தமிழ் மோதிரம்

சென்னை. புகழ் பெற்ற நகைக் கடை ஒன்று.

பெயர் பொறித்து ஒரு மோதிரம் வாங்கலாம் எனச் சென்று இருந்தோம்.

முன்கூட்டியே சில குறிப்பிட்ட வடிவங்களில் பெயர் எழுதி வைத்திருந்த மாதிரிகளைக் காட்டினார்கள். ஒன்றில் கூட தமிழ் எழுத்தில்லை.

“தமிழ்ல பேரு எழுதித் தருவீங்களா?”

“இல்லீங்க. தமிழ்ல செய்ய முடியாது”.

“ஓ.. சரி, எந்தக் கடைல தமிழ்ல எழுதித் தருவாங்கன்னு சொல்லுங்க. அங்க போறோம்.”

“இல்லீங்க.. இப்பல்லாம் தமிழ்ல வர்றது இல்லீங்க. தமிழ்ல design பண்ணுறதுல சிக்கல் இருக்குங்க”

“ஏங்க… அதுவும் ஒரு எழுத்து தானங்க.. என்ன என்னவோ நுணுக்கமான வேலைப்பாடுகள் எல்லாம் செய்யுறீங்க? ஒரு எழுத்தைப் பொறிக்கிறது அவ்வளவு சிரமமா?”

“இல்லீங்க.. வர்றதில்லீங்க..”

“ம்ம்.. இப்ப ஒருத்தர் வந்து 100 பவுன்ல வாங்கிறன்னு சொல்லிக் கேட்டா செய்வீங்களா மாட்டீங்களா? .. அது அரபு எழுத்தா இருந்தா கூட செய்வீங்க தானே?”

“…”

பக்கத்தில் இருந்த ஒரு சில விற்பனையாளர்களும் நிமிர்ந்து பார்க்கத் தொடங்கினார்கள்.

எனக்குத் தெரிந்த பொற்கொல்லர் ஒருத்தர் ஊரில் இருக்கிறார். அவருக்கு அழைத்து இது மாதிரி தமிழில் எழுத முடியுமா என்று அவர்கள் முன்பே உறுதி செய்து கொண்டேன்.

“சரிங்க.. நாங்க ஊர்ல போயே பண்ணிக்கிறோம்”

“கொஞ்சம் இருங்க… இதைப் பத்தி phone பண்ணிக் கேட்டுத் தான் சொல்ல முடியும்.”

“சரி, கேட்டுச் சொல்லுங்க”ன்னுட்டு மோதிர மாதிரிகளைப் பார்க்கத் தொடங்கினோம்.

“இப்பல்லாம் யாருங்க தமிழ்ல கேட்கிறாங்க? மோதிரத்தைக் கூட Ringன்னு தான் சொல்றாங்க. மோதிரம்னு யாரு சொல்றாங்க? பிள்ளங்களைக் கூட English mediumல தான் சேர்க்கிறாங்க”

“நாங்களும் English mediumல படிச்சிட்டு வெளிநாட்டுல எல்லாம் வேலை பார்த்துட்டுத் தான் வந்திருக்கோம்”

“ஓ.. அப்படிங்களா.. அப்படின்னா ஒன்னும் சொல்றதுக்கில்ல..” என்று பம்மத் தொடங்கினார்.

“இவ்வளவு பெரிய சென்னைல யாருமே தமிழ்ல எழுதித் தரக் கேட்பது இல்லையா?”

“இல்லீங்க..”

“இதுக்கும் கலைஞர் ஒரு சட்டம் போட்டால் தான் சரிப்படுமோ?”

சிரித்தார்.

அதற்குள் தொலைப்பேசியில் யாருடனோ பேசி, தமிழில் செய்ய முடியும் என்று உறுதிப்படுத்தினார்கள்.

மோதிரத்தில் பெயர் எழுதுவதில் இரண்டு வகையாம். கீறியது போல் எழுதுவது, அதன் மேலேயே குமிழ் போல் இடுவது.. ( engrave, emboss என்று அவர் தமிழில் சொன்னார் ) இதில் கீறுவது மாதிரி தான் எழுத முடியும் , குமிழ் போல் எழுதுவதில் நுட்பச் சிக்கல் இருக்கிறது என்று சொன்னார். கணினியில் தமிழ் வராது என்று பூச்சி காட்டும் கதை போல் இருக்கிறதே எனக் கடுப்பாக வந்தது. திரும்பவும் பொற்கொல்லரை அழைத்து உறுதி செய்தவுடன் வழிக்கு வந்தார்கள்.

ஒரு தாளைக் கொடுத்து, பெயரை capital letterல் எழுதிக் கொடுக்கச் சொன்னார்.

“தமிழ்ல capital letter எல்லாம் இல்லீங்க…”

அவருக்கு மண்டை காயத் தொடங்கி இருக்க வேண்டும்.

பெயருடன் சேர்த்து முகவரியும் எழுதப் போனேன்.

“முகவரியும் தமிழ்ல தான் எழுதுவீங்களா, இல்லை englishல எழுதுவீங்களா?”

அவர் கேட்ட தொனி எனக்குப் பிடிக்கவில்லை.

“தமிழ்னா என்னங்க அவ்வளவு நக்கலு? இது தமிழ்க் கடையா இல்ல …… கடையா? நீங்க தமிழ் தான?”

அவருடைய முகம் இறுகத் தொடங்கியது.

“நான், தமிழ், ஆங்கிலம் எல்லாமே பேசுவேன்.”

“தமிழ்நாட்டுல தான கடை வெச்சிருக்கீங்க? தமிழ்ல பேர் எழுதச் சொன்னா ஏன் இவ்வளவு அலட்சியம்?”

“விடுங்க. அதான் தமிழ்ல மோதிரம் செஞ்சு நீங்க செயிச்சுட்டீங்க இல்ல”

வாடிக்கையாளருக்கு வேண்டியதைத் தருவதை அவர்களுக்கு இழப்போ?

உத்தேச விலையில் 18% சேதாரம், 700 ரூபாய் செய்கூலி போட்டார். மோதிரத்துக்கு இது மிகவும் அதிகம் என்று சொன்னதால், மேற்பார்வையாளர் வந்து 14% வீதம் ஆக்கினார். இந்தக் கடையில் செய் கூலியே இல்லை என்று சொல்லி 700 ரூபாயை நீக்கினார்.

விற்பனையாளரை நிமிர்ந்து பார்த்தேன்.

சாப்பாட்டுக் கடையில் வேலை பார்த்திருந்தால் எச்சி துப்பிக் கொடுத்திருப்பாரோ?

உனக்கு English தெரியாதா?

ஐரோப்பியப் பெரு நகரங்களில் ஆங்கிலத்திலும் உரையாடி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று யாரும் அதிகாரம் செய்ய முடியாது. “தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுவீர்களா” என்று பணிவுடன் தான் கேட்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர் தான் வேறு ஆங்கிலம் பேசக்கூடிய கடைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இல்லை, அத்தகையை கடைகளைத் தேடி ஓய்ந்து கடைசியில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார். ஆங்கிலம் என்பது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தலாம். ஒரே ஊரில் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு உள்ளூர் மொழியை மதிக்காமல், கற்காமல் இருப்பது உள்ளூர்க்காரர்களுக்கான அவமானம் தான்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள முடி திருத்தகம் ஒன்றில் ஆங்கிலம் தெரியாத காரணத்தால் ஒருவர் வேலை இழந்த கதையை இராம. கி எழுதி இருந்தார். “இது ஏதோ ஒரு மேல்தட்டு முடிதிருத்தகத்தில் நடந்த கதை தானே, இது குறித்து கவலைப்படுவது மிகைப்பட்ட உணர்ச்சியாக இருக்கிறதே” என்று காசி கூறி இருந்தார். ஆனால், வளர்ந்தும் விரிந்தும் வரும் இந்தியப் பெருநகரங்களில் இந்தப் போக்கு தொடர்வது கவலைக்குரியது.

ஐரோப்பியப் பெரு நகரங்களில் ஆங்கிலத்திலும் உரையாடி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று யாரும் அதிகாரம் செய்ய முடியாது. “தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுவீர்களா” என்று பணிவுடன் தான் கேட்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர் தான் வேறு ஆங்கிலம் பேசக்கூடிய கடைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இல்லை, அத்தகையை கடைகளைத் தேடி ஓய்ந்து கடைசியில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார். ஆங்கிலம் என்பது சுற்றுலாப் பயணிகள், குறுகிய காலம் உள்ளூரில் வசிப்பவர்களின் வசதிக்காகவே பயன்படுகிறது.

வெளியாட்களை உள்ளூர் மொழி கற்க விடாமல் செய்வதில் உள்ளூர்க்காரர்களுக்கும் பங்குண்டு. இடாய்ட்சுலாந்தில் எட்டு மாதங்கள் வசித்த போது, கல்லூரிக்கு வெளியே இடாயிட்ச் மொழி தெரியாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்ற காரணத்தால் இரவும் பகலும் இடாயிட்சு அகரமுதலியோடு சுற்றித் திரிந்தது நினைவு வருகிறது.

நெதர்லாந்துக்கு வந்த பிறகு இரண்டு ஆண்டுகள் ஆகியும் நெதர்லாந்து மொழி கற்றுக் கொள்ளத் தூண்டுதல் இல்லை. நெதர்லாந்து மக்களுக்கு ஆங்கிலம் நன்கு தெரிவதாலும் உதவும் மனப்பான்மை இருப்பதாலும் ஆங்கிலத்திலேயே நம்முடன் பேசுகிறார்கள். அரை குறையாக நாம் நெதர்லாந்து மொழி பேசிக் கொலை செய்தாலும் அதைக் காணச் சகிக்காமல் ஆங்கிலத்துக்குத் தாவி விடுகிறார்கள். இதனால் நெதர்லாந்துக்கு வரும் பல வெளிநாட்டவர்கள் நெதர்லாந்து மொழியில் தேர்ச்சியும் பயிற்சியும் இன்றி இருக்கிறார்கள். ஆனால், இந்நாட்டின் பொருளாதாரமே நெதர்லாந்து மொழியால் இயங்குவதால் ஆங்கிலம் அம்மொழியை அழிக்கும் நிலைக்குச் செல்லவில்லை.

தமிழ்நாட்டில் அண்டை, அயல் மாநிலத்தவர்களுக்கு உதவுகிறோம் பேர்வழி என்று நமக்குத் தெரிந்த அரை குறை ஆங்கிலத்திலாவது பேசுகிறோமே ஒழிய அவர்கள் தமிழ் கற்றுக் கொள்வதற்கான போதுமான தூண்டுதலைத் தருவதில்லை. அவர்கள் வசதிக்காக ஆங்கிலத்தில் எழுத, பேச, அறிவிக்கப் போய் எங்கும் ஆங்கிலமாகி, இறுதியில் “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று நம்மையே திரும்பக் கேட்கும் நிலை.

Sirக்குத் தமிழ் தெரியாதாம்ப்பா” என்ற கனிவான குரல்; “என் பொண்ணுக்கு Tamil எல்லாம் வராது” என்ற அலட்சியமும் பெருமிதமும் கலந்த குரல்; “உனக்கு English தெரியாதா” என்ற ஏளனமான குரல்… மாற்றி மாற்றி தமிழ்நாட்டில் எங்காவது கேட்டுக் கொண்டே இருக்கிறது.

English தெரியாதவன் மரியாதை இழந்து தமிழ்நாட்டிலேயே அவன், இவன், உன் என்றாகிப் போனது எப்போது? இந்த நிலையை எப்படி மாற்றுவது? என்று இந்த நிலை மாறும் ??

சாதி

ஊர்: புதுகையில் உள்ள ஒரு சிற்றூர். என் அம்மா பிறந்த ஊர். மூன்று தாய் மாமாக்கள், எண்ணற்ற சொந்தங்கள் அங்கு இருக்கிறார்கள். படிப்பறிவற்றவர்கள் இல்லை. பலர் சிங்கப்பூர், மலேசியா என்று பிழைக்கச் சென்று உலக அனுபவம் பெற்றவர்களே.

எப்பொழுது: ஒரு சில நாட்கள் முன்னர். 2007 தான். 21 ஆம் நூற்றாண்டு தான். தமிழ்நாட்டில் தான்.

என்ன ஆனது:

நான் பிறந்த சாதியில் உள்ள அந்த ஊர்ப் பெண்ணும் இன்னொரு சற்றே ஒடுக்கப்பட்ட சாதிப் பையனும் ஒருவரை ஒருவர் விரும்பி மணம் முடிப்பதற்காக வீட்டை விட்டுச் சென்றுள்ளனர். பெண்ணின் அண்ணன் முன் நிற்க, பெண்ணின் குடும்பத்தினர் ஊரார் துணையுடன் பெண்ணையும் பையனையும் பெங்களூர் வரை சென்று தேடிக் கண்டுபிடித்து ஊருக்குக் கூட்டி வந்துள்ளனர். பெண்ணைப் பெண்ணின் குடும்பத்தினரே தூக்கிட்டுக் கொன்று எரித்து விட்டார்கள். பையனை அந்த சாதிக்காரர்களிடமே ஒப்படைத்து 24 மணி நேரத்துக்குள் அவர்களே கொல்ல வேண்டும் என்று எழுதி வாங்கி இருக்கிறார்கள். எப்படியோ பக்கத்து ஊருக்கு செய்தி கசிந்து காவல் துறைக்கு வழக்கு சென்றுள்ளது. ஆனால், எப்படியும் அந்தப் பையனைக் கொல்லாமல் விட மாட்டார்கள்.

அதிர்ச்சி: சிங்கப்பூரில் பிழைக்க வந்திருக்கும் நான் பிறந்த சாதி இளைஞர்கள் நிலைப்பாடு: “அந்தப் பையனை எப்படியாவது கொன்று விடுங்கள். என்ன செலவு ஆனாலும் சட்டச்சிக்கல் வந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்”.

இதுவே அடக்கும் சாதிப் பையனாக இருந்திருந்தால்: பையனையும் பெண்ணையும் பிரித்து இருப்பார்கள். ஆனால், கண்டிப்பாகப் பையனைக் கொன்றிருக்க மாட்டார்கள். கண்டித்துத் திரும்ப சேர்த்துக் கொள்வார்கள். ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்ணின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

குடும்பத்தினர் பெண்ணுக்கு உறுதுணையாக இருந்திருந்தால்: குடும்பத்தை ஊரை விட்டு விலக்கி வைத்திருப்பார்கள். அவர்கள் திருமண, இறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ள மாட்டார்கள். அவர்களும் பிற சொந்தங்கள், (பெற்ற தாய், கூடப்பிறந்த அண்ணன், தங்கை போன்ற நெருங்கிய உறவுகள் உட்பட) யார் வீட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள முடியாது. பெண்ணுக்கு தங்கைகள் இருந்தால் திருமணம் பெருஞ்சிக்கல் தான். வாழ்நாள் முழுக்க அனுபவிக்கும் இந்த நிராகரிப்பின் வலியை எழுத்தில் வடிக்க முடியாது.

இன்று சிங்கப்பூரில் உள்ள அண்ணனிடம் பேசிய போது இந்தத் தகவலைச் சொன்னார். பல பக்கத்து ஊர்களில் இது போல் நடந்து உள்ளது என்றும் நம் ஊரில் இது தான் முதல் என்றும் சொன்னார். நாம் தொலைபேசியில் இவ்வளவு பேசினாலும் ஊருக்குள் போய் பேச துணிவு வராது. பேசினாலும் குரல் எடுபடாது. நாமும் தனித்துப் போகலாம் என்றார். இதைவிடக் கொடுமை: சில நாள் அந்த ஊரில் இருந்தால் நமக்குக் கூட “நம் இனம், நம் சாதி” என்ற உணர்வு வந்து விடும் என்கிறார் !!!
அந்தப் பையன் அடக்கும் சாதியா, ஒடுங்கிய சாதியா என்பது பிரச்சினையில்லை. வேறு சாதி என்பதே பிரச்சினை என்றார்.

நாளிதழ்களில் இது போன்ற செய்திகள் பார்ப்பது உண்டு என்றாலும் சொந்த ஊரில் நடக்கும் போது திகீர் என்கிறது 🙁

🙁 🙁 🙁

சாதி ஏற்றத் தாழ்வுகள் மட்டுமே பிரச்சினை இல்லை. சாதி என்று ஒன்று இருப்பதே பிரச்சினை தான். ஏற்றத் தாழ்வுகள் ஒழிந்தாலும் சாதி ஒழியும், ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. துணிவுள்ள தனிநபர்கள் சாதி அடையாளங்களைப் புறந்தள்ளி வாழ இயல்கிறதே தவிர, ஒட்டு மொத்த சமூகத்தின் மனநிலையிலும் மாறுதல் வருவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. படிக்காதவர்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்கிறார்கள் என்றால் படித்தவர்கள் திட்டம் போட்டுத் துல்லியமாகச் சாதியை வளர்க்கிறார்கள். இருப்பதிலேயே ஆக அடக்கும் சாதிக் காரனும் தன் சாதிக்குள் தான் பெண் கட்டுவேன் என்கிறான். இருப்பதிலேயே ஆக ஒடுக்கப்பட்ட சாதிக்காரனும் தன் சாதிக்குள் தான் பெண் கட்டுவேன் என்கிறான். சாதி ஏற்றத்தாழ்வு அளவுக்கு இந்த சாதி அடையாளம் காத்தல் பிரச்சினையும் முக்கியம்.

ஒவ்வொருவனும் ஏதோ ஒரு அடையாளத்தை வலியுறுத்த, மேல்நாட்ட விரும்புகிறான். சாதி என்று ஒன்று இல்லாவிட்டால், பணம், நிறம், மதம் என்று ஏதாவது ஒன்றைப் பிடித்துக் கொள்கிறான். இது சமூக வியாதியா? சாதியெல்லாம் இல்லை என்று சொல்பவர்கள் தமிழகத்தின் ஏதாவது ஒரு சிற்றூருக்குச் சென்று சில நாட்கள் வாழ்ந்து பார்த்தால் உண்மையைப் புரிந்து கொள்ளலாம். சாதிய அடக்குமுறையை சொந்த வாழ்க்கை அனுபவங்களாலேயே நன்கு உணர்ந்திருக்கிறேன்.

Englishland

குறிப்பு: amma not equal to அம்மா என்ற படிமத்தைச் சொடுக்கி இங்கு வருபவர்கள், சிறந்த தமிழ் விசைப்பலகை எது? என்ற தமிழ்99 விசைப்பலகை விளக்கக் கட்டுரைக்குச் செல்லவும். தவிர்க்க இயலாத காரணங்களால் பக்கம் வழ மாறியதற்கு வருந்துகிறேன்.

தமிழ்நாட்டில் தமிழர் தத்தம் பெயர்ச்சுருக்கங்களை ஆங்கிலத்திலேயே எழுதுகிறோம்.

தமிழ்நாட்டில் தமிழர் ஆங்கிலத்தில் தான் கையெழுத்து இடுகிறோம்.

பிற மொழி, ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டும் பேசத் தெரியாது. ஆனால், பலரும் ஒரு தமிழ்ச் சொல்லும் கலக்காமல் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுகிறோம். அதற்கு காசு கொடுத்துப் பயிற்சியும் பெறுகிறோம்.

ஆங்கிலத்தில் பேசுபவன் அறிவாளி. தமிழில் மட்டும் பேசத் தெரிந்தவன் முட்டாள். தமிழில் மட்டுமே பேசுவேன் என்பவன் தமிழ் வெறியன்.

பாலத்தீனப் பிரச்சினைக்குப் பரிந்து பேசுபவனை அறிவுசீவி என்கிறோம். ஈழத்துக்கு ஆதரவாகப் பேசினால் விடுதலைப் புலி.

eppadi irukkada. paaththu romba naal aachchuதமிழை ஆங்கிலத்தில் எழுதிக் கொல். ரோட்ல டிராபிக் ஜாம் – ஆங்கிலத்தைத் தமிழில் எழுதித் தமிழாக்கு.

ஒரு ஆங்கில உரையின் நடுவிலோ நேர்முகத் தேர்விலோ ஆங்கிலச் சொல் அறியாவிட்டால் வெட்கம் பிடுங்கித் திங்கத் தலை குனி. ஆனால், வெட்கமோ வருத்தமோ இன்றித் தமிங்கிலம் பேசு.

தமிழ்நாட்டில் தமிழ்க் குழந்தை 10ஆம் வகுப்பு வரையாவது தமிழ் படிக்க வேண்டும் என்பதற்கு அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழன் உயர்படிப்பில் பொறியியலும் நுட்பமும் மருத்துவமும் படிக்க வேண்டும் என்றால் முதலில் ஆங்கிலம் படிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழரின் கோயிலில் தமிழில் வழிபாடு நடத்த அரசு ஆணை வர வேண்டும்.

அப்பா, அம்மா என்ற சொற்கள் மட்டுமே தெரிந்த சில தமிழ்க் குழந்தைகள்.

பணத்தில் புரளும் பல ஆங்கில வழியப் பள்ளிகள். கூரை கூட இல்லாத தாய்த் தமிழ்ப் பள்ளிகள்.

தமிழ் மட்டுமே தெரிந்திருந்தால் செல்பேசி முதல் கணினி வரை இயக்க முடியா நிலை.

தமிழ்நாட்டு உயர்நீதி மன்றங்களில் தமிழில் வழக்கை நடத்த முடியா நிலை.

தமிழன் மட்டுமே பொருள் வாங்க வரும், தமிழன் நடத்தும் கடையில் பெயர்ப்பலகைகள் மட்டும் ஆங்கிலத்தில். விற்பனைச் சீட்டும் ஆங்கிலத்தில்.

தமிழ்நாட்டில் இருக்கும் வங்கியின் தொலைபேசிச் சேவையை அணுகுகையில் “தமிழில் பேசலாமா” என்று அனுமதி கேட்க வேண்டும். “ஆங்கிலத்தில் தான் பதில் அளிப்போம்” என்று வரும் மறுமொழியைச் சொரணையற்றுக் கேட்டுக் கொள்.

Deutschlandல் (செருமனியில்) Deutsch (செருமன் மொழி) தெரியாமலும் Nederlandல் (நெதர்லாந்தில்) Nederlands (நெதர்லாந்து மொழி) தெரியாமலும் சிரமப்படும் போது தோன்றி மறையும் எண்ணங்கள் இவை.

இவற்றை எல்லாம் மாற்ற முடியாமல் போனாலும் நாட்டின் பெயரிலாவது தமிழ் இருந்து தொலைக்கட்டும் என்று நினைத்துப் பெயர் வைத்தார்களோ என்னவோ தமிழ்நாடு என்று?

Englishland என்று யாராவது பெயரை மாற்றித் தந்தால் குற்றவுணர்வையாவது கழுவிக் கொள்ளலாம் 🙁

பட்டிமன்றம் நடத்துவது எப்படி?

பெண் பேச்சாளர்களுக்கு பட்டுப்புடவை, மினுக்கும் அணிகலன்கள் தேவை இல்லை. ஒத்திகை பார்த்த அசட்டுக் கும்மிச் சிரிப்புகள், குட்டிக் கதைகள் தேவை இல்லை. திரைப்படப் பாட்டு தேவை இல்லை. கண்ணீர் சிந்த வைக்கும் அழுகாட்சிக் கதைகள், அடித்தொண்டையில் கத்தும் பாசாங்குப் பேச்சு தேவை இல்லை.

இப்படியும் அமைதியாக, ஆரவாரம் இன்றி பட்டிமன்றம் நடத்தலாம். மக்களின் வாழ்க்கையைப் பேசலாம். சமூகச் சூழல் தான் எப்படி எல்லாம் ஊடகப் போக்கை மாற்றுகிறது?

பி.கு: சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி, விசு கவனத்துக்கு.