ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

தமிழ்க் கணிமை

February 18th, 2008 · 4 Comments · தமிழ்

ஜெகத் இந்திய மொழி - தமிழ் எழுத்துபெயர்ப்புக் கருவி் உருவாக்கிய போது, அதைப் பற்றி icarus பிரகாஷ், கில்லியில் அறிமுகப்படுத்தி வைக்கையில், “இந்த rangeல் போனால் தமிழ்க் கணிமை சீக்கிரம் வயசுக்கு வந்திடாது?” என்றிருந்தார்.

வயசுக்கு வர்றது இருக்கட்டும்..இன்னும் தமிழ்க் கணிமை தவழவே தொடங்கவில்லை என்று நொந்து போய் தமிழ்க் கணிமையின் தேவைகள் குறித்து எனக்குத் தெரிந்த அளவில் எழுதி இருந்தேன். இரண்டு மூன்று ஆண்டுகளாக தமிழ்க் கணிமை ஆர்வலக் குழுமங்களில் சுற்றிச் சுற்றி வந்ததில் கவனித்தவை:

- கணினியில் தமிழைப் பார்க்க, எழுத உதவும் மென்பொருள்கள் உருவாக்கம்.
- மென்பொருள்களுக்கான தமிழாக்க வேலைகள்.
- யாகூ மெயில், மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் பவர்பாயின்ட்டில் தமிழைப் பார்ப்பது எப்படி போன்ற கேள்வி-பதில்கள்.

ஆனால், கணினியில் நம் மொழியில் எழுதவும் படிக்கவும் இயல்வது ஒரு அடிப்படை விசயமல்லவா? இதையே இத்தனை பத்தாண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறோமே? இதுவா தமிழ்க்கணிமை என்று சாருவிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், இது விசயத்தில் அவரது பார்வையும் சொற்களும் நம்பிக்கை அளித்தன. அப்படி என்ன சொன்னார்?

தமிழில் எழுத இயல்வதும் படிக்க இயல்வதும் அடிப்படையான சாதாரண விசயமாக இருக்கலாம். இப்படி வலையில் தமிழில் எழுதுபவர்கள் பலரும் தங்கள் சொந்தக் கதைகளையே கூட எழுதிக் கொண்டிருக்கலாம். ஆனால், இவை யாவும் தமிழ் மொழி குறித்த கணித்தல் ஆய்வுகளைச் செய்ய நமக்குப் பெருமளவிலான பல்வேறு வகையில் பரந்து அமைந்த தரவுகளைத் தருகின்றன. எந்த ஒரு ஆய்வைச் செய்யவும் முறைமையை உறுதிப்படுத்தவும் சோதனைத் தரவுகள் தேவை தானே?

எடுத்துக்காட்டுக்கு, ஓர் தமிழ் உரை பேசி செய்கிறோம் என்றால் வலையில் காணக்கிடைக்கும் தமிழ் உரைகளில் எழுந்தமானமாக சிலவற்றைத் தெரிவு செய்து நம் உரை பேசி எந்த அளவு திறமாகச் செயல்படுகிறது என்று சோதித்துத் திருத்தலாம். பேச்சை உரையாக மாற்றும் செயலி செய்தால், வலையில் கிடைக்கும் பல்வேறு ஒலிப்பதிவுகளை அதற்குப் பயன்படுத்திப் பார்க்கலாம். இலங்கை, இந்திய, மலேசியத் தமிழ் வேறுபாடுகளை ஆயலாம். தமிழின் நுணுக்கங்களைப் புரிந்து செயல்படும் ஒரு திறமான தேடு பொறி உருவாக்கலாம். எதுவுமே இல்லாவிட்டாலும், இணையத்தில் பதியப்படும் தமிழ்ச் சொற்களைக் கொண்டு இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் எவ்வாறு வளர்ந்து / மாறி வருகிறது, என்னென்ன வேற்று மொழிச் சொற்கள் புழங்குகின்றன, எந்தளவு புழங்குகின்றன என்று ஆராயலாம். தமிழில் எது குறித்த கருத்துக்கள் அதிகம் பதியப்படுகின்றன என்று பார்க்கலாம். தரவுகள் இருந்தால் அவற்றுடன் விளையாடிப் பார்த்து எண்ணில் அடங்கா ஆய்வுகள் செய்வது சாத்தியமே.

இது வரை தன்னார்வல உழைப்பின் மூலமே கணினியில் தமிழை வளர்த்து இருந்தாலும், பல முனைவர்கள் பல ஆண்டு ஆய்வுகள் மூலமே அடைய இயலும் இலக்குகளை தன்னார்வல ஓய்வு நேர உழைப்பில் மட்டும் ஒருங்கிணைத்துச் செய்வது தமிழ்க்கணிமையின் முன்னகர்வுகளைத் தாமதப்படுத்தும். தமிழ்க்கணிமை போன்ற அறிவியல் துறைகளை பல்கலைக்கழகங்கள், வணிக நிறுவனங்கள் முன்னெடுப்பதே தொலைநோக்கில் திறம் மிக்க அணுகுமுறையாக இருக்கும். அண்ணா பல்கலைக்கழக கே. பி. சந்திரசேகர் மொழி நுட்ப ஆய்வு மையம் பல ஆண்டுகளாக முயன்று கொண்டிருக்கிறது. கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பெருந்தலைகளை தமிழ் இடைமுகப்புடன் கூடிய பதிப்புகளைத் தர வைக்கவே குட்டிக் கரணம் போட வேண்டி இருக்கிறது. ஒன்று தரம் குறைந்த தமிழாக்கங்களைத் தருகின்றன. அல்லது, தன்னார்வல உழைப்பை உறிஞ்சப் பார்க்கின்றன. வணிக நிறுவனங்கள் கணினியைக் காட்டிலும் செல்பேசிச் சந்தைகளைக் குறி வைக்கின்றனவோ என்று தோன்றுகிறது. 30 கோடி செலவழித்து இந்திய மொழிகளில் குறுஞ்செய்தி அனுப்பும் நுட்பத்தைக் கண்டுபிடித்திருப்பதாக பெங்களூரு நிறுவனம் ஒன்று புருடா விட்டுக் கொண்டிருக்கிறது.

சரி. அரசு, பல்கலைக்கழகங்கள், வணிக நிறுவனங்கள் விழித்துக் கொள்ளும் வரை, தமிழ்க் கணிமை / கணினியில் தமிழ் வளர்ச்சிக்கு நீங்கள் எப்படி உதவலாம்?

- உத்தமம் , கட்டற்றை தமிழ்க் கணிமை போன்ற தன்னார்வல மன்றங்களில் சேருங்கள். கணினி அறிவியல் படித்த, ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களையும் சேரச் சொல்லுங்கள். கணினியில் தமிழ் பயன்பாட்டில் உங்களுக்கு உள்ள தேவைகள், இடையூறுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அங்கு செய்யப்படும் சோதனை முயற்சிகளில் கலந்து கொண்டு வழுக்களைக் கண்டறிய உதவுங்கள். ஓய்வு நேரத்தில் அங்கு தன்னார்வல உழைப்பை ஈனும் நுட்பியலாளார்களைப் பாராட்டி ஊக்கப்படுத்துங்கள். இதில் எதையுமே செய்ய இயலாவிட்டாலும் இக்குழுக்களில் வரும் தமிழ் மடல்களைக் கண்டு வந்தாலே புதிதாய்ப் பல தமிழ்ச் சொற்களைக் கற்றுக் கொள்ளலாம் :) அச்சொற்களை உங்கள் வலைப்பதிவுகள், இணையத்தளங்கள், மின்மடல்களில் பயன்படுத்துங்கள்.

- நீங்கள் அறிந்த தமிழர்களுக்கு ஒரு முறையாவது தமிழில் மின்மடல் அனுப்புங்கள். அவர்கள் கணினியில் தமிழ் தெரியும் பட்சத்தில் அவர்களும் உங்களைப் போன்று கற்றுக் கொண்டு தமிழில் எழுத ஆசைப்படலாம். அவர்கள் கணினியில் தமிழ் தெரியாத பட்சத்தில், முதல்முறையாக அவர்கள் கணினியைத் தமிழுக்குத் தயார்ப்படுத்துவார்கள். சில சோம்பல்காரர்கள், உங்கள் மடலைத் திரும்ப ஆங்கிலத்தில் அனுப்பச் சொல்வார்கள். அந்தத் தவறைச் செய்யாதீர்கள். உங்கள் ஒருவரின் தமிழ் மடலை அவரால் படிக்க இயலவில்லை என்பதல்ல பிரச்சினை. அவருடைய கணினியில் எந்தத் தமிழ்த் தளத்தையும் அவரால் பார்க்க இயலாதிருப்பது தான் பிரச்சினை. அவருடைய கணினியில் தமிழைப் படிக்கத் தூண்டுவதன் மூலம் அவரின் தமிழ் சார்ந்த சிந்தனை, செயல்பாடுகளைத் தூண்டலாம்.

- உங்கள் கடை, அலுவலகம், வீடு, கல்லூரி, பள்ளி என்று உங்கள் கண்ணில் படும் எந்தக் கணினியிலும் தமிழில் படிக்க, எழுத வழி வகை செய்ய முயலுங்கள். பெரும்பாலானவர்கள் எடுத்துச் சொன்னால் ஆர்வமுடன் செயல்படுத்துகிறார்கள் என்பதே என் அனுபவம். தமிழைக் கணினியில் பார்க்கலாம் என்றே தெரியாமல் இருப்பவர்கள் பலர். பார்க்கலாம் என்று தெரிந்தும் எப்படிச் செய்வது என்று அறியாதவர்கள் பலர். அவர்களுக்கு உதவுங்கள்.

- உங்கள் அலுவலகம், கல்லூரியில் தமிழ் எழுத்துக்களைப் படிக்க, எழுத உதவும் மென்பொருள்களை நிறுவ அனுமதி இல்லை என்றால் குறிப்பிட்ட கணினி பராமரிப்பு அலுவலரைப் பார்த்து உதவி கேளுங்கள். “கண்ட மென்பொருளை எல்லாம் நிறுவ இயலாது” என்று அவர் தத்துவம் சொன்னால் “தாய் மொழியில் படிக்க, எழுத இயல்வது உங்கள் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று” ;) என்று அவருக்குப் புரிகிற மாதிரி எடுத்துச் சொல்லுங்கள். தேவையானால், சண்டை போடுங்கள். ஆனால், விட்டுக் கொடுக்காதீர்கள் !

- நீங்கள் கணினி அறிவியல் மாணவர் என்றால் தமிழ் சார்ந்த ஆய்வுகளைச் செய்ய முற்படுங்கள். மாணவர்களுடன் இணைந்து வேலை செய்யும் நிறுவனத்தில் பணி புரிந்தாலோ ஆசிரியராக இருந்தாலோ உங்கள் மாணவர்களை அத்தகைய ஆய்வுகளைச் செய்யத் தூண்டி ஆதரவு கொடுங்கள். ஒரு தமிழ் மொழியியல் ஆய்வு மாணவரோடு பேசி அவருடைய ஆய்வுக்கு நீங்கள் எப்படி உதவு முடியும் என்று பாருங்கள். தமிழ்க்கணிமைக்கான முன்னெடுப்பை தமிழ் மொழி மாணவர்கள், அறிவியல் மாணவர்கள் இருவரும் சேர்ந்தே திறமாக முன்னெடுக்க முடியும்.

- தமிழை ஒழுங்காகக் காட்டத் தெரியாத மென்பொருள்கள், தளங்களைப் புறக்கணியுங்கள்.

- உங்கள் கையில் கிடைக்கிற தமிழ் நூல்களை எல்லாம் மென்னூலாக்கி இணையத்தில் விடுங்கள். காப்புரிமை பிரச்சினைகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் ;)

- நீங்கள் அறிந்து கொண்ட, பகிர விரும்பும் விசயங்களைத் தமிழிலும் இணையத்தில் எழுதுங்கள்.

- முகுந்த் போன்ற தமிழ்க் கணிமை, கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்களின் நடத்தும் தமிழா சிஸ்டம்ஸ் போன்ற நிறுவனங்களின் சேவைகளுக்கு ஆதரவு தரலாம். தாங்கள் ஈட்டியதில் ஒரு பகுதியை ஏதேனும் ஒரு வகையில் தமிழுக்குத் திரும்பத் தருவார்கள். தருகிறார்கள்.

அப்புறம்…

சரி, போதும்… இத்துடன் இன்றைய பரப்புரை இனிதே முற்றிற்று :)

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

Tags: ······

4 responses so far ↓

  • 1 Arun // Feb 19, 2008 at 11:49 am

    //இதையே இத்தனை பத்தாண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறோமே? இதுவா தமிழ்க்கணிமை என்று சாரு விடம் புலம்பிக் கொண்டிருந்தேன்//

    இது சிந்தனைக்குறிய விடயம்.

    //இவை யாவும் தமிழ் மொழி குறித்த கணித்தல் ஆய்வுகளைச் செய்ய நமக்குப் பெருமளவிலான பல்வேறு வகையில் பரந்து அமைந்த தரவுகளைத் தருகின்றன.//

    கணித்தல் ஆய்வுகளினூடாக கிடைக்கும் தரவுகளூடாக நமது நகர்வுகளை மேற்கொள்ள நாம் சிந்திக்கின்றோம்.

    ஆனால் இன்றைய உலக ஓட்டத்தில் [மனித அறிவுக்கு இணையாக செயல்படக் கூடிய கணினி, வரும் 2020ம் ஆண்டுக்குள் சாத்தியமாகும் என அமெரிக்க கம்ப்யூட்டர் வல்லுனர் குருரே கர்ஸ்வில் தெரிவித்துள்ளார்.

    தொழில்நுட்பத்துறை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால், மனித அறிவை மிஞ்சும் நவீன கணினியும் உருவாக்கப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்றும் குருரே தெரிவித்தார்.

    மனிதனின் உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் முதுமை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்தால், மனித ஆயுளை நீட்டிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். http://www.lankasritechnology.com போன்ற செய்திகள் நமது பின்னடைவையே காட்டி நிற்பதாகவே எனக்குப்படுகின்றது.

    அதற்கான பதிலும் நீங்களே கூறியுள்ளீர்கள்.

    //வணிக நிறுவனங்கள் முன்னெடுப்பதே தொலைநோக்கில் திறம் மிக்க அணுகுமுறையாக இருக்கும்//

    இவற்றை ஏன் ஒரு அங்கீகரிக்கப் பட்ட தமிழ் அரசுக்கு வழியுறுத்தி செய்விக்க முடியாது?

  • 2 ரவிசங்கர் // Feb 19, 2008 at 12:37 pm

    //இவற்றை ஏன் ஒரு அங்கீகரிக்கப் பட்ட தமிழ் அரசுக்கு வழியுறுத்தி செய்விக்க முடியாது?//

    பல்கலைக்கழகங்கள் மூலம் அரசு இவற்றை முன்னெடுப்பதே இதன் பயன் எல்லா மக்களையும் சென்றடைய வழி வகுக்கும். ஆனால், அங்கீகரிக்கப்பட்ட அரசு மட்டும் போதுமா? இலகுவில் அணுக்கத்தக்க தொலைநோக்குடைய அரசாகவும் இருக்க வேண்டுமே :(

  • 3 மயூரேசன் // Feb 19, 2008 at 2:18 pm

    //30 கோடி SMS//
    என்ன புருடா இது??? இலங்கையில் எப்பவோ வந்துட்டுது. சிங்கப்பூரில் வைரமுத்து முதல் SMS அனுப்பி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார். எல்லாம் ஒரு ஜாவா செயலிதான்.

    //மென்னூலாக்கி இணையத்தில் விடுங்கள். காப்புரிமை பிரச்சினைகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்//
    ஹி.. ஹி.. பல தபா இப்படி செய்து அனானியா இணையத்தில் உலாவும் புத்தகங்கள் பல வாசித்து இருக்கின்றேன் ;)

    நல்ல ஆர்வம் ஊட்டும் கட்டுரை.

  • 4 ரவிசங்கர் // Feb 19, 2008 at 4:45 pm

    மயூ, திரைப்படங்கள், புத்தகங்களை வலையில் ஏற்றி கலைத்தொண்டு, தமிழ்த்தொண்டு ஆற்றுபவர்கள் வாழ்வாங்கு வாழட்டும் ;)

Leave a Comment