தமிழர்கள் Form, Friend, Fan, Firefox, Frame, Fried rice, Figure, Photo, Phenol போன்ற எண்ணற்ற ஆங்கிலச் சொற்களை அன்றாட வாழ்வில் புழங்குகிறோம். ஆனால், மற்ற இந்திய, இலத்தீன-கிரேக்க-ஐரோப்பிய மொழிகளைப் போல் F ஒலியைத் தமிழில் எழுதிக் காட்ட இயலாதது பெரும் குறை.

தொல்காப்பியம், நன்னூல் எழுதியோர் வெளிநாடு சென்ற கடவுச்சீட்டு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே, அக்காலத்தில் F அறிமுகம் ஆகாமல் இருந்திருக்கலாம். எனினும், காலம் காலமாக அடுப்பு, சுருட்டு பற்ற வைத்து நெருப்பை அணைக்கும் போது, தமிழர்கள் அனைவரும் ‘foo… foo’ என்றே ஊதுகின்றனர். தற்காலத்திலும், குடித்து விட்டு சாலையில் வருகையில் காவலர்கள் மறித்து ஊதிக் காட்டச் சொன்னால் ‘foo… foo’ என்றே ஊதுகின்றனர். இதில் இருந்து F ஒலி தமிழர்களுக்கு அறிமுகமானதே என்று அறியலாம்.

தமிழர்களுக்கு அறிமுகமான இந்த F ஒலியைத் தமிழில் எழுதிக் காட்ட முடியவில்லை என்றால், வரும் தலைமுறை தமிழைப் புறக்கணித்து தமிழ் அழியும் நிலைக்குச் செல்லும். எனவே, நமக்குத் தேவையான F ஒலியை ஆங்கிலத்திடம் இருந்து பெற்று தமிழில் சேர்த்துக் கொள்ளத் தயங்கக்கூடாது. புதிய எழுத்துகளைச் சேர்த்துக் கொள்வது எம்மொழிக்கும் அழகு. இதுவே மொழி வளர்ச்சியாகும். இது வல்லினமா, மெல்லினமா, இடையினமா, அகர வரிசையில் எங்கு சேர்ப்பது, எவ்வளவு மாத்திரை, புணர்ச்சி விதி என்ன என்று யாரும் கவலைப்பட வேண்டாம்.

இனி, fரான்சு, fரெட்ரிக், fரெஞ்சு என்றே எழுத வேண்டும். முன்னர் பல காலமாக பிரான்சு, பிரெட்ரிக், பிரெஞ்சு என்றெல்லாம் எழுதி வந்திருந்தாலும் அனைவரும் இனி கட்டாயம் F எழுத்து கொண்டே எழுத வேண்டும். அப்படி எழுதியும் F உச்சரிக்க வராதவர்கள் நாட்டுப்புறத்தான்கள், பாமரர்கள், படிப்பறிவற்றவர்கள், நாகரிகம் தெரியாதவர்கள், காட்டான்கள். F எழுத மறுப்பவர்கள் தனித்தமிழ் வெறியர்கள், முட்டாள்கள், தமிழரை அறியாமையில் மூழ்கடிப்பவர்கள், பழமைவாதிகள், ஆணவம் பிடித்தவர்கள், Fல் தொடங்கும் பெயருடையவர்களை அவமதிப்பவர்கள், Fஆசிசுட்டுகள், நார்சியவாதிகள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஆங்கில-வெளிநாட்டு-கிறித்தவ-fரெஞ்சு வெறுப்பாளர்கள்.

இனிமேல் F தமிழ் எழுத்து.

முற்றும்.


Comments

57 responses to “F”

  1. F இருக்கிறது இருக்கட்டும். நிறையா பேரு ஹ, ஷ,ஜ எல்லாம் பயன் படுத்தக் கூடாது அது தமிழ் எழுத்துக்கள் இல்லைன்னு சொல்லறாங்களே. அது பத்திக் உங்க கருத்து என்ன?

    அதுக்கும் மேல ஐ என்ற எழுத்தைப் பாவிப்பது கூட குறைஞ்சு போச்சே. பலரும் ஐம்பது என எழுதாமல் அய்ம்பது என்று எழுதுகிறார்களே. அது பற்றி உங்கள் கருத்து என்ன?

    F என்று வரும் இடங்களில் ஃப் என சிலர் பாவிப்பதில் உங்களுக்கு உடன்பாடில்லையா?

    ரொம்ப கேள்வி கேட்கறேனேன்னு நினைக்காதீங்க. இது பத்தி நான் ரொம்ப நாளா யோசிச்சுக்கிட்டு இருக்கேன். ஆனா யாரைக் கேட்டாலும் சரியான பதிலே வருவதில்லை!

  2. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    கிரந்த எழுத்துகள் பயன்பாடு, fஐச் சுட்ட ஆய்தம் பயன்படுத்துவது, ஐ என்பதற்குப் பதில் அய் என்று எழுதுவது மூன்றிலும் எனக்கு உடன்பாடு இல்லை. விரிவாக அறிய, கிரந்தம், ஆய்த எழுத்தைக் கொல்வது முறையா?, ‘அய்’ என்ற பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும் பார்க்கவும்.

    1. other langvage is not entry our country.but other nation langvage illlalma
      relationship not continue.

    2. Shanmugham Avatar
      Shanmugham

      ஃப என்ற எழுத்து F’ க்கு மாற்றாக இருக்கும் போது எதற்கு இந்த வீண் வேலை நண்பரே?.

    3. Umakanthan Avatar
      Umakanthan

      F சேர்க்க வேண்டுமென்கிறீர்கள், எவ்வளவோ காலமாக பயன்படுத்தப் பட்டு வரும் கிரந்த எழுத்துக்கள் தவிர்க்கப் பட வேண்டுமென்கிறீர்கள். அதாவது எங்கோ இருந்து இறக்குமதி செய்யலாம் ஆனால் பக்கத்து வீட்டானிடம் வாங்கக் கூடாது.

      1. ரவிசங்கர் Avatar
        ரவிசங்கர்

        நான் எழுதியிருப்பது நையாண்டி. தமிழில் உள்ள 247 எழுத்துகள் போதுமானவை.

  3. fஐ ஆய்தமாக பயன்படுத்து சரியெனப் படவில்லை.. இதைப்பற்றி நானும் எழுதுவதாக இருந்தேன்.. 🙂

    உங்கள் கருத்தையே நானும் வழிமொழிகிறேன்.

  4. // ஹ, ஷ,ஜ எல்லாம் பயன் படுத்தக் கூடாது அது தமிழ் எழுத்துக்கள் இல்லைன்னு சொல்லறாங்களே. அது பத்திக் உங்க கருத்து என்ன?

    இதற்கு இங்கு செல்லவும்.

  5. என்ன சொல்வதென்று புரியவில்லை. சடால் என்று ஒரு ஐரோப்பிய எழுத்தை தமிழ் என்று ஏற்றுக்கொள்ள மனம் ஒப்புதில்லை

  6. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    அருண், நன்றி.

    மயூ, கதையைக் கெடுத்துடுவீங்க போல இருக்கே… “நான் எழுதி இருப்பது ஒரு பகிடி” என்று விளக்கம் சொல்லும் நிலை எந்த எழுத்தாளனுக்கும் வரக்கூடாது 🙂

  7. ஹி.. ஹி… 😉

    1. இ.. இ.. என்று அல்லது ஈ… ஈ… என்று சிரியுங்கள். அல்லாற்கடை ஈகி.. இகீ… என்றும் சிரிக்கலாம். 😐

  8. தமிழில் ‘F’ எழுத்தைப் பயன்படுத்தலாம் என்பது மொழியியல் கொள்கைக்கு ஏற்றதாகவோ அல்லது அறிவுக்குப் பொருந்துவதாகவோ இல்லை. அதைவிட மேலாக இது தமிழுக்கு முற்றிலும் நல்லதே இல்லை! தமிழின் அடிப்படை இலக்கணத்திற்கே இது பொருந்துவதாக இல்லை!!

    உலகில் பிறமொழிக்காரர்கள் எவரும் அன்னிய மொழிகளை எழுதும் போது, அந்த மூலமொழியின் ஒலியை நூற்றுக்கு நூறு அப்படியே எழுதுவது இல்லை. தமிழ் என்பதை TAMIL என்று அவர்களிடம் உள்ள ‘L’ எழுத்தைக் கொண்டுதான் எழுதிகிறார்கள்.

    ஆனால், தமிழ்மொழியின் மீது ஆழ்ந்த உணர்வும் அறிவும் இல்லாதவர்கள் இப்படியெல்லாம் சிந்திப்பதும் எழுதுவதும் வேதனையான ஒன்று.

    TAMIL என்பதை TAMIழ் என எந்த ஆங்கிலேயனும் எழுத மாட்டான். ஏன், தமிழன்கூட அப்படி எழுதவே மாட்டான். TAMIழ் என எழுதுவது எப்படிப்பட்ட அறியாமைத் தனமோ அதற்கு ஒரு சிறிதும் குறையாத அறியாமையும் அதவிட அதிகமான பேதமையும் fரான்சு, fரெட்ரிக், fரெஞ்சு என எழுதுவதும்!!

    இன்று உலகமொழியாக இருக்கும் ஆங்கிலம் முதலான மொழிகளெல்லாம் உருக்கொள்ளாத காலத்திலேயே, அன்னிய மொழிகளை எப்படி எழுதுவது என இலக்கணம் வகுத்துக்கொண்ட மொழி தமிழ் எனபதை ஒருபோதும் மறக்கக்கூடாது.

    இன்று உச்சாணியில் இருக்கும் மொழிக்காக தமிழின் உண்மை வடிவத்தைச் சிதைத்துவிட்டால், நாளை கோலோச்சப்போகும் வேறொரு மொழிக்கு ஏற்றவாறு தமிழை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இதனால் எத்தகைய கேடுகள் வரும் என்பதை தமிழ் வரலாற்றில் தெளிவாக காணலாம்.

    மொழியின் அமைப்பும் வரலாறும் தெரியாத காரணத்தால்தான் இன்றும்கூட ஜ, ஷ, ஹ முதலான கிரந்த எழுத்துகளைத் தமிழ் எழுத்துகள் என சிலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

    தயவு செய்து தமிழைத் தமிழாக இருக்க விடுங்கள்! அதேபோல் மற்றைய மொழிகளும் அதுவாக இருக்கட்டும்.

  9. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    சுப. நற்குணன்,

    உங்களை இவ்வளவு விரிவாக எழுத வைத்ததற்கு மன்னிக்கவும். கிரந்த எழுத்துக்கு ஆதரவாக இருப்பவர்களின் கருத்தை நையாண்டி செய்து எழுத முயன்றேன். நம்ம எழுத்து திறமை அவ்வளவு பத்தாது போல 🙁

    கிரந்தம், புது எழுத்துகள் சேர்ப்பு தொடர்பில் உங்கள் கருத்து தான் என்னதும். பார்க்க – கிரந்தம்

  10. ரவி அவர்களே,
    தங்களின் ‘பகடி’ எனக்குப் புரியாமல் இல்லை. தங்களின் எதிர்மறை மனவியல் உத்தியை புரிந்துதான் எழுதினேன்.

    இப்படி எழுதும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த தங்களுக்கு நன்றி. தங்களின் ஆற்றலையும் உணர்வையும் அடியேன் நன்கறிந்தவன் மட்டுமல்ல.. போற்றி மதிப்பவனும்கூட என்பதைத் தங்களுக்கு அன்போடு அறிவிக்கிறேன்.

  11. வினோத் ராஜன் Avatar
    வினோத் ராஜன்

    தமிழை குத்தகைக்கு எடுத்திருக்கும் அவதார புருஷர்களுக்கு எந்த மொழியிலிருந்தும் எழுத்துக்களை நீக்க அதீத உரிமை இருப்பது போல், சேர்க்கவும் உரிமை உண்டு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள் .

    யார் என்ன கேட்க முடியும், தமிழ் உங்கள் தனிப்பட்ட சொத்தாயிற்றே..

    விரும்பியதை செய்யுங்கள்…

    வாழ்க வளர்க…

  12. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை Avatar
    முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை

    ரவி,
    நான் ஆங்கில விக்கிபீடியாவில் பங்களிக்கின்றேன். ஆங்கில விக்கிபீடியாவில் தற்போது பாவிக்கும் ஆங்கிலம் ஆங்கிலமே அல்ல ரவி. பழைய சேக்சுபியர் காலத்து ஆங்கிலத்தை பயன்படுத்தச் சொல்லி எத்தனையோ முறை கேட்டும் எவ்வித பலனும் இல்லை. உண்மையில் தற்போது பாவிக்கும் ஆங்கிலம் ஆங்கிலமே அல்ல.

    தமிழ்விக்கிபீடியாவிலாவது உங்களைப் போன்றவர்கள் இருந்து தமிழை வாழவைப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. பண்டைய காலச் சொற்களை நாம் மீட்டெடுத்து எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டும்.

    உங்களிடம் சில உதவிகள் கேட்கலாம் என இருக்கின்றேன்.
    எனது முனைவர் பட்டத்துக்காக ‘தமிழர்களின் பண்டைய ஆடை முறை’ என்பதைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கின்றேன். தமிழர்களிடம் ஆதி காலம் தொட்டு விதம்விதமான ஆடை அணியும் முறை இருந்தது. நான் அதை எல்லாம் தவிர்த்து இன்று ஆங்கிலேய மோகம் கொண்டு ஆடை அணிகின்றோம். அது எமக்கு வசதியாக இருப்பதாக சாக்கு வேறு சொல்கொன்றோம். அதிலும் எம்மவர்களுக்கு மாற்றம் தேவை.

    உங்களால் எனக்கு உதவ முடியுமா ரவி?

    முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை

  13. ரவி,

    வெளுத்து வாங்கி விட்டீர்கள்…. பாராட்ட வார்த்தைகளே இல்லை

    விழுந்து விழுந்து சிரித்தேன்

    பின் குறிப்பு : நான் மிகவும் ரசித்தது இந்த மறுமொழியைத்தான் http://blog.ravidreams.net/f/#comment-2284

  14. இதே போல் z என்ற எழுத்தை தமிழில் சேர்ப்பது பற்றொயும்

    ழ், ள், ஞ் ஆகியவற்றை ஆங்கிலத்தில் சேர்ப்பதும் பற்றியும் உடனடியாக ஆவன செய்ய வேண்டுகிறேன்.

  15. சீன துரோகி ரவியை வன்மையாக கண்டிக்கிறேன்.

    சீன மொழியில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான எழுத்துகளுக்கு தகுந்த எழுத்து தமிழில் இல்லை.

    உலகில் அதிகம் மக்கள் பேசும் மொழியான சீன மொழியில் உள்ள எழுத்துக்கள் அனைத்தையும் தமிழில் சேர்க்க வேண்டும்

    அப்படி யில்லாமல் ஆங்கில மோகத்துடன் ஒரே ஒரு எழுத்தை மட்டும் சேர்க்க வேண்டும் என்று கூறும் ஆங்கில அல்லக்கை ரவிக்கு என் கடுமையான கண்டனம்

    சீன மொழி எழுத்துக்கள் அனைத்தையும் தமிழிலும் சேர்க்க வேண்டும் என்ற என் கோரிக்கையை மீண்டும் உரக்க கூறுகிறேன்

  16. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை Avatar
    முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை

    நன்றி விருபா,

    ரவி,
    என்னால் விரைவாகத் தட்டெழுத முடியாது. ஆயினும் உங்களது தமிழார்வத்தைக் கண்டு தான் நான் தட்டெழுதவே தொடங்கினேன்.

    இன்று எல்லோராலும் பயன்படுத்தப்படும் ஜீன்ஸ், ரி-சேர்ட் போன்ற்வற்றைத் தவிர்த்துவிட்டு நாம் மீண்டும் வேட்டி, சட்டைக்கு மாறுவது பற்றிச் சிந்திக்க வேண்டும். தற்போது இளையோர்கள் பலர் ‘புளுங்க புளுங்க’ ஜட்டி போடுகின்றார்கள். அதைத் தவிர்த்து நாம் மீண்டும் ‘கோவணம்’ கட்டத் தொடங்க வேண்டும். அப்போதுதான் ஆங்கில மோகம் கொண்டு அலைபவர்களைத் திருத்த முடியும்.

    நமது இளையோர்களின் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. மொழியில் இவ்வளவு இறுக்கமாக இருக்கும் நாம் ஏன் ஆடை, கலாச்சாரம், உணவு போன்றவற்றிலும் இறுக்கமாக இருந்து காட்ட வேண்டும். அப்போதுதன் ஆங்கில மோகம் கொண்டலையும் அனைவரையும் திருத்த முடியும்.

    மொழி, உணவு, உடை, கலாச்சாரம் போன்ற விடயங்களுக்கு உள்ள தொடர்புகள் பற்றி நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும். தனியே மொழியைப் பாதுகாப்பது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மற்றைய எல்லாவற்றையும் தவிர்த்து மொழியை மாத்திரம் பாதுகாப்பதில் அர்த்தமும் இல்லை.

    ஆகவே ரவி இன்று முதல் கோவணம் கட்டி நமது தொன்மையை நிரூபிப்போம்.

    வாழ்க தமிழ்,
    வளர்க தம்ழ்.

    நன்றி.

    முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை

  17. அடடே நம்ம தமிழ் எண்கள் , தமிழ் அளவு கோள்களையும் சேர்ப்போம் ஏன் சீன துரோகியா மட்டும் இருக்கனும்… 1, 2, 3, எல்லாம் எதுக்கு ?கிலோ , எக்டேர் எல்லாம் எதுக்கு ? இனி 1,2,3 கிலோ , எக்டேர் என்ற எழுத்துக்களையும் சொற்களை தூக்கி விடலாம்.

    உங்கள் பெயரை ‘இரவி’ என்று எழுதினால் புண் படுமே அதனால் ரவி என்றே எழுதுகிறேன்.

    ரவி – நையாண்டி செய்ய நினைத்தீர்கள் என்றால் நாங்களும் டாப் கிளாசாப் பண்ணுவோம்.

    நீங்களும் செல்வாவும் சேந்துக்கிட்டு தமிழ் விக்கியில் துவங்கிய ஆட்டங்கள் கொஞ்ச நேஞ்சமில்லை.

    கிரந்தத்தில் எழுதபவர்களை நாங்கள் எதுவும் சொல்லவில்லையே என்ற உயர் நிலை ஒழங்ககர்கள் போல பேசிவிட்டு ஏன் ஸ்ரீநிவாசன் என்று எழுதுகிறீர்கள்? ஏன் மஞ்சுஸ்ரீ என்று எழுதுகிறீர்கள் என்று முதலில் கேள்வி கேட்டவர்கள் யார் என்றும் அந்த விக்கிப்பீடியா உரையாடலை படிப்பவர்க்கு நன்கு விளங்கும்.

    இப்போ நையாண்டி வேற. என்ன ரவி நிஜமாவே இந்த பாதையில போகனுமா?

    புருனோ சார் – உங்க பேர எப்படி உங்கள் வலைத் தளத்தில் எழுதியிருக்கீங்கனு முதல்ல பாருங்க. அத பார்த்து சிரிச்சி சிரிச்சி கண்ணிலிருந்து தண்ணி வந்திடுச்சசி. பேசுரது ஒண்ணு செய்யிரது ஒண்ணு

    {{என்னைப் பற்றி
    மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ் }}

    வெட்டி ஞாயங்கள் தொடரட்டும்…

  18. செ. இரா. செல்வகுமர் Avatar
    செ. இரா. செல்வகுமர்

    //நீங்களும் செல்வாவும் சேந்துக்கிட்டு தமிழ் விக்கியில் துவங்கிய ஆட்டங்கள் கொஞ்ச நேஞ்சமில்லை.//

    முரளி,

    விக்கியில் இருப்பதை யார் வேண்டுமாலும் படிக்கலாம். அங்குள்ள என் கூற்றுகளும், முன்வைப்புகளும் நேர்மையானவையா அல்லவா, என் கருத்தாடல் நேர்மையானதா அல்லதா என்று யாரும் எப்பொழுதும் பார்க்கலாம். மறைந்து ஒளிந்து கொண்டு கருத்து வைத்தோர், பேச்சுகளையும் கூற்றுகளையும் பார்க்கலாம்.

    இன்று தமிழ் விக்கி 2.4 மில்லியன் சொற்களுக்குக் கூடுதலான ஒன்றாகவும், 15,000 கட்டுரைகளையும் தாண்டி வளர்ந்துவரும் ஓர் அரிய படைப்பு. அதன் வளர்ச்சியில் நானும் பங்காற்றும் வாய்ப்பு கிடைத்ததை எனது பெரும் பேறாக நினைக்கிறேன். நான் செலவழித்த நேரம் எனக்குத்தான் தெரியும். “ஆட்டம்” என்றெல்லாம் ஏசும் நீங்கள் நடுநிலை நின்று கருத்துகளைச் சற்று எண்ணிப்பாருங்கள்.

    இன்னும் ஒருசிலர், Nazisim, Fascism, Psychopath, Fundamenatalism என்றும் திட்டித் தீர்த்தாயிற்று. இன்னும் புதிய சொற்களையும் அவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன் 🙂

    முதுகுன்றம் என்னும் ஊர்ப்பெயரை விருதாச்சலம் என்று மொழிபெயர்த்துத் தமிழர் மீதே திணித்தது திணிப்பிலை. திருவரங்கம் என்னும் ஊரின் பெயரைத் தவறுதலாக ஸ்ரீரங்கம் என்று பெயர்த்துத் தமிழர் மீதே திணித்தது திணிப்பில்லை, ஆர்க்காடு என்பதைக் கூட ஷடாரண்யம் என்று எழுதித் திணிக்க முயன்றது , பாலாறு என்பதை க்ஷீரநதி என்று கூட எழுத முற்பட்டது அதெல்லாம் திணிப்பில்லை. வலிந்து தமிழர் ஊர்ப்பெயர்க்ள், ஆறுகளின் பெயர்கள் முதலானவற்றையும் , வேறு தமிழல்லாதனவற்றையும் – அதுவும் **தமிழில்** எழுதும்பொழுது – தமிழில் திணிப்பது தவறில்லை, ஆனால் தமிழில் தமிழ்ச்சொற்களில் எழுதுவது திணிப்பு!!

    சரி, பறவை, புள் என்னும் சொற்கள் இருக்கும் பொழுதும் பட்சி என்று எழுதவேண்டாம், பக் ஷி என்றாவது எழுதலாமா என்றால், கூடாது – க்+ஷ் என்று கிரந்தம் கலந்து எழுதுவதும் கூடாது தனியாக க்ஷ் என்று ஓர் எழுத்து வேண்டும் என்பது திணிப்பில்லை. ஸ்ரி என்று கிரந்தம் கலந்தும் கூட எழுதக்கூடாது தனியாக ஸ்ரீ என்று ஓர் எழுத்து வேண்டும் என்பதெல்லாம் திணிப்பு இல்லை!

    எல்லாம் மொழிகளும் தங்கள் தங்கள் மொழிகளில் உள்ள எழுத்துக்களிலேயே எழுதுவது முறைமை என்று இருக்கும் பொழுது தமிழில் தமிழ் எழுத்துகளில் எழுதுவது எப்படித் தவறாகும். நேர்மையற்ற வாதம் தருவதும், முறையின்றி கடுஞ்சொற்களால் அத்து மீறி ஏசுவதும், பழிப்பதும் (முன்னரே சுவாமினாத தேசிகர் என்பவர் தொடக்கி வைத்ததுதான், இன்றும் தொடர்கின்றது) ஒரு சிலருக்கு உவப்பாக இருக்கின்றது போலும்.

    வலிந்து கெடுப்பேன். ஏன் என்று கேட்டாலோ, கூடாது என்று தடுத்தால் நீ Nazi, Fascist, Psychopath, Fundamenatalist. எப்படி வேண்டுமானாலும் கெடுப்பேன், கெடுப்பது என் உரிமை. கேள்வி கேட்கவோ, தடுக்கவோ, மறுக்கவோ உனக்கு ஒரு சிறிதும் உரிமை கிடையாது. அப்படித் தடுக்க முறப்ட்டால் நீ Nazi, Fascist, Psychopath, Fundamenatalist. என்ன சொல்ல அறுபுதம் அல்லவா இது!

    One man’s food is another man’s poison என்பார்கள். அது போலத்தான் மொழிகளும். ஒவ்வொரு செடிக்கும் கொடிக்கும், விலங்குக்கும் ஒவ்வொரு வாழ்முறைகள் இருக்கும், கெடுதி தரும் சூழல்கள், நலம் விளைவிக்கும் சூழல்கள் இருக்கும். மொழிகளுக்கும் அப்படித்தான். பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் கடலடிப் பவளச்சோலைகளைக் (Coral reef) கெடுப்பது எளிது. ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வரும் Redwood மரங்களையும் செம்மரக் காடுகளையும் வெட்டி வீழ்த்துவது எளிது. உள்ளத்துள் சற்றாவது அன்பு இருக்க வேண்டும்!

    செல்வா

  19. செ. இரா. செல்வகுமர் Avatar
    செ. இரா. செல்வகுமர்

    உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ,
    தமிழில் மிகவும் தேவையாக உள்ளதென்று
    கருதி இன்னும் ஒரு புது எழுத்தை சேர்த்துள்ளார்கள் .

    எனவே தமிழ் மிக விரைசலா வளரும் ஒரு மொழியாக்கும். அந்த எழுத்து ஶ என்பதாகும். உங்களுக்குப் புரியவில்லை என்றாலோ ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலோ நீங்கள் கோமணம் கட்டிக்கொள்ளப் பரிந்துரைப்பவர். மிகப் பிற்போக்குவாதி, Nazi, Fascist, Psychopath, Fundamenatalist. பேய், பிசாசு. ஆனால் உடனே ஏற்றுக்கொண்டு , நல்லவராய் சூழலுக்கு நலம் விளைவிக்கு ‘டயப்பர், உள்ளாடை எல்லாம் போட்டுக் கொள்ளும் அருமைத் தமிழராய் , தமிழை அழியாமல் காப்பவராய் இருக்கப் பழகினால் உங்களுக்குத்தான் நல்லது. தமிழ் நம் மொழியல்லவா. மறந்தும் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர் வைக்க மாட்டோம். மறந்தும் நாங்கள் தொடங்கும் வணிகம் மற்றும் தொழில்களுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டவே மாட்டோம். மறந்தும் நாங்கள் வாழும் குடியிருப்புகளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்ட மாட்டோம். கோயிலில் தமிழா, அடிப்போம். கூடவே கூடாது. அறமனறத்தில் தமிழா, ஐயோ, உங்களுக்கு ரோமன் லாவே தெரியாதா – அதெல்லாம் கூடாது. இசையில் தமிழா, ஐயோ தமிழில் பாடவே முடியாது. தெலுங்கிலோ பிற மொழிகளிலோதான் பாடலாம். தமிழ் மீது வெறுப்பு ஏதும் இல்லை. தமிழ் உகந்ததல்ல. தமிழில் கல்வி கற்கலாமா? நோ. அதற்கு ஆங்கிலம் அல்லது இந்தி. இரண்டாவது மொழியாகத் தமிழ். முடியாதே! சமசுகிருதம், அப்பறம் இந்தி. தமிழ் எழ்துக்கு. தமிழில் எழுதுவோர் பேசுவோரைப் பேய் பிசாசு என்று திட்டினாலும், நாங்கள் தமிழ் மீது மிகுந்த அக்கறை, அபிமானம் கொண்டவர்கள். தமிழ் வளரப் பாடுபடுகிறோம். நீங்கள் கோமணக்காரர்களாக, பேய், பிசாசாகவே இருங்கள். நாங்கள் சளைக்காமல் தமிழை grow பண்ணுவோம். இல்லை growthதுவோம். ஆமாம் இந்த பண்ணித்தமிழ் எனக்குப் பிடிக்காது. தூய தமிழிலேயே ‘குரோத்துவோம் என்று எழுதுவோம். இப்போதைக்கு இந்தப் பசும் பச்சைத் தமிழ் எழுத்தாகிய ஶ ஐ உடனே உள்வாங்கிக்கொள்வோம்.

    செல்வா

  20. விக்கிப்பீடியா தனி சொத்தல்ல என்பது தான் ஆறுதல். நீங்க என்ன வேணும் நாலும் பேசலாம். ஆனால் High Moral Ground எடுத்துக்கிட்டு பேசும் பொழுது தான் அதனைப் பற்றி பேச வேண்டியுள்ளது.

    தமிழ் விக்கியில் மற்ற 2000+ அதிகமானவர்கள் பணிபுரிபவர்களின் நேரம் மட்டும் வானத்திலிருந்தா வந்தது. யானையின் தந்தத்தை பெரிய பல் என்று எழுதியவர்கள் எத்துனைக் கட்டுரை எழுதினா என்ன? தமிழ் விக்கியில் 15000 கட்டுரைகளை எடுத்து பார்ப்போமா? எத்துனை உபயோகம் என்று? கட்டுரை எண்ணிக்கை மட்டும் தான் விக்கியில் பணியாற்றுபவர்களின் பங்களிப்புக்குச் சான்றா?

    நிர்வாகிகள் என்ற பெயரில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பைக் காட்டியதைத் தான் நான் ஆட்டம் என்றேன். ஏன் முதலில் கிரந்த எழுத்தைப் பற்றி கேள்வி எழுப்ப வேண்டும் என்பதை ஆர்க்காடு என்பதைக் கூட ஷடாரண்யம் என்று கூறுகிறார்களே என்பது திசைத்திருப்பும் வாதம். இவ்வளவு வருட விக்கி அனுபவம் கொண்ட நீஙகள் இதனை அழகாக கையாண்டிருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

    ஆங்கிலத்தில் எழுதும் உரையாடலுக்கு பதில் அளிக்கப் பட மாட்டா என்பதேல்லாம் விக்கி நிர்வாகிகளுக்கு அழகல்ல. அதே நிர்வாகி தான் 2005ல் எழுதிய உரையாடல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது என்ற முறண்பாட்டை உணர்வாரா?

    அதே போல் உங்களுக்கு நேர்மை என்று படுவது மற்றவர் இயல்பாக எழுதும் சொற்களை கேள்வி கேட்பது தவறு என்று உணர்வீர்களா என்றே இங்கு அனைவரும் மல்லுகட்டுகிறோம். ஜார்ஜியன் கால அட்டவணையை சார்ந்துள்ள தமிழர் வாழ்வில் கிரந்தம் மட்டும் திணிப்பு. அற்புதம்…

    தமிழ் அகர வரிசையில் கிரந்தம் மட்டும் தான் இன்று பிரச்சனையா? ஏன் தமிழ் எண்களை மட்டும் ஆண்டுகளுக்கு பயன்படுத்துங்களேன்? ஜனவரி , ஃபிப்ரவரி என்று ஏன் மாதங்கள் எழுதப்படுகின்றன ?

    திருவள்ளுவர் , ஆழ்வார்கள் தொல்காப்பியர் போன்ற சான்றோர்கள் 1 , 2 , 3 மற்றும் . ‘ “ : ; * எழுத்துக்கள் இல்லாமல் தான் எழுதினார்கள். ஏன் தனித்தமிழ் இவ்வெழத்துக்களைப் பொறுத்துக் கொள்கிறது? கிரந்தம் 1300 வருட வறலாறு உண்டு என்பதைக் கண்மூடித்தனமாக் நிராகரிக்கும் இக்கூட்டம் நிதர்சன வாழ்க்கைக்கு ஒவ்வாதக் கொள்ளையை ஏற்கச் சொல்வது தான் திணிப்பு.

    தமிழ் வருடப் பிறப்பையே கண்மூடித் திரக்கும் முன் மாற்றும் அரசாங்கமும் தமிழ் விக்கி நிர்வாகிகள் செய்யும் பஞ்சாயத்துகளும் ஒன்று தான்.

    உடனே நாங்க வற்புறுத்தலையே என்றால் அது போலத் தான் அரசாங்கமும் செய்கிறது. அவர்களும் வற்புறுத்தவில்லை! ஆனால் ஆதிக்கம் தன்னிச்சையாக செலுத்தப் படுகிறது.

    நிர்வாகிகள் அந்த நிலையை மீண்டும் மீண்டும் காட்டும் பொழுது கிரந்தம் கலந்து எழுத விழைபவர்கள் மிகவும் தயங்கவே செய்கின்றனர் என்பதை உணர மறுக்கின்றீர்கள்!

    இன்று தொடங்கிய சிரஞ்சீவியின் அரசயில் கட்சியின் பெயர் பிரஜா ராஜ்ஜியாம். போய் சொல்லுங்களேன் கிரந்தம் வேண்டாம்னு. அட அவர் தெலுங்கு… ஆக மற்ற எல்லா மாநில மொழிகளை விட நம்ம தமிழ் ஒசத்தி. அதனை நிலை நாட்ட தனித்தமிழ் , தொண்மை என்று பற்றிக் கொண்டு மற்றவர்களை நையாண்டி செய்யும் அளவிற்கு வந்துள்ளீர்கள்!

  21. செல்வா – தமிழில் கற்கலாமா – இதேல்லாம் பழையக் குருடிக் கதவத் தெரடிக் கதையா இருக்கு.

    ஹிந்துவில் வந்த தமிழ் மொழியில் படிப்பது கடினமா என்ற கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அமைச்சர் பொன்முடிதான் மணோன்மணியம் சுந்தனார் பல்கலைக்கழகத்திற்கு சென்று எல்லோரும் கல்லூரியில் ‘கட்டாயமாக ஆங்கிலத்தில் பேசுங்கள். நாம் நடைமுறைக்கு ஏற்றார் போல் வாழ வேண்டும்’ என்கிறார். ஆக அவருக்கு தெரியுது சோறு முதல்ல பிறகு கொள்கைனு.

    கிரந்த எழுத்துக்களைச் சேர்க்க சொல்பவர்களைத் தான் கிண்டல் செய்கிறேன் என்று தெளிவா சொன்னதால என் மறுமொழிகள் அது சம்மந்தமாக மட்டுமே இருக்கும்.

  22. செ. இரா. செல்வகுமர் Avatar
    செ. இரா. செல்வகுமர்

    முரளி கூறுகிறார்,

    //யானையின் தந்தத்தை பெரிய பல் என்று எழுதியவர்கள் எத்துனைக் கட்டுரை எழுதினா என்ன? //

    யாரும் யானை என்னும் கட்டுரையையும் அதன் வளர்ச்சி வரலாற்றினையும் நன்றாகப் பார்க்கலாம். முரளி கூறுவது உண்மையா என்று பார்க்கலாம்.

    யானையைப் பற்றிய கட்டுரை இங்கே:
    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88

    சிவக்குமார் என்னும் பங்களிப்பாளர் தொடங்கிய அக்கட்டுரையில் என்னுடைய முதல் பங்களிப்பு (17 பெப்ரவரி 2007 ):

    http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88&diff=104600&oldid=104585

    தந்தம் என்னும் சொல் அங்கு இருப்பதையும் நான் மாற்றாததையும் பார்க்கலாம்.

    விக்கிப்பீடியாவில் எல்லா நடவடிக்கைகளும் பதிவாகி இருக்கும். யார், எப்பொழுது, என்ன திருத்தம், மாற்றம் செய்தார் என்று யாரும் பார்க்கலாம். இதைப் பார்ப்பதற்கு நீங்கள் பதிவு செய்தவராக இருக்க வேண்டும் என்றில்லை.

    முரளி கூறுகிறார்:
    //தமிழ் விக்கியில் 15000 கட்டுரைகளை எடுத்து பார்ப்போமா? எத்துனை உபயோகம் என்று? கட்டுரை எண்ணிக்கை மட்டும் தான் விக்கியில் பணியாற்றுபவர்களின் பங்களிப்புக்குச் சான்றா?//

    ஓ கட்டாயம் பாருங்கள் 🙂 உங்கள் ம்டிவுகளைத் தெரிவியுங்கள். வளர்முகமாக கருத்துகளும் வழங்குங்கள். ஓராயிரம் கட்டுரைகள்தாம் பயனுடையவை என்றாலும் போதும் இல்லை 100, அல்லது, 5 அல்லது 10 என்றாலும் போதும். காலம் சொல்லும் அவை பயனுடையவையா அல்லவா என்று.

    //தமிழ் விக்கியில் மற்ற 2000+ அதிகமானவர்கள் பணிபுரிபவர்களின் நேரம் மட்டும் வானத்திலிருந்தா வந்தது.//

    எப்படியோ கண்டுபுடிச்சிட்டீங்க!
    பாராட்டணும்!

    நான் கிட்டத்தட்ட 8966 தொகுப்புகள் செய்துள்ளேன். பிற கட்டுரைகளில் பங்களித்தது போக, ஏறத்தாழ 520 புதிய கட்டுரைகளைத் தொடங்கி எழுதியுள்ளேன். விக்கியில் **நானும்** பங்காற்றினேன் என்றுதான் சொன்னேன். “அதன் வளர்ச்சியில் நானும் பங்காற்றும் வாய்ப்பு கிடைத்ததை எனது பெரும் பேறாக நினைக்கிறேன்.” என்று கூறினேன். என்னைவிடக் கூடுதலாகப் பங்களித்தவர்கள் 5-6 பேர்கள் உள்ளார்கள். அதில் நீங்களும் ஒருவராய் வருங்காலத்தில் இருந்தாலும் மகிழ்வேன். ஒரு கட்டுரையே ஒருவர் விக்கி போன்ற பொதுநல ஆக்கப்பணியில் எழுதியிருந்தாலும், அவரை நெஞ்சார வணங்குவேன்.

    செல்வா

  23. வினோத் ராஜன் Avatar
    வினோத் ராஜன்

    1000 ஆண்டுகளாகத் தமிழோட இருந்த கிரந்தத்தை ஒத்துக்கொள்ளாதவர்கள் இரண்டே நூற்றாண்டுகள் இலத்தீன மொழிகளோட ஒட்டுறவாடியாதால் வந்த , ; ‘ ” ? போன்ற இன்ன பிற

    குறிகளை பயன்படுத்துவது வேடிக்கைதான்.

    பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வருவதால் , . ‘ ‘ ? ! போன்றவை எல்லாம் சரியாகி விடுமா என்ன ?

    தொல்காப்பியமும் நன்னூலும் இதற்கு மட்டும் இலக்கணம் வகுத்துள்ளதா என்ன ? இது உயிரா, மெய்யா , மாத்திரை என்ன, புணர்ச்சி விதி என்ன ?

    ஏன் சொற்களிடையே இடைவெளி விட்டெழுதுவதும் இலத்தீன பழக்கம் தானே ?

    ஓலைச்சுவடிகளும் கல்வெட்டுகளிலும் இடைவெளி இல்லாமல் தானே இருக்கின்றன.

    தொல்காப்பியரும், திருவள்ளுவரும், கம்பரும், பவனந்தி முனிவரும் இதெல்லாம் இல்லாமல் தானே தமிழை எழுதினர். அவர்களே அப்படி எழுதிய போது நாம அப்படி எழுத முடியாதா என்ன ? நிச்சயமாக முடியும். ஆக தமிழ்மொழிக்கு தொடர்பில்லாத இலத்தீன குறியீடுகளை புறக்கணிப்போமாக. தமிழுக்கு அது தேவையில்லை.

    கொஞ்சம் கூட தமிழ் மொழியில் வடமொழி தாக்கம் இருக்கூடாது எனக் கூறிய தமிழ்க்காவலர்க்ள் இலத்தீன தாக்கத்தை பற்றி வாய் திறவாதது வேடிக்கை.

    மேற்கூறியதெல்லாம் எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு, தங்களைப் போன்ற தனித்தமிழ் அதிமேதாவிகளுக்கு உங்கள் விருப்பப்படியே தனித்தமிழில் எழுதியுள்ளேன்.

    —-
    ௲ஆண்டுகளாகத்தமிழோடிருந்தகிரந்தத்தையொத்துக்கொள்ளாதவர்களிரண்டேநூற்றாண்டுகளிலத்தீனமொழிகளோடவொட்டுறவாடியாதால்வந்ததனித்தமிழல்லபோன்றவின்னபிறகுறிகளைப்

    பயன்படுத்துவதுவேடிக்கைதான்பலநூற்றாண்டுகளாகப்பயன்படுத்திவருவதால்போன்றவையெல்லாஞ்சரியாகிடுமாவெஎன்னதொல்காப்பியமும்நன்னூலுமிதற்குமட்டுமிலக்கணம்வகுத்துள்ளதா

    வென்னிதுவுயிராமெய்யாமாத்திரையென்னபுணர்ச்சிவிதியென்னயேன்சொற்களிடையேயிடைவெளிவிட்டெழுதுவதுமிலத்தீனப்பழக்கந்தானேவோலைச்சுவடிகளுங்கல்வெட்டுகளிலுமிடைவெ

    ளியில்லாமல்தானேயிருக்கின்றனதொல்காப்பியருந்திருவள்ளுவங்கம்பரும்பவனந்திமுனிவருமிதெல்லாமில்லாமல்தானேதமிழையெழுதினரவர்களேயப்படியெழுதியபோதுநாமப்படியெழுதமுடி

    யாதாயென்னநிச்சயமாகமுடியுமாகதமிழ்மொழிக்குதொடர்பில்லாதிலத்தீனகுறியீடுகளைபுறக்கணிப்போமாக.தமிழுக்கதுதேவையில்லைகொஞ்சங்கூடதமிழ்மொழியில்வடமொழிதாக்கமிருக்கூ

    டாதெனக்கூறியதமிழ்க்காவலர்களிலத்தீனதாக்கத்தைப்பற்றிவாய்திறவாததுவேடிக்கை.

    —-

    ஆக, இனி தமிழ்மொழியின் ஒப்பற்ற காவலர்கள் தமிழ்மொழியை வளர்ச்சியையே தன் வளர்ச்சியாக கருதுபவர்கள் தமிழுக்கு உயிரை மட்டுமல்லாத பிறவற்றையும் கொடுத்திடும் கொடை

    வள்ளல்கள் யாவரும் இனி இலத்தீனக்குறியீடுகளை பயன்படுத்தமாட்டர் என இதனால் சகலருக்கும் அறிவிக்கப்படுகிறது.

    தமிழ் மொழியில் இலக்கணமில்லாத வேற்றுமொழிக்குறியீடுகளாம் இலத்தீன குறியீடுகளை முற்றிலும் தவிர்த்து இனி தொல்காப்பியரும், திருவள்ளுவரும் பிறரும் வகுத்த வழியில்

    தனித்தமிழில் எழுதுவார்களாகளாக..

    மன்னிக்கவும், திருவள்ளுவர் தனித்தமிழ்வாதி என்று தவறாக எழுதிவிட்டேன்..பின்ன,

    அகராதி கலப்புத்தமிழ் –> அகரமுதலி தனித்தமிழ் ஆக,

    அவர்,

    அகர முதல எழுத்தெலாம் அதி
    பகவன் முதற்றே உலகு

    என்று வடமொழி கலந்தெல்லவா எழுதியுள்ளார்..

    ச ச இவர்களுக்கு தெரிந்த தனித்தமிழ் கூட பாவம் திருவள்ளுவருக்கு தெரியவில்லை போலும். என்ன கொடுமை சரவணன், இது!!

    திருவள்ளுவருக்கு மறுஜென்மம் எடுத்து தான் செய்த இந்த மகாபாவத்துக்கு இவர்களிடத்தில் தனித்தமிழ் கற்று் (இதை விட பெரிய தண்டனை வேண்டுமா!!!) பிறவிப்பயனை எய்துவாராக.

  24. வினோத் ராஜன் Avatar
    வினோத் ராஜன்

    *திருததம்

    அதி –> ஆதி – தட்டச்சு பிழை

  25. வினோத் ராஜன் Avatar
    வினோத் ராஜன்

    உணர்ச்சிகளையும் இன்ன பிறவற்றையும் குறிக்க நாம் ஏன் வேற்று மொழி குறியீடுகளை சார்திருக்க வேண்டும். எல்லாவற்றை எழுதிக்காட்ட வேண்டும் என்ற விதி உள்ளதா என்ன.

    இது கணினி இணைய யுகம்

    அச்சூடகங்களைக் காட்டிலும் இணைய ஊடகத்தில் ஒலிப்பைச் சுட்ட எழுத்துகளின் தேவை குறைவு. ஒலிக்கோபுகள் மூலமே ஒலிப்பை எளிதாகச் சுட்ட முடியும். வருங்காலம் முழுக்க முழுக்க இணைய மயமான உலகாக இருக்கும் என்பதால் ஒலிப்பைக் கற்பதற்கு எழுத்துகளை மட்டும் தங்கியிருக்கத் தேவை இல்லை.

  26.  Avatar
    Anonymous

    காயமே இது பொய்யடா இது வெறும் காற்றடைத்த பையடா…

    உங்கள் 5000 கட்டுரைகள் மற்றும் 8990 பகுப்புகளுக்கு இங்கே ஒரு எடுத்துக்காட்டு: யானையின் பக்கம் இங்கே

    http://ta.wikibooks.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_-_%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88

    குழந்தைகளுக்கு இவ்வளவுத் தவறா யாரும் சொல்லித் தர இயலாது!

  27. காயமே இது பொய்யடா இது வெறும் காற்றடைத்த பையடா…

    உங்கள் 5000 கட்டுரைகள் மற்றும் 8990 பகுப்புகளுக்கு இங்கே ஒரு எடுத்துக்காட்டு: யானையின் பக்கம் இங்கே

    http://ta.wikibooks.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_-_%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88

    குழந்தைகளுக்கு இவ்வளவுத் தவறா யாரும் சொல்லித் தர இயலாது!

    இவர்கள் கையில் தமிழ் விக்கி இருக்கு. இந்த பதிவை படிப்பவர்கள் அனைவரும் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம்…

  28. செல்வா – விக்கியில் பணியாற்றுகிறேன் என்பதை நல்லா மார் தட்டி சொல்லுங்களேன். நல்ல எல்லோரும் தெரியட்டுமே. இதில் பணிய வேண்டிய அவசியம் எதுவுமில்லை. என்னுடைய வாழ்த்துக்களும்.

    ஆனால் ‘ஆட்டம்’ என்பது எதற்கு சொன்னேன் என்பதைத் தெளிவாக முன்பே விளக்குயுள்ளேன். என்னுடைய பேச்சு தனித்தமிழுக்கு ஆதரவுத் திரட்டுவோரிடம் தமிழ் விக்கி சிக்கியுள்ளது.

    விக்கிப்பீடியா நிலை சாரா தளம் மற்றும் இது மொழி சீர்த்திருத்தும் மையமல்ல என்று எழுத்தியவர்கள் இன்று மற்றவர்கள் எடுக்கும் நிலையை நக்கல், நையாண்டி செய்ய தொடங்கிவிட்டீர்கள்!

    இனி எப்படி தமிழ் விக்கி நடுநிலையுடன் விளங்கும்? இதுவே மிகவும் மிக்கியமான கேள்வி.

  29. மிக்கயம் அல்ல முக்கியம்

  30. வினோத் ராஜன்,

    அகர் முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.

    என்பதில் ‘ஆதி’ தமிழா என்று கேட்டிருக்கிறீர்கள்.

    அங்கு ‘ஆதி பகவன்’ என்பது சமண சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களில் முதல் தீர்த்தங்கரரான ஆதிநதரைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன்.

    சமணர்கள் தங்கள் மதப் பெரியோர்களை பகவன் என்றே இன்றும் அழைக்கின்றனர்.

    உலகம் ரிஷ்பதேவர் என்னும் தீர்ந்தங்கரிடமிருந்தே தோன்றியதாக சமணர் கதைகள் இருக்கின்றன. இந்த ஆதி நாதர் புனைவு பாத்திரமாகவோ அல்லது பகவனாக அலங்கரிக்கப்பட்ட மனிதராகவோ இருக்கலாம்.

    மகாவீரர் 24ஆவது தீர்த்தங்கரர் என்பது குறிப்பிடத்தக்கது.

  31. செ. இரா. செல்வகுமார் Avatar
    செ. இரா. செல்வகுமார்

    தமிழ் மொழியில் 1,2,3 ; ‘ ” ? முதலான குறிகளை எடுத்துக்கொண்டிருக்கிறோமே, சொற்களுக்கிடையே இடம் விட்டு எழுத பழகி இருக்கிறோமே என்று வினோத்தும் வேறு சிலரும் கேட்கிறார்கள்.

    ஒன்றை எடுத்துக்கொண்டால் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ள வேண்டும் . ஒன்றை நீக்கினால் எல்லாவற்றையும் நீக்க வேண்டும் என்பதுதான் Extremism.

    தமிழ் மொழியில் எழுத்து வடிவில் காலம்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ள, நிறுத்தக்குறிகள் முதலான சிறப்புக்குறிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன, ஆயிரம் ஆயிரமாய் பிறமொழிச்சொற்கள் கடனாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவை தமிழ் மொழியின் திறந்த மனப்போக்கிற்கு அடையாளம் ஆனால் ஒன்றை எடுத்துக்கொள்வதால் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது Extremism.

    சொல்லப்போனால், தமிழ் மொழியைப் போல, வேற்று மொழி Noun, Verb, Adjective, Adverb, partial phrases,, whole sentences என்று எல்லாவகைச் சொற்களையும் கலப்புகளையும் ஏற்றுப் பேசும் மொழிகள் வேறு ஏதும் உள்ளதா என்று அறியேன். இந்த தனித்தமிழ் வாதம், போக்கு என்பதெல்லாம் அளவு கடந்த சாடல். வினோத் சம்யுக்தாக்ஷரம் என்று விக்கி போன்ற பொது ஆக்கங்களில் எழுதினால், நான் கட்டாயம் கூட்டெழுத்து என்று திருத்துவேன், ஏன் எனில், கூட்டெழுத்து என்பது மிகப்பலருக்கும் சற்று எளிதாகப் புரியும். நல்ல தமிழில் , பலருக்கும் புரியும் பொது மொழியில் எழுதினால் தனித்தமிழ் என்று சாடுவது எப்படி முறையாகும்?

    ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் தமிழ்ச்சொல்லாகிய அணைக்கட்டு என்னும் சொல்லை Anicut என்று எடுத்தாண்டார்கள். ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி 1968 ஆம் ஆண்டுப் பதிப்பில் பார்த்தால் இருக்கும். ஆனால் இன்று அகராதிகளில் இல்லை. மிக அண்மையில் (1980களில்) ஆங்கிலத்தில் perestroika , glasnost முதலான சொற்கள் ஏற்றுப் பயனபடுத்தப்பட்டன, ஆனால் இன்று restructuring (rebuilding), openness என்னும் சொற்கள் ஈடாகப் பெரும்பாலான இடங்களில் பயன்படுகின்றன. ஆனால் perestroika , glasnost ஆகிய சொற்கள் எங்கும் ஓடிவிடவில்லை, அவை இன்றும் பயன்பாட்டில் உள்ளன ஆனால் restructuring (rebuilding), openness என்னும் சொற்கள் பொது மக்களுக்கு இன்னும் எளிதாகப் புரியும். இதனை தனிஆங்கிலப் போக்கு, என்று சாடுதல் பொருந்தாது. ஓர் எடுத்துக்காட்டுக்காகச் சொன்னேன். இதனால் ஆங்கிலத்தில் செய்வதெல்லாம் நாமும் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை.

    செல்வா

  32. செ. இரா. செல்வகுமார் Avatar
    செ. இரா. செல்வகுமார்

    பகவன் என்னும் சொல்லை சிவனிய, மாலிய நூல்களில் எத்தனையோ முறை ஆண்டுள்ளார்கள். ஆதி என்னும் சொல்லும் நூற்றுக்கணக்கான இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன. ஆதிநாதா என்னும் சொல்லும் ஆளப்பட்டுள்ளது. இந்த ஆதிபகவன் என்னும் சொல் சமணத்தோடு தொடர்புடையதல்ல. சிவனிய, மாலியத்தோடும் தொடர்புடையதல்ல. முதல் (அறிவு) ஒளியூட்டிய முதற்கடவுள் என்னும் பொருள் கொண்டது. அவர் சமணராய் இருந்தால், நேரடியாக கூறியிருப்பார். ஆதி என்னும் சொல்லும் சமசுகிருதம் அல்ல. இது –> ஈது என்பது போல அது–>ஆது –> ஆதி (பார்க்க்க செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி பக். 93). ஆதி என்னும் சொல்லாட்சி பிற இந்திய-ஐரோப்பிய மொழிகளில் இல்லை என்கிறது இவ் அகரமுதலி.

    ஆனால் சமசுகிருதச் சொல்லென்றாலும் த்வறில்லை. தமிழில் ஆளப்படும் சொல். அகராதி, அகரமுதலி ஆகிய இரண்டும் ஒரே பொருளைக் குறிக்கும் இரு சொற்கள். இப்படித் தமிழில் பல சொற்கள் உள்ளன.

    செல்வா

  33. பாலாஜி Avatar
    பாலாஜி

    >> அவர் சமணராய் இருந்தால், நேரடியாக கூறியிருப்பார்.

    எப்படி? “சமணக் கடவுளே” என்றா? “ஆதி பகவன்” என்பது அவர் எழுதிய காலத்தில் ரிஷபதேவரை நேரடியாகக் குறிக்கவில்லை என்று எப்படி சொல்கிறீர்கள்?

    அந்த அதிகாரத்தில் உள்ள மற்ற குறள்களையும் படிப்போருக்கு திருக்குறள் எழுதியவர் சமணர் என்று எளிதாக விளங்கும். அந்த விவாதத்தை இங்கு மீண்டும் செய்வது தேவையற்றது.

    ஆதி, பகவன் ஆகியவை தமிழில் பரவலாக பயன்படுத்தப்படும் சொற்களே. ஆனால் முதல் குறளில் ‘ஆதி பகவன்’ என்பது பெயரைக் குறிக்கவே பயன்படுகிறது என்று கருதுகிறேன்.

    எப்படியாகினும் ஆதி என்ற சொல்லை திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளதில் எந்த ஆச்சரியமுமில்லை என்று வினோத் அவர்களுக்கு சொல்லவே மேலுள்ளவற்றைக் குறிப்பிட்டேன்.

  34. ‘1,2,3..’ தமிழல்ல… ‘, ; ‘ ” ?’ தமிழல்ல… ஆனால் அவற்றைத் தமிழில் பயன்படுத்துகிறோம். வேற்றுமொழிக்காரரின் எண்ணையும் குறியீட்டையும் பயன்படுத்தும் தமிழர்கள் ஏன் கிரந்தத்தை மட்டும் பயன்படுத்தத் தயங்க வேண்டும் என்ற வாதங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கன அல்ல என நினைக்கிறேன்.

    ‘1,2,3..’ என்ற நவின(அரபு) எண்களுக்கு மூலமே க,உ,ங.. என்ற தமிழ் எண்களே என்ற உண்மை வரலாறு வாழ்ந்துகொண்டிருக்கும் போது, 1,2,3..ஐத் தமிழில் பயன்படுத்துவதில் தவறொன்றுமில்லை.

    அடுத்து, பழந்தமிழ் நடை இன்றைய உரைநடை போல் இல்லாமல் வெண்பா, செய்யுள் நடையில் இருந்ததால் ‘, ; ‘ ” ?’ என்பவைத் தேவைப்பட்டிருக்கவில்லை. பின்னாளில் உரைநடைத்தமிழ் வளர்ச்சிப் பெற்றதால் நிறுத்தக்குறிகள் தமிழோடு இணைந்துவிட்டன. அவை, குறியீடுகள் தானே தவிர எழுத்துகளோ ஒலியன்களோ அல்ல. அவை எந்த சமயத்திலும் தமிழின் மரபை சிதைப்பதில்லை; தமிழின் வேரை அறுப்பதில்லை.

    ஆனால், கிரந்தம் அப்படியல்ல. அது எழுத்து! அது ஒலியன்! அதனை சேர்த்தால் தமிழின் மரபு கண்டிப்பாகக் கெடும். மொழிமரபு கெட்டால் இனமரபு கூடவே கெடும். பிறகு தமிழ் தமிழாக இராது..! தமிழன் தமிழனாக இரான்..! தமிழின் மரபைச் சிதைக்கும்; தமிழின் வேரை அறுக்கும் கிரந்தத்தைத் தலைமுழுகுவதே தமிழுக்குச் சிறப்பு.

    தமிழில் வந்து ஒட்டிக்கொண்டு உயிர்வாழ நினைக்கும் கிரந்தத்திற்கு வெட்கமில்லையா? தமிழில் வந்து கிரந்தத்தைப் புகுத்தி வாழ வைக்க நினைப்பவர்க்கு நாணமில்லையா?

    ஆதி என்பது வடமொழியே என்று பலகாலமாகப் பலரும்.. ஏன் பெரும் அறிஞர்களும்கூட சொல்லிவந்துள்ளனர். ஆனால், அது தூய தமிழ்ச் சொல்லே என அருளியார், இரா.இளங்குமரனார், முதலான தமிழக மொழியறிஞர்களும் இர.திருச்செல்வம் போன்ற மலேசிய மொழியறிஞர்களும் ஐயத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளனர். மேலும், திருக்குறள் பிறமொழிக் கலப்பில்லா தனித்தமிழ் நூல் எனவும் அறிஞர்கள் நிறுவி பல காலம் கடந்துவிட்டன. ஆகவே, அயலானிடத்திலிருந்து திருவள்ளுவர் சொற்களை இரவல் பெற்றுள்ளார் என்ற பேச்சுக்கே இடமில்லை.

    1.//செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி பக். 93). ஆதி என்னும் சொல்லாட்சி பிற இந்திய-ஐரோப்பிய மொழிகளில் இல்லை என்கிறது இவ் அகரமுதலி//

    2.//தமிழில் ஆளப்படும் சொல். அகராதி, அகரமுதலி ஆகிய இரண்டும் ஒரே பொருளைக் குறிக்கும் இரு சொற்கள். இப்படித் தமிழில் பல சொற்கள்//

    ஆகிய இரு கருத்துகளில் உடன்படுகின்றேன்.

  35. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    இந்த இடுகையில் கிரந்தம் குறித்து மட்டும் உரையாடல் மேற்கொள்ள வேண்டுகிறேன். தனித்தமிழ், ஆதி தமிழா இல்லையா, ஆதி சமணச் சொல்லா, விக்கிப்பீடியா தனித்தமிழ்க்காரர்கள் கையில் இருக்கிறதா, செல்வா எழுதிய கட்டுரைகள் தரமானவை இல்லை போன்ற தனியாள் சாடல்கள் எல்லாம் உரையாடலைத் திசை திருப்புவனவாகும்.

    **

    1. தமிழ் எண்களை விடுத்து தமிழ் இலக்கணத்தில் இல்லாத 0 முதல் 9 வரையான எண்கள், ? ! ; , போன்ற குறிகளை ஏற்றுக் கொள்ளும் போது ஏன் கிரந்த எழுத்துகளை மட்டும் ஏற்றுக் கொள்ள கூடாது?

    * 0 முதல் 9 வரையான எண்களும், ? ! குறியீடுகளும் அகர வரிசையில் சேர்வதில்லை. கிரந்தம் என்பது எழுத்து; குறியீடு அல்ல. அகர வரிசையில் சேர்க்கப்படுகிறது. அகர வரிசை மாற்றம் மொழியின் இயல்பைச் சிதைக்கிறது.

    * இவ்வெண்களும் குறியீடுகளும் பேச்சு வழக்கில் மாற்றம் உண்டாக்குவதில்லை. ஆனால், கிரந்த எழுத்து இருப்பு பேச்சிலும் தமிழல்லா ஒலிகளைப் பயன்படுத்த வலியுறுத்துகிறது. பேசா இயலாதவர்களையும் மறுப்பவர்களையும் பழிக்கிறது.

    * இவ்வெண்களும் குறியீடுகளும் உலகம் முழுவதற்கும் பொதுவானவை. கிரந்த எழுத்துகள் அத்தகையனவா?

    * 0 முதல் 9 வரையான எண்களைப் புறக்கணித்து தமிழ் எண்களில் எழுதினால், இவ்வெண்களைக் கண்டுபிடித்தோர் தங்களை அவமானப்படுத்தியதாக சண்டைக்கு வர மாட்டார்கள். கிரந்தம் விடுத்தால் மட்டும் ஏன் சண்டைக்கு வருகிறார்கள்?

    2. கிரந்தம் 1000 ஆண்டுகளுக்கு மேலாக கல்வெட்டுகளில் இருக்கிறதே?

    * கல்வெட்டுகள் பெரும்பாலும் அரசர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்டு எழுதப்படுவன. கடந்த 1000 ஆண்டு கால தமிழர் வரலாற்றில் சமயத்தாக்கம், வடமொழித்தாக்கம் இல்லா அரசர்கள் எத்தனை பேர்? வடமொழி, கிரந்தம் கலந்து எழுதக்கூடிய கல்வியறிவு பெற்றிருந்தோர் மொத்த தமிழ் மக்கள் தொகையில் எத்தனை விழுக்காடு? இவர்கள் எழுதியது எப்படி ஒட்டு மொத்த தமிழ் மக்களின் எழுத்து வழக்குக்குச் சான்றாகும்? சென்னையில் நான்கு அலுவலகங்களில் ஆங்கில அறிக்கைகள் இருப்பதைக் காட்டி தமிழகம் முழுக்க மக்கள் ஆங்கிலத்திலேயே எழுதியும் பேசியும் வருகிறார்கள் என்று சொல்லலாமா? கல்வெட்டுகள் கிரந்தம் இருந்ததை உறுதிப்படுத்துகின்றனவே தவிர, அவற்றின் புழக்கம், பரவலைப் பற்றி தெளிவுபடுத்தவில்லை.

    * கல்வெட்டுகள் எழுதிய அதே காலத்தில் உள்ள தமிழ் இலக்கியங்களில் மட்டும் ஏன் கிரந்த எழுத்துகளைக் காணோம்? இவற்றில் தேவாரங்கள், பாசுரங்கள் போன்ற சமய இலக்கியங்களும் அடக்கம்.

  36. நாட்டாமை சொல்லிட்டாரு கேட்டுக் கொள்ளவும். இன்று கிரந்த வேண்டாம். நாளை பேச்சுத் தமிழ் தமிழரை மரபைக் கொச்சைப் படுத்துகிறது. அதுவும் வேண்டாம். பேச்சுத் தமிழில் இல்லாத ஒலிப்பானகளா? அதெல்லாம் கேட்காதீங்க!

    சிம்பு போல வாதத்தை கட்டம் கட்டிக் கலக்குபவர் எனவே அவர் கூறும் மிக முக்கியமான கேள்விகள், ஞாயங்கள், தர்மங்கள் இடையில் மட்டும் பதில் சொல்லவும்.

    சரி தானே!

    அப்ப இந்த பதிவு நையாண்டி பதிவில்லையா?

    இது போல் இரண்டுங்கட்டான் தனமா பதிவெழுதுபவர்களை (கருத்துக்களை(?))விக்கிப்பீடியாவில் Trolls என்று அழைப்பர்.

    அனைவருக்கும் விடுக்கும் வேண்டுகொள் DON’T FEED THE TROLL

  37. செல்வா – உங்கள் மனத்தை புண் படுத்தியிருந்தால் மன்னிக்கவும். என் விமர்சனம் விக்கி நிர்வாகிகள் இவ்வளவுத் தீவிரமா தனித்தமிழ் பக்கம் சாய்ந்து தங்கள் வலைப்பதிவுகளில் எழுதுவது, அவர்களை நடுநிலையான நிர்வாகிகள் என்று ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளது.

    அது மட்டுமல்ல இப்பதிவுகளில் வரும் பதில்கள் பின்னர் விக்கியில் மீண்டும் வாதமாக வைக்கப் படப்போகிறது என்பது எனது அச்சத்தைக் கூட்டுகிறது.

    இவ்வகைப் பதிவுகள் (நையாண்டி) மற்றவர்களை புண் படுத்தலாம் என்ற எண்ணத்தை மறந்து எழுதியதால் என் எழுத்தும் சற்று எல்லை மீறியிருக்கலாம்.

    கிரந்தம் பதிவில் பாலாஜி கூறாதக் கருத்துக்களையா நான் கூறிவிடப் போகிறேன். அல்ல வினோத் சற்றே கடிந்த சொற்களைப் பயன் படுத்துவதால் அவருடைய வாதம் தவிர்க்கப் பட வேண்டியதுமல்ல.

    ரவி – நீங்கள் சொன்னது போல் உயிரியல் ஆராய்ச்சியாளர் மொழி பரிசோதனன என்ற பெயரில் மீண்டும் மீண்டும் அசட்டுத்தனமான பதிவுகளை எழுதி வருவது வருந்தத்தக்கது.

    மற்றும்!

  38. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    முரளி – விக்கி முயற்சிகள் அனைத்துமே கூட்டு முயற்சிகள். ஏதேனும் ஒரு கட்டுரையில் பிழை, குறை இருந்தால் திருத்தி மேம்படுத்த உதவுங்கள். குறைந்தபட்சம் அப்பக்கங்களின் பேச்சுப் பக்கங்களில் சுட்டிக் காட்டுங்கள். இப்படி எவ்வகையிலும், உதவ, பங்களிக்க விருப்பம் இன்றி வெறும் நேர்மையற்ற விமர்சனங்கள் மட்டும் வைப்பது சரியல்ல.

    //கிரந்தத்தில் எழுதபவர்களை நாங்கள் எதுவும் சொல்லவில்லையே என்ற உயர் நிலை ஒழங்ககர்கள் போல பேசிவிட்டு ஏன் ஸ்ரீநிவாசன் என்று எழுதுகிறீர்கள்? ஏன் மஞ்சுஸ்ரீ என்று எழுதுகிறீர்கள் என்று முதலில் கேள்வி கேட்டவர்கள் யார் என்றும் அந்த விக்கிப்பீடியா உரையாடலை படிப்பவர்க்கு நன்கு விளங்கும்.//

    ஏன் எழுதுகிறீர்கள் என்று கேள்வி கேட்டோமே தவிர, ஒரே ஒரு இடத்திலும் கூட வலுக்கட்டாயமாக கட்டுரைத் தலைப்பை மாற்றவில்லை என்பதே விக்கிப்பீடியர்களின் நடுநிலைக்குச் சான்று. இப்படி எழுதினால் நன்றாக இருக்குமே என்று வேண்டுகோள்கள் மட்டுமே விடுக்கப்பட்டன. வினோத் எழுதிய நூற்றுக்கணக்கான பக்கங்கள் இன்னும் அப்படியே உள்ளன. விக்கிப்பீடியா போன்ற கூட்டு முயற்சிகளில் கேள்வி கேட்டல், உரையாடல் வழமையான நடைமுறை. ஒன்றுமே கேட்காமல், எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள் என்று வாயைப் பொத்திக் கொண்டு இருப்பது அடிமைகளின், சொரணை அற்றவர்களின் இயல்பு.

    தமிழ் விக்கிப்பீடியாவின் பெரும்பான்மை பங்களிப்பாளர்கள், தனிப்பட்ட முறையில் வேறு கருத்துகளைக் கொண்டிருந்தாலும், தமிழ் விக்கிப்பீடியாவின் ஆயிரக்கணக்கான பக்கங்களில் இன்னும் கிரந்த எழுத்துகளும் பிற மொழிச் சொற்களும் இருக்கின்றனவே என்பதே வெறித்தனமான எந்த ஒரு கொள்கையும் அங்கு செயல்படுத்தப்படவில்லை, விக்கிப்பீடியர்கள் நடுநிலையானவர்கள் என்பதற்குச் சான்று.

    கிரந்தம் குறித்த கொள்கை ஏதும் வரும் வரை வினோத் விரும்புகிற படியே எழுதட்டும் என்று நான் கூறிய கருத்து இங்கே. இன்று வரை ஒரு கொள்கை முடிவும் எடுக்க வில்லை. ஏதோ தான் இருப்பதால் தான் த.வியில் கிரந்தத்தைத் தாங்கிப் பிடிப்பதாக வினோத் இங்கு கூறியுள்ளார். அவர் விக்கியை விட்டு வெளியேறிய பின்னும் கிரந்தப் பயன்பாடு தமிழ் விக்கிப்பீடியாவில் இருப்பதை கண்ணும் நேர்மையும் உள்ளவர்கள் காணலாம்.

    //ஆங்கிலத்தில் எழுதும் உரையாடலுக்கு பதில் அளிக்கப் பட மாட்டா என்பதேல்லாம் விக்கி நிர்வாகிகளுக்கு அழகல்ல. அதே நிர்வாகி தான் 2005ல் எழுதிய உரையாடல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது என்ற முறண்பாட்டை உணர்வாரா?//

    தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ் எப்படி எழுத வேண்டும் என்று கேள்வி கேட்பவருக்கு, அந்தக் கேள்வியைத் தமிழில் எழுதிக் கேட்கும் அளவாவது தமிழ் அறிவு இருக்க வேண்டுமா இல்லையா?
    நீ இப்படித் தான் தமிழை எழுத வேண்டும் என்று பெரிய வெ.வெ மாதிரி ஆங்கிலத்தில் கருத்து சொன்னால், அதற்குரிய மரியாதை தான் கிடைக்கும்.

    //ஜார்ஜியன் கால அட்டவணையை சார்ந்துள்ள தமிழர் வாழ்வில் கிரந்தம் மட்டும் திணிப்பு. அற்புதம்…//

    அடி, பர்லாங்கு, கெசம், மைல் எல்லாத்தையும் விட்டு ஏன் மீ, கிமீக்கு மாறினீங்க?
    நாழிகை கணக்கை விட்டு ஏன் நொடி, மணிக்கணக்கு மாறினீங்க?
    சித்திரை, வைகாசி விட்டு ஏன் சனவரி, பெப்ரவரிக்கு மாறினீங்க?

    எல்லாத்துக்கும் ஒரே விடை – சித்திரை, வைகாசி என்று உள்ளூர் நாட்காட்டி, அடி-அங்குலம்-நாழிகை போன்ற உள்ளூர் அளவைகளைப் பயன்படுத்துபவர்களை யாரும் உலக நடைமுறைகளைப் பயன்படுத்தச் சொல்லிக் கட்டாயப்படுத்தவில்லை. பயன்படுத்தாவிட்டால் பழிப்பதில்லை. உள்ளூர் அளவைகளை இன்னும் பயன்படுத்துபவர்கள் சுதந்திரமாக பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது தான் வேறுபாடு.

    //திருவள்ளுவர் , ஆழ்வார்கள் தொல்காப்பியர் போன்ற சான்றோர்கள் 1 , 2 , 3 மற்றும் . ‘ “ : ; * எழுத்துக்கள் இல்லாமல் தான் எழுதினார்கள். ஏன் தனித்தமிழ் இவ்வெழத்துக்களைப் பொறுத்துக் கொள்கிறது?//

    இதற்கு முந்தைய மறுமொழியிலேயே விரிவாக விடை சொல்லிவிட்டேன்.

    character, letter, symbols, numbers என்பவற்றுக்கான வேறுபாட்டை மறைத்து விதண்டாவாதம் செய்ய வேண்டாம். letter எனப்படும் எழுத்து, ஒலியன்களே மொழியின் இயல்பை வரையறுக்கின்றன. எண்களையும் குறியீடுகளையும் ஏற்றுக் கொண்டதால் மொழி எந்த விதத்திலும் சிதையவில்லை.

    1 என்று எழுதினால் தமிழில் ஒன்று. ஆங்கிலத்தில் one. இந்தியில் ஏக். 1 என்ற குறியீட்டுக்கு மதிப்பீடு மட்டுமே உண்டே தவிர, அதற்கென ஒலி கிடையாது. அதைத் திணிப்பதும் கிடையாது. ஆனால், கிரந்த எழுத்துகளுக்கு ஒலி உண்டு.

    //ஹிந்துவில் வந்த தமிழ் மொழியில் படிப்பது கடினமா என்ற கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அமைச்சர் பொன்முடிதான் மணோன்மணியம் சுந்தனார் பல்கலைக்கழகத்திற்கு சென்று எல்லோரும் கல்லூரியில் ‘கட்டாயமாக ஆங்கிலத்தில் பேசுங்கள். நாம் நடைமுறைக்கு ஏற்றார் போல் வாழ வேண்டும்’ என்கிறார். ஆக அவருக்கு தெரியுது சோறு முதல்ல பிறகு கொள்கைனு.//

    தனியொரு அமைச்சரின் கருத்து அரசின் கருத்தாகவோ மக்களின் கருத்தாகவோ ஆகாது. நீங்களோ யாருமோ சோறு பொறுக்கித் தின்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள் என்றால் அதில் எனக்கு ஒரு மறுப்பும் இல்லை.

    //மற்றவர்களை நையாண்டி செய்யும் அளவிற்கு வந்துள்ளீர்கள்!//

    ஏன் நையாண்டி செய்வதும், சகட்டுமேனிக்குச் சாடுவதும் கிரந்த ஆதரவாளர்களுக்கு மட்டுமே உள்ள பிறப்புரிமையா?

    //செல்வா – தமிழில் கற்கலாமா – இதேல்லாம் பழையக் குருடிக் கதவத் தெரடிக் கதையா இருக்கு.//

    முரளி, முதலில் இது போன்ற பொது மன்றங்களில் உரையாடும் முன் உங்கள் தகுதி என்ன, உங்கள் மறுமொழிகளின் மொழிநடை, அதற்குப் பின் உளவியல் சுட்டும் உங்களின் பண்பு என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    நாலு வரி தப்பில்லாம தமிழ் எழுதத் தெரியாத நீங்கள் எல்லாம் செல்வாவின் தகுதியைக் கேள்வி கேட்பது வேடிக்கை. நீங்கள், நான், வினோத், balaji எல்லாரும் பிறக்கும் முன்பே தமிழ்ப் பணிகளில் ஈடுபட்டுள்ள அறிஞர். பேராசிரியர். அவர் எழுதியுள்ள பட்டாம்பூச்சி கட்டுரை ஒன்று போதும், அவர் தகுதியை, எழுத்தாற்றலை விளம்ப. செல்வா தொடங்கிய கட்டுரைகள் பட்டியல் இங்கு. நடுநிலையாளர்கள் இக்கட்டுரைகளின் தரத்தை படித்து அறியலாம்.

    //அனைவருக்கும் விடுக்கும் வேண்டுகொள் DON’T FEED THE TROLL//

    //மீண்டும் மீண்டும் அசட்டுத்தனமான பதிவுகளை எழுதி வருவது வருந்தத்தக்கது.//

    TROLL என்கிறீர்கள். அசட்டுத்தனம் என்கிறீர்கள். என்னுடைய இடுகைகளில் உண்மை இல்லை எனில், பிறகு ஏன், என்னுடன் பேசி நேரத்தை வீணாக்குகிறீர்கள்?

    தனித்தமிழ், விக்கிப்பீடியாவில் த்னித்தமிழ் கொள்கை, என்னையும் யாரையும் சாட வேண்டாம் என்று சொல்லவில்லை. வேண்டுமானால், அதற்கு தனி இடுகை போட்டுத் தருகிறேன. அங்கு எவ்வளவு வேண்டுமானாலும் திட்டலாம். உங்கள் சாடல்களுக்கு இயன்றவரை மறுமொழி தந்துள்ளேன். இதற்கு மேல் இந்த இடுகையின் உரையாடலைத் திசை திருப்ப வேண்டாம்.

  39. செல்வாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன். அதற்கு அவர் விரும்பினால் மன்னிக்கலாம்.

    மறறபடி நீங்கள் உங்கள் தொண்டைத் தொடரலாம்.

  40. செ. இரா. செல்வகுமார் Avatar
    செ. இரா. செல்வகுமார்

    முரளி,

    மன்னிப்பு எல்லாம் எதற்கு? இப்படிக் கேட்டு என்னைச் சங்கடத்தில் உள்ளாக்கியிருக்கிறீர்கள்! நீங்கள் கேட்டதால், மன்னிக்கிறேன். நானும் ஏதும் யாருக்கேனும் புண்படும்படி சொல்லியிருந்தால் அருள்கூர்ந்து
    மன்னியுங்கள்.

    மாற்றுக்கருத்துக்கள் கொண்டிருந்தாலும், நட்புடன் அல்லது முறையுடன் கருத்தாடலாமே!

    வளர்முகமாகக் கருத்தாடலாம். அது பயனுடையது. Constructive dialogue என்பார்களே அப்படிச் செய்தால் பயன் உண்மையிலேயே விளையும்.

    உரையாடும் பொழுது, கருத்தை முன்னிருத்தி சொல்லாடினால், அதிலும் உணர்ச்சியைத் தூண்டாத விதமாக, இது பற்றி என்ன எதிர்க்கருத்துகளை எதிர்த்தரப்பினர் தருவார்கள் என்னும் போக்கில், திறந்த மனப்பான்மையுடன் நோக்கும்முகமாக உரையாடினால் பயன் பெருகும். ஏற்றுக்கொள்ளத்தக்கனவற்றை ஏற்றுக்கொள்ளுதலும், மறுக்க வேண்டியனவற்றை முறையுடன் முன்வைத்து மறுத்தலும் செய்தால், இவ்வகையான உரையாடல்கள் பயன்தரும் என்று நம்புகிறேன். நாம் கூட்டாக வளர்வோம் என்று நினைக்கிறேன்

    பெரும்பாலானவர்கள் பல்வேறு சாய்வுகள், விருப்பு வெறுப்புகள், வேறான கொள்கைகள் கொண்டிருக்கலாம், ஆனால் திறந்த மனப்பானமையுடன் நேர்மையாக உரையாடவில்லை என்றால் எந்தப்பயனும் இல்லை (மனக்கசப்பும், நேர விரயமும்தான் மிஞ்சும்)

    இங்கு உரையாடிய யாவருக்கும் நன்றி.

    நட்புடன் இத்துடன் நிறுத்திக்கொண்டு
    இப்போதைக்கு விடை பெறுகிறேன்
    நன்றி.

    செல்வா

  41. நன்றி செல்வா…நக்கல், நையாண்டி என்று போனதால் வார்த்தைகள் தடித்துவிட்டன.

  42. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    //நன்றி செல்வா…நக்கல், நையாண்டி என்று போனதால் வார்த்தைகள் தடித்துவிட்டன.//

    அட.. அட.. அட.. நையாண்டி செய்யாத போது மட்டும் பண்பிற் சிறந்த பலகவர்கள் பகலவர்கள் போல் பேசிக் கொண்டிருந்தவர்களை உசுப்பி விட்டதற்கு என்னையும் மன்னிக்கவும் 😉

  43. வினோத் ராஜன் Avatar
    வினோத் ராஜன்

    //

    ஆதி என்பது வடமொழியே என்று பலகாலமாகப் பலரும்.. ஏன் பெரும் அறிஞர்களும்கூட சொல்லிவந்துள்ளனர். ஆனால், அது தூய தமிழ்ச் சொல்லே என அருளியார், இரா.இளங்குமரனார், முதலான தமிழக மொழியறிஞர்களும் இர.திருச்செல்வம் போன்ற மலேசிய மொழியறிஞர்களும் ஐயத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளனர். மேலும், திருக்குறள் பிறமொழிக் கலப்பில்லா தனித்தமிழ் நூல் எனவும் அறிஞர்கள் நிறுவி பல காலம் கடந்துவிட்டன. ஆகவே, அயலானிடத்திலிருந்து திருவள்ளுவர் சொற்களை இரவல் பெற்றுள்ளார் என்ற பேச்சுக்கே இடமில்லை.

    1.//செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி பக். 93). ஆதி என்னும் சொல்லாட்சி பிற இந்திய-ஐரோப்பிய மொழிகளில் இல்லை என்கிறது இவ் அகரமுதலி//

    2.//தமிழில் ஆளப்படும் சொல். அகராதி, அகரமுதலி ஆகிய இரண்டும் ஒரே பொருளைக் குறிக்கும் இரு சொற்கள். இப்படித் தமிழில் பல சொற்கள்//

    //

    இவ்வளவு இருக்க பெருவழக்கான அகராதியைவிட்டு அகரமுதலியை திணித்ததன் காரணம், அரைகுறையான மொழி ஆராய்ச்சி தானே…

  44. ரவி –

    உங்கள் கிரந்த பதிவைப் பற்றி எழுதும் போதும் இருபக்கத்தையும் விளக்கி தான் எழுதினேன்.

    வேறு எங்கும் என் வார்த்தைகள் தடித்ததில்லை. Communism பற்றிய பெரிய உரையாடலில் ஒரு இடத்தில் கூட வரம்பு மீறவில்லை.

    ஒரு பக்கமா பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு என்றும் இருந்ததில்லை.

    மூன்று மாதமாத்தான் எனக்குத் தமிழ் தட்டச்சு பழக்கம்.

    அட யானைக்கும் அடி சரிக்கிடுச்சுப் போல
    //பலகவர்கள்//

    வெங்கட்ரமணனின் ‘ஈர்த்து போன’ வாதம் உண்மைதான்.

    kthxbye

  45. //இவ்வளவு இருக்க பெருவழக்கான அகராதியைவிட்டு அகரமுதலியை திணித்ததன் காரணம், அரைகுறையான மொழி ஆராய்ச்சி தானே…// வினோத் ராஜன் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அரைகுறை வளர்ச்சி என்பதைவிட ‘மேல் வளர்ச்சி’ என்பதே சரியாக இருக்கும். ஒரு காலத்தில் காணாத ஒரு கண்டுபிடிப்பைப் பின்னர் ஒரு காலத்தில் கண்டிபிடிப்பது எப்படி அரைகுறை ஆராய்ச்சியாகும். முன்னர் ஒன்றைக் காணமுடியாமல் போனதற்குப் பல கரணியங்கள் இருக்கலாம். ஆய்வுத்துறையின் வளர்ச்சியின் பயனாக பின்னாளில் கண்டுபிடிக்கப்படுவது ‘மேல் வளர்ச்சி’ தானே தவிர, அதனை அரகுறை என்பது சரியல்ல!

    சூடான விவாதங்கள் நன்றாயிருந்தன.

  46. f- ayya kelppittingale ayya.

  47. பா.பெ.நல்லசிவம் Avatar
    பா.பெ.நல்லசிவம்

    திரு. முரளி அவர்களுக்கு, வணக்கம்.
    முறையான தமிழ் மொழி வளர்ச்சி – என்பது எது என்பதை ஆய்ந்து அறிந்து
    தமிழ் மொழி வளர்ச்சிக்கு பனி செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.

    திரு. ரவி அவர்களுக்கு,
    வணக்கம். தங்கள் வலை பக்கம் முதல் முறை கண்டேன். படித்தேன்.
    இது போன்ற நல்ல உயர்ந்த கருத்துகளை தெரிவிக்கும் போது (முன் வைக்கும் போது) எதிர்மறை கருத்துகளுடன் (பகிடி) வைக்க வேண்டாம்.
    எம்மை போன்ற சாதாரனமானவர்கள் ( தவறாக புரிந்து கொள்வதனால் ) மனம் ரணமாகி விடுகிறது.
    உதாரணம் : இலவசக்கொத்தனார் , மயூரேசன்.

    எமக்கு தங்கள் கருத்தில் முழு உடன்பாடு உண்டு.

    ஆனால் ,
    // நாலு வரி தப்பில்லாம தமிழ் எழுதத் தெரியாத நீங்கள் எல்லாம்

    என்பது போன்ற தடித்த வார்த்தைகளை தவிர்க்க வேண்டுகிறேன்.
    அவர்கள் பேசுவது போல நீங்களும் பேசினால், தாங்கள் முன் வைக்கும் கருத்து உரிய முறையில் சென்று அடையாது.
    இருப்பினும் யாவரும் தமிழ் வளர முயற்ச்சி செய்வதும், ஆரோக்கியமான கருத்து பரிமாற்றமும் மிக்க மகிழ்ச்சி,
    முறையாக தமிழ் மொழி வளர , தங்களின் பனி தொடர்ந்து சிறக்க , வாழ்த்துகள்.
    அன்புடன்
    பா.பெ.நல்லசிவம்

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      இணைய உரையாடல்களின் போது இன்னும் பண்புடனும் பக்குவத்துடனும் நடந்து கொள்ள முயல்வேன். தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

  48. Rajan Avatar
    Rajan

    பதிவை விட அதன் பின்னூட்டங்கள் நகைக்க வைக்கின்றன

  49. தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

    என்னுடைய கேள்விக்கு இந்த தளத்தில் பதில் எதிர்ப்பார்க்கிறேன். தமிழில் உண்மையில் குறி எழுத்துக்கள் உள்ளனவா? நம் முன்னோர்கள் அவற்றை பயன்படுத்தி உள்ளனரா?. உதாரணமாக ? என்பது அணைத்து மொழிகளுக்கும் பொதுவானதா அல்லது இலத்தீன் மொழி சார்ந்ததா? தமிழில் இதற்கு மாற்று உண்டா? நிற்க, இதை தவிர கணித குறியீடுகளான = + – % போன்றவை கணித மொழி சார்ந்ததா?

    வெகு நாட்களாக இதைப் பற்றி யோசித்து களைப்படைந்து விட்டேன். தமிழில் இவை இல்லை என்றால் என் மனம் சற்று வருத்தப்படும் பின்னர் ஏற்றுக் கொண்டுவிடும். அனைவருக்கும் நன்றி. (வீண் வேலை அல்ல தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்தான்)