ஒ௫ என்கிற ஒ5

ஒரு கண் சோதனை 🙂

ரு

ரு – இது ர + உ = ரு (குறில்)

ரூ

ரூ – இது ர + ஊ = ரூ (நெடில்)

அப்படி என்றால் கீழே காண்பவை என்ன?

௫ – இது எண் 5 -ஐக் குறிக்கும் விதம் தமிழரிடையே புழங்கும் குறியீடு (பார்க்க – தமிழ் எண்கள் ). இதனைக் குறில் ரு என்பதற்கு இணையாக பயன்படுத்தக்கூடாது. ஒ௫ என்று எழுதினால் ஒ5 என்று தான் பொருள். அப்படித் தான் கணினியும் புரிந்து கொள்ளும். நீங்கள் ஒ௫ என்று எழுதிவிட்டு ஒரு என்று தேடினால் கணினிக்குத் தெரியாது.

௹ – உரூபாயைக் குறிக்கும் விதம் தமிழரிடையே புழங்கும் குறியீடு. இதனை நெடில் ரூ என்பதற்கு இணையாக பயன்படுத்தக்கூடாது. உயிரூட்டம் என்று எழுதுவதும் உயி௹ட்டம் என்று எழுதுவதும் வேறு வேறு. பார்க்க ஒரே மாதிரி தோற்றம் தானே, விரைவாக எழுதலாம் என்று எண்ணி இவ்வாறு எழுதாதீர்கள்.

ஏன் இவ்வளவும் சொல்கிறேன் என்றால்,

ஒ௫ என்று கூகுளில் தேடினால் 6800+ முடிவுகள் வருகின்றன. இது ஒரு சொல்லில் மட்டும் காணும் பிழை. இது போல் தமிழில் ரு வருகிற எத்தனை இடங்களை பிழையாக எழுதித் தள்ளி இருக்கிறோம் என்று தெரியவில்லை 🙁

பின்வரும் விசைப்பலகையைப் பாருங்கள்.

tamil-mobile-keyboard-1

ஃ தவிர்த்த மற்ற அனைத்து தமிழ் எழுத்துகளையும் இந்தப் பலகையில் இருந்தே எழுதலாம். எழுத வேண்டும்.

ஃ என்னும் ஆய்த எழுத்து, தமிழ் எண்கள், கிரந்த எழுத்துகள், பஞ்சாங்கம் / வணிகம் முதலியவற்றுக்கான சிறப்புக் குறியீடுகள் தேவைப்படும் போது மட்டும் SHIFT விசை அழுத்தி கீழே காணும் பலகையைப் பயன்படுத்துங்கள்.

tamil-mobile-keyboard-2

இதே போல், தமிழ் எண்கள் வரிசையில் வருகிற

௧ ௨ ௭ ௮ ௰

போன்ற தமிழ் எழுத்துகளை ஒத்த குறியீடுகளை எழுத்துகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தாதீர்கள். எழுத்து வேறு. குறியீடு வேறு. கணினிக்குப் புரியாது. தேடினால் கிடைக்காது.

குறிப்பாக, செல்லினம், அதனை ஒத்த மென்பொருள் தளக்கோலங்கள், ஆப்பிளின் iOS இயக்குதள கருவிகளைப் பயன்படுத்துபவர்கள் இதனைக் கவனிக்கவும். இது போல் வேறு சிறப்புக் குறியீடுகளைத் தவறுதலாக யாரேனும் பயன்படுத்தினால் இங்கு சுட்டிக் காட்டுங்கள். நன்றி.

தமிழ் உரையாடல்

இற்றை:

இம்முயற்சி தொடர்பான தகவல் http://tamilirc.wordpress.com/ தளத்தில் தொடர்ந்து வெளிவரும்.

செப்டம்பர் மாத உரையாடலின் படி இங்கு உள்ளது.

தமிழ் மொழி வளர வேண்டும் என்று பலர் உழைக்கிறார்கள். இவர்களிடையே ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாமல், என்ன செய்கிறார்கள் என்று மற்றவர் அறியாமல் இருக்கிறார்கள். அதே வேளை, தமிழ் ஆர்வம் உடைய பலருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். இவர்கள் அனைவரையும் இணைக்கும் பாலமாக ஓர் உரையாடலை முன்னெடுக்க விரும்புகிறேன். இது தங்கள் எண்ணங்கள், செயற்பாடுகளைப் பகிர்ந்து கொண்டு தொடர்ந்து தங்கள் முன்னேற்றங்களை அறியத் தரும் வளர்முகக் களமாக இருக்கும்.

இன்று இரவு (செப்டம்பர் 16, 2014) 9 மணிக்கு

http://webchat.freenode.net/

வாருங்கள்.

irc-demo

Nickname என்பதில் உங்கள் உண்மையான பெயர் அல்லது வலையில் நீங்கள் பயன்படுத்தி வரும் பெயரைத் தாருங்கள்.

Channels என்பதில் tamilirc என்று தாருங்கள்.

படத்தில் காணும் எண்ணை அதன் கீழ் உள்ள புலத்தில் இட்ட பிறகு Connect பொத்தானை அழுத்துங்கள்.

ஒவ்வொரு மாதமும் ஒரு தேதியில் இது போல் உரையாடலாம்.

சரியாக ஒரு மணி நேரம் உரையாடிக் கலைவோம். இந்த உரையாடல்களைப் படியெடுத்துப் பாதுகாத்தும் வைப்போம்.

மற்ற விவரங்களைக் கூடி முடிவெடுப்போம்.

நன்றி.

இனக் கட்டுப்பாடு

மூன்றாவது இந்திய குடும்ப நல ஆய்வறிக்கையில் (2005-06) உள்ள இந்தப் படத்தைப் பாருங்கள்.

nfhs3

 

இந்தப் படம் மொத்த கருவுறுதல் விகிதத்தைக் காட்டுகிறது.

ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் பிறக்கும் குழந்தைகளின் சராசரி அளவே மொத்த கருவுறுதல் விகிதம்.

இந்த விகிதம் 2.1 என்று இருந்தால் அந்தச் சமூகத்தின் மக்கள் தொகை நிலையாக இருக்கும். 2.1க்கு குறைவாக இருந்தால் நாளடைவில் மக்கள் தொகை குறையத் தொடங்கும்.

இப்பொழுது நமது படத்திற்கு வருவோம்.

இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்வது என்ன?

தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம், அரியானா ஆகிய மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இந்திய ஒன்றிய அரசின் அரசின் 11வது ஐந்தாண்டு திட்டத்தின் என்ன திட்டம் தீட்டியிருக்கிறார்கள் பார்க்கலாமா?

இந்த கோப்பின் 124ஆம் பக்கத்தை பாருங்கள்.

அதில் நான்கு செங்குத்து வரிசைகள் உள்ளன.

  1. வரிசை எண்
  2. மாநிலம்
  3. தற்சமயம் இருக்கும் மொத்த கருவுறுதல் விகிதம்
  4. இலக்கு

உங்களுக்குப் புரிவதற்காக நான் அதில் கூடுதலாக “இலக்கின் விளைவு” என்று ஒரு வரிசை சேர்த்துள்ளேன்

ANNEXURE 3.1.7

Total Fertility Rate—India and Major States

வரிசை எண்

மாநிலம்

தற்போதைய நிலை

இலக்கு

இலக்கின் விளைவு

இந்தியா முழுவதும்

2.9

2.1

மக்கள் தொகை சம நிலையில் இருக்கும்

1

ஆந்திர பிரதேசம்

2.1

1.8

மக்கள் தொகை குறையும்

2

அசாம்

2.9

2.3

மக்கள் தொகை கூடும்

3

பீகார்

4.3

3.0

மக்கள் தொகை கூடும்

4

சட்டிஸ்கர்

3.3

2.4

மக்கள் தொகை கூடும்

5

தில்லி

2.1

1.8

மக்கள் தொகை குறையும்

6

குஜராத்

2.8

2.2

மக்கள் தொகை கூடும்

7

ஹரியானா

3.0

1.9

மக்கள் தொகை குறையும்

8

இமாச்சல பிரதேசம்

2.1

1.8

மக்கள் தொகை குறையும்

9

ஜம்மு காஷ்மீர்

2.4

2.0

மக்கள் தொகை குறையும்

10

ஜார்கண்ட்

3.5

2.5

மக்கள் தொகை கூடும்

11

கர்நாடக

2.3

1.8

மக்கள் தொகை குறையும்

12

கேரளா

1.7

1.7

மக்கள் தொகை குறையும்

13

மத்திய பிரதேசம்

3.7

2.6

மக்கள் தொகை கூடும்

14

மகாராஷ்ட்ரா

2.2

1.9

மக்கள் தொகை குறையும்

15

ஒரிசா

2.7

2.1

மக்கள் தொகை சம நிலையில் இருக்கும்

16

பஞ்சாப்

2.2

1.8

மக்கள் தொகை குறையும்

17

ராஜஸ்தான்

3.7

2.6

மக்கள் தொகை கூடும்

18

தமிழ்நாடு

1.8

1.7

மக்கள் தொகை குறையும்

19

உத்திர பிரதேசம்

4.4

3.0

மக்கள் தொகை கூடும்

20

மேற்கு வங்காளம்

2.2

1.8

மக்கள் தொகை குறையும்

பிற மாநிலங்கள் குறித்த தகவல் இல்லை

அதாவது, சில மாநிலங்களில் மக்கள் தொகையைக் கூட்ட திட்டம் தீட்டும் 11வது ஐந்தாண்டு திட்டம், சில மாநிலங்களில் மக்கள் தொகை குறைய திட்டம் தீட்டுகிறது. ஆனால் இந்தியாவின் மக்கள் தொகை அதே போலிருக்கும் படி திட்டம்.

அதாவது இந்திய ஒன்றிய அரசின் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கம் என்ன?

இந்தியாவின் மக்கள் தொகை அப்படியே இருக்க வேண்டும்
சில மாநிலங்களின் மக்கள் தொகை கூட வேண்டும்
சில மாநிலங்களின் மக்கள் தொகை குறைய வேண்டும்

அப்படித்தானே !! இது நல்ல திட்டம் தானே !!! இதில் ஏதாவது ஐயம் உள்ளதா 🙂

இனி

எந்த மாநிலங்களின் மக்கள் தொகை கூடுகிறது என்றும் எந்த மாநிலங்களின் மக்கள் தொகை குறைகிறது என்றும் பார்க்கலாமா?

வரிசை எண்

மாநிலம்

பேசும் மொழி

இலக்கு

இலக்கின் விளைவு

3

பீகார்

இந்தி

3.0

மக்கள் தொகை கூடும்

19

உத்திர பிரதேசம்

இந்தி

3.0

மக்கள் தொகை கூடும்

13

மத்திய பிரதேசம்

இந்தி

2.6

மக்கள் தொகை கூடும்

17

இராச்சசுத்தான்

இந்தி

2.6

மக்கள் தொகை கூடும்

10

சார்கண்ட்

இந்தி

2.5

மக்கள் தொகை கூடும்

4

சட்டிஸ்கர்

இந்தி

2.4

மக்கள் தொகை கூடும்

2

அசாம்

அசாமி

2.3

மக்கள் தொகை கூடும்

6

குஜராத்

இந்தி, குஜராத்தி

2.2

மக்கள் தொகை கூடும்

இந்தியா முழுவதும்

2.1

மக்கள் தொகை சம நிலையில் இருக்கும்

15

ஒடிசா

ஒடியா

2.1

மக்கள் தொகை சம நிலையில் இருக்கும்

9

சம்மு காசுமீர்

காசுமீரி

2.0

மக்கள் தொகை குறையும்

7

அரியானா

பஞ்சாபி

1.9

மக்கள் தொகை குறையும்

14

மகாராஷ்ட்ரா

மராத்தி

1.9

மக்கள் தொகை குறையும்

1

ஆந்திர பிரதேசம்

தெலுங்கு

1.8

மக்கள் தொகை குறையும்

5

தில்லி

இந்தி

1.8

மக்கள் தொகை குறையும்

8

இமாச்சல பிரதேசம்

இந்தி

1.8

மக்கள் தொகை குறையும்

11

கர்நாடக

கர்நாடகம்

1.8

மக்கள் தொகை குறையும்

16

பஞ்சாப்

பஞ்சாபி

1.8

மக்கள் தொகை குறையும்

20

மேற்கு வங்காளம்

வங்காளி

1.8

மக்கள் தொகை குறையும்

12

கேரளா

மலையாளம்

1.7

மக்கள் தொகை குறையும்

18

தமிழ்நாடு

தமிழ்

1.7

மக்கள் தொகை குறையும்

பிற மாநிலங்கள் குறித்த தகவல் இல்லை

இந்திய ஒன்றிய அரசு போடும் ஒரு திட்டத்துக்கு ஏன் இப்படி இந்தி எதிர் பிற மொழிகள், வடக்கு எதிர் தெற்கு, ஆரியம் எதிர் திராவிடம் என்றெல்லாம் உள்நோக்கம் கற்பித்து இதனை ஒரு சதித்திட்டம் போல் பார்க்கிறீர்கள் என்கிறீர்களா?

இதே இந்தியாவின் மக்கள் தொகை நிலையாக இருக்க,

* இந்துக்கள் மக்கள் தொகை கூட வேண்டும் ஆனால் பிற சமயத்தவர் மக்கள் தொகை குறைய வேண்டும்.

* உயர் சாதியினர் மக்கள் தொகை கூட வேண்டும் ஆனால் பிற சாதியினர் மக்கள் தொகை குறைய வேண்டும்.

* பணக்காரர்கள் மக்கள் தொகை கூட வேண்டும் ஆனால் ஏழைகள் மக்கள் தொகை குறைய வேண்டும்.

* வட தமிழக மக்கள் தொகை கூட வேண்டும் ஆனால் தென் தமிழக மக்கள் தொகை குறைய வேண்டும்.

என்று திட்டம் போட்டால் உங்களால் ஏற்க முடியுமா?

இதே போல் இலங்கையின் மக்கள் தொகை நிலையாக இருக்க,

* சிங்களவர் மக்கள் தொகை கூட வேண்டும் ஆனால் தமிழர் மக்கள் தொகை குறைய வேண்டும்

என திட்டம் போட்டால் உங்களால் ஏற்க முடியுமா?

இலங்கையில் இரு இனங்கள் என்பதால் உறுத்துகிறது. இந்தியாவில் பல இனங்கள் என்பதால் நமக்கு உறைக்கவில்லை !

சரி, அப்படியே சில இனங்களின் மக்கள் தொகை மட்டும் குறைந்தால் என்ன இழப்பு என்கிறீர்களா?

* மக்கள் தொகை குறுக்கம் ஒரு வளர்ந்த நாட்டுச் சிக்கல். இச்சிக்கலை எதிர்கொள்ளும் நாடுகள் தத்தம் நாடுகளில் கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள சலுகைகள் தருகின்றன. ஆனால்,  தமிழர் மக்கள் தொகை குறைவதால், அதனைக் கூட்டுவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக மாநில அரசுக்கு உரிமை உண்டா?

* வருங்காலத்தில் மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவின் பல்வேறு இனங்களின்
அரசியல் உரிமைகள் மாற்றி அமைக்கப்படாது என்பதற்கு உறுதி உண்டா?
மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையும் மாற்றப்படும் என்பதை அறிவீர்களா?

தற்போது இருக்கும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை வைத்தே தமிழக நலன்கள் சார்ந்த ஆற்று நீர் பகிர்வு, மீனவர் நலம், ஈழத்தமிழர் நலம் தொடர்பான சிக்கல்களில் ஒன்றும் சாதிக்க இயலவில்லை. ஒட்டு மொத்த தமிழகமும் ஒரே கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தாலும், நம்முடைய பங்கேற்பு இல்லாமலேயே நடுவண் அரசு அமைக்க முடியும் என்பதை 2014 தேர்தல் சுட்டுகிறது. இந்நிலையில், நமக்கான மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தாலோ இந்தி பேசும் மாநிலங்களின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை உயர்ந்தாலோ என்ன மாதிரியான விளைவுகள் வரும்?

* தமிழ்நாட்டின் மக்கள் தொகை குறைவாலும் நல்ல அரசாட்சியாலும் கிடைக்கக்கூடிய பயன்கள், இந்தியாவின் எல்லா பகுதிகளில் இருந்தும் இங்கு குடியேறுபவர்களால் நீர்த்துப் போகும்.

* இந்தியாவின் மக்கள் தொகையைச் சம நிலையில் வைக்க, தேவையே இல்லாமல் தமிழகத்தின் மக்கள் தொகை மிகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் நாளைய சமூகத்தில் முதியோர் விகதம் கூடுதல், தனித்து விடப்பட்ட பெற்றோருக்கான சமூக பாதுகாப்பு, ஆண் – பெண் விகிதம், நகரமயமாக்கத்தின் விளைவுகள், உழைக்கும் இளைஞர்கள் குறைவு என்று எழும் பல்வேறு பிரச்சினைகளையும் தமிழக அரசு தான் எதிர்கொள்ள வேண்டும். இது தேவையில்லாத தலைவலி (சப்பானின் கதை).

* தமிழ்நாட்டில் பிற மொழியினர் மக்கள் தொகை கூட கூட, தமிழர் நிலம் தமிழர் கையை விட்டுப் போகும். நிலம் போனால் மொழி, பண்பாடு, தன்னாட்சி என்று வரிசையாக கை விட்டுப் போகும். நாமெல்லாரும் இந்தியர்கள் தாமே என்றால், இலங்கையின் தமிழர் பகுதிகளில் நடக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் விளைவுகளை ஒப்பிட்டுப் பாருங்கள். சம்மு காசுமீரில் வெளிமாநிலத்தவர் நிலம் வாங்க முடியாது என்ற சட்டம் ஏன் என்று எண்ணிப் பாருங்கள். அரபியர்களின் நிலங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விலைக்கு வாங்கித் தான் இசுரேல் என்ற நாடு பிறந்ததை அறிந்து கொள்ளுங்கள்.

* ஏற்கனவே 26% மட்டுமே உள்ள இந்தி பேசுவோரின் எண்ணிக்கையைத் திரித்து 45% என்று கூட்டிக் காட்டுகிறார்கள். இந்தப் பிழையான மக்கள் தொகை கொள்கை வரும் ஆண்டுகளில் இன்னும் அந்த எண்ணிக்கையைக் கூட்டி பல நிலைகளிலும் இந்தியைத் திணிப்பதற்கு உதவும்.

இந்திய ஒன்றிய அரசின் திட்டப்படி, இந்தி பேசும் மக்களின் தொகை கூடிக் கொண்டே போகும். மற்ற மொழிகளைப் பேசும் இனங்களின் தொகை குறைந்து கொண்டே போகும்.

இது குடும்பக் கட்டுப்பாடா?

இல்லை, இனக்கட்டுப்பாடா?

தொடர்புடைய கட்டுரை: The Impending South Indian Population Implosion

Test of Tamil as a foreign language

இந்தியாவின் தேசிய மொழி / இணைப்பு மொழியாக கன்னடத்தை அறிவித்தால் கன்னடர்களுக்கு நல்லதா மற்ற மொழிக்காரர்களுக்கு நல்லதா? கன்னடர்களுக்குத் தான் நல்லது.

இந்தியாவின் தேசிய மொழி / இணைப்பு மொழியாக வங்க மொழியை அறிவித்தால் வங்காளிகளுக்கு நல்லதா மற்ற மொழிக்காரர்களுக்கு நல்லதா? வங்காளிகளுக்குத் தான் நல்லது.

இதே போல் இந்தியாவின் தேசிய மொழி / இணைப்பு மொழியாக இந்தியை அறிவித்தால் இந்திக்காரர்களுக்கு நல்லதா மற்ற மொழிக்காரர்களுக்கு நல்லதா?

இந்திக்காரர்களுக்குத் தான் நல்லது.

எனவே, இந்தி தொடர்பு மொழி ஆனால் மட்டும் இந்தியா ஒன்றுபடும், வளரும், தமிழனுக்கு நல்லது, வேலை வாய்ப்பு கூடும் என்பது எல்லாம் இந்தித் திணிப்பை நியாயப்படுத்துவதற்கான திட்டமிட்ட கட்டுக் கதை.

என்னதான் பள்ளிக்கூடத்தில் இந்தி சொல்லித் தந்தாலும் இந்தி பிரச்சார சபைகளில் போய் படித்தாலும் தாய்மொழியாக இந்தியைக் கொண்டுள்ளவர்களோடு மற்ற மொழிக்காரர்களால் போட்டி போட முடியாது.

LKG முதற்கொண்டு ஆங்கில வழியத்தில் எல்லா பாடங்களையும் படித்த பின்னும், தமிழ்நாடு முழுக்க எல்லா இடங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் ஆங்கிலம் நிறைந்திருந்தாலும், இன்னும் சரியாக ஆங்கிலம் பேசத் தெரியாததால் வேலை கிடைக்கவில்லை என்று விழிபிதுங்கும் இன்றைய தலைமுறையே இதற்கு சாட்சி.

ஆகவே, இந்தி படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற வாதத்தை விட்டு விடுவோம். இது 1960களில் வங்கிகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் ஏதாவது குமாசுத்தா வேலையை இலட்சியமாக கொண்டு வளர்க்கப்பட்ட தலைமுறையின் மனநிலை. இன்று பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் அடிமட்ட வேலை முதல் உயர்நுட்ப வேலைகள் வரை செய்வதற்காக குவியும் காலத்துக்குப் பொருந்தாது.

அனைவரும் இந்தியைப் படிக்க வைப்பது எதற்கு உதவும் என்றால் காலப்போக்கில் இந்தி பேசுவோரின் எண்ணிக்கையைக் கூட்டிக் காட்டி இன்னும் வெகு தீவிரமாக இந்தித் திணிப்பை நியாயப்படுத்துவதற்கே உதவும்.

இந்தியைத் தாய்மொழியாக கொண்ட இந்தியர்கள் 26% மட்டும் இருக்கும் போது அதனை 45% ஆக எப்படித் திருக்கிறார்கள் என்று இங்கு பாருங்கள்:

http://scroll.in/article/667570/read-the-fine-print-hindi-is-the-mother-tongue-of-only-26-of-indians.

நாடு முழுக்க இந்தி படிக்க வைத்து விட்டால், இரண்டாம் மொழியாக இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 100% என்று கணக்கு காட்டி மொத்தமாக “இந்தி”யாவாக மாற்றி விடலாம்.

சரி, இதே போல் இந்தியாவின் தேசிய மொழி / இணைப்பு மொழியாக ஆங்கிலம் தொடர்வதால் ஆங்கிலம் பேசும் மேலை நாட்டவர்களுக்கு நல்லதா என்று கேட்டால்…

ஆம், நாம் ஆங்கிலம் பேசுவதால் மேலை நாட்டவர்களுக்கு நல்லது தான். அவர்கள் பொருட்களை இங்கு விற்கவும், குறைவான செலவில் நம்முடைய மனித வளத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் உதவும். நாம் இதனை ஏற்றுமதி / இறக்குமதி, வணிகம், சேவைத் துறை, அமெரிக்காவில் ஆராய்ச்சிப் படிப்பு / வேலை என்று நமக்கு வசதியான பெயர்களில் சொல்லிக் கொண்டாலும், இது தான் உண்மை.

சரி, அப்ப வெளிநாட்டுக்காரனுக்குப் பயன்படக்கூடிய ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ளும் நாம் ஏன் இந்தியை ஏற்றுக் கொள்ளக்கூடாது?

ஏன் என்றால்,

1. இன்று வெளிநாட்டுக்காரர்கள் சட்டம் போட்டா நம்மை அடிமை ஆட்சி செய்தோ நம் மீது ஆங்கிலத்தைத் திணிக்கவில்லை. எது உலகப் பொது மொழியாக இருக்கிறது என்பது காலத்துக்கு காலம் மாறி வருகிறது. இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு கோலோச்சியது. இப்பொழுது ஆங்கிலம். அடுத்து சீனம் வரலாம் என்றும், இல்லை, ஆங்கிலமும் செல்வாக்கை இழந்து, நுட்பத்தின் வசதியால் பல மொழிகள் ஊடாடுவது இலகுவாகும் என்றும் கூறுகிறார்கள். Nicholas Ostler எழுதிய The Last Lingua Franca: English Until the Return of Babel படியுங்கள்.

அதே போல் இந்தியும் தன் இயல்பான வலுவால் இந்தியாவின் தொடர்பு மொழியாக மாறினால் அது வேறு விசயம். ஆனால், மக்கள் தேர்ந்தெடுத்த கூட்டாட்சி முறையில் இயங்குகிற இந்திய அரசு மற்ற பல மொழிகளை இரண்டாந்தரமாக வைத்து இந்தியை மட்டும் வளர்ப்பதும் திணிப்பதும் தவறு.

2. இந்தியா என்ற நாடு 60+ ஆண்டுகளாகத் தான் இருக்கிறது. அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னரும் தமிழர்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுக்கவும் கடல் கடந்து உலகம் முழுக்கவும் வணிகத் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அப்போது எல்லாம் வணிகம் செய்ய நம் நாடு முழுக்க அயல் மொழியை கற்பதற்கான தேவை எழவில்லை. ஏன் எனில், அப்போது நாம் மரபறிவு மூலம் விளைந்த பொருட்களை விற்றோம். இப்போது நம் உழைப்பை விற்று கூலிகளாக இருக்கிறோம். இது தான் வேறுபாடு.

எனவே,

ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி இல்லை. அந்தந்த மக்களின் தாய்மொழி தான் மாற்று.
இது தான் நிலையான தீர்வாக இருக்கும்.

இன்று பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் சீனர்கள், ஐரோப்பியர்கள், கொரியர்கள், சப்பானியர்கள் என்று யாராக இருந்தாலும் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்தும் தாய்மொழியில் தான். வணிகத்துக்காக ஒரு சிலர் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக கல்லூரிப் படிப்புக்குப் பிறகு கூட கற்கிறார்களே தவிர, ஆங்கிலத்தை வாழ்க்கை முழுக்க பிடித்துத் தொங்குவதில்லை. அவர்களுடன் வணிகம் செய்ய வரும் வெளிநாட்டவர் அவர்கள் மொழியில் பேசக்கூடிய மொழிபெயர்ப்பாளர்களையும் மொழிபெயர்ப்பு நுட்பங்களையும் வைத்து உரையாடுகிறார்களே தவிர, ஆங்கிலம் தெரியவில்லை என்ற காரணத்தால் அவர்களைப் புறக்கணித்துச் செல்வதில்லை. புறக்கணிக்கவும் முடியாது. சுருக்கமாக, உங்கள் திறமையும் உங்கள் பொருளாதார பலமும் பேச வேண்டும். மாறாக, நீங்கள் அவர்கள் மொழியைப் பேசினால் தான் வேலைவாய்ப்பு என்று இறங்கும் போது, நீங்கள் விற்பது உங்களைத் தான். அதாவது மனித வளம் என்ற பெயரில் உங்கள் உழைப்பைத் தான் குறைந்த விலைக்கு விற்கிறீர்கள். இப்படி காலத்துக்கும் இந்த மொழியைப் படித்தால் வேலை கிடைக்கும் அந்த மொழியைப் படித்தால் வேலை கிடைக்கும் என்று திரிந்தால் பஞ்சம் பிழைக்க போன பரதேசிகள் மாதிரி அலைய வேண்டியது தான்.

உள்ளூர் மொழிகளை வளர்ப்போம். உள்ளூர் தற்சார்பு பொருளாதாரத்தை வளர்ப்போம். தொழில் முனைப்பையும் மொழி நுட்பத்தையும் வளர்ப்போம். மனித வளத்தை ஏற்றுமதி செய்யாமல் நாம் விளைவித்த பொருட்களை ஏற்றுமதி செய்வோம்.

அப்போது தமிழ்நாட்டில் தமிழ் அழியுமோ என்று எண்ணி அஞ்சி தமிழை வளர்க்க போராடத் தேவையில்லை.

ஏனெனில், அப்போது Test of Tamil as a foreign language தேர்வு எழுத பிற மொழிக்காரர்கள் முண்டியடித்துக் கொண்டிருப்பார்கள்.

நூல் இனி – தமிழ் மின்னூல்கள் சந்தை

ஒரு புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறேன்.

நூல் இனி – தமிழ் மின்னூல்கள் சந்தை.

http://noolini.com/ பாருங்கள்.

இது வரை பதிப்பாகியுள்ள இலட்சக்கணக்கான தமிழ் நூல்களும் மின்வடிவில் நிலைபெற வேண்டும். வாசகர்கள் – எழுத்தாளர்கள் ஆகிய இருவருக்கும் கட்டற்ற களத்தைத் தருவதன் மூலம் தமிழ் வழி அறிவூக்கச் செயற்பாடுகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே இம்முயற்சிக்கான உந்துதல்.

புதிய எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்கான ஆதரவைச் சோதிப்பதற்கான களமாக இதனைப் பயன்படுத்தலாம். அச்சில் உள்ள நூல்கள் உலகம் முழுக்க தங்கள் சந்தையை விரிவாக்கலாம். பதிப்பு நின்று போன நூல்கள் மின்பிறவி எடுக்கலாம். நேரடி நூல் விற்பனை மூலமாக அன்றி அதனை முன்வைத்த மற்ற அறிவுச் செயற்பாடுகள் மூலம் பணம் ஈட்டலை நோக்கியே உலக பதிப்புலகப் போக்கு செல்கிறது.

உங்கள் ஆதரவைத் தேடி 🙂