன்.

    //அன்று தமிழையும் வடமொழியையும் சேர்த்து எழுதியதால்/பேசியதால் மணிப்பிரவளம் வந்து தமிழிலிருந்து மலையாளம் பிரிந்துபோனது.//

    திரும்பத் தமிழ் இன்னொரு முறை பிளவுபடக்கூடாது என்று தான் இப்போதும் தொடர்ந்து தமிழுக்கு முன்னுரிமை என்று வலியுறுத்துகிறோம்.

    //நாம் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டாலும் அதை எழுதும்போது தமிழில் எழுத முடிந்தால் சமசுகிரதம் போல தமிழ் இலக்கிய மொழியாகவேணும் பிழைக்கும்.//

    சொற்கள் முழுக்க ஆங்கிலத்தில் இருக்க அதைத் தமிழ் எழுத்துகளில் எழுதிக் கொண்டிருப்பதில் என்ன பெருமிதம்? அப்படி ஒரு மொழி இருப்பதை விட முற்றிலும் அழிந்து போவதே மேல். இலக்கிய மொழி என்ற எச்சமெல்லாம் வேண்டாம்.

  26. பதில் எழுதக் கூடாது என்று சொல்லித்தான் வெட்டி ஞாயம் பதிவெழுதினேன்.

    பாலாஜி – நீங்க என்ன தான் “அறவனைப்பு” என்ற முறையை அனுகினாலும், அறவனைப்புக்கு நான்கு கரங்கள் தேவை. தன் இரு கறங்களை கட்டிக் கொண்டு அறவனைக்க வரும் இரு கறங்களையும் வெட்ட(?) துடிப்பவர்களிடம் வாதம் ஏன் என்று புரியவில்லை.

    ரவி – அந்த அறிவார்ந்த கேள்வியில் என் ஸ்டாலின் கேள்விக்கும் பதில் வருமா? உங்கள் விக்கிப்பீடியா இராமனுஜ(ய?)ன் பதிவைப் படித்தேன். அங்கு மூவர் தான் வாதிடுகிறார்கள். எனவே அதனை ஆதரமாக காட்ட வேண்டாம் (என் கேள்வி பிரபலங்களின் அலம்பலுக்கு நீங்கள் தந்த பதில்). உங்கள் வெப் மீடியா விளக்கம் சற்றே தலை சுற்றுகிறது.

    புருனோ –
    //தமிழ் என்பதை எப்படி எழுதுகிறார்கள்

    तमिल என்றா
    அல்லது
    तमिழ் என்றா//
    நல்ல கேள்வி புருனோ ஆனா முன்னே சொன்னது போல் கிரந்ததுக்கு எழுத்து வடிவமுண்டு. பொதுஜன ஊடகங்களில் பரவலாக பயன்படுகிறது என இரு வலுவான ஆதாரங்கள் நம் நடைமுறையில் உள்ளதையும் பார்க்க வேண்டுமா வேண்டாமா?

    இனி பதில் சத்தியமா போடமாட்டேன்.

  27. இன்னொருவர் பெயரை மற்றவர் சிதைப்பது அநாகரிகம் என்பதற்கும் கிரந்தம் குறித்த விவாதத்தில் உணர்ச்சிகளுக்கு மட்டும் மதிப்பளிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

    ஜல்ஜலுக்கு பதில் சொல்லும் போது, 1, 2, 3 என்னும் அரபிய எண்கள், ?@# உள்ளிட்ட குறிகள், diacritics, 18 மெய்களொடு புதிய மெய்கள் சேர்த்தால் குறைபடும் இலக்கண விதிகள் பற்றியயெல்லாம் அறியக் காத்திருக்கிறேன்.

    கிரந்தம் குறித்து ஒன்றுமே தெரியாமல் கிரந்தம் எதிர்க்கக் கிளம்பிவிட்டீர்கள் என்று பல மாதங்களாகவே சொல்லிவருகிறேன். மீண்டும் மீண்டும் அதை நிரூபிக்கும் வகையிலேயெ கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு புதிய விசயங்களை சொல்வதில் எனக்கு மகிழ்ச்சியே. இப்போதைய தவனை கீழே,

    >> (தொல்காப்பியர்) ஆதாரம் கொடுங்கள். படித்துப் பார்க்கிறேன்.

    மணிமேகலையில் வேதமதத்தார் ஊருக்கு வெளியே அக்ரஹாரம் அமைத்து வாழ்வது குறிப்பிடப்படுகிறது. மணிமேகலை கி.பி. 3ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம். தொல்காப்பியர் எப்போது வாழ்ந்தார் என்று தெரியவில்லை. அவர் சங்ககாலத்திலோ, அதற்கு முன்போ வாழ்ந்தார் என்று வைத்துக்கொண்டால் கி.மு. 2 அல்லது மூன்றாம் நூற்றாண்டு என்றாகிறது.

    கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தமிழகம் ஆரியவயப்பட்டதாயும், சமசுகிரதத்தோடு மிகுந்த தொடர்பு வைத்திருந்ததாயும் கருதுவதற்கு எந்த முகாந்திரமுமில்லை. கி.மு. 3ஆம் நூற்றாண்டு சமணரிடமிருந்து தமிழகம் எழுதக்கற்றுக் கொண்டிருந்தகாலம். சமசுகிரதத்துக்கே பனினி (Panini) கி.மு. 5ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் இலக்கணம் எழுதினார்.

    >> தமிழை ஒத்த பரவலான மொழி ஒன்று இருந்து அது பேச்சு மொழி, பிற மொழி ஏற்புக்கு முறையான ஒப்புதல் தராமல் அழிந்து போன வரலாறு இருந்தால் சொல்லுங்கள்.

    பிறமொழி ஏற்பு என்பது நீங்கள் காட்டும் பூச்சாண்டி. நிகரான தமிழ் சொல் இருக்கும் போது பிறமொழி சொற்களை ஏற்கச்சொல்லவில்லை. எத்துனை புதிய மொழிகளோடும், நாடுகளோடும் தொடர்பு கொண்டாலும் ஒலிகளை தமிழில் எழுத சிரம்மப்படக்கூடாது என்பதுதான் ‘கிரந்த எதிர்ப்பை’ எதிர்ப்பதற்குக் காரணம்.

    எழுத்து இருந்தே அழிந்த ஆயிரமாயிரம் மொழிகள் நமக்குத் தெரிந்திருக்கிறது. எழுத்தேயில்லாமல் அழிந்துபோன மொழிகளுக்கு கணக்கேயில்லை.

    திராவிட மொழிகளிலேயேகூட உதாரணம் கொடுக்கமுடியும். துளூ? அழிந்துவரும் அம்மொழியை அவர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்று பார்க்கலாம்.

    தென் அமெரிக்காவின் வரலாற்றை நீங்கள் படித்ததேயில்லையா? அவர்கள் ஆதியிலிருந்து ஸ்பானிய மொழியும், போர்த்துகீசும் பேசிக்கொண்டிருந்தார்களா?

    மேலும் தற்போது அழிந்துவரும் மொழிகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

    >> வட மொழிக்கு எழுத்து கண்டுபிடித்து வட மொழியிலேயே சொல்லிக்கொடுத்து காத்திருக்க வேண்டியது தானே?

    கிரந்தம் கண்டுபிடித்தது வேறு எதற்காம்? தமிழ் எழுத்துகளொடு மேலும் சில எழுத்துகளையும் சேர்த்து சமசுகிரதுக்கான எழுத்து உருவானது.

    அதற்காக அந்த சமயத்தில் தமிழ் எழுத்து என்பது தமிழ் மொழியின் எழுத்து என்று அர்த்தமல்ல. தமிழரின் எழுத்து அவ்வளவே. தமிழ், சமசுகிரதம், பாலி, கன்னடம் என்று பல மொழிகளை எழுதிக்கொண்டிருந்தார்கள்.

  28. முரளி,

    நானும் இனி உங்கள் தமிழ் சார் கேள்விகளுக்கு பதில் சொல்வதாய் இல்லை. முதலில் தமிழில் பிழை இல்லாமல் எழுதக் கற்றுக் கொண்டு பிறகு உங்கள் ‘வெட்டி நியாயங்களைச்’ சொல்ல முற்படுங்கள்.

  29. balaji,

    நான் விளக்கம் கேட்கவில்லை. நீங்கள் கூறும் சமணர் தந்த எழுத்து, தொல்காப்பியருக்குப் பிற மொழி அறிமுகம் இல்லை போன்றவற்றக்கு பதிப்பிக்கப்பட்ட நூல்கள் / ஆய்வுக்கட்டுரைகள் குறித்த விவரம், தொடுப்புகள் தந்தால் உதவும்.

    **

    துளுவில் வடமொழித் தாக்கம், கிரந்த ஒலிகள் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

    தென்னமெரிக்க மொழிகள் அழிவுக்கு வெளியாட்கள் ஆளுகை காரணம்.

    இவ்விரண்டு எடுத்துக்காட்டுகளுமே “பிற மொழி ஒலிகளை எழுதிக் காட்டாவிட்டால் தமிழ் அழியும்” என்ற உங்கள் பூச்சாண்டிக்கு தக்க எடுத்துக்காட்டுகளாய் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  30. நான் சொல்வதில் நம்பிக்கையில்லாவிட்டால் இணையத்தில் படித்துத் தெரிந்துகொள்ளலாமே?

    தொல்காப்பியருக்கு பிறமொழிகளைப் பற்றி தெரியவில்லை என்று நான் எங்கு சொன்னேன்? இலக்கணம் எழுதியவருக்கு பாலி, சமசுகிரதம், உரோம மொழி, பாரசீகம், அரபு மொழி போன்ற மொழிகள் பரிச்சயமாயிருக்க வாய்ப்பிருக்கிறது.

    ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் இம்மொழி பேசுவோர் யாரும் தமிழகத்தில் பெருமளவில் குடிபுகவில்லை. வாணிபத் தொடர்பு மட்டுமே வைத்திருந்தனர். இல்லை ஊருக்கு வெளியே வசித்தனர். தமிழரும் பெருமளவில் இம்மொழி சொற்களை, ஒலிகளை அறிந்திருக்க வாய்பில்லை. அதனால் தொல்காப்பியரின் இலக்கணத்தில் அவை இடம்பெறவும் வாய்ப்பில்லை.

    >> தென்னமெரிக்க மொழிகள் அழிவுக்கு வெளியாட்கள் ஆளுகை காரணம்.

    இன்று தமிழ் தமிங்கிலமாகியதற்கும் ஆங்கிலேய ஆதிக்கமே காரணம். அங்கு அழிந்ததுபோல் இங்கும் ஆவதற்கு வாய்ப்பிருக்கிறது. மேகாலயா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே நடந்துவிட்டது.

    >> “பிற மொழி ஒலிகளை எழுதிக் காட்டாவிட்டால் தமிழ் அழியும்”

    பிற மொழி என்று நீங்கள்தான் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். நான் சொல்வது தமிழர் பேசும் மொழியைப் பற்றி. தமிழர் பேசும் ஒலிகளை அவர்களால் எழுத முடியாவிட்டால் அவர்கள் தமிழில் எழுதுவதைத்தான் கைவிடுவார்கலேயன்றி ஒலிகளையல்ல.

  31. தொல்காப்பியருக்கு நான் நினைத்தை விடவும் அதிகமாகவே சமசுகிரதம் பரிச்சியமாயிருந்திருக்கும் போலிருக்கிறது. தொல்காப்பியம் பனினியின் சமசுகிரத இலக்கணத்தை உத்திருப்பதாகக் கூட சிலர் கூறியிருக்கிறார்கள்!

    இதை மறுக்கும் ஆய்வரிக்கை ஒன்று இங்கே.

    மேலும் வேறொரு சமயத்தில் தொல்காப்பியர் கி.பி. முன்றாம் நூற்றாண்டு வாக்கிலேயே வாழ்ந்திருக்க வாய்ப்பிருப்பதாக நான் கூறியிருந்தேன். மூன்றாம் நூற்றாண்டில் தமிழின் மேல் சமசுகிரதத்தின் தாக்கம் பற்றி தெரிந்துகொள்வேண்டும்.

    மற்றபடி கிரந்தம் தமிழுக்கு அவசியம் என்னும் என் கருத்தில் எந்த மாற்றமுமில்லை. நான் முன்னரே சொன்னது போல் பிற்காலத்தில் தமிழுக்கு பரிச்சயமான ஒலிகளுக்கு பின்னர் வந்தவர்கள்தாம் இலக்கணம் எழுதவேண்டும். எழுதியிருக்கிறார்கள்.

  32. balaji,

    உங்கள் மேல் நம்பிக்கை இல்லாமலா உரையாடிக் கொண்டிருக்கிறேன்? உண்மையில் திறந்த மனதுடன் படித்துப் பார்த்து அறியவே கேட்கிறேன். ஒருவேளை நான் சரியாகத் தேடலாமலோ என்னை அறியாமல் இருக்கும் பக்கச் சாய்வாலோ சில ஆதாரங்களைத் தவற விடலாம் தானே?

    வருங்காலத்தில் இரண்டு சாத்தியங்கள் உண்டு:

    1. naan nallaa irukkaen. nee eppadi irukka? என்று தமிழ்ச்சொற்களை ஆங்கிலத்தில் எழுதும் மக்கள் – இது நீங்கள் சொல்லும் மேகாலயா நிலவரம் என நினைக்கிறேன். இந்தோனேசியா போன்ற இடங்களிலும் இப்படி பழைய எழுத்துகளைத் தொலைத்து விட்டு ஆங்கில எழுத்துகளைக் கொண்டு எழுதுகிறார்கள். கிரந்தம் இல்லாவிட்டால் இந்த நிலை வரும் என்று அஞ்சுகிறீர்களா? கிரந்தம் இருக்கும் போதே சோம்பேறிகளும் மொழி உணர்வு அற்றவர்களும் இப்படித் தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். கிரந்த இருப்புக்கும் இந்த நிலை வருவதற்கும் தொடர்பு இல்லை என்பதே என் கணிப்பு. சமூகத்தில் முற்று முழுதாக தமிழ் எழுத்துப் புழக்கம் இல்லாவிட்டாலே இந்நிலை சாத்தியம்.

    2. ஹே..ஹை ஆர் யூ யா? ஐயம் ஃபைன் – என்று ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதும் மக்கள். கிரந்தம், இன்னும் பல புது ஒலி எழுத்துகளுக்கு ஏற்பு தந்தால் இந்நிலை வரும். சொல் எல்லாம் பிற மொழி, எழுத்து மட்டும் தமிழ் என்பதில் தமிழ் என்னத்த வாழ்ந்து விடப் போகிறது எனப் புரியவில்லை.

  33. ம்… கிரந்ததினால் தமிழுக்கு எந்த பாதிப்பும் இல்லையென்பது எனது கணிப்பு. ஆனால் கிரந்த எழுத்துகள் (4, 5 மட்டும்தான்) இல்லாமல் தமிழ் பயன்படுத்தத் தகுதியில்லாத மொழியாகிவிடும் என்பதே உண்மை. தமிழர் ஆங்கிலம், மற்றும் சமசுகிரதம் வயப்பட்ட அனைத்து இந்திய மொழிகளோடும் சேர்ந்தே வாழவேண்டும்.

    இணையப்பானியில் சொல்வதானால், people’s expressions are the content, language, a tool and script, just a plugin. மக்களின் பயன்பாட்டுக்கு தேவைப்படும்போது புதிய எழுத்துகளை சேர்த்துக்கொள்வது நல்லதே.

    கிரந்தம் பற்றி ஜார்ஜ் ஹார்டின் கருந்து இங்கே.

    மற்றபடி தொல்காப்பியர் குறித்த உங்கள் கேள்வி மிகவும் நியாயமானதே. தொல்காப்பியர் காலத்தில் சமசுகிரதத்தின் தாக்கம் இல்லையாகினும் நன்னூல் இயற்றிய 13ஆம் நூற்றாண்டில் நிச்சயம் இருந்திருக்கும். நன்னூல் தமிழில் இல்லாத ஒலிகள் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். பார்க்கலாம்.

  34. //கிரந்த எழுத்துகள் (4, 5 மட்டும்தான்) இல்லாமல் தமிழ் பயன்படுத்தத் தகுதியில்லாத மொழியாகிவிடும்//

    ஆங்கில மயமாக்கத்தால் இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் அழிவதற்கு உரிய வாய்ப்புகள் உண்டு என்ற அச்சம் எனக்கும் உண்டு. ஆனால், அதற்குத் தீர்வு ஆங்கிலச் சொற்களையும் அவற்றின் ஒலிகளுக்கான எழுத்துகளையும் கிரந்த எழுத்துகளையும் சேர்த்துக் கொள்வது அல்ல.

    இலக்கிய மொழியாக மட்டுமே இருந்து, பேச்சு மொழியாக இருந்திராத வட மொழியை விடுவோம்.

    கிரந்த எழுத்துகள், ஒலிகள் இருக்கக்கூடிய இந்த நூற்றாண்டு மொழிகளான குசராத்தி, மராத்தி, ராசத்தானி, அரியான்வி, ஒரியா, போச்சுப்பூரி மொழிகளின் வருங்காலம் பற்றி உங்கள் கருத்து என்ன? ஏன் இந்த மொழிகளை இணையத்தில் கூட அதிகம் காண இயலவில்லை?

    அடுத்த கட்ட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் இவற்றை எடுத்தாலும் இவற்றின் எதிர்காலம், தற்கால நிலை குறித்து தங்களுக்கு நிறைவு, நம்பிக்கை உண்டா?

    வெறும் ஒலிகள், எழுத்துகள் ஒரு மொழியின் பயன்பாட்டை முடிவு செய்வதில்லை. இவ்வெழுத்துகள் இருந்தாலும் மொழிகள் அழிகின்றன என்கிற போது, இவ்வெழுத்துகளைச் சேர்த்து தமிழைக் காத்துக் கொள்ளலாம் என்ற வாதத்தில் logic இல்லையே?

  35. ம்… மொழிகள் அழிவது இயற்கையே. சில நூறு ஆண்டுகளில் தமிழும் பேச்சு வழக்கில் அழிந்து போனால் அதுபற்றி பெரிதாக வருத்தப்படுவதில் பயனில்லை. ஆனால் இன்று சமசுகிரதம் இலக்கிய மொழியாய் பிழைத்ததனால் வேதம், உபநிசதங்கள், அர்த்தசாஸ்திரம் உள்ளிட்ட அரிய பொங்கிஷ்ங்கள் நமக்குப் படிக்கவும் பயன்பெறவும் கிடைத்திருக்கின்றன.

    தமிழின் படைப்புகளும் பிற்கால சந்ததியினருக்கு கிடைக்கச்செய்வது நமது கடமை. எழுத்து மொழியாய் தமிழ் அழிவது மிகவும் ஆபத்தானது. அதனால் இன்று தமிழர் அறிந்திருக்கும் சொற்களை தமிழில் எழுத கிரந்தம் வேண்டும் என்பதே எனது கருத்து.

    நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, “நீ பேசுவது தமிழே இல்லை, அதனால் உன்னை தமிழில் எழுதவிட மாட்டேன்” என்று பிறரிடம் சொன்னால், “சரி நான் ஆங்கிலத்திலேயே எழுதிக்கொள்கிறேன்” என்று போய்விடுவார்கள்.

    குஜராத்தி, மராத்தி, ஒரியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் எல்லாம் தமிழ் இருக்கும்வரை நிச்சயம் இருக்கும். தமிழைக்காட்டிலும் மலையாளம் உபயோகமான மொழி என்று ஜார்ஜ் ஹார்ட்கூட குறிப்பிட்டுள்ளாரே?

    ராஜஸ்தானி, அரியான்வி எல்லாம் தனி மொழிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது. dialects அழிவதும், அல்லது மருவி புதியனவாவதும் இயற்கையே.

    போச்புரி ஒரு வகையில் தமிழருக்கு ஒரு பாடமே. ஹிந்துஸ்தானி பிழைத்து போச்புரி தளர்ந்ததுபோல் தமிழ் தளர்ந்து மலையாளம் தொடர்ந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. தமிழகத்தில் தொலைக்காட்சி பார்த்தாலே தமிழ் தேறுவது கடினம் என்று தெளிவாகிறது.

    நீங்கள்கூட கிரந்தம் தவிர்த்தாலும் ஆயுதம் கொண்டாவது எழுதப் பழகுவதுதான் நல்லது. கிரந்தம் ஏற்றாலும் fa பிரச்சனை தீரப்போவதில்லை. அதிலிருந்து ph, bh தான் பெறமுடியும்.

    தமிழ் மீது அக்கரையுள்ள அரசுகள் இருந்திருந்தால் ஸ், ஷ், ஜ், ஹ், மற்றும் f ஆகியவை மெய்களாகவோ, ஆயுதம் கொண்டோ அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். ஆயுதம் கொண்டெழுதுவது சாத்தியமென்றாலும், அது வீம்புக்காக செய்யப்படும் கடினமாக்கல் என்று நான் நினைக்கிறேன்.

  36. இக்கரைக்கு அக்கரை பச்சை!

    ஜெயமோகனின் கட்டுரை என் பயத்தை மேலும் அதிகமாக்கவே செய்கிறது. தமிழ் செவ்வியல் மொழியாக மலையாளத்தில் பயன்படுவது போல தமிழகத்தில் தமிங்கிலத்துக்குப் பயன்படப்போகிறது!

    மற்றபடி மலையாளிகளின் சமசுகிரதம் மோகம், ஆங்கில மோகமெல்லாம் மொழியில் அடிப்படையிலான வாதங்களில்லை. மலையாளத்தில் நவீன/பிறமொழி சொற்களை எழுதமுடியுமா என்பது பற்றி அவர் குறிப்பிடவில்லை. அவர் தான் சார்ந்த இலக்கிய நடைக்கு மலையாளம் எவ்வாறு பயன்படுகிறது/இல்லை என்று குறிப்பிடுகிறார்.

    சமசுகிரதச் சொற்களை எளிதாக எழுத, உள்வாங்க முடிகிற மொழியால் எந்த புதிய சொல்லாடலையும் எழுத முடியும் என்பதே என் கணிப்பு. சில சமசுகிரத வாக்கியங்கள் மக்களுக்கு அயர்வை ஏற்படுத்துவதாக அவர் சொல்வது, தமிழில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுதானே? தமிழ் சொற்களை, வாக்கியங்களை விடவும் ஆங்கில வார்த்தைகள் எளிதாக இருப்பதால்தானே தமிங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்?

    தமிங்கிலம் சென்னைவாசிகள்/சில சமூகத்தாரிடையே மட்டும் நிலவும் பிரச்சனை என்று ஜெயமோகன் சொல்வது நகைப்புக்குரியது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சமசுகிரதம் கலந்த தமிழையும் அதே பிரிவினர் தானே பேசிக்கொண்டிருந்தார்கள்? அதை பெரிதாக பாவித்து தனித்தமிழ் இயக்கம் தொடங்கியவர்கள் எல்லாம் முட்டாள்களா?

    அன்றும் இன்றும் பிரச்சனை ஊடகத்தமிழ் சமசுகிரதத்தையோ, ஆங்கிலத்தையோ கலந்து கொடுப்பதுதான். அந்த காலத்தில் படிக்கத் தெரிந்தோரில் பெரும்பான்மையோர் ஜெயமோகன் குறிப்பிடும் ‘சிலபல’ மக்களாகவே இருந்தனர். அதனால் நீங்கள் சொல்லும் கிராமத் தமிழருக்கு என்ன வந்துவிடப்போகிறது என்று மறைமலையடிகள் உள்ளிட்டோர் சும்மா இருந்திருக்க வேண்டியதுதானே? ஊடகங்களின் தாக்கத்தை அவர்கள் குறைத்து மதிப்பிடவில்லை.

    அன்றைய சுதேசமித்திரன், தினமணியை விடவும் இன்றை விஜய் டீவியும் மற்றயவையும் தமிழை தமிங்கிலமாக எளிதாக ஆக்கமுடியும். மேலும் அன்று பள்ளிக்கூடத்தில் படித்தவர் எவரும் தமிழிலேயே படித்தனர். இன்று?

    பேச்சுமொழியாய் தமிங்கிலமும், எழுத ஆங்கில எழுத்துகளும், செவ்வியல் மொழியாய் மட்டும் தமிழும் இருந்தால் போதுமானது என்று நினைப்பவர்கள் சும்மாயிருக்கலாம். மற்றவர்கள் செயலில் இறங்கும் நேரமிது.

  37. //பேச்சுமொழியாய் தமிங்கிலமும், எழுத ஆங்கில எழுத்துகளும், செவ்வியல் மொழியாய் மட்டும் தமிழும் இருந்தால் போதுமானது என்று நினைப்பவர்கள் சும்மாயிருக்கலாம். மற்றவர்கள் செயலில் இறங்கும் நேரமிது.//

    ஆபத்தை எல்லாரும் உணர்ந்திருக்கிறோம். தீர்வுகள், வழிமுறைகளில் தான் வேறுபடுகிறோம்.

    ஆங்கிலம் தமிழ்ச் சொற்களின் எழுத்து மொழியாக மாறும் என்பது தேவையில்லாத அச்சம். ஆங்கிலத்தைத் தமிழ் எழுத்துகளில் எழுதிப் படிப்பது, தமிழை ஆங்கில எழுத்துகளில் எழுதிப்படிப்பது இரண்டுமே அயர்வு தருவன. ஒட்டு மொத்தமாக தமிழ்ச் சொற்கள் ஆங்கிலத்தில் எழுதப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக நான் நினைக்கவில்லை. கீழ் உள்ள எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்:

    **

    Jeyamohan குறிப்பிடுவது வீட்டிலும் முழுக்க ஆங்கிலத்தில் பேசுவது. ஒட்டு மொத்த தமிழ் மக்கள் தொகையைப் பார்க்க, அத்தகையோர் எண்ணிக்கை குறைவானதும் ஒரு சில சமூக / மதச் சூழல்களில் நகர்ப்புற உயர் நடுத்தர / மேல்த்தட்டுகளில் மட்டும் நிகழ்வது தான்.ஆங்கில வழிக் கல்வி, ஊடகங்கள் வாயிலாகத் தமிங்கிலம் என்னும் நோய் தமிழ்நாடு முழுக்க வேகமாகப் பரவி வருவதை ஒப்புக் கொள்கிறேன்.


    Jeyamohan kurippiduvathu veettilum muzukka aangilaththil paesuvathu. ottu moththa thamiz makkal thogaiyaip paarkka, aththagaiyor ennikkai kuraivaanathum oru sila samooga / madhachhooznilaigalil nagarppura uyar naduththara meelththattukalil nigazvathu thaan.

    —-

    வாட் ஜெயமோகன் மென்சன்ஸ் இஸ் அபவுட் பீப்பிள் ஸ்பீக்கிங் இங்கிலீஷ் இன் ஹோம். வென் கம்பேர்ட் டு ஓவரால் தமிழ் பாப்புலேஷன், சச் பீப்பிள் ஆர் லெஸ் அண்ட் ஹேப்பன்ஸ் ஒன்லி இன் சம் ரிலீஜியஸ் / சோஷியல் கான்டெக்ஸ்ட் அண்ட் இன் அர்பன் அப்பர் மிடில் கிளாஸ் / அப்பர் கிளாஸ் சர்க்கிள்ஸ்.

    —-

    what jeyamogan mentions is about people speaking english in home. when compared to overall tamil population, such people are less and happens only in some socio-religious contexts and in upper middle class / higher class circles.

    **

    மேற்கண்டவற்றில் முதலும் கடைசியும் தான் படிக்க இலகுவானவை. கணினியில் தமிழ்த் தட்டச்சு தெரியாதவர்கள், பள்ளியில் தமிழ் படிக்காதவர்கள் தமிழை ஆங்கில எழுத்துகளில் எழுதிப் படிக்கிறார்கள். தற்போது தமிழ்நாட்டில் தமிழ் மொழிக் கல்வி பள்ளியில் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. வருங்காலத்தில் கணினிப் புழக்கம், தமிழ்த் தட்டச்சு மென்பொருள் புழக்கம் கூடக் கூட தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதும் வழக்கம் அறவே ஒழியும் என்றே எதிர்ப்பார்க்கிறேன். (ஆனால், மனச்சித்திரத்தில் ஆங்கில எழுத்துகள் வாயிலாகத் தமிழைத் தட்டச்சுவது இன்னொரு முக்கியப் பிரச்சினை. பள்ளிகளில் தமிழ்99 அறிமுகம் வந்தால் இந்தக் கொடுமை ஒழியும்)

    நீங்கள் சொல்வது போல் கிரந்த எழுத்துகள், ஆங்கில ஒலிகளுக்கான எல்லா எழுத்துகளையும் கொண்டு வந்தாலும் கூட நான்கு வரிகளுக்கு மேல் தொடர்ந்து ஆங்கிலத்தைத் தமிழ் எழுத்துகளில் எழுதினாலும், தமிழை ஆங்கிலத்தில் எழுதினாலும் படிப்பதற்கு மூச்சு முட்டி விடும். அதற்கு மேல் எழுத விரும்புபவர்கள் முழுக்க ஆங்கிலத்திலேயே / தமிழிலேயே எழுதுவார்கள்.

    தமிழுக்கு இடை இடையே வரும் சில ஆங்கிலச் சொற்களை எழுதுவதற்காக முழு ஆங்கிலத்துக்குத் தாவுவார்கள் என்று எதிர்ப்பார்க்கவில்லை. ஏனெனில் முழுக்க ஆங்கிலத்தில் எழுதினால் புரிந்து கொள்ளக்கூடிய தமிழர் எண்ணிக்கை குறைவே. (தமிழ்நாட்டில் இந்து நாளிதழ் X தினத்தந்தி விற்பனையை ஒப்பிடலாம்). பேச்சு வழக்கில் தமிங்கிலம் பரவினாலும் கூட, தாராளமயம், தனியார் மயம் புண்ணியத்தில் தமிழ்நாட்டில் ஏழைகள், அரசு பள்ளிகளில் படிப்போர், தமிழ் வழிப்பள்ளிகளில் படிப்போர், கல்லூரிக் கல்வி தாண்டாதோ கணிசமானோர் உள்ளனர். இந்தப் போக்கு தொடரவும் செய்யும் 🙁 இவர்களிடம் இந்து நாளிதழைத் தமிழில் எழுதியும் தினத்தந்தி கட்டுரை ஆங்கிலத்தில் எழுதியும் விற்க முடியாது.

    தமிழின் இரு வழக்குத் தன்மை காரணமாக, உரை, பேச்சு இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு காக்கப்பட்டே வந்திருக்கிறது. தமிங்கிலம் வசதியாக இருப்பவர்களுக்கும், பொன்னியின் செல்வனோ செய்தி நேரத் தமிழோ புரியாமல் இல்லை.

    **

    //சமசுகிரதச் சொற்களை எளிதாக எழுத, உள்வாங்க முடிகிற மொழியால் எந்த புதிய சொல்லாடலையும் எழுத முடியும் என்பதே என் கணிப்பு.//

    சமசுகிரம ஒலிகள் அனைத்தையும் ஆங்கில எழுத்துகள் 26 கொண்டு எழுதிக் காட்ட முடிகிறதா?

    சுமசுகிரதத்தை உள்வாங்கும் மொழியை விடுவோம். சமசுகிரதத்தால் சீன மொழிப் பாடல்களை ஒலி பிசகாமல் எழுத முடியுமா?

    விதண்டாவாதத்துக்கு கேட்கவில்லை. அறிந்து கொள்ளவே கேட்கிறேன்.

    **

    //தமிழ் சொற்களை, வாக்கியங்களை விடவும் ஆங்கில வார்த்தைகள் எளிதாக இருப்பதால்தானே தமிங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்?//

    மிகைப்படுத்தல். தமிங்கிலம் பரவுவது உண்மை தான். ஆனால் காரணங்கள் வேறு.

    * எல்லா சிந்தனைகளையும் நாம் தமிழில் பேசிப் பழகுவதற்கான வாய்ப்புகளையோ முயற்சிகளையோ எடுக்கவில்லை. ஊடகங்களும் தங்களின் இந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை. மெத்த படித்து வெளிநாட்டில் வசித்து வலைப்பதிவோர் கூட கணினி / வலைப்பதிவு நுட்பத்தைத் தமிழில் பேச்சு, எழுத்து இரண்டிலும் செயற்படுத்தவில்லையா?

    * ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளி என்ற நினைப்பு, பிறர் மதிப்பு போன்ற சமூக, உளவியல் காரணங்களால் வலிந்து ஆங்கிலம் கலப்பவரும் தனியாக இருக்கையில் இயல்பாக பேசுகிறவர்களும் இருக்கிறார்கள்.

    *சில ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவது வேறு. அது பரவலாக இருக்கிறது. ஆனால் முழுக்க ஆங்கிலச் சொற்றொடரிலேயே பேசுவோர் எண்ணிக்கை மிகக் குறைவு.

    தமிழை விட ஆங்கிலம் இலகு என்று பிரச்சினையை பொதுமைப்படுத்தவோ எளிமைப்படுத்தவோ இயலாது.

    சிங்கையிலும் இலங்கையிலும் அழகு தமிழ் பேசுவோர் ஆங்கிலம் அறியாமலா தமிழ் பேசிக் கொண்டிருக்கிறார்கள்?

  38. தமிழை ஆங்கில எழுத்துகளில் எழுதுவார்கள் என்று நான் சொன்னது மிகையே. ம் … இல்லை இப்போது இதையே நான் ஆங்கிலத்தில்தான் அடித்துக்கொண்டிருக்கிறேன்!!

    சமசுகிரதத்தில் சீனப் பாடல்களை எழுதமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஹு ஜின்டாவ், ஜாக்கி சான் என்று கிரந்தமில்லா தமிழில் நிச்சயம் எழுத முடியாது 🙂

  39. //இல்லை இப்போது இதையே நான் ஆங்கிலத்தில்தான் அடித்துக்கொண்டிருக்கிறேன்!!//

    இந்தப் பிரச்சினைக்குத் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழ்99 வருவதே தீர்வு என்றும் குறிப்பிட்டு இருந்தேன். கண்டிப்பாக செய்வோம்.

    தட்டச்சுப் பழக்கமின்மை, மென்பொருள் இன்மை காரணமாக கணினியில் ஆங்கில எழுத்துகளை உள்ளிட்டுத் தமிழைப் பெறும் பிரச்சினைக்கும் எல்லா இடங்களிலும் ஆங்கில எழுத்துகளிலேயே தமிழை எழுதிக் காட்டுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. சிந்தனை, சொல் முழுக்க ஆங்கிலமயமானவர்களுக்குத் தமிழ்99 போன்ற முறைகளைக் கற்பது கடினம். அவர்கள் எண்ணிக்கை தமிழர் தொகையில் குறைவே.

    அரசு அலுவலகங்களில் தமிழ்99 வரவேற்பு குறித்து புருனோ கூறியதை இங்கு பார்க்கலாம்.

    //சமசுகிரதத்தில் சீனப் பாடல்களை எழுதமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை//

    தெரியாதவர்கள், சமசுகிரதச் சொற்களை எளிதாக எழுத, உள்வாங்க முடிகிற மொழியால் எந்த புதிய சொல்லாடலையும் எழுத முடியும் என்பது போன்ற wild statements விட வேண்டாமே? ஒவ்வொரு மொழிக்கும் எல்லைகள், தெரிவுகள் உண்டு.

    ஊ சின்டாவ், சாக்கி சான் என்று எழுதி உச்சரித்தால் தங்களை அவமானப்படுத்தி விட்டதாக கண்டிப்பாக அவர்கள் சண்டைக்கு வரப் போவதில்லை.

  40. //இந்தப் பிரச்சினைக்குத் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழ்99 வருவதே தீர்வு என்றும் குறிப்பிட்டு இருந்தேன். கண்டிப்பாக செய்வோம். //

    பள்ளிக்குழந்தைகளுக்கு சொல்லிக்க்கொடுக்க Dumb keyboardஐ பயன்படுத்த வேண்டுமே ஒழிய, இது போன்ற Intelligent Keyboardஐ அல்ல.

    க்+ ஓ –> கோ என்பது இலக்கணமாக இருக்கலாம், இருப்பினும் எழுதும்போது இப்படி நினைத்து எழுதுவதில்லை.

    இரட்டை கொம்பு + க + கால் என்ற எழுதப்பழகுகிறோம்.

    விசைப்பலகையில் உள்ளிடும் போது இந்த இயற்கைத்தன்மையோடு உள்ள ஒரு நல்ல விசைப்பலகைத்தான் தேவை.

  41. //விசைப்பலகையில் உள்ளிடும் போது இந்த இயற்கைத்தன்மையோடு உள்ள ஒரு நல்ல விசைப்பலகைத்தான் தேவை.//இந்த இயற்கைத் தன்மை தமிழ்த் தட்டச்சுப் பொறியில் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால், கணினியில் இப்படி எழுதுவது மிகவும் திறம், வேகம் குறைந்தது.

    தமிழ்99 பழகும்போதும் சரி பழகிய பின்னும் சரி, எழுத்துகளைப் பிய்த்து பிய்த்து யாரும் மனதில் நினைப்பது இல்லை. இது என் அனுபவம். பயின்று பார்க்காதவர்கள், இப்படி தோணுமோ என்று நினைத்துக் கொள்கிறார்கள். பயின்றவர் யாரும் இந்தக் குறையைச் சொன்னதில்லை. தமிழ்99 முறையில் தமிழை எழுதும் போது மனதில் தமிழ் ஓசைகளாகத் தான் நினைவு ஓடுமே தவிர தனித்தனி உயிர் மெய் எழுத்துகளாக ஓடாது. இது ஏன் என்று புரியவில்லை. ஆனால், மனித மூளையின் விந்தை 🙂

    தமிழ்99ஐக் குழந்தைகள் புரிந்து கொள்ளும் தன்மை குறித்து எனக்கும் தயக்கங்கள் உண்டு. ஆனால், இது குறித்து ஒரு முறையான சிறு ஆய்வாவது செய்து பார்க்காமல் நிலைப்பாடு எடுக்க இயலாது. அடுத்த முறை ஊருக்குச் செல்லும் போது இந்த ஆய்வை மேற்கொள்வேன்.

    இன்று பள்ளிக் குழந்தைகளும் செல்பேசியில் வெறும் 9 விசைகளைக் கொண்டு, அகரமுதலி வசதிகள் பயன்படுத்தி, ஆங்கிலத்தில் குறுஞ்செய்திகள் தட்டச்சு செய்கிறார்கள். எனவே, அவர்களின் புரிந்து கொள்ளும் திறனைக் குறைத்து மதிப்பிட இயலாது. இந்தக் கால குழந்தைகள் கருவிகளை ஆள்வதில் கூடுதல் திறன் பெற்றிருக்கிறார்கள்.

  42. சரி வழக்கம் போல கிரந்தத்துக்கு வருவோம். 🙂

    ரவி, இத பத்தி நிறைய பேசியாச்சு……தூய்மைவாதம் எங்கும் ஜெயிக்காது 🙂

    இப்ப ஜ,ஷ,ஸ,ஸ்ரீ இருக்குறதால என்ன குறைஞ்சுபோச்சு ? ஆயிராமாயிரம் வருஷம் எழுதிட்டு வர்ர்து தானே.கொஞ்சம் கல்வெட்டெல்லாம் படிச்சு பாருங்க…இப்பவாவது ஸ,ஜ,ஷ,ஸ்ரீ தான் வருது..அப்ப முழுக்க முழுக்க கிரந்தத்துல வார்த்தைகள் சம்யுக்தாக்ஷரங்களோட வந்தது.

    திடீர்னு ஏதோ கண்டுபிடிச்சு இனி மாத்தனும்னு சொல்றது பைத்தியக்காரத்தனம்.

    உங்க மாதிரி ஆட்களோட தனிப்பட்ட கொள்கைகள திணிச்சு அத அமல்படுத்த தான் விக்கிப்பீடியா விக்ஷனரி போன்ற “பொது”(?)த்திட்டம் எல்லாம் உங்க கட்டுப்பாட்டுல இருக்கே, அங்க மட்டும் செய்ய வேண்டியது தானே….

    இப்படி முதல்ல ஊருக்கு உபதேசம் பன்றத நிறுத்துங்க.

    மனசுல ஏதோ தமிழ காப்பாத்த பிரச்சாரம் பன்றதா உங்களுக்கு நினைப்போ ?

    மதத்தீவிராவதிகளுக்கு அவங்க தான் மதத்த காப்பாத்துற மாதிரியும் கடவுளுக்கு அதீத உபகாரம் பன்ற மாதிரி ஒரு போலி எண்ணம் இருக்கும். அதனால அவங்க பன்றது தான் சரி ஒரு ஆழமான நம்பிக்கை இருக்கும், அத பிரசங்கமும் பன்னுவாங்க, அவங்கள் பொருத்த வரைக்கும் அவங்க கொள்கைகளை எதிர்க்கறவங்க எல்லாம் துரோகிகள், மாத்துக்கருத்துங்குறதே இல்லை.

    இதே மாதிரி தான் நீங்க பன்றது மொழித்தீவிரவாதம். உங்களக்கு நீங்க தான் தமிழ் காப்பாத்தப்பிறந்ததா ஒரு போலி எண்ணம். அதனால நீங்க சொல்றது மட்டும் தான் சரின்ன்னு ஒரு நினைப்பு.

    வர வர அவனவன் கலாச்சார பாதுகாவலர்களாகவும் மொழிப்பாதுகாவலர்களாவும் தன்னையே சுய நிர்ணயம் பன்னிக்கிறது அதிகமா போச்சு.

    மனித ஈகோத்தனத்தின் வெளிப்பாடு இது. “தான்” தான் எல்லாத்தையும் பன்றோங்க்ற ஒரு எண்ணம் கிட்டத்தட்ட ஒரு Psychopath நிலைக்கு உங்கள கொண்டு வந்தாச்சு.

    ஆக நீங்க தான் தமிழ்க்காவலர்கள், தமிழை வளர்க்குறவங்க… காப்பாத்துறவங்க…எங்க மாதிரி ஆளுங்க அதை அழிக்கிறவங்க, தமிழ் விரோதிங்க, சமஸ்கிருத சாய்வு கொண்டுவங்க, இல்லையா ?

    நீங்க தமிழ உங்க பாணில “காப்பாத்துங்க”, நாங்க எங்க பாணில “அழிச்சிட்டு” வர்ரோம்…..

    நாங்க கிரந்தத்தை எழுதறோம்…பின்ன நாங்க என்ன தமிழ காப்பாத்துறது…தமிழுக்கு நாங்க ஒன்னும் பன்ன முடியாதில்லை…ச ச பன்னக்கூடாது…தமிழ் விரோதி தமிழ வளர்க்கறதா ? எவ்வளவோ பெரிய தப்பு அது…நாராயணா..ஜென்மத்துக்கும் வைகுண்டம் போக முடியாது

    நல்லது. முன்னாடியே சொன்ன மாதிரி இனி தமிழை நாங்க என்ன காப்பாத்துறது ? இல்ல சும்மாங்காட்டி காப்பாத்துறோமுன்னு கூட சொல்ல முடியுமா , அய்யோ தமிழ காப்பாத்துற வேலையைத்தேன் நீங்க லீஸுக்கு எடுத்து ஓவர்டைமா பன்றீங்களே…. பன்னுங்க…

    அவனவன் தமிழ பயன்படுத்தி கொள்ளையடிக்கறது விட, நாங்க ஒன்னும் பெரிய தப்பு பன்னல, ஏன் தப்பே பன்னல.

    எங்களுக்கும் தமிழ் மேல ஈடுபாடு இருக்குங்க, நாங்களும் தமிழ வளர்க்க ஏதாவது பன்னிட்டுத்தான் இருக்கோம். நாங்க உங்கள மாதிரி கூச்சல் போடுறோமோ..அமைதியாத்தானே இருக்கோம்….

    உங்களை நீங்களே தமிழை காப்பாத்திக்கிற வளர்க்கிற அவதார புருஷனா இன்னும் நினைச்சிட்டு இருந்தா நல்ல ஒரு Psychologistஆ போய் பாருங்க…..

    இதுக்கு மேலயும், அய்யோ தமிழ காப்பாத்துங்க….அம்மா……தமிழ காப்பாத்துங்க…சாமி…தமிழ காப்பாத்துங்க….ன்னு டயலாக் விட்டுட்டு திரிஞ்சீ பதிவு போட்டீங்கன்னா….உங்களை யாரையும் குணப்படுத்தவே முடியாத நிலைக்கு போய்ட்டீங்கன்னு அர்த்தம்………

    இதுக்கு என்ன பதில் தருவீங்க…பரவாயில்லை நான் தமிழ் பைத்தியாக்காரணாவே இருந்திட்டு தமிழை நான் “காப்பாத்தியே” “வளர்த்தே” தீருவேன்னு சொல்லப்போறீங்க…….நல்லது…எதிர்ப்பார்த்த பதில் தான்…..Psychopathகளிடம் வேறென்ன எதிர்ப்பர்க்க முடியும்…

    நீங்கள் தமிழை காப்பாற்றியது போதும்…..தமிழ் உங்களை “காப்பாற்றட்டும்”….

  43. சுய நினைவுள்ள மனித்ர்களிடம் உரையாடலம் இவர்களை போன்ற Psychopathகளுடன் உரையாடினால், தேவையில்லாமல் நம் வேலைதான் கெடும்.

    இவர்கள் தமிழை “காப்பாற்றுவர்களாக” நாம் “அழிப்போமாக”

    பாவம், Psychopathகள் இவர்களை சொல்லி குற்றம் இல்லை…இதையெல்லாம் செய்யவில்லை என்றால் இவர்களால் உயிர் வாழ முடியாது.

    நாம் செய்யக்கூடியது இவர்களின் நிலையை பார்த்து பரிதாபப்படுவது மட்டுமே…..

    ஹ்ம்ம்ம்…இனி நாம் வேலையை நம் பார்ப்போம்…..

  44. வினோத், என்னைப் பற்றிய தனிப்பட்ட கருத்துகளுக்கும் அறிவுரைகளுக்கும் நன்றி.

    //உங்க மாதிரி ஆட்களோட தனிப்பட்ட கொள்கைகள திணிச்சு அத அமல்படுத்த தான் விக்கிப்பீடியா விக்ஷனரி போன்ற “பொது”(?)த்திட்டம் எல்லாம் உங்க கட்டுப்பாட்டுல இருக்கே, அங்க மட்டும் செய்ய வேண்டியது தானே….//

    தமிழ் விக்கித் திட்டங்கள் ஒரு சிலரின் கட்டுபாட்டில் மொழித் தீவிரவாதத்துடன் நடைபெறுகின்றன என்ற உண்மைக்குப் புறம்பான கருத்தைப் பல இடங்களில் நீங்கள் திரும்பத் திரும்பக் குறிப்பிடுவதை மட்டும் கண்டிக்க விரும்புகிறேன்.

  45. // வினோத், என்னைப் பற்றிய தனிப்பட்ட கருத்துகளுக்கும் அறிவுரைகளுக்கும் நன்றி. //

    ச ச தப்பா நினைச்சிக்காதீங்க, உங்கள பத்தி மட்டும் சொல்ல, நீங்கன்னு பொதுவாத்தான் சொன்னேன். எல்லா கலாச்சார மற்றும் மொழிக்காவலர்களுக்கும் இது பொருந்தும்.

    ராமதாஸில் இருந்து ரவி சங்கர் வரை……

    எல்லாரும் ஒரே மனநிலையில தானே இருக்கீங்க…அடிப்படைவாத…தீவிரவாத…
    ஃபாசிச…மனநிலை….

    //தமிழ் விக்கித் திட்டங்கள் ஒரு சிலரின் கட்டுபாட்டில் மொழித் தீவிரவாதத்துடன் நடைபெறுகின்றன என்ற உண்மைக்குப் புறம்பான கருத்தைப் பல இடங்களில் நீங்கள் திரும்பத் திரும்பக் குறிப்பிடுவதை மட்டும் கண்டிக்க விரும்புகிறேன்.//

    நாராயண…….நாராயண…….

  46. .தமிழ் அழியாது அதில் மாற்றங்கள் இருக்கும்.இப்போது பேச்சில் ஆங்கில கலப்பு அதிகமாகிவிட்டது,அது எழுத்திலும்
    தொடர்கிறது. இந்தி,மலையாள
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
    ஆங்கில சொற்கள் மிகவும்
    சாதாரணமாக கலக்கப்படுகின்றன.
    இது எங்கே போய் முடியும் என்று
    தெரியவில்லை.இது தமிழுக்கு
    மட்டுமான சவால் அல்ல.
    மேலும் ஆங்கிலம் வழியே
    இந்திய மொழிகளைக் கற்பதும்,
    புரிந்து கொள்வதும், எழுதுவதும்
    புதிய கேள்விகளை வைக்கின்றன.
    மொழித் தூய்மைவாதம் இந்த
    காலகட்டத்தில் சரியான தீர்வல்ல,
    அதற்காக ஆங்கிலத்தினை கலந்து
    பேசுவதை,எழுதுவதை நான் ஆதரிக்கிறேன் எனக் கொள்ள
    வேண்டாம்.கிரந்த எழுத்துக்களை
    பயன்படுத்துவது ஆங்கில சொற்களை
    பயன்படுத்துவதை விட மேலானது.
    ஜாக்கி சான் என்று எழுதும் போது
    அதன் ஆங்கில எழுத்துக்களை ஒரளவேனும் ஊகிக்கமுடியும்.
    சாக்கி சான் என்றால் அவ்வாறு
    முடியாது.ஹிரோஷிமா என்பதை
    கிரோசிமா என்று எழுதினால்
    ஏற்கனவே அச்சில் ஹிரோஷிமா
    என்று படித்தவர்களுக்கு கிரோசிமா
    என்பது வேறு என்றுதான் தோன்றும்.
    எனவே இப்போது ஷ,ஹ,ஜ போன்றவற்றை பயன்படுத்துவது
    தேவை.
    மொழித் தூய்மைவாதம்,anything goes என்ற சிந்தனையில் ஆங்கிலச் சொற்களை கலப்பது இரண்டிற்கும்
    இடையே இருப்பது என் நிலைப்பாடு.
    அதனால் இருபக்கமும் இடி :).

  47. periyar critic,

    சைனா-சீனா,
    ஸ்ரீலங்கா-இலங்கை
    ஹனுமார் – அனுமார்
    ஹோட்டல் – ஓட்டல்

    எப்படி புரியுமோ அதே போல் ஹிரோஷிமா – இரோசிமாவும் புரியும்.

    ஆங்கிலத்திலேயே ஒலிப்புக்கும் எழுத்துக்கூட்டலுக்கும் தொடர்பில்லை.
    bourgeois என்பதை எத்தனை பேருக்கு சரியாக ஒலிக்கத் தெரியும்? ஒலித்துக்காட்டினால் எத்தனை பேருக்கு சரியாக எழுதத் தெரியும். இதில் இன்னொரு மொழியில் எழுதுவது எல்லாம் ஆங்கில எழுத்துக்கூட்டலை அறிய உதவ வேண்டும் என்பது ரொம்ப…

    அந்தந்த மொழியின் எழுத்துக்கூட்டல், ஒலிப்புகளை அறிய அந்தந்த மொழிகளை நேரடியாக கற்பதே முறை.

    palli என்று எழுதினால் பள்ளியா பல்லியா என்று புரியல.

    pani என்று எழுதினால் பணியா, பனியா என்று புரியல.

    tholilaali என்று எழுதினால் எந்த இடத்தில் ல,ள,ழ வருது என்று புரியல.

    (capital L, N, small N, L, zh போன்ற விசயம் எல்லாம் தமிழ்நாட்டுள்ளே பாதி பேருக்குப் புரியாது)

    இதுக்கு என்ன செய்யலாம்?

  48. ரவி,

    திரு பாலாஜி கூறிய சில கருத்துகளுக்கு என் எதிர்க்கருத்துகளை கூற விரும்புகிறேன்.

    1)பாலாஜி கூறுகிறர்: ஆங்கிலம் … அந்த 26இல் W (double u = uu) உள்ளிட்ட எழுத்துகள் பின்னர் சேர்க்கப்பட்டவையே.

    எப்பொழுது? தொடக்ககாலத்தில் தானே. ஏன், ஆங்கிலம் தற்கால வடிவம் பெறும் முன்னர், பலவகையான தகர ஒலிகள் அவர்கள் மொழியில் அடிப்படையான சொற்களில் இருந்தும் கூட (the, this, that, then, thick, thin, there..) அதுவும் அவர்கள் மொழியில் ஒருகாலத்தில் தார்ன் þ (thorn) போன்ற எழுத்துகள் இருந்தும் அவற்றை நீக்கவில்லையா? ஆங்கிலத்திலே ச, த, ஷ முதலான எழுத்தொலிகளுக்குத் தனி எழுதில்லையே, ஏன் புதிய எழுத்துக்களை சேர்த்துக்கொள்ளவில்லை? இருந்ததையும் அல்லவா விலக்கி உள்ளார்கள்! எனவே 2500 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்ப்புடன் தன் நிலைநின்ற தமிழில் ஏன் புது எழுத்துகள் வேண்டும்? மொழியின் அடிபடையையே, அகரவரிசையையே மாற்றக்கூறுவது ஏற்கமுடியாதது. இது எம்மொழிக்கும் உள்ள நிலைதான். சிறுபான்மையான இடங்களில் வேற்றொலிகளைக் குறிக்க சிறு சிறு ஒலித்திரிபுக்குறியீடுகள் *வேண்டுமென்றால்* இடலாம். இந்த ஒலித்திரிபுகள் கூட கூடாது, திரித்தே எழுதுதல் வேண்டும் என்று கூறுவோரும் உள்ளனர் (அதுவே சரியான நேர்மையான கருத்தும் முடிவும் ஆகும்).
    ஒவ்வொரு மொழியும் அதன் இயல்புப்படியே இயங்கும், அதுவே அழகு, வழமை.

    2) அரபு மொழி உள்பட பல உதாரணங்கள் காட்ட முடியும். என்கிறார் பாலாஜி.

    அரபு மொழியில் எப்பொழுது எந்தக்காலத்தில் மாற்றம் ஏற்பட்டது? ஏன் அரபு மொழியில் இன்றும்கூட ச, ப இல்லை? ஸ்ரீராம் என்று எழுதவேண்டும் என்று கூறி அவர்களை ஸ்ரீ என்னும் ஓரெழுத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லுங்களேன்?

    3)பாலாஜியின் கூற்று: எழுத்துகள் கண்டுபிடிப்பது சாதாரணமான காரியமில்லை. சுமார் 2500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதத்தெரிந்த சமூகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த எண்ணிக்கையில் தமிழர் இருந்தனரா என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

    கட்டாயம் இருந்தனர். தமிழ் எழுத்துகள் கி.மு 500 உக்கும் முந்தையது.
    பார்க்கவும்:
    http://www.hindu.com/2004/05/26/stories/2004052602871200.htm
    அசோகனுடைய பிராமிகூட தமிழ் பிராமியின் வழி வந்ததாக இருக்கலாம். என்னும் கருத்து உள்ளது. எப்படியாயினும். தமிழின் எழுத்து வரலாறு குறைந்தது 2500 ஆண்டுகளாகவேனும் இருந்து வருவது.
    எந்தவித ஆதாரமும் இல்லாமல்
    நீங்கள் “தமிழ் உள்பட பல மொழிகள் பிறரிடமிருந்தே எழுத்துகளைப் பெற்றிருக்கின்றன.” என்று கூறுவது தவறு . அல்லது வலுவான சான்றுகோள் காட்டுங்கள். பிராமி என்று அழைக்கப்படும் எழுத்துமுறையை யார் கண்டுபிடித்தார்கள் என்று தெரியுமா? திடீர் என்று அசோகன் கல்வெட்டுகள் எப்படித் தோன்றின? சிந்துவெளி எழுத்துகள் போன்ற எழுத்துக்கள் தமிழகத்தில் கண்டெடுத்துள்ளன்ர். பார்க்கவும்:
    http://www.hindu.com/2008/05/03/stories/2008050353942200.htm

    4) பாலாஜியின் கூற்று: 18 மெய்களோடு இன்னும் பிற மெய்கள் சேர்த்தால் என்ன குறை என்று நீங்கள்தான் விளக்கவேண்டும். மற்றவர் செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது நல்ல சப்பைக்கட்டு.

    மேலும் எழுத்துக்களை சேர்த்தால் என்ன குறை என்றா கேட்கிறீர்கள்? சேர்த்தால் எழுத்துக்கள் கூடும் 🙂 மற்றவர்கள் சேர்க்கவில்லை என்பது சப்பைக்கட்டு அல்ல. அவரவர் விருப்பத்துக்கு ஏற்றார் போல புதிய புதிய எழுத்துகளைச் சேர்க்க முடியாது. ஏன் ஆங்கிலத்தில் sh க்கு ஒரு தனி எழுத்து சேர்க்கலாமே. தமிழ் என்று எழுதவும், நம் பழனியப்பனை அழைக்க ழகரத்தைச் சேர்க்கலாமே என்று கூறமுடியுமா? Jeus என்பதைக் கூட ஒலிக்கமுடியாத எசுப்பானிய மொழி, டாய்ட்சு (செருமானிய மொழி) இல்லையா? அதற்காக அவர்கள் என்ன ஜகரம் என்னும் எழுத்தை சேர்த்துக்கோண்டார்களா?

    5) “என்னால் கிரைஸ்டாப் கெஸ்லாவ்ஸ்கி” என்று கூறமுடிகின்றது என்கிறீர்கள். ஏன் கிரைசுடாப் கெசுலாவிசிக்கி என்று சொன்னால் என்ன? நீங்கள் எழுதியுள்ளவாறு சொன்னாலும் திரிபுதானே? இதெல்லாம் வாதமா? இன்னொரு இடத்தில் ஹாஹா என்று எழுதமுடிகிறதே என்கிறீர்கள். ஏன் தமிழர்கள் இதுவரை யாருமே சிரிக்கவில்லையா, அல்லது ஹாஹா என்றுதான் சிரிக்கிறார்களா? ஏன் ஃஆ ஃஆ அல்லது ஆஃகாஃகா என்று சிரிக்ககூடாதா, இஃகீஃகீ என்று சிரிங்களேன். கிரந்தச்சிரிப்பு தனித்தமிழ் சிரிப்பு என்ரு உண்டா??!! அவன் கெக்கெகே என்று சிரித்தான் என்று எழுதுவதில்லையா? ஆகா அருமை என்று சொல்வதில்லையா? அனுமான், அரி, அரன் என்று எழுதுவதில்லையா? தமிழில் எல்லா ஒலிகளுக்கும் எழுத்து என்பது கிடையாது. மாடு ஓட்டுபவன் நாவை மடித்து சொடுக்கி ஒலிக்கும் ஒலிக்கெல்லாம் எழுத்து என்பது தமிழில் கிடையாது. kaboom என்று எழுதினாலும் அப்படியா வெடிக்கின்றது. ஏன் பறவை ஒலிகளை எழுதிக்காட்டுங்களேன். தமிழ் எழுத்துக்கள் தமிழுக்காக. பிறசொற்கள் மற்றும் வேற்றொலிகளை தம் இயல்புக்கு ஏற்றவாறு மாற்றி எழுதி வழங்குவதே முறை. எல்லா மொழிகளும் அதனையே செய்கின்றன. என் பெயர் Selvakumar என்று ஆங்கிலத்தில் (இலத்தீன் எழுத்துகளால்) எழுதினாலும், அவர்கள் ஒலிப்பு தவறாகவே உள்ளது அதற்கு என்ன செய்ய? இத்தனைக்கும் எல்லா ஒலிப்புகளும் அவர்கள் மொழியில் உள்ளது. ஆனால் சீராக ஒவ்வொரு உயிர்மெய் ஒலிகளையும் சொல்லும் வழக்கம் அவர்களிடம் இல்லை. கண்ணன் என்னும் எளிய பெயரைக்கூட அவர்களால் சொல்ல இயலவில்லை. ணகரத்தை எடுத்துக்கொள்ளச்சொல்லி அவர்கள் எடுத்துக்கொண்டாலும் முன்னேற்றம் ஏதும் காண்பது அரிது. மொழியின் இயல்பு (ஒலிக்கும் இயல்பு) அப்படி.

    இன்னும் நிறைய எழுதலாம். ஆனால் இதுவே மிகவும் நீண்டுவிட்டது. தமிழ் மொழியில் எழுதும் பொழுது தமிழ் மொழியின் முறைமகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதே முறைமை. அது மொழித் தூய்மை அல்ல, அடிப்படைப் பண்பாடு, உலக வழக்கு.

    செல்வா

  49. விளக்கங்களுக்கு நன்றி செல்வா. மொழியியல் நோக்கில் தமிழுக்கு வலு சேர்க்கும் கருத்துகளை தொகுத்து உங்கள் வலைப்பதிவில் எழுதினால், அதைச் சுட்டிப் பேசுவதற்கு உதவியாக இருக்கும்.

  50. //ஆங்கிலத்திலே ச, த, ஷ முதலான எழுத்தொலிகளுக்குத் தனி எழுதில்லையே, ஏன் புதிய எழுத்துக்களை சேர்த்துக்கொள்ளவில்லை? //

    நல்ல கேள்வி. பதில் இல்லையே

    அது போல்

    உங்களுக்கு இந்தி தெரியுமா

    தமிழ் என்பதை எப்படி எழுதுகிறார்கள்

    तमिल என்றா
    அல்லது
    तमिழ் என்றா

    இந்தி தெரிந்தால் நீங்களே பதில் கூறுங்கள்

    அல்லது யாரிடமாவது கேட்டு கூட கூறலாம்

    இதற்கும் பதில் இல்லை 🙂 🙂

  51. திரு செல்வகுமார்,

    // 1) (W சேர்க்கப்பட்டது) எப்பொழுது? தொடக்ககாலத்தில் தானே. //

    லத்தின் வரலாற்றில் W சேர்க்கப்பட்ட ஏழாம் நூற்றாண்டு தொடக்க காலமா? சுமார் 2500 ஆண்டு தமிழர் எழுத்து வரலாற்றில் சுமார் 1000 ஆண்டுகள் சமீபம் ஆகிவிட்டதா? நல்ல சப்பைக்கட்டு.

    // அதுவும் அவர்கள் மொழியில் ஒருகாலத்தில் தார்ன் þ (thorn) போன்ற எழுத்துகள் இருந்தும் அவற்றை நீக்கவில்லையா? //

    மொழிக்கு தேவையானவற்றை சேர்த்துக்கொள்வதும், தேவையில்லாதவற்றை நீக்குவதும் இயல்பானது என்று மீண்டும் நிரூபித்தமைக்கு நன்றி!

    // ஆங்கிலத்திலே ச, த, ஷ முதலான எழுத்தொலிகளுக்குத் தனி எழுதில்லையே, ஏன் புதிய எழுத்துக்களை சேர்த்துக்கொள்ளவில்லை? //

    மடத்தனமான கேள்வி. ஒரே எழுத்தில் எழுதவேண்டும் என்பது எனது வாதமல்ல. அந்த ஒலியை அந்த எழுத்தில் எழுதமுடிகிறதா என்பதே விவாதம். sa, tha, sha என்று சுலபமாக எழுதமுடிகிறதே.

    // 2) அரபு மொழியில் எப்பொழுது எந்தக்காலத்தில் மாற்றம் ஏற்பட்டது? ஏன் அரபு மொழியில் இன்றும்கூட ச, ப இல்லை? ஸ்ரீராம் என்று எழுதவேண்டும் என்று கூறி அவர்களை ஸ்ரீ என்னும் ஓரெழுத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லுங்களேன்? //

    அரபு எழுத்துகளில் பாரசீக மொழியை எழுதுவதற்காக அரபு எழுத்துகளில் புதிய எழுத்துகள் சேர்க்கப்பட்டன. தமிழில் கிரந்த எழுத்துகள் சேர்க்கப்பட்டதற்கான மிக நேரான உதாரணம் நான் கொடுத்தது.

    சிறீராம் என்று அரபு மொழியில் எழுதவேண்டிய அவசியமென்ன? தமிழருக்கு தெரிந்த ஒலிகளை தமிழில் எழுத முடியவேண்டும் என்பதே விவாதம்.

    கிரந்தம் சேர்த்தாலும் உலகின் எல்லா மொழிகளையும் தமிழில் எழுதிவிடமுடியும் என்று நான் எங்கும் சொல்லவில்லை. தமிழருக்கு பரிச்சயமான ஒலிகள், தமிழுக்கு வார்த்தைகளை வழங்கிய, வழங்கும் நிலையிலிருக்கும் இந்திய மொழிகள், ஆங்கிலம், அரபு மொழி ஆகியவற்றை பற்றி கவலைப்பட்டாலே போதுமானது.

    // 3) கட்டாயம் இருந்தனர். தமிழ் எழுத்துகள் கி.மு 500 உக்கும் முந்தையது.
    பார்க்கவும்:
    http://www.hindu.com/2004/05/26/stories/2004052602871200.htm
    அசோகனுடைய பிராமிகூட தமிழ் பிராமியின் வழி வந்ததாக இருக்கலாம். //

    பிராமி, இந்து சமவெளி எழுத்துகள் குறித்து கிடைத்துவரும் சான்றுகளை நான் எனது வலைப்பதிவில் சுட்டுவது வழக்கம்.

    நாம் பயன்படுத்தும் வட்டெழுத்து பிராமி எழ்த்துகளினின்று வந்தது என்றும், அந்த பிராமி எழுத்துகள் மகதத்திலிருந்து வந்த சமணர் கொண்டுவந்திருக்கலாம் என்பதும் மிகச் சாதாரணமான மொழி அறிவு.

    நடுவன் கற்களில் எழுதப்பட்டதே தற்போதைய தமிழ் எழுத்தின் மூலம் என்று நிறுவப்படவேண்டும் என்று நான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன்.

    எழுத்து கண்டுபிடிக்கப்பட்டாலே அது தமிழ் எழுதப் பயன்பட்டது என்று சொல்லி விடமுடியாது. இந்து சமவெளி எழுத்தெல்லாம் தமிழரின் எழுத்து என்னும் கீழ்த்தரமான போலி மார்த்தட்டலில் இறங்கவேண்டியதில்லை. (we are not discussing the dravidians here, only about the tamil language.) ஆதாரங்கள் கிடைக்கும்வரை அடங்கியிருப்பதும், கிடைத்தால் தீர ஆராய்வதுமே சான்றோர்க்கு அழகு.

    // Jeus என்பதைக் கூட ஒலிக்கமுடியாத எசுப்பானிய மொழி, டாய்ட்சு (செருமானிய மொழி) இல்லையா? அதற்காக அவர்கள் என்ன ஜகரம் என்னும் எழுத்தை சேர்த்துக்கோண்டார்களா? //

    மற்றவர் செய்யவில்லை என்பது சப்பைக்கட்டு என்றும், செய்துள்ள அரபு, லத்தின் மொழிகள் பற்றியும் நான் ஏற்கனவே எழுதிவிட்டேன்.

    // ஏன் ஃஆ ஃஆ அல்லது ஆஃகாஃகா என்று சிரிக்ககூடாதா, இஃகீஃகீ என்று சிரிங்களேன். கிரந்தச்சிரிப்பு தனித்தமிழ் சிரிப்பு என்ரு உண்டா??!! அவன் கெக்கெகே என்று சிரித்தான் என்று எழுதுவதில்லையா? //

    ஹாஹா, புஸ்வானம், உஷ், ஜல்ஜல் என்ற ஒலிகள், சொற்களெல்லாம் கிராமத்தவருக்கும் நன்கு பரிச்சயமானவையே என்று வலியுறுத்தவே அந்த உதாரணங்களை நான் கொடுத்தேன். அந்த ஒலிகள் தமிழில் எழுதப்படவேண்டியவைதானே?

    ஆயுதம் கொண்டும் கிரந்த ஒலிகளை எழுதமுடியும் என்று நான் ஏற்கனவே மேலே குறிப்பிட்டிருக்கிறேன். ஆயுதம் கொண்டெழுதினாலும், கிரந்தம் கொண்டெழுதினாலும் எனக்கு சந்தோஷமே. அந்த ஒலிகளே எங்களுக்குத் தேவையில்லை என்னும் ‘தனித்தமிழ்’ முட்டாள்தனத்தையே நான் எதிர்க்கிறேன்.

    // Selvakumar என்று ஆங்கிலத்தில் (இலத்தீன் எழுத்துகளால்) எழுதினாலும், அவர்கள் ஒலிப்பு தவறாகவே உள்ளது அதற்கு என்ன செய்ய? //

    பழக்கமின்மை ஒரு பிழையில்லை என்று நான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன். கிரைஸ்டாப் கெஸ்லாவ்ஸ்கி உதாரணம் அதற்குதான் கொடுத்தேன். என் கிராமத்தவருக்கு தெரிந்ததே தமிழ் என்னும் ரவியின் சங்கை நீங்களும் வாங்கி ஊதவேண்டியதில்லை. selvakumar என்று ஆங்கிலத்தில் எழுதமுடிவதுதான் முக்கியம்.

  52. * இலத்தீனம் W சேர்த்துக்கொண்டது பிற மொழிச் சொற்களை எழுதிக் காட்டவா தன் மொழிச் சொற்களை எழுதிக் காட்டவா?

    * //அரபு எழுத்துகளில் பாரசீக மொழியை எழுதுவதற்காக அரபு எழுத்துகளில் புதிய எழுத்துகள் சேர்க்கப்பட்டன.//

    சேர்த்தவர்கள் அராபியர்களா? பாரசீகர்களா? இப்போது இவ்வெழுத்துகள் அரபு மொழியிலும் பாரசீக / பாரசீக மொழியல்லா சொற்களை எழுதும் தேவை பொருட்டு புழக்கத்தில் உள்ளனவா? நீங்கள் குறிப்பிட்ட விக்கிப்பீடியா கட்டுரையிலேயே

    Languages using the Perso-Arabic script

    Currently Use

    * Azerbaijani
    * Balochi
    * Gilaki
    * Kashmiri
    * Kazakh In China and Iran
    * Kurdish (Kurmanji dialect in Iran and Iraq, Soranî dialect)
    * Kyrgyz in China and Afghanistan
    * Mazandarani
    * Persian, except Tajik dialect
    * Western Punjabi (Shahmukhi script)
    * Sindhi
    * Turkmen
    * Urdu
    * Uzbek in China and Afghanistan
    * Uyghur

    Used Before
    A number of languages have used the Perso-Arabic script before, but have since changed.

    * Azerbaijani in the Republic of Azerbaijan (changed first to Latin, then Cyrillic)
    * Chaghatay Turkic (changed first to Latin, then Cyrillic)
    * Turkish (changed to Latin)
    * Tajik (changed first to Latin, then Cyrillic)
    * Turkmen in the republic of Turkmenistan (changed first to Latin, then Cyrillic)
    * Uzbek (changed first to Latin, then Cyrillic)

    என்று உள்ளதே? இதில் அரபு மொழியைக் காணோம்? இவ்வெழுத்துகள் அராபியருக்குத் தேவையா? பிற மொழியினருக்குத் தேவையா?

    பாரசீக மொழியை எழுதும் தேவைக்காக, தங்களுக்கு என தனித்த எழுத்து முறை இல்லாத பாரசீகர்கள், அராபிய மொழி எழுத்துகளோடு சில எழுத்துகளையும் சேர்த்து தங்கள் மொழியை எழுதி உள்ளார்கள் என்பதே என் புரிதல். இது எப்படி தமிழ்-கிரந்த உறவுக்கு நேராகும்? உங்கள் கூற்றுப்படி, தமிழர்கள் பாரசீகர்கள் போல் தங்களுக்கு என்று எழுத்தே இல்லாமல் இருந்து பிறரிடம் இருந்து எழுத்துகளைப் பெற்றாலும், தங்கள் மொழிக்கான எழுத்துகளை அல்லவா பெற வேண்டும்? தங்கள் மொழியில் இல்லாத ஒலிகளுக்கான எழுத்துகளை ஏன் பெற வேண்டும்? ல, ழ, ள, ற, ர, ன, ண, ந என்று துல்லியமான ஒலி வேறுபாடுகளும் எழுத்துகளும் உள்ள பிற மொழிகள் என்ன? இல்லை, பிற மொழிகளில் இருந்து வெறும் தேவையான எழுத்து வடிவங்களைப் பெற்று மாறுபட்ட தனது ஒலிகளுக்கான எழுத்து வடிவங்களாகப் பொருத்திக் கொண்டதா?

    அல்லது, கிரந்தம் எழுதியவர்கள் பாரசீகர்கள் போல் தமிழில் இருந்து சில எழுத்துகளைப் பெற்று கூடவே கிரந்த ஒலிகளுக்கான எழுத்துகளையும் சேர்த்துக் கொண்டார்களா? பிற மொழியாளர்களின் தேவைக்கு எழுதிய ஒரு எழுத்து முறையை எப்படி தமிழ் என்று ஏற்றுக் கொள்ள முடியும்? Perso-Arabic script போல தமிழ்-கிரந்த எழுத்து என்று வேண்டுமானால் பெயர் சூட்டிக்கொள்ளலாம். ஒரு வேளை மலையாளத்துக்கு இது பொருந்துமோ? அதன் எழுத்துகள் தமிழை ஒத்தும், கிரந்த ஒலிகளைச் சுட்டும் தேவையான எழுத்துகளுடனும் உள்ளது.

    * அவன் செய்யவில்லை என்பதால் நாமும் செய்யத் தேவையில்லை என்பது சப்பைக்கட்டு என்றால் அவன் செய்தான் என்று நாமும் செய்வோம் என்பதும் சப்பைக் கட்டு தான். எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டதற்கு இரண்டு மொழிகள் எடுத்துக்காட்டு என்றால் சேர்த்துக்கொள்ளாமலேயே நன்றாக இருக்கும் மொழிகளுக்கு 100 எடுத்துக்காட்டுகள் தரலாம். உலக கொள்கைகள் பல இருந்தாலும் உள்ளூர்த் தன்மை, இயல்பு, நிலை குறித்து ஆய்ந்தே முடிவு செய்ய இயலும்.

  53. // * அவன் செய்யவில்லை என்பதால் நாமும் செய்யத் தேவையில்லை என்பது சப்பைக்கட்டு என்றால் அவன் செய்தான் … //

    அப்பா சாமி!!! வேறு எந்த மொழியிலாவது செய்திருக்கிறார்களா என்று சரமாறியாக சல்லியடித்துக்கொண்டிருந்த உங்களுக்கு பதில் அளிக்கத்தான் லத்தீன், பாரசீகம் போன்ற உதாரணங்களைக் கொடுத்தேன். ஆரம்பம் முதலே தமிழுக்குத் தேவையான ஒலிகளை தமிழில் எழுத முடியவேண்டுமென்பதே எனது விவாதம். சும்மா சுழற்றி சுழற்றி விதண்டாவாதம் செய்ததில் நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பதே உங்களுக்கு மறந்துவிட்டதா?!

    மற்றபடி நீங்கள் கேட்டிருக்கும் மற்ற இரண்டு கேள்விகளுக்கும் விடையளிக்கும் முன், இந்த விசயங்களை இணையத்தில் தேடி தெரிந்துகொள்ள ஒரு ஐந்து நிமிடம் ஆகியிருக்குமா? உங்களது கருத்துகளுக்கு எதிரான ஆதாரங்களை நீங்கள் புறக்கணிக்க விரும்புகிறீர்கள் என்று தோன்றுகிறது. நான் பிடித்த முயலுக்கு …

    1. லத்தீன் Nordic மற்றும் Germanic மொழிகளின் பரிச்சயத்தால் புதிய எழுத்துகளை, சொற்களை பெற்றது. மேலும் விவரங்களை நீங்களே இங்கு படியுங்களேன்!

    பிற மொழி சொற்களை, அதன் மூலம் புதிய ஒலிகளை, தேவைப்பட்டால் எழுத்துகளை ஏற்றுக்கொள்வது எல்லா மொழிகளுக்கும் அழகே.

    2. அரபு எழுத்துகளுக்கும், தமிழுக்கு நேரடி தொடர்பு இருக்கிறது என்று நான் சொன்னது நம்பமுடியாத அளவுக்கு உண்மையே!! அரபு எழுத்துகள் கொண்டு பிற மொழிகளை எழுதவே Perso-arabic எழுத்து கண்டுபிடிக்கப்பட்டது என்பது சரியே. ஆனால் பிற்காலத்தில் எப்படி கிரந்த எழுத்துகள் தமிழுக்கே தேவைப்பட்டு அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதோ, அதே போல Va, Pa, Cha, Gaf உள்ளிட்ட எழுத்துகள் மீண்டும் அரபு மொழியிலேயே பயன்பட ஆரம்பித்தன.

    தமிழ் போன்றே அங்கும் பிறமொழிகளினின்றும் உள்வாங்கப்பட்ட சொற்களை எழுதவே இந்த எழுத்துகள் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. உங்களைப் போன்றே அங்கும் இவ்வெழுத்துகளை தவிர்த்து எழுதுவோரும் உண்டு.

  54. >> ல, ழ, ள, ற, ர, ன, ண, ந என்று துல்லியமான ஒலி வேறுபாடுகளும் எழுத்துகளும் உள்ள பிற மொழிகள் என்ன?

    இந்த நகைச்சுவைக்கு முடிவேயில்லையா? நீங்கள் ‘விரும்பி வெறுக்கும்’ சமசுகிரதம், ஹிந்தி உள்ளிட்ட எண்ணற்ற இந்திய மொழிகளையே உதாரணம் காட்டலாமே?

    தமிழ் மேல் காதல் இருப்பது பாரட்டத்தக்கதே. அதற்காக பிறமொழிகளை இகழவேண்டியதில்லை. தமிழ் ஏன் செம்மொழியாய் கருதப்படுகிறது என்பதையும் நீங்கள் படித்துத் தெரிந்துகொள்வது இத்தகைய சுய-தம்பட்டங்களைத் தவிர்க்க உதவும்.

    கொஞ்சம் “மனோதத்துவ ஆராய்ச்சி” செய்ததில், நீங்கள் ஆங்கிலத்தை குறைவாக மதிப்பிடுவது இத்தகைய நகைச்சுவைகளுக்கு காரணமென்று நினைக்கிறேன். நான் சொல்வது சரியா?

  55. balaji, தனியாள் சாடல்களும், உளவியல் ஆராய்ச்சிகளும் இவ்வுரையாடலை நட்புடன் தொடர எந்த வகையிலும் உதவாது.

  56. ம்… கேட்ட கேள்விகளுக்குத்தான் பதில் சொல்லியிருக்கிறேனே? எனது முந்தைய பதிலை அனுமதிக்கப் போவதில்லையா?

    மற்றபடி “ல, ழ, ள, ற, ர, ன, ண, ந” மாதிரி நகைச்சுவைகளெல்லாம் நீங்கள் செய்யவது ஏனென்று யோசித்தேன். அவ்வளவே.

  57. பாலா’சி,

    நீங்கள்:
    //மொழிக்கு தேவையானவற்றை சேர்த்துக்கொள்வதும், தேவையில்லாதவற்றை நீக்குவதும் இயல்பானது என்று மீண்டும் நிரூபித்தமைக்கு நன்றி!//

    எனவே இப்பொழுது கலந்து வரும் கிரந்த எழுத்துக்களை நீக்கலாம் என்கிறீர்கள்.

    நன்றி.

    செல்வா

  58. balaji, WordPress சில சமயம் நீளமான மறுமொழிகளையும் தொடுப்புகள் உடைய மறுமொழிகளையும் மட்டுறுத்தல் வரிசையில் தானாக சேர்த்து விடுகிறது. மற்றபடி, மறுமொழிகள் மட்டுறுத்தல் இன்றி உடனுக்குடன் வெளியாவதை நீங்கள் காணலாம். //கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்// என்று சொல்லும் முன் மட்டுறுத்தல் வரிசையில் உங்கள் பதில் இருந்ததைக் கவனிக்கவில்லை. கவனித்த பின் என் மறுமொழியைத் திருத்திக் கொண்டேன். குழப்பத்துக்கு மன்னிக்கவும்.

    * ழகரம் தமிழுக்குத் தனித்துவமானது என்கிறார்கள். பிறகு, அதற்கான எழுத்தை மட்டும் வேறு எந்த மொழியில் இருந்து பெற்றுக் கொண்டது? ஏதோ ஒரு எழுத்தைப் பெற்றுத் தனக்குத் தேவையான ஒலிக்குப் பொருத்திக் கொண்டதா என்பதே கேள்வி. இவ்வுரையாடலைப் படிப்போருக்கு இரு பக்க தகவல்களும் தெரியட்டும் என்றே நேரடியாக உங்களிடமே கேள்விகளைக் கேட்டு பதிலைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

    * //ஒரே எழுத்தில் எழுதவேண்டும் என்பது எனது வாதமல்ல. அந்த ஒலியை அந்த எழுத்தில் எழுதமுடிகிறதா என்பதே விவாதம். sa, tha, sha என்று சுலபமாக எழுதமுடிகிறதே//

    பிறகு ஏன் ஸ்ரீ என்பதை மட்டும் ஒரே எழுத்தில் எழுத வேண்டும்? சிறீ என்று எழுதலாமே? siri வேறு sri வேறு என்பீர்கள். தமிழில் மெய்யெழுத்து முதலில் வராது என்பது இலக்கணம். பிரியா (ப்ரியா அல்ல), கிருத்திகா (க்ருத்திகா அல்ல) என்று எழுதுவது போல் இலக்கணப்படி சிறீ அல்லது சிரீ என்று எழுதுவது சரியாகவே இருக்கும்.

    நன்னூல், தொல்காப்பியங்கள் எழுதியவருக்கு வட மொழி தெரியாமல் போயிருக்கலாம் என்கிறீர்கள். திருவாய் மொழி எழுதியவருக்காவது தெரிந்திருக்குமா?

    திருவாய்மொழி இரண்டாம் பகுதியில் (பாடல் 2858ல்)

    தூமனத் தனனாய்ப் பிறவித்

    துழதி நீங்க என்னைத்

    தீமனங் கெடுத்தா யுனக்கென்

    செய்கேனென் சிரீதரனே!

    என்று வருவதைக் கவனிக்கலாம்.

    இல்லை, திருவாய்மொழி எழுதியவரும் உங்கள் பார்வையில் வட மொழி வெறுப்பாளர், தமிழ் மொழி பெரிசு என தம்பட்டம் அடிப்பவரா?

    ஸ்ரீ குறித்த இடுகையையும் பாருங்கள்.

  59. நான்: “ஆங்கிலத்திலே ச, த, ஷ முதலான எழுத்தொலிகளுக்குத் தனி எழுதில்லையே, ஏன் புதிய எழுத்துக்களை சேர்த்துக்கொள்ளவில்லை? ”

    ‘பாலா’சியின் மறுமொழி:

    //மடத்தனமான கேள்வி. ஒரே எழுத்தில் எழுதவேண்டும் என்பது எனது வாதமல்ல. அந்த ஒலியை அந்த எழுத்தில் எழுதமுடிகிறதா என்பதே விவாதம். sa, tha, sha என்று சுலபமாக எழுதமுடிகிறதே. //

    “மடத்தனமான கேள்வி” என்று கூறுவதில் இருந்து உங்கள் பண்பாடு விளங்குகின்றது.

    இப்பொழுது செய்திக்கு வருவோம். ஒரே எழுத்து தேவை இல்லை எனில் நாம் எவ்வளவோ முன்னேறலாம் (இந்த வேற்றொலிகளைத் தமிழில் சிறுபான்மை குறிக்க)!!

    Ga, Gi, Gu.. = ‘க ‘கி, ‘கு
    Ja, Ji, Ju..= ‘ச, ‘சி, ‘சு
    D, Di, Du…. = ‘ட, ‘டி. ‘டு
    Dha, Dhi, Dhu….= ‘த, ‘தி, ‘து
    Ba, Bi, Bu…= ‘ப, ‘பி, ‘பு

    Sha = ^ச
    ஸ = ˘ச
    Za = *ச

    Ha = ஃஅ (அல்) ஃக
    (இப்பொழுது Hanuman = அனுமான். துல்லியம் வேண்டின் ஃஅனுமான்;
    இட்லர் -> ஃஇட்லர்).

    கடைசியாக , நீங்கள்
    //அந்த ஒலியை அந்த எழுத்தில் எழுதமுடிகிறதா என்பதே விவாதம். sa, tha, sha என்று சுலபமாக எழுதமுடிகிறதே.//

    கூறும்பொழுது ஆங்கிலேயரால், யாழினி, பழனியப்பன், வள்ளியம்மாள், அழகப்பன், ஆறுமுகம், ஞானசம்பந்தன் முதலான பெயர்களை ஆங்கிலத்தில் எழுத முடியவில்லையே என்றும் கருதவேண்டும்.

    எல்லா ஒலிகளையும் எல்லா மொழிகளிலும் எழுதி ஒலிக்க முடியாது என்னும் அடிப்படையை நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.

    அனைத்துலக ஒலிப்பியல் குறியீடுகளைத் தங்கள் மொழிகளில் அன்றாடப் பயன்பாட்டுக்காக, “இயல்பாக” மற்ற எல்லா மொழிகளும் பயனபடுத்தத் துவங்கும் பொழுது நாமும் அதுபற்றிச் சிந்திப்போம். அப்பொழுதும் துல்லியம் முழுவதுமாகக் காட்ட இயலாது என்பது உண்மை.

    செல்வா

    பி.கு நீங்கள் ஓரெழுத்தில் எழுதத் தேவை இல்லை, ஒலிதான் முக்கியம் என்றதால், உங்கள் பெயரை ‘பாலா’சி என்று எழுதியுள்ளேன். தமிழில் உங்கள் பெயரை பாலாசி என்றுதான் எழுதவியலும். எசுப்பானிய மொழியிலும் ‘டாய்ட்சு மொழியிலும் உங்கள் பெயரை ‘பாலாஃகி, ‘பாலாயி என்றுதான் ஒலிப்பார்கள். அதற்காக அவர்கள் மொழியை மாற்றிக்கொள்ளச்சொல்ல முடியாது. அதுபோலத்தான் தமிழ்மொழிக்கும். அவர்கள் மாற்றிக்கொண்டாலும் தமிழும் மாற்ற வேண்டும் என்னும் கட்டாயம் ஏதும் இல்லை. அதனையும் நினைவில் கொள்க. மொழியையே மாற்றாமல், சிறுபான்மை இடங்களில் குறியீடு இட்டு ஒலிப்புத்துல்லியத்தைக் கூட்டிக் காட்டுவதில் ஓரளவுக்கு எனக்கு ஏற்பு உண்டு.

  60. ரவி,

    நாம் இந்த விவாதத்தின் இந்தப் பகுதியை இத்தோடு முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    இந்த கொடுக்கல்-வாங்கலின் முடிவில் கிரந்த எதிர்ப்புக்கு எந்தவொறு நல்ல காரணமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

    திசைச்சொற்கள் தவிர்த்து தொல்காப்பியத்திலும், குறிப்பாக நன்னூலிலும் தமிழின் ஒலி குறைபாடுகள் அறியப்படாமையும், அறிந்திருந்தால் அது பெரிதாக செப்பணிடப்படவேண்டியதாக கருதப்படாததும் ஏனென்று மட்டும் நான் தெரிந்துகொள்ள வேண்டியிருப்பது தெரிகிறது.

    எப்போதும் போலவே 🙂 விவாத சூட்டில் நான் தெரிவித்த ரசக்குறைவான கருத்துகளுக்காக வருந்துகிறேன். என்னுடைய sarcasm என்னை பிரச்சனையில் மாட்டச்செய்வது இது முதல் முறையன்று. உங்களுடைய பொறுமை உங்களைக் கைவிடவில்லை!

    மற்றபடி, உங்களின் கிரந்த எதிர்ப்பு எனக்கு உண்மையிலேயே மிகுந்த மனவருத்தத்தை தருகிறது.

    1. முதலில் இது உங்களுக்கு நேர விரயம். இந்த நேரத்தில் உபயோகமான பல செயல்களை நீங்கள் செய்ய்க்கூடியவர் என்று எனக்குத் தெரியும்.

    2. balaji மாதிரியெல்லாம் நண்பர்களின் பெயர்களை நீங்கள் மாற்றி எழுதி அதுவே நாகரீகம் ஆகிவிடப்போகிறது!!

    சில நூறு ஆண்டுகள் புதிய கிரந்தம் வேண்டாமெனினும், பல ஆயிரம் நொடிகள் பழமையான தமிழ் ஆசான் செல்வகுமாரின் apostrophe கொண்டாகிலும் தூய தமிழை வளருங்கள் 🙂

    damn, sarcasm again … sorry.

    3. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டலும், உங்கள் கருத்துகளை சேரியமாய் எடுத்துக்கொள்பவர்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் அல்லது விக்கி திட்டங்களில் இருக்கக்கூடும் என்பதையும் நீங்கள் கவணத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

  61. //ஹாஹா, ஜல்ஜல், புஸ்வானம், பாம்பு புஸ் புஸ் என்றது என்பதை கிரந்தம் இல்லாமல் எப்படி எழுதுவது//

    என்று தொடர்ந்து பல இடங்களில் கேட்கிறீர்கள்.

    ஹாஹா, ஜல்ஜல், புஸ் புஸ் போன்றவை சொற்களே அல்ல. இவை தொடர்புடைய ஒலிகளை எழுதிக் காட்ட ஒரு குறியீடு. அவ்வளவு தான்.

    கிரந்தம் இருப்பதால் சிலர் அதைக் கொண்டும் எழுதுகிறார்கள். இல்லாவிட்டாலும், ஆகா, சல சல என்று எழுதுவோம்.

    ஆற்று நீர் சலசலவென்று ஓடியது என்று எழுதினால் அது ஓடாமல் நின்றுவிடுமா?

    கிரந்தம் வருவதற்கு முன் யாரும் சிரிக்கவே இல்லையா? இல்லை சிரித்தும் எழுதிக் காட்டவே முடியவில்லையா? இல்லை, எல்லா உலக மொழிகளிலும் ஹாஹா என்று மட்டுமே சிரிப்பை எழுதிக் காட்டுகிறார்களா? இல்லை, அவர்கள் எல்லாம் வேற மாதிரி சிரிக்கிறார்களா?

    ஹாஹா, ஜல்ஜல், புஸ் புஸ் என்று எழுதுவது எல்லாமே ஒரு வகை approximation தான்.

    பாம்பு படம் எடுப்பதை, நீர் சலசலத்து ஓடுவதை ஒலியுடன் படம் பிடித்துப் போட்டுக் காட்டினால் அதை எல்லா உலக மொழிக்காரனும் புஸ் புஸ், ஜல் ஜல் என்றே எழுதிக் காட்டப்போவதில்லை என்கையில் ஒலிப்புத் துல்லியம் எங்கே போகிறது?

    புசு புசுவெனப் பொரிவது புசுவானம் என்று சொல்லலாகாதா? புஸ்வானம் என்று எழுதினால் தான் வெடிக்குமா?

    ‘சதக் சதக்’ என்று குத்தினான்.
    வெடிகண்டு ‘டமார்’ என்று வெடித்தது என்று சொல்கையில் அவை குறியீடுகள் தாமே தவிர, ஒலிப்புத் துல்லியம் தருவன அல்ல.

    ஒரு மொழியின் சொற்களை எழுதத் தான் எழுத்துகள். மனிதனைச் சுற்றியுள்ள ஓசைகளை எழுதிக் காட்ட அல்ல.

    மொழிகளே தோன்றுவதற்கு முன் கண்டிப்பாக ஒவ்வொரு மொழிக்காரனும் செரிமானக் கோளாறு காரணமாக கு* விட்டிருப்பான். இதை எல்லா மொழிகளிலும் எப்படி எழுதிக் காட்டுகிறார்கள்?

  62. //சிறீராம் என்று அரபு மொழியில் எழுதவேண்டிய அவசியமென்ன? தமிழருக்கு தெரிந்த ஒலிகளை தமிழில் எழுத முடியவேண்டும் என்பதே விவாதம்.//

    ஸ்ரீநிவாஸ ராமானுஜன் என்று அவர்கள் எழுதவேண்டாமா? ஸ்ரீலங்க்கா என்று எழுதவேண்டாமா? ஸ்ரீரங்கம் என்று எழுத வேண்டாமா? நாம் சிறீலங்கா, சீனிவாசன், சிறீனிவாசன், சிரீதர் என்று எழுதினால் ஏன் எரிந்து விழுகிறார்கள் நம்மில் சிலர்?

    நீங்கள் கூறும் “கிரைஸ்டாப் கெஸ்லாவ்ஸ்கி” என்னும் பெயரை
    கிரைசுடாப் கெசுலாவ்சிக்கி என்றாலோ கிரைசுடாப் கெசிலாவ்சிக்கி என்றாலோ என்ன குறைவு? Gandhi என்று பெயரை ஆங்கிலத்திலே எழுதினாலும், அவன் இனிக்கட்டி, மிட்டாய் போல கேண்டி என்பதுபோலத்தான் ஒலிக்கின்றான். Buddha என்று எழுதினாலும், பூடா என்கிறான். அவன் மொழியில் ‘த இல்லை (அன்றாட வாழ்க்கையில் பொது ஒலிப்பாக). இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் மொழியில் the, this, that, then they, father, hither, என்பன அடிப்படைச்சொற்கள் என்றாலும், இந்த மெல்லொலி தகரம் ( ‘த) அவர்களால் எல்லா இடத்திலும், ஒலிப்பொழுக்கத்துடன் ஒலிக்க இயலவில்லை.

    எனவே அவர்களிடம் போய், அப்பா உங்கள் மொழியில் இந்த மெல்லொலி தகரம் உள்ளது ஆகவே ஒரு புது எழுத்தை வைத்துக்கொள்வோம் என்று கூறி முதல் வகுப்பில் இருந்து சொல்லிக்கொடுக்கச் செய்ய முடியுமா?
    அதுமட்டுமா, caṅkattamiḻ என்று எழுதி அங்கே ṅ என்பதை ங் என்று ஒலிக்க வேண்டும், ḻ என்றால் ழ் ஏன் என்றால் எல் என்னும் எழுத்துக்கு கீழே ஒரு கோடு இருக்கு பார்த்தாயா என்று கூறி, இதனையெல்லாம் நம்ம a, b, c, d வரிசையோடு கறுக்கொள்ளலாம் என்றால் ஒப்புக்கொள்வார்களா?

    செல்வா

  63. //ஜல் ஜல்//

    ‘டாய்ட்சு மக்கள் ” யல் யல் ” என்பார்கள் 🙂

    எசுப்பானியர் (Spanish) ” ஃஅல், ஃஅல் ” என்பார்கள் 🙂

    தமிழர்கள் சல் சல் என்பார்கள்,

    வேண்டுமென்றால் ‘சல் ‘சல் எனலாம்.
    இதற்காக எல்லாம் ஒரு எழுத்தை நுழைக்க முடியுமா? நல்ல வேடிக்கைங்க இது !

    செல்வா

  64. கொசுறு பதில்கள்:

    ரவி,

    ழ போன்ற retroflex கள் பல மொழிகளிலும் காணப்படுகின்றன. பார்க்கப்போனால் தமிழில்தான் குறைவு! தமிழர்கள் சமணரிடமிருந்து எழுத்தை பெற்றார்கள் என்று சொலவதால் தமிழுக்கு இழுக்கு என்று அர்த்தமில்லை. அதற்கு முன்பாக அவர்கள் பயன்படுத்திய குறிகளை விடவும் பிராமி அதிக sophesticated ஆக இருந்திருக்கலாம், அவ்வளவே. ழ வுக்கு குறி கண்டுபிடிப்பதா கடினம்? இருந்த hieroglyph களில் ஒன்று standardize ஆகியிருக்கும்.

    sri, thra உள்ளிட்ட வடமொழி மூவொலி எழுத்துகளை தமிழில் மெய்யாக சேர்க்கமுடியாது என்பது உண்மைதான். மேலும் அவற்றை சேர்க்கவேண்டிய அவசிமிருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லை.

    சிறி எனக்கு உடன்பாடானதே. திரைநேத்ரா என்று த்ராவுக்கும் தமிழில் வேலையிருப்பதாய் தெரியவில்லை. கிரந்த எழுத்துகள் அனைத்தும் நமக்கு தேவையென்று நான் சொல்லவில்லை. நமக்குத் தேவையான ஒலிகளை எழுத எல்லோராலும் ஏற்றுக்கொல்லப்படும் குறிகள் வேண்டும் அவ்வளவே. சில கிரந்த எழுத்துகள் ஏற்றுக்கொள்ளப் பட்டது நல்லதே.

    மேலும் ஏற்கனவே தமிழ்படுத்தப்பட்ட சமசுகிரதம், விசயம் போன்றவற்றை அப்படியே பயன்படுத்துவதையும், சேமம், ஜலம் போன்ற தேவையற்ற வடமொழி சொற்களை தவிர்ப்பதையும் நானும் ஆதரிக்கிறேன்.

    இன்று துக்ளக் படித்துக்கொண்டிருந்தபோது CBI (Central Bureau of Investigation) க்கு ஸிபிஐ என்று எழுதியதைப் படித்து முகம்சுழித்தேன். சிபிஐ என்று எளிதாக எழுதமுடிகிறது. சிபிஐ என்று எழுதுவதும் ஊடகங்களில் வழக்கம்தானே. ஏன் ஸிபிஐக்கு மாறினார்கள் என்று தெரியவில்லை.

    திரு செல்வா,

    மடத்தனம் – non-sense என்று பதிவுளகில் நான் பதிலளிப்பது வழக்கமே. மற்றபடி நீங்கள் இந்த விவாதத்தை முழுமையாகப் படித்தால் நாங்கள் எந்த முடிச்சை அவிழ்க்க முயற்சிக்கிறோம் என்று புரியும்.

    diacritics கொண்டு எழுதலாம் என்று நீங்கள் பல மாதங்களுக்கு முன்னால் எழுதியதைக் கூட நான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன்!

    apostrophe கொண்டெழுதுவதை விடவும் ஆயுதம் கொண்டெழுதுவது மேலானது, கிரந்தம் கொண்டெழுதுவது சுலபமானது என்பது எனது கருத்து.

    pazhani, thamiz என்றெல்லாம் எழுதுவது ஆங்கில மொழி/எழுத்து/உச்சரிப்பு விதிகளுக்கு உட்பட்டே இருப்பதால் ஆங்கிலத்தில் அவற்றை எழுதமுடியவில்லை என்று சொல்லமுடியாது. அங்கு ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்க வேண்டிய அவசியமில்லையே.

  65. balaji, கேலியும் சாடலுமாகத் தான் உரையாடல் நகரும் எனில், நானும் இத்தலைப்பிலான உங்களுடனான உரையாடலை முடித்துக் கொள்கிறேன். இந்த இடுகைக்கு வெளியேயும் பல இடங்களில் ஒன்றாக இயங்குகிறோம். இந்த உரையாடலின் சூடு அதற்கு கேடாக அமைந்து விடலாகாது.

    நிச்சயம் இந்த உரையாடலில் நேரம் வீணானதாக நினைக்கவில்லை. சமூகம், மொழி, பொருளாதாரம் என்று பலவற்றிலும் ஆயப்பட வேண்டிய, கேள்வி கேட்கப்படவேண்டியவை எத்தனையோ உள்ளன. “இருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்”வோம் என இருக்கலாகாது.

    பாலாசி என்று எழுதினால் நீங்கள் மனம் வருந்துவீர்கள் என்றே நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவது போல் balaji என்று எழுதுகிறேன். அதே வேளை என் கொள்கைக்கு முரணாக பாலாஜி என்று தான் எழுத வேண்டும் நீங்களும் கட்டாயப்படுத்த இயலாது அல்லவா? கிரந்தம் வேண்டுவோர் கலந்து எழுதட்டும். ஆனால், எல்லாரும் கிரந்தம் கலந்து தான் எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், அப்படி எழுதாதவர்கள் தங்களை அவமதிப்பதாக கருதுவதும் தான் பிரச்சினையின் ஊற்று.

  66. //அந்த ஒலிகளே எங்களுக்குத் தேவையில்லை என்னும் ‘தனித்தமிழ்’ முட்டாள்தனத்தையே நான் எதிர்க்கிறேன்.//

    ஆமாம் ஐயா, அருள்திரு ஆழ்வார்கள் எல்லாம் உங்கள் கணிப்பில் தனித்தமிழ் முட்டாள்கள், தேவாரம் திருவாசகம் பாடியவர்கள், திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் எல்லோரும் உங்கள் கணிப்பில் தனித்தமிழ் முட்டாள்கள்.
    நல்ல பண்பாளர் ஐயா நீங்கள் !

    செல்வா

  67. balaji, சிறீ ஏற்புடையதே என்றதற்கு நன்றி. எனினும் உங்களைத் தவிர்த்த பலர், கிரந்தத்துக்கான கண்மூடித்தனமான ஆதரவு நிலை எடுப்பதே பிரச்சினை.

    பார்க்க – பேச்சு:மஞ்சுஸ்ரீ

    //pazhani, thamiz என்றெல்லாம் எழுதுவது ஆங்கில மொழி/எழுத்து/உச்சரிப்பு விதிகளுக்கு உட்பட்டே இருப்பதால் ஆங்கிலத்தில் அவற்றை எழுதமுடியவில்லை என்று சொல்லமுடியாது. அங்கு ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்க வேண்டிய அவசியமில்லையே.//

    இது சும்மா தமிழர்கள் நம்ம வசதிக்காக எழுதிக் கொள்வது. kuzhu என்று எழுதினால் வெளிநாட்டவன் குசு என்றே வாசிப்பான். ழ – zha தொடர்பு குறித்த அறிவு ஆங்கிலத்தை முதல் மொழியாக கொண்டவர்களிடம் புழக்கத்தில் இல்லை.

  68. கொசுறு பதில் 2:

    புஸ்வானம் என்பது காரணப்பெயர்தானே?

    ஸ் என்றே எழுத்தின் வடிவமே ஸ்ர்ப்பம் ஊர்ந்து (ஊவையும் கவனிக்க!) செல்லுவதிலிருந்துதானே வந்திருக்கிறது. ஸ்ர்ப்பமும் அது எழுப்பும் ஒலியிலிருந்துதானே பெயர் பெற்றிருக்கிறது.

    ஜல், ஜல் எல்லாம் எழுதாவிட்டால் தமிழ் குறைந்துவிடாது என்று எனக்கும் தெரியும். ஆனால் அந்த ஒலிகள் தமிழருக்கு பரிச்சயமான ஒலிகளே என்று நிறுவதற்காகத்தான் அவற்றைக் கொண்டுவந்தேன்.

    ஜல், ஜல் என்று ஒலிக்கத் தெரிந்தவர்களுக்கு ஜெயலலிதா என்றோ ஸ்டாலின் என்றோ ஒலிக்கத் தெரியாதா?

  69. //ஜெயலலிதா என்றோ ஸ்டாலின் என்றோ ஒலிக்கத் தெரியாதா//

    கிரந்தம் குறித்த உரையாடல் வந்தால் இந்த இரு தலைவர்கள் பெயரையும் இழுக்காமல் விடுகிறார்கள் இல்லை 🙂

    இப்ப என்ன பிரச்சினை? எங்கு வேண்டுமானாலும் செயலலிதா, சிடாலின் என்று எழுதுவதில் எனக்குத் தயக்கம் இல்லை.

    எல்லாரும் அழுத்தம் திருத்தமாக S, J என்று ஒலிப்பது இல்லை. J வரும் இடங்களில் ch (as in cherry) ஒலிப்பும், S வரும் இடங்களில் சு-வுக்கும் சி-க்கும் இடைப்பட ஒலியாகவே இருக்கும். வச்சிரவேலு, சினேகா, சுவிட்சர்லாந்து, சுவீடன் என்று எழுதும் வழக்கம் இருப்பதையும் காணலாம்.

  70. damn, கொசுறு 3:

    செல்வா,

    தயவுசெய்து எங்கள் விவாதத்தை முழுமையாகப் படியுங்கள். திருக்குறள், ஆழ்வார்கள் பாசுரங்கள், தேவாரப் பாடல்கள் என்ன பிறமொழிகளிலிருந்து தமிழில் பெறப்பட்ட சொற்களை, பெயர்களை பயன்படுத்த வேண்டியிருக்காவிட்டால், நான்கூட கிரந்தமில்லா தமிழில் எழுதமுடியும்.

    தொல்காப்பியம் தொடங்கி நன்னூல் எழுதிய 13ஆம் நூற்றாண்டு வரை விவாதித்து ஆகிவிட்டது.

  71. ரவி,

    எனக்கு கிரந்தமில்லாமல் செயலலிதா என்றோ சிடாலின் என்றோ எழுதத்தெரியாதென்றா நினைக்கிறீர்கள்? அவ்வாறு எழுதுவது தேவையற்றது, தவறானது என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

    சரி, இதோடு நிச்சயமாய் எனது விவாதங்களை முடித்துக்கொள்கிறேன்.

    1. அன்புள்ள பாலாஜி அவர்களே, நான் நம் மொழியைப்பற்றி நினைப்பதுபோல் வேறு ஒருசிலர் மட்டுமே நினைக்கிறார்கள் என்று வருந்த்தியிருந்த எனக்கு உங்கள் துணிவான கருத்துகள் இன்பம் அளிக்கின்றன. தமிழை அறிவுடன் நேசிக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள். என்னுடன் தொடர்புகொள்ளும் மின்னஞ்சல் [email protected]. பெயர்: Dr Robert B Grubh. இணையதளத்திலும் என் பெயரை நீங்கள் காணலாம்.

      1. தப்பாக ‘வருந்த்தியிருந்த’ என்று எழுதிவிட்டேன். மன்னிக்கவும். அது ‘டைப்பிங் மிஸ்டேக்’. ‘வருந்தியிருந்த’ என்று வாசிக்கவும். நன்றி.

  72. balaji,

    எனக்கு கிரந்தம் கலந்து ஜெயலலிதா, ஸ்டாலின் என்று சிலர் எழுதவும் சொல்லவும் செய்கிறார்கள் என்பது தெரியாதென்றா நினைக்கிறீர்கள்? அவ்வாறு எழுதுவது தேவையற்றது, தவறானது என்று தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

    சரி, நானும் இதோடு நிச்சயமாய் எனது விவாதங்களை முடித்துக்கொள்கிறேன்.

    🙂

  73. //எனக்கு கிரந்தமில்லாமல் செயலலிதா என்றோ சிடாலின் என்றோ எழுதத்தெரியாதென்றா நினைக்கிறீர்கள்? அவ்வாறு எழுதுவது தேவையற்றது, தவறானது என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.//

    அப்படி யென்றால் வள்ளி என்பதை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது தமிழ் கலந்துதான் vaள்ள்i என்று எழுதுகிறீர்கள்

  74. இந்த இடுகையில் கிடைத்த அரிய செய்திகள் ஒருபுறம் இருக்க, மறுமொழியில் ஏராளமான செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன. நல்ல ஆக்கமான விவாத அரங்கமாக இது அமைந்துள்ளது.

    தாமதித்துதான் இதனைப் படிக்க நேர்ந்தது.

  75. அருமையாக எழுதியுள்ளீர்கள். பேரா. செல்வ குமார் முதலானவர்களின் சரியான மறுமொழிகளும் சுவையளிக்கின்றன. பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

  76. மொழிகள் இருவகைப்படும்.
    ஒன்று எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. இது போன்ற மொழிகளுக்கு புதிய ஒலிகள் தோன்றும் போது புதிய எழுத்துகள் தேவைப்படுவதில்லை. உதாரணம் ஆங்கிலத்தில் எழுத்தொலி “ழ” இல்லாததால் புதிய எழுத்து சேர்க்கவில்லை.
    மற்றது, எழுத்துக்களை அடிப்படையாகக் கொள்ளாமல், எழுத்தொலிகளை அடிப்படையாகக் கொண்டது. இது போன்ற மொழிகளுக்கு புதிய ஒலிகள் தோன்றும் போது புதிய எழுத்துகள் தேவைப்படுகின்றன. உதாரணம் தமிழ் முதலிய மொழிகள். அதனால் புதிய ஒலிகளான ஸ, ஷ, ஜ, ஹ, ஏ, ஶ்ரீ, போன்றவைகளுக்கு புதிய எழுத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.

    1. நீங்கள் சொல்லும் விளக்கம் வேடிக்கையாக உள்ளது. உங்கள் வாதத்தின் படி, தமிழ் போன்ற ஒலியடிப்படை மொழிகள் வேறு சிலவற்றைக் குறிப்பிட முடியுமா? அவற்றில் எழுத்துகளைச் சேர்த்துள்ளார்களா?

Comments are closed.