தமிழ் இணைய அறிமுகப் பட்டறை: தன்னார்வலர்கள் தேவை

சூன் 23-27, 2010 நடக்கும் உலகத் தமிழ் இணைய மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ்க் கணினி, இணைய நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறுகிறது. இதில் தமிழ் இணையம் குறித்த அறிமுகம், பயிற்சி அளிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி, தமிழ் இணைய அறிமுகம், தமிழில் இணைய அறிமுகம், வலைப்பதிவுகள், விக்கிப்பீடியா, கட்டற்ற மென்பொருள் இயக்கம் போன்ற அடிப்படைக் கருக்களில் பயிற்சி அளிக்கலாம். தமிழ் இணையத்தில் பால் ஆர்வமுள்ள நண்பர்களாக இந்த நிகழ்ச்சியைக் கூடிச் செய்து கலைவோம். எந்த அமைப்பின் பேரிலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படவில்லை. 2007 சென்னை வலைப்பதிவர் பட்டறை போன்ற முயற்சியின் தொடர்ச்சியாக இதனைக் கருதலாம்.

இந்நிகழ்வைத் திட்டமிட்டு நடத்த, உறுதி செய்ய தன்னார்வலர்கள் தேவை.

ஒரு நாளுக்கு குறைந்தது 6 பேராவது முழு நேரம் பயிற்சி அரங்கில் இருப்பது நல்லது. எனவே, 5 நாட்களுக்கும் 30 தலைகள் தேவை. ஒருவர் அனைத்து நாட்களும் இருக்கலாம். அல்லது, ஓரிரு நாட்கள் மட்டும் கலந்து கொள்ள இயன்றாலும் சரி. ஒருவர் குறைந்தது ஒரு நாள் முழுக்கவாவது இருக்க இயலும் என்றால் ஒருங்கிணைக்க இலகு.

நேரடியாக நிகழ்வில் பங்கு பெறுவது போக, நிகழ்வுக்குத் தேவையான கணினிகள், projectorகள் ஏற்பாடு, உதவிக் கையேடுகள், இறுவட்டுகள் தயாரிப்பு போன்றவற்றில் உதவி தேவை. எனவே, நேரில் வர இயலாதவர்களும் இம்முயற்சியில் உதவலாம்.

உங்களால் உதவ இயலும் என்றால் உங்கள் பெயர், கலந்து கொள்ளும் நாள், செய்யக்கூடிய வேறு உதவிகள் குறித்த விவரங்களை மறுமொழியில் குறிப்பிடுங்கள்.

நன்றி.

வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி?

ஆர்வமுள்ள ஒரு துறை, தொடர்ந்து வலைப்பதிதல், பிற ஆர்வலர்களுடன் உறவாடல், பணம் ஈட்டுவது குறித்து தெளிவான திட்டமிடலும் முயற்சியும் இருந்தால் வலைப்பதிவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணம் ஈட்டுவதற்கு பல வழிகள் உள்ளன.

நேரடி வழிகள்

1. வலைப்பதிவில் விளம்பரம்

வலைப்பதிவில் பணம் என்றால் பலரும் புரிந்து கொள்வந்து இந்த நேரடி வழியைத் தான்.  வலைப்பதிவு ஆங்கிலத்தில் இருந்தால் கூடுதல் வாய்ப்புகள். ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் வருகைகள் வேண்டும். Adsense, தட்டி விளம்பரங்கள், தொடுப்பு விளம்பரங்கள் மூலம் பணம் ஈட்டலாம். தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது மாணவர் சங்கர் கணேசு Adsense மூலமாக மட்டுமே ஒவ்வொரு மாதமும் 20,000+ பணம் ஈட்டுகிறார்.

2. விளம்பர இடுகைகள்

சில நிறுவனங்களின் பொருட்களைப் பற்றி வலைப்பதிவில் எழுத காசு தருகிறார்கள்.  விளம்பர இடுகைகள் எழுதும் மயூரேசன் கூடுதல் தகவல் தரலாம்.

3. முகவர் திட்டங்கள்

வாசகர்களுக்குப் பயனுள்ள பொருட்களின் முகவர்களாகச் செயல்படலாம். எடுத்துக்காட்டுக்கு, Amazon புத்தக முகவர் திட்டம்,  Hostgator வலையிட வழங்கி முகவர் திட்டம். வாசகர்கள் இந்த தொடுப்புகளை அழுத்திச் சென்று பொருட்களைப் பெறும் போது, நமக்கு ஒரு பங்குத் தொகை கிடைக்கும். இதற்குப் பெரிய அளவில் வாசகர்கள் வேண்டும் என்றில்லை. வழக்கமாக இந்தப் பொருட்களை நம் நண்பர்களுக்குப் பரிந்துரைக்கும் போது கூட இந்தத் தொடுப்புகளை அழுத்தி வாங்கச் சொல்லலாம்.

4. வலைப்பதிவு விற்பனை

நிறைய வாசகர்கள் ஒரு சமூகமாகப் பங்கெடுக்கும், பணம் ஈட்ட வாய்ப்புள்ள ஒரு வலைப்பதிவை உருவாக்கினால், அதை விலை கொடுத்து வாங்குவதற்கு ஆட்கள் உண்டு. மிக இலகுவாக, 500 அமெரிக்க டாலர் தொடக்கம் எந்த விலைக்கும் விற்க இயலும்.

மறைமுக வழிகள்

மேற்குறிப்பிட்ட நேரடி வழிகள் பலவும் அதிக வாசகர் வட்டம் உடைய ஆங்கில வலைப்பதிவுகளுக்கே பொருந்துபவை. ஆனால், ஓரளவு அறிமுகமான தமிழ் வலைப்பதிவுகள் மூலமும் கூட பணம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

5. வலைப்பதிவு நுட்ப வேலை வாய்ப்புகள்

வேர்டுபிரெசு மென்பொருளை உங்கள் சொந்தத் தளத்தில் நிறுவி வலைப்பதிகிறீர்களா? வலைப்பதிவு நிறுவல், இற்றைப்படுத்தல், பராமரப்பு, பரப்புதல் ஆகியவற்றில் அனுபவம் உண்டா? வலைப்பதிவு வடிவமைப்பு, வரை கலை வடிவமைப்பு, நிரலாக்கம் ஆகியவற்றில் தேர்ச்சி உண்டா? இத்துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. ஊரோடி பகீ, நான் உட்பட சில தமிழ் வலைப்பதிவர்கள் இது போன்ற WordPress நிறுவல் வேலைகளை எடுத்துச் செய்கிறோம்.

6. வலைப்பதிவு எழுத்து வேலை

பல தொழில் முனைவர்கள் தொழில்முறையில் வலைப்பதிவுகளைத் தொடங்கி அவற்றில் கட்டுரைகள் எழுத எழுத்தாளர்களைத் தேடுகிறார்கள். ஒரு கட்டுரைக்கு 2 அமெரிக்க டாலர் முதல் 200 அமெரிக்க டாலர் வரை வாய்ப்புகள் உள்ளன.

7. தொழில் வளர்ச்சிக்கு வலைப்பதிதல்

நமது தொழில் குறித்த விழிப்புணர்வு, விளம்பர வாய்ப்புகளுக்கும் வலைப்பதிவைப் பயன்படுத்தலாம். நேரடியாக உற்பத்தியாளரிடம் பேசித் தெளிவு பெற இயல்வதால் நம்பகத் தன்மை கூடி கூடுதல் விற்பனைக்கு உதவும். எடுத்துக்காட்டுக்கு, பதிப்புத் தொழில், தனது பதிப்பகம் குறித்து எழுதும் பத்ரி.

8. துறை வல்லுனராகும் வாய்ப்புகள்

நமக்கு ஈடுபாடுள்ள துறை, வேலை குறித்து தொடர்ந்து வலைப்பதிவதன் மூலம்  நம் திறமைகளைக் காட்சிப்படுத்தி புதிய வாய்ப்புகளை வெல்ல இயலும்.  வலைப்பதிவராகத் தொடங்கி அதன் மூலம் இன்று நூல் வெளியிடத் தொடங்கி உள்ளவர்கள், அச்சு ஊடகங்களில் தொடர்கள் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, லக்கிலுக் ஒரு எழுத்தாளராக வளரத் தொடங்கி உள்ளார். விக்கி, தானூர்திகள் துறையில் இந்திய அளவில் மதிப்புக்குரிய வலைப்பதிவராக உள்ளார்.
தொடர்புடைய இடுகைகள்:

இணையத்தில் பணம் பண்ணலாம் வாங்க – பகுதி 1

இணையத்தில் பணம் பண்ணலாம் வாங்க – பகுதி 2

இணையத்தில் பணம் பண்ணலாம் வாங்க – பகுதி 3

இணையத்தில் பணம் பண்ணலாம் வாங்க – பகுதி 4

தமிழ் வலைப்பதிவுகள்

எனக்குப் பிடித்த சில தமிழ் வலைப்பதிவுகள். நினைவுக்கு வரும் வரிசையில்.

1. வளவு – தமிழ் மொழி, பண்பாடு குறித்த உரையாடல்களுக்கு.

2. வீணாய் போனவன் – அழகான, சுருக்கமான, மனதைத் தொடும் கவிதைகளுக்கு.

3. செவ்வாய்க்கிழமை கவிதைகள்மனிதர்கள் தொடர் அருமை.

4. மயூரன் எழுதும் GNU / Linux குறிப்பேடு – கட்டற்ற மென்பொருள்கள், அவற்றின் மெய்யியல் அறிய.

5. தமிழ் சசி – இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்த அலசல்கள்.

6. பயணங்கள் – மருத்துவர் புருனோ மூலம் அரசு ஊழியர்கள், மருத்துவத் துறை பற்றிய பல உண்மைகளை அறிய.

7. சாரல் – சயந்தன், தமிழ் வலையுலகில் மிகச் சிறந்த நகைச்சுவை உணர்வு உடையவர். கொஞ்ச காலமாக அப்படி எழுதுவதற்கான சூழல் இல்லை 🙁

8. S. Ramakrishnan – தகவல் செறிவுடன், புரிகிற மாதிரி, பயனுள்ள வகையில்  இணையத்தில் எழுதும் தமிழ் எழுத்தாளர்.

(பட்டியல் விரியும்)

கூகுளுக்குத் தமிழ் தெரியாது

இணையத்தில் எழுதும் அனைவரும் தமிழை, அதன் இலக்கணத்தை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் அல்லர். எனவே, கூகுள் காட்டும் முடிவுகளை வைத்து ஒரு சொல் எவ்வாறு எல்லாம் எழுதப்படுகிறது, இணையத்தில் ஒருங்குறியில் எழுதுவோரிடம் எச்சொல் அதிகம் புழங்குகிறது என்று அறியலாமே ஒழிய எது சரியான சொல் என்று முடிவு செய்ய இயலாது. பல சமயங்களில் அதிகம் புழங்கும் சொற்கள் சரியானவையாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும் 100% இப்படிச் சொல்ல இயலாது.

ஆன்மிகம், ஆன்மீகம்.

சன்னதி, சன்னிதி.

கருப்பு, கறுப்பு

– இது போன்ற சொற்களில் எது சரி என்ற குழப்பம் வருகையில் பலரும் கூகுளில் இச்சொற்களைத் தேடி, கூடுதல் முடிவுகளைக் கொண்ட சொற்களைச் சரியெனத் தேர்கிறார்கள்.

ஆனால், இந்த வழிமுறை எப்போதும் சரியாக இருக்கத் தேவை இல்லை.

எடுத்துக்காட்டுக்கு,

முயற்சிக்கிறேன் என்று எழுதுவது தவறு. கூகுள் தேடலில் இதற்கு 15,900 முடிவுகள் கிடைக்கின்றன.

முயல்கிறேன் என்று எழுதுவது சரி. ஆனால், கூகுள் தேடலில் இதற்கு 9,300 முடிவுகள் தான் கிடைக்கின்றன.

இணையத்தில் எழுதும் அனைவரும் தமிழை, அதன் இலக்கணத்தை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் அல்லர். எனவே, கூகுள் காட்டும் முடிவுகளை வைத்து ஒரு சொல் எவ்வாறு எல்லாம் எழுதப்படுகிறது, இணையத்தில் ஒருங்குறியில் எழுதுவோரிடம் எச்சொல் அதிகம் புழங்குகிறது என்று அறியலாமே ஒழிய எது சரியான சொல் என்று முடிவு செய்ய இயலாது. அதிகம் புழங்கும் சொற்கள் சரியானவையாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும் 100% இப்படிச் சொல்ல இயலாது.

சென்ற பத்தியில் “இணையத்தில் ஒருங்குறியில் எழுதுவோரிடம் எச்சொல் அதிகம் புழங்குகிறது” என்பதில் “

    இணையத்தில் ஒருங்குறியில் எழுதுவோரிடம்

” என்பதை அடிக்கோடிட்டு மனதில் இருத்திக் கொள்ளுங்கள். ஒருங்குறியில் இல்லாத பல தமிழ் இணையத்தளங்களை கூகுள் திரட்டுவதில்லை. இன்னும் படிமங்களாகவே கூட தமிழ் எழுத்துக்களைக் காட்டும் வழக்கமும் இருக்கிறது. இவை போக, கூகுளால் அணுகித் திரட்டப்படாத பல தமிழ் இணையத்தளங்களும் இருக்கலாம். திரட்டப்பட்ட பக்கங்களில் இருந்து கூட எல்லா பக்கங்களையும் தேடல் வினவல்களுக்கு கூகுள் பயன்படுத்துவதில்லை. முக்கியமில்லாத பக்கங்கள், ஒரே போல் உள்ள பக்கங்களைத் தவிர்த்து விடுகிறது. இணையத்தில் உள்ள தமிழ் ஒலிப்பதிவுகளில் உள்ள பேச்சுக்களைப் புரிந்து கூகுளால் எழுத்துப்பெயர்க்க முடியாது.

கூகுள் முடிவுகளில் ஒரு சொல் அதிகம் தென்படுகிறது என்பதற்காகத் தமிழ் அச்சு ஊடகங்கள், நூல்கள், மக்கள் பேச்சு வழக்கிலும் அச்சொல் கூடுதலாகப் புழங்குகிறது என்று முடிவுக்கு வர இயலாது. இணையத்தில் முழுமையாக உள்ளடக்கங்களை ஒருங்குறியில் ஏற்றும் தமிழ் அச்சு ஊடகங்கள் குறைவே. தமிழ் மக்களின் வட்டாரப் பேச்சு வழக்குகளோ இன்னும் அச்சு வடிவிலேயே கூட முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. பெரும்பான்மை மக்களின் பேச்சு வழக்கைக் கொச்சையாகக் கருதும் ஆதிக்கப் போக்கு அச்சு ஊடகங்கள் தத்தம் எழுத்து மொழித் தேர்வில் பக்கச் சாய்வுடன் செயல்படும் என்றும் உணரலாம். பேச்சு மொழி வேறாகவும், உரைநடை எழுத்து மொழி வேறாகவும் இருக்கும் தமிழில் இது முக்கியமான விசயமாகும். தமிழைப் பொருத்த வரை எழுத்து மொழி மட்டுமே தமிழின் அதிகாரப்பூர்வ ஆவணம் கிடையாது. கற்றறிந்த தமிழறிஞர்களே தெரியாமல் திணறும் பல கலைச்சொற்கள் மக்கள் வாழ்வில் இலகுவாகப் புழங்குகின்றன. எனவே பேச்சு மொழியின் திறத்தையும் தரத்தையும் குறைத்து மதிப்பிடலாகாது.

தற்போது நன்கு படித்து, கணினி, இணைய அணுக்கம், எழுதுவதற்கான ஓய்வு நேரம், ஆர்வம் கூடியவர்களே தமிழ் இணையத்தில் எழுதுகிறார்கள். மொத்த தமிழ் மக்கள் தொகையில் ஒரு வீதம் கூட இருக்க மாட்டார்கள். இந்த ஒரு வீதத்திற்குக் குறைவான மக்களின் சமூக, பொருளாதார, வாழ்வியல், வயது, கல்வி, தொழில் பின்புலங்களிலும் கூடுதல் ஒற்றுமைகளைக் காணலாம். கணிசமானவர்கள் மென்பொருள் துறையில் இருப்பவர்கள். இளைஞர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள். பெண்கள் தொகை குறைவு. இவர்களின் எழுத்துகளிலும் தனித்துவமான, பாசாங்கில்லாத, வட்டார வழக்குகளைக் காண்பது அரிது. ஏற்கனவே வெகுமக்கள் ஊடகங்கள் பின்பற்றும் மொழி நடையை அறிந்தோ அறியாமலோ பின்பற்றுவதற்கான வாய்ப்புகளே அதிகம். எனவே, பெரும்பான்மை தமிழ் மக்களின் பேச்சு, எழுத்து வழக்குகள் உள்ளது உள்ளபடி ஒலி, எழுத்து வடிவில் பதியப்பட்டு ஆயத்தக்க நிலைக்கு வரும் வரை,  இந்த சொற்பத் தமிழ் இணைய மக்கள் தொகையை ஒட்டு மொத்த உலகத் தமிழ் மக்கள் தொகையின் சார்பாகப் பார்க்க இயலாது.

**

மேற்கண்ட சிந்தனைகள் யாவும் தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழ்ந்த ஒரு சுவையான உரையாடலை அடுத்து எழுந்தவை.

இராமனுசன் என்ற பெயரைக் காட்டிலும் இராமானுஜன் / இராமானுஜம் / ராமானுஜம் என்ற பெயரே இணையத்தில் அதிகம் தென்படுவதால் அவையே சரி என்ற வாதம் ஒருவரால் முன்வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா என்ற பெயரைக் காட்டிலும் சிறீலங்கா என்ற பெயரே இணையத்தில் அதிகம் தென்படுவதால் ஸ்ரீ என்ற எழுத்தை ஒழித்து சிறீ, சிரீ என்றே எழுதத் தொடங்குவோமா என்று எதிர்வாதம் வைத்தால் சரியாக இருக்குமோ 🙂

தொடர்புடைய பக்கங்கள்:

பொறுக்குச் சாய்வு

கூகுள் தமிழ் X விக்கி தமிழ்

என் வலைப்பதிவுப் போக்குகள்

2007 ஆம் ஆண்டை “வலைப்பதிதல் ஆண்டு” என்று நாட்குறிப்பில் எழுதத்தக்க அளவு வலைப்பதியும் வேகம் கூடுகிறது!! 2007 தொடக்கத்தில் துறை சார் பதிவுகள் என்று ப்ளாகரில் எண்ணற்ற புதுப் பதிவுகள் தொடங்கி, பராமரிப்பில் விழி பிதுங்கி, தொடக்க ஆர்வம் குன்றி நிறைய பதிவுகளை அழித்து விட்டேன். இனி புதிதாய் ஒரு வலைப்பதிவையும் எங்கும் திறக்கும் ஆர்வம் இல்லை. இருக்கிற வலைப்பதிவுகள் போதும் 🙂 தனித்தளத்துக்கு நகர்வது, திரட்டிகளில் இருந்து விலகுவது வலைப்பதியும் வேகத்தைக் குறைக்கும் என்று நினைப்பு பொய்த்துப் போனது 🙂 திரட்டிகளில் இருந்த போது இருந்ததை விட மறுமொழிகள் எண்ணிக்கை குறைந்தது. ஆனால், அவற்றின் தரம் கூடியது. வருகையாளர் எண்ணிகையும் கூடியது.

எச்சரிக்கை: நாட்குறிப்பு / சொந்தக் கதை 🙂

* 2005 சனவரியில் முதல் எழுத்து . அதற்கு ஆறு மாதம் முன்னரே தமிழில் எழுதக் கற்றிருந்தேன். ஆனால், அப்போது எங்கு, என்ன தமிழில் எழுதினேன் என்று நினைவில்லை. விக்கி அறிமுகம் மார்ச் 2005ல்,

* 2005 பிற்பகுதியில் ஜெர்மனிக்கு நகர்ந்த பிறகு தமிழ்மணம் அறிமுகமானது. இடுகைகள் எண்ணிக்கையும் கூடியது. பெரும்பாலும் செய்தி விமர்சனங்களே எழுதினேன்.

* 2006 தொடக்கம் பிற்பகுதி வரை அறவே வலைப்பதியவே இல்லை எனலாம். நெதர்லாந்துக்கு நகர்வு, வாழ்க்கைச் சூழல், விக்கி ஈடுபாடுகள் காரணம். பிற்பகுதியில் தமிழ் விக்கி திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டி மீண்டும் வலைப்பதிவுகள் பக்கம் எட்டிப் பார்க்கிறேன். அன்று தொடங்கி செய்தி விமர்சனங்கள் எழுதுவதைப் பெரும்பாலும் தவிர்த்து விடுகிறேன். (காரணம்) . தமிழ், கணினி, வலைப்பதிதல், கட்டற்ற மென்பொருள், தமிழ்99 என்று கொஞ்சம் கொள்கை பரப்பு வேலைகளில் தீவிரமடையத் தொடங்குகிறது.

* 2007 ஆம் ஆண்டை “வலைப்பதிதல் ஆண்டு” என்று நாட்குறிப்பில் எழுதத்தக்க அளவு வலைப்பதியும் வேகம் கூடுகிறது!! 2007 தொடக்கத்தில் துறை சார் பதிவுகள் என்று ப்ளாகரில் எண்ணற்ற புதுப் பதிவுகள் தொடங்கி, பராமரிப்பில் விழி பிதுங்கி, தொடக்க ஆர்வம் குன்றி நிறைய பதிவுகளை அழித்து விட்டேன். இனி புதிதாய் ஒரு வலைப்பதிவையும் எங்கும் திறக்கும் ஆர்வம் இல்லை. இருக்கிற வலைப்பதிவுகள் போதும் 🙂 தனித்தளத்துக்கு நகர்வது, திரட்டிகளில் இருந்து விலகுவது வலைப்பதியும் வேகத்தைக் குறைக்கும் என்று நினைப்பு பொய்த்துப் போனது 🙂 திரட்டிகளில் இருந்த போது இருந்ததை விட மறுமொழிகள் எண்ணிக்கை குறைந்தது. ஆனால், அவற்றின் தரம் கூடியது. வருகையாளர் எண்ணிகையும் கூடியது.

ஆண்டின் நடுவில் படிப்புக் காரணங்களுக்காக வலைப்பதியும் வேகம் குறைந்தது. ஆனால், விடாமல், மாற்று!, வலைப்பதிவர் பட்டறை, வேர்ட்பிரெஸ் தமிழாக்கம், திறந்த OPML திட்டம் என்று என் வலைப்பதிவுகளுக்கு வெளியேயான வலைப்பதிவர் சமூகச் செயற்பாடுகள் கூடுகின்றன.

வேர்ட்பிரெஸ் தரும் சுதந்திரம் வலைப்பதிவு நுட்பம் குறித்து நிறைய நோண்டிப் பார்க்கத் தூண்டியது. மாற்று! பங்களிப்புகள் காரணமாக நாள் விடாமல் தமிழ் வலைப்பதிவுகளைப் படிக்க நேர்ந்தது. இப்போது என் கூகுள் ரீடரில் 700ஐத் தொடும் தமிழ்ப் பதிவுகள். எல்லாவற்றையும் படிக்கிறேன் என்றில்லை. ஜெயமோகன் படிக்கத்தக்க வகையில் நாளும் நிறைய எழுதுகிறார் என்றாலும் ஒருவரிடம் இருந்தே நிறைய இடுகைகள், அதுவும் seriousஆன இடுகைகள் வந்தால் படிக்க அயர்ச்சியாய் இருக்கிறது. நானும் ஒரே நாளில் 4,5 இடுகைகளைப் போட்டுத் தாக்குகையில் இதை நினைத்துத் தயங்குவது உண்டு. ஆனால், எல்லா நாட்களும் எழுத மனநிலை வாய்க்குதில்லை. வாய்க்கையில் ஒன்றோடு நிறுத்த ஒப்புவதில்லை 🙂 வரும் நாட்களில் பதிப்பிக்குமாறு செய்யும் வசதி இருந்தாலும் எழுதிய உடனே பதிப்பித்துப் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி 🙂

* சில சமயம் என் பதிவைப் பார்த்தால் எனக்கே கொள்கை பரப்பு வாடை தூக்கலா இருக்கு 🙁 ரொம்ப seriousஆ இருக்கோ? “ரொம்ப தமிழாராய்ச்சி பண்ணாம நானும் கருத்து சொல்வது போல் ஏதாவது எழுதேண்டா”ன்னு அக்கா சொன்னாங்க 🙁 அதுக்காக, எத்தனை தடவை தான் ஜட்டி, பனியன் காயப்போட முடியும் 🙂 வாசகர்களை மகிழ்விப்பதற்காக என்றே எழுதத் தொடங்கினால், அப்புறம் நாம எழுத விரும்புவதைக் கொஞ்சம் கொஞ்சமா விட்டுடுவோம்னு நினைக்கிறேன். ஆனால், பிற தளங்களில் என் இடுகைகளை மேற்கோள் காட்டி சிலர் எழுதும் போது, சில விசயங்களைக் கசப்பாக இருந்தாலும் சொல்லித் தான் ஆக வேண்டும் என்று நினைக்க வேண்டி இருக்கிறது.

* திருக்குறள் உரை, உயிர்ப்பேணியலுகை தொடங்கியதோடு நிற்கின்றன. இனி வரும் காலத்தில் சிரமம் எடுத்து அவற்றை முடிக்க வேண்டும். தமிழ் இணையத்தில் அதிகம் தென்படுவது திருக்குறள் உரை தான். இருந்தாலும், என் தனிப்பட்ட புரிதலுக்காகவாவது கொஞ்சம் கொஞ்சமாக எழுதி முடிக்க வேண்டும். இது போன்ற இடுகைகள் தேடு பொறிகளில் மூலம் தொடர் வாசகர்களையும் தர வல்லன.

* இனி திரைப்பட, இசை, நூல் விமர்சனங்கள் எழுதும் எண்ணம் இல்லை. அவற்றைப் பார்க்கும் போது, படிக்கும் போது ரசித்துப் பார்க்க இயலாமல், “விமர்சனக் கண்ணோடே” பார்ப்பது கடுப்பளிக்கிறது. நல்லாயிருக்கு, நல்லா இல்லை என்று ஒரு வரியில் நண்பர்களுக்குச் சொல்ல தான் Twitter இருக்கே ! செய்தி விமர்சனம் முதல் பல விசயங்களில் ‘நானும் கருத்து சொல்கிறேன்” என்று எழுதுவதை விட யாரும் எழுதாத விசயங்களைப் பற்றி கொஞ்சமாவது எழுத நினைக்கிறேன்.

* விக்கிப்பீடியா, விக்சனரி போன்ற பட இடங்களிலும் பங்கு கொள்வது புதிய இடுகைகள் எழுதுவதற்கான கருப்பொருள்களைத் தருகிறது.

* பெரிது பெரிதாய் உள்ள விளம்பரத் தட்டிகளால் எவ்வளவு இலாபம் வரும் என்று தெரியவில்லை. தரமான தமிழ் கூகுள் adsense வந்தால் ஒழிய தொடர்பில்லாத விளம்பரங்களைப் போடுவதில் ஆர்வம் இல்லை. வலைப்பதிவுகள் மூலம் பணம் ஈட்டுவது என்பது பெரிய நோக்கமாய் இல்லை.

* 3 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட இடுகைகள் எழுதி உள்ளேன். இதற்காக விழா எடுக்க, வாழ்த்து மடல் பெறும் எண்ணம் ஏதும் இல்லை 😉

* எத்தனை widget, gadgetகளை நோண்டினாலும் ஒரு மாதத்துக்குள் அலுத்துத் தூக்கி விடுகிறேன் 🙂

* 2, 3 மாதங்களுக்குப் பிறகும் தொடர்ந்த பயன்படுத்தத் தோன்றுபவையே நல்ல நீட்சிகள், வார்ப்புருக்கள்.

* வார்ப்புரு மாற்றுவது, மறுமொழிகள் வந்திருக்கிறதா என்று பார்ப்பது, வருகை எண்ணிக்கையைப் பார்ப்பது வலைப்பதிவர்களைத் தாக்கும் வழமையான நோய் 🙂 வார்ப்புரு மாற்றும் நோயில் இருந்து மட்டும் தப்பி இருக்கிறேன் 🙂 கணிமை, தமிழ்த் தென்றல் பதிவுகளில் இருந்த புள்ளி விவர நிரல்களை நீக்கி விட்டு பதிந்த போது ஏதோ ஒரு நிம்மதி தோன்றியது. ஏன்? எத்தனை பேர் வருகிறார்கள் என்று கவலைப்படாமல் விரும்பிய போது விரும்பிய அளவு பதிவதும் ஒரு சுகம் தான் ! வேர்ட்பிரெஸ் புள்ளி விவரங்கள் நம்மை மேம்படுத்திக் கொள்ளத் தக்க விரிவான தகவல்களைத் தருவதால் அதை விட மனமில்லை.

* இப்போது என் வலைப்பதிவுகள் அனைத்திலும் மட்டுறுத்தல் இல்லாத மறுமொழிப் பெட்டிகள் இருக்கின்றன. இத்தனை ஆண்டுகளில் 2,3 ஆபாச மறுமொழிகளே வந்துள்ளன. மற்றபடி, எவ்வளவு மாற்றுக் கருத்தாக இருந்தாலும் அனுமதித்தே வருவதால் எதற்கு வீணாய் மட்டுறுத்தல் வேலை என்று விட்டு விட்டேன். எப்போதாவது haplog வகையறா எரிதங்கள் வந்தால் தற்காலிகமாக மட்டுறுத்தலாம். நான் சென்று மறுமொழி அளிக்கும் பதிவுகளில் மட்டுறுத்தல் இல்லாவிட்டால் எனக்குப் பிடித்திருக்கிறது. அதே போன்ற அனுபவத்தை என் வாசகர்களுக்கும் தர விரும்புகிறேன். மட்டுறுத்தல் இல்லா நேரத்தில் மறுமொழிகள் ஊடான உரையாடல்களும் வாசகர்களுக்கு இடையே விரைவாக நடைபெறும் தானே?

* திரட்டிகள் குறித்த விமர்சனத்தை கணிமையில் எழுதிய போது மாற்றுக் கருத்துக்கள் என்பதை விட விதண்டாவாதங்களே அதிகம் வந்தன. அப்போது மறுமொழிப் பெட்டியை மூடி வைத்த போது கொஞ்சம் நிம்மதி வந்தது. எவ்வளவு தான் கருத்துச் சுதந்திரம், இணைய ஊடகப் புரிதல் இருந்தாலும் விதிவிலக்கான நேரங்களும் இருக்கின்றன போலும், மிகவும் சர்ச்சைக்குரிய விசயங்களில் நம் கருத்தைப் பதிவது மட்டுமே நோக்கம் என்றால் மறுமொழிப் பெட்டியை மூடி வைப்பது சரியே. மறுமொழிகளை எதிர்ப்பார்க்காமல் சும்மா வலைப்பதிவது கூட பிடித்ததாகவே இருந்தது.

* நீட்டி முழக்கி எழுதும் வலைப்பதிவுகளை விட twitter குறும்பதிவுகள் பிடித்திருக்கிறது. அங்கு என்ன வேண்டுமானாலும் எழுத இயல்கிறது. பிம்பங்கள், மறுமொழிகள், புள்ளிவிவரங்கள், பராமரிப்பு என்று ஒன்றும் கிடையாது.

* என் கல்லூரி நண்பர்கள் சிலரும் என் பதிவுகளைப் படிக்கிறார்கள் போலும். அவர்கள் மறுமொழிகள் இடுவதில்லை என்பதால் அறியாமல் இருந்தேன். தொலைப்பேசியில் சொன்ன போது மகிழ்ந்தேன்.

* பல இடங்களில் ஒரே மறுமொழி அளிக்க வேண்டி வந்தால் அதைப் பற்றி ஒரு இடுகை எழுதி வைத்துக் கொண்டு தகுந்த இடங்களில் தொடுப்பாகவே கொடுத்து விடுவது உதவுகிறது.

* தமிழ் இணையம் முழுக்க கருத்துக்களுக்குப் பஞ்சம் இல்லாமல் இறைந்து கிடக்கின்றன. தகவலுக்குத் தான் பஞ்சம் ! இனி எழுதும் வலை ஆக்கங்களில் தகவல் முக்கியத்துவம் தந்து எழுத வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.

* கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாய் தமிழ் வலைப்பதிவுகளைப் படிக்கிறேன். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது போகிறது. ஆனால், இதனால் பெற்ற அறிவு, பயன் என்ன என்றால் ஏமாற்றமாக இருக்கிறது. பல சமயங்களில் தவறாமல் குமுதம், விகடன் படிப்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்று புரியவில்லை. ஒரு வேளை இந்த நேரத்தை, புத்தகங்கள் படிப்பது போன்றவற்றில் செலவழித்திருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்குமோ? 🙁 உலக இணையத்தில் தகவல் முக்கியத்துவம் உள்ள தளங்களைத் தெரிந்தெடுத்து வாசிக்க இயல்கிறது. தமிழில் இன்னும் அந்த அளவு தகவல் தளங்கள் பெருகவில்லை 🙁 தமிழ் வலைப்பதிவுகளைப் படிக்கச் செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டும். திரட்டிகளுக்கு வெளியே பல நல்ல பதிவர்கள் இயங்குகிறார்கள். தேடிப் பிடிக்க கொஞ்சம் முயற்சி வேண்டும். தமிழ் வலைப்பதிவுகளில் அதிகம் பதிவுகள் பின்வருவனவற்றைக் குறித்து இருக்கின்றன: கவிதை (பெரும்பாலும் புலம்பல் 🙂 ), அரசியல், திரைப்படம், ஈழம், செய்தி விமர்சனம்.

* இது வரை எனக்குப் போலிகள் இல்லை. அதனால் இன்னும் மூத்த பதிவராகலைன்னு நினைக்கிறேன் 😉 ஆனால், யாரோ ஒரு சிலர் என்னைக் கண்டாலே பிடிக்கவில்லை என்று மட்டும் புரிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் எங்கோ இட்ட எனக்கே மறந்து போன மறுமொழிகளையும் குறிப்பெடுத்து எனக்கே நினைவூட்டுகிறார்கள். “அங்க அப்படி சொன்னீல்ல” என்று மிரட்டுகிறார்கள் 🙂 நல்ல நினைவாற்றல் உள்ள தரமான எதிராளிகள் 🙂 அடையாளம் காட்டாமல் ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களைச் சொல்கிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் அவர்களை எரிச்சல்படுத்தி இருக்கிறேன். ஆனால், ஏன் என்று துல்லியமாகப் புரிந்து கொள்ள இயலவில்லை.

* Technology பிதாமகன் என்றொரு பட்டம் கிடைத்திருக்கிறது 🙂 ஆனா, சேது, நந்தா படங்கள் எனக்கு இன்னும் கூடப் பிடிக்கும் 🙂

* 99% சொந்தப் பெயரிலேயே பிற பதிவுகளில் கருத்து சொல்லி வருகிறேன். ஒரு சில இடங்களில் அடையாளம் காட்டாமல் மறுமொழி இட்டிருக்கிறேன்: அதற்கு முக்கிய காரணம் – சில சமயம் ஏனோ இணையம் முழுக்க என் பெயரை அள்ளி இறைப்பது போல் தோன்றுகிறது. இணையத்தில் என் படங்களை வெளியிடுவதைத் தவிர்ப்பதும் இதனாலே. “படிக்காம ஏன் நேரத்தை வீண்டிக்கிற”ன்னு அக்கா காதை திருகுவாங்க என்பதாலும் சில இடங்களில் பெயரைக் காட்டுவதில்லை 🙂 சிலர் என் பெயர் உள்ள மறுமொழிகளை அனுமதிப்பதில்லை 🙂 அங்கும் அடையாளமின்றி எழுத வேண்டி இருக்கிறது. சில இடங்களில் நான் சொல்கிறேன் என்பதை விட சொல்லவரும் கருத்து முக்கியம் என்று தோன்றினால், பெயர் இல்லாமல் கருத்து சொல்வதுண்டு.

* முடிவில்லாமல் நீளும் உரையாடல்கள் அயர்ச்சி அளிக்கின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். எல்லா இடங்களிலும் போய் நாம் வாதம் செய்வதில்லை. அது போல் இணையத்திலும் ஏற்பில்லாத கருத்தைக் கண்டாலும் புறக்கணிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு கருத்தைப் பதிந்தோம் என்றால் தொடர்ந்து அதன் மறுமொழிகளைக் கவனிப்பதில் நிறைய நேரம் போகிறது. நம் மறுமொழிகளைத் தாமதப்படுத்தினால், எப்படியும் நம் கருத்தை யாராவது ஒருவர் சொல்லி இருப்பார்கள் என்பதால் நேரம் மிஞ்சும்.

* சில மூத்த (!?) பதிவர்கள் மாற்றுக் கருத்துக்களைப் பதிப்பிப்பதில்லை. பதிப்பித்தாலும் பதில் சொல்வதில்லை. அட, நான்கு, ஐந்து இடுகைகளில் நல்ல மாதிரி கருத்து சொன்னாலும் “மரியாதைக்கு கூட” ஒரு சொல் திரும்ப வருவதில்லை. இனி இத்தகைய பதிவுகளில் கருத்திடலைத் தவிர்க்க வேண்டும்.

* தமிழ் இணையத்தில் சில pyscho பதிவர்களும் இருக்கிறார்கள் ! அவர்கள் என்ன சொன்னாலும் கண், காது, வாய் பொத்திக் கொள்வது நல்லது.

* “எந்த ஊரில் இருந்து எந்தப் பேருந்து பிடித்து வந்தார்கள்” என்ற அளவுக்கு Feedjit போன்றவை போட்டு IP கண்காணித்து விளம்பரப்படுத்தும் பதிவுகளைக் கண்டாலே பிடிக்கவில்லை.

* தமிழ் வலைப்பதிவர்களிடம் இருந்து தமிழ் இணைய முன்னேற்றம், தமிழ்க் கணிமை பங்களிப்புகளைப் பெரிதாக எதிர்ப்பார்க்கலாகாது. பலர் வாய்ச்சொல் வீரர்கள், புகழ் விரும்பிகள், பொழுது போக்கு விரும்பிகள்.

* நுட்பம் சாரா அறிவுரை இடுகைகள் வீண். தேவையும் இல்லை. போன ஆண்டு நானே வலைப்பதிவர் சமூகத்தை விமர்சித்து சில இடுகைகள் போட்டிருக்கிறேன். இனி அந்தத் தவறைச் செய்யப் போவதில்லை.

* தமிழ் வலைப்பதிவர்கள், தமிழ் வலைப்பதிவுகளில் ஏதும் விரும்பத்தகா போக்கு இருந்தால் அது சமூகத்தின் குறையே. சமூகத்தை மாற்றாமல் வலைப்பதிவு ஊடகத்தின் உள்ளடக்கம், செயற்பாடுகளை மாற்ற இயலாது. வலைப்பதிவு என்பது தனி மனித உணர்வுகள், சமூகத்தின் எதிரொளிப்பே. எனவே, தமிழ்ப்பதிவுகள் அதிர்ச்சி அளிப்பது போல் தோன்றினால் நிகழ் உலகச் சமூகமும் அவ்வளவு அதிர்ச்சிக்குரியது என்று புரிந்து கொள்ள வேண்டியது தான். சமூகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான பல கருவிகளில் ஒன்று தான் இணையம்.

* இது வரைக்கும் பொறுமையாகப் படித்து இந்த இடுகையில் எத்தனை smileyகள் இருக்கின்றன என்று எண்ணிச் சொல்பவர்கள் வலைப்பதிவுக்கு நிறைய மறுமொழிகள், வருகையாளர்கள் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன் !