தமிழ்நாட்டில் ஆங்கிலம் தெரியாதவர்கள்

ஆங்கிலம் தெரிந்தாலும் தமிழை விரும்பிப் பேசும், ஆங்கிலம் தெரியாமலேயே வாழ்க்கையில் வெற்றி பெற்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவரையாவது நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தால் உரையாடல் நன்றாக இருந்திருக்கும். ஆங்கிலம் தெரிந்து கொள்வது தான் வெற்றிக்கு வழி என்பது போல ஒருவர் தட்டுத்தடுமாறி அழுது கொண்டே ஆங்கிலம் பேசுகிறார். அவரை எல்லாரும் கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். நிகழ்ச்சி முடிந்தது. ம்.

ஊடகத் தமிழ்

“தமிழ் வெகுமக்கள் ஊடக நிறுவனங்கள் பெருமளவு தமிங்கிலத்தில் எழுதுகின்றன. தமிழ் இலக்கண முறைகளை மதிப்பதில்லை. ஆனால், இந்நிறுவனங்களின் தொலைக்காட்சிகள், இதழ்கள், திரைப்படங்கள் நன்றாக “விற்று” வெற்றி பெறுகின்றன. எனவே, இது இவ்வூடகங்கள் முன்னிறுத்தும் “தற்காலத் தமிழுக்கு” மக்கள் தரும் ஆதரவு ஆகும். NewYork Times, Washington Post போன்றவற்றின் எழுத்து நடையை யாரும் விமர்சிப்பது இல்லை. மக்கள் ஊடகங்களான வலைப்பதிவுகள் கூட, வெகுமக்கள் ஊடக நடையிலேயே உள்ளன. எனவே, தமிழ் ஊடகங்களின் எழுத்து நடையை விமர்சிப்பது தவறு. இத்தனைப் பேரைக் காட்டிலும் விமர்சிக்கும் மக்கள் அறிவாளிகளா?” என்று சிலர் கேட்கிறார்கள்.

ஊடகத் தமிழ் மட்டும் தான் தமிழா?

ஊடகத் தமிழ் பெரும்பாலும் சென்னை மாநகர, மேட்டுக்குடி, உயர் சாதி சார்புடையதாக உள்ளது. பல நாட்டுத் தமிழுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், தமிழகம் – ஈழத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஊர்ப்புற வழக்குகள் வெகுமக்கள் ஊடகங்களில் பதிவாவதில்லை. மக்கள் பேச்சு வழக்கில், நாட்டுப்புறத் தமிழ் வழக்குகளில் எத்தனையோ நல்ல தமிழ்ச் சொற்கள் உள்ளன. ஆனால், வெகுமக்கள் ஊடகங்களோ ஏற்கனவே புழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்களைக் கூட விட்டு விட்டு வலிந்து ஆங்கிலச் சொற்களைத் திணிக்கின்றன. பார்க்க: ஆனந்த விகடனும் தமிங்கிலமும். எனவே, வெகுமக்கள் ஊடகத் தமிழ் மட்டுமே தமிழ் ஆகாது.

ஒரே மாதிரியான வெகுமக்கள் ஊடக நடை என்று ஒன்றில்லை

வெகுமக்கள் ஊடக நிறுவனங்களுக்கு இடையேயே கூட தமிழ் நடை வேறுபாடு உண்டு. நாளிதழ்கள், வார இதழ்கள், இலக்கியச் சிற்றிதழ்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள் ஆகியவை தனித்தனி தமிழ் நடை உடையன. ஒரே வகை இதழ்களுக்குள்ளேயே நாட்டுக்கு நாடு, நிறுவனத்துக்கு நிறுவனம் எழுத்து நடை மாறும். இந்தியா டுடேவுக்கும் விகடனுக்கும் சூரியன் பண்பலை வானொலிக்கும் சிங்கப்பூர் ஒலி பண்பலை வானொலிக்கும் வேறுபாடு உண்டு. எனவே, ஒரே மாதிரியான வெகுமக்கள் ஊடக நடை என்று ஒன்றில்லை. இலக்கு வாசகர்களைப் பொருத்தும் தனி நிறுவனங்களின் மொழிக் கொள்கை, சமூக அரசியலைப் பொருத்தும் எழுத்து நடை மாறுகிறது.

தமிழ் நலம் காப்பது விற்காதா?

மக்கள் தொலைக்காட்சி மேலும் பரவாததற்கு அதன் தமிழ் சார்பா காரணம்? பார்க்கும் கொஞ்சம் ஆட்களும் அதன் தமிழ்ச் சுவையை விரும்பியே பார்க்கிறார்கள். திரைப்படங்களுக்கு உரிய இடம் தராதது, சந்தைப்படுத்துதல் தடைகள், அரசியல் சார்பு என்று பல முக்கிய காரணங்கள் இருக்கலாம். விசய் தொலைக்காட்சி சென்னையைத் தாண்டி பரவாததற்கு அதன் அளவு கூடிய தமிங்கில நடையும் ஒரு காரணம்.

வாழ்த்துகள் என்ற தமிழ்த் திரைப்படம் தோற்றதற்கு அதன் தமிழ் உரையாடல் காரணம் இல்லை. அப்படத்தைத் தமிங்கிலத்தில் எடுத்திருந்தாலும் தோற்றிருக்கும். வலுவற்ற கதை. சொதப்பலான திரைக்கதை. மேட்டுக்குடி நகரத்து ஆங்கிலம் பேசும் இளைஞர்களை குறி வைத்து எடுக்கும் உன்னாலே உன்னாலே போன்ற படங்கள் ஊர்ப்புறங்களில் ஓடாது. ஆனால், ஊர்ப்புறக் கதைகள், சொல்லாடல்களை வைத்து வரும் அழகி, பருத்திவீரன் போன்ற படங்கள் நகரத்திலும் ஓடும்.

உள்ளடக்கமும் சந்தைப்படுத்துதலும் சரியாக இருந்தால் தமிழ் சார்பு ஒரு தடையில்லை. எல்லா நாட்டுத் தமிழர்களுக்கும் எல்லா வகுப்புத் தமிழர்களுக்கும் புரியும்படி எழுத, இயன்ற அளவு நல்ல தமிழில் எழுதுவது மட்டுமே ஒரே வழி.

விற்பது எல்லாம் சரியானதா?

ஒரு இதழ் விற்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதை விட தரமான வேறு இதழ் இல்லாததும் ஒரு காரணம். தங்களுக்குத் தேவையான தரத்தில் பொருள் கிடைக்காத போது கிடைக்கிற பொருளைத் தேவைக்குப் பயன்படுத்துவது சந்தை வழமை. அதனால், ஒரு பொருள் விற்பதனாலேயே அதன் அனைத்து கூறுகளும் சரியானவை, மக்கள் ஏற்புடையவை என்று பொருள் ஆகாது.

நடுப்பக்கத்தில் நமிதா படம் போட்டு, நான்கு சோப்புப் பெட்டிகள் தந்து இதழை விற்றுவிட்டு, அதை வைத்து “தங்கள் தமிழ் நடையும் சரி” என்பது முறையா?

எது சமூக ஏற்பு?

சமூகத்தில் ஒரு பரவலான வழக்கம் இருப்பது, அது தான் சிறந்தது என்பதற்கான சான்று இல்லை. தீமை என்று தெரிந்தும் மாற்றிக் கொள்ள முடியாமலும், தவறு என்றே தெரியாமலும் எத்தனையோ சமூக வழக்கங்கள் உள்ளன. மருத்துவர்கள் உட்பட பெரும்பான்மையோர்  மது அருந்துகிறார்கள். அரசே மது விற்கிறது. ஆனால், அதற்காக எந்த மருத்துவரும் மது அருந்துவதைப் பரிந்துரைக்க இயலாது.

ஊடகங்களின் வணிக நோக்கம், சில பிரிவினரின் திட்டமிட்ட தமிழின – மொழி அழிப்பு வேலை, அரசின் மெத்தனம், மக்களின் பழக்க அடிமைத்தனம், உலகமயமாக்கம், தாய்மொழி விழிப்புணர்வின்மையால் தமிங்கிலம் என்னும் நோயும் இதைப் போன்றே சமூகத்தில் பரவும் போது தமிழார்வலர்கள் இவற்றுக்கு எதிராக இயங்கலாமா கூடாதா?

Mummy

பக்கத்து வீட்டு அக்கா பையன் Mummyனு கூப்பிடுறத பார்த்து எரிச்சலா இருந்திச்சு.

“அக்கா, தமிழ் அது இதும்பீங்க. பேர் எல்லாம் கூட இனியன்னு தமிழ்ல வைச்சீங்க. இப்ப ஏன் Mummyன்னு கூப்பிடப் பழக்கினீங்க?”

“இல்லப்பா, சுதீசு சொல்றதைப் பார்த்து இவனும் பழகிட்டான்.”

சுதீசு முதல் பையன். தத்துப் பிள்ளை. அக்காவின் நாத்தனாரும் அவர் கணவரும் தற்கொலை செஞ்சுக்கிட்டதால, இவங்க எடுத்து வளர்க்கிறாங்க.

“சரி, சுதீசும் அம்மான்னு கூப்பிடுறது?”

“அம்மான்னு சொன்னா அவங்க அம்மா நினைவு வந்து அழ ஆரம்பிச்சுடுறான். Mummyனு சொன்னா அவனுக்குப் பரவால போல இருக்கு.ரெண்டும் பேரும் வேற வேற மாதிரி அழைக்க முடியுமா? என்னை Mummyன்னாலும் அவங்களை அப்பான்னு தான் அழைக்கிறாங்க”

“மன்னிச்சுக்கங்க அக்கா. தெரியாம கேட்டுட்டேன். அவங்க Mummyன்னே அழைக்கட்டும்”

புதிய எழுத்துக்களைப் பெற்றுக் கொள்வதால் தமிழ் வளருமா?

புது எழுத்துக்களைப் பெற்று பரவலான உலக மொழிகள் எத்தனை? அவை யாவை? அவற்றில் எத்தனை மொழிகள் தமிழுக்கு நிகரான தொன்மையும் செம்மொழித் தகுதியும் வாய்ந்தவை? புது எழுத்துக்களைப் பெற்றதால் மட்டுமே அவை பரவின் என்பதற்கு என்ன சான்று?

திண்ணையில், சோதிர்லதா கிரிசா எழுதிய தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும் கட்டுரை படியுங்கள்.

அக்கட்டுரையின் முக்கிய கருத்து:

* கங்கை என்பதை kangkai, gangai, gankai என்று பலவாறு பலுக்கிக் குழம்பலாம் என்பதால் g, d, dh, b போன்ற இத்தகைய குழப்பம் தரும் ஒலிகளுக்கு புதிய எழுத்துக்கள் அல்லது குறியீடுகளைச் சேர்க்கலாம். இப்படி பல புதிய எழுத்துக்களைப் பெறுவது பிற மொழியினரின் குழப்பத்தை நீக்கி தமிழைத் திக்கெட்டும் பரப்ப உதவும்.

சோதிர்லதாவுக்கு என் கேள்விகள்:

1. read என்று ஒரே மாதிரி எழுதி விட்டு நிகழ்காலத்தில் ரீட் என்கிறார்கள். இறந்த காலத்தில் ரெட் என்கிறார்கள். போதாதற்கு red நிறம் வேறு இருக்கிறது. character – கேரட்கடர் என்கிறார்கள். chalk – சாக் என்கிறார்கள். சொல்லின் முதலில் ch வந்தால் சா என்பதா கா என்பதா என்று குழப்புகிறது. இது போல் ஆங்கிலத்தில் பல குழப்பங்கள். இவற்றைத் தெளிவிக்க எந்த இலக்கண விதிகளும் இல்லை. இவை ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டிராத எனக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது. இதை யாரிடம் சொல்லி எப்படி மாற்றுவது?

2. இந்தக் குழப்பங்களால் தமிழைக் கற்கச் சிரமமாக இருக்கிறது என்று எத்தனை இலட்சம் வேறு மொழித் தமிழ் மாணவர்கள் முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்? இந்தியா+சீன மக்கள் தொகை 250 கோடி பில்லியன் மக்களும் ஆங்கிலம் கற்க வேண்டிய தேவையை முன்னிட்டு ஆங்கிலத்தை நம் நாடுகளுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ளலாமா?

3. இந்தி இந்தியாவில் பரவியதற்கு அம்மொழியின் இனிமை காரணமா? இல்லை, அதனைத் தாய்மொழியாகப் பேசுவோர் எண்ணிக்கையும் அதற்குப் பின்னால் இருக்கும் நடுவண் அரசுக் கொள்கையும் காரணமா?

4. நீங்கள் சொல்லும் அத்தனை ஒலிகளையும் / எழுத்துக்களையும் கொண்டுள்ள ஒரு மொழி ஏன் வழக்கொழிந்து போனது?

சரி கேள்விகள் போதும்.

* ஒரு காலத்தில் இந்தியாவில் வடமொழித் தாக்கம் இருந்தது. ஓரிரு நூற்றாண்டுகள் முன்னர் பிரெஞ்சும் தற்போது ஆங்கிலமும் உலக மொழிகளாக இருக்கின்றன. அடுத்து எந்த மொழி அதிகம் வழங்குமோ! இப்படி ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் வருகிறவர், போகிறவர், பிற மொழி மாணவர்களுக்காக எல்லாம் ஒரு மொழியின் இயல்பை மாற்ற முடியாது.

* ஒரு மொழி எவ்வளவு தான் கடினமாக இருக்கட்டுமே? அதை ஒழுங்காகக் கற்பிக்கத் தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். கற்றுக் கொள்வது தான் மாணவரின் அழகு. ஒரு கணிதத் தேற்றத்துக்கான நிறுவம் சிரமமாக இருக்கிறது என்று தேற்றத்தையே மாற்ற முடியுமா?

* முதலில் கேட்டு, பிறகு பேசி அதற்குப் பிறகு தான் வாசிப்பது என்னும் நிலைக்கு ஒரு மொழியின் மாணவன் வருகிறான், முதல் இரு நிலைகளிலேயே ஒவ்வொரு சொல்லும் எப்படி ஒலிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் பிறந்து வளரும் குழந்தைகள் சொற்களில் ஒலிப்பை இப்படித் தான் உணர்கின்றனவே தவிர, எழுத்துக்களைப் பார்த்து அல்ல. இது பிற மொழி மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தல் முறையை மாற்றுவதன் தேவையை உணர்த்துகிறதே தவிர, தமிழையே மாற்ற எந்தத் தேவையும் இல்லை.

* தமிழில் இன்ன ஒலிக்கு அடுத்து இன்ன ஒலிகள் தாம் வரலாம் என்று தெளிவான இலக்கணம் இருக்கிறது. இது தமிழின் சுமை இல்லை. அழகு. இது போன்ற இலக்கணம் எத்தனை மொழிகளுக்கு உண்டு? பள்ளிக்கூடம் வந்து கற்றறியாதோரும் அனுவத்தாலேயே இந்த இலக்கணத்தை அறிந்திருக்கின்றனர்.

* எந்த ஒரு மொழியின் அனைத்து ஒலிப்புகளையும் எல்லா பிற மொழிகளாலும் எழுதிக் காட்டி விட முடியாது. இது பிற மொழிகளின் குறை அன்று. அது அவற்றின் இயல்பு. ஒவ்வொரு மொழியும் ஒரு தனித்தனி உயிரினம் போல. ஒவ்வொரு மொழியின் தோற்றம், வளர்ச்சிக்குப் பின்னும் ஒரு உயிரினத்தின் பரிணாமத்தை ஒத்த கூறுகள் உள்ளன. “ஏன் மீனைப் போல் நீந்த மாட்டேன் என்கிறாய்” என்று குயிலைப் பார்த்துக் கேட்பது மடமை.

* செருமன் முதலிய உலக மொழிகள் எல்லாம் ஏற்கனவே இருக்கிற எழுத்துக்களைக் குறைத்துத் தான் வருகின்றனவே ஒழிய எந்த பெரிய மொழியும் புதிதாய் எழுத்துக்களைப் பெற்றுக் கொள்வதாய் தெரியவில்லை.

இது போன்று, “புது எழுத்துகளால் தமிழ் வளரும்”, என்ற பரப்புவோர் / பசப்புவோரிடம் பின்வரும் கேள்விகளுக்கு விடை சொல்லலாம்:

– இது போல் புது எழுத்துக்களைப் பெற்று பரவலான உலக மொழிகள் எத்தனை? அவை யாவை? அவற்றில் எத்தனை மொழிகள் தமிழுக்கு நிகரான தொன்மையும் செம்மொழித் தகுதியும் வாய்ந்தவை? புது எழுத்துக்களைப் பெற்றதால் மட்டுமே அவை பரவின் என்பதற்கு என்ன சான்று?

தொடர்புடைய இடுகைகள்:

இது குறித்து திண்ணையில் வெளிவந்த எனது விரிவான கடிதம்

சோதிர்லதா கிரிசாவின் எதிர்வினை

F

உனக்கு English தெரியாதா?

ஐரோப்பியப் பெரு நகரங்களில் ஆங்கிலத்திலும் உரையாடி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று யாரும் அதிகாரம் செய்ய முடியாது. “தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுவீர்களா” என்று பணிவுடன் தான் கேட்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர் தான் வேறு ஆங்கிலம் பேசக்கூடிய கடைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இல்லை, அத்தகையை கடைகளைத் தேடி ஓய்ந்து கடைசியில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார். ஆங்கிலம் என்பது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தலாம். ஒரே ஊரில் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு உள்ளூர் மொழியை மதிக்காமல், கற்காமல் இருப்பது உள்ளூர்க்காரர்களுக்கான அவமானம் தான்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள முடி திருத்தகம் ஒன்றில் ஆங்கிலம் தெரியாத காரணத்தால் ஒருவர் வேலை இழந்த கதையை இராம. கி எழுதி இருந்தார். “இது ஏதோ ஒரு மேல்தட்டு முடிதிருத்தகத்தில் நடந்த கதை தானே, இது குறித்து கவலைப்படுவது மிகைப்பட்ட உணர்ச்சியாக இருக்கிறதே” என்று காசி கூறி இருந்தார். ஆனால், வளர்ந்தும் விரிந்தும் வரும் இந்தியப் பெருநகரங்களில் இந்தப் போக்கு தொடர்வது கவலைக்குரியது.

ஐரோப்பியப் பெரு நகரங்களில் ஆங்கிலத்திலும் உரையாடி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று யாரும் அதிகாரம் செய்ய முடியாது. “தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுவீர்களா” என்று பணிவுடன் தான் கேட்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர் தான் வேறு ஆங்கிலம் பேசக்கூடிய கடைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இல்லை, அத்தகையை கடைகளைத் தேடி ஓய்ந்து கடைசியில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார். ஆங்கிலம் என்பது சுற்றுலாப் பயணிகள், குறுகிய காலம் உள்ளூரில் வசிப்பவர்களின் வசதிக்காகவே பயன்படுகிறது.

வெளியாட்களை உள்ளூர் மொழி கற்க விடாமல் செய்வதில் உள்ளூர்க்காரர்களுக்கும் பங்குண்டு. இடாய்ட்சுலாந்தில் எட்டு மாதங்கள் வசித்த போது, கல்லூரிக்கு வெளியே இடாயிட்ச் மொழி தெரியாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்ற காரணத்தால் இரவும் பகலும் இடாயிட்சு அகரமுதலியோடு சுற்றித் திரிந்தது நினைவு வருகிறது.

நெதர்லாந்துக்கு வந்த பிறகு இரண்டு ஆண்டுகள் ஆகியும் நெதர்லாந்து மொழி கற்றுக் கொள்ளத் தூண்டுதல் இல்லை. நெதர்லாந்து மக்களுக்கு ஆங்கிலம் நன்கு தெரிவதாலும் உதவும் மனப்பான்மை இருப்பதாலும் ஆங்கிலத்திலேயே நம்முடன் பேசுகிறார்கள். அரை குறையாக நாம் நெதர்லாந்து மொழி பேசிக் கொலை செய்தாலும் அதைக் காணச் சகிக்காமல் ஆங்கிலத்துக்குத் தாவி விடுகிறார்கள். இதனால் நெதர்லாந்துக்கு வரும் பல வெளிநாட்டவர்கள் நெதர்லாந்து மொழியில் தேர்ச்சியும் பயிற்சியும் இன்றி இருக்கிறார்கள். ஆனால், இந்நாட்டின் பொருளாதாரமே நெதர்லாந்து மொழியால் இயங்குவதால் ஆங்கிலம் அம்மொழியை அழிக்கும் நிலைக்குச் செல்லவில்லை.

தமிழ்நாட்டில் அண்டை, அயல் மாநிலத்தவர்களுக்கு உதவுகிறோம் பேர்வழி என்று நமக்குத் தெரிந்த அரை குறை ஆங்கிலத்திலாவது பேசுகிறோமே ஒழிய அவர்கள் தமிழ் கற்றுக் கொள்வதற்கான போதுமான தூண்டுதலைத் தருவதில்லை. அவர்கள் வசதிக்காக ஆங்கிலத்தில் எழுத, பேச, அறிவிக்கப் போய் எங்கும் ஆங்கிலமாகி, இறுதியில் “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று நம்மையே திரும்பக் கேட்கும் நிலை.

Sirக்குத் தமிழ் தெரியாதாம்ப்பா” என்ற கனிவான குரல்; “என் பொண்ணுக்கு Tamil எல்லாம் வராது” என்ற அலட்சியமும் பெருமிதமும் கலந்த குரல்; “உனக்கு English தெரியாதா” என்ற ஏளனமான குரல்… மாற்றி மாற்றி தமிழ்நாட்டில் எங்காவது கேட்டுக் கொண்டே இருக்கிறது.

English தெரியாதவன் மரியாதை இழந்து தமிழ்நாட்டிலேயே அவன், இவன், உன் என்றாகிப் போனது எப்போது? இந்த நிலையை எப்படி மாற்றுவது? என்று இந்த நிலை மாறும் ??