நினைவில் நின்றவை – ஏப்ரல் 20, 2013

* தமிழில் வலைப்பதிந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் ஆகி விட்டது ! இனி அடிக்கடி வலைப்பதியும் அளவுக்கு வாழ்ந்து பார்க்க வேண்டும் 🙂

* போன ஆண்டு சனவரி முதல் சூன் வரை பேசுபுக்கு, துவிட்டர் விடுப்பு எடுத்தது போலவே இந்த ஆண்டும் மூன்று மாதங்களைக் கடந்து விட்டேன். தகவல் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க பேசுபுக்கு நண்பர்கள் எண்ணிக்கையை 50க்கு கீழே கொண்டு வந்துள்ளேன். துவிட்டரில் பின்தொடர்பவர்களையும் 100க்குள் கொண்டு வர முயன்று கொண்டிருக்கிறேன்.ஒரு like, retweet போடவாவது மனம் துடித்தாலும் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். நிம்மதியாக இருக்கிறது.

* வேலை நேரத்தில் கவனம் சிதறாமல் இருக்க, முக்கியமான பக்கங்களை Pocket செயலியில் சேர்த்து வைத்து பிறகு படிக்கலாம். ஒரே பிரச்சினை என்னவென்றால், புத்தகங்களை வாங்கிக் குவித்துப் படிக்காமல் விடுவது போல், இதிலும் நூற்றுக்கணக்கான இணைப்புகள் தேங்கிக் கிடக்கின்றன 🙁

* iPad mini வாங்கி இருக்கிறேன். வெகுமக்கள் இதழ்களையும், நூல்களையும் இதன் மூலம் படிக்கத் தொடங்கியிருப்பதால் வீட்டில் காகிதக் குவியல் குறைகிறது. அதே நேரம், தொடர்ந்து வாங்கவே தோன்றியிருக்காத பல படைப்புகளையும் செயலிகளையும் வாங்கத் தூண்டுகிறது ! இதனைக் கொண்டு அக்கா மகனுக்குக் கணிதம் கற்பிக்க முடிகிறது. பெரும்பாலான நேரம் குழந்தையுடன் இருக்கும் மனைவிக்கும் வாசிப்புக்கு உகந்த கருவியாக இருக்கிறது. கையடக்கக் கணினி வாங்குவதாக இருந்தால் தயங்காமல் iPad mini வாங்குங்கள். திற மூலத்துக்கு மட்டுமே ஆதரவு என்பவர்கள் Google Nexus 7 வாங்கலாம். அதற்கும் பெரிதாக வாங்கினால், கையில் வைத்துக் கொண்டு செயல்பட இடையூறாக இருக்கும். உங்களிடம் ஏற்கனவே உயர் வகை கைப்பேசி இருந்தால், wifi மட்டும் உள்ள iPad போதுமானது. இணைய இணைப்பு தேவைப்படும் நேரங்களில் கைப்பேசியில் wifi hotspot போட்டுக் கொள்ளலாம்.

* நேரம் கிடைக்கும் போது Google Mapsல் நேரம் செலவிடுகிறேன். இந்திய மாநிலங்களாவது பாதி எங்கிருக்கிறது என்று தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு தமிழக மாவட்டங்கள் எவற்றின் அருகே எவை உள்ளன என்று தெரியும்? வெவ்வேறு ஊர்களுக்குப் போக நினைக்கும் போது சரியான, விரைவான வழிகளை அறிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தின் காட்டு வளம், ஊர்களின் பிரச்சினைகள் என்று பலவற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது. புவியியலும் ரொம்ப முக்கியம், அமைச்சரே !

* பிராய்லர் கோழி உண்பது அவ்வளவு நல்லதல்ல என்று பரவலான கருத்து இருப்பதால், நாட்டுக் கோழி வாங்கி வந்தேன். அதையும் பண்ணையில் வைத்து தீவனம் போட்டே வளர்க்கிறார்கள் என்கிறார்கள். பழங்கள் சத்தானவை என்று ஆசைப்பட்டு வாங்கினால், என்ன மருந்து போட்டு வளர்த்தார்களோ என்றே யோசிக்க வேண்டி இருக்கிறது. எதைச் சாப்பிட, எதை விட? ஊர் பக்கம் போய், நாமளே முழுக்க முழுக்க இயற்கை முறை வேளாண்மை பார்த்துச் சாப்பிடுவது தான் ஒரே வழி போல !

* கூகுள் ரீடர் மூடுவிழா காண இருக்கிறது. எனவே, இந்தப் பதிவில் புதிய இடுகைகள் வந்தால் தெரிந்து கொள்வதற்கு, இத்தளத்தின் கீழ் பகுதியில் உள்ள பெட்டியில் உங்கள் மின்மடல் விவரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். கூகுள் ரீடருக்கு மாற்றாக Feedly பயன்படுத்தலாம்.


Comments

One response to “நினைவில் நின்றவை – ஏப்ரல் 20, 2013”

  1. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_19.html) சென்று பார்க்கவும்… நன்றி…

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்…