அடுத்த தனித்தமிழ் இயக்கம்

தமிழ் ஆர்வலர் ஒருவருடன் பேசிய போது தனித்தமிழ் இயக்கம் பற்றி பேச்சு வந்தது. திரும்பவும் ஒரு தனித்தமிழ் இயக்கம் வர வாய்ப்புகள் குறைவு என்றார். அதற்கு அவர் சொன்ன காரணங்கள்:

* பெருஞ்சித்திரனார், மறைமலை அடிகள், தேவநேயப்பாவாணர் போல் ஒரு இயக்கத்தை முன்னெடுக்கக்கூடிய தமிழ் அறிஞர்கள், தலைவர்கள் இப்போது இல்லை.

* சென்ற தனித்தமிழ் இயக்கம் வந்த 20ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் இருந்த உலக கருத்துச் சூழல் இப்போது இல்லை. உலகமே இப்போது பொருள்முதல்வாதமாகவும் வலது சாரி சிந்தனை உடையதாகவும் மாறி வருகிறது. பல விழுமியங்களுக்கும் அறங்களுக்கும் மதிப்பு குறைந்து வருகின்றது. இத்தகைய சூழலிலேயே தமிழில் ஆங்கிலம், பிற மொழிகள் கலப்பை நோக்க வேண்டி உள்ளது. தமிங்கிலம் ஒரு தனி நோய் இல்லை. அது அதை விடப் பெரிய சமூகச் சீர்கேட்டின் பல அறிகுறிகளுள் ஒன்று.

* சென்ற தனித்தமிழ் இயக்கத்தின் குறி தமிழில் அளவு கடந்து இருந்த வடமொழிச் சொற்களை விலக்குவது. வடமொழி கலந்து பேசியோர் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் என்பதால், அதே வேளையில் தொடங்கிய திராவிட இயக்கம் என்னும் சமூக, அரசியல் இயக்கத்தின் பின்னணி தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுக்க பெரிதும் உதவியது. திராவிட இயக்கம் வேரூன்றா இலங்கையில் இன்றும் வடமொழியின் தாக்கம் கூடுதலாக இருப்பதைக் நோக்கலாம். ஆனால், தமிங்கிலம் என்பதோ ஒரு குறிப்பிட்ட பிரிவினர் என்று வரையறுக்க முடியாமல் அனைத்து மட்ட தமிழர்களிடமும் பரவி வருவதால் தடுப்பது கடினம்.

கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுவது எப்படி?

கிரந்தம் தவிர்த்துத் தமிழில் எழுதுவது தற்போதும் பெரு ஊடகங்களிலும் வழக்கில் உள்ளதே. சில சொற்களைக் கிரந்தம் தவிர்த்தும் சிலவற்றில் கிரந்தம் தவிர்க்காமலும் எழுதுவதற்கு போதிய தமிழாக்க முயற்சிகளும் பழக்கமும் இல்லாததே காரணம். எனவே, கிரந்தம் தவிர்த்து எழுதுவதை ஏதோ புதிய நடைமுறையாகக் கருதத் தேவை இல்லை.

கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுதுவது எப்படி?
* கிரந்தம் தேவைப்படும் பிற மொழிச் சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல் இருந்தால் ஆளலாம்.

இஷ்டம் -> விருப்பம்.

சந்தோஷம் – > மகிழ்ச்சி

ஹேபிட் – > பழக்கம்

கஷ்டம் – > துன்பம், முடை, இடர், இடர்ப்பாடு, இன்னல், தடை, இடைஞ்சல்

ஸ்மைல் – > புன்னகை

* ஜ, ஷ, ஸ, ஹ ஆகியவற்றுக்குப் பதிலாகத் தமிழில் வழமையாக ஈடு கொடுக்கப்படும் எழுத்துகளைப் பயன்படுத்தலாம்.

வருஷம் – > வருடம்; வருசம். (ஆண்டு)

விஷயம் – > விசயம்; விதயம்; விடயம். (இது இன்னதென்று பொருள் புரியாது பயன் படுத்தும் ஒரு சொல். பெரும்பாலான இடங்களில் செய்தி (“சேதி”,) குறிப்பு, நிகழ்வு என்று பொருள்படும்)

விசேஷம் – > விசேசம்; விசேடம். (சிறப்பு, கொண்டாட்டம்)

விஷம் – > விசம், விடம் (நஞ்சு என்று தமிழில் சொல்லாம். விசம், விடம் என்று ஒலிப்பைத் திரித்துச் சொன்னாலும் பாம்பு கொத்தினால் உயிர் போவது உறுதி 🙂 )

ஷாந்தி -> சாந்தி

ஷங்கர் – > சங்கர்

ஹனுமான், ஹிந்தி, ஹிந்து, ஹோட்டல், ஹொகேனக்கல் – > அனுமான், இந்தி, இந்து, ஓட்டல், ஒகேனக்கல் (ஹகரத்தை விடுத்து அதை அடுத்து வரும் உயிர் ஒலியைக் கொள்ள வேண்டும்)

ராஜா, ரோஜா, ஜாதி, ஜோதிடம், ஜோதி – > ராசு, ராசா, ரோசா, சாதி, சோதிடம், சோதி.  (முதல் சகரத்தை வல்லினமாக பலுக்கினால், ஒலித்திரிபு குறைவே)

மேல் உள்ள எடுத்துக்காட்டுகளைக் கொண்டு, கிரந்தம் தவிர்த்துத் தமிழில் எழுதுவது தற்போதும் பெரு ஊடகங்களிலும் வழக்கில் உள்ளதே என அறியலாம். சில சொற்களைக் கிரந்தம் தவிர்த்தும் சிலவற்றில் கிரந்தம் தவிர்க்காமலும் எழுதுவதற்கு போதிய தமிழாக்க முயற்சிகளும் பழக்கமும் இல்லாததே காரணம். எனவே, கிரந்தம் தவிர்த்து எழுதுவதை ஏதோ புதிய நடைமுறையாகக் கருதத் தேவை இல்லை.

எழுத்துக்களை விடுத்து எழுதுவதற்குப் பின்வரும் விதிகளைப் பின்பற்றலாம்.

ஸ் – சு
ஸ – ச; ஸா – சா …

(விதிவிலக்காக சில இடங்களில் ஸ் – > சி ஆகும். எடுத்துக்காட்டுக்கு, ஸ்நேகா – > சிநேகா)

ஷ் – சு
ஷ – ச; ஷா – சா ..

ஜ் – சு
ஜ – ச; ஜா – சா ..

ஸ்ரீ – சிறி (அல்லது) சிரி

க்ஷ் – க்சு
க்ஷ – க்ச; க்ஷா – க்சா ..

ஹ் – சொல் முதலில் வந்தால் இகரம் கொண்டு எழுதவும்.

ஹ்ருதயம் – > இருதயம்

ஹ் – சொல்லின் இடையில், கடைசியில் வந்தால் புறக்கணிக்கவும்.

தேஹ்ராதூன் – > தேராதூன்
ஹ – சொல் முதலில் வந்தால் – > அ ( ஹ் புறக்கணித்து அதை ஒட்டிய உயிரொலியைக் கொள்ளவும்); ஹா – ஆ; ஹி – இ ..

ஹிந்து – இந்து; ஹனுமன் – அனுமன்; ஹோட்டல் – ஒட்டல்

ஹ் – சொல் இடையில் வந்தால் – >  க; ஹா – கா ..

மோஹன் – மோகன்; மஹாத்மா – மகாத்மா.

* பொருளுள்ள பெயர்ச்சொற்களுக்கு சீனம், சப்பானிய மொழி போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் முற்காட்டு இருந்தால், நாமும் சொற்களை மொழிபெயர்த்து பொருள் விளங்குமாறு வழங்கத் தயங்கக்கூடாது.

* இடுகுறிப் பெயர்ச்சொற்களை இயன்ற வரை தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதி அடைப்புக்குறிகளில் ஆங்கிலம், மூல மொழியின் எழுத்துகளைக் கொண்டு எழுதிக் காட்டலாம். ஒலிக்கோப்புகள் தரலாம்.


தனித்தமிழ் விசைப்பலகைகள்

ஒருங்குறியில் அமைந்த பாமினி, அஞ்சல், தமிழ்99 விசைப்பலகைகளுக்கு NHM Writer ல் பயன்படுத்தக்கூடிய தனித்தமிழ் xml கோப்புகள் செய்து பார்த்தேன்.

ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ போன்ற கிரந்தம் உள்ளிட்ட தமிழ் அல்லாத பிற எழுத்துகள் நீங்கிய எழுத்து முறையைத் தனித்தமிழ் எனலாம்.

ஒருங்குறியில் அமைந்த பாமினி, அஞ்சல், தமிழ்99 விசைப்பலகைகளுக்கு NHM Writer ல் பயன்படுத்தக்கூடிய தனித்தமிழ் xml கோப்புகள் செய்து பார்த்தேன். (இதைச் செய்ய NHM Writer Developer Kit உதவியது. இதன் மூலம் இந்த xml கோப்புகளைத் தொகுப்பது, புதிதாக உருவாக்குவது இலகுவாக இருக்கிறது. விரைவில் இதைப் பொதுப் பயன்பாடுக்கு வெளியிடுவார்கள்)

இவற்றை http://ravidreams.net/files/thani-tamil-keyboards.rar என்ற முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

ஸ்ரீ X சிறீ X சிரீ

திரு என்னும் சொல்லை ஸ்ரீ என்னும் சொல்லுக்கான மொழிபெயர்ப்பாக மட்டுமே அனைத்து இடங்களிலும் கருதி விட இயலாது. ஸ்ரீ என்னும் சொல் மற்றும் எழுத்துப் பயன்பாடு தமிழ்ச்சூழலில் புகும் முன்னரே திரு என்னும் பெயரைத் தாங்கிய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாட்டில் இருந்திருப்பதை அறியலாம்

தமிழ் விக்கிப்பீடியாவில் மஞ்சுஸ்ரீ என்ற கட்டுரை இயற்றப்பட்ட போது அதை ஏன் மஞ்சுசிறீ என்றோ மஞ்சுசிரீ என்றோ எழுதக் கூடாது என்றொரு சுவையான உரையாடல் வந்தது. முழு உரையாடலுக்கு பேச்சு:மஞ்சுஸ்ரீ பார்க்கவும்.

ஸ்ரீ கட்டுரையில் இருந்து முக்கியமான தகவல்:

தமிழுடன் கலந்து எழுதப்படும் பிற கிரந்த எழுத்து வடிவங்களைப் போலன்றி, ஸ்ரீ என்பது ஒரே பொருள் குறித்து மட்டுமே அனைத்து இடங்களிலும் பயன்படுவதும் பிற உயிர், மெய் ஒலிகளுடன் சேராது எப்போதும் தனி எழுத்தாகவே பயன்படுவதும் குறிப்பிடத்தக்கது. தெளிவாகச் சொல்வதானால், ஒரே ஒரு சொல்லுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கூடுதல் எழுத்து. தமிழில் பிற மொழிச் சொற் கலப்பை தவிர்த்து எழுதுவோர் ஸ்ரீ என்னும் சொல்லுக்கு இணையான திரு, திருமிகு, அருள்மிகு போன்ற சொற்களை இடத்துக்குத் தகுந்தவாறு பயன்படுத்துகின்றனர். எனினும், திரு என்னும் சொல்லை ஸ்ரீ என்னும் சொல்லுக்கான மொழிபெயர்ப்பாக மட்டுமே அனைத்து இடங்களிலும் கருதி விட இயலாது. ஸ்ரீ என்னும் சொல் மற்றும் எழுத்துப் பயன்பாடு தமிழ்ச்சூழலில் புகும் முன்னரே திரு என்னும் பெயரைத் தாங்கிய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாட்டில் இருந்திருப்பதை அறியலாம். தற்காலத்தில் ஸ்ரீரங்கம் என்று குறிப்பிடப்படும் ஊர் முற்கால வைணவ இலக்கியங்களிலேயே திருவரங்கம் என்று குறிக்கப்பட்டு இருப்பதும், திரு + அரங்கம் என்னும் சொற்கூட்டு தரும் பொருளும் ஸ்ரீ + ரங்கம் என்னும் சொற்கூட்டுத் தரும் பொருளும் முற்றிலும் வேறாக இருப்பதையும் காணலாம். எனவே, முற்காலத்தில் தமிழில் ஏற்கனவே திரு என்னும் சொல் இருந்த இடங்கள் தவறுதலாக ஸ்ரீ என்ற மொழிமாற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததாகவும் கருதலாம்.

கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து எழுதுவோர் ஸ்ரீ என்ற எழுத்துக்கு மாறாக அதற்கு நெருங்கிய ஒலிப்பு தரும் சிறீ, சிரீ என்ற எழுத்துக்களைப் பயன்படுத்துவது உண்டு. தமிழ் இலக்கியத்தில் சிரீ என்று எழுதும் வழக்கம் காணப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, திருவாய்மொழி இரண்டாம் பகுதியில் (பாடல் 2858ல்)

தூமனத் தனனாய்ப் பிறவித்

துழதி நீங்க என்னைத்
தீமனங் கெடுத்தா யுனக்கென்

செய்கேனென் சிரீதரனே!

என்று வருவதைக் கவனிக்கலாம்.

இலங்கையில், ஸ்ரீ என்பதற்கு மாறாக சிறீ என்று எழுதும் வழக்கம் இருக்கிறது. எனினும், இந்த மாற்றத்துக்கு அந்நாட்டு அரசியல் சூழலும், வரலாற்று நிகழ்வுகளும் ஒரு காரணமாகும்.

ஏன் பாடநூல் கலைச்சொற்களை அப்படியே பின்பற்றத் தேவையில்லை?

பீடபூமி என்ற சொல்லுக்குப் பதில் மேட்டுநிலம் என்ற சொல்லை ஆளலாமா என்றொரு உரையாடல் தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழ்ந்தது.

“பீடபூமி என்ற சொல் பாடநூல் வழக்கில் இருப்பதால் இச்சொல்லையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்; ஒவ்வொரு கலைச்சொல்லிலும் குற்றம் கண்டுபிடித்து மாற்றிக் கொண்டிருந்தால் மாணவர்கள் குழம்ப நேரிடும்” என்று  ஒரு பக்க வாதம் இருந்தது.

குழப்பங்களைத் தவிர்க்க கலைச்சொற்களில் ஒருங்கிணைவு அவசியம் என்றாலும் எல்லா இடங்களிலும் பாடநூல் கலைச்சொற்களை மாற்றாமல் அப்படியே பயன்படுத்தத் தேவையில்லை.

ஏன்?

1. தற்போதும் கூட தமிழ்நாடு, இலங்கை, மலேசியா ஆகிய நாட்டுத் தமிழ் வழி பாடநூல்களுக்கும் இந்தியாவிலேயே கேரளம், தமிழ்நாடு, இன்ன பிற மாநிலங்களில் உள்ள தமிழ் வழி பாடநூல்களுக்கும் கலைச்சொல் பயன்பாட்டில் வேறுபாடுகள் இருக்கின்றன.

2. தமிழ்நாட்டுப் பாடநூல்களிலேயே கூட வெவ்வேறு வகுப்புகளில், வெவ்வேறு பாடங்களில் ஒரே பொருளுக்கு வெவ்வேறு சொற்களை ஆள்கின்றனர். எடுத்துக்காட்டுக்கு ஒரு வகுப்பில் திரிகோணவிதி என்பதை இன்னொரு வகுப்பில் முக்கோணவியல் என்கிறார்கள். பாடநூல்களுக்குள்ளேயே கலைச்சொல் குழப்பங்கள் இருக்கையில், குழப்பம் வரும் என்ற காரணம் காட்டி பொருத்தமான புதிய மாற்றுக் கலைச்சொற்களைத் தடுப்பது சரி இல்லை.

பெரும்பாலான இவ்வகை மாற்றுக் கலைச்சொல் பரிந்துரைகள் இரண்டு அடிப்படையில் எழுகின்றன:

– மொழி அடிப்படை – இரசயாணம் –> வேதியியல்; பௌதீகவியல் –> இயல்பியல்.

– கருத்து அடிப்படை – complex number என்பதை சிக்கல் எண் என்று நேரடியாக மொழிபெயர்த்து வைத்திருக்கிறார்கள். இதற்கு மாற்றாக கலப்பு எண், பலக்கிய எண் போன்று பல்வேறு பரிந்துரைகள் வருகின்றன.

1960கள், 1970களில் தமிழகத்தில் ஏராளமான மொழி அடிப்படை கலைச்சொல் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால், தமிழ்நாட்டுக் கலைச்சொற்கள் அனைத்தையும் தமிழுக்கு மாற்றி விடவில்லை. பீடபூமி என்ற சொல்லை முன்பே தமிழாக்கி இருந்தால் தற்போது உறுத்தலாக இருந்திருக்காது.

சரி, பீடபூமியைத் தமிழ்ச் சொல்லாக மாற்றி அப்படி என்ன சாதிக்கப் போகிறோம்?

ஞான பீடம், பலி பீடம், பீடாதிபதி என்று பல இடங்களில் இந்த பீடம் வந்தாலும் பீடம் + பூமி = பீட பூமி என்று புரிந்து கொண்டாலும் பீடம் என்றால் என்ன என்று சட்டென புரிபடுவதில்லை. வட மொழிப் புலமையும் சேர்ந்தோருக்குப் புலப்படலாம். பள்ளியில் படித்த எனக்கே இந்த நிலை என்றால் பள்ளிக்கே போகாத பாமரனுக்கு பீடபூமி என்றால் எப்படி புரியும்? பள்ளிக்குப் போகாத வட மொழிப் பாமரனுக்கு பீடம் என்ற சொல் புரியக்கூடியதாக இருக்கையில் ஏன் தமிழ்ப் பாமரன் மட்டும் அதைப் பள்ளிக்குப் போய் புரிந்து கொள்ள வேண்டும்?

மேட்டுநிலம் என்ற சொல் பாமரருக்கும் புரியும். அவர்களாக இத்தகைய ஒரு நிலப்பரப்பை விவரிக்க முற்பட்டார்கள் என்றால் நிச்சயம் மேட்டு நிலம் என்று தான் சொல்வார்கள். களத்து மேடு, ஆத்து மேடு என்று சிற்றூர்களில் புழங்கும் சொற்களைக் கவனியுங்கள். பீடபூமி என்றெல்லாம் சொல்வார்கள் என்று கற்பனை கூட செய்ய இயலாது. சிற்றூரில் வளர்ந்தவன் என்ற முறையில் உலகம், மண், நிலம் என்ற சொற்கள் தான் மக்கள் பேச்சில் புழங்கக் கண்டிருக்கிறேன்.

மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் பல இலகுவான சொற்கள் இருந்தாலும் பாடப்புத்தக்கங்களிலும் எழுத்து வழக்கிலும் தேவையின்றி அளவுக்கு மீறிய வடமொழிக் கலப்பு இருப்பதாகப் படித்தும் நண்பர்கள் மூலமாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். பீடபூமி போன்ற சொற்கள் முதன் முதலில் தமிழ்நாட்டு அச்சுப் படைப்புகளில் ஆளப்பட்ட போது அவற்றை ஆக்கியோர் வடமொழிப் புலமையும் பெற்றிருந்திருப்போராக இருக்கலாம். அதனால், அத்தகைய ஒரு சொல்லை ஆக்கி இருந்தது அவர்களுக்கு எந்த உறுத்தலும் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவற்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று இல்லை. இது நாம் புலமைச் சொற்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த மதிப்பே. தமிழ்நாட்டில் ஒரு plateau இருந்திருந்தால் கண்டிப்பாக மேட்டு நிலம் போன்ற சொற்களை ஆக்கியிருப்போம். அல்லது, இந்த நிலப்பரப்புக்களுக்குத் தமிழன் பயணம் மேற்கொண்டிருந்தால் அதைப் பற்றி ஒரு நல்ல தமிழ்ச் சொல்லை ஆண்டிருப்பான். ஒருவேளை, இலக்கியங்களில் இதற்கான சொல் ஒளிந்து கொண்டும் இருக்கலாம்.

ஆப்பிள் போன்ற இடுகுறிப் பெயர்ச்சொற்கள் எல்லாவற்றையும் தமிழாக்குவது சில வேளை செயற்கையாக இருக்கலாம். ஆனால், பீடபூமி போன்ற காரணப்பெயர்களைத் தமிழாக்கிப் பயன்படுத்துவதில் தவறு இல்லை.

ஆனால், இவ்வாறான முயற்சிகள், மொழியைச் ‘செயற்கையாகத்’ தூய்மைப்படுத்தித் தமிழ்ச் சொற்களைத் திணிக்க முற்படுவதாகக் குற்றம் சாட்டப்படுவதுண்டு.

இது குறித்த சுந்தர் சொன்ன கருத்து:

செயற்கையாகத் திணிப்பது என்பது ஒரு பார்வை. ஆனால் எண்ணிப் பார்த்தால், பெரும்பான்மைத் தமிழர்கள் செய்தித்தாள், திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்களில் பங்களிக்கும் வாய்ப்பு இன்னும் வரவில்லை. ஆக எந்த ஒரு பயன்பாடும் இந்த குறுகிய வட்டத்தினரின் செயற்கைத் திணிப்பு தான். அப்படி திணிப்பது என்று வந்துவிட்டால் குறைந்தது வெவ்வேறு தமிழ்ச்சொற்களையாவது புழக்கத்தில் விடும் கடமை நமக்கு உள்ளதாகவே எண்ணுகிறேன். அப்படிப் பார்த்தால் இந்த வடமொழிச் சொற்களும் ஒரு நாளில் புகுத்தப்பட்டவைதானே? (திணிக்கப்பட்டவை என்ற வலிய சொல்லைப் பயன்படுத்தவில்லை)

ஒவ்வாரு மொழியும் கீழ்காணும் மூன்று வழிகளில் ஒன்றில் செல்கிறது.

  1. எழுத்து மொழி அவ்வளவாகப் புழங்காமல் அல்லது அவரவர் பேசும்வகையிலேயே எழுதும் வழக்கைக் கொண்டிருத்தல். இதனால் நாளடைவில் ஒரு மொழி பல மொழிகளாகப் பிரிகிறது. அல்லது ஒரேயொரு புதியமொழி உருவாகிறது.
  2. இறுக்கமான பரிந்துரை இலக்கணங்களைப் பேச்சிலும் எழுத்திலும் கடைப்பிடிக்க வலியுறுத்தும் மொழி செத்து விடுகிறது.
  3. இருதர நிலைப்பாடு (diglossia) கொண்டு மொழியும் உயிர்ப்புடன் விளங்கி பழைய சொற்கள் மற்றும் நூல்கள் வழக்கில் இருந்து ஒரு தொடர்ச்சி பேணப்படுகிறது.

தமிழ் இதில் மூன்றாம் வழியில் இதுவரை இருந்து வந்துள்ளது. அதை நாம் தொடர வேண்டுமா மாற்ற வேண்டுமா?

வடமொழி X தனித்தமிழ் என்று நோக்காமல் கடினமான சொல் X எளிய சொல் என்று நோக்கினாலே பல இடங்களில் நல்ல புதிய பொருத்தமான கலைச்சொற்களைப் புழக்கத்துக்குக் கொண்டு வர முடியும்.