ஊக்கமுடைமை – திருக்குறள் உரை

ஊக்கமுடைமை – திருக்குறள் உரை

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்
உடையது உடையரோ மற்று. 591

ஒருத்தனுக்குப் பணம், திறமைன்னு எத்தனை தான் இருந்தாலும், ஊக்கம் இல்லைன்னா ஒன்னுமே இல்லாத மாதிரி தான்.

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். 592

மனசுல இருக்க ஊக்கம் தான் சொத்து. பணம், காசு, பொருளுன்னு சேர்க்கிற சொத்து எல்லாம் நிலைக்காமப் போயிடும்.

ஊக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். 593

ஊக்கம் இருக்கவங்க, ஒரு வேளை தங்கள் சொத்தை இழந்தாலும், “ஐயோ போச்சே”ன்னு கலங்க மாட்டாங்க. (ஏன்னா ஊக்கம் தான் சொத்துங்கிறதுனால, அதை வைச்சு வேண்டியதை அடையலாம் தானே?)

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை. 594

செல்வம், உயர்வு எல்லாம் ஊக்கம் உள்ளவன் எங்க இருக்கான்னு வழி தேடிக் கண்டுபிடிச்சு தானா வந்து சேரும்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. 595

குளத்தில் என்ன மட்டத்துக்குத் தண்ணி இருக்கோ அந்த அளவு தான் அதில பூத்திருக்கிற தாமரைச் செடியின் நீளமும் இருக்கும். அது மாதிரி, நாம எந்த அளவு உயர்வோம்ங்கிறது நம்ம மனசுல உள்ள ஊக்கம் அளவுக்குத் தான் இருக்கும்.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. 596

என்ன குறிக்கோள் வைச்சாலும் அது எல்லாம் உயர்வா, பெரிசா இருக்கணும். அதை அடைய முடியாமப் போனாலும், அதுக்காக அப்படி சிந்திக்கிறதை விட்டுடக்கூடாது.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு. 597

உடம்பு முழுக்க அம்பு தைச்சாலும் போர் யானை உறுதி குலையாம நிக்கும். அது மாதிரி, ஊக்கம் உள்ளவங்களுக்கு என்ன தான் சிரமம் வந்தாலும் ஊக்கம், உறுதி குலையாம தன் பெருமையை விட்டுக் கொடுக்காம இருப்பாங்க.

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு. 598

ஊக்கம் இல்லாதவனால என்னிக்குமே “இந்த உலகில் நான் ஒரு வல்லவன்” அப்படின்னு நினைச்சு மகிழ முடியாது.

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். 599

யானை பெரிசா இருக்கு; கூர்மையான கொம்புகளை வைச்சிருக்கு. ஆனா, அதுவே கூட ஊக்கம் கூடிய புலி தாக்க வந்தா அச்சப்படும்.

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு. 600

மனசுல உறுதி இல்லாதவங்க எல்லாம் மரம் மாதிரி தான். சும்மா பார்க்கத் தான் மனுசங்க மாதிரி இருக்காங்க.

**

பார்க்கவும் – திருக்குறள் உரை பட்டியல்.

வினைத்திட்பம் – திருக்குறள் உரை

வினைத்திட்பம் – திருக்குறள் உரை

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. 661

நம்ம மனசு எவ்வளவு உறுதியா இருக்கோ, அவ்வளவு தான் நாம செய்யுற செயலும் உறுதியா இருக்கும். மன உறுதி தவிர்த்த மிச்ச எல்லாம் சும்மா.

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 662

சிக்கல் வர்றதுக்கு முன்னாடியே அதைத் தவிர்க்கணும்; அதையும் மீறி சிக்கல் வந்தா மனசு தளராம இருக்கணும். செய்யுற செயல உறுதியா செய்யத் தெரிஞ்சவங்க எல்லாம் இந்த இரண்டு வழியைத் தான் பின்பற்றுறாங்க.

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும். 663

ஒரு செயலைச் செஞ்சு முடிச்சிட்டு அதைப் பத்தி வெளிப்படுத்துறவன் தான் செயலாண்மை உள்ளவன். இடையிலேயே வெளிப்படுத்துனா அதுனால பல சிக்கல்கள் வரலாம்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். 664

யார் வேணா எதை வேணா சுளுவா சொல்லிடலாம். ஆனா, சொன்ன மாதிரி செஞ்சு காட்டுறது தான் சிரமம்.

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும். 665

செயல்ல உறுதியா இருக்கவங்களை அரசனும் மதிப்பான்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். 666

நினைச்சதை செஞ்சு முடிக்கணுங்கிற உறுதி மட்டும் இருந்திட்டா, நாம நினைக்கிறத எல்லாம் நினைச்சபடியே செஞ்சு முடிக்கலாம்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. 667

அச்சாணி சிறிசு தான். ஆனா, அது இல்லாம அவ்வளவு பெரிய தேர் கூட ஓடாது. அதனால், யாரும் உருவத்தால சின்னவங்கன்னு நினைச்சு கேலி பண்ணக்கூடாது.

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல். 668

ஒரு செயலைச் செய்றதுக்கு முன்னாடி குழப்பமில்லாம தெளிவா சிந்திச்சு முடிவெடுக்கணும். அப்படி முடிவெடுத்த பிறகு சோர்வு இல்லாம ஒத்திப் போடாம செஞ்சு முடிக்கணும்.

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. 669

கடைசியில நன்மை, இன்பம் தர்ற செயலை, இடையில எவ்வளவு சிரமம் வந்தாலும் துணிவோட விடாம செஞ்சு முடிக்கணும்.

எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு. 670

வேற என்ன தான் திறமை, பலம், உறுதி இருந்தாலும் ஒருத்தன் கிட்ட ஒரு செயலைச் செஞ்சு முடிக்கிற உறுதி மட்டும் இல்லாட்டி அவனை இந்த உலகம் மதிக்காது.

**

பார்க்கவும் – திருக்குறள் உரை பட்டியல்.

நீத்தார் பெருமை – திருக்குறள் உரை

1.1.3. நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. 21

இந்த உலகத்தில் பெரியவங்க எழுதுன எல்லா நூல்லயும், ஆசையை விட்ட, ஒழுக்கத்தில சிறந்த துறவிகளைப் பத்தி தான் உயர்வா எழுதி இருக்கும்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22

ஆசை, விருப்பு, பிடிப்புகளை விட்டவங்க பெருமைய அளக்கிறது, உலகத்தில இது வரைக்கும் இறந்து போனவங்கள எண்ணுற மாதிரி இயலாத, முடியவே முடியாத செயல்.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. 23

நல்லது எது, கெட்டது எதுன்னு ஆராய்ந்து நல்லதை மட்டும் பின்பற்றுறவங்க தான் பெருமை அடைவாங்க.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 24

மன உறுதி, அறிவு கொண்டு தன்னோட ஐந்து புலன்களையும் அடக்குறவனே, துறவறம், அதனால் கிடைக்கும் பேரின்பத்துக்குத் தகுதியானவனா தன்னை மாத்திக்கிறான்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. 25

இந்திரனே கூட தன் புலன்களைக் கட்டுப்பட்டுத்த இயலாம போனது நமக்குத் தெரியும். அப்படின்னா, தன் புலன்களைக் கட்டுப்படுத்தி புகழ் அடைஞ்சவங்க எல்லாம் எவ்வளவு ஆற்றல் மிக்கவங்களா இருந்திருக்கணும் !

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். 26

பெருமை தரக்கூடிய, செய்வதற்குச் சிரமமான செயல்களைச் செய்யுறவங்க பெரியவங்க. அப்படி ஒன்னும் செய்ய இயலாம இருக்கவங்க சிறியவங்க.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. 27

(சுவை, ஒளி, ஓசை, தொடுதல், மணம் இப்படி) ஐந்து புலன்களோட இயல்பு அறிஞ்சு அதைக் கட்டுப்படுத்தி வாழ்றவனுக்கு இந்த உலகமே கட்டுப்பட்டு இருக்கும்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். 28

நல்லா வாழ்ந்தவங்களோட பெருமையை, உலகத்தில் என்னைக்கும் அழியாம இருக்கிற அவங்களோட நூல்கள் மூலமா அறிஞ்சிக்கலாம்.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. 29

மலை மாதிரி குணத்தில் உயர்ந்து இருக்கவங்க மனசில, கோபம் ஒரு நொடி அளவு தோன்றி மறைஞ்சா கூட, அத நம்மளால தாங்கிக்க முடியாது.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். 30

எல்லா உயிர்கள் கிட்டயும் அன்பா இருக்கவங்களைத் தான் அந்தணர் அப்படின்னு அழைக்கிறோம்.

**

பார்க்கவும் – திருக்குறள் உரை பட்டியல்

வான்சிறப்பு – திருக்குறள் உரை

1.1.2 வான்சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. 11

உலகம் என்னிக்கும் உயிரோட இருக்க மழை தான் காரணம். அதனால, மழைய அமுதம்னே சொல்லலாம்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 12

நல்ல சுவையான உணவைத் தர்ற பயிர்களை விளைவிக்க மழை உதவும். தாகத்தை தணிக்க தண்ணியாகவும் உதவுறதால, மழையே உணவாகவும் கூட இருக்கும்.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. 13

ரொம்ப நாள் மழை வராம ஏமாத்திடுச்சுன்னா, அப்புறம் உலகமே பசியால வாட வேண்டியது தான்.

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால். 14

மழை இல்லாமப் போச்சுன்னா, அப்புறம் விவசாயம் செய்ய முடியாது.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. 15

சில சமயம் பெய்யாம இருக்கிறதால மக்களுக்கு கேடு் செய்யுறதும் மழை தான். அதே வேளை, நல்லா பெய்யும் போது மக்களுக்கு நன்மை செய்யுறதும் அதே மழை தான்.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. 16

மழை பெய்யாட்டி ஒரு பசுமையான புல்லைக் கூடப் பார்க்க முடியாது.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். 17

மழை பெய்யாட்டி கடலே கூட வத்திப் போயிடும்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. 18

வானத்தில் இருந்து வர்ற மழையே பெய்யாட்டி, அப்புறம் அந்த வானத்துல இருக்கிறதா சொல்லபடுற சாமிகளுக்குப் நாளும் கோயில்ல பூசையும் நடக்காது. ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவும் நடக்காது.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். 19

மழை பெய்யாட்டி, இந்த உலகத்தில தானம், தவம் போன்ற நல்ல விசயம் எல்லாம் தொடராது.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. 20

நீரில்லாம உலகம் செயல்பட முடியாது. அது போல, மழை இல்லாம யாரும் தன் கடமையை ஒழுங்கா செய்ய முடியாது. மனிதர்களிடம் ஒழுக்கமும் நிலைக்காது.

**

பார்க்கவும் – திருக்குறள் உரை பட்டியல்

கடவுள் வாழ்த்து – திருக்குறள் உரை

1.1 பாயிரவியல்
1.1.1 கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1

அ தான் முதல் எழுத்து. அதுக்கு அப்புறம் தான் எல்லா எழுத்தும். அது மாதிரி முதல் கடவுள் ஒருத்தர் இருக்காரு. அவருக்கு அப்புறம் தான் உலகத்துல எல்லாமுமே.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 2

அறிவு பெறுவதற்காகத் தான் படிக்கிறோம். ஆனா, அறிவே உருவமானவர் கடவுள். அப்படிப்பட்டவரோட காலைத் தொட்டு வணங்காம இருந்தா, அப்புறம் நாமெல்லாம் படிச்சு என்ன பயன்?

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 3

கடவுளை வணங்குறவங்க இந்த உலகத்துல நீண்ட நாட்கள் நல்லா வாழ்வாங்க.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 4

விருப்பு வெறுப்பு இல்லாதவர் கடவுள். அவரை வணங்குறவங்களுக்கு என்னிக்கும் துன்பம் வராது.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

கடவுளோட புகழ் பாடி மகிழ்கிறவங்க, அவங்களோட செயல்களின் விளைவா வர்ற நன்மை தீமை இரண்டையுமே ஒரே மனநிலையோட எதிர்கொள்வாங்க.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். 6

கண், காது, மூக்கு, வாய், தொடுறதுன்னு ஐந்து புலன்களில் இருந்தும் விடுபட்டவர் கடவுள். அதனால அவர் தவறு இழைக்கிறதில்ல. இப்படிப்பட்ட அவரைப் பின்பற்றுறவங்களும் நீண்ட நாள் வாழ்வாங்க.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. 7

தனக்கு ஈடு இணையே இல்லாதவர் கடவுள். அவர் கிட்ட சரணைடைஞ்சா ஒழிய நம்ம மனக்கவலையை ஒழிக்கிறது ரொம்ப சிரமம்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. 8

அறக் கடல் போன்றவர் கடவுள். அவரோட காலைச் சேர்ந்தவங்க மட்டுமே பிறவிக் கடலை நீந்த முடியும்.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 9

கடவுளோட காலைத் தலை வணங்கி கும்பிடாதவங்களுக்கு, சிந்தனை, உணர்வு, உயிர் இருந்தும் இல்லாத மாதிரி தான் கணக்கு.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். 10

பிறவிங்கிறது பெரிய கடல் மாதிரி. அத நீந்தித் கடக்கணும்னா, இறைவனோட காலைப் பிடிச்சுக்கிட்டா மட்டும் தான் முடியும்.

**

பார்க்கவும் – திருக்குறள் உரை பட்டியல்