தனியாரா அரசா? எந்த மருத்துவமனைக்குச் செல்வது?

நவீன அறிவியல் மருத்துவத்தின் (அல்லோபதி என்கிற ஆங்கில மருத்துவம்) மீது மக்கள் வைக்கும் இரு பெரும் குற்றச்சாட்டுகள் என்ன?

* தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற சோதனைகள், மருந்துகள் தந்து காசு பிடுங்குகிறார்கள்.
* தவறான மருத்துவம் பார்க்கிறார்கள். ஒரு மருத்துவமனையில் குணம் ஆகாதது இன்னொரு மருத்துவமனையில் குணமாகிறது. இவர்களை எப்படி நம்புவது?

இது தான் உங்கள் பிரச்சினை என்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் அரசு பொது மருத்துவமனை. அங்கு மருந்து, அறுவை சிகிச்சை, சோதனை முதற்கொண்டு அனைத்தும் இலவசம். தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் பாடம் நடத்தும் பேராசிரியர்கள் தான் அங்கு மருத்துவம் பார்க்கிறார்கள். எனவே, அவர்கள் சரியாக மருத்துவம் பார்ப்பார்களா என்ற ஐயமே உங்களுக்கு வேண்டாம்.

ஆனால், உங்கள் குறை என்ன?

அரசு மருத்துவமனையில் கூட்டமாக இருக்கிறது. காக்க வைக்கிறார்கள். சுத்தமாக இல்லை. என்னைக் கனிவுடன் கவனித்துப் பொறுமையாகப் பதில் சொல்வதில்லை (இந்தக் குற்றச்சாட்டு உண்மை இல்லை என்பது வேறு விசயம்)

முதலில், இப்படிப்பட்ட குறைகளே பலருக்கு ஊடகம் எழுப்பும் பிம்பங்களால் வந்தது தான். நேரடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்ப்போர் சிலரே. அப்படியே இது தான் உங்கள் குறை என்று நீங்கள் தனியாருக்குச் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் அங்கு செலுத்தும் தொகை உங்கள் egoவுக்கும் சேர்த்து தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எவ்வளவு பெரிய தனியார் மருத்துவமனைக்குச் செல்கிறீர்களோ, அந்த அளவு காசு வாங்கிக் கொண்டு உங்கள் egoவைக் குளிர்விப்பார்கள். தனியறை, AC, TV மற்றும் இன்ன பிற வசதிகள் இருக்கும். இருக்கிற குறைந்த நிதியில் கோடிக்கணக்கானோர் உயிரைக் காப்பாற்றுவது தான் அரசின் முதல் கடமை. உங்கள் egoவைக் குளிர்விப்பது அன்று.

ஒன்று புரிந்து கொள்ளுங்கள். அரசு பேருந்தில் ஏறினாலும் தனியார் பேருந்தில் ஏறினாலும் இலக்கு ஒன்று தான். நீங்களே உங்களைப் பணக்காரர் என்று நினைத்து தனியாக helicopter வாடகைக்கு எடுத்து ஆண்டி ஆகாதீர்கள். அதை விட மோசம், போகாத ஊருக்கு வழிகாட்டும் ஏமாற்று மருத்துவத்தில் சிக்கி சுடுகாட்டுக்குப் போகாதீர்கள்.

காண்க – முகநூல் உரையாடல்

டெங்குக்கு நவீன மருத்துவம் மட்டுமே தீர்வு

பொது நல அறிவிப்பு
அரசு சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா, இயற்கை மற்றும் அனைத்து வகை இந்திய முறை மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக வரும் யாரையும் உள்நோயாளியாக அனுமதிக்காமல் நவீனமுறை மருத்துவமனைகளுக்கு (அலோபதி என்னும் ஆங்கில மருத்துவம்) அனுப்பி வைக்குமாறு அரசு அறிவித்துள்ளது. எனவே, இனிமேலும் டெங்கு காய்ச்சலுக்கு வீட்டிலேயே பப்பாளி, நிலவேம்பு முதலிய பாட்டி வைத்தியங்களை முயலாமல் தனியாரில் இதே இதர மருத்துவ முறைகளைப் பின்பற்றுவோரை நாடாமல் மாவட்ட அரசு மருத்துவமனைகளை நாடுங்கள். இந்த அறிவிப்பைப் பகிர்ந்து விழிப்புணர்வு கூட்ட உதவுங்கள். கவனிக்க: இந்த சுற்றறிக்கையை வழங்கியதே, “இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம்” தான்!

காண்க – முகநூல் உரையாடல்

நிலவேம்பு குடித்தால் டெங்கு குணமாகுமா?

கேள்வி: நிலவேம்பு/பப்பாளி ஆறுதல் மருந்து தான், அதில் மருத்துவ குணங்கள் இல்லை என்கிறீர்கள். ஆனால், அதை நானே குடித்தேன். எனக்கு #டெங்கு சரியானது. மருத்துவமனையில் மருத்துவர்களே நிலவேம்பு/பப்பாளி சாறு குடிக்கச் சொல்கிறார்கள். இதனை எப்படி புரிந்து கொள்வது?

பதில்: டெங்கு முதலிய பல்வேறு வைரசு மூலமான காய்ச்சல் நோய்கள் பெரும்பாலானோருக்குத் தானாகவே குணமாகக் கூடியது தான். உங்கள் குழந்தைக்குக் காய்ச்சல் என்று மருத்துவரிடம் போனால், இது வைரசு காய்ச்சல், ஒரு வாரத்தில் தானாகவே குணமாகும், அதற்குப் பிறகும் நீடித்தால் வாருங்கள் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். காய்ச்சலால் வரும் உடல்வலிக்கு மட்டும் paracetamol மருந்து தருவார்கள்.

ஆறுதல் மருந்து தருவதும் நவீன அறிவியல் மருத்துவத்தின் ஒரு பகுதி தான். எனவே, தானாகவே நோய் குணமாகும் நேரத்தில் நீங்கள் நிலவேம்பு/பப்பாளி சாறு குடித்தால், அதன் காரணமாகத் தான் நோய் குணமாகியது என்று உறுதியாகச் சொல்வதற்கு இடம் இல்லை. அவ்வாறு இது நோயைக் குணப்படுத்தும் என்றை நிறுவுவதற்கு முறையான அறிவியல் ஆய்வுகள் தேவை. முதலில் ஆய்வகத்தில் சோதனைத் தட்டுகளில் நிறுவி, பிறகு எலிகள் உள்ளிட்ட மற்ற விலங்குகளில் சோதனை செய்து, அதன் பிறகு பல்வேறு கட்ட மனிதச் சோதனைகளைக் கடந்து தான் மருந்து என்று பரிந்துரைக்கும் நிலைக்கு வர முடியும். இது குறைந்தது 10 முதல் 20 ஆண்டுகள் எடுக்கக் கூடிய ஒரு சோதனை முறை.

நில வேம்பின் அறிவியல் பெயர் Andrographis paniculata.

இதன் டெங்கு ஒழிப்பு குணங்கள் குறித்த ஆய்வுகளை Google Scholar தளத்தில் தேடிப் பாருங்கள் (மறுமொழிகளில் இணைப்பு தருகிறேன்).

ஒரு சில முதற்கட்ட ஆய்வுகள் நிலவேம்புக்கு டெங்கு ஒழிப்பு குணங்கள் இருக்கலாம், மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறுகின்றனவே ஒழிய இதனையே மருந்தாகப் பரிந்துரைக்கும் நிலை இன்னும் வரவில்லை.

ஒரு செடியில் மருத்துவக் குணம் இருக்கிறது என்பது வேறு. அதுவே மருந்து என்பது வேறு. எடுத்துக்காட்டுக்கு, எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று வகுப்பறையில் பாடம் நடத்தலாம். ஆனால், car batteryஐக் கழற்றி வைத்து விட்டு எலுமிச்சம் பழ மூட்டையை வைத்து வண்டி ஓட்ட முடியாது.

செடி இயற்கையானது. அதைக் குடித்தால் எந்தப் பக்க விளைவும் வராது என்று எண்ணுவது தவறு. ஒருவருக்கு மருந்தாகும் ஒரு மூலக்கூறு அனைவருக்கும் ஒத்து வரும் என்றும் சொல்ல முடியாது. மேயோ மருத்துவமனை வெளியிட்டுள்ள நூற்குறிப்பு மாசமாக உள்ள பெண்கள் நிலவேம்பு அருந்துவதைத் தவிர்க்க வேண்டும், அது கருவைக் கலைக்கும் என்கிறது (மறுமொழிகளில் இணைப்பு தருகிறேன்).

வெளிநாட்டுக் கம்பெனிக்காரன் நம்மைச் சோதனை எலிகளாகப் பயன்படுத்துகிறான் என்று அலறும் ஆட்கள், எந்த வித ஆய்வும் இன்றி கண்ட கசாயத்தைக் குடிக்கச் சொல்வது ஏற்புடையதா?

ஆகவே, நிலவேம்பு, பப்பாளி முதலியன டெங்குவைத் தடுக்கும் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மாறாக, அது ஒரு சிலருக்கு நோயை இன்னும் தீவிரப்படுத்தி விடும் ஆபத்தும் இருக்கலாம். போலியோ வைரசுக் காய்ச்சலுக்கே இன்னும் எந்த மருந்தும் இல்லை. தடுப்பூசி தான் உள்ளது. அதாவது, தடுப்பூசி போட்டால் தப்பலாம். ஆனால், போலியோ வந்த பிறகு குணப்படுத்த மருந்து இல்லை.

எனவே, காய்ச்சல் வந்தால் MBBS படித்த மருத்துவர்களை நாடுங்கள். அவர்கள் தரும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள். அவர்கள் பிழையான மருத்துவம் பார்த்தால் சட்டத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை உண்டு. ஏமாற்று மருத்துவ ஆட்களிடம் இந்தப் பாதுகாப்பு இல்லை.

காண்க – முகநூல் உரையாடல்

நிலவேம்பு என்னும் ஆறுதல் மருந்து

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் கசாயம், பப்பாளி சாறு முதலியன மருந்தாகுமா? நவீன அறிவியல் மருத்துவத்தில் (அதாவது பொது மக்கள் ஆங்கில மருத்துவம் என்று சொல்கிற அலோபதி மருத்துவம்) இதற்கு மருந்து இல்லை என்கிறார்களே? அரசு ஏன் இவற்றைப் பரிந்துரைக்கிறது?

…டெங்கு காய்ச்சலுக்கு இது வரை எந்த மருத்துவ முறையிலும் மருந்து இல்லை. டெங்கு தாக்கிய அனைவரும் இறப்பதில்லை. நோயின் தீவிரத்தைப் பொருத்து 1-5% பேர் இறக்கிறார்கள். ஆனால், ஊர் முழுக்க இது போல் கொள்ளை நோய் வரும் போது இறப்பதற்கு வாய்ப்பில்லாத எஞ்சிய பெரும்பகுதி மக்களும் பீதி அடைவார்கள். இந்தப் பெரும் பீதியைக் கட்டுக்குள் வைக்க அரசும் மருத்துவத் துறையும் placebo என்னும் ஆறுதல் மருந்தைக் கொடுக்கும். அதாவது, இதனால் ஒரு மருத்துவ விளைவும் இருக்காது. ஆனால், தான் மருந்து உண்கிறோம் என்ற நிம்மதியில் பீதியடையாமல் இருப்பார்கள். பிறகு, இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தியின் காரணமாக நோய் குணமாகும். நிலவேம்பும் பப்பாளியும் இது போன்ற ஒரு ஆறுதல் மருந்து தான். அவற்றைக் குடிப்பதற்குப் பதில் மருந்து என்று நினைத்து பச்சைத் தண்ணீரைக் குடித்தாலும் அதே விளைவைப் பெறலாம். ஓமியோபதி, அக்குபங்சர் உள்ளிட்ட பல்வேறு ஏமாற்று மோசடி மருத்துவர்கள் தரும் மருந்துகளால் சில நோய்கள் சில வேளைகளில் குணமாவதற்கும் இதே ஆறுதல் மருந்து அணுகுமுறை தான் காரணம்.

ஆனால், ஆறுதல் மருந்தே நோய் தீர்க்கும் மருந்து ஆகாது. டெங்குக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் எழுந்தால் தாமதிக்காமல் நவீன அறிவியல் மருத்துவர்களை நாடுங்கள். “டெங்குக்கு மருந்தில்லை என்கிறீர்கள், பிறகு ஏன் மருத்துவ மனைக்குச் செல்லச் சொல்கிறீர்கள்” என்கிறீர்களா? மருந்து என்பது வேறு. நோயின் விளைவுகளைப் பகுத்துணர்ந்து அதனை எதிர்த்துப் போராடும் வகையில் உடலுக்குச் சிகிச்சை அளிப்பது வேறு. தீவிர டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளானவர்களுக்குத் தொடர்ந்து போதிய அளவு நீர்ச்சத்து தர வேண்டும். இரத்த அழுத்தத்தையும் platelet எண்ணிக்கையும் சீராகப் பேண வேண்டும். இதற்காகத் தேவைப்பட்டால், இரத்தம் மாற்றுவார்கள். இவை எல்லாம் டெங்குச் சாவுகளைக் குறைக்கும்.

கடவுள் இல்லை என்பவனை நம்பலாம். இருக்கிறார் என்பவனைக் கூட நம்பலாம். ஆனால், தான் தான் கடவுள் என்பவனை நம்ப முடியாது. அது போலத் தான், மருந்தே இல்லை என்று உலக சுகாதார நிறுவனமே சொல்லிய டெங்கு நோய்க்கு தங்களிடம் மருந்து இருப்பதாக போலி, ஏமாற்று மருத்துவக் கும்பல் வலை விரிக்கிறது. அரசே கசாயம் குடிக்கச் சொல்வது இவர்களுக்குத் தோதாக இருக்கிறது. உலகெங்கும் டெங்குத் தாக்குதலால் ஏற்படும் பொருளாதாரச் சுமை 9 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருக்கும் என்று அளவிடப்படுகிறது. அப்படிப் பட்ட அதிசய மருந்தை வைத்திருக்கும் இந்த ஏமாற்று மருத்துவக் கும்பல் வாளி வாளியாக உலகெங்கும் நிலவேம்புக் கசாயத்தை ஏற்றுமதி செய்து சம்பாதிக்கலாமே?

மந்தை நோய் எதிர்ப்புத் திறன்

தங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடவில்லை, அது நன்றாகத் தான் இருக்கிறது. எனவே, தடுப்பூசி என்பதே ஒரு மோசடி என்கிறார்களே?

…ஒரு ஊரில் 100 பேர் இருக்கிறார்கள். அந்த ஊருக்குத் தீவிரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே, ஆளுக்கு ஒரு கைத்துப்பாக்கி எடுத்துக் கொண்டு ஊரைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கிறார்கள். இதில் ஒருத்தர் தான் மட்டும் சூராதி சூரர் வீராதி வீரர் தனக்கு துப்பாக்கி தேவையில்லை, பாரம்பரிய வேல் கம்பு போதும் என்று நிற்கிறார். ஒரு ஆள் மட்டும் இப்படி நிற்கும் போது அவரைச் சரியாகக் கண்டு பிடித்து ஊடுருவுதல் சிரமம் என்று தீவிரவாதக் கும்பல் திரும்பிப் போகும். இந்த ஒருத்தரைப் பார்த்து, “அட, நம்ம ஊருக்கு ஏதும் ஆபத்து இல்லை போல், நாம் தான் வீணாக பீதியாகி துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம், இதனால் ஆயுதம் விற்கும் கும்பல் தான் பயன் அடைகிறது” என்று எண்ணி ஒவ்வொருத்தராக துப்பாக்கியைக் கீழே போடும் போது ஊடுருவுவது எளிது. என்ன தான் கையில் துப்பாக்கியைப் பிடித்து இருந்தாலும், ஒவ்வொருவரும் சிறப்பாகச் சண்டை போடக் கூடிய தேர்ந்த வீரர்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, துப்பாக்கி இருந்தும் சிலர் மாளக் கூடும். இப்போது அதே வேல் கம்பு ஆள் என்ன சொல்வான்? “பார்த்தியா, துப்பாக்கி இருந்தால் கூட சாவு நிச்சயம், துப்பாக்கி விற்பதற்காக நம்மை ஏமாற்றி விட்டார்கள்”.

பட உதவி: Tkarcher, CC-BY-SA 4.0

இப்போது, இந்த ஊரைக் காக்க என்ன செய்ய வேண்டும்?

* எல்லோரும் துப்பாகி ஏந்த வேண்டும்.
* பாரம்பரிய வேல் கம்பு ஆட்களைத் தனித்தீவுக்கு நாடு கடத்த வேண்டும். அவர்களை விட்டு வைத்தால் தானும் செத்து மற்றவர்களையும் சாகடிப்பார்கள்.

இன்னும் புரியவில்லை என்றால் Herd Immunity என்னும் மந்தை நோய் எதிர்ப்புத் திறன் பற்றிப் படித்துப் பாருங்கள்.