சாதி

ஊர்: புதுகையில் உள்ள ஒரு சிற்றூர். என் அம்மா பிறந்த ஊர். மூன்று தாய் மாமாக்கள், எண்ணற்ற சொந்தங்கள் அங்கு இருக்கிறார்கள். படிப்பறிவற்றவர்கள் இல்லை. பலர் சிங்கப்பூர், மலேசியா என்று பிழைக்கச் சென்று உலக அனுபவம் பெற்றவர்களே.

எப்பொழுது: ஒரு சில நாட்கள் முன்னர். 2007 தான். 21 ஆம் நூற்றாண்டு தான். தமிழ்நாட்டில் தான்.

என்ன ஆனது:

நான் பிறந்த சாதியில் உள்ள அந்த ஊர்ப் பெண்ணும் இன்னொரு சற்றே ஒடுக்கப்பட்ட சாதிப் பையனும் ஒருவரை ஒருவர் விரும்பி மணம் முடிப்பதற்காக வீட்டை விட்டுச் சென்றுள்ளனர். பெண்ணின் அண்ணன் முன் நிற்க, பெண்ணின் குடும்பத்தினர் ஊரார் துணையுடன் பெண்ணையும் பையனையும் பெங்களூர் வரை சென்று தேடிக் கண்டுபிடித்து ஊருக்குக் கூட்டி வந்துள்ளனர். பெண்ணைப் பெண்ணின் குடும்பத்தினரே தூக்கிட்டுக் கொன்று எரித்து விட்டார்கள். பையனை அந்த சாதிக்காரர்களிடமே ஒப்படைத்து 24 மணி நேரத்துக்குள் அவர்களே கொல்ல வேண்டும் என்று எழுதி வாங்கி இருக்கிறார்கள். எப்படியோ பக்கத்து ஊருக்கு செய்தி கசிந்து காவல் துறைக்கு வழக்கு சென்றுள்ளது. ஆனால், எப்படியும் அந்தப் பையனைக் கொல்லாமல் விட மாட்டார்கள்.

அதிர்ச்சி: சிங்கப்பூரில் பிழைக்க வந்திருக்கும் நான் பிறந்த சாதி இளைஞர்கள் நிலைப்பாடு: “அந்தப் பையனை எப்படியாவது கொன்று விடுங்கள். என்ன செலவு ஆனாலும் சட்டச்சிக்கல் வந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்”.

இதுவே அடக்கும் சாதிப் பையனாக இருந்திருந்தால்: பையனையும் பெண்ணையும் பிரித்து இருப்பார்கள். ஆனால், கண்டிப்பாகப் பையனைக் கொன்றிருக்க மாட்டார்கள். கண்டித்துத் திரும்ப சேர்த்துக் கொள்வார்கள். ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்ணின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

குடும்பத்தினர் பெண்ணுக்கு உறுதுணையாக இருந்திருந்தால்: குடும்பத்தை ஊரை விட்டு விலக்கி வைத்திருப்பார்கள். அவர்கள் திருமண, இறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ள மாட்டார்கள். அவர்களும் பிற சொந்தங்கள், (பெற்ற தாய், கூடப்பிறந்த அண்ணன், தங்கை போன்ற நெருங்கிய உறவுகள் உட்பட) யார் வீட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள முடியாது. பெண்ணுக்கு தங்கைகள் இருந்தால் திருமணம் பெருஞ்சிக்கல் தான். வாழ்நாள் முழுக்க அனுபவிக்கும் இந்த நிராகரிப்பின் வலியை எழுத்தில் வடிக்க முடியாது.

இன்று சிங்கப்பூரில் உள்ள அண்ணனிடம் பேசிய போது இந்தத் தகவலைச் சொன்னார். பல பக்கத்து ஊர்களில் இது போல் நடந்து உள்ளது என்றும் நம் ஊரில் இது தான் முதல் என்றும் சொன்னார். நாம் தொலைபேசியில் இவ்வளவு பேசினாலும் ஊருக்குள் போய் பேச துணிவு வராது. பேசினாலும் குரல் எடுபடாது. நாமும் தனித்துப் போகலாம் என்றார். இதைவிடக் கொடுமை: சில நாள் அந்த ஊரில் இருந்தால் நமக்குக் கூட “நம் இனம், நம் சாதி” என்ற உணர்வு வந்து விடும் என்கிறார் !!!
அந்தப் பையன் அடக்கும் சாதியா, ஒடுங்கிய சாதியா என்பது பிரச்சினையில்லை. வேறு சாதி என்பதே பிரச்சினை என்றார்.

நாளிதழ்களில் இது போன்ற செய்திகள் பார்ப்பது உண்டு என்றாலும் சொந்த ஊரில் நடக்கும் போது திகீர் என்கிறது 🙁

🙁 🙁 🙁

சாதி ஏற்றத் தாழ்வுகள் மட்டுமே பிரச்சினை இல்லை. சாதி என்று ஒன்று இருப்பதே பிரச்சினை தான். ஏற்றத் தாழ்வுகள் ஒழிந்தாலும் சாதி ஒழியும், ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. துணிவுள்ள தனிநபர்கள் சாதி அடையாளங்களைப் புறந்தள்ளி வாழ இயல்கிறதே தவிர, ஒட்டு மொத்த சமூகத்தின் மனநிலையிலும் மாறுதல் வருவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. படிக்காதவர்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்கிறார்கள் என்றால் படித்தவர்கள் திட்டம் போட்டுத் துல்லியமாகச் சாதியை வளர்க்கிறார்கள். இருப்பதிலேயே ஆக அடக்கும் சாதிக் காரனும் தன் சாதிக்குள் தான் பெண் கட்டுவேன் என்கிறான். இருப்பதிலேயே ஆக ஒடுக்கப்பட்ட சாதிக்காரனும் தன் சாதிக்குள் தான் பெண் கட்டுவேன் என்கிறான். சாதி ஏற்றத்தாழ்வு அளவுக்கு இந்த சாதி அடையாளம் காத்தல் பிரச்சினையும் முக்கியம்.

ஒவ்வொருவனும் ஏதோ ஒரு அடையாளத்தை வலியுறுத்த, மேல்நாட்ட விரும்புகிறான். சாதி என்று ஒன்று இல்லாவிட்டால், பணம், நிறம், மதம் என்று ஏதாவது ஒன்றைப் பிடித்துக் கொள்கிறான். இது சமூக வியாதியா? சாதியெல்லாம் இல்லை என்று சொல்பவர்கள் தமிழகத்தின் ஏதாவது ஒரு சிற்றூருக்குச் சென்று சில நாட்கள் வாழ்ந்து பார்த்தால் உண்மையைப் புரிந்து கொள்ளலாம். சாதிய அடக்குமுறையை சொந்த வாழ்க்கை அனுபவங்களாலேயே நன்கு உணர்ந்திருக்கிறேன்.

சிக்கோ

சிவாஜி படத்தின் 107வது திரை விமர்சனம் படிச்சிக்கிட்டு இருந்தீங்கன்னா அத விட்டுட்டு, முதல் வேலையா, தி பைரேட் பே போய் சிக்கோ திரைப்படத்துக்கான டொரன்ட் கோப்புகளை உங்க கணினில பதிவிறக்கிப் படத்தைப் பாருங்க. கோப்புகளைப் பதிவிறக்கும் முன்னர் பிட்டொரன்ட் நிறுவிக்கங்க.

மருத்துவ வசதி வணிக மயமாக்கப்படுவதால் சாதாரண மக்கள் எப்படி பாதிக்கப்படுறாங்கன்னு அமெரிக்காவை அடிப்படையா வைச்சு சொல்லி இருக்கிறார், இயக்குனர் மூர். இதை வெறும் ஒரு நாட்டினரின் மருத்துவ கவனிப்புப் பிரச்சினைன்னு பார்க்காம, மருத்துவம் – கல்வி போன்ற அடிப்படை மனித உரிமைகள் கூட வணிக மயமாக்கப்பட்டா அது எந்த அளவு பரிதாபமான நிலைக்குச் சமூகத்தை இட்டுச் செல்லுங்கிறதுக்கான ஒரு விழிப்புணர்வுப் படமா பார்க்குறது நல்லது.

திரைப்படத்தில் மனதைத் தொட்ட காட்சிகள்:

1. கனடா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள்ல உள்ள அரசு மருத்துவ வசதிகளைக் காட்டும் காட்சிகள். பிரிட்டனில் மருத்துவமனைக்கு வந்து போகும் செலவையும் அரசே தருகிறது. பிரான்சில், தொலைபேசியில் அழைத்தால் 24 மணி நேரமும் மருத்துவர் வீட்டுக்கே வந்து இலவசமாக மருத்துவம் பார்க்கிறார். பிரான்சில், பிள்ளை பெற்ற தாய்க்கு அரசே துணிகளைத் துவைத்துத் தருகிறது !!

நெதர்லாந்து வந்த புதிதில் உடல்நலக் குறைவுக்காக விடுப்பு போட்டப்ப அதுக்காக சம்பளத்தைக் குறைக்கவோ, ஆண்டுக்கு அனுமதிக்கப்படும் விடுப்பு நாட்களைக் குறைக்கவோ இல்ல. குறைந்தது இத்தனை நாட்களுக்குள்ள பணிக்குத் திரும்பனும்னும் சொல்லல. மாறா, என் மருத்துவரே இவருக்கு இத்தனை நாள் விடுப்பு கொடுங்கன்னு எங்க பேராசிரியருக்கு எழுதிக் கொடுத்தார். ஏன்னு கேட்டா, உடம்பு சரியில்லாட்டி வேலை செய்யாம ஊதியம் பெற இயல்வது மனித உரிமைன்னு சொன்னாங்க !!! ரொம்ப நல்லவங்களா இருக்கீங்களேய்யான்னு வடிவேலு மாதிரி உணர்ச்சி வசப்பட வேண்டியதாச்சு. இது மாதிரி நம்ம நாட்டோட அரசு மருத்துவ வசதிகள் முன்னேறுமா? எப்ப முன்னேறும்? அதற்கான வழிமுறைகள் என்னங்கிற கேள்விகள் தான் படம் பார்க்கும் நேரம் முழுக்க மனசில நிழலாடிக்கிட்டு இருந்தது.

2. காப்பீட்டு நிறுவனத்துக்கு இலாபம் ஈட்டுவதற்காகப் பல நோயாளிகளுக்கு மருத்துவம் தர மறுத்துப் பின்னர் மனம் திருந்திய மருத்துவர் மன்னிப்பு கேட்கும் காட்சி.

3. வளரும் நாடான க்யூபா, தனது எதிரி நாடான அமெரிக்க நாட்டு மக்களுக்கு மனித நேயத்துடன் கொடுக்கும் மருத்துவ கவனிப்பைக் கூட தங்கள் சொந்த நாட்டில் அமெரிக்கர்கள் பெற இயலாமல் இருக்கும் நிலை. மருத்துவத்துக்கு காசில்லாத அமெரிக்கர்கள் வீதியில் கடாசப்படும்போது அவர்கள் முகத்தில் காணப்படும் அவமானம், இயலாமை ! க்யூபாவில் 5 centsக்கு கிடைக்கும் மருந்து அமெரிக்காவில் 120 டாலர் என்று ஒருவர் உணரும்போது வரும் கோபம், ஆற்றாமை.

4. நிறைய பணம் உள்ள வளர்ந்த நாடுகளும் வளரும் கியூபா போன்ற நாடுகளும் செய்ய இயன்றதை ஏன் அமெரிக்காவால் செய்ய முடி்யவில்லை என்ற கேள்வி ! அரசியலும் வணிகமும் கை கோர்த்து மக்களை முட்டாளாக்கி வைக்கும் உத்தியை பிரிட்டனின் முன்னாள் அரசியல்வாதி விளக்கும்போது, அட்பபாவிங்களான்னு தோணுச்சு !

5. We charge the patients according to their means and treat them according to their needs என்ற பிரெஞ்சு மருத்துவரின் பேட்டி.

இந்தப் படம் குறித்த பொதுவுடைமைப் பார்வைக்கு மயூரனின் பதிவைப் பாருங்க.

– வணிகம், அரசியல் தாண்டி ஒருவருக்கு ஒருவர் சுமைகளைப் பகிர்ந்து கொள்வதால், ஒருவருக்கு ஒருவர் பரிவுடன் இருப்பதால் எந்த விதத்திலும் சமூகம் பொருளாதார நிலையில் குறைந்து போய் விடாது என்பதை வலியுறுத்திப் படத்தை முடிக்கிறார் மூர். படத்தில் பிடித்திருந்த கருத்தும் இது தான்.

– அவனவன் முடிஞ்சா, காசு இருந்தா பொழைச்சுக்கட்டும்னு இல்லாம, இயன்றவர்கள் இயன்ற அளவு தந்தா எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும் தானே? ஒருவருக்கு ஒருவர் சார்ந்து, பகிர்ந்து வாழும் வாழ்க்கையைத் தான் எல்லா உயிரினங்களும் மேற்கொண்டிருக்கின்றன. மனுசன் மட்டும் தான் பகிர்வதற்குப் பதில் பதுக்குவதில் குறியாக இருக்கிறான்.

– காமராஜர் படத்தில், “கல்வி, தாய்ப்பால் மாதிரி, அதைப் போய் விற்க முடியுமா?” என்று காமராஜர் கேட்கிற மாதிரி வரும் ஒரு காட்சி.

– சில நாள் முன்னர் நண்பரின் ஆய்வகம் பக்கத்தில் ஓடித் திரியுற முயல்குட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு யாரோ தீயணைப்புத் துறைக்கு அழைக்க, அவங்க ஒரு வண்டியும், மூனு ambulance வண்டியும் எடுத்துக்கிட்டு வந்தாங்களாம்.

இப்படி, பல சிந்தனைகள் படம் பார்க்கும் போது மனதில் ஓடிக்கிட்டே இருந்துச்சு.

படம் நாளைக்குத் தான் திரையரங்குல வெளியாகுது. ஆனா, இப்படி இணையத்துல இருந்து பதிவிறக்கிப் படம் பார்க்கிறதை இந்தப் படத்தின் தயாரிப்பாளரே ஆதரிக்கிறார் !!! இப்படிப் பார்ப்பதைத் திருட்டாகத் தான் கருதலைன்னும் நாம விரும்பியதை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ள நல்ல வழின்னும் சொல்றார். படத்தில அறிவுரை சொல்றதோட இல்லாம, உண்மைலயும் அவர் அது படி நடக்கிறது நல்ல விசயம் தான்.

உலகத்தில் எல்லா திரைப்பட, பாடல் வெளியீட்டாளர்களும் இவரை மாதிரி இருந்துட்டா, சொர்க்கம் தான் !!! அப்புறம், இந்த பிட்டொரன்ட் மென்பொருளை வைச்சு http://www.tamiltorrents.net தளத்தில் திருட்டுத்தனமா டிவிடி தரத்தில் படங்களைப் பதிவிறக்கலாம் என்பதையும் மூர் சொல்லச் சொன்னார் 😉

உயிரின் விலை – இன்றைய சந்தை நிலவரம்

சாலையில் போகிற வண்டியில் புகை வந்தால், சாலையோர மரத்தில் புளியம்பழம் பறிப்பதை விட்டு விட்டு வண்டியை நிறுத்தி எட்டிப் பாருங்கள். வண்டியில் குண்டு இருந்து வெடித்து நீங்கள் செத்தால் 1 இலட்சம் கிடைக்கும்.

ஆளில்லா ரயில் சந்திப்பில் உங்கள் வாகனம் ரயிலோடு மோதி செத்தால், நீங்கள் அரசு ஊழியராயிருக்கும் பட்சத்தில், 2 இலட்சம் கிடைக்கும். இல்லாவிட்டால், 1 இலட்சம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

CNN, BBC, நம்ம ஊர் தொலைக்காட்சிகள் எல்லாம் மாய்ந்து மாய்ந்து காட்டுவதற்குத் தகுந்தவாறு யாராவது கொலைகாரனை ஏற்பாடு செய்து அவன் கையால் சாகுங்கள். உங்கள் இறுதிச் சடங்குக்கு வர உறவினர்களுக்கு அரசு காசு கொடுக்கும். இது பல இலட்சம் பெறும்.

ஆழ்குழாய் கிணற்றில் மாட்டி உங்கள் பிள்ளை சாவதை விட பிழைத்துக் கொள்வது நல்லது. எப்படியாவது காப்பாற்றி விடுங்கள். பிழைத்துக் கொண்ட குழந்தை அதிசயக் குழந்தையாகக் கருதப்பட்டு கூடுதல் உதவித் தொகை கிடைக்கும்.

அண்மையில் அரசியல் கட்சித் தொண்டர்கள் தீக்குளித்ததாகத் தெரியவில்லை. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் 1 லட்சமாவது கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். அப்போது எனக்கு அவ்வளவு விவரம் தெரியாது.

நன்றாக விற்பனையாகும் நாளிதழ் ஊழியராக இருந்து அலுவலகத்துக்குள் வைத்துக் கொழுத்தப்பட்டால் 15 இலட்சம் கிடைக்கும்.

சுனாமி, நிலநடுக்கம் வந்து செத்தால் அரசு போக நடிகர்களும் காசு தருவதாக சொல்லுவார்கள். சொன்ன மாதிரி தந்தும் விட்டால், கிடைத்த வரை இலாபம்.

உயிருக்கான இழப்பீட்டுத் தொகை தவிர, ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்குப் பூ வைத்து அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என்று விரும்பினால் அமெரிக்காவிலோ இலண்டனிலோ பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சாகுங்கள்.

பொதுவாக, உங்கள் உயிருக்கு அதிக விலை கிடைக்க வேண்டுமானால் கொஞ்சமாவது பரபரப்பாக, ஊடகங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வகையில் சாக வேண்டும். ரொம்ப கும்பல் சேர்க்காமல் கொஞ்சம் பேர் மட்டும் செத்தால் கூடுதல் தொகை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஒன்றுமே குடும்பத்துக்கு செய்யாமல் குற்ற உணர்வுடன் இறப்பவர்கள், தற்கொலை செய்து கொள்பவர்கள் இது போன்ற தருணங்களுக்குக் காத்திருந்து சாவது நலம்.

இதை எல்லாம் விட்டு விட்டு முட்டாள்த்தனமாக பாக்தாத்தின் அன்றாடக் குண்டு வெடிப்புகளால், உலக நாட்டுப் போர்த் தாக்குதல்களால், தீரா நோய்களால், ஊட்டக்குறைவால், பஞ்சம் பிழைக்கப் போன நாட்டில் முதலாளியால் அடித்தே கொல்லப்பட்டால், இன்று இங்கு 135 பேர் பலி என்று வானிலை அறிக்கை போல் தான் ஊடகங்கள் சொல்லும். பைசா தேறாது.

ஆண்டு முடிவில் ஒரு நாளைக்கு எத்தனை பேர் இப்படி இறந்தார்கள் என்று புள்ளிவிவரங்கள் வெளியாகும்.

வேறொன்றுக்கும் உதவாது.

தமிழ்நாட்டில் குழந்தைகளின் பெயர்கள்

நல்ல, தூய தமிழ்க் குழந்தைப் பெயர்கள் தரும் இணையத்தளங்கள்:

1. http://peyar.in

குறிப்பு: தூய தமிழ்ப் பெயர்களைத் தரும் இணையத்தளங்களை அறியத்தருவதும், தமிழ்நாட்டில் தமிழ்ப் பெயர்கள் குறைந்து வருவது குறித்த விழிப்புணர்வையும் பரப்புவதே இக்கட்டுரையின் நோக்கம். தயவு செய்து, உங்கள் குழந்தைக்குப் பெயரிடுவது குறித்த ஆலோசனைகளைக் கேட்க வேண்டாம். நாள், நட்சத்திரம் பார்க்காமல் மனதுக்கினிய பெயரை வைப்பதே சிறந்தது என்பதே என் நிலைப்பாடு. நன்றி.

**
தமிழர் பெயர்களில் பிற மொழித் தாக்கம்:

முந்தா நேத்து காலையில தூங்கிட்டிருந்தப்ப அண்ணன் அழைச்சார். அண்ணனுக்கு முதல் குழந்தை பிறந்திருக்கு.

“தம்பி, பையனுக்கு பேர் வைக்கணும். ர-வுல ஆரம்பிக்கிற நல்ல பேரா சொல்லுப்பா”

காலாங்காத்தால அண்ணன் எழுப்பி விட்ட கடுப்பு எனக்கு.

“ரவிசங்கர்-னு வையுங்க” 🙂

“தம்பி, புதுசா உள்ள பேரு சொல்லுப்பா. ராம், ராஜா-னு பழைய பேர் எல்லாம் வேண்டாம்”

“சரிண்ணே, இணையத்தில பார்த்து சொல்றேன்”

வலையில தேடினப்புறம் தான் தெரியுது. இந்த எழுத்தில் புதுப் பெயர்கள் ரொம்பக் குறைவு. இருந்தாலும் ரோஷன், ரோஹித்-னு எல்லாம் வட நாட்டுப் பெயரா இருக்கு. அதையும் மீறி புதுசா வைக்கணும்னா rembrandt-னு டச்சு ஓவியர் பேரை தான் வைக்கணும். கண்டிப்பா, இந்தியால இது புதுப் பேர் தான் 🙂

முன்ன எல்லாம் சாமிப் பெயர், குலசாமிப் பெயர், முன்னோர் பெயர், புகழ் பெற்றவர் பெயர், அரசியல்வாதி பெயர், தலைவர் பெயர்னு வைப்பாங்க. செட்டியார் வீட்டுப் பிள்ளைகள் பலர் இப்படி அழகம்மை, வள்ளியம்மை-னு இப்பவும் பேர் வைச்சிருக்கிறத பார்த்திருக்கேன். இப்ப நிறைய பேர் தொலைக்காட்சித் தொடர்கள்ல வர்ற பாத்திரங்கள் பேர் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஹர்ஷினி, வர்ஷினி, தர்ஷினி-னு எல்லாம் நாடக நடிகர் பேர். ஸ, ஷ, ஜ, ஹ கலந்து பேர் வைச்சா இன்னும் ரொம்ப மகிழ்ச்சி மக்களுக்கு.

தொலைக்காட்சித் தொடர்களும் எண் ராசி, சோதிட நம்பிக்கைகளும் பெருமளவில் ஊர்ப்புறங்களை கெடுத்து வைச்சிருக்கு. எங்க சித்திப் பையன் பேர் ஹர்ஷத். ஏன் ஹர்ஷத் மேத்தான்னே வைச்சிருக்கலாமேன்னு கேட்டேன் 😉 200 மக்களும் 50, 60 மாடுகளும் இருக்க ஒரு பட்டிக்கு எதுக்கு இந்தப் பெயர்?

புதுசா பேர் வைக்க வேண்டாம்னு இல்ல. ஆனா,முதல்ல வீட்ல உள்ளவங்க அதக் கூப்பிட முடியுற மாதிரி வைக்க வேண்டாமா? ஏற்கனவே சத்யாங்கிற எங்க உறவினர் பொண்ணுக்கு வீட்டுப் பெயர் வேலாயி. காயத்ரிங்கிற பொண்ணுக்கு வீட்டுப் பெயர் காயம்மா.  இந்த வீட்டுப் பெயர்கள் எல்லாம் அப்பத்தாக்கள், அமத்தாக்கள் வசதிக்காக வைச்சது. வாயுல நுழையுற மாதிரி ஒரு பேர முதல்லயே வைச்சிருக்கலாம்ல. எங்க அக்கா பையன் பேரு ஹரீஷ்.  இருந்தாலும் அப்பத்தா அரீசு-னு தான் கூப்பிட முடியும். கிரந்த எழுத்து குறித்த எந்தக் கொள்கையும் அவங்களுக்கு கிடையாது 🙂 ஆனா, அவங்க வாயுல இப்படி தான் வருதுன்னா எது இயல்பான ஒலியமைதி கெடாத தமிழ், எது திணிக்கப்பட்ட ஒலின்னு எளிமையா புரிஞ்சுக்கிடலாம்.

பிள்ளை பிறந்த பிறகு எழுத்துப் பார்த்து பெயர் வைக்கிறத விட பிள்ளை பிறக்கிறதுக்கு முன்னாடியே அம்மாவும் அப்பாவும் இந்தப் பேர் தான்னு யோச்சிச்சு வைச்சு பேர் வைச்ச பிள்ளைங்களையும் பார்த்து இருக்கேன். அந்த குழந்தைகள்ட்ட ஒரு மகிழ்ச்சியையும் பார்த்திருக்கேன். எனக்கு எங்க அப்பா முன்னமே யோசிச்சாரான்னு தெரில. ஆனா, இந்தப் பெயர் தான் வைக்கணும்னு வைச்சாராம். மகிழ்ச்சி. அது என்ன அரும்பாடு பட்டு சுமந்து பெத்துட்டு பேரு வைக்க சோதிடனையும் அகராதியையும் பக்கத்து வீட்டுக் காரனையும் ஆலோசனை கேட்கிறது?

எங்க அம்மா ஒரு பழமொழி சொல்லுவாங்க..”ஒன்னு மண்ணும் இல்லையாம்..புள்ளைக்குட்டி அஞ்சாறாம்”-னு 🙂 அதனால் என்னோட இந்த தொலைநோக்குக் கவலைய நிறுத்திக்கிறேன். எனக்கு கல்யாணம் ஆகி, புள்ளைக் குட்டி பிறக்கும் போது பார்த்துக்கிறேன் 😉

தொடர்புடைய இடுகை: தமிழர் பெயர்கள்

தாய்மொழியை மறப்பது எப்படி?

தாய்மொழியை மறக்கடித்து தேசிய மொழியைப் படிப்பது எப்படி ?

தமிழார்வம், மொழியார்வம் உள்ளோர் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.