ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

வினைத்திட்பம் - திருக்குறள் உரை

April 21st, 2008 · No Comments · திருக்குறள்

வினைத்திட்பம் - திருக்குறள் உரை

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. 661

நம்ம மனசு எவ்வளவு உறுதியா இருக்கோ, அவ்வளவு தான் நாம செய்யுற செயலும் உறுதியா இருக்கும். மன உறுதி தவிர்த்த மிச்ச எல்லாம் சும்மா.

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 662

சிக்கல் வர்றதுக்கு முன்னாடியே அதைத் தவிர்க்கணும்; அதையும் மீறி சிக்கல் வந்தா மனசு தளராம இருக்கணும். செய்யுற செயல உறுதியா செய்யத் தெரிஞ்சவங்க எல்லாம் இந்த இரண்டு வழியைத் தான் பின்பற்றுறாங்க.

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும். 663

ஒரு செயலைச் செஞ்சு முடிச்சிட்டு அதைப் பத்தி வெளிப்படுத்துறவன் தான் செயலாண்மை உள்ளவன். இடையிலேயே வெளிப்படுத்துனா அதுனால பல சிக்கல்கள் வரலாம்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். 664

யார் வேணா எதை வேணா சுளுவா சொல்லிடலாம். ஆனா, சொன்ன மாதிரி செஞ்சு காட்டுறது தான் சிரமம்.

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும். 665

செயல்ல உறுதியா இருக்கவங்களை அரசனும் மதிப்பான்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். 666

நினைச்சதை செஞ்சு முடிக்கணுங்கிற உறுதி மட்டும் இருந்திட்டா, நாம நினைக்கிறத எல்லாம் நினைச்சபடியே செஞ்சு முடிக்கலாம்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. 667

அச்சாணி சிறிசு தான். ஆனா, அது இல்லாம அவ்வளவு பெரிய தேர் கூட ஓடாது. அதனால், யாரும் உருவத்தால சின்னவங்கன்னு நினைச்சு கேலி பண்ணக்கூடாது.

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல். 668

ஒரு செயலைச் செய்றதுக்கு முன்னாடி குழப்பமில்லாம தெளிவா சிந்திச்சு முடிவெடுக்கணும். அப்படி முடிவெடுத்த பிறகு சோர்வு இல்லாம ஒத்திப் போடாம செஞ்சு முடிக்கணும்.

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. 669

கடைசியில நன்மை, இன்பம் தர்ற செயலை, இடையில எவ்வளவு சிரமம் வந்தாலும் துணிவோட விடாம செஞ்சு முடிக்கணும்.

எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு. 670

வேற என்ன தான் திறமை, பலம், உறுதி இருந்தாலும் ஒருத்தன் கிட்ட ஒரு செயலைச் செஞ்சு முடிக்கிற உறுதி மட்டும் இல்லாட்டி அவனை இந்த உலகம் மதிக்காது.

**

பார்க்கவும் - திருக்குறள் உரை பட்டியல்.

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

Tags: ········

0 responses so far ↓

  • There are no comments yet...Kick things off by filling out the form below.

Leave a Comment