குட்டிம்மா

முடிதிருத்தும் அண்ணன்

ஆச்சரியப்பட்டு இருக்க வேண்டும்.

குட்டிம்மா பதுவிசாய்ப் போவாள்.

எட்டிப் பிடித்து,

இருக்கையில் அமர்ந்து கொள்வாள்.

அவர் கேட்பார் “ஷாலினி cutting வெட்டட்டா”

இவள் சொல்வாள்:

‘ம், அப்படியே shavingம்’

முடிதிருத்தும் அண்ணன்

ஆச்சரியப்பட்டுத்தான் போவார்.

குட்டிம்மா என்றால் குறும்பு.

“அண்ணா… Monkey அண்ணா”

கூவிக்கொண்டே வருவாள்

குட்டிம்மா.

பின், என் காதுக்கு மட்டும் சொல்வாள்

“Monkey ன்னா கொரங்கு !

ஒனக்குத் தெரியாதா?”

குட்டிம்மாவை கண்டா

அடிடா ராமா பல்டி !

குட்டிம்மா முன் யாரும்

‘Biscuit’ என்று சொல்லக்கூடாது.

‘Biscuit’ என்றால் அணுக்கரு !

அணுக்கருவை இரண்டாகப் பிளப்பாள் (அதாவது, உடைப்பாள்)

இப்பொழுது “சக்தி பிறக்கிறது” என்பாள்.

நான் “எப்படி?” என்பேன்.

இப்படி:

குட்டிம்மாவின்

வாயில் கொஞ்சமும்

வயிற்றில் கொஞ்சமும்

அணுக்கரு

பிளந்து கட்டிக் கொண்டு இருக்கும்.

குட்டிம்மா என்றால் ஆற்றல் !

என் வேதியியல் புத்தகம்

அவள் மயிலிறகு மெத்தை !

வேதி வினைகள் மறைக்கப் பட்டாலும்

மயிலிறகின் தூக்கம் கெடக்கூடாதாம் !

மகாராணி குட்டிம்மாவின் உத்தரவாம் !

தெரியாத அணுத்தொகையால்

சரியான வினையும் மூச்சுத் திணறும்

குட்டிம்மா வைத்தியம் சொல்வாள்

“அணுவைப் பெருக்கஞ் செய்”

குட்டிம்மா என்றால் ஞானம் !

அவள் நர்த்தனம் புரியும் போதும் புரிந்த பின்னும்

என்னை நான் சிலிர்த்துக் கொள்வேன்.

ஆரத் தழுவி அன்புடன் சொல்வேன்.

“குட்டிம்மா, உனக்குள் ஒளி இருக்கிறது.”

அவள் சிரித்துக் கொண்டே சொல்வாள்.

“ஒளிக்குள் தான் உயிர்கள் இருக்கின்றன.”

குட்டிம்மா என்றால் ஒளி.

குட்டிம்மா

குட்டி குட்டிம்மாவாக

இருந்த காலந் தொட்டே

அவளுக்கு ஓடிப் பிடித்து விளையாடுவதும்

எனக்கு இனிப்பு வகைகளும் விருப்பம்.

அவள் இனிப்பு வாங்கி வருவாள்.

எட்ட நின்று காட்டி “கிட்ட வா என்பாள்”

நெருங்குவேன்.

ஓடுவாள்.

“சரி, உன் ஆசை தீர்ந்தது. எங்கே எனக்கு இனிப்பு?”

“அஸ்கு, ஆச தோச அப்பள வடம்.”

குட்டிம்மா என்றால் குழந்தை !

பேரம் பேசும் சுவாரசியத்தில்

சந்தையில்

குட்டிமாவை தொலைத்து விட்டிருந்தேன்.

தூக்கி வளர்த்த தோளும்

தழுவிப் பழகிய மார்பும்

மலர்ந்து மகிழ்ந்த மனமும்

வேரறுந்து போயின.

சேர்ந்து திரிந்த நிஜங்களும்

சேரத் துடிக்கும் கனவுகளும்

சேர்ந்தே என்னைத் துன்புறுத்தும்

தொலைந்து போன குட்டிம்மாவுக்கு

ஒரு கடிதம் எழுதுவேன்.

அன்புள்ள குட்டிம்மாவுக்கு

பெரிய குட்டிம்மா

எழுதும் கடிதம்

………………………….

நீ எங்கு இருக்கிறாய்?


முதலில் http://ravikavithaigal.blogspot.com/2007/02/blog-post_17.html என்ற முகவரியில் பதிப்பிக்கப்பட்டது.


Comments

One response to “குட்டிம்மா”

  1. கவிதை நன்றாக இருக்கு.

    ஏதோ உணர்வுகளை வெளியே கொட்டினா மாதிரியும் இருக்கு. அல்லாமல், ஒரு கவிதைக்காய் எழுதிய மாதிரியும் இருக்கு. சின்ன சின்னதா நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை சொன்னா மாதிரி இருக்கு. ஆனா உண்மை நிகழ்ச்சியா, கற்பனையா ன்னு புரியலை. ஒரு குழந்தையை வைத்து எழுதியதா, அல்லது பெரியவளாகும் குழந்தையாய் கற்பனையில் பார்த்து எழுதியதா ன்னும் புரியலை. எது எப்படி இருந்தாலும், கவிதையும் ஒரு மயிலிறகாய் வருடுகின்றது.