The Bourne, Riding alone for thousands of miles, Ratatouille, The Prince and Me

The Bourne Ultimatum, The Bourne Supremacy, The Bourne Identity – Action படம்னாலே ஒன்னு Superman, Spider-man வகையறா ஜட்டிமேன் படங்கள் அல்லது James Bondன் சாகசப் படங்கள் போல தான் இது வரைக்கும் பார்த்து அலுத்துப் போய் இருந்தது. நண்பரின் மூலம் கிடைத்த திருட்டு டிவிடியைப் பார்த்து இந்தப் படத்துக்கு செம ரசிகனாகி The Bourne Supremacy, The Bourne Identityனு பாகம் 3, 2, 1னு தலைகீழா இந்த படத் தொடரைப் பார்த்தாலும் கதை தெளிவா புரிஞ்சது. வழக்கமா முதல் பாகத்தை ஒப்பிடுகையில் அடுத்தடுத்த பாகங்கள் சரி இல்லைம்பாங்க..ஆனா, இதுல அடுத்தடுத்த பாகங்கள் ஒவ்வொன்னும் முந்தையத மிஞ்சுறதா இருக்கு. திருட்டு டிவிடில பார்த்துட்டு திரையரங்கில் பார்த்தா effect இன்னும் நல்லா இருக்குமேன்னு திரையரங்கிலும் பார்த்தேன்..அநேகமா, இப்படி நான் பார்க்கிற முதல் படம் இது தான்னு நினைக்கிறேன்..இந்தப் படங்கள் எல்லாமே இதே பெயரில் அமைந்த புதினத் தொடரை அடிப்படையா வைத்து எடுக்கப்பட்டவை. அவற்றையும் -படிக்க வேண்டியவை- பட்டியல்ல சேர்த்தாச்சு.

அமெரிக்க நலனுக்குப் புறம்பா இருக்கவங்களை ஒழித்துக் கட்ட ஒரு கொலையாளிப் படையை திரைமறைவில் உருவாக்குது CIA. இதுல பணியாற்றுறவங்க எல்லாம் நல்லா மூளைச்சலவை பண்ணப்பட்டு தங்கள் உண்மை அடையாளத்தைத் தொலைத்து / மறந்து இதில் பணியாற்றுகிறார்கள். இப்படி பணிபுரியும் Jason Bourneக்கு amnesia வர, தான் யார் எனக் கண்டுபிடிக்கப் புறப்படுகிறான். இதற்கிடையில் இவனால் தங்களுக்கு இடைஞ்சல் என்று நினைக்கும் CIA இவனைக் கொல்ல ஆளை ஏவி விடுகிறது. இந்தியா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் என்று பல ஊர் அலைந்து மூன்றாம் பாகத்தின் முடிவில் தன் அடையாளத்தைக் கண்டுபிடிக்கிறான் Jason Bourne.

தன் வீராப்பைக் காட்டுவதற்காகவோ கெட்டவர்களை ஒழிக்கிறேன் பார் என்றோ இல்லாமல் நியாயமான காரணத்துக்காக, தேவையில்லாமல் யாரையும் கொல்லாமல், செய்த கொலைகளுக்கு வருந்தும் மனிதத்தோடு நகரும் கதை நல்லா இருக்குது. முன்சன், பெர்லின், பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் என்று நான் பார்த்த, வாழ்ந்த நகரங்களில் கதை நகர்வது இன்னும் கூடுதலா படத்தை ரசிக்க வைச்சது. car துரத்தல், bike துரத்தல் போல இதில் புதுசா வரும் மொட்டை மாடி துரத்தல் எனக்குப் பிடிச்ச காட்சி. Jason Bourneஆக நடித்திருக்கும் Matt Damonஐ முன்பே சில படங்களில் பார்த்து இருந்தாலும் இந்தப் படத்துக்குப் பிறகு பிடிச்சுப் போச்சு. மூன்றாம் பாகத்தில் அதிக நேரம் வரும் Julia stilesக்காவாவது அடுத்த பாகம் வந்தால் நல்லா இருக்கும் 🙂 ஆனா இது தான் கடைசி பாகம்கிறாங்க..

கொசுறு: கமல் நடித்த வெற்றி விழா படத்தின் கதையை The Bourne Identityயுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் 🙂

Riding alone for thousands of miles – இது வரைக்கும் சீனப் படம்னா அது Bruce Lee, Jackie, Stephen Chow வகையறா அடிதடி படங்கள் தான் தெரியும். விகடன் உலக சினிமா அறிமுகத்தில் சில கதையம்சம் கூடியுள்ள படங்களுக்கான அறிமுகத்தைப் பார்த்ததுண்டு. இந்தப் படத்தின் இயக்குனரின் இன்னொரு படம் தேடிக் கிடைக்காமல், கிடைத்த இந்தப் படத்தை எடுத்து வந்தேன்.

ஒவ்வொருவரும் தங்கள் மனதில் உள்ள அன்பை மறைக்காமல் காட்டப் பழக வேண்டும் என்பது தான் படத்தின் அடிப்படைக் கரு. மனதை நெகிழ வைக்கும் படங்களுக்கு வரி வரியாய் கதை சொல்ல மனது வருவதில்லை. படத்தில் உள்ள நெகிழ்ச்சி என் எழுத்தில் வராமல் பல்லிளிப்பதும் ஒரு காரணம். இந்தப்படத்தின் கதையைச் சொல்லலாம் என்று முயன்று இரண்டு பத்தி எழுதினேன். பிறகு, வேண்டாம் என்று அழித்து விட்டேன்.

Ratatouille – பல குழந்தைகள் படத்தைப் பார்த்திருந்தாலும், உண்மையிலேயே இந்தப் படத்தை மட்டும் தான் முதன் முதலில் ஒரு குழந்தை உள்ளிட்ட குடும்பத்துடன் திரையரங்கில் அமர்ந்து பார்த்தேன். திரையரங்கில் குழந்தைகளைக் காட்டிலும் பெரியவர்கள் தான் கூட!! பெரிய ஆட்களுக்காக எடுக்கப்படும் படங்கள் எல்லாம் மகா bore அடிக்கையில் குழந்தைகளுக்காக எடுக்கப்படும் படங்களில் அனைவருக்குமான குறைந்தபட்ச பொழுதுபோக்காவது உத்திரவாதமாக இருப்பது நிறைவு தான். வெளிநாடுகளில் தணிக்கைச் சான்றிதழ் பரிந்துரைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதால் பெரியவர்களுக்கான படங்களுக்குச் சிறுவர்களை அனுமதிப்பதில்லை. ஆக, சிறுவர்கள், அவர்களுடன் சேர்த்து பெரியவர்களைத் திரையரங்குக்கு வர வைக்க குழந்தைகளுக்கான படங்கள் எடுப்பதைத் தவிர வெளிநாட்டவருக்கு வேறு வழியே இல்லை. நம்ம ஊர் போல் குரங்கு, பூனை, நாய், குதிரை, பாம்பு ஆகியவற்றை இங்கு நடிக்க வைக்க முடியாது ஆகையால் நம்ம இராம.நாராயணன் zooவில் இல்லாத விலங்குகளையும் animation படங்களாகக் கொண்டு வந்து விடுகிறார்கள். நாம் கனவிலும் யோசித்துப் பார்க்காத எலி, எலியின் அண்ணன், அப்பா , கூட்டாளிகளின் உணர்வுகள், கதைகளை இந்த வகையில் பார்க்க முடிவது மகிழ்ச்சி. விலங்குகள் உள்ள animation படம் என்றால் Finding Nemo தான் எனக்கு Golden standard போல். அந்த அளவுக்கு வேறு எந்தப் படமும் இன்னும் என்னைக் கவரவில்லை.

நினைத்தைச் செய்வதற்கு அடிப்படை, பிறப்பு, சிறப்புத் தகுதிகள் என்று எதுவும் தேவை இல்லை என்பது தான் படத்தின் அடிப்படைக் கரு. ஒரு எலிக்கு சிறந்த சமையல்காரர் ஆகும் ஆசை வருகிறது. அதை எப்படிச் சாதிக்கிறது என்பது தான் கதை. 2 மணி நேரம் கவலை மறந்து தாராளமாகப் பார்க்கலாம். Pixar animation studios தயாரிப்பு என்பதால், தனியாக animationஐப் பாராட்டத் தேவை இல்லை தானே?

The Prince and Me – இது 4 மாதம் முன்னர் பார்த்த படம். குறைந்த தயாரிப்புச் செலவு, எளிமையான கதை, இயல்பான நகைச்சுவை என்று நிறைவான படம். சுவீடன் நாட்டு இளவரசன் ஒருவன், தன் அடையாளத்தைக் காட்டிக் கொள்ளாமல் அமெரிக்காவுக்குப் படிக்க வருகிறான். அங்கு எளிய குடும்பத்துப் பெண் ஒருத்தியுடன் காதல் வயப்படுகிறான். சுவீடனுக்கு வந்து முறைப்படி மணக்கும் முன் அரச வாழ்க்கைக்குப் பழக்கப்படுகிறாள் இந்தப் பெண். ஆனால், அரச வாழ்க்கைப் பகட்டும் போலித்தன்மையும் உறுத்த, காதலை உதறிவிட்டு படிப்பைத் தொடர அமெரிக்கா திரும்புகிறாள். “படிப்பை முடிக்கும் வரை காத்திருக்கிறேன்” என்று நாயகனும் அமெரிக்கா வந்து வசனம் பேசுவதுடன் படம் முடிகிறது. இந்தப் படத்துக்கு ஒரு வீணாய்ப் போன இரண்டாம் பாகமும் உண்டு.

பள்ளிக்கூடம் | பாவம் டிகாப்ரியோ

பள்ளிக்கூடம் – முதல்ல தங்கர் பச்சான் தன் படங்களைப் பத்தி உருகி உருகி பேசுறதைத் தவிர்க்கணும். அழகியின் பாதிப்பை விட்டு இன்னும் அவர் மீளவில்லை. அழகியைத் தவிர வேற எந்தப் படமும் பாதிப்பை ஏற்படுத்துவதாயும் இல்லை.

இனிமே சினேகா பேச்சை நம்பக்கூடாது. இந்தப் படத்திலயும் புதுப்பேட்டை படத்திலயும் வாழ்நாள் கதாப்பாத்திரம் என்ற rangeல் build-up கொடுத்து இருந்தாங்க. அப்படி ஒன்னையும் காணோம் படத்தில. இன்னும் இரண்டு படம் இப்படி நடிச்சாருன்னா நரேன் பாரதிராஜாவின் மாப்பிள்ளை நாயகர் ராஜா மாதிரி ஆகிடுவார். கவனம் தேவை.

தங்கர், சீமான், நரேன்-சிநேகா, ஸ்ரேயா-னு ஏகப்பட்ட புள்ளிகளைச் சுற்றி கதை முன்னும் பின்னுமாக அலைவது அலுப்பூட்டுக்கிறது. இந்த voice over narration உத்தியை எந்த புண்ணியவான் கண்டுபிடிச்சானோ சேரன், தங்கர் போன்றவர்கள் அதைத் தேவை இல்லா இடங்களில் எல்லாம் பயன்படுத்தி கடுப்பைக் கிளப்புறாங்க. காடு பதுங்குவோமே, மீண்டும் பள்ளிக்குப் போகலாம் தவிர இந்தப்படத்தில் மூனு பாடல்களுக்குத் தேவையே இல்லை. ஸ்ரேயா பாத்திரம், சின்ன சினேகா-நரேன் duetம் தேவையே இல்லை. கண்ணியமான திரைப்படம் குறித்து பேசும் தங்கர் எதற்கு “தடவித் தடவி” விடலைப் பிள்ளைகளுக்கு ஒரு duet வைக்கணும்? இப்படித் தடவித் தடவிக் காதலைக் காட்டுவதால் சினேகா-நரேன் பிரியும் போது பதைபதைப்போ சேர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்போ இல்லை. கிளைக் கதைக்கு மேல் கதை வைச்சதால், உண்மையில் பள்ளிக் கூடம் கட்டப்படுமா என்று எல்லாம் படம் பார்க்கிற ஒருவருக்கும் கவலை வராது. தங்கர் சொல்ல விரும்புவதாக நினைக்கும் செய்தியும் போய் சேராது.

என்ன இருந்தாலும், ஒரு சில மண்ணின் மனிதர்களையாவது உண்மை முகத்துடன் காட்டுகிறார் என்பதற்காக மட்டுமே தங்கரின் படங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

கிரீடம் – ok. ஒரு மறை time passக்குப் பார்க்கலாம்.

லியோனார்டோ டிகாப்ரியோவின் அழகு என்ன, நடிப்பு என்ன..ஹ்ம்ம்..தமிழ்நாட்டில் விஜயாகவோ மாதவனாகவோ பிறந்து இருந்தால் நல்லா வாழ்ந்திருக்க வேண்டியவர். அநியாயத்துக்கு நான் பார்க்கிற ஆங்கிலப் படத்துல எல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு செத்துப் போறார். இல்லாட்டி, சோகமா இருக்கார்.

Black Diamond – இப்படி ஒரு உலகம், மனிதர்கள் இருப்பதே இந்தப் படம் பார்த்து தான் தெரியும். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு இதுவே இந்தப் படத்தின் வெற்றி தான். சிறுவர்கள் போராளிகளை மாற்றப்படும் சூழல் நடுங்க வைக்குது !

The Departed – எப்படியும் டிகாப்ரியோ தபாலிச்சு வந்திருவாருன்னு பார்த்தா அநியாயமா டப் டப்புன்னு சுட்டுக் கதையை முடிச்சிடுறாங்க. அர்ஜூன், விஜயகாந்த் எல்லாம் இந்தப் படங்களைப் பார்க்க மாட்டாங்களா 😉

The Aviator – The Departed இயக்குனரே இயக்கியது. ஆனால், முற்றிலும் வேறுபட்ட கதைக்களம். தமிழில் இப்படி முந்தைய படங்களின் பாதிப்பு இல்லாமல் வேறுபட்டு இயக்குகிறவர்கள் மிகவும் குறைவு. புதியவர்களில் சுசி கணேசனும் லிங்குசாமியும் தான் உடனே நினைவுக்கு வருகிறவர்கள்.

மேலே உள்ள மூனும் டிகாப்ரியோ படங்கள். கண்டிப்பா பார்க்கலாம்.

அடுத்து வரும் இரண்டு படங்களும் பார்க்கப்பட வேண்டியவை தான். Superman, Science fiction வகையறா படங்களைக் காட்டிலும் மனிதர்களை அவர்கள் பலம், பலவீனத்துடன் காட்டும் நிகழ் வாழ்க்கை கதையுடைய படங்கள் பிடித்திருக்கின்றன.

Million dollar baby – நம்ம ஊரு மூத்த நடிகர்கள் எல்லாம் இந்த மாதிரி பாத்திரங்களில் நடிச்சா எவ்வளவு நல்லா இருக்கும் !! ஒரு பயிற்சியாளருக்கும் விளையாட்டு வீரருக்குமான அறிமுகம், அதைத் தாண்டிய நெகிழ்ச்சியான உறவாக மாறும் விதம் அருமை.

The Pursuit of Happyness – Will Smithம் அவருடைய மகனும் சேர்ந்து கலக்குறாங்க. அமெரிக்காவை அதன் இயல்போடு அறிந்து கொள்ள முடிகிறது. நிச்சயம், உற்சாகமும் முனைப்பும் தர்ற படம்.

மேல உள்ள படங்களை எல்லாம் பார்க்கும்போது தோணுறது ஒன்னு தான். தமிழ்த் திரைப்படங்கள் வெளிநாட்டு locationகள், வண்ண வண்ண setகள், ஏய்..ஊய் அலட்டகள், தெய்வீகக் காதல்கள் இதை எல்லாம் தாண்டி வெளிய வந்தா சொல்லப் படக்கூடிய, சொல்லப்பட வேண்டிய கதைகள் எத்தனையோ இருக்கு.

Derailed – இந்தப் படத்தைப் பார்க்கவே கொட்டாவி வருது. இதை வேற தமிழ், இந்தில உல்டா பண்ணி எடுக்கத் தோணுச்சோ மக்களுக்கு ! ஆனால், பிரம்மாண்டம் இல்லாமல் குறைந்த நிதியில் சுமாரான படம் எடுக்க இதைப் பார்த்து நம்ம ஆட்கள் கற்றுக் கொள்ளலாம்.

பொம்மரில்லு – ஆஹா..சூப்பர் படம் ! எப்படியும் நம்ம வீட்டுக்கு வர்ற மக்களுக்கு எல்லாம் போட்டுக்காட்டி பல காட்சிகள் ஓடப்போகுது..எத்தனை முறை வேணா சலிக்காமப் பார்க்கலாம்னு இருக்கு..தங்கத் தலைவி cute ஜெனிலியாவுக்காக இன்னும் பல முறை பார்க்கலாம். துறு துறு நாயகி வேடத்துக்கு தானைத் தலைவி லைலாவுக்குப் பிறகு ஜெனிலியா தான் முழுப் பொருத்தம். ஆந்திரா மக்களை நாம ஓட்டிக்கிட்டே இருந்த வேலைல அவங்க நல்ல பொழுது போக்குப் படங்கள் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க போல..இது மாதிரி வேற படம் தெரிஞ்சாலும் சொல்லுங்க.. ஆர்யா, கோதாவரி நல்ல திருட்டுப் பதிப்பு கிடைக்காம காத்திருக்க வேண்டியிருக்கு..இந்தப் படத்துக்கு tamiltorrents தளத்துல அருமையான டிவிடி பதிப்பு கிடைக்குது. இந்தப் படம் தமிழ்ல remake raja, ravi சகோதரர்கள் தயாரிப்புல வெளிவர இருக்கு. கண்டிப்பா வெற்றிப் படம் தான். ஜெயம் ரவி கூட remake படத்தில் நடிச்ச சதா, அசின், ஷ்ரேயா, த்ரிஷா-ன்னு எல்லாரும் முன்னணி நடிகைகளா வந்தத நினைக்கையில் ஜெனிலியாவுக்குத் தமிழ்லயும் ஒரு round கிடைக்கும்னு நம்ம பகுத்தறிவு சொல்லுது 🙂

ஒன்னுமில்லாத படத்தை ஊதிப் பெரிசாக்குறதும், நல்ல படத்தை பலரறியச்செய்யாம விட்டுடுறதும் தமிழ்த் திரைப்பட விமர்சகர்களுக்கு கை வந்த கலை.

பெரியார் – இதைப் பார்ப்பதற்குப் பதில் “பெரியார் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்” என்று மணிமேகலைப் பதிப்பக 25 ரூபாய் நூல் ஏதும் இருந்தால் படித்து விட்டுப் போகலாம். காமராஜ் படத்தையும் இப்படித் தான் உப்பு சப்பில்லாமல் எடுத்துக் கவிழ்த்தார்கள். பாரதி படத்தின் 60ஆம் நாளில் கூட black ticket எடுத்துத் தான் பார்த்தோம். பாரதி என்ற ஒரு வரலாற்று நாயகனை வைத்து ரத்தமும் சதையுமாக அப்படி ஒரு அருமையான படத்தைத் தந்த ஞான ராஜசேகரனின் freedom of creativity இதில் முடக்கப்பட்டிருக்கிறது என்றே நம்புகிறேன். இரண்டு காரணங்கள் – பெரியார் போன்ற அரசியல் நாயகனின் வாழ்வை அனைத்து அரசியல் கட்சியனருக்கும் திருப்திகரமாக எடுக்க வேண்டுமே என்ற கட்டாயம் / மலைப்பு, அரசின் நிதியுதவிக்கு நன்றி உடையவனாக இருக்க வேண்டியிருப்பது. இப்படி 95 ஆண்டு வாழ்க்கையையும் ஒரு படத்தில் அடக்க முற்படாமல் அவர் வாழ்வின் முக்கிய கால கட்டத்தை எடுத்துக் கொண்டு அதில் அவர் பண்பு, முக்கியத்துவம் வெளிப்படுமாறு செய்திருக்கலாம்.

தெளிவான வணிக வடிவத்திலும் இல்லாத இந்தப் படத்தில் பாடல்களைப் புகுத்தி நேரத்தை வீணடித்திருப்பது மன்னிக்க முடியாத பிழை. படத்தின் நடிகர் தேர்விலேயே கோட்டை விட்டு விட்டார் இயக்குனர். கடைசி வரை சத்யராஜ், மனோரமா, குஷ்பு என்று தான் என்னால் படத்தைப் பார்க்க முடிந்ததே தவிர அவர்களை வரலாற்றுப் பாத்திரங்களாகப் பார்க்க இயலவில்லை. மக்கள் மனதில் எந்த அறிமுகமும் இல்லாத நாடக நடிகர்களை வைத்து இன்னும் சிறப்பான அனுபவத்தைத் தந்திருக்க முடியும். மதன்பாப், Y.G மகேந்திரன், நிழல்கள் ரவி, சந்திரசேகர் என்று quota முறையில் நடிகர்கள் தேர்வு நடந்திருக்கும் போல..அம்பேத்காராக நடித்தவரைப் பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது. இது போன்ற comedy நடிகர்களையா இப்படி முக்கியமான பாத்திரங்களுக்கத் தேர்ர்வு செய்வது? இடைவேளைக்குப் பிறகு, ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு தலைவராக வரிசையில் நிற்க வைத்து ஒவ்வொரு காட்சியிலாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்ன கொடுமையடா? 🙁 நல்ல தலைவரை முறையாக அறிமுகப்படுத்தும் வாய்ப்பை விட்டு விட்டார்கள். ஒரு பிரச்சாரப் படமாக இது பயன்படலாம். ஆனால், சாதாரணத் தமிழ்ச் சிறுவன் மனதில் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. Life history படம் எடுப்பதில் நம்ம ஆட்கள் இன்னும் பல படிகள் முன்னேற வேண்டும்.

சென்னை 600028 – இன்னொரு ஊதிப் பெரிசாக்கப்பட்ட படம். கதைக்களம், பாத்திரப் படைப்புகள் புதிது தான். ஆனால், தேவையில்லாத பாடல்கள், bore அடிக்கும் கிரிக்கெட் காட்சிகள் தவிர்த்து 50% படத்தை வேண்டுமானால் பார்க்கலாம். லகான் படத்தில் கிரிக்கெட் ஆட்டத்தை ஒரு வாழ்வா சாவா ஆட்டமாக புத்திசாலித்தனமாக மாற்றி இருந்தார் இயக்குனர். அதில் பந்துக்குப் பந்து, வீரருக்கு வீரர் strategy, style மாறி நம் இதயத் துடிப்பை எகிற வைக்கும். இந்தப் படத்தில் கிரிக்கெட் காட்சிகள் ஏனோ விளம்பர இடைவேளை முன்னோட்டம் போல் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான பின்னணி இசை அதை விட கொடுமை. படத்தில் ரசித்த இரண்டே காட்சிகள் – சிறுவர்களிடம் பந்தயம் கட்டித் தோற்பது, சிவா சொல்லும் காதல் கவிதைக்கு குழந்தை அழுவது. இந்த Radio Mrichy சிவாவின் குறும்புக் குரலுக்கு நான் மிகப் பெரிய விசிறிங்கிறது துணைத் தகவல் 🙂

ஒக்கடு (கில்லி) – லைடன் மகேஷ்பாபு ரசிகர் மன்றத் தலைவர் என்ற முறையில் யாம் அவரது பழைய படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். என்ன இருந்தாலும் தமிழனின் திறமையைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஒக்கடுவை விட பல மடங்கு நகாசு வேலைகளோடு, முக்கியமாக வீட்டில் நடக்கும் நகைச்சுவைக் காட்சிகளை, கில்லியை அருமையாக எடுத்திருக்கிறார்கள்.

குறைந்தபட்ச மாற்றங்களோடு ஈயடிச்சான் copy படங்கள் எடுப்பது எப்படி என்று அறிய இயக்குனர் ராஜா & co, சென்னைக் கிளையை அணுகவும். நுவ்வொஸ்தானந்தே நேனொத்தந்தா (இது தாங்க தெலுங்குப் படப் பெயர்!!!) -ன் தமிழ்ப்பதிப்பான Something Somethingல் கோழி, வாத்து பறப்பது கூட Frame பிசகாமல் copy அடிக்கப்படிருந்தது பார்த்துப் புல்லரித்துப் போனேன் 😉

உன்னாலே உன்னாலே – நல்லா இருக்கு. பின்பகுதி படத்தை 2,3 தடவை கூட தாராளமா பார்க்கலாம். கவர்ச்சி, ஆபாசம், சண்டை, மட்டமான நகைச்சுவை இல்லாமல யதார்த்தமாக ஒரு இளமை துள்ளும் படம். இதப் போய் ஏன் நல்லா இல்லை, கதை இல்லைன்னு நிறைய பேரு திட்டி விமர்சனம் எழுதுறாங்கன்னு புரில! 12 B, உள்ளம் கேட்குமேயும் பிடிச்சிருந்தது..ஒருத்திய மட்டும் காதலிச்சு அவளுக்காகப் பூச்சி மருந்து குடிச்சு சாகுறத எல்லாம் படிச்ச நகரத்து இளைஞர்கள் மறந்து ரொம்ப நாளாச்சு ! படத்துல உள்ள climax தான் யதார்த்தம். எத்தனை நாளைக்கு தான் ஆழமான கதை, அகலமான கதை, வித்தியாசமான கதைனு மக்களை அழ வைச்சுத் துன்புறுத்திக்கிட்டே இருக்கிறது? கொஞ்சம் இந்த மாதிரி சந்தோஷமாவும் இன்னும் நிறைய பேர் படம் எடுத்தா நல்லது.

Hotel Rwanda – ஈரக் குலையை நடுங்க வைக்கும் மனிதம் ததும்பும் உண்மைக் கதை படம்! எல்லாரும் கண்டிப்பா பார்க்கணும்..ஆனா, ஒரு தடவைக்கு மேலப் பார்க்க கல் மனசா இருக்கணும் இல்ல திரைப்படக் கலை விரும்பியா இருக்கணும்..1994ல ருவாண்டாவுல 3 மாசத்துல பத்து இலட்சம் மக்களை இனப்படுகொலை செஞ்சிருக்காங்க ! இது குறித்த எந்த சொரணையும் இல்லாம இருந்திருக்கமேங்கிறது தான் பொட்டுல அடிச்ச மாதிரி உறுத்துது! இத எல்லாம் நம்ம வரலாற்றுப் பாடப் புத்தகங்கள்ல சேர்க்க மாட்டாங்களா?

Superman Returns – ஒன்னு புரிஞ்சு போச்சு. சிகப்பு, நீலக் கலர்ல பனியன், ஜட்டி design செஞ்சுட்டா நாமளும் Spiderman, Superman படங்களை எடுத்திடலாம். ஜட்டி விசயத்தில் எனக்கு முன் அனுபவம் இருக்கனால், ஜட்டிமேன்-னு கூட மூணு பாகம் எடுக்கலாம். கூடவே, ரஜினி பட heroism, பழைய முரளி பட காதல் sentiment எல்லாம் கலந்துக்கணும்.

Happy Feet – ஒரு முறை பார்க்கலாம். என்ன இருந்தாலும் Finding Nemo மாதிரி வராது ! இந்தப் படத்தை எல்லாம் நம்ம ஊர்ல மொழிமாற்றி விடுறாங்களா? விட்டா நல்லது தான்.

Lost in Translation – Mr. and Mrs. Iyer மாதிரி திருமணமான இருவருக்கு இடையில் மலரும் மெல்லிய அன்பு குறித்த கதை. நல்ல படம். ஒரு முறை பார்க்கலாம்.

Motorcycle Diaries – சே குவேரா அவருடைய நண்பருடன் செய்த Motorcycle பயணம் குறித்த diaryய அடிப்படையா வைச்சு எடுக்கப் பட்ட படம். ஒரு புரட்சியாளனின் கதையைப் பார்க்கிறோம் என்ற பிரமிப்பு அகலாமல் பார்க்கலாம். பிரச்சாரம் இல்லாத இயல்பான படப்பிடிப்பு. முழு வாழ்க்கையையும் ஒரு படத்தில் அடைக்காமல் அவரது வாழ்க்கையின் முக்கியக் கட்டத்தை மட்டும் படம்பிடித்துக் காட்டி இருப்பது சிறப்பு.

Salam Namaste – முன் பாதி இரண்டு முறை பார்க்கலாம். சாயஃப் அலி, ப்ரீத்தி பிடிச்சவங்களுக்கு இந்தப் படம் நல்லாவே பிடிக்கும். இதில வர்ற இந்தியக் comedian கலக்கல்.

மொழி – அருமையான படம்!

பருத்தி வீரன் – பலரும் ஆஹா ஓஹோன்னு சொன்னாலும் எனக்கு ஒன்னும் தோணலை. மௌனம் பேசியதே அமீரோட நல்ல படம்னு நினைக்கிறேன். ராம் படமும் over hypeக்கு அப்புறம் பார்த்து புஸ்ஸுன்னு ஆயிடுச்சு. இந்தப் படத்துல பாட்டு எனக்கு என்னவோ எனக்கு ஒட்டவே இல்லை. இரண்டு நீளமான பல பகுதி flash back bore. செம சாதாரணமான கதை. கதையின் முடிவுக் காட்சி கோரம் தேவையில்லாதது. மண்டை வலி தான் மிச்சம். கதைல வர்ற சோகத்தால நாயகன், நாயகி மேல எந்த விதமான பரிதாபமும் வரல. இந்தப் படத்த இரண்டு வருசம் எடுக்க என்ன இருக்குன்னு தோணல. Not recommended for viewing

போக்கிரி (தமிழ்) – விஜய், அசின், வடிவேலுக்காக ஒரு முறை பார்க்கலாம். தெலுங்குப் படத்த remake பண்ணாலும் இப்படியா ஈயடிச்சான் copy அடிக்கிறது? இதே படத்துல மகேஷ் பாபு நடிச்சிருந்தா நல்லா இருக்கும். original படம் அளவுக்கு அதே வன்முறை. ஆனா, கூடுதல் கண்ணியமா எடுத்திருக்காங்க. வடிவேலு comedy நல்லா இருக்கு.

தாமிரபரணி – நாட்டாமை, நட்புக்காக காலத்து படம். bore அடிச்சா ஒரு முறை பார்க்கலாம். கதாநாயகி tv serial நடிக்கத் தான் தகுதின்னு தோணுது.

குரு (தமிழ்)சுத்த waste படம். aishwarya rai இனிமேலும் நாயகியா நடிக்கிறத நிறுத்திக்கணும். மணிரத்னம் தன் பழைய படத்தில இருந்தே காட்சிகளை remix பண்றத நிறுத்தணும்..

சிக்கோ

சிவாஜி படத்தின் 107வது திரை விமர்சனம் படிச்சிக்கிட்டு இருந்தீங்கன்னா அத விட்டுட்டு, முதல் வேலையா, தி பைரேட் பே போய் சிக்கோ திரைப்படத்துக்கான டொரன்ட் கோப்புகளை உங்க கணினில பதிவிறக்கிப் படத்தைப் பாருங்க. கோப்புகளைப் பதிவிறக்கும் முன்னர் பிட்டொரன்ட் நிறுவிக்கங்க.

மருத்துவ வசதி வணிக மயமாக்கப்படுவதால் சாதாரண மக்கள் எப்படி பாதிக்கப்படுறாங்கன்னு அமெரிக்காவை அடிப்படையா வைச்சு சொல்லி இருக்கிறார், இயக்குனர் மூர். இதை வெறும் ஒரு நாட்டினரின் மருத்துவ கவனிப்புப் பிரச்சினைன்னு பார்க்காம, மருத்துவம் – கல்வி போன்ற அடிப்படை மனித உரிமைகள் கூட வணிக மயமாக்கப்பட்டா அது எந்த அளவு பரிதாபமான நிலைக்குச் சமூகத்தை இட்டுச் செல்லுங்கிறதுக்கான ஒரு விழிப்புணர்வுப் படமா பார்க்குறது நல்லது.

திரைப்படத்தில் மனதைத் தொட்ட காட்சிகள்:

1. கனடா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள்ல உள்ள அரசு மருத்துவ வசதிகளைக் காட்டும் காட்சிகள். பிரிட்டனில் மருத்துவமனைக்கு வந்து போகும் செலவையும் அரசே தருகிறது. பிரான்சில், தொலைபேசியில் அழைத்தால் 24 மணி நேரமும் மருத்துவர் வீட்டுக்கே வந்து இலவசமாக மருத்துவம் பார்க்கிறார். பிரான்சில், பிள்ளை பெற்ற தாய்க்கு அரசே துணிகளைத் துவைத்துத் தருகிறது !!

நெதர்லாந்து வந்த புதிதில் உடல்நலக் குறைவுக்காக விடுப்பு போட்டப்ப அதுக்காக சம்பளத்தைக் குறைக்கவோ, ஆண்டுக்கு அனுமதிக்கப்படும் விடுப்பு நாட்களைக் குறைக்கவோ இல்ல. குறைந்தது இத்தனை நாட்களுக்குள்ள பணிக்குத் திரும்பனும்னும் சொல்லல. மாறா, என் மருத்துவரே இவருக்கு இத்தனை நாள் விடுப்பு கொடுங்கன்னு எங்க பேராசிரியருக்கு எழுதிக் கொடுத்தார். ஏன்னு கேட்டா, உடம்பு சரியில்லாட்டி வேலை செய்யாம ஊதியம் பெற இயல்வது மனித உரிமைன்னு சொன்னாங்க !!! ரொம்ப நல்லவங்களா இருக்கீங்களேய்யான்னு வடிவேலு மாதிரி உணர்ச்சி வசப்பட வேண்டியதாச்சு. இது மாதிரி நம்ம நாட்டோட அரசு மருத்துவ வசதிகள் முன்னேறுமா? எப்ப முன்னேறும்? அதற்கான வழிமுறைகள் என்னங்கிற கேள்விகள் தான் படம் பார்க்கும் நேரம் முழுக்க மனசில நிழலாடிக்கிட்டு இருந்தது.

2. காப்பீட்டு நிறுவனத்துக்கு இலாபம் ஈட்டுவதற்காகப் பல நோயாளிகளுக்கு மருத்துவம் தர மறுத்துப் பின்னர் மனம் திருந்திய மருத்துவர் மன்னிப்பு கேட்கும் காட்சி.

3. வளரும் நாடான க்யூபா, தனது எதிரி நாடான அமெரிக்க நாட்டு மக்களுக்கு மனித நேயத்துடன் கொடுக்கும் மருத்துவ கவனிப்பைக் கூட தங்கள் சொந்த நாட்டில் அமெரிக்கர்கள் பெற இயலாமல் இருக்கும் நிலை. மருத்துவத்துக்கு காசில்லாத அமெரிக்கர்கள் வீதியில் கடாசப்படும்போது அவர்கள் முகத்தில் காணப்படும் அவமானம், இயலாமை ! க்யூபாவில் 5 centsக்கு கிடைக்கும் மருந்து அமெரிக்காவில் 120 டாலர் என்று ஒருவர் உணரும்போது வரும் கோபம், ஆற்றாமை.

4. நிறைய பணம் உள்ள வளர்ந்த நாடுகளும் வளரும் கியூபா போன்ற நாடுகளும் செய்ய இயன்றதை ஏன் அமெரிக்காவால் செய்ய முடி்யவில்லை என்ற கேள்வி ! அரசியலும் வணிகமும் கை கோர்த்து மக்களை முட்டாளாக்கி வைக்கும் உத்தியை பிரிட்டனின் முன்னாள் அரசியல்வாதி விளக்கும்போது, அட்பபாவிங்களான்னு தோணுச்சு !

5. We charge the patients according to their means and treat them according to their needs என்ற பிரெஞ்சு மருத்துவரின் பேட்டி.

இந்தப் படம் குறித்த பொதுவுடைமைப் பார்வைக்கு மயூரனின் பதிவைப் பாருங்க.

– வணிகம், அரசியல் தாண்டி ஒருவருக்கு ஒருவர் சுமைகளைப் பகிர்ந்து கொள்வதால், ஒருவருக்கு ஒருவர் பரிவுடன் இருப்பதால் எந்த விதத்திலும் சமூகம் பொருளாதார நிலையில் குறைந்து போய் விடாது என்பதை வலியுறுத்திப் படத்தை முடிக்கிறார் மூர். படத்தில் பிடித்திருந்த கருத்தும் இது தான்.

– அவனவன் முடிஞ்சா, காசு இருந்தா பொழைச்சுக்கட்டும்னு இல்லாம, இயன்றவர்கள் இயன்ற அளவு தந்தா எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும் தானே? ஒருவருக்கு ஒருவர் சார்ந்து, பகிர்ந்து வாழும் வாழ்க்கையைத் தான் எல்லா உயிரினங்களும் மேற்கொண்டிருக்கின்றன. மனுசன் மட்டும் தான் பகிர்வதற்குப் பதில் பதுக்குவதில் குறியாக இருக்கிறான்.

– காமராஜர் படத்தில், “கல்வி, தாய்ப்பால் மாதிரி, அதைப் போய் விற்க முடியுமா?” என்று காமராஜர் கேட்கிற மாதிரி வரும் ஒரு காட்சி.

– சில நாள் முன்னர் நண்பரின் ஆய்வகம் பக்கத்தில் ஓடித் திரியுற முயல்குட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு யாரோ தீயணைப்புத் துறைக்கு அழைக்க, அவங்க ஒரு வண்டியும், மூனு ambulance வண்டியும் எடுத்துக்கிட்டு வந்தாங்களாம்.

இப்படி, பல சிந்தனைகள் படம் பார்க்கும் போது மனதில் ஓடிக்கிட்டே இருந்துச்சு.

படம் நாளைக்குத் தான் திரையரங்குல வெளியாகுது. ஆனா, இப்படி இணையத்துல இருந்து பதிவிறக்கிப் படம் பார்க்கிறதை இந்தப் படத்தின் தயாரிப்பாளரே ஆதரிக்கிறார் !!! இப்படிப் பார்ப்பதைத் திருட்டாகத் தான் கருதலைன்னும் நாம விரும்பியதை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ள நல்ல வழின்னும் சொல்றார். படத்தில அறிவுரை சொல்றதோட இல்லாம, உண்மைலயும் அவர் அது படி நடக்கிறது நல்ல விசயம் தான்.

உலகத்தில் எல்லா திரைப்பட, பாடல் வெளியீட்டாளர்களும் இவரை மாதிரி இருந்துட்டா, சொர்க்கம் தான் !!! அப்புறம், இந்த பிட்டொரன்ட் மென்பொருளை வைச்சு http://www.tamiltorrents.net தளத்தில் திருட்டுத்தனமா டிவிடி தரத்தில் படங்களைப் பதிவிறக்கலாம் என்பதையும் மூர் சொல்லச் சொன்னார் 😉

நெதர்லாந்தில் சிவாஜி

2005 பாதியில் ஐரோப்பா வந்தது முதல் இது வரை திரையரங்குக்குப் போய் தமிழ்ப் படம் பார்த்தது இல்லை. முன்சனை விட்டு வரும்போது தான் அங்க தமிழ்ப் படம் போடுவாங்கங்கிறது தெரியும். நெதர்லாந்தில், ரஜினி, கமல், விஜய், விக்ரம், அஜீத் போல பெரிய நடிகர்கள் படம் மட்டும் ஒரு காட்சி காட்டுவாங்கன்னு கேள்விப்பட்டு இருந்தோம். லைடன்ல இருந்து 30 நிமிட ரயில் பயண தூரத்தில் இருக்கும் பீவர்வைக்கில் சிவாஜி இன்னிக்கு ஒரு காட்சி போட்டு இருந்தாங்க. நெதர்லாந்து முழுக்க மொத்தம் கிட்டத்தட்ட 10 காட்சிகள். ஒரு நாளைக்கு இல்ல. எல்லா இடங்களிலும் வெவ்வேறு நாட்களில் போடுற எல்லா காட்சிகளையும் சேர்த்து 10 காட்சிகள் தான். சனி, ஞாயிறுகளில் மட்டும் திரையிடுகிறார்கள். நாடு மொத்தத்துக்கும் இரண்டு படப்பெட்டிகள் வாங்கி மாற்றி மாற்றி ஓட்டுகிறார்கள். ஒரு நுழைவுச் சீட்டு விலை 20 ஐரோ. நாங்க பார்த்த திரையரங்கில் 200 இருக்கைகள். குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், ஈழத் தமிழர்கள், இந்தியத்தமிழர்கள்-அவர்களின் அண்டை மாநில நண்பர்கள் என்று அரங்கு நிறைந்து இருந்தது.

படம் பார்க்கும்போது மூனு மணிநேரம் ஓடுனது தெரில. ஆனா, வெளிய வந்து யோசிச்சா மனசில தாக்கம் உண்டு பண்ணுற மாதிரி ஒன்னும் இல்ல. இந்தியன், முதல்வன் மாதிரி கதையின் தீவிரத்தை உணர வைக்கிற, படம் பார்க்கிறவரைக் கதையுடன் ஒன்ற வைக்கிற ஷங்கரையும் காணோம். ரஜினியின் பாட்சா, படையப்பா, அண்ணாமலை போல திரும்பப் பார்க்கப் போனால் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் காட்சிகளையும் காணோம். கூடுதலாவே hype பண்ணி விட்டுருக்காங்கன்னு நினைக்கிறேன். ஒரு பாட்டுக்கு 2 கோடி செலவுன்னு வைச்சாலும் மிச்ச காசு எல்லாம் எங்க போச்சுன்னு தெரில. சண்டைக் காட்சிகள்ல ஒரு பரபரப்பும் இல்லை. நினைச்சு நினைச்சு சிரிக்க வைக்கிற நகைச்சுவையும் இல்லை. சாலமன் பாப்பையா பண்ணுறது மட்டமான நகைச்சுவை. வீணா ஒரு வில்லன்.

மொட்டை ரஜினி நல்லா இருக்கார். காசு சுண்டுற, பபுள் கம் தூக்கிப் போடுற ஸ்டைல் நல்லா இருக்கு. ஷ்ரியா அழகா இருக்கார். முகம் சுளிக்க வைக்காத, அழகுணர்ச்சி கூடிய கவர்ச்சி காட்டி இருக்காங்க.

ஒரு முறை திரையங்கில் பொழுதுபோக்குகாகப் பார்க்கலாம். ஷங்கர் இயக்கி (?) இருக்கும் ரஜினி படம். பாபா, சந்திரமுகிக்கு இது பரவால. வேற ஒன்னும் பெரிசா சொல்லுறதுக்கு இல்லை.

தமிழ்ல பேர் வைச்சா வரி விலக்குங்கிற அரசு கொள்கையிலயே உடன்பாடு இல்லாதப்ப சிவாஜி – The Bossஐத் தமிழ்ப் பெயராக்கி முழு வரி விலக்கு தருவது பகல் கொள்ளை மாதிரி தான் இருக்கு. நகைக் கடைல இருந்து சாலையோரத்துல இருக்கும் உணவகம் வரைக்கும் தமிழ்ல தான் பேர் இருக்கு. தமிழ்ல பேர் வைச்ச காரணத்துக்காக எல்லாத்துக்கும் வரி விலக்கு தந்தா அப்புறம் அரசுக்கு வரி எங்க இருந்து வரும்? தமிழ்நாட்டுல தமிழ்ல பேர் வைக்க காசு கொடுத்தா தான் நடக்கும்ங்கிறது அரசின் கையாலகாதனத்தையும் அந்தச் சலுகையைப் பெறுகிற தமிழனின் அல்பத்தனத்தையும் தான் காட்டுது. கடைக்கோடி தமிழன் எல்லாம் சாலை வரி, வீட்டு வரின்னு உழலும்போது கோடிகள்ல புரளுகிற திரைப்பட முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் வரி விலக்கு எதுக்கு?

மொழி – திரை விமர்சனம்

மொழி – இப்படி மனச வருடுற மாதிரி இதமா ஒரு தமிழ்ப் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு !!!

வழக்கமா, ரொம்ப hype செய்யப்படுற படங்கள் சொதப்பலா போயிடும். இல்ல, படம் நல்லா இருந்தாலும் மிகை எதிர்ப்பார்ப்பே படத்தைப் பத்தி குறைவா எடை போட வைச்சிடும். அக்கு வேறு ஆணி வேறா மொழி படத்தோட கதை, விமர்சனங்களைப் படிச்ச பின்னாலும், படம் பார்க்கும்போது எந்த விதத்திலும் bore அடிக்கல. ஓடையில் மிதந்து போற பரிசல் மாதிரி அழகா நகருது படம்.

வழக்கமா திருட்டு vcd படம் வெளியாகுற தளத்துல நேற்று தான் ஒரு மாசம் தாமதமா release ஆனது இந்தப்படம் ! (நெதர்லாந்தில் இந்தப் படம் வெளியிடப்படலை. இந்தியாவுக்கு வரும்போது original CD வாங்கிடுறேன். பிரகாஷ்ராஜ், மன்னிக்கவும் 🙂 )

நம்ம நண்பர்களை எல்லாம் அழைச்சு நல்லா சாப்பிட்டு home theatreல் படத்த போட்டு weekend movieக்கு உட்கார்ந்தோம்.

முதல் பாதி சிரிச்சு சிரிச்சு வயிறு வலி எடுத்துப் போய் ஒரு கட்டத்துல படத்த pause பண்ற அளவுக்குப் போயிடுச்சு. குறிப்பா, பிரம்மானந்தம் பிரகாஷ்ராஜ அரைகுறையா பார்க்கிற காட்சிகள், பிரம்மானந்தம் வீட்டு வாசல்ல வாந்தி எடுக்கிற காட்சிகள். பிற்பாதிப் படத்தில் மனசைத் தொடற காட்சி அமைப்புகள்.

எப்படியும் இன்னும் பல முறை இந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்கப் போறது உறுதி.

படத்தில் பிடித்த விசயங்கள்:

1. இயல்பான கதை, பாத்திரங்கள், வசனங்கள் (மனசுக்குள்ள கூட எப்படி ஊமையா நடிக்கிற? சில விஷயங்களை கேள்வி கேட்காம நம்பித் தான் ஆகணும்! வாழ்க்கை கொடுக்க இல்ல, வாழ்க்கைய பகிர்ந்துக்க!). ஒரு குடியிருப்புக்குள் கதை நடந்தாலும் bore அடிக்காத இதமானத் திரைக்கதை. கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு. style என்ற பெயரில் கடித்துக் குதறாத படத்தொகுப்பு.

2. அருமையான இசை. பொருள் பொதிந்த சூழலுக்கேற்ற பாடல் வரிகள். (எடுத்துக்காட்டு- மூன்றாம் பிறைக்குள் நிலவைத் தேட மாட்டேன்!)

3. குத்துப் பாட்டு, இரட்டை அர்த்த வசனம் இல்லை. நகைச்சுவை நடிகர் தன் மனைவியைப் பொத்தி வைக்கிற கதைகளில் இரட்டை அர்த்த வசனங்கள் விளையாடும். ரஜினியின் சந்திரமுகியில் கூட இந்த மட்டமான போக்கு இருந்தது.

4. நாயகியின் முகம், உணர்வுகளைத் தவிர உடலைக் காட்டி ஒரு காட்சியிலும் கூட முகம் சுழிக்க, விழி விரிய 😉 வைக்கவில்லை. இந்த விதத்தில் பாலா பட நாயகிகளையும் குறிப்பிடவேண்டும்.சிம்ரனை இடுப்பை மறைத்து ஆட வைத்த ஒரே இயக்குனர் அவர் தான்.

5. சினிமாத்தனங்கள் குறைவு. வில்லன் இல்லை. punch dialogue இல்லை. அடிதடி சண்டை இல்லை. heroism இல்லை. அடி வாங்கும் வடிவேலு comedy இல்லை. நாயகனோடு சுற்றும் கேணை நண்பர்கள் கூட்டம் இல்லை. இதில் நாயகனை விட நண்பர் smart ! மிளகாய் பஜ்ஜி போல் வரும் நாயகியின் தோழி இல்லை. சொர்ணமால்யாவுக்கு அலைபாயுதேக்கு அடுத்து நினைவில் நிற்கும் பாத்திரம். அவர் இல்லாவிட்டால் கதையே நகராது. நாயகன் நாயகிக்கு அறிமுகப்பாட்டு இல்லை. நாயகி அறிமுகத்தில் முகத்தைக் காட்டாமல் இன்ன பிற பாகங்களைக் காட்டுவது, பூச்சொரிவது, காற்றடிப்பது, மழை பெய்வது போன்ற ஜிகினாத்தனங்கள் இல்லை.

6. விதவைகள், மனம் நலம் பாதிக்கப்படவர்கள், மாற்றுத் திறன் படைத்தோர் (இப்ப ஊனமுற்றோர இப்படி positiveஆ சொல்றாங்களாம். singaporeல physically handicapped என்பதற்குப் பதில் physically challenged என்பார்கள்) அனைவரையும் இவ்வளவு positiveஆக எந்தப் படமும் காட்டியதில்லை. காட்டினாலும் ஒரே பாட்டில் வீறு கொண்டு முன்னேறுவது போல் அபத்தமாகத் தான் காண்பிப்பார்கள்.

7. வாய் பேசாத காது கேளாத நாயகிக்கு ஒரு பாட்டி. ஆனால் அவர் “ஓ..” என்று ஒப்பாரி வைக்கவில்லை. நாயகன் கட்டிக் கொள்கிறேன் என்று சொன்னவுடன் “வாழ்வு கொடுத்த மகராசா” என்று அடி தழுவவும் இல்லை! நாகியை யாரும் பரிதாபமாகப் பார்க்கவில்லை. அவரை வைத்து மட்டமான comedy பண்ணவில்லை. கிரேசி மோகனின் புளித்துப் போன வசன நகைச்சுவைக்கு இடையில் situation comedyயாக இந்தப் படத்தில் இருப்பவை அருமை.

8. இந்த மாதிரி படங்களில் “பெ ..பெப்பே.” என்று சொல்லவும் அதை மொழிபெயர்க்கவும் என்று ஒரு torture இருக்கும். இதில் சைகை மொழியை அருமையாகக் கற்றுக் கொடுக்கிறார்கள். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு நமக்கே எல்லா சைகையும் புரிய ஆரம்பிப்பது இயக்குனரின் திறமை. வார்த்தை இல்லாத climax அருமை. இனி ஞாயிற்றுக் கிழமை மதியம் வரும் சைகை மொழிச் செய்திகளைப் பார்க்க வேண்டும் !

9. முக்கியமானது, படம் பேசும் விசயம் – அன்புக்கு மொழி முக்கியம் இல்லை; அன்பு தான் முக்கியம். இந்த ஒரு விசயத்துக்காகத் தான் படம் ரொம்பப் புடிச்சுப் போச்சு. அடிப்படை உணர்வுகளை தமிழ்ப் படங்கள் பேசுறது ரொம்ப அரிது.

கலை நோக்கில் பார்த்தால் படத்தில் விமர்சிக்க நிறைய இருக்கலாம். ஆனால், இது விமர்சித்து மதிப்பெண் போடுவதற்கான படம் இல்லை. பார்க்க, அனுபவிக்க, உணர , புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.

தமிழ், தெலுங்கு, இந்தி என்று அனைத்து மொழிகளிலும் வில்லனாக, குணச்சித்திர நடிகராக பிரகாஷ்ராஜ் வந்துகொண்டே இருப்பது சில சமயம் அலுப்பாக இருக்கும். பரவாயில்லை. இது போல் படம் எடுப்பார் என்றால் எல்லாரும் அவரை வைத்தே படம் எடுத்து அவருக்கு நிறைய பணம் கொடுக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். பொய் தவிர்த்து, நாம், அழகிய தீயே, கண்ட நாள் முதல் என்று அவர் படங்கள் எல்லாம் ரசிக்க வைப்பதாகவே இருக்கின்றன. கமல், பார்த்திபனும் சொந்தக் காசைப் போட்டுப் படம் எடுத்தாலும், அவர்களின் அதிபுத்திசாலித்தன ஆராய்ச்சிக்கு நாம் ஆய்வுக்கூட எலிகளாக அவதிப்பட வாய்ப்பு இருக்கிறது. அதி மேதாவித்தனமாய் படம் எடுக்காமல், எளிமையாக ராதா மோகன் போல் படம் எடுத்தால் நன்று. உண்மையில், எளிமையாய் எடுப்பது தான் சிரமம்.

இது மாதிரி அப்பப்ப படங்கள் வர்றது ஆசுவாசமா இருக்கு. அடுத்து “கொஞ்சமாச்சும் நல்லா இருக்கும், ஒரு தடவையாச்சும் பார்க்கலாம்” என்று எதிர்ப்பார்த்திருக்கும் படங்கள் – சிவாஜி, உன்னாலே உன்னாலே, மாயக்கண்ணாடி, ஓரம்போ, நான் கடவுள், வாரணம் ஆயிரம், பீமா, தசாவதாரம்.