ரவிசங்கர் on July 2nd, 2009

சென்ற ஆண்டு ஒரு முறை தமிழ் ஆர்வலர் ஒருவருடன் பேசிய போது தனித்தமிழ் இயக்கம் பற்றி பேச்சு வந்தது. திரும்பவும் ஒரு தனித்தமிழ் இயக்கம் வர வாய்ப்புகள் குறைவு என்றார். அதற்கு அவர் சொன்ன காரணங்கள்:

* பெருஞ்சித்திரனார், மறைமலை அடிகள், தேவநேயப்பாவாணர் போல் ஒரு இயக்கத்தை முன்னெடுக்கக்கூடிய தமிழ் அறிஞர்கள், தலைவர்கள் இப்போது இல்லை.

* சென்ற தனித்தமிழ் இயக்கம் வந்த 20ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் இருந்த உலக கருத்துச் சூழல் இப்போது இல்லை. உலகமே இப்போது பொருள்முதல்வாதமாகவும் வலது சாரி சிந்தனை உடையதாகவும் மாறி வருகிறது. பல விழுமியங்களுக்கும் அறங்களுக்கும் மதிப்பு குறைந்து வருகின்றது. இத்தகைய சூழலிலேயே தமிழில் ஆங்கிலம், பிற மொழிகள் கலப்பை நோக்க வேண்டி உள்ளது. தமிங்கிலம் ஒரு தனி நோய் இல்லை. அது அதை விடப் பெரிய சமூகச் சீர்கேட்டின் பல அறிகுறிகளுள் ஒன்று.

* சென்ற தனித்தமிழ் இயக்கத்தின் குறி தமிழில் அளவு கடந்து இருந்த வடமொழிச் சொற்களை விலக்குவது. வடமொழி கலந்து பேசியோர் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் என்பதால், அதே வேளையில் தொடங்கிய திராவிட இயக்கம் என்னும் சமூக, அரசியல் இயக்கத்தின் பின்னணி தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுக்க பெரிதும் உதவியது. திராவிட இயக்கம் வேரூன்றா இலங்கையில் இன்றும் வடமொழியின் தாக்கம் கூடுதலாக இருப்பதைக் நோக்கலாம். ஆனால், தமிங்கிலம் என்பதோ ஒரு குறிப்பிட்ட பிரிவினர் என்று வரையறுக்க முடியாமல் அனைத்து மட்ட தமிழர்களிடமும் பரவி வருவதால் தடுப்பது கடினம்.

Tags: , ,

ரவிசங்கர் on July 2nd, 2009

பாகு – paagu

பாகி – paagi

என்றால்

பாகிசுத்தான் ஐ paakkisuththaan என்று ஒலிப்பது தவறல்லவா? பாக்கிசுத்தான் என்று எழுதலாமே?

இதா – idhaa

னிதா – nidhaa

என்றால்

அனிதா என்பதை aniththaa என்று ஒலிப்பது தவறல்லவா? அனித்தா என்று எழுதலாமே?

தேவையான எழுத்துகளை விடுத்து எழுதுவது ஆங்கில வழக்கம்.

முத்து – muthu

முது – muthu

ஒரே எழுத்துக்கூட்டலுக்கு இரு வேறு ஒலிப்புகள் இருப்பது குழப்பும்.

பெரும்பாலும், பிற மொழிப் பெயர்ச் சொற்களைத் தமிழில் எழுதும் போது இப்பிழை விடுகிறோம்.

தமிழில் ஒலிப்பதைத் தான் எழுதுகிறோம். எழுதுவதைத் தான் ஒலிக்கிறோம்.
தமிழ் எளிமையாக இருப்பதற்கு இச்சீர்மை இன்றியமையாதது.

இச்சீர்மை கெடாமல் எழுத முயல்வோமே?

Tags: , ,

தமிழ் நலம் சார்ந்து ஒரு அறிவியல் பேராசிரியர், பொறியாளர், மென்பொருளாளர் என்று யார் பேசினாலும், “ஆங்கில அறிவை வைத்து சோறு திண்பவர்களுக்கு ஏன் தமிங்கிலம் பற்றி இவ்வளவு வெறுப்பு, ஏன் இந்த போலித்தனம்?” என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

எல்லா துறைகளிலும் தொடர்பாடல் மொழியாக ஆங்கிலம் தேவைப்படுகிறது தான்.
ஆனால், அதற்காக “ஆங்கிலம் தான் சோறு போடுகிறது, அது இல்லாம பிழைப்பியா” என்பதெல்லாம் ரொம்ப… இது ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தமிழை வக்கற்ற மொழியாகச் உருவகப்படுத்தும் நோக்கமுடையது தான். தவிர,
பல துறையினரின் முதன்மைத் தகுதிகளை இழிவுபடுத்துகிறது. ஆங்கிலமே தெரியாமல் எத்தனையோ நாடுகளில் எத்தனையோ துறைகளில் முன்னேறலாம்.

ஆங்கில அறிவு தான் சோறு போடுகிறது என்றால், ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் அல்லவா பணக்காரர்களாக இருக்க வேண்டும்? ஆங்கிலம் பேசும் நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டமே இருக்கக்கூடாதே? இந்தியாவில் ஆங்கில வழியத்தில் படித்தும் கூட எத்தனை பேர் வேலையற்று இருக்கிறார்கள்? எத்தனைத் தமிழர்களுக்கு ஆங்கிலம் சோறு போடுகிறது?

ஆங்கில அறிவை முதன்மையாக வைத்து தொழில் நடத்துபவருக்கு கூட வேறு பல திறன்கள் தேவை. வெறும் ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு **** முடியாது.

ஒரு துறை சார்ந்த அறிவு, தொடர்பாடல் திறன், உழைப்பு, முயற்சி என்று வெற்றிக்குத் தேவைப்படும் பல காரணகளில் ஒன்று தான் தொடர்பாடுவதற்கான பிற மொழியறிவு. அதற்கு மேல் பிற மொழியை உயர்த்திப் பிடிக்கவும் வாலாட்டவும் காலை ***** தேவையில்லை.

ஆங்கிலம் உலகப் பொது மொழிகளுள் ஒன்று. அதற்காக உலகத்தினர் அளவு கடந்தும் தேவையே இல்லாமலும் தங்கள் மொழியில் ஆங்கிலத்தில் கலப்பதில்லை. ஆங்கில அறிவு, அதன் மூலமான பல் துறை அறிவு பெற்றுத் தரும் வேலைவாய்ப்புகளை முன்னிட்டு அனைவரும் ஆங்கிலம் கற்பது அவசியம். தமிழர் தமிழருடனும் பிறருடனும் ஆங்கிலத்திலேயே கூட பேசலாம். பெரும்பான்மை மக்கள் மக்கள் தமிங்கிலத்தில் பேச, எழுத பல நியாயமான காரணிகள் உள்ளன. 100% மொழித்தூய்மை சாத்தியமற்றது. ஆனால்,மொழிக் கலப்பை வலிந்தும் தேவையற்றும் செய்வதும் தவறு. ஒரு இனத்துக்கே இன்னொரு மொழி தான் சோறு போடுவது
போல் சித்தரிப்பதும் உள்ளூர் மொழியைக் கிள்ளுக்கீரையாக மதிப்பதும் கண்டித்தக்கது.

“சோறு போடும் நன்றிக்காக ஆங்கிலத்தைக் கலக்கலாம்” என்பதைத் தன்மானமுள்ள எந்த இனமும் ஏற்றுக் கொள்ளாது.

தொடர்புடைய இடுகை: தமிழ் சோறு போடும்

Tags: , ,