தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு இரத்து சரியா?

எண்ணற்ற நுழைவுத் தேர்வுகள், அவற்றுக்காகத் தனிப்பட்ட முறையில் பயிற்சி எடுக்க வேண்டியிருப்பது அனைத்து மாணவர்களுக்கும் உளைச்சலைத் தருவதும், கிராமப்புற மாணவர்களுக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கும் இத்தேர்வுக்குத் தயார் செய்வதற்கான வசதிகள் குறைவாக இருப்பதும் உண்மைதான். எனவே நுழைவுத் தேர்வுகளை மொத்தமாக இரத்து செய்வது எளிமையான, நேரடியான, அனைவராலும் மனமகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகத் தெரியலாம். ஆனால், நீண்ட கால நோக்கில் இது பள்ளிக் கல்வித் தரத்தையும், தலைசிறந்த தொழிற்கல்விக்ககூடங்களில் நுழையும் மாணவர்களின் தரத்தையும் பாதிக்கும் என்பது உறுதி.

தற்பொழுது உள்ள மாநிலப் பள்ளி பாடத்திட்டமும் பொதுத் தேர்வு முறையும் தேர்வுத்தாள்கள் திருத்தப்படும் முறையும் எந்த விதத்திலும் மாணவர்களின் புரிந்துணர் திறனை வளர்ப்பதாக இல்லை. ஆகையால் நகரம், கிராம வேறுபாடின்றி அனைத்து பள்ளிகளிலும் பாடங்களை உருப்போட ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவிக்கிறார்கள். கட்டாயப்படுத்துகிறார்கள் என்று கூட சொல்லலாம். நுழைவுத் தேர்வுகளை இரத்து செய்தால், தன்னார்வம் இல்லாத பெரும்பாலான மாணவர்கள் பாடங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல் மனனம் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தக்கூடும். சரியாகப் பாடம் சொல்லித் தரத் தெரியாத ஆசிரியர்களுக்கும் இது வசதியாகப் போய்விடும். கடைசியில் பள்ளிக் கல்வியின் தரம் குறைவதில் தான் போய் முடியும்.

கிராமப் புற மாணவர்களால் போட்டியிட முடியவில்லை என்று மேம்போக்காக இந்த நுழைவுத்தேர்வு விடயத்தை நோக்கக்கூடாது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திறன் வாய்ந்தவர்களாகவும் உண்மையாகக் கடமையாற்றுபவர்களாகவும் இருந்தால் அந்த மாணவர்களாலும் நுழைவுத் தேர்வுகளில் திறம்பட போட்டியிட முடியுமே! அப்படி திறன் வாய்ந்த ஆசிரியர்களை நியமிப்பதின் மூலமும் அவர்கள் OP அடிக்காமல் பணியாற்றுகிறார்களா என்று கண்காணிப்பதின் மூலமும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த முடியுமே! அதை விடுத்து தேர்வுகளையே இரத்து செய்வது மீன் பிடிக்கக் கற்றுத் தராமல், தினமும் இலவசமாக மீன் தருவது போல் இருக்கிறது. இந்த மாணவர்களை மேலும் மந்தமடையச்செய்வதில் தான் போய் முடியும்.

நுழைவுத் தேர்வு பயிற்சிக்கூடங்கள் பெரும் பணம் கறக்கின்றன என்பதும் அவற்றில் பிள்ளைகளை சேர்த்துப் படிக்க வைப்பது பெற்றோருக்குப் பணச்சுமையைத் தருவதும் உண்மை தான். ஆனால் இம்மாதிரியான பயிற்சிக்கூடங்கள் திறன் வாய்ந்த ஆசிரியர்களால் நடத்தப்படுவதும் அவர்கள் பள்ளியில் ஒழுங்காகப் பாடம் சொல்லித் தராமல் நுழைத்தேர்வுப் பயிற்சிகளில் சேர மாணவர்களைத் தூண்டுவதும் தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்துவதும் கவனிக்கத்தக்கது. இம்மாதிரி ஆசிரியர்களை வாங்கும் ஊதியத்திற்கு உண்மையாக உழைக்கச்செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது? நுழைவுத் தேர்வு இரத்து ஆனாலும் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தி ஆசிரியர்கள் பணம் பண்ணுவதை தடுக்க அரசு முனையாதது ஏன்?

நுழைவுத் தேர்வு இரத்து மூலம் இன்னொரு முக்கியப் பிரச்சினை – எல்லாரும் மனனம் செய்து மதிப்பெண் வாங்கி விடுவதால் யார் உண்மையிலேயே தொழிற்கல்விகளுக்கான புரிந்துணர் திறனும் aptitudeம் கொண்டுள்ளார்கள் என்பது நிர்ணயிக்க இயலாமல் போய்விடும். இதனால், தலைசிறந்த தொழிற்கல்விக்கூடங்களில் தரம் குறைந்த மாணவர்கள் நுழைய வாய்ப்புண்டு.

தவிர, நுழைவுத் தேர்வு இரத்துடன் இணைந்து improvement தேர்வு முறை இரத்தும் ஏற்றுக்கொள்ள இயலாதது. நன்றாகப் படிக்கும் மாணவர் ஒருவர் தேர்வுக் காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனால் அதற்காக அவரது careerஐயே தொலைத்து விட வேண்டியது தானா? அதே வேளையில் improvement மாணவர்களை ஒழுங்குபடுத்த வேண்டியதும் அவர்களுக்கான முன்னிரிமையை குறைப்பதும் அவசியம் தான். இல்லாவிட்டால் வழமையான முறையில் போட்டியிடும் மாணவர்கள் சற்று மனம் தளரக்கூடும். பெரும்பாலான மருத்துவக் கல்வி இடங்களை improvement மாணவர்களே அள்ளிக்கொண்டு போகும் போக்கை கருத்தில் கொண்டு improvement தேர்வு முறையை ஒழுங்குபடுத்துவது அவசியமே தவிர முழுமையாக இரத்து செய்ய அவசியமில்லை.

ஆக, நுழைவுத் தேர்வு முறையை இரத்து செய்யாமல் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நீண்ட கால நோக்குடன் செயல்பட வேண்டியது தான் அரசும் அனைத்துக்கட்சிகளும் வருங்காலத் தலைமுறைக்கு செய்யும் உண்மையான உதவியாக இருக்கும்.

ரவி


Comments

5 responses to “தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு இரத்து சரியா?”

  1. biotechnologist2020 Avatar
    biotechnologist2020

    HI
    NICE 2 SEE YR BLOG.
    WONDERFUL
    PLS,KEEP ME UPDATED WHNEVER U POST
    [email protected]
    thanks 4 yr comment on my blog.

  2. hi ravi, this is suresh frm andhra, am new to blog, i had seen ur blog 1st time, i dont know how to manage the blog with various features. plz suggest me. i think u suggest me. ur blog was very nice. how do u manage this?

  3. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    suresh » Thanks for the appreciation. You can try signing up at http://te.wordpress.com . It gives you a free blog account and it is the best blogging site. You can explore it and understand things easily. Once you get familiar with it, if you want, you can have a own domain like this and install the WordPress software at http://wordpress.org and enjoy ! Write to ravidreams_03 at yahoo dot com if you need more help.

  4. ரவி,

    நுழைவு தேர்வு இரத்து குறித்தான உங்கள் கருத்துக்கள் அனைத்தும் சரி

    சில இடங்களில் மாறு படுகிறேன்

    குலுக்கல் முறை என்பது முட்டாள் தனம் போல் தோன்றினாலும், அது நுழைவு தேர்வு இருக்கும் பொழுதே இருந்த விதிதான். இது வரை அது கடைபிடிக்கப்படவில்லை. இந்த விதி மதிப்பெண்ணை அறிவிக்கும் அனைத்து இடங்களிலும் கடைபிடிக்கப்படுவது தான்

    மற்றொரு விஷயம்

    நான் பள்ளியிறுதி தேர்வில் 100க்கு 10 மதிப்பெண் வாங்கினால் (தேர்வாக வில்லை என்பதால்) மறு தேர்வு எழுதலாம். அதில் 100க்கு 100 வாங்கலாம்

    ஆனால் தேர்வில் 100க்கு 90 மதிப்பெண் வாங்கினால் மறு தேர்வு எழுத முடியாது.

    என்ன கொடுமை சரவணன் இது (சந்திரமுகி பாணியில் வாசிக்கவும்)

  5. //குலுக்கல் முறை என்பது முட்டாள் தனம் போல் தோன்றினாலும், அது நுழைவு தேர்வு இருக்கும் பொழுதே இருந்த விதிதான். இது வரை அது கடைபிடிக்கப்படவில்லை. இந்த விதி மதிப்பெண்ணை அறிவிக்கும் அனைத்து இடங்களிலும் கடைபிடிக்கப்படுவது தான்//

    புருனோ!
    ஒற்றைச் சாளர முறையில் குலுக்கல் முறை இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் நுழைவுத்தேர்வு இருந்தபோது அது உபயோகப்பட்டிருக்குமா என்பது மிகவும் சந்தேகத்திற்குரியது. ஏனென்றால் நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணே ஒருவருக்குரிய தனித்துவத்துவத்தை (uniqueness w.r.t marks) உருவாக்கி விடும். உதாரணத்திற்கு எனது மதிப்பெண் – 69.72. கவனித்தீர்களா – .72!
    ஆனால் இப்போதைய வித்தியாசத்தின் ரேஞ்ச் – 0.25, 0.50, 0.75 – மூன்றுதான்.
    மட்டுமல்லாமல் இருவரது cut-off மதிப்பெண்கள் ஒன்றாகயிருந்தால் கணிதம், இயற்பியல்-வேதியியல் ஆகியவற்றின் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள், அதே பாடங்களில் அவர்கள் பெற்ற மேனிலைத்தேர்வு மதிப்பெண்கள்னு (ரகுவரன் போல் சொன்னால்) annexure A, B, C, Dனு பதினெட்டு இருக்கும். இதெல்லாமும் ஒன்றாக இருக்கும்பட்சத்தில் (ரொம்ப ரொம்ப கட்டாம் கடைசியாகத்தான்) நாணயத்தை சுண்டுவர்! (அப்படியிருந்தும் எனது cut-offஇலேயே 3 பேர் இருந்தோம்! அப்பவே அப்படி! அதில் நான் இரண்டாவது) ஆனால் இப்போது பாருங்கள் 200/200 பத்து பேர்! நுழைவுத்தேர்வே இல்லையெனும்போது (கவனிக்கவும். முந்தைய முறையில் இரு வகையான மதிப்பெண்கள் – மேனிலை, நுழைவுத்தேர்வு என்று. இப்போது ஒன்றுதான்) ரொம்ப கஷ்டம்!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்.