ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

என்னைப் பத்தி

என் பேரு ரவிசங்கர்..நிறைய பேரு என்னை ரவின்னு கூப்பிடுவாங்க..அத தான் நானும் விரும்புறேன்..ரவிசங்கர்னு கூப்பிட்டாலும் சரி தான்..நீங்க முதல்ல என்ன எப்படி கூப்பிடுறீங்களோ அப்படி தான் கடைசி வரைக்கும் கூப்பிடனும்னு விரும்புவேன்..ரவிசங்கர்னு கூப்பிட்டவங்க ரவின்னு கூப்பிட்டாலோ ரவின்னு கூப்பிடவங்க ரவிசங்கர்னு மாத்தி கூப்பிட்டாலோ எனக்கு டக்குனு உறுத்தும்..பிடிக்காது..எங்க அம்மா ஊர்ல ஒரு அமத்தா மட்டும் என்ன சங்கர்னு கூப்பிடுவாங்க..அப்படி கூப்பிடுறது சுத்தமா பிடிக்காது..ரவிசங்கர்னு எழுதினாலும் உச்சரிக்கும்போது ரவிஷன்கர்-னு தான் சொல்றது..கையெழுத்து தமிழ்ல தான் போடுவேன்..அதுல மட்டும் அ. இரவிசங்கர்னு இருக்கும்..பத்தாம் வகுப்புல இருந்து தமிழ்ல கையெழுத்து போட ஆரம்பிச்சு அதுவே நிலைச்சுடுச்சு..எங்க தமிழ் ஐயா சொல்வாரு - “தமிழனே தமிழ்ல கையெழுத்து போடாட்டி, வேற யாரு தமிழ்ல கையெழுத்து போடுவான்”- னு? இந்த சிந்தனை பிடிச்சுப் போய் தமிழ்ல கையெழுத்துப் போட ஆரம்பிச்சேன்.. பத்தாம் வகுப்பு முடிச்சப்போ எங்க தமிழையா சின்ன வயசுலயே இறந்துட்டார்..அதுக்கப்புறம், ஏனோ அவர் நினைவா இருக்கட்டும்னு கையெழுத்த ஆங்கிலத்துக்கு மாத்த விரும்பல..என் தமிழ் கையெழுத்தே ஒரு மாதிரி வளைஞ்சு நெளிஞ்சு இது என்ன மொழி-னு எல்லாரும் கேட்கிற மாதிரி இருக்கும்..எல்லாருக்கும், இது தமிழுங்க-னு எடுத்துச் சொல்றதுல எனக்கு ஒரு அற்ப பெருமிதம் இருக்கும்..

என் நண்பர்கள் பலருக்கு என் பேர் பிடிக்கும்..எனக்கும் ரொம்ப பிடிக்கும். எங்க அப்பா கூட சின்னச்சின்ன சண்டை வந்தா கூட இந்த பேர எங்க அப்பா வச்ச ஒரே காரணத்துக்காக நான் அவரை மன்னிச்சு விட்டுடுறது உண்டு..ஏன்னா, நான் பொறந்தப்போ எனக்கு கருப்பசாமி-னு பேர் வைக்கணும்னு எங்க அப்பச்சி ரொம்ப பிடிவாதமா இருந்தாங்களாம்..எங்க அப்பா தான் சண்டை போட்டு இந்த பேர வைச்சார்..எங்க அப்பாவுக்கு பெரிய இசை அறிவு ஒன்னும் கிடையாது. ஆனா, சித்தார் மேதை ரவிசங்கர் நினைவா இந்த பேர வைச்சாராம். அவர நினைச்சு வச்சாலும், எனக்கு இசை அறிவு ஒன்னும் கிடையாது. தமிழ் திரையிசைப் பாட்டுக்கு ஏத்த மாதிரி பலகையிலயோ சாப்பாட்டுத் தட்டிலோ தாளம் மட்டும் நல்லா போடுவேன்..இப்படி சாப்பிடும் போது தாளம் போட்டா, சோத்துக்கு சிங்கி அடிக்கணும்னு எங்க அம்மா திட்டுவாங்க..ரவிசங்கர்னு பேர் வைச்சுட்டு இது கூட இல்லாட்டி எப்படினு எங்க அப்பா supportக்கு வருவார்…நல்ல அப்பா..பல சமயம் பக்கத்தில் யார் இருக்காங்கன்கிறத மறந்து மட்டமான குரல்ல பாட்டு வரிகள கத்துவேன்..எல்லா பாட்டும் நாலு வரிக்கு மேல பாடத் தெரியாது..தாவித் தாவிப் பாடுவேன்..பல நண்பர்களுக்கு எரிச்சலூட்டுற மாதிரி இருக்கும் இந்தப் பழக்கம்..ஆனா, தன்னந்தனியா நீண்ட பாதைகள்ல cycle ஓட்டிப் போகும்போது இப்படி பாடுறது ஒரு சுகானுபவமா இருக்கும்..

பல நாடுகளுக்கும் போகும் போது இந்த பேர தெரிஞ்சவங்க இருக்கிறது ஒரு வசதி..பரிமேலழகர்-னு எங்க அப்பச்சி பேர் வைச்சிருந்தா அந்த பேர வெள்ளைக்காரனுங்க உச்சரிக்கிறதுக்குள்ள கொத்தி கைமா பண்ணிடுவானுங்க..ரவி-ங்கிற பேரையே உச்சரிக்கத் தெரியாம ராவி, ராபி-னு சொல்றவங்களும் இருக்காங்க..

“இந்தப் பேர்ல எனக்கு இன்னொரு ரவிசங்கர் தெரியுமே”-ன்னு சில பேர் சித்தார் மேதைய பத்தி சொல்லுவாங்க..அப்ப எனக்குள்ள சிரிச்சுக்குவேன் நான்..அவர் தான்யா முதன்மையான ரவிசங்கர்..நாங்க எல்லாம் சும்மா தான்னு..
ஆனா, இந்த பேர்ல எனக்கு என்ன வருத்தம்னா, நாம பிற்காலத்துல எவ்வளவு தான் ஒருவேளை famous ஆனாலும், நம்ம பேர்ல ஏற்கனவே நிறைய பேர் famousஆ இருக்காங்க..நம்ம பேரு தனிச்சு நிக்காது..சித்தார் மேதை பத்தாதுன்னு, இப்ப ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்னு வேற ஒருத்தர் இருக்கார்..அப்புறம் எங்க போனாலும் ஒரு ரவி இருக்கான்..ரவின்னு இன்னொருத்தன கூப்பிட்டாலும் நாம திரும்பிப் பார்க்க வேண்டி இருக்கு..ரவி-னு பேர சொன்னா, நம்ம முழு பெயர ரவிகுமார், ரவிச்சந்திரன்னு அவங்களா நினைச்சுக்கிறாங்க..மின்னஞ்சல் முகவரி, இணையத்தள முகவரி எது பதிவு செய்யப் போனாலும் நமக்கு முன்னால நம்ம பேர யாராச்சும் கொத்திக்கிட்டு போயிடுறாங்க..

மத்தபடி இந்த பேர் பரவால தான்..மாத்துற உத்தேசம் இல்ல..

ம்ம்..என்ன பத்தி வேற விஷயம் சொல்லனும்ணா, பிறந்து 8 வயசு வரைக்கும் வளர்ந்தது கோயம்புத்தூர்..இப்பவும் எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர்..சிறுவாணித் தண்ணி மாதிரி தேவலோகத்துலயும் இருக்குமானு தெரியல..ஆனா, சின்ன வயசுல எங்க அம்மா என்ன சிறுவாணித் தண்ணில குளிப்பாட்டாம விட்டுட்டாங்கனு நினைக்கிறேன்..நம்ம உடல் நிறம் ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல..அப்புறம் இரண்டு வருஷம் திருச்சியில..10 வயசுல இருந்து 15 வயசு வரைக்கும் புதுக்கோட்டைல உள்ள எங்க சொந்த கிராமத்துல வளர்ந்தேன்..கிராமம்னா கிராமம் அப்படி ஒரு கிராமம் ..பீடி, வத்திக்குச்சி தவிர எது வாங்கனும்ணாலும் இரண்டு கிலோமீட்டர் நடக்கணும்..இப்ப நிலைமை பரவால..உயர்நிலைப் பள்ளிக் கல்வி ஒரு கிறிஸ்தவப் பள்ளியில படிச்சேன்..என் வாழ்க்கைல முக்கியமான காலகட்டம் அது..அப்ப கிராமத்து வாழ்க்கை பிடிக்காட்டியும் என்ன அறியாம நல்ல விதமா அந்த வாழ்க்கை என்ன செதுக்கி இருக்கு..மேல்நிலைக்கல்வி புதுகை நகரத்துல..அப்புறம், பொறியியல் கல்லூரிப் படிப்பு சென்னை அண்ணா பல்கலைல..படிச்சது B.Tech உயிரித் தொழில்நுட்பம்ம..அப்புறம் கொஞ்சம் நாள் call centre, IIT-chennaiல வேலை..2004-2006 காலத்துல சிங்கப்பூர்லயும் ஜெர்மனியுலயும் முதுநிலைப்படிப்பு..இப்ப நெதர்லாந்து லைடன் பல்கலைக்கழகத்துல சுற்றுச்சூழல் துறையில் ஆராய்ச்சிப் படிப்பு..

வித்தியாசமா தான் இருக்குது இந்த ஊர்..நிறைய ஆடு, மாடு, குதிரைங்க மேயுது..எங்க அப்பா வந்து பார்த்தா சந்தோஷப்படுவார்..எனக்கே கூட மாடு மேச்ச நினைப்பெல்லாம் வருது..மாடு மேச்ச கதைய எங்க பேராசிரியர் கிட்ட சொன்னப்ப ஆச்சர்யமா கேட்டுக்கிட்டார்..அம்மாபட்டியில இருந்து ஆம்ஸ்டர்டாம் வரைக்கும் வந்தாச்சு..வயசு 25 முடிஞ்சது..பாதி உலகம் பார்த்தாச்சு..இந்த வயசுக்கு இதுவே சாதனை-னு சொல்றாங்க..எனக்கு அப்படி ஒன்னும் தோணலை..பறவைங்க கூட தான் எல்லா நாட்டுக்கும் போகுது..அது சாதனையா என்ன? வேணா, இத ஒரு பிழைப்பு, வாழ்க்கை, தேடல்-னு சொல்லலாம்..அப்படி நினைக்கத் தான் நானும் விரும்புறேன்..

சின்ன வயசுல இருந்து நிறைய எழுதனும்ணு ஆசை உண்டு. புனைப்பெயர் எல்லாம் வைச்சு துணுக்குகள் எல்லாம் எழுதிப் போட்டு பதிப்புல வந்திருக்கு..ஆனா, ஏனோ கவிதைங்கள மட்டும் ஒரு பத்திரிக்கையும் வெளியிடல..அப்புறம் எனக்குள்ளேயே ஒரு சலிப்பு வந்து கவிதை எழுதறத விட்டுட்டேன்..இப்படி எழுதினா வெளியிடுவாங்களான்னு நினைச்சு எழுதினா, அத எழுதறதுல உள்ள நேர்மை போயிடுதுன்னு நினைக்கிறேன்..அதுனால, எழுதியே தீரணும்னு தோணுச்சுன்னா எனக்கு நானே எழுதிப் பார்த்துக்குவேன்..நெருங்கின நண்பர்களுக்கு காட்டுறது உண்டு. சில பேர் நல்லா இருக்குதும்பாங்க..சில பேர் “போடா வெண்ண..ஒன்னும் புரியல”-ம்பானுங்க..பழகிப் போயிடுச்சு..பெரும்பாலும் உணர்வுகள் குறித்து தான் எழுதுவேன்..வழக்கமா மானே தேனே-னு கிறுக்கி அதை கவிதைனு சொல்றவங்கள கண்டாலே எனக்குப் பிடிக்காது.

இப்ப ஒரு 3 வருசமா தமிழ் விக்கிபீடியாவுல நிறைய எழுதுறேன்..அதன் துணைத் திட்டங்களிலும் எழுதுறேன். இதுல creativeஆ ஒன்னும் இல்லன்னாலும் நாலு பேருக்கு காலத்துக்கும் பயன்படுற மாதிரி ஏதோ பண்றோம்னு ஒரு சந்தோஷம்..தவிர, விக்கிபீடியாவுல பங்களிக்குற பலரும் நம் கருத்தொத்து,.விருப்பு வெறுப்பு இல்லாம தன்னை முன்னிலைப்படுத்தாம தோழமை உணர்வோடும் அர்ப்பணிப்போடும் செயல்படுறது பிடிச்சிருக்கு..

வேற என்னப் பத்தி சொல்லணும்னா, வெளுத்தது எல்லாம் பால்-னு நினைக்கிற தர்மதுரை, அண்ணாமலை, படிக்காதவன் ரஜினி மாதிரி நம்ம குணம்..ஆனா, அதுல ரஜினி சரியா பட இடைவேளை நேரத்துல அடி வாங்கி முழிச்சுக்கிற மாதிரி நமக்கு வாழ்க்கலை அடி மேல அடி வாங்கி, போதுமடா சாமிங்கிற மன நிலைக்கு வந்தாச்சு..என்ன வெகுளி, வெள்ளந்தி-னு ரொம்ப பேர் சொல்லிட்டாங்க..தப்பு..நான் ரொம்ப வெள்ளந்தி..உள்ளதை உள்ள மாதிரி சொல்லிடுற ஆள்..இது நிறைய நட்ப பிரச்சினைக்குள்ளாக்கியிருக்கு..நிறைய பொய் நட்ப தோலுரிச்சுக் காட்டி இருக்கு..ஆனா, யோசிச்சுப் பார்த்தா எதையும் பெரிசா இழந்துடலைன்னு தோணுது..இதையும் தாண்டி நம்ம கிட்ட இப்ப இருக்கிறது எல்லாம் உண்மைனு தெரிஞ்சுக்க சந்தோஷம் தான்..

நல்லவங்கள பிடிக்கும். கெட்டவங்கள நான் கண்டுக்கிறது இல்ல..ஆனா, நல்லவங்க மாதிரி நடிக்கிறவங்கள மட்டும் பிடிக்கவே பிடிக்காது. எதிரிகள் பிடிக்கும், துரோகிகள் ஆகாது. முதுகுக்குப் பின்னால் பேசினா, அப்படி பேசுறவன மனுசனாவே மதிக்கத் தெரியாது. சின்னத்தனமா யோசிக்கறவன பார்த்தாலே அருவருப்பா இருக்கும்..ஒருத்தர பிடிக்காம போயிடுச்சுன்னா, formalityக்கு பேசுறது எனக்கு சுட்டுப்போட்டாலும் வராத கலை..ஆனா, சுலபத்துல ஒருத்தர அப்படி நினைச்சடுறது இல்ல..ego அளவு தேவைக்கும் ரொம்பக் குறைவு தான்..

பணம் செலவழிக்க, அடுத்தவருக்கு உதவ யோசிக்க மாட்டேன். ஆனா, உதவி கேட்கத் தயங்குவேன்..அதிகம் உடை வாங்கப் பிடிக்காது. ஆனா, புத்தகங்கள், திரைப்படங்கள், இசைத்தட்டுக்களுக்கு நிறைய செலவு பண்ணுவேன்..காசு சேத்து வைக்க இது வரைக்கும் கத்துக்கல..

சின்ன வயசுல tea master, taxi driver ஆகணும்னு எங்க அப்பா கிட்ட சொல்லித் திட்டு வாங்கினது உண்டு. பெற்றோர் சந்திப்புக்கு வரும்போது எல்லாம் எங்க தமிழ் ஆசிரியர்கள் என்னைத் தமிழ் படிக்க வையுங்கன்னு எங்க அப்பா கிட்ட சொல்லுவாங்க..ஆனா, தெரியாத்தனமா எனக்கு அறிவியல், கணக்குப் பாடங்கள் நல்லா படிக்க வந்ததால அந்த வழிய பிடிச்சு இப்ப என்னையும் விஞ்ஞானி ஆக்கிட்டாங்க..12ஆம் வகுப்பு படிச்சப்ப , நம்ம ஊர்ல மருத்துவரே இல்லன்னு என்ன மருத்துவப் படிப்பு படிக்க சொன்னாரு எங்க அப்பா..நம்ம ஊர்ல கொத்தனார் கூட தான் இல்ல, அந்த படிப்பு படிக்கவா-னு கேட்டேன்..அதுக்கப்புறம், எங்க அப்பா அந்தப் பேச்ச எடுக்கல..அது என்னவோ மருத்துவத் தொழில் மட்டும் நமக்கு பிடிக்கல..சின்ன வயசு முழுக்க நிறைய ஊசிக்குத்து வாங்கி அந்த தொழிலே பிடிக்காம போச்சு..தவிர, தினம் அழுதுக்கிட்டிருவங்கள பார்க்க நம்ம இளகின மனசுக்கு ஆகாதுங்க..

இப்போதைக்கு என்ன பத்தி இவ்வளவு போதும்..பொதுவா நேர்முகத் தேர்வுகளுக்குப் போகும்போது நம்மள பத்திச் சொல்ல சொல்லுவாங்க..நாமளும் என் பேர் ராமசாமி , எங்க அப்பா பேர் முனுசாமி, இங்க பிறந்தேன், அங்க வளர்ந்தேன்-னு ஒப்புக்கு சொல்லி வைப்போம்..

ஆனா, நாம யாருங்கிற கேள்விக்கான பதில் அவ்வளவு சுலபமில்லை..

அன்புடன்,

ரவி

Updated: 15 மார்ச் 2008

48 Comments

48 responses so far ↓

  • 1 Vicky // Mar 15, 2007 at 6:03 am

    ரவி,

    இவ்வளவு அருமையான ஒரு profile page படிச்சதில்லை. உங்களை பத்தி நிறைய விஷயம் தெரிஞ்சுக்க வாய்ப்பா இருக்கு. நிறைய இடத்திலே ரவிக்கு பதிலா விக்கினு போட்டாலும் உண்மையாவே இருக்கு.:)

  • 2 ravidreams // Mar 15, 2007 at 8:25 am

    விக்கி, படிப்பு, வேலை பத்தி தவிர வேற எதுவும் சொல்லாத பல பல boreஆன profile pageகளப் பார்த்து பிடிக்காமத் தான் இப்படி எழுதுனேன். எல்லாரும் இப்படி எழுதினா எவ்வளவு சுவாரசியமா இருக்கும் ! பல பேரோட குணம் ஒரு மாதிரி இருக்கிறதப் பார்க்கலாம் :)

  • 3 கோவிந்தசாமி சி (குட்டூர்கவிமதி) // Mar 18, 2007 at 2:57 pm

    அன்புள்ள

    நண்பர் ரவி அவர்களுக்கு

    சமீபத்தில் தங்களுடைய இணைய தளத்தை காணும் வாய்ப்பு கிட்டியது
    அனுபவங்களின் பின்னனியில் மிகவும் அருமையாக பின்னப்பட்ட வலை தளம். என்னைப் பற்றி நானும் எழுத வேண்டுமென்று நினைப்பதுண்டு. ஆனால் பலரின் கெளிக்கைப் பேச்சுகளினால் சில பக்கங்களை நீக்கிவிட்டேன்.

    என்னைப் பற்றி விரைவில் நிறைய கூறுகின்றேன்

    தாங்கள் http://www.muthamilmantram.com வலைத்தளத்திற்கு வந்ததுண்டா?
    ஒருமுறை வந்து பாருஙகளேன்

  • 4 ravishankar // Mar 18, 2007 at 6:19 pm

    வருகைக்கும் ஊக்க மொழிகளுக்கும் நன்றி, கோவிந்தசாமி. முத்தமிழ் மன்றத்தை பார்த்து இருக்கிறேன்.

  • 5 Inderjit // Mar 22, 2007 at 2:15 am

    Ravi,

    Good Profile

  • 6 Abul // Mar 22, 2007 at 6:46 pm

    நல்ல அருமையான அறிமுகம் ..

    -அபுல்

  • 7 இராஜ பிரதாப் // Apr 1, 2007 at 5:59 am

    ரவி,
    தங்கள் தமிழ்ச் சேவைக்கு மிக்க நன்றி.
    நான் முதல் முறையாக தமிழ்99 எழுத்துருவைப் பயன்படுத்தி தங்களுக்கு பதில் எழுதுகிறேன்.

    நேரம் கிடைக்கும் பொழுது
    http://rp-learnjapanesebytamil.blogspot.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும். மேலும் இதை மேம்படுத்துவதற்கான தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும்

    நன்றி.

  • 8 கணேஷ் // Apr 11, 2007 at 11:48 am

    ஆஹா ! அருமையான கருத்து தளம் தங்கள் மொழி விமர்சனம் படித்தேன்,அது என்னை இன்றே படம் பார்க்க தூண்டுகிறது,தெளிந்த நீரோடை போன்றது மொழி திரைப்படம் மட்டும் அல்ல ,தங்களது கருத்து பதிவு தளமும் தான் தங்களது விக்கி சேவை என்னையும் செய்ய துண்டுகிறது,தங்களது தமிழ் சேவை தொடர என் வாழ்த்துகள் அன்னை தமிழ் அருள் உமக்கு என்றும் உண்டு,வாழ்க வள முடன்!

    மதுரையில் இருந்து கணேஷ்

  • 9 ravishankar // Apr 11, 2007 at 4:44 pm

    அபுல், இந்தர்ஜித், இராஜ பிரதாப் - :)
    கணேஷ், ஒரு தலைமுறையே சேர்ந்து உழைக்க வேண்டிய அளவுக்கு தமிழ் விக்கியில் வேலை இருக்கிறது. நீங்கள் இணைந்தால் மகிழ்ச்சியே.

  • 10 Santhakumar // Jun 13, 2007 at 1:22 pm

    என்னங்க எல்லாம் சொல்லிட்டு உங்க இணைய முகவரிய கொடுக்காம விட்டுடீங்க.

  • 11 என்னார் // Jul 12, 2007 at 1:35 am

    எவ்வளவுபெரிய அறிமுகம் அப்பாடி வாழ்க ரவி

  • 12 திண்டுக்கல் சர்தார் // Aug 6, 2007 at 5:31 pm

    என்னமோ சோபாவில் என் அருகில் அமர்ந்து உங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட மாதிரி இருக்கிறது உங்கள் நடை.கொஞ்சம் அசந்து விட்டேன்.
    உங்களை ‘சங்கரா’ என்று அழைக்கலாமா?

  • 13 ரவி // Aug 6, 2007 at 11:46 pm

    santhakumar, என்னார், திண்டுக்கல் சர்தார் - நன்றி. என்னை ரவி அல்லது ரவிசங்கர் என்று அழைப்பது தான் பிடிக்கும் :) சங்கர், சங்கரா வேண்டாம் :)

  • 14 திண்டுக்கல் சர்தார் // Aug 7, 2007 at 9:41 am

    சரிங்க ரவி.

  • 15 மெளலி // Aug 7, 2007 at 12:19 pm

    அருமையான அறிமுகம்……பதிவர் பட்டறைப் பதிவுகளில் உங்கள் பெயரை பார்த்தேன், பின் இங்கு வந்தேன்.

  • 16 மஞ்சூர் ராசா // Aug 8, 2007 at 3:00 pm

    நல்லதொரு சுய விளக்கம். சில எனக்கும் பொருந்துவது அதிசயமே.

    வாழ்த்துக்கள்.

  • 17 harita // Sep 12, 2007 at 4:12 am

    oer azhagaana kathai padikra maathiri irnthathu unga arimuga padalam…:) ellaarayum poela tamizhil type panna aasaitaan..but enakku teriyala…iruppinum… enathu manamaarntha vaazhthukkal…

    smiles..
    harita..

  • 18 ரவிசங்கர் // Sep 30, 2007 at 12:38 pm

    நன்றி ஹரிதா.

    கணினியில் தமிழில் எழுதுவது எப்படி? கட்டுரையைப்பாருங்கள்.

  • 19 dharumi // Dec 13, 2007 at 1:00 pm

    ரவி,
    இன்றுதான் உங்கள் “வீட்டுக்கு” வந்து சேர்ந்தேன். அறிமுகப்படலம் நல்லாவே இருக்கு.

    மேலும் தொடர்போடு இருக்க ஆவல்.

  • 20 Manjula // Feb 20, 2008 at 7:35 pm

    Hello, I would like to know about The Netherlands for my cousin. Can you please tell me howz the job (in IT field) and work permit/visa kinda stuff? Thanks for your help.

  • 21 ரவிசங்கர் // Feb 20, 2008 at 9:01 pm

    Manjula » Please write to ravidreams_03 at yahoo dot com and then we will discuss. Thanks.

  • 22 இரா.வசந்த குமார். // Feb 25, 2008 at 2:33 pm

    நீ 99 - 2003ல படிச்ச ரவிசங்கர் தான..? இப்ப தான் உன்னோட வலைப்பதிவு பாக்கறேன்… உண்மையாலுமே ரொம்ப நல்லாருக்கு… நான் யார்னு உனக்குத் தெரியாதுனு / நினவிருக்காதுனு நினைக்கிறேன்… அதே காலகட்டத்துலனு ஒரு துறையில இருந்தேன்.. வருண் கூட நீ என்னைப் பாத்திருக்கலாம்… எப்படி இருக்கா?

  • 23 ரவிசங்கர் // Feb 25, 2008 at 11:48 pm

    இரா.வசந்த குமார். » வசந்த் உன்னை நல்லாவே நினைவு இருக்கு.. ece பிரிவு தான.. முருக பாஸ்கர் மூலமாகவும் உன்னைப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன்..TTTIக்கும் ஒரு முறை வந்திருக்க தான.. உன் வலைப்பதிவை அப்பப்ப எட்டிப் பார்க்கிறது உண்டு..ஆனா, அது நீ தான் அறிய மகிழ்ச்சி.

  • 24 ரவிஷங்கர் // Feb 26, 2008 at 5:37 pm

    ரவி:

    என்னத்த சொல்றது? என் பேரும் ரவிசங்கர் தான்! நான் இங்கு அமெரிக்கா வந்தபோது எனக்கு கிடைத்த அனுபவங்களே உங்களுக்கு கிடைத்திருக்கு போலிருக்கு! அவை அப்படியே என் அனுபவங்களை பிரதிபலிக்கிறது!

    வாழ்த்துக்கள்!
    ரவி
    //

  • 25 ரவிசங்கர் // Feb 26, 2008 at 7:57 pm

    ரவிஷங்கர், :)

  • 26 sri // Mar 3, 2008 at 11:23 am

    i got to know you from maami’s profile.
    i respect and adore your words….like them….

  • 27 ரவிசங்கர் // Mar 3, 2008 at 3:45 pm

    நன்றி, sri.

  • 28 சாய் ராம் // Mar 14, 2008 at 8:57 pm

    அன்பு ரவி,

    தமிழில் எழுதுவது எப்படி என்பது குறித்து எனது வலைதளத்தில் ஒரு சுட்டி சேர்க்கலாம் என கூகுளில் & மற்ற இடங்களில் தேடி கொண்டிருந்தேன். அது குறித்து உங்கள் பதிவு பிடித்திருந்தது. அதனால் அதனை என் வலைதளத்தில் இணைத்தேன். அந்த சமயத்தில் மேலோட்டமாய் உங்கள் மற்ற பதிவுகளும் கவர்ந்தன. முக்கியமாக கூகுள் தமிழ் எழுத வேண்டாம், இகலப்பை, தமிழ்99யை வலியுறுத்தியது போன்ற விஷயங்கள் கவர்ந்தவுடன் என் வலைதள தொடுப்புகள் பகுதியில் மீண்டும் ‘தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு ரவியின் வலைபதிவு’ என இன்னுமொரு சுட்டியை சேர்த்தேன். அதோடு ஓடை வசதி ஏற்படுத்தி கொண்டேன்.

    அப்புறம் உங்கள் வலைபதிவில் பதியப்படும் இடுகைகள் தொழில்நுட்ப சந்தேகங்களுக்கானவை மட்டுமல்ல என உணர்ந்தேன். அப்புறம் நேராக வலைதளத்திற்கு வந்து கொஞ்சம் மேய்ந்தேன். இன்னும் மேய்ந்து கொண்டிருக்கிறேன்.

    சந்தோஷமாக இருக்கிறது உங்கள் அறிமுகத்தை படிக்க.

  • 29 ரவிசங்கர் // Mar 14, 2008 at 11:07 pm

    நன்றி சாய்ராம்.

  • 30 Praveen // Apr 18, 2008 at 10:18 pm

    Hi Ravi,,,, Great.. Need to talk to u.. can u ping me to the google id provided above. Thanks praveen

  • 31 ரவிசங்கர் // Apr 22, 2008 at 2:45 am

    நன்றி பிரவீன். உங்களுக்கு ஓரிரு நாள் முன்னரே மடலிட்டு இருந்தேன்

  • 32 அருட்பெருங்கோ // Apr 26, 2008 at 2:54 pm

    என் வலைப்பதிவுல about me பக்கமே வேணாம்னு தூக்கிட்டேன்.
    உங்க அறிமுகத்த படிச்சா நம்மளும் ஒன்னு எழுதலாமோனு தோனுது!

  • 33 ரவிசங்கர் // Apr 26, 2008 at 10:45 pm

    கண்டிப்பா எழுதுங்க அருட்பெருங்கோ. ஒவ்வொருவரைப் பற்றியும் இப்படித் தெரிஞ்சுக்க முடிஞ்சா நல்லா இருக்கும்.

  • 34 சுப.நற்குணன் // May 4, 2008 at 7:15 am

    வணக்கம் ஐயா. தங்களின் வலைப்பதிவு கண்டேன். அருமையான; பயன்மிக்க செய்திகளை வழங்கியுள்ளீர்கள். தமிழுக்கு ஆக்கமான செய்திகளைக் கண்டு மகிழந்தேன். தொடர்ந்து எழுதுங்கள்; தமிழை முன்படுத்தி எழுதுங்கள்.
    இனியத் தமிழை இணையத்தின்வழி இணைந்து வளர்ப்போம்.

  • 35 ரவிசங்கர் // May 4, 2008 at 10:53 am

    நன்றி சுப. நற்குணன். தமிழ் தான் என்னுடைய முதல் ஆர்வப் புலம். எனவே, தொடர்ந்து தமிழ் குறித்த பல இடுகைகள் எழுதுவேன். உங்கள் ஊக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது.

  • 36 kanchana // May 17, 2008 at 9:10 am

    Mr.Ravi,

    i read your profile,the former part where you discuss about your name is a little dragging,whereas the latter part is seriously a different touch to writing profiles,also found it interesting to read.
    Thangaludaya inda pani thodara enathu vaazthukkal.

    - kanchana.

  • 37 ரவிசங்கர் // May 17, 2008 at 1:13 pm

    உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி காஞ்சனா. நீங்கள் என்னை ரவி என்றே அழைக்கலாம்.

  • 38 Krishnakumar // May 19, 2008 at 3:25 pm

    அன்புமிக்க ரவி..
    உங்கள் சரிதம் (இந்தா வார்த்தை கொஞ்சம் அதிகமோ?) படித்த கொஞ்ச நேரம் நான் என் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனேன்! நானும் எழுதறேன் பாரு எண்டு என்னை நானே திட்டிக் கொண்டேன்! கிரேட் சார்!

  • 39 ரவிசங்கர் // May 19, 2008 at 4:54 pm

    நன்றி Krishnakumar. உங்கள் வலைப்பதிவைப் படித்துப் பார்த்து மகிழ்ந்தேன்.

  • 40 Expatguru // May 25, 2008 at 9:35 am

    ரவி,

    முதல் முறையாக உங்களுடைய வலைப்பதிவை இன்று தான் பார்த்தேன். இவ்வளவு வித்யாசமான‌ ஒரு profileஐ இது வரை நான் படித்ததே இல்லை. மனம் விட்டு எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  • 41 ரவிசங்கர் // May 25, 2008 at 2:24 pm

    நன்றி Expatguru. நீங்கள் என் வலைப்பதிவை முதன் முதலாக வாசித்துப் பார்த்ததற்கு மகிழ்ச்சி.

  • 42 Siv // Jul 8, 2008 at 12:16 pm

    Hi
    Nice to hear about your contirbutions to TAMIL WORDPRESS.

    Iam trying to setup a wordpress blog in tamil and I have uploaded the ta_TA.mo file but still the site is not showing up in tamil.

    Can you help ?

    SIv

  • 43 ரவிசங்கர் // Jul 8, 2008 at 3:39 pm

    நன்றி சிவா. உங்களுக்கு மடல் அனுப்பியுள்ளேன்.

  • 44 S.Rengasmy // Jul 12, 2008 at 5:53 am

    Vanakkam.
    I am Rengasamy (working as a professor of social work in Madurai Institute of social sciences, Madurai) father of R.Vignesh (http:amazwi.blogspot.com). Since my son is a blogger, I used to read other blogs. I really liked the way you introduced yourself. I am proud of tamil boys and girls discussing about serious matters that too in a more matured way. We brought up enjoying Nagesh, Goundamani and Vadivelu etc. Our students are also like us. All of us have taken a vow not allowing others to think in a matured way. There is a proverb, “yatha raja, thatha praja” (Mannan evvali makkal avvali).
    As far as computers are concerned Nan oru tharkuri. Your basic mindset as revealed in your introduction and your interest in tamil computers gave me courage to approach you to learn ABC of tamil computing. I believe that tamil computing will unleash the creative potentials of my students. Take me as your student. Start with Tamil computer arichuvadi.
    With regards

  • 45 ரவிசங்கர் // Jul 13, 2008 at 11:21 pm

    வணக்கம் ரெங்கசாமி. ஒரு பேராசிரியரிடம் இருந்து பெறும் பாராட்டைப் பெருமையாகக் கருதுகிறேன்.

    தமிழ்க் கணிமை குறித்து சில கருத்துகளை இங்கு எழுதி இருக்கிறேன்.

    முதலில், நீங்கள் தமிழ்99 தள வழிகாட்டுதல் படி தமிழில் எழுதப் பயின்றால் மகிழ்வேன்.

    நன்றி.

  • 46 S.Rengasmy // Jul 27, 2008 at 5:32 am

    அன்புள்ள ரவிக்கு
    I tried my level best to reply in Tamil.No doubt nothing can stand before self learning. நீங்க கொடுத்த link மூலம் என்னால் பெரிய அளவு கற்றுக்கொள்ள முடியவில்லை.மொட்டைதனமான சந்தேகங்களைக் கேட்டு உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அரசாங்கம் செய்யாததை, அரசியல்வாதிகள் செய்யாததை தமிழுக்கு நீங்க செயிறீங்க. உங்களை மாதிரி ஆர்வலர்களைப் பார்க்கும் போது பெருமையாகவும், மனதுக்கு நிறைவாகவும் இருக்கு

  • 47 ரவிசங்கர் // Jul 27, 2008 at 2:19 pm

    உங்கள் அன்பான மொழிகளுக்கு நன்றிங்க. தமிழ்99 கற்றுக் கொள்ள கொஞ்சம் கூடுதலாக நேரமும் முயற்சியும் வேண்டும். ஆனால், கற்றபின் அதற்கான பயனை உணரலாம்.

    http://www.tamil99.org/kanichuvadi.pdf முகவரியில் விரிவான விளக்கம உண்டு. இன்னொரு முறை முயல வேண்டுகிறேன். நன்றி

  • 48 அப்துல் ரஹீம் // Aug 5, 2008 at 2:45 pm

    அன்பு ரவிசங்கர், வாழ்த்துக்கள் உங்களின் அறிமுகம் அற்புதம். சுஜாதாவும் இப்படித்தான் எழுதுவார். தங்களுக்கு நான் நன்றி சொல்லவும் கடமைபட்டிருக்கிறேன். எப்படி என்கிறீர்களா? எங்கள் காமலோகத்தை பற்றி நல்லவிதமாக எழுதியுள்ளீர்களே?
    அதற்கு தான். தங்களின் தமிழ் விக்கியில் உங்களின் கட்டுரையை கண்டிப்பாக படிக்கின்றேன். தங்களின் அறிமுகத்திற்கு மிக்க மகிழ்ச்சி. தங்களின் தமிழ் சேவைக்கு என் சல்யூட். தொடரட்டும் தங்களின் சேவை.

    அன்புடன்

Leave a Comment