மக்கட்பேறு – திருக்குறள் உரை

மக்கட்பேறு – திருக்குறள் உரை

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. 61

நல்ல அறிவாளி குழந்தைகளைப் பெறுவதை விட வேற கொடுப்பினை எதுவும் இல்லை.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். 62

பழி இல்லாத நல்ல பண்பு உள்ள குழந்தைகளைப் பெத்தா, ஒருவருக்கு ஏழு பிறவியிலும் கெட்டதே நடக்காது.

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். 63

ஒருத்தங்களோட குழந்தைங்க தான் அவங்களுக்கு சொத்து மாதிரி. ஆனா, அது எந்த அளவு மதிப்பு உள்ளதுங்கிறத அந்தக் குழந்தைகளோட செயல்களை வைச்சு தான் சொல்ல முடியும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். 64

குழந்தைகளோட பிஞ்சுக் கைகள் தொட்டுப் பிசைஞ்ச உணவு அதைப் பெத்தவங்களுக்கு அமுதத்தை விட இனிமையா இருக்கும்.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 65

குழந்தைகளை அணைச்சு இருக்கிறது தான் பெத்தவங்க உடம்புக்கு இன்பம். அவங்களோட பேச்சைக் கேட்கிறது தான் அவங்க காதுகளுக்கு இன்பம்.

குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். 66

புல்லாங்குழல், யாழ் இசை எல்லாம் இனிமையா இருக்குன்னு சொல்லுறவங்க கண்டிப்பா அவங்க குழுந்தைகளோட மழலைப் பேச்சைக் கேட்டிருக்க மாட்டாங்க.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். 67

ஒரு அப்பா தன் மகன் / மகளுக்குச் செய்யுற கடமை என்னன்னா, படிச்சவங்க இருக்க அவைல அவங்களை முதல் ஆளா ஆக்குறது தான்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. 68

பெத்தவங்களை விட குழந்தைகள் அறிவாளிகளா இருந்தா அதுனால இந்த உலகத்துக்கே நல்லது.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். 69

தன் மகனை “நல்லவன், சிறந்தவன்”னு ஊரெல்லாம் புகழும் போது, அவனைப் பெத்தப்ப மகிழ்ந்ததை விட கூடுதல் மகிழ்ச்சியை ஒரு தாய் அடைவாள்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல். 70

“இவனைப் பெக்கிறதுக்கு என்ன தவம் செஞ்சாரோ”ன்னு சொல்லுற மாதிரி வாழ்ந்து காட்டுறது தான் பிள்ளைங்க அப்பாவுக்கு செய்யுற உதவி.

**

பார்க்கவும் – திருக்குறள் உரை பட்டியல்