தமிழ்நாட்டில் ஆங்கிலம் தெரியாதவர்கள்

ஆங்கிலம் தெரிந்தாலும் தமிழை விரும்பிப் பேசும், ஆங்கிலம் தெரியாமலேயே வாழ்க்கையில் வெற்றி பெற்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவரையாவது நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தால் உரையாடல் நன்றாக இருந்திருக்கும். ஆங்கிலம் தெரிந்து கொள்வது தான் வெற்றிக்கு வழி என்பது போல ஒருவர் தட்டுத்தடுமாறி அழுது கொண்டே ஆங்கிலம் பேசுகிறார். அவரை எல்லாரும் கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். நிகழ்ச்சி முடிந்தது. ம்.

எல்லா துறையினருக்கும் ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா?

தமிழ் நலம் சார்ந்து ஒரு அறிவியல் பேராசிரியர், பொறியாளர், மென்பொருளாளர் என்று யார் பேசினாலும், “ஆங்கில அறிவை வைத்து சோறு திண்பவர்களுக்கு ஏன் தமிங்கிலம் பற்றி இவ்வளவு வெறுப்பு, ஏன் இந்த போலித்தனம்?” என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

எல்லா துறைகளிலும் தொடர்பாடல் மொழியாக ஆங்கிலம் தேவைப்படுகிறது தான்.
ஆனால், அதற்காக “ஆங்கிலம் தான் சோறு போடுகிறது, அது இல்லாம பிழைப்பியா” என்பதெல்லாம் ரொம்ப… இது ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தமிழை வக்கற்ற மொழியாகச் உருவகப்படுத்தும் நோக்கமுடையது தான். தவிர,
பல துறையினரின் முதன்மைத் தகுதிகளை இழிவுபடுத்துகிறது. ஆங்கிலமே தெரியாமல் எத்தனையோ நாடுகளில் எத்தனையோ துறைகளில் முன்னேறலாம்.

ஆங்கில அறிவு தான் சோறு போடுகிறது என்றால், ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் அல்லவா பணக்காரர்களாக இருக்க வேண்டும்? ஆங்கிலம் பேசும் நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டமே இருக்கக்கூடாதே? இந்தியாவில் ஆங்கில வழியத்தில் படித்தும் கூட எத்தனை பேர் வேலையற்று இருக்கிறார்கள்? எத்தனைத் தமிழர்களுக்கு ஆங்கிலம் சோறு போடுகிறது?

ஆங்கில அறிவை முதன்மையாக வைத்து தொழில் நடத்துபவருக்கு கூட வேறு பல திறன்கள் தேவை. வெறும் ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு **** முடியாது.

ஒரு துறை சார்ந்த அறிவு, தொடர்பாடல் திறன், உழைப்பு, முயற்சி என்று வெற்றிக்குத் தேவைப்படும் பல காரணகளில் ஒன்று தான் தொடர்பாடுவதற்கான பிற மொழியறிவு. அதற்கு மேல் பிற மொழியை உயர்த்திப் பிடிக்கவும் வாலாட்டவும் காலை ***** தேவையில்லை.

ஆங்கிலம் உலகப் பொது மொழிகளுள் ஒன்று. அதற்காக உலகத்தினர் அளவு கடந்தும் தேவையே இல்லாமலும் தங்கள் மொழியில் ஆங்கிலத்தில் கலப்பதில்லை. ஆங்கில அறிவு, அதன் மூலமான பல் துறை அறிவு பெற்றுத் தரும் வேலைவாய்ப்புகளை முன்னிட்டு அனைவரும் ஆங்கிலம் கற்பது அவசியம். தமிழர் தமிழருடனும் பிறருடனும் ஆங்கிலத்திலேயே கூட பேசலாம். பெரும்பான்மை மக்கள் மக்கள் தமிங்கிலத்தில் பேச, எழுத பல நியாயமான காரணிகள் உள்ளன. 100% மொழித்தூய்மை சாத்தியமற்றது. ஆனால்,மொழிக் கலப்பை வலிந்தும் தேவையற்றும் செய்வதும் தவறு. ஒரு இனத்துக்கே இன்னொரு மொழி தான் சோறு போடுவது
போல் சித்தரிப்பதும் உள்ளூர் மொழியைக் கிள்ளுக்கீரையாக மதிப்பதும் கண்டித்தக்கது.

“சோறு போடும் நன்றிக்காக ஆங்கிலத்தைக் கலக்கலாம்” என்பதைத் தன்மானமுள்ள எந்த இனமும் ஏற்றுக் கொள்ளாது.

தொடர்புடைய இடுகை: தமிழ் சோறு போடும்

ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி?

பேச்சு ஆங்கிலத்தை ( Spoken English ) வளர்த்துக் கொள்வதற்கான எளிய குறிப்புகள்: ஆங்கிலம்

* 30 நாட்களில் பேச்சு ஆங்கிலம், Repidex, விவேகானந்தா கல்வி நிலையம் போன்றவற்றை நாடாதீர்கள். முறைப்படி இலக்கண விதிகளை நினைவு வைத்துப் பேச வேண்டி இருப்பது, உங்களை மனம் தளரச் செய்யலாம். நீங்கள் பேசிப் பழகப் பழக நாளடைவில் இலக்கணம் தானாக வரும்.

* பேச முற்படும் முன் நிறைய ஆங்கிலப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டே இருங்கள். எடுத்துக்காட்டுக்கு, கிரிக்கெட் வர்ணனை, தொலைக்காட்சிச் செய்திகள். பொருள் புரியாவிட்டாலும் ஓசைகள், சொற்களுக்குப் பழக்கப்பட உதவும்.

* உங்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாவிட்டால், விளம்பர வாசகங்கள், கடைகளின் தட்டிகள், படம் போட்ட சிறுவர் கதை நூல்கள் போன்றவற்றை வாசிக்கத் தொடங்கலாம். HINDU போன்ற உயர் தர ஆங்கில இதழ்கள், அகரமுதலிகளை எடுத்த எடுப்பிலேயே புரட்டுவது மட்டும் ஆங்கிலம் பேச உதவாது.

* தமிழ் தெரியாத பிற மொழி நண்பர்களிடம் பேச்சு கொடுத்துப் பழகுங்கள். இந்தச் சூழ்நிலைகளில் உங்கள் பேச்சுப் பிழைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள். நீங்கள் பேசுவது அவருக்குப் புரிந்தாலே வெற்றி தான்.

* சரியோ தவறோ பேசத் தொடங்குங்கள். பேசவே தொடங்காமல் ஆங்கிலம் தெரியவில்லையே என்று வருந்துவதில் பயனில்லை. நீங்கள் எவ்வளவு கூடுதலாகவும் அடிக்கடியும் வெவ்வேறு விசயங்களைப் பேசிப் பழகுகிறீர்களோ அவ்வளவு விரைவில் பேச்சு ஆங்கிலம் கைக்கூடும்.

* நன்கு தெரிந்தவர்களிடம் குறை ஆங்கிலத்தில் பேசக் கூச்சமாக இருந்தால், முன் பின் தெரியாத இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு, ஒரு வாடிக்கையாளர் சேவையைத் தொலைபேசியில் அழைக்கும் போது ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு இருந்தால் பேசிப் பாருங்கள்.

ஆங்கிலம் மட்டுமல்ல எந்த ஒரு மொழிக்கும் இந்தக் குறிப்புகள் பொருந்தும். உங்களுக்கு வேறு ஏதும் குறிப்புகள் தெரிந்தால் சொல்லுங்கள்.

உனக்கு English தெரியாதா?

ஐரோப்பியப் பெரு நகரங்களில் ஆங்கிலத்திலும் உரையாடி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று யாரும் அதிகாரம் செய்ய முடியாது. “தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுவீர்களா” என்று பணிவுடன் தான் கேட்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர் தான் வேறு ஆங்கிலம் பேசக்கூடிய கடைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இல்லை, அத்தகையை கடைகளைத் தேடி ஓய்ந்து கடைசியில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார். ஆங்கிலம் என்பது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தலாம். ஒரே ஊரில் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு உள்ளூர் மொழியை மதிக்காமல், கற்காமல் இருப்பது உள்ளூர்க்காரர்களுக்கான அவமானம் தான்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள முடி திருத்தகம் ஒன்றில் ஆங்கிலம் தெரியாத காரணத்தால் ஒருவர் வேலை இழந்த கதையை இராம. கி எழுதி இருந்தார். “இது ஏதோ ஒரு மேல்தட்டு முடிதிருத்தகத்தில் நடந்த கதை தானே, இது குறித்து கவலைப்படுவது மிகைப்பட்ட உணர்ச்சியாக இருக்கிறதே” என்று காசி கூறி இருந்தார். ஆனால், வளர்ந்தும் விரிந்தும் வரும் இந்தியப் பெருநகரங்களில் இந்தப் போக்கு தொடர்வது கவலைக்குரியது.

ஐரோப்பியப் பெரு நகரங்களில் ஆங்கிலத்திலும் உரையாடி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று யாரும் அதிகாரம் செய்ய முடியாது. “தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுவீர்களா” என்று பணிவுடன் தான் கேட்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர் தான் வேறு ஆங்கிலம் பேசக்கூடிய கடைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இல்லை, அத்தகையை கடைகளைத் தேடி ஓய்ந்து கடைசியில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார். ஆங்கிலம் என்பது சுற்றுலாப் பயணிகள், குறுகிய காலம் உள்ளூரில் வசிப்பவர்களின் வசதிக்காகவே பயன்படுகிறது.

வெளியாட்களை உள்ளூர் மொழி கற்க விடாமல் செய்வதில் உள்ளூர்க்காரர்களுக்கும் பங்குண்டு. இடாய்ட்சுலாந்தில் எட்டு மாதங்கள் வசித்த போது, கல்லூரிக்கு வெளியே இடாயிட்ச் மொழி தெரியாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்ற காரணத்தால் இரவும் பகலும் இடாயிட்சு அகரமுதலியோடு சுற்றித் திரிந்தது நினைவு வருகிறது.

நெதர்லாந்துக்கு வந்த பிறகு இரண்டு ஆண்டுகள் ஆகியும் நெதர்லாந்து மொழி கற்றுக் கொள்ளத் தூண்டுதல் இல்லை. நெதர்லாந்து மக்களுக்கு ஆங்கிலம் நன்கு தெரிவதாலும் உதவும் மனப்பான்மை இருப்பதாலும் ஆங்கிலத்திலேயே நம்முடன் பேசுகிறார்கள். அரை குறையாக நாம் நெதர்லாந்து மொழி பேசிக் கொலை செய்தாலும் அதைக் காணச் சகிக்காமல் ஆங்கிலத்துக்குத் தாவி விடுகிறார்கள். இதனால் நெதர்லாந்துக்கு வரும் பல வெளிநாட்டவர்கள் நெதர்லாந்து மொழியில் தேர்ச்சியும் பயிற்சியும் இன்றி இருக்கிறார்கள். ஆனால், இந்நாட்டின் பொருளாதாரமே நெதர்லாந்து மொழியால் இயங்குவதால் ஆங்கிலம் அம்மொழியை அழிக்கும் நிலைக்குச் செல்லவில்லை.

தமிழ்நாட்டில் அண்டை, அயல் மாநிலத்தவர்களுக்கு உதவுகிறோம் பேர்வழி என்று நமக்குத் தெரிந்த அரை குறை ஆங்கிலத்திலாவது பேசுகிறோமே ஒழிய அவர்கள் தமிழ் கற்றுக் கொள்வதற்கான போதுமான தூண்டுதலைத் தருவதில்லை. அவர்கள் வசதிக்காக ஆங்கிலத்தில் எழுத, பேச, அறிவிக்கப் போய் எங்கும் ஆங்கிலமாகி, இறுதியில் “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று நம்மையே திரும்பக் கேட்கும் நிலை.

Sirக்குத் தமிழ் தெரியாதாம்ப்பா” என்ற கனிவான குரல்; “என் பொண்ணுக்கு Tamil எல்லாம் வராது” என்ற அலட்சியமும் பெருமிதமும் கலந்த குரல்; “உனக்கு English தெரியாதா” என்ற ஏளனமான குரல்… மாற்றி மாற்றி தமிழ்நாட்டில் எங்காவது கேட்டுக் கொண்டே இருக்கிறது.

English தெரியாதவன் மரியாதை இழந்து தமிழ்நாட்டிலேயே அவன், இவன், உன் என்றாகிப் போனது எப்போது? இந்த நிலையை எப்படி மாற்றுவது? என்று இந்த நிலை மாறும் ??

ஏன் ஒரு ஆங்கிலச் சொல்லை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தமிழாக்கக்கூடாது?

ஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல சூழல்களில் இருக்கும் ஒரு சொல்லின் மூலத்தை ஆய்ந்து பார்த்து எல்லா இடங்களிலும் ஏன் அதைப் பிடித்துத் தொங்க வேண்டும்? என்னைக் கேட்டால் இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சு பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம் தமிழாக்கத்தை நியாயப்படுத்த முடியாது. இங்கு ஆளப்படும் தமிழ்ச் சொல் என்பது ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு மாற்று போல் இருக்கிறதே தவிர, தமிழர்களின் சுதந்திரமான சிந்தனைக்கு வித்திடுவதாகத் தெரியவில்லை.

பண அட்டைகள் குறித்த தமிழாக்கங்கள் பற்றி இராம.கி எழுதி இருந்தார். இது தொடர்பான உரையாடல் தமிழ் விக்சனரி குழுமத்தில் நடந்தது.

ஒரு ஆங்கிலச் சொல் வெவ்வெறு சூழல்களில் வந்தாலும், தமிழிலும் எல்லா இடங்களிலும் ஒரே சொல் கொண்டு தான் மொழிபெயர்க்க வேண்டும் என்பது இராம. கி.யின் பரிந்துரை. இது தொடர்பில் என் கருத்துக்கள்:

ஆங்கிலத்தில் ஒரு வேர்ச்சொல் பல இடங்களில் வரும்போது அவ்வெல்லா இடங்களுக்கும் ஒரே தமிழ்ச் சொல்லை ஆளத் தேவை இல்லை.

தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கிறோம் என்று வைப்போம். கண், கண்ணாடி, கண்ணீர் என்பதை eye, eye glass, eye water என்றா மொழிபெயர்ப்போம்? eye, glass, tear என்று அந்த ஊர் மொழிச் சொல்லை வைத்து தானே மொழிபெயர்க்கிறோம்.

ஏன் ஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல சூழல்களில் இருக்கும் ஒரு சொல்லைப் பிடித்து தொங்க வேண்டும்? இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சு பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம் தமிழாக்கத்தை நியாயப்படுத்த முடியாது. இங்கு தமிழ்ச் சொல் என்பது ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு மாற்று போல் இருக்கிறதே தவிர, தமிழர்களின் சுதந்திரமான சிந்தனைக்கு வித்திடுவதாகத் தெரியவில்லை. ஒரு புதிய சிந்தனையைச் சூழலைப் புரிந்து கொள்ள ஆங்கிலச் சொல் ஒரு கருவியாக இருக்கலாமே தவிர,  தமிழின் அனைத்துப் புதுச் சொற்களும் ஆங்கில அடிப்படை, சார்பு உடையதாக இருப்பது சரி இல்லை.

ஆங்கிலச் சொற்களை நேரடியாக மொழிபெயர்ப்பது செயற்கையாக இருக்கிறது. ஒரே பொருளை இரு வேறு மொழியினர் வேறு விதமாகப் பார்ப்பது இல்லையா? rainbow – ஆங்கிலேயேனுக்கு மழையின் வில்லாகிறது; நமக்கு வானின் வில்லாகிறது.  இரண்டும் குறிக்கும் பொருள் ஒன்று தான். இரு சக்கர வண்டி, துவி சக்கர வண்டி போன்ற சொற்கள் இருந்தாலும் மிதிவண்டி என்ற சொல்லே நிலைத்தது. மக்களைப் பொருத்தவரை அது மிதித்தால் நகரும் வண்டி. அவ்வளவு தான். 

நாம் பயன்படுத்தும் சொற்கள் நம் சமூகத்தை, பண்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அஞ்சலி, condolence meeting, இரங்கல் கூட்டம்  போன்ற சொற்கள் இருக்க,  அக வணக்கம், வீர வணக்கம்  போன்ற சொற்களை ஈழத்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சொற்களின் ஊடாக வெளிப்படும் அம்மக்களின் பண்பாட்டைத் தலைகீழாக நின்றாலும் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து விட முடியாது. 

சொற்கள் உள்ளூர் சிந்தனையை வெளிப்படுத்த வேண்டும். சொல்லைத் தமிழாக்காமல் சிந்தனையைத் தமிழாக்க வேண்டும். ஆங்கிலச் சொல்லையே அறியாவிட்டாலும், தமிழ்ச் சிந்தனைக்கு ஏற்ப சொல் ஆக்குவது தான் மொழி மரபு என்பது என் நம்பிக்கை, நிலைப்பாடு.