ஓடைகள்
இடுகைகள்
மறுமொழிகள்

தமிழ்123.com , தமிழ்abc.com , தமிழ்அனக்கோண்டா.me என்றெல்லாம் தளப் பெயர் வைப்பவர்கள் தமிழை thamiz, thamil, tamizh, thamizh, tamiz என்றெல்லாம் விதம் விதமாக எழுதாமல் tamil என்றே எழுதுவது நலம்.

* tamil என்று எழுதுவது சுருக்கமாக, நினைவு வைக்க இலகுவாக, குழப்பமின்றி இருக்கிறது. தளங்களுக்குப் பெயரிடுவதில் இது முக்கியம்.

* தளப் பெயரை எழுத்தில் பார்க்காதவர்கள் தன்னிச்சையாக tamil என்று தொடங்கும் முகவரிக்கே செல்வர். அத்தளம் செயல்பாட்டில் இல்லாவிட்டால் வெற்றுப் பக்கத்தைப் பார்ப்பார்கள். உங்கள் தளம் பிரபலமானால், கண்டிப்பாக tamil என்று தொடங்கும் முகவரியையும் போட்டிக்காரர்கள் வாங்கிப் போட முயல்வர். தொடர்பில்லாத உள்ளடக்கங்களைத் தந்து உங்களுக்கு கெட்ட பெயரும் வருமான இழப்பும் பெற்றுத் தரலாம்.

* tamil என்ற எழுத்துக்கூட்டல் மட்டுமே தமிழர் அல்லாதவர்களுக்கும் புரியும்.

* ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டலுக்கும் உச்சரிப்புக்கும் தொடர்பு இருப்பதில்லை. எனவே, தமிழை சரியாக உச்சரிக்கிறோம் என உணர்ச்சிவசப்பட்டு ஆங்கில எழுத்துக்கூட்டலை மாற்ற வேண்டாம்.

பேச்சு ஆங்கிலத்தை ( Spoken English ) வளர்த்துக் கொள்வதற்கான எளிய குறிப்புகள்:

* 30 நாட்களில் பேச்சு ஆங்கிலம், Repidex, விவேகானந்தா கல்வி நிலையம் போன்றவற்றை நாடாதீர்கள். முறைப்படி இலக்கண விதிகளை நினைவு வைத்துப் பேச வேண்டி இருப்பது, உங்களை மனம் தளரச் செய்யலாம். நீங்கள் பேசிப் பழகப் பழக நாளடைவில் இலக்கணம் தானாக வரும்.

* பேச முற்படும் முன் நிறைய ஆங்கிலப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டே இருங்கள். எடுத்துக்காட்டுக்கு, கிரிக்கெட் வர்ணனை, தொலைக்காட்சிச் செய்திகள். பொருள் புரியாவிட்டாலும் ஓசைகள், சொற்களுக்குப் பழக்கப்பட உதவும்.

* உங்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாவிட்டால், விளம்பர வாசகங்கள், கடைகளின் தட்டிகள், படம் போட்ட சிறுவர் கதை நூல்கள் போன்றவற்றை வாசிக்கத் தொடங்கலாம். HINDU போன்ற உயர் தர ஆங்கில இதழ்கள், அகரமுதலிகளை எடுத்த எடுப்பிலேயே புரட்டுவது மட்டும் ஆங்கிலம் பேச உதவாது.

* தமிழ் தெரியாத பிற மொழி நண்பர்களிடம் பேச்சு கொடுத்துப் பழகுங்கள். இந்தச் சூழ்நிலைகளில் உங்கள் பேச்சுப் பிழைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள். நீங்கள் பேசுவது அவருக்குப் புரிந்தாலே வெற்றி தான்.

* சரியோ தவறோ பேசத் தொடங்குங்கள். பேசவே தொடங்காமல் ஆங்கிலம் தெரியவில்லையே என்று வருந்துவதில் பயனில்லை. நீங்கள் எவ்வளவு கூடுதலாகவும் அடிக்கடியும் வெவ்வேறு விசயங்களைப் பேசிப் பழகுகிறீர்களோ அவ்வளவு விரைவில் பேச்சு ஆங்கிலம் கைக்கூடும்.

* நன்கு தெரிந்தவர்களிடம் குறை ஆங்கிலத்தில் பேசக் கூச்சமாக இருந்தால், முன் பின் தெரியாத இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு, ஒரு வாடிக்கையாளர் சேவையைத் தொலைபேசியில் அழைக்கும் போது ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு இருந்தால் பேசிப் பாருங்கள்.

ஆங்கிலம் மட்டுமல்ல எந்த ஒரு மொழிக்கும் இந்தக் குறிப்புகள் பொருந்தும். உங்களுக்கு வேறு ஏதும் குறிப்புகள் தெரிந்தால் சொல்லுங்கள்.

கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுதுவது எப்படி?
* கிரந்தம் தேவைப்படும் பிற மொழிச் சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல் இருந்தால் ஆளலாம்.

இஷ்டம் -> விருப்பம்.

சந்தோஷம் - > மகிழ்ச்சி

ஹேபிட் - > பழக்கம்

கஷ்டம் - > துன்பம், முடை, இடர், இடர்ப்பாடு, இன்னல், தடை, இடைஞ்சல்

ஸ்மைல் - > புன்னகை

* ஜ, ஷ, ஸ, ஹ ஆகியவற்றுக்குப் பதிலாகத் தமிழில் வழமையாக ஈடு கொடுக்கப்படும் எழுத்துகளைப் பயன்படுத்தலாம்.

வருஷம் - > வருடம்; வருசம். (ஆண்டு)

விஷயம் - > விசயம்; விதயம்; விடயம். (இது இன்னதென்று பொருள் புரியாது பயன் படுத்தும் ஒரு சொல். பெரும்பாலான இடங்களில் செய்தி (”சேதி”,) குறிப்பு, நிகழ்வு என்று பொருள்படும்)

விசேஷம் - > விசேசம்; விசேடம். (சிறப்பு, கொண்டாட்டம்)

விஷம் - > விசம், விடம் (நஞ்சு என்று தமிழில் சொல்லாம். விசம், விடம் என்று ஒலிப்பைத் திரித்துச் சொன்னாலும் பாம்பு கொத்தினால் உயிர் போவது உறுதி :) )

ஷாந்தி -> சாந்தி

ஷங்கர் - > சங்கர்

ஹனுமான், ஹிந்தி, ஹிந்து, ஹோட்டல், ஹொகேனக்கல் - > அனுமான், இந்தி, இந்து, ஓட்டல், ஒகேனக்கல் (ஹகரத்தை விடுத்து அதை அடுத்து வரும் உயிர் ஒலியைக் கொள்ள வேண்டும்)

ராஜா, ரோஜா, ஜாதி, ஜோதிடம், ஜோதி - > ராசு, ராசா, ரோசா, சாதி, சோதிடம், சோதி.  (முதல் சகரத்தை வல்லினமாக பலுக்கினால், ஒலித்திரிபு குறைவே)

மேல் உள்ள எடுத்துக்காட்டுகளைக் கொண்டு, கிரந்தம் தவிர்த்துத் தமிழில் எழுதுவது தற்போதும் பெரு ஊடகங்களிலும் வழக்கில் உள்ளதே என அறியலாம். சில சொற்களைக் கிரந்தம் தவிர்த்தும் சிலவற்றில் கிரந்தம் தவிர்க்காமலும் எழுதுவதற்கு போதிய தமிழாக்க முயற்சிகளும் பழக்கமும் இல்லாததே காரணம். எனவே, கிரந்தம் தவிர்த்து எழுதுவதை ஏதோ புதிய நடைமுறையாகக் கருதத் தேவை இல்லை.

எழுத்துக்களை விடுத்து எழுதுவதற்குப் பின்வரும் விதிகளைப் பின்பற்றலாம்.

ஸ் - சு
ஸ - ச; ஸா - சா …

(விதிவிலக்காக சில இடங்களில் ஸ் - > சி ஆகும். எடுத்துக்காட்டுக்கு, ஸ்நேகா - > சிநேகா)

ஷ் - சு
ஷ - ச; ஷா - சா ..

ஜ் - சு
ஜ - ச; ஜா - சா ..

ஸ்ரீ - சிறி (அல்லது) சிரி

க்ஷ் - க்சு
க்ஷ - க்ச; க்ஷா - க்சா ..

ஹ் - சொல் முதலில் வந்தால் இகரம் கொண்டு எழுதவும்.

ஹ்ருதயம் - > இருதயம்

ஹ் - சொல்லின் இடையில், கடைசியில் வந்தால் புறக்கணிக்கவும்.

தேஹ்ராதூன் - > தேராதூன்
ஹ - சொல் முதலில் வந்தால் - > அ ( ஹ் புறக்கணித்து அதை ஒட்டிய உயிரொலியைக் கொள்ளவும்); ஹா - ஆ; ஹி - இ ..

ஹிந்து - இந்து; ஹனுமன் - அனுமன்; ஹோட்டல் - ஒட்டல்

ஹ் - சொல் இடையில் வந்தால் - >  க; ஹா - கா ..

மோஹன் - மோகன்; மஹாத்மா - மகாத்மா.

* பொருளுள்ள பெயர்ச்சொற்களுக்கு சீனம், சப்பானிய மொழி போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் முற்காட்டு இருந்தால், நாமும் சொற்களை மொழிபெயர்த்து பொருள் விளங்குமாறு வழங்கத் தயங்கக்கூடாது.

* இடுகுறிப் பெயர்ச்சொற்களை இயன்ற வரை தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதி அடைப்புக்குறிகளில் ஆங்கிலம், மூல மொழியின் எழுத்துகளைக் கொண்டு எழுதிக் காட்டலாம். ஒலிக்கோப்புகள் தரலாம்.


தமிழ் இணையத் தன்னார்வலக் கூட்டு முயற்சித் திட்டங்களில் பங்களிப்புகள் குறைவாக இருப்பது ஏன்?

ஒவ்வொரு நாளும் திட்டத்தில் பங்கு கொண்டு ஒரு மணி நேரமாவது செலவிடுபவர்கள், அது குறித்த பெருமளவு சிந்தனைகளைச் சுமந்து திரியும் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கை ஒவ்வொரு திட்டத்திலும் விரல் விட்டு எண்ணத்தக்க அளவிலேயே இருக்கிறது.

எட்டு கோடித் தமிழர் இருக்கிற போது ஏன் இந்த ஒற்றைப் படை நிலை?

முதலில் ஒன்றை அறிவோம். இந்தக் குறைவான எண்ணிக்கை தமிழ் இணையத் திட்டங்களுக்கு மட்டும் உள்ள நிலை இல்லை. மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால், சமூகத்தில் நிகழ்வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் பல கூட்டு முயற்சி, தன்னார்வல, இலாபநோக்கற்ற திட்டங்களுக்கும் கூடப் பங்களிப்பு குறைவே. ஆக, நிகழ் உலகத்தில் பங்களிப்புக் குறைவுக்கு காரணமாக இருக்கும் பணமின்மை, நேரமின்மை, மனமின்மை, திறனின்மை போன்ற அத்தனைக் காரணங்களும் இணையத்துக்கும் பொருந்தும்.

எட்டு கோடித் தமிழரில் போர்ச் சூழலால் அல்லல்படும் பல இலட்சம் ஈழத் தமிழர்களை விடுவோம்.

அவர்களைத் தவிர்த்து, உணவு, உடை, உறைவிட, பிற இன்றியமையா வாழ்க்கைத் தேவைகள் முடிந்து,  நிம்மதியாக வாழும் தமிழர்கள் எத்தனை பேர்?

(இவர்களில் பாதி மக்கள் தொகையான பெண்கள் தொகையைக் கழித்து விடலாம். இது வரை இது போன்ற திட்டங்களில் முனைப்புடன் இயங்கும் பெண் பங்களிப்பாளரைக் கண்டதில்லை. அவர்கள் மேல் வருத்தம் இல்லை. அவர்களை அப்படி பங்களிக்க விடாத சமூகக் காரணிகள் எவ்வளவோ உள)

எஞ்சியவர்களில் முழு நேர கணினி, வேகமான அளவற்ற இணைய இணைப்பு உள்ளோர் எத்தனை பேர்? அலுவலகத்தில் நாள் முழுக்க கணினியைக் காண்பவர்கள் பலர் ஓய்வு நேரத்திலும் கணினி முன் அமர விரும்புவதில்லை. அதையும் பொருட்படுத்தாது வருபவர்களுக்கு, இணையத்தில் நுட்பத் தடையும் சேர்ந்து கொள்கிறது. விக்கிமீடியா திட்டங்களில் பங்களிக்க விரும்புபவர்களுக்கு மீடியாவிக்கி மென்பொருளைப் புரிந்து கொள்வதில் தொடக்கக் காலச் சிரமங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு முனைப்பான பங்களிப்பாளரை இது எந்த விதத்திலும் மட்டுப்படுத்துவதில்லை. சொல்லப் போனால், தொல்லை தரக்கூடிய பயனர்களை முதலிலேயே கழித்துக் கட்டுவதற்கு இந்த நுட்பத் தடையும் ஒரு காரணம் என்று சொல்வோரும் உளர்.

அவர்களில் கல்வி கற்ற தமிழார்வமுள்ளோர் எத்தனை? பலர் மேற்கண்ட வசதிகளைப் பெற்று இருந்தாலும் பொழுது போக்குக்காக அணுகுபவர்களும் பலர்.

அவர்களில் இத்திட்டங்களுக்குப் பங்களிக்கும் ஓய்வு நேரம், வயது, மனநிலை, வேகம், திறன் வாய்க்கப்பெற்றவர்கள் எத்தனை பேர்?

அப்படி பங்களிப்பவர்களுக்கு உதவியாகத் தமிழிணையத்தில் தமிழில் கிடைக்கும் தகவல் ஆதாரங்கள் எவ்வளவு?

… என்று யோசித்துக் கொண்டே போனால், இத்திட்டங்களுக்கு உள்ள பங்களிப்புக் குறைபாடுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ், தமிழிணையத் திட்டங்கள் வளர, தமிழ்ச் சமூகம் வளர வேண்டியது முதற் தேவையாக இருக்கிறது.

தமிழ்நாடு, ஈழத்தில் இருந்து வரும் பங்களிப்புகளை விட பிற மாநிலங்கள், நாடுகளில் நல்ல வாழ்க்கைச் சூழல், உறவுகள் / நட்புகள் குறுக்கிடா ஓய்வு நேரம் வாய்க்கப் பெற்றவர்கள் கூடுதல் பங்களிப்புகளை அளிப்பதைக் காணலாம்.

தொலைநோக்கின்மை

ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் குழந்தைகள் பசியால், ஊட்டக்குறைவால் இறக்கிறார்கள். ஆனால், ஆழ்துழாய்க் கிணறில் அகப்பட்ட ஒற்றைச் சிறுவனைத் தான் நாள் முழுதும் ஊடகங்கள் கவனிக்கின்றன. அரசுகளும் கவனிக்கின்றன. சூழல் மாசால் கொஞ்சம் கொஞ்சமாகச் சாகும் உலகைக் கவனிப்பதில்லை. ஆனால், ஆழிப் பேரலையோ நிலநடுக்கமோ வந்து ஒரே நாளில் பலர் மிரட்டலாகச் செத்தால் தான் கவனிக்கிறோம். கண்ணுக்குத் தெரியாமலும் கொஞ்சம் கொஞ்சமாகவும் நிகழும்  பிரச்சினையானாலும் சரி பயனாலும் சரி அவை நம்மை ஈர்ப்பதில்லை.

அதே போல் இந்தத் திட்டங்களின் தொலைநோக்குத் தேவையை நாம் உணர்வதில்லை. இன்று இத்திட்டம் முழுமையடையாவிட்டால் பெரிய இழப்பு ஒன்றும் இல்லை என்ற எண்ணம் பலரை அதற்கானப் பங்களிப்பை ஒத்திப் போடச் செய்கிறது. “நாம் செய்யும் சிறு பங்களிப்பா பெரிய வேறுபாட்டை நல்கப் போகிறது” என்று எண்ணச் செய்கிறது.

நான்

“நான்” என்ற உணர்வு அனைவரிடமும் மேலோங்கி இருப்பதும் ஒரு முக்கியத் தடை. வெற்றிகரமான கூட்டு முயற்சித் திட்டங்களின் அடிப்படையே ஒருவரின் பங்களிப்பை இன்னொருவர் எந்த வகையிலும் மாற்றி அமைக்கலாம் எனபதும் அம்மாற்றங்கள் நன்னோக்கிலேயே இருக்கும் என்ற புரிதலும் எதிர்ப்பார்பும் தான். ஆனால், தான் தந்த ஒன்றை எப்படி மாற்றலாம், குறை கண்டுபிடிக்கலாம் என்று எண்ணுவோரும், எந்த விதத்திலும் தங்கள் பங்களிப்பு குறித்து உரையாடி மேம்படுத்திக் கொள்ள முனையாதோரும் உளர்.

மாற்றங்களை அனுமதிப்பவர்களும் தங்கள் பெயர் ஏதாவது ஒரு வகையில் பெரிதாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து பங்களிக்க வேண்டிய திட்டங்களில் இது சாத்தியமில்லை என்பது ஒவ்வொரு பங்களிப்பாளரும் தங்கள் உழைப்புக்கு ஏற்ற பாராட்டு கிடைக்காமல் போவதாக எண்ணலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் 1000 கட்டுரைகளைத் தாண்டி எழுதியோரையும் 3, 4 நான்கு முறை தான் பாராட்டி இருப்போம் :) அதையே அவர்கள் வலைப்பதிவில் எழுதி இருந்தால் ஒவ்வொரு கட்டுரைக்கும் எத்தனையோ மறுமொழிகளில் பாராட்டும் அவருக்கான பெயரும் அறிமுகமும் கிடைத்திருக்கும்.  ஆக, பங்களிப்புக்கான பெரிய பாராட்டுகளை எதிர்ப்பார்ப்போரையும் இத்திட்டங்கள் ஈர்ப்பதாயில்லை. (தன்னை கடைசி வரை அடையாளம் காட்டாமலே பெரிய பங்களிப்புகள் நல்குவோரும் உள்ளனர்!)

தொல்லைத் தலைவர்

ஒரு திட்டத்தை முன்னின்று தொடங்கிச் செய்பவரோ, திட்டத்தில் முன்னணி பங்களிப்பாளராக இருக்கும் ஒருவரோ திட்டத்தைத் தன்னோடு தொடர்புப் படுத்தி ஒட்டு மொத்தப் பெயரையும் தட்டிச் செல்ல முனைவதும், ஊக்கமுடன் வரும் புதியவர்களைப் புறக்கணிப்பதும் உண்டு. மிகவும் முக்கியமான திட்டங்களில் இந்தச் செயற்பாடு இருந்தால், அது இன்னொரு புதிய திட்டத்துக்கு வித்திட்டு பங்களிப்பைச் சிதறச் செய்யும். முக்கியமில்லாத திட்டங்களில் மற்றவர்கள் பங்களிக்காமல் அமைதியாக இருந்து விடுவார்கள்.

திட்டத்தின் தனித்துவம், தேவை

இணையத்தில் ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியத்துக்கு இருந்த தேவை ஒரு அகரமுதலி, செய்திச் சேவைக்கு இருக்கவில்லை. அதன் காரணமாகவே உலக அளவிலேயே கூட விக்கிப்பீடியா வெற்றி பெற்ற அளவு அதன் மற்ற திட்டங்கள் வெற்றி பெறவில்லை. ஆக, ஒரு திட்டம் தனித்துவமானதும், உடனடித் தேவை மிக்கதாகவும், அத்தேவையைத் தீர்க்கப் புகுந்த முதல் திட்டமாகவும் இருத்தல் அவசியம்.

திட்டத்தின் அளிப்புரிமை

திட்டத்தின் அளிப்புரிமை விதிகளும் முக்கியமானவை. தன்னுடைய ஆக்கங்களை எந்தத் தடையுமின்றி பிறருக்கு நல்காமல் தன்னுடைய இருப்பைத் தக்க வைப்பதில் மட்டும் அது முனையுமானால், தங்களுடைய உழைப்பு, திறன், அறிவை எந்த ஊதியமும் இல்லாமல் நல்கக் கூடியவர்களை அத்திட்டத்தால் ஈர்த்துக் கொள்ள இயலாது.

திட்டத்தின் வணிகப் பெறுமதி

திறமூல, கட்டற்ற இயக்கங்கள் இலவசமாகவே கிடைக்கும் என்றாலும் அவை வணிக முயற்சிகளைப் பெரும்பாலும் தடை செய்வதில்லை. லினக்சு, வேர்ட்பிரெசு இலவசமாகக் கிடைத்தாலும் அவற்றைச் சுற்றி பணம் ஈட்டும் பெறும் வாய்ப்புகள் உள. இதுவரை தமிழில்அத்தகைய கணிமைத் திட்டங்கள் குறைவாக இருப்பதும், இருந்தாலும் பொருள் ஈட்டும் வாய்ப்பு  குறைவாக இருப்பதும் ஆர்வலர்களை ஈர்க்காததற்கு ஒரு காரணம்.

தமிழர் பண்பு

தமிழர்கள் ஒன்று கூடி எந்த ஒரு கூட்டு முயற்சியிலும் ஒத்துழைப்பது குறைவு என்றும் சிலர் கருதுகின்றனர். பார்க்க - தமிழ் இணையத்தில் கூட்டுச் செயற்பாடுகள்.

**

எல்லாம் அமைந்தும் இணையத் திட்டங்களுக்குப் பங்களிக்காதவர்கள் தன்னலக்காரர்களா?

எல்லாரையும் அப்படிச் சொல்ல இயலாது.

சிலருக்கு, உதவி செய்ய எல்லாம் அமைந்தும், பசி, பிணி, கல்வியின்மை என்று ஒவ்வொரு நாட்டிலும் உயிர் போகும் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதால் இதை விட முக்கியமானப் பிரச்சினைகளுக்கு தங்கள் உழைப்பைத் தந்திருக்கலாம்.

சரி, அப்ப இணையத் திட்டங்களுக்குப் பங்களிப்பவர்கள் பொதுநலக்காரர்களா?

அப்படியும் சொல்ல இயலாது :) கொஞ்சம் பெரிய வட்டத்தில் தன்னலக்காரர்கள் என்று கொள்ளலாம். இத்திட்டங்களில் பங்களிப்பவர்களால் பொது நலன் இருந்தாலும் அதில் தன்னலமும் இருக்கிறது. என் வீடு, என் உறவு என்பதில் இருந்து என் மொழி, என் பண்பாடு, என் இனம் என்ற அடுத்த கட்ட தன்னலத்துக்கு நகர்கிறார்கள். அதன் அடுத்த கட்டமாக என் நாடு, என் உலகம் என்று நகரலாம். நானே தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் அளவுக்கு ஆங்கில விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பதில்லை.

பொது நலம் என்ற ஒரே காரணத்துக்காக நாம் இத்திட்டங்களில் ஈடுபடுவதில்லை. ஒரு பொது நலனுக்கு உதவுவதில் நம்முடைய தனிப்பட்ட நலனும் உள்ளடங்கி இருக்க வேண்டும். (நான் நேரம் ஒதுக்கி சில விக்கிப்பீடியா கட்டுரைகள் எழுதினால் எனக்குத் தேவைப்படும் கட்டுரைகளையும் யாராவது எழுதித் தருவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு உண்டு!!).

இன்னொன்று, இந்த பொதுத் திட்டங்களில் ஈடுபடுவது ஒரு வித விளையாட்டு, பொழுதுபோக்கு போன்று மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் இருப்பதும் அத்திட்டத்தில் இருந்து ஒருவர் பெற்றுக் கொள்ளும் பயனே. இந்த மனமகிழ்ச்சி என்னும் தன்னலம் இல்லாமல் ஒருவர் இவற்றில் ஈடுபாடு காட்ட இயலாது. எனவே, ஒருவருக்கு அக்கறை இருந்தாலும், இந்த ஈடுபாட்டின் மூலம் அவருக்கு மகிழ்ச்சி வரவில்லை என்றால், அவரைக் குற்றம் சொல்ல இயலாது.

சரி, அப்ப இந்தத் திட்டங்களை வளர்ப்பது எப்படி?

ஆர்வம் உள்ள பங்களிப்பாளர்கள் அயராது அன்றாடமோ வாரம் சில மணி நேரமோ தங்கள் இயலுகைக்கு ஏற்பவும் திட்டத்தின் தேவைக்கு ஏற்பவும் உழைக்க வேண்டும்.

இயன்ற அளவு எல்லா களங்களிலும் திட்டம் குறித்து பரப்புரை செய்ய வேண்டும். ஆனால், ஒரே ஆட்களிடம் திரும்பத் திரும்பச் சொல்வதிலோ இறைஞ்சுவதிலோ பயன் இருப்பதில்லை என்று கண்டு கொண்டிருக்கிறேன். ஒருவருக்கு ஒரு திட்டம் குறித்த இயல்பான ஆர்வம் இருக்கும் எனில், அவர் முதன்முறை அறிந்த உடன் தானாகவே வந்து விடுவார். நம் அழைப்புக்காக மட்டுமே வருபவர்கள் துவக்க உற்சாகத்தை விரைவிலேயே தொலைத்து விடுவார்கள்.

திட்டத்தின் பயன், திட்டம் குறித்த தகவல் கிடைக்கும் பயனர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பங்களிக்கத் தொடங்குவார்கள். ஏனெனில், நாம் பெற்றதில் ஒரு பகுதியையாவது திரும்பத் தர வேண்டும் என நினைப்பது நம்முள் உள்ள இயல்பு.

அவ்வளவு சீக்கிரம் திட்டத்துக்குத் தகுந்த முனைப்பான பங்களிப்பாளர்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால், அப்படி கிடைக்கையில் அவர்கள் பல சாதாரண பங்களிப்பாளர்களை விட பல மடங்கு பங்களிப்பார்கள் என்பது என் அனுபவம்.

ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ போன்ற கிரந்தம் உள்ளிட்ட தமிழ் அல்லாத பிற எழுத்துகள் நீங்கிய எழுத்து முறையைத் தனித்தமிழ் எனலாம்.

ஒருங்குறியில் அமைந்த பாமினி, அஞ்சல், தமிழ்99 விசைப்பலகைகளுக்கு NHM Writer ல் பயன்படுத்தக்கூடிய தனித்தமிழ் xml கோப்புகள் செய்து பார்த்தேன். (இதைச் செய்ய NHM Writer Developer Kit உதவியது. இதன் மூலம் இந்த xml கோப்புகளைத் தொகுப்பது, புதிதாக உருவாக்குவது இலகுவாக இருக்கிறது. விரைவில் இதைப் பொதுப் பயன்பாடுக்கு வெளியிடுவார்கள்)

இவற்றை http://ravidreams.net/files/thani-tamil-keyboards.rar என்ற முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

என்ன பயன்?

* எனக்கு கிரந்தம் தவிர்த்து தனித்தமிழில் எழுத ஆவல். ஆனால், தட்டச்சு மென்பொருளில் கிரந்தம் இருப்பதால் பழக்கம் காரணமாக அதைப் பயன்படுத்தத் தூண்டுகிறது. இனி தவிர்க்கலாம்.

* தனித்தமிழ் ஆர்வலர்களின் பயன்பாட்டுக்கும், தனித்தமிழ் பரப்பவும் இந்தக் கோப்புகள் உதவலாம்.

* எங்காவது கிரந்தம் தவிர்த்து எழுதினால், ” நீ எப்படி கிரந்தம் தவிர்த்து எழுதலாம்” என்று கேட்கிறார்கள். “ஐயா, அம்மா, என் மொழியிலும் அதை எழுத நான் பயன்படுத்தும்  மென்பொருளிலும் கிரந்தம் இல்லை” என்று சொல்வது இலகுவான விடையாக இருக்கும் ;) தமிழில் எழுத மென்பொருள் இல்லையென்று தமிங்கிலத்தில் எழுதுபவர்களை ஏற்றுக் கொள்ளும் போது இதையும் ஏற்றுக் கொள்வார்கள் தானே ;)

தமிழரல்லாத இந்தியர்களும் கூடும் எல்லா இடங்களிலும் தவறாது வரும் “தமிழ்நாட்டில் இந்தி” குறித்த சில கேள்விகளும் பதில்களும்:

தேசிய மொழியான இந்தி தெரியாமல் இருப்பது அவமானமில்லையா?

இந்தி ஒரு தேசிய மொழி இல்லை. இந்தியாவுக்குத் தேசிய மொழி என்று ஏதும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்கிறது. அதாவது பெரும்பான்மை மக்களிடம் தொடர்பு கொள்ள அந்த மொழி உதவுகிறது. அது போல இந்திய நடுவன் அரசின் ஆட்சி மொழிகளாக இந்தியும் ஆங்கிலமும் விளங்குகின்றன. இவ்விரு மொழிகளும் நடுவண் அரசு மாநிலங்களுடன் உரையாட உதவுகின்றன.

எனினும், இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்பது திட்டமிட்டு நன்றாகப் பரப்பப்படும் பொய்க்கருத்தை நம்புவோருக்குக் கூறிக் கொள்வது:

ஒருவர் இந்தி கற்று தான் இந்தியன் என்று நிரூபிக்க வேண்டுமா? ஒழுங்காக வரிகள் கட்டி, சட்டத்தை மதித்து நடந்தால் போதாதா? தமிழ்நாட்டில் இருந்து இந்தி தெரியாத இளைஞர்கள் இந்தியப் படைகளில் சேர்ந்து நாட்டுக்குப் பங்களிப்பதில்லையா?

புலி இந்தியாவின் தேசிய விலங்கு என்பதற்காக அதை எல்லாரும் வீட்டில் வைத்து வளர்க்கத் தேவை இல்லை. வளர்க்கவும் முடியாது. காட்டில் காணும்போது அடித்துக் கொல்லாமல் இருந்தால் சரி.

இந்தி இந்தியாவின் பெரும்பான்மை மொழி இல்லை. 40% மக்களாலேயே பேசப்படுகிறது. 10 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கிறது.

நாடு என்னும் அமைப்பு நமது பாதுகாப்புக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு தற்காலிக காலத்துக்குக் காலம் மாறும் நில வரையறை. அதுவும், இந்தியா என்னும் நாடு செயற்கையாக உருவாக்கப்பட்டே 60 ஆண்டுகள் தான் ஆகின்றன. ஆங்கிலேயர்கள் ஒட்டு மொத்தமாய் சில பகுதிகளைப் பிடித்து போகும் போது இந்தியா என்று பெயரிட்டு விட்டு விட்டுப் போனார்களே தவிர, இந்தியா என்பது வரலாற்றில் எப்போதும் ஒரு ஒற்றை நாடாக இருந்ததில்லை. அதற்கு என்று ஒற்றைக் குணங்கள் ஏதும் இல்லை. ஒரு வேளை சீனாவையும் சேர்த்து இந்தியாவோடு ஒரு நாடாக சேர்த்துத் தந்து விட்டு ஆங்கிலேயர்கள் போயிருந்தால், கணிசமான மக்களால் சீனம் பேசப்படுகிறது என்ற காரணத்துக்காக அதைத் தேசிய மொழியாக அறிவித்து எல்லாரையும் அதைக் கற்கச் சொல்ல வற்புறுத்த முடியுமா? அதே அளவு அபத்தம் தான் இந்தியாவில் இருப்பதற்காக இந்தி கற்கச் சொல்லி வற்புறுத்துவதும்.

இந்தியா முழுதும் ஒரே மொழியைப் புரிந்து கொள்ள இயன்றால் நாட்டு முன்னேற்றத்துக்கு உதவுமே?

நாடு முழுவதும் ஒரே மொழி பேசியும் முன்னேறாமல் இருக்கும் எத்தனையோ நாடுகளைக் காட்ட முடியும். நாட்டு முன்னேற்றத்துக்கு வேறு எவ்வளவோ முக்கிய காரணிகள் உள்ளன. ஒரே மொழி பேசுவது ஒரு பொருட்டு இல்லை.

நாட்டு மக்களுக்கு எல்லாம் ஒரு மொழி புரிந்தால் ஒருவருக்கு ஒருவர் பேசிப் பழக உதவுமே? என்ன இருந்தாலும் இந்தியர்களுக்கு என்று ஒரு மொழி அடையாளம் வேண்டாமா?

இதற்கு அண்ணாத்துரை சொன்ன பதில் தான் பொருந்தும்:

ஒரு வீட்டுக்குள் சின்ன நாய் புகுவதற்கு என்று ஒரு சின்னக் கதவும் பெரிய நாய் புகுவதற்கென்று ஒரு பெரிய கதவும் வைப்பதில்லை. பெரிய கதவு வழியாகவே சின்ன நாயும் வரலாம். உலகம் முழுவதற்கும் பேசுவதற்கு என எல்லா இந்தியர்களும் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முனைகையில் இந்தியாவுக்குள் பேசுவதற்கு என்று மட்டும் ஒரு மொழி தேவை இல்லை.

இந்தியாவே வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு நாடு தான். இதில் அடையாளத்துக்காக என்று ஒரு மொழி தேவை இல்லை. மொழிகளைத் தாண்டி சமயம், இனம் என்று வேறு எத்தனையோ தனித்த அடையாளங்களைக் கொண்டே இருக்கிறோம்.

பிற மொழிகள், மொழி பேசுவோர் மேலான வெறுப்பு தானே இந்தி மொழி கல்லாததற்குக் காரணம்?

இந்தி கற்பிக்கப்படும் மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் பிற மொழியினர், குறிப்பாக வடநாட்டவர் மிகப் பாதுகாப்பாக, வளமாக, மரியாதையுடன் தான் இருக்கின்றனர். நாம் இன்னொருவர் மொழியை மதிக்கிறோம் என்பதற்காக அதைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்று அவசியமில்லை. இன்னொரு மொழி பேசும் மாநிலத்துக்குச் செல்கையில் வாழ்வியல் காரணங்களுக்காக அந்தந்த இட உள்ளூர் மொழிகளைக் கற்றுக் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு வரும் பிற மொழியினர் தமிழ் கற்றுக் கொள்வது தான் சரியாக இருக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் வட மொழினரைக் காட்டிலும் வட நாட்டில் இருக்கும் தமிழர்கள் நன்றாகவே இந்த பேசுகிறார்கள்.

இந்தி, பிற மொழிகளைக் காட்டிலும் தமிழ் மேலானது என்ற எண்ணம் தான் தமிழ்நாட்டில் இந்தி கல்லாததற்குக் காரணமா?

இதில் மேல், கீழ் என்ற வாதத்தை விட்டு விடுவோம். தமிழ், கொஞ்சம் ஆங்கிலம் தவிர, தமிழ்நாட்டில் வாழ, வேலை செய்ய, பிழைக்க வேறு எந்த மொழியும் தேவையில்லை என்பதே முக்கியம். தேவையில்லாத ஒன்றைக் கற்பதாலும் கற்பிப்பதாலும் என்ன பயன்? கிரிக்கெட் போன்ற விளையாட்டுப் போட்டி வர்ணனைகள், இந்தித் திரைப்படங்கள், விடுதலை நாள் - குடியரசு நாள் உரைகள் கேட்க மட்டுமே உதவும். அதுவும் ஆங்கில உரைகள் கிடைக்கையில் இதற்காக மெனக்கெட்டு இந்தி படிக்க வேண்டுமா? சீனம், ஆங்கிலப் படங்களைத் தமிழாக்கிப் பார்ப்பது போல் இந்திப் படங்களையும் தமிழாக்கிப் பார்க்கலாமே? அல்லது, ஆங்கில உரைத்துணையோடு பார்த்து விட்டுப் போகிறோம். இந்திய மொழிகள் சொற்றொடர் அமைப்புகள் பெரிதும் தொடர்புள்ளவை என்பதால் 2, 3 மாதங்கள் எந்த மொழிப் படங்களைத் தொடர்ந்து பார்த்தாலும் விரைவில் அந்த மொழியைக் கற்றுக் கொள்ள முடியும்.

தமிழ்நாடு தாண்டி பிற மாநிலங்களுக்குப் போவோர் சிரம்பபட மாட்டார்களா? இந்தி கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்புகள் கூடாதா?

பிச்சைக்காரன் கூட பத்துக்கு மேற்பட்ட இந்திய மொழிகளில் இந்திய இரயில்களில் பிச்சை எடுக்கிறான். ஒரு வாழ்வியல் தேவை வரும்போது எந்த மொழியையும் ஓரிரு மாதங்களில் கற்றுத் தேற முடியும். எத்தனையோ பேர் பஞ்சம் பிழைக்க ஒரு மொழியும் தெரியாமல் சீனா, சிங்கப்பூர், அரபு நாடுகள், வட மாநிலங்கள் என்று செல்கின்றனர். அவர்கள் பிழைக்க மொழி தடையாய் இருப்பதில்லை. ஓரிரு மாதங்களில் உள்ளூர் மொழியைப் பேசிக் கற்றுத் தேர்ந்து விடுகிறார்கள். அதிகம் படிக்காத பாமரர்களுக்குத் தங்களுக்குத் தேவையானதைத் தாங்களே கற்றுத் தேரும் திறன் இருக்கிறது. இந்தி கற்பிக்கப்பட வில்லை என்று குற்றம் சொல்பவர்கள் என்றால் அரசு. தனியார் வேலைகளில் இருப்பவர்கள் தான். ஒரு வேலையில் சேரும்போதே, அவ்வேலையில் பதவி உயர்வு பெற இந்தி தேவையென்றால் முன்னரே ஓய்வு நேரத்தில் அதைக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டியது தானே? அதை விடுத்து அரசைக் குற்றம் சொல்வது நியாயம் இல்லை. தாய்மொழியையும் அதன் மூலம் அறிவையும் கற்பிப்பது மட்டுமே அரசின் கடமை. 

இந்தி கற்றுக் கொள்ளாததால் தமிழ்நாடு பின்தங்கி விடாதா?

இந்தி பேசும், இந்தி கற்பிக்கும் மாநிலங்களை விட தமிழ்நாடு எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் பிறகு ஏன் வட நாடுகளில் இருந்து இங்கு சோன் பப்படி விற்கவும் வட்டிக் கடை வைக்கவும் வருகிறார்கள்? ஒரு மாநில வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் அங்கு பேசப்படும் மொழிக்கும் பெரிய தொடர்பு இல்லை. ஒரு நாட்டு முன்னேற்றத்தைப் போலவே, ஒரு மாநில முன்னேற்றத்துக்கும் வேறு முக்கிய காரணிகள் உள்ளன.

இந்தி கற்பிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன?

வெளிமாநிலம் செல்வோர், இந்தியை அடிப்படையாகக் கொண்டு வேலை / பதவி உயர்வு பெறுவோர் என்று இந்தி அறிவின் தேவை உடையோர் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் மிகக்குறைவான விகிதத்தினர். இவர்கள் தேவைக்காக ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இந்தி கற்பிக்கத் தேவை இல்லை. பள்ளிக்கு ஓரிரு இந்தி ஆசிரியர்கள், அவர்களைப் பயிற்றுவிக்கும் செலவு, இந்திப் பாடப்புத்தகங்கள் அச்சிடும் செலவு, தேர்வுச் செலவு போன்றவற்றில் செய்யப்படும் முதலீடு பயனுள்ளது தானா? ஏற்கனவே பாடச்சுமையால் அல்லல்படும் மாணவர்களுக்கு மூன்று வெவ்வேறு எழுத்து முறைகளைக் கொண்ட மொழிகளைக் கற்பிப்பது பாடச் சுமையைக் கூட்டும். தமிழ்நாட்டில் பொது வழக்கில் கொஞ்சம் ஆங்கிலம் புழங்கும் போதே அதைக் கற்றுக் கொள்ளச் சிரமப்படும் மாணவர்களுக்கு ஒரு அறிமுகமும் இல்லாமல் இந்த கற்றுக் கொள்வது சிரமமாக இருக்கும். கல்லூரி ஆண்டு இறுதி வரை ஆங்கில வழியில் படித்த பிறகும் கூட ஆங்கிலம் பேச, புரிந்து கொள்ளத் தடுமாறுபவர்கள் இருக்கையில், வெறுமனே இந்தியை மொழிப்பாடமாகப் படித்து மட்டும் அதில் பெரிய புலமை ஏதும் அடையப்போவதில்லை. இந்தி பிரச்சார சபா எல்லாம் போய் இந்தியில் பட்டங்கள் வாங்கிய நண்பனுக்கு இந்திப் படங்களில் பேசும் இந்தி புரியவில்லை. பேச்சு இந்தியைப் புரிந்து கொள்ள பாடப் புத்தக இந்தி பெரிய உதவி புரிவதில்லை. எனவே, கற்பித்தாலும் உதவாக்கரை மொழியாகத் தான் இருக்க வாய்ப்புண்டு. தவிர, சொந்த விருப்பினால் இந்தி கற்றுக் கொள்ள விரும்புபவர்களை எந்த விதத்திலும் அரசு தடை செய்யவில்லை.

இந்தி கற்பிப்பதால் வரும் வேறு முக்கிய பின்விளைவுகள் என்ன?

ஏற்கனவே ஆங்கில வழிக்கல்வி, மோகத்தால் தமிழ்நாட்டில் தமிங்கில நோய் பெருகி வருகிறது. இதில் இந்தியும் கலந்தால் அது மேலும் மொழிச் சிதைவுக்கே இட்டுச் செல்லும். தமிழ்நாட்டில் வாழ தமிழ் தேவை இல்லை என்ற நிலை தமிழின் இருப்பையும் தொடர்ச்சியையுமே கேள்விக்குள்ளாக்கும்.  இந்தியா முழுதும் இந்தி தெரியும் என்ற நிலை வந்தால், அனைத்துச் செயற்பாடுகளையும் இந்தியிலேயே செய்யும் நடவடிக்கைகள் வேகம் பெறும். இது இந்தியை தாய்மொழியாகக் கொண்டு புலமை பெற்றிராத பிறருக்கு சம வாய்ப்பைத் தராது. நாளடைவில் இந்தி சரிவரத் தெரியாத பிற மொழியினர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படும் நிலைக்கு இட்டுச் செல்லும். ஒரு தேசிய மொழியை வலியுறுத்திப் பிற மொழிகளைப் புறக்கணித்த நாடுகள் பலவற்றிலும் இந்நிலையைக் காணலாம். தமிழ்நாட்டில் தொழில்புரிய, வாழ இந்தி தெரிந்தால் போதும் என்ற நிலை தமிழ், தமிழர் புறக்கணிப்புக்கு வித்திட்ட பிற மொழி ஆதிக்கத்தினருக்கு வழி வகுக்கும். மும்பை, பெங்களூர் போன்ற இடங்களில் உள்ளூர் மொழி புறக்கணிக்கப்படுவதை எடுத்துக்காட்டாக நோக்கலாம். திரைப்படம், வணிகம், ஊடகம் என்று அனைத்து மட்டங்களிலும் உள்ளூர் மொழி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும். உள்ளூர்ப் பொருளாதாரம் அடி வாங்கும். உள்ளூர் நலன்களை முன்னிறுத்தும் கட்சிகளைக் காட்டிலும் தேசியக்கட்சிகள் முன்னிலை பெறலாம். தமிழருக்கு இந்தி தெரியவில்லை என்பது தமிழர்களைக் காட்டிலும் பிற மொழியனருக்குத் தான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் இந்தி கற்பிக்க வேண்டும் என்று சொல்வது பிற மொழியனரின் நலன்களை முன்னிட்டே ஒழிய தமிழர்களின் நலன்களை முன்னிட்டு அல்ல.

குருவி - திரை விமர்சனம்

இன்று மதியம் நெதர்லாந்து almere நகரில் Cinescope திரையரங்கில் குருவி திரைப்படம் பார்த்தோம். ஈழத்து நண்பர் ஒருவரின் carல் 90 km பயணம். 15 ஐரோ நுழைவுச் சீட்டு. 100 முதல் 150 பேர் வந்திருப்பார்கள். 70% அரங்கு நிறைந்திருந்து.

என்னத்த சொல்ல?

* ஒவ்வொரு படத்திலும் கபடிப் போட்டி, ஓட்டப் பந்தயப் போட்டி போல் குருவியில் car பந்தயப் போட்டியல் கலந்து கொண்டு வெற்றி பெற்று விஜய் அறிமுகமாகிறார். (அஜித் உண்மையான car பந்தயக் காரர். அவரைக் கிண்டல் செய்து தான் இந்தக் காட்சி என்று சின்னக் குழந்தைக்கும் தெரியும்)

* பாடல்கள் கேட்கவே சுமார் தான். பொருந்தாத இடத்தில் அவற்றைப் புகுத்தியதால் திரையில் பார்க்கவும் மனம் ஒட்டவில்லை.

* ஆந்திர காட்சிகளில் ஏகப்பட்ட தெலுங்கு வசனம். நிச்சயம் தெலுங்கு புரியாத மக்களைக் கடுப்பேற்றும்.

* ஆந்திரப் பகுதியில் எடுத்ததாலோ என்னவோ தெலுங்குப் படம் போல ஏகப்பட்ட வன்முறை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், பிற்பகுதி படம் முழுக்க தெலுங்கப் படமான சத்ரபதியில் இருந்து காட்சிக்குக் காட்சி சுட்டிருக்கிறார்கள். கோடாலி கொண்டு ஆட்களை வெட்டிக் கொண்டே இருக்கிறார். ஒரே காட்டுக் கத்தல். கில்லி படத்தையாவது ஒக்கடு படத்தை மீள எடுக்கிறேன் என்று சொல்லி எடுத்தார்கள். அது போல் சொல்லிச் சுட்டிருந்தாலாவது நாகரிகமாக இருந்திருக்கும்.

காட்டெருமை போன்ற எதிரியின் அடியாளைத் துவைப்பது எல்லாம் 80களில் வந்த ரஜினி படங்களை நினைவூட்டுகின்றது. சுமன், ஆஷிஷ் எல்லாம் சொத்தை எதிரிகள். ரகுவரனும் போய்ச் சேர்ந்து விட்டார். பிரகாஷ்ராஜையே எல்லா படங்களிலும் பார்க்க முடியாது. தமிழ்த் திரைக்கு நல்ல எதிரிகள் தேவை.

* விவேக் இடைவேளை வரை வருகிறார். நகைச்சுவை ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. நிறைய இடங்களில் “கடி” தான்.

* இன்னும் எத்தனைப் படங்களில் தான் த்ரிஷாவை கிறுக்கி மாதிரியே காட்டுவார்கள்?

* விஜய், அதிரடி வசனம் பேசுங்க பரவால. ஆனா, காது கிழியுற ஆகிற அளவுக்கு படம் முடியுற வரைக்கும் பேசிக்கிட்டே இருக்காதீங்க.. தயவுசெஞ்சு !

* இந்தப் படத்துக்கும் Transporter (2002) படத்துக்கும் ஒற்றுமை இருப்பதா புரளி கிளம்ப அந்தப் படத்தையும் இரண்டு நாள் முன்ன பார்த்தேன். ஒரு ஒற்றுமையும் இல்லை. ஆனா, Mask of Zorro போல் ஒரு காட்சியில் கண்ணைக் கட்டிக் கொண்டு வருகிறார். துவக்கப் பந்தயப் போட்டி, நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை பிடிக்காமல் பெண் ஓடுவது, மாப்பிள்ளை துரத்துவது எல்லாம் கில்லியை நினைவூட்டுகின்றன. துவக்க கடப்பா காட்சி தூள் படத் துவக்கக் காட்சியை நினைவூட்டுகின்றது.

* நான் கில்லியை மூன்று முறை திரையிலேயே பார்த்திருக்கிறேன். சச்சின் பல முறை பார்த்திருக்கிறேன். இன்று கூட விஜய் ரசிகரும் வந்திருந்தார். அவருக்கே குருவி பிடிக்கவில்லை. கில்லியில் இருந்த கால்வாசி வேகம், பொழுதுபோக்கு கூட குருவியில் இல்லை. இடைவேளையிலேயே எல்லாரும் நெளிய ஆரம்பித்து கைக்கடிகாரம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். படம் முடிந்த பிறகு “என்னடா காக்கா, குருவின்னு படம் எடுக்கிறீங்க” என்று யாரோ சொல்லிக் கொண்டிருந்தார். அவசரமாக படம் தயாரிக்கச் சொல்லி நெருக்கியதால் தான் இப்படிச் சொதப்பி விட்டார்கள் என்று சொல்லி மனதைத் தேற்றிக் கொண்டார்.

**

தரணியை நம்பிப் போனால் ஏமாற்றி விட்டார். குருவி பார்த்து யாம் பெற்ற துன்பம் பெற வேண்டாம் இவ்வையகம். அடுத்து எந்தப் படத்தை நம்பிப் போய் தலையைக் கொடுக்கிறதுன்னு தெரியல. தலை வலிக்குது. ஏதாச்சும் நல்ல மெல்லிசைப் பாட்டா கேட்கணும்.

பி.கு - இணைய, அச்சு, காட்சி ஊடகங்கள் முதலிய எல்லாவற்றையும் முந்தி உலகிலேயே முதலாவதாக எழுதப்பட்ட குருவி திரை விமர்சனம் இதுவே :) !!

ஆங்கில L ஐத் தமிழில் எழுதும் போது ல.ள எழுத்துகளில் எதை எங்கு பயன்படுத்துவது என்பதற்கு சு.சீனிவாசன் வழிகாட்டுகிறார்.

a, e, i, o, u அடுத்து வரும் L க்கு லகரமும் பிற இடங்களில் ளகரமும் பயன்படுத்த வேண்டும்.

அப்படி என்றால். கூகுள் சரி. கூகுல் தவறு :)

பி.கு - சீனிவாசனின் சில பரிந்துரைகளுடன் வேறுபடுகிறேன். எனவே, லகர, ளகரப் பயன்பாடு குறித்த உசாத்துணைக்கு மட்டுமே அவரது கட்டுரையை மேற்கோளாகக் காட்டுகிறேன் என்பதை நினைவில் கொள்ளவும்.

1. Filezilla போன்ற ftp செயலி மூலமாக உங்கள் /blog அடைவில் வலச் சொடுக்கி file attributes பாருங்கள். அதில் read, write, execute என்ற 3×3 தெரிவுகளையும் தேர்ந்தெடுத்து recurse into subdirectories என்பதையும் குறியுங்கள்.

இந்த ஏற்பாடு வலைத்தளத்தில் இருந்து உங்கள் வழங்கியில் மாற்றங்களைச் செய்வதற்கான அனுமதியைத் தரும். இவ்வாறு செய்வது design-theme editor, plugins-plugin editor போன்றவற்றில் இருந்து வலையூடாக தேவையான வார்ப்புரு, நீட்சி மாற்றங்களைச் செய்ய, நீட்சிகளை இற்றைப்படுத்த உதவும்.

2. நிரந்தரத் தொடுப்பை மாற்றுங்கள்.

settings-permalink போய் custom என்ற பெட்டியில் /%postname%/ என்று கொடுத்து சேமித்தால் உங்கள் முகவரி தானாக மாற்றப்பட்டு விடும். இந்த மாற்றத்தைச் செய்ய .htaccess கோப்பில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும். முந்திய அடியில் சொன்னது போல் நாம் file attribute மாற்றங்கள் செய்திருந்தால் வேர்ட்பிரெஸே இந்த மாற்றத்தைச் செய்து விடும்.

சிலர் இடுகை முகவரியில் மாதம், ஆண்டுத் தகவல்களும் வருமாறு இடுகிறார்கள். என் கருத்தில் இது தேவையில்லாதது. ஏனென்றால், பல நாட்கள் சென்ற பிறகு நாமே எந்த மாதம் எழுதினோம் என்பதை மறந்து விடுவோம். அப்போது, இந்த மாதம், ஆண்டு முகவரியை நினைவு வைத்து உள்ளிட முடியாது. சற்றுமுன் போன்ற செய்தி முக்கியத்துவம் உள்ள அன்றாடம் இற்றைப்படுத்தப்படும் பதிவுகளுக்கு இந்த தேதி உள்ள முகவரிகள் உதவலாம்.

எடுத்துக்காட்டுக்கு, http://blog.ravidreams.net/2007/04/கடவுள்-வாழ்த்து என்று எழுதுவதை விட http://blog.ravidreams.net/கடவுள்-வாழ்த்து/ என்ற முகவரியை நினைவு வைப்பது எளிது. வாசகர்கள் இது போல் திருக்குறள் அதிகாரங்களின் அனைத்துப் பெயர்களையும் எழுதி என் இடுகைகளை அணுக முடியும். இதுவே லக்கிலுக் போல் விமர்சனம் எழுதுபவர்கள் என்றால் /நேபாளி, /பில்லா என்று அவரது இடுகைகளை அணுக இலகுவாக இருக்கும்.

3. பொதுவாக, வேர்ட்பிரெஸ்ஸில் ஒரு சிக்கல் என்றால் எல்லா நீட்சிகளையும் முடக்கி விட்டு இயல்பிருப்பு வார்ப்புருவுக்கு மாற வேண்டும். பிறகு ஒவ்வொரு நீட்சியாகப் போட்டுப் பார்த்து எதில் கோளாறோ அதைச் சரி செய்த பிறகு வேண்டிய வார்ப்புருவுக்கு மாறலாம்.

4. வேர்ட்பிரெஸ் தரவுத் தளம் உங்கள் /blog அடைவுக்குள் இல்லை. தனியே இன்னொரு இடத்தில் இருக்கிறது. எனவே, பிரச்சினைகளைச் சரி செய்வதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் வேர்ட்பிரசை மீள நிறுவிப் பார்க்கலாம். மீள நிறுவும் முன் உங்கள் wp-content அடைவையும், wp-config கோப்பையும் படி எடுக்க மறவாதீர்கள்.

5. MistyLook வார்ப்புருவில் தமிழ்ப் பதிப்பும் இருக்கிறது. MistyLook பதிவிறக்கப் பக்கத்தில் இருந்து Tamil translation file என்னும் zip கோப்பைப் பெற்று பிரித்து எடுத்தால் ta_TA.mo என்று இருக்கும். அதை உங்கள் வழங்கியில் உள்ள mistylook அடைவுக்குள் போடுங்கள். பிறகு, பதிவின் wp-config கோப்பில்

define (’WPLANG’, ”);

என்ற வரியை

define (’WPLANG’, ‘ta_TA.mo’);

என்று மாற்றவும். அவ்வளவு தான்.

விவரங்களுக்கு

http://wprocks.com/wordpress-tips/how-to-use-an-internationalized-theme-for-wordpress/

இந்தத் தமிழாக்கத்தை முழுக்கக் கைப்பட நானே 45 நிமிடங்களில் செய்து முடிக்க முடிந்தது. 132 சரங்கள். ஒன்றிரண்டு சரங்களைத் தமிழாக்குவதில் சொற்றொடர் அமைப்புச் சிக்கல்கள் இருந்ததால் ஆங்கிலத்திலேயே விட்டிருக்கிறேன். மற்றபடி 99% தமிழாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தமிழாக்கத்தில் உங்களுக்குப் பிடிக்காதவற்றையும் நீங்களே எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இதைச் செய்ய http://www.poedit.net/download.php செயலியைத் தரவிறக்க வேண்டும். பிறகு, உங்கள் mistylook அடைவில் உள்ள POT கோப்பைத் திறந்து தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். உங்களிடம் உள்ள mo கோப்புக்குத் தகுந்த தமிழாக்கங்கள் POT கோப்பில் இருக்காது. இதற்கான மூலத் தமிழ் POT கோப்பு என்னிடம் இருக்கிறது. யாருக்கும் வேண்டுமானால் அனுப்பி வைக்கிறேன்.

6. அருட்பெருங்கோ புதிய தமிழ்மணம் கருவிப்பட்டை நீட்சி செய்திருக்கிறார். இது தமிழ்மணம் கருவிப்பட்டையைப் பக்கத்தின் இறுதியில் சேர்க்கும். எனவே, பக்கத்தின் தரவிறக்க வேகத்தைப் பாதிக்காமல் இருக்கும். இக்கருவிப்பட்டையோடு தேன்கூட்டுக்கு மறுமொழி நிலவரம் தெரிவிக்கும் நிரலும் சேர்க்கப்பட்டிருக்கிறது. (தமிழ் முகவரி உள்ள இடுகைகளுக்கு மறுமொழி நிலவரம் காட்டாது. இது குறித்து தேன்கூட்டுக்கு எழுதி இருக்கிறோம். ) இந்தப் புதிய நீட்சியை அருட்பெருங்கோவிடம் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.

தமிழ்மண நீட்சி /images அடைவுக்குள் ஒரு குரங்குத் தலை படம் இருக்கும். அதை நீக்கி உங்கள் படத்தை default.png என்ற பெயரில் பதிவேற்றுங்கள். நீங்கள் தமிழ்மணத்தில் இடுகைகளை அளிக்கும் போது இந்தப் படத்தைக் காட்டும்.

7. settings-discussion போய் before a comment appears என்பதில் முதல் தெரிவை நீக்கி மற்ற இரண்டையும் தேர்வு செய்யுங்கள். இப்படிச் செய்வதன் மூலம், ஏற்கனவே மறுமொழி இட்டவர்களின் மறுமொழிகளை மட்டுறுத்தத் தேவை இருக்காது. உங்கள் நண்பர்களின் மறுமொழிகள் உடனுக்குடன் வெளியாக உதவும்.

பயனுள்ள தொடுப்புகள்:

WordPress.org உதவி மன்றம். - உங்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு இங்கு ஏற்கனவே பதில் இருக்கும்.

* WordPress.org ஆவணங்கள் - வேர்ட்பிரெஸ் நிரலில் மாற்றங்கள் செய்வது குறித்த வழிகாட்டி.

* How to install a self-hosted WordPress blog?

* Blogger to WordPress converts - Beginner questions

* Tamil in WordPress

* தமிழ் வேர்ட்பிரெஸ் பயனர்கள் குழுமம்

* வேர்ட்பிரெஸ் பதிவுகளில் ஜிலேபி எழுத்துப் பிரச்சினையை நீக்குவது எப்படி?

* வேர்ட்பிரெஸ் குறித்த சின்னச் சின்ன ஐயங்களைக் கேட்டுத் தெளிய http://ravidreams.net/forum ஐப் பயன்படுத்த வரவேற்கிறேன்.

இன்று மாலை எனக்கும் அக்காவுக்கும் நடந்த உரையாடல்

அக்கா: “முன்ன எல்லாம் அப்பா என்னம்மா, என்னப்பா-ன்னு கூப்பிடுவார். இப்ப என்னத்தா-ன்னு கூப்பிடுறார். எனக்கு எரிச்சலா இருக்கு. அப்பா படிச்சுட்டு ஊர்ல போய் வாழ்ந்து இப்ப ஊர்க்காரனவே பேச்சுலயும் மாறிட்டார்.”

நான்: “முன்னல்லாம் நீ ஊர்ல இருந்தப்ப எல்லாரும் அப்படித்தானக்கா கூப்பிடுவாங்க..அப்பா பிறந்து வளர்ந்தது, நாம வளர்ந்தது எல்லாமே ஊர்ல தானக்கா..நானே இப்ப ஊருக்குப் போனா தங்கச்சிகளை வாத்தா, போத்தா-ன்னு தானே பேசுறேன்.”

அக்கா: “ஆத்தான்னு கூப்பிடுறது எனக்கு எரிச்சலா ஒரு மாதிரியா இருக்கு. எதுக்கு கிராமத்தான் மாதிரி பேசணும்”

நான்: “அக்கா, நீ இப்ப கோயம்புத்தூர்ல இருக்க. வேற ஊருக்குப் போய் வா கண்ணு, போ கண்ணு-ன்னு பேசினா ஓட்டுவாங்க. அதுக்காக, அப்படி பேசுறது குறைச்சலா என்ன?”

அக்கா: ம்ம்…

**

தொலைந்து வரும் வட்டார வழக்குச் சொற்கள் குறித்த ஆழியூரானின் இடுகை.

**

என் அப்பா, அம்மா தங்கள் அப்பா, அம்மாவை ஆயா, ஐயா என்று அழைத்தார்கள். நாங்கள் அப்பா, அம்மா என்று அழைக்கிறோம். நாங்கள் எங்கள் தாத்தா, பாட்டியை அப்பத்தா, அப்பச்சி, அமத்தா என்று அழைக்கிறோம். அக்காவின் பையனோ என் அப்பா, அம்மாவை தாத்தா, பாட்டி என்று அழைக்கிறான்.

தலைமுறை மாற்றம், நகர்ப்புறம் நோக்கிய இடப்பெயர்வுகள், கல்வியறிவு, செயற்கைத் தமிழைத் திணிக்கும் ஊடக வளர்ச்சி எல்லாம் சேர்ந்து தன் சிறு வயதில் வளர்ந்த ஊரில் பேசிய தமிழை மதிப்புக் குறைவாக எண்ண வைக்கும் போக்கு பெருகுவது கவலைப்பட வைக்கிறது :( இந்தத் தாழ்வு மனப்பான்மை படிப்படியாக எண்ணற்ற நல்ல தமிழ்ச் சொற்கள் புழங்குவதை குறைத்து வழக்கொழியச் செய்கின்றது.

சிலர் தங்கள் சாதி அடையாளத்தை மறைப்பதற்காக சில சொற்களைப் பேசாமல் இருக்கலாம். ஆனால், நான் கண்டவரை ஊர்ப்புறங்களில் இந்தச் சாதி அடையாளத்தைத் தாண்டி பொதுவாகப் பல சாதிகளும் புழங்கும் எத்தனையோ நல்ல சொற்கள் உள்ளன. அவற்றைப் பேசுவதிலும் வட்டார அடையாளத்தைக் காப்பதிலும் தவறு இல்லை. ஒவ்வொரு வட்டாரமும் ஒவ்வொரு வகையில் நல்ல தமிழ்ச் சொற்களின் காப்பகமாக விளங்குகின்றன.

**

என்ன ஆனாலும் சரி, என் குழந்தைகளை என் அப்பா, அம்மாவை அப்பத்தா, அப்பச்சி என்று தான் அழைக்கச் சொல்ல வேண்டும் என்று இருக்கிறேன்.

அது அவர்களுக்கே பிடிக்காவிட்டாலும் கூட.

முந்தைய இடுகைகள் »