தமிழரல்லாத இந்தியர்களும் கூடும் எல்லா இடங்களிலும் தவறாது வரும் “தமிழ்நாட்டில் இந்தி” குறித்த சில கேள்விகளும் பதில்களும்:
தேசிய மொழியான இந்தி தெரியாமல் இருப்பது அவமானமில்லையா?
இந்தி ஒரு தேசிய மொழி இல்லை. இந்தியாவுக்குத் தேசிய மொழி என்று ஏதும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்கிறது. அதாவது பெரும்பான்மை மக்களிடம் தொடர்பு கொள்ள அந்த மொழி உதவுகிறது. அது போல இந்திய நடுவன் அரசின் ஆட்சி மொழிகளாக இந்தியும் ஆங்கிலமும் விளங்குகின்றன. இவ்விரு மொழிகளும் நடுவண் அரசு மாநிலங்களுடன் உரையாட உதவுகின்றன.
எனினும், இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்று திட்டமிட்டு நன்றாகப் பரப்பப்படும் பொய்க்கருத்தை நம்புவோருக்குக் கூறிக் கொள்வது:
ஒருவர் இந்தி கற்று தான் இந்தியன் என்று நிரூபிக்க வேண்டுமா? ஒழுங்காக வரிகள் கட்டி, சட்டத்தை மதித்து நடந்தால் போதாதா? தமிழ்நாட்டில் இருந்து இந்தி தெரியாத இளைஞர்கள் இந்தியப் படைகளில் சேர்ந்து நாட்டுக்குப் பங்களிப்பதில்லையா?
புலி இந்தியாவின் தேசிய விலங்கு என்பதற்காக அதை எல்லாரும் வீட்டில் வைத்து வளர்க்கத் தேவை இல்லை. வளர்க்கவும் முடியாது. காட்டில் காணும்போது அடித்துக் கொல்லாமல் இருந்தால் சரி.
இந்தி இந்தியாவின் பெரும்பான்மை மொழி இல்லை. 40% மக்களாலேயே பேசப்படுகிறது. 10 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கிறது.
நாடு என்னும் அமைப்பு நமது பாதுகாப்புக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு தற்காலிக காலத்துக்குக் காலம் மாறும் நில வரையறை. அதுவும், இந்தியா என்னும் நாடு செயற்கையாக உருவாக்கப்பட்டே 60 ஆண்டுகள் தான் ஆகின்றன. ஆங்கிலேயர்கள் ஒட்டு மொத்தமாய் சில பகுதிகளைப் பிடித்து போகும் போது இந்தியா என்று பெயரிட்டு விட்டு விட்டுப் போனார்களே தவிர, இந்தியா என்பது வரலாற்றில் எப்போதும் ஒரு ஒற்றை நாடாக இருந்ததில்லை. அதற்கு என்று ஒற்றைக் குணங்கள் ஏதும் இல்லை.
ஒரு வேளை சீனாவையும் சேர்த்து இந்தியாவோடு ஒரு நாடாக சேர்த்துத் தந்து விட்டு ஆங்கிலேயர்கள் போயிருந்தால், கணிசமான மக்களால் சீனம் பேசப்படுகிறது என்ற காரணத்துக்காக அதைத் தேசிய மொழியாக அறிவித்து எல்லாரையும் அதைக் கற்கச் சொல்ல வற்புறுத்த முடியுமா? அதே அளவு அபத்தம் தான் இந்தியாவில் இருப்பதற்காக இந்தி கற்கச் சொல்லி வற்புறுத்துவதும்.
இந்தியா முழுதும் ஒரே மொழியைப் புரிந்து கொள்ள இயன்றால் நாட்டு முன்னேற்றத்துக்கு உதவுமே?
நாடு முழுவதும் ஒரே மொழி பேசியும் முன்னேறாமல் இருக்கும் எத்தனையோ நாடுகளைக் காட்ட முடியும். நாட்டு முன்னேற்றத்துக்கு வேறு எவ்வளவோ முக்கிய காரணிகள் உள்ளன. ஒரே மொழி பேசுவது ஒரு பொருட்டு இல்லை.
நாட்டு மக்களுக்கு எல்லாம் ஒரு மொழி புரிந்தால் ஒருவருக்கு ஒருவர் பேசிப் பழக உதவுமே? என்ன இருந்தாலும் இந்தியர்களுக்கு என்று ஒரு மொழி அடையாளம் வேண்டாமா?
இதற்கு அண்ணாத்துரை சொன்ன பதில் தான் பொருந்தும்:
ஒரு வீட்டுக்குள் சின்ன நாய் புகுவதற்கு என்று ஒரு சின்னக் கதவும் பெரிய நாய் புகுவதற்கென்று ஒரு பெரிய கதவும் வைப்பதில்லை. பெரிய கதவு வழியாகவே சின்ன நாயும் வரலாம். உலகம் முழுவதற்கும் பேசுவதற்கு என எல்லா இந்தியர்களும் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முனைகையில் இந்தியாவுக்குள் பேசுவதற்கு என்று மட்டும் ஒரு மொழி தேவை இல்லை.
இந்தியாவே வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு நாடு தான். இதில் அடையாளத்துக்காக என்று ஒரு மொழி தேவை இல்லை. மொழிகளைத் தாண்டி சமயம், இனம் என்று வேறு எத்தனையோ தனித்த அடையாளங்களைக் கொண்டே இருக்கிறோம்.
பிற மொழிகள், மொழி பேசுவோர் மேலான வெறுப்பு தானே இந்தி மொழி கல்லாததற்குக் காரணம்?
இந்தி கற்பிக்கப்படும் மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் பிற மொழியினர், குறிப்பாக வடநாட்டவர் மிகப் பாதுகாப்பாக, வளமாக, மரியாதையுடன் தான் இருக்கின்றனர். நாம் இன்னொருவர் மொழியை மதிக்கிறோம் என்பதற்காக அதைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்று அவசியமில்லை. இன்னொரு மொழி பேசும் மாநிலத்துக்குச் செல்கையில் வாழ்வியல் காரணங்களுக்காக அந்தந்த இட உள்ளூர் மொழிகளைக் கற்றுக் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு வரும் பிற மொழியினர் தமிழ் கற்றுக் கொள்வது தான் சரியாக இருக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் வட மொழினரைக் காட்டிலும் வட நாட்டில் இருக்கும் தமிழர்கள் நன்றாகவே இந்த பேசுகிறார்கள்.
இந்தி, பிற மொழிகளைக் காட்டிலும் தமிழ் மேலானது என்ற எண்ணம் தான் தமிழ்நாட்டில் இந்தி கல்லாததற்குக் காரணமா?
இதில் மேல், கீழ் என்ற வாதத்தை விட்டு விடுவோம். தமிழ், கொஞ்சம் ஆங்கிலம் தவிர, தமிழ்நாட்டில் வாழ, வேலை செய்ய, பிழைக்க வேறு எந்த மொழியும் தேவையில்லை என்பதே முக்கியம். தேவையில்லாத ஒன்றைக் கற்பதாலும் கற்பிப்பதாலும் என்ன பயன்? கிரிக்கெட் போன்ற விளையாட்டுப் போட்டி வர்ணனைகள், இந்தித் திரைப்படங்கள், விடுதலை நாள் - குடியரசு நாள் உரைகள் கேட்க மட்டுமே உதவும். அதுவும் ஆங்கில உரைகள் கிடைக்கையில் இதற்காக மெனக்கெட்டு இந்தி படிக்க வேண்டுமா? சீனம், ஆங்கிலப் படங்களைத் தமிழாக்கிப் பார்ப்பது போல் இந்திப் படங்களையும் தமிழாக்கிப் பார்க்கலாமே? அல்லது, ஆங்கில உரைத்துணையோடு பார்த்து விட்டுப் போகிறோம். இந்திய மொழிகள் சொற்றொடர் அமைப்புகள் பெரிதும் தொடர்புள்ளவை என்பதால் 2, 3 மாதங்கள் எந்த மொழிப் படங்களைத் தொடர்ந்து பார்த்தாலும் விரைவில் அந்த மொழியைக் கற்றுக் கொள்ள முடியும்.
தமிழ்நாடு தாண்டி பிற மாநிலங்களுக்குப் போவோர் சிரம்பபட மாட்டார்களா? இந்தி கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்புகள் கூடாதா?
பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் தொழிலாளர்கள் தமிழ் கற்றுக் கொண்டா வருகிறார்கள்? ஒரு வாழ்வியல் தேவை வரும்போது எந்த மொழியையும் ஓரிரு மாதங்களில் கற்றுத் தேற முடியும். எத்தனையோ பேர் பஞ்சம் பிழைக்க ஒரு மொழியும் தெரியாமல் சீனா, சிங்கப்பூர், அரபு நாடுகள், வட மாநிலங்கள் என்று செல்கின்றனர். அவர்கள் பிழைக்க மொழி தடையாய் இருப்பதில்லை. ஓரிரு மாதங்களில் உள்ளூர் மொழியைப் பேசிக் கற்றுத் தேர்ந்து விடுகிறார்கள். அதிகம் படிக்காத பாமரர்களுக்குத் தங்களுக்குத் தேவையானதைத் தாங்களே கற்றுத் தேரும் திறன் இருக்கிறது.
இந்தி கற்பிக்கப்பட வில்லை என்று குற்றம் சொல்பவர்கள் என்றால் அரசு. தனியார் வேலைகளில் இருப்பவர்கள் தான். ஒரு வேலையில் சேரும்போதே, அவ்வேலையில் பதவி உயர்வு பெற இந்தி தேவையென்றால் முன்னரே ஓய்வு நேரத்தில் அதைக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டியது தானே? அதை விடுத்து அரசைக் குற்றம் சொல்வது நியாயம் இல்லை. தாய்மொழியையும் அதன் மூலம் அறிவையும் கற்பிப்பது மட்டுமே அரசின் கடமை.
இந்தி கற்றுக் கொள்ளாததால் தமிழ்நாடு பின்தங்கி விடாதா?
இந்தி பேசும், இந்தி கற்பிக்கும் மாநிலங்களை விட தமிழ்நாடு எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் பிறகு ஏன் வட நாடுகளில் இருந்து இங்கு சோன் பப்படி விற்கவும் கூலி வேலை செய்யவும் வருகிறார்கள்? ஒரு மாநில வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் அங்கு பேசப்படும் மொழிக்கும் பெரிய தொடர்பு இல்லை. ஒரு நாட்டு முன்னேற்றத்தைப் போலவே, ஒரு மாநில முன்னேற்றத்துக்கும் வேறு முக்கிய காரணிகள் உள்ளன.
இந்தி கற்பிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன?
வெளிமாநிலம் செல்வோர், இந்தியை அடிப்படையாகக் கொண்டு வேலை / பதவி உயர்வு பெறுவோர் என்று இந்தி அறிவின் தேவை உடையோர் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் மிகக்குறைவான விகிதத்தினர். இவர்கள் தேவைக்காக ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இந்தி கற்பிக்கத் தேவை இல்லை. பள்ளிக்கு ஓரிரு இந்தி ஆசிரியர்கள், அவர்களைப் பயிற்றுவிக்கும் செலவு, இந்திப் பாடப்புத்தகங்கள் அச்சிடும் செலவு, தேர்வுச் செலவு போன்றவற்றில் செய்யப்படும் முதலீடு பயனுள்ளது தானா?
ஏற்கனவே பாடச்சுமையால் அல்லல்படும் மாணவர்களுக்கு மூன்று வெவ்வேறு எழுத்து முறைகளைக் கொண்ட மொழிகளைக் கற்பிப்பது பாடச் சுமையைக் கூட்டும். தமிழ்நாட்டில் பொது வழக்கில் கொஞ்சம் ஆங்கிலம் புழங்கும் போதே அதைக் கற்றுக் கொள்ளச் சிரமப்படும் மாணவர்களுக்கு ஒரு அறிமுகமும் இல்லாமல் இந்த கற்றுக் கொள்வது சிரமமாக இருக்கும்.
கல்லூரி ஆண்டு இறுதி வரை ஆங்கில வழியில் படித்த பிறகும் கூட ஆங்கிலம் பேச, புரிந்து கொள்ளத் தடுமாறுபவர்கள் இருக்கையில், வெறுமனே இந்தியை மொழிப்பாடமாகப் படித்து மட்டும் அதில் பெரிய புலமை ஏதும் அடையப்போவதில்லை. இந்தி பிரச்சார சபா எல்லாம் போய் இந்தியில் பட்டங்கள் வாங்கிய நண்பனுக்கு இந்திப் படங்களில் பேசும் இந்தி புரியவில்லை. பேச்சு இந்தியைப் புரிந்து கொள்ள பாடப் புத்தக இந்தி பெரிய உதவி புரிவதில்லை. எனவே, கற்பித்தாலும் உதவாக்கரை மொழியாகத் தான் இருக்க வாய்ப்புண்டு. தவிர, சொந்த விருப்பினால் இந்தி கற்றுக் கொள்ள விரும்புபவர்களை எந்த விதத்திலும் அரசு தடை செய்யவில்லை.
இந்தி கற்பிப்பதால் வரும் வேறு முக்கிய பின்விளைவுகள் என்ன?
ஏற்கனவே ஆங்கில வழிக்கல்வி, ஆங்கில மோகத்தால் தமிழ்நாட்டில் தமிங்கில நோய் பெருகி வருகிறது. இதில் இந்தியும் கலந்தால் அது மேலும் மொழிச் சிதைவுக்கே இட்டுச் செல்லும். தமிழ்நாட்டில் வாழ தமிழ் தேவை இல்லை என்ற நிலை தமிழின் இருப்பையும் தொடர்ச்சியையுமே கேள்விக்குள்ளாக்கும். இந்தியா முழுதும் இந்தி தெரியும் என்ற நிலை வந்தால், அனைத்துச் செயற்பாடுகளையும் இந்தியிலேயே செய்யும் நடவடிக்கைகள் வேகம் பெறும். இது இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டு புலமை பெற்றிராத பிறருக்கு சம வாய்ப்பைத் தராது. நாளடைவில் இந்தி சரிவரத் தெரியாத பிற மொழியினர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படும் நிலைக்கு இட்டுச் செல்லும்.ஒரு தேசிய மொழியை வலியுறுத்திப் பிற மொழிகளைப் புறக்கணித்த நாடுகள் பலவற்றிலும் இந்நிலையைக் காணலாம்.
தமிழ்நாட்டில் தொழில்புரிய, வாழ இந்தி தெரிந்தால் போதும் என்ற நிலை தமிழ், தமிழர் புறக்கணிப்புக்கு வித்திட்ட பிற மொழி ஆதிக்கத்தினருக்கு வழி வகுக்கும். மும்பை, பெங்களூர் போன்ற இடங்களில் உள்ளூர் மொழி புறக்கணிக்கப்படுவதை எடுத்துக்காட்டாக நோக்கலாம். திரைப்படம், வணிகம், ஊடகம் என்று அனைத்து மட்டங்களிலும் உள்ளூர் மொழி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும். உள்ளூர்ப் பொருளாதாரம் அடி வாங்கும். உள்ளூர் நலன்களை முன்னிறுத்தும் கட்சிகளைக் காட்டிலும் தேசியக்கட்சிகள் முன்னிலை பெறலாம்.
தமிழருக்கு இந்தி தெரியவில்லை என்பது தமிழர்களைக் காட்டிலும் பிற மொழியனருக்குத் தான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் இந்தி கற்பிக்க வேண்டும் என்று சொல்வது பிற மொழியனரின் நலன்களை முன்னிட்டே ஒழிய தமிழர்களின் நலன்களை முன்னிட்டு அல்ல.
17 responses so far ↓
1 இணையக்கடலோடி // May 6, 2008 at 1:23 pm
கண்டிப்பாக . நூற்றுக்கு நூறு உண்மை . ஏதோ ஒரு தளத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது , டெல்லியில் 300 வருடத்திற்க்கு ஒருமுறை ஆட்சிமொழி மாறும் . . ஒவ்வொரு முறையும் நாம் அதை தமிழ்நாட்டில் கற்பி’ய்’த்துக் கொண்டிருக்க முடியாது .
தமிழ்நாட்டில் பிழைக்க தமிழும் , வெளியுலக தொடர்புக்கு ஆங்கிலமும் போதும் . . பீச்சில் பானி பூரி விற்பவனுக்கு வசதியாக இருக்க வேண்டுமென்பதற்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும் இந்தி கற்க வேண்டிய அவசியமேயில்லை . .
உண்மையில் இந்தி’க்காரர்களின் சொந்த மாநிலங்கள் தான் இந்தியாவின் வளர்ச்சியை பின்னோக்கி இழுத்துக்கொண்டிருக்கிறது .
நாயகனில் வருவது போல , , இந்தித் திணிப்பை அவர்கள் நிறுத்தினாலே போதும . . இந்தி மீது இருக்கும் கடுப்பு தமிழகத்தில் குறைந்துவிடும் .்
2 இரா.வசந்த குமார். // May 7, 2008 at 5:18 am
ரவி… மொழி பற்றி நான் எதுவும் கூற வரவில்லை. ஆனால் ஒரே தேசம் பற்றிய உனது குரலில் ஒன்றுபடுகிறேன்.
http://kaalapayani.blogspot.com/2008/02/blog-post_2138.html
3 ரவிசங்கர் // May 7, 2008 at 6:50 am
வசந்த் - உன் பதிவில் மறுமொழி போட்டிருக்கேன். ஒரே நாடாக இருப்பதில் + - இரண்டுமே இருக்கு.
இணையக் கடலோடி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
4 கொழுவி // May 8, 2008 at 5:30 pm
புலி இந்தியாவின் தேசிய விலங்கு //
நம்ப முடியவில்லை வில்லை வில்லை
5 sri // May 12, 2008 at 3:15 pm
Arputhamaana blog. Thangal karuthu 100% unmai…
6 சத்தியா // May 20, 2008 at 5:50 am
ஒரு முக்கியமான கேள்வியை சேர்த்துக்கொள்ளவும்.
வேற்று நாட்டு மொழியான ஆங்கிலத்தை கற்கும் தமிழர்கள் சொந்த நாட்டு மொழியான இந்தியை ஏன் கற்பதில்லை.
என்னுடைய பதில்; எங்களுக்கு ஒரே ஒரு வேற்று மொழி போதும். இதில் நாட்டுக்கு ஒன்று பொதுவான ஒன்று என்று போதும். அது ஆங்கிலம் மேலோங்கி இருக்கிறது.நாளையே பிரெஞ்சோ ஸ்பானிஷோ உலக பொது மொழியாகும் போது அதை கற்போம். தேவைப்படும் போது அந்த அந்த நாடுகளுக்கு/மாநிலங்களுக்க ஏற்ப மொழியை கற்போம் இப்போதைக்கு தமிழும் ஆங்கிலமும் போதும் ;-).
7 Arun // May 30, 2008 at 8:06 am
உங்களின் இவ்வாக்கத்துடன் முழுமையாக உடன்படுகின்றேன்.
//நாடு என்னும் அமைப்பு நமது பாதுகாப்புக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு தற்காலிக காலத்துக்குக் காலம் மாறும் நில வரையறை. //
//இதில் இந்தியும் கலந்தால் அது மேலும் மொழிச் சிதைவுக்கே இட்டுச் செல்லும். தமிழ்நாட்டில் வாழ தமிழ் தேவை இல்லை என்ற நிலை தமிழின் இருப்பையும் தொடர்ச்சியையுமே கேள்விக்குள்ளாக்கும்//
//இது இந்தியை தாய்மொழியாகக் கொண்டு புலமை பெற்றிராத பிறருக்கு சம வாய்ப்பைத் தராது. நாளடைவில் இந்தி சரிவரத் தெரியாத பிற மொழியினர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படும் நிலைக்கு இட்டுச் செல்லும்.//
//எனவே, தமிழ்நாட்டில் இந்தி கற்பிக்க வேண்டும் என்று சொல்வது பிற மொழியனரின் நலன்களை முன்னிட்டே ஒழிய தமிழர்களின் நலன்களை முன்னிட்டு அல்ல. //
ஆம் ஒரு உலகில் பெரும்பான்மை இனத்தவர்களால் சிறும்பான்மை இன மொழிகளை அழிப்பதற்கு அல்லது தமது மொழியை மேலோங்கச் செய்வதற்கு எத்தனை வித ஆயுதங்களை பெரும்பான்மை இனத்தவர்கள் கையில் எடுக்கின்றனர்!
அதிகாரத்தால்,
அடிமைபடுத்தலால்,
நில அபகரிப்பால்,
நயவஞ்சத்தால்,
சூழ்ச்சிகளால் என்று இன்னும் பலவிதமாக பகுப்பாய்வு செய்யலாம்.
அதில் தொழில் வாய்ப்பு நலனைக் காட்டி தம் மொழியை மேலோங்கச் செய்வதும் ஒரு வித சூழ்ச்சியாகவே பார்க்கப்பட வேண்டும்.
இதை எம்மவர் பலர் இன்னும் புரிந்துக்கொள்ளாமல் இருப்பதே கவலையைத் தருகிறது.
தொழில் வாய்ப்புக்காக எவரும் எந்த மொழியை கற்கலாம். அது அவரவரின் விருப்பு மொழியாகவே இருக்கவேண்டும்.
நான் ஒரு இந்தியன் அல்லாதவன் என்றப்போதிலும், தமிழகத்தில் தமிழ் மொழித்தொடர்பாக எழும் “மொழி” வளர்ச்சியும் பாதிப்பும் எம்மையும் சார்ந்தே இருக்கின்றது எனும் உரிமையுடன் எனது கருத்தை முன் வைக்கின்றேன்.
தமிழன், தமிழ் எனும் வரலாற்று உறவுடன் தமிழகத்தில் இந்தி தினிபுக்கு உற்பட்டுவிடக் கூடாது என்றும், தமிழ் மொழி வளர்ச்சி திட்டங்களுக்கு தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தமிழரான நாம் மேலும் வலு சேர்க்க வேண்டும் எனது உலக தமிழ் உறவுகளுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இதுபோன்ற சூழ்ச்சி அல்லது ஒரு சாரரின் நலன்சார்ந்த நோக்கோடு மேற்கொள்ள திட்டமிடும் நடவடிக்கைகளை தமிழ் மக்கள் இனங்கான அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இது ஒரு சிறந்த விழிப்புணர்வு கட்டுரையாகவேப் பார்க்கின்றேன். இந்த கட்டிரையை “திண்ணை” போன்ற பொது தளங்களிலும் மீள்பதியும் படியும் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி
8 Mohan Kumar Mohan Raj // Jun 2, 2008 at 4:53 pm
அருமையான பதிவு.
// புலி இந்தியாவின் தேசிய விலங்கு என்பதற்காக அதை எல்லாரும் வீட்டில் வைத்து வளர்க்கத் தேவை இல்லை. வளர்க்கவும் முடியாது. காட்டில் காணும்போது அடித்துக் கொல்லாமல் இருந்தால் சரி.
ஹாஹா
9 காஞ்சிமுடி // Jun 13, 2008 at 11:57 am
// புலி இந்தியாவின் தேசிய விலங்கு என்பதற்காக அதை எல்லாரும் வீட்டில் வைத்து வளர்க்கத் தேவை இல்லை. வளர்க்கவும் முடியாது. காட்டில் காணும்போது அடித்துக் கொல்லாமல் இருந்தால் சரி.
ஹாஹா
இந்தியா எனும் ஒரேக் கூரையில் கீழ் தமிழ்நாடு இருப்பதுதான் தமிழ்நாட்டுக்கு பாதுகாப்பு. இல்லைனா கர்னாடாக காரனே தமிழ்நாட்டை முழுங்கி ஏப்பம் விட்டுருவான். காட்டில் காணும்போது அடித்துக் கொல்லாமல் இருந்தால் சரி என்பதைவிட ஒரு புளுவையும் அடித்துக் கொல்லும் திறன் நம் தமிழ்நாட்டில் தமிழனுக்கு இருப்பதாக தெரியவில்லை. வெரும் வெத்து வேட்டுக்களையும் விதண்டாவாதத்தையும் தவிர நம்ம தமிழ்நாட்டுக்காரன் என்னத்த சாதிச்சுபுட்டான். கசந்தாலும் இதுதான் உண்மை. அரசியல் யதார்த்தமும் அதேதான்.
10 பாலாஜி // Jun 18, 2008 at 5:20 pm
ரவி,
இந்தி திணிக்கப்படக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதே. ஆனால் தமிழ்ப் பாடத்திட்டத்தில் மூன்றாவது மொழி கற்பிக்கப்படவேண்டுமென்று நினைக்கிறேன். இது நாள்வரை தமிழை தவிர்த்து பிரஞ்சு, சமஸ்கிரதம், உருது போன்றவை படித்தவர்கள், மூன்றாவது விருப்பப்பாடமாக அவற்றைப் படிக்க ஏது செய்யவேண்டும். இந்தியாவிலேயே இந்திக்காரர்களுக்கு அடுத்து பலமொழி பேசுபவர்கள் (multi-linguists), தமிழகத்தில்தான் குறைவு என்பது நல்ல விசயமாகத் தெரியவில்லை.
11 Expatguru // Jun 21, 2008 at 10:45 am
ரவி,
தமிழ் பற்று என்பதற்கும் தமிழ் வெறி என்பதற்கும் உள்ள வித்யாசத்தை பலர் புரிந்து கொள்வதில்லை. நமது அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்னாடகாவையே எடுத்துக்கொள்ளுங்களேன். மூன்றாவது மொழியாக ஹிந்தியை படித்ததால் அவர்கள் ஒன்றும் குறைந்து போய்விடவில்லையே! ‘தமிழ், தமிழ்’, என்று ஊருக்கு உபதேசம் செய்யும் அரசியல்வாதிகளின் வீட்டில் பாருங்கள், தத்தம் குழந்தைகளுக்கு ஹிந்தி சொல்லி கொடுத்திருப்பார்கள். கட்சி பாகுபாடின்றி எல்லா “தமிழின” கழகங்களிலும் நடக்கின்ற இந்த நாடகத்தை மக்கள் இன்னும் எத்தனை காலம் தான் சகித்துக்கொண்டிருப்பார்கள்.
நான் பம்பாயில் வேலை செய்து கொண்டிருந்த போது, திருநெல்வேலியை சேர்ந்த M.Sc படித்த ஒரு நண்பர், வேலைக்கு சேர்ந்து ஒரே வாரத்தில் நீக்கப்பட்டார். அவர் செய்த “குற்றம்” ஹிந்தி தெரியாதது தான். Marketing பிரிவில் இருந்த அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதை போல எத்தனை இளைஞர்களின் எதிர்காலம் இந்த பாழாய்ப்போன அரசியல்வாதிகளால் பாழ்படுத்தப்பட்டுள்ளதோ! தமிழ் பற்று வேண்டும் தான், ஆனால் அதை ஹிந்தி எதிர்ப்பு என்று தான் காட்ட வேண்டுமா? “செம்மொழி” என்று பீற்றிக்கொள்வதில் ஒன்றும் குறைச்சல் இல்லை, தமிழ் மட்டுமே படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதா என்பது தான் கேள்வி.
12 ரவிசங்கர் // Jul 1, 2008 at 9:57 pm
Mohan Kumar Mohan Raj, கொழுவி -
sri - நன்றி.
சத்தியா - மொழியுணர்வு போன்றவற்றை எல்லாம் விடுத்துப் பார்ப்போருக்கும், நீங்கள் சொல்வது logicalஆன ஒன்று.
அருண் - //இந்த கட்டிரையை “திண்ணை” போன்ற பொது தளங்களிலும் மீள்பதியும் படியும் கேட்டுக்கொள்கின்றேன்.//
திண்ணைக்கு நாமாக அனுப்பினால் தான் பதிப்பிப்பார்கள். தற்போது, எந்த இணைய இதழுக்கும் அனுப்பி வைக்கத் தோன்றவில்லை.
மொழி அரசியல் குறித்து ஈழத்தவர்களைக் காட்டிலும் அனுபவப்பூர்வமாக விளக்கக்கூடியவர்கள் எவரும் இலர்.
காஞ்சிமுடி - உங்கள் கருத்துடன் உடன்பட முடியவில்லை.
பாலாஜி - //இது நாள்வரை தமிழை தவிர்த்து பிரஞ்சு, சமஸ்கிரதம், உருது போன்றவை படித்தவர்கள், மூன்றாவது விருப்பப்பாடமாக அவற்றைப் படிக்க ஏது செய்யவேண்டும்//
இப்போதும் விருப்பப்பாடமாக இந்தி படிக்கும் வசதி சில தனியார் பள்ளிகளில் இருக்கிறது தானே? ஒரு சில அரசு பள்ளிகளில் கூட இல்லையா?
//இந்தியாவிலேயே இந்திக்காரர்களுக்கு அடுத்து பலமொழி பேசுபவர்கள் (multi-linguists), தமிழகத்தில்தான் குறைவு என்பது நல்ல விசயமாகத் தெரியவில்லை.//
ஒரு இனத்துக்குப் பல மொழிகள் பேசத் தெரியவில்லை எப்படி ஒரு பிரச்சினையாகும் என்று புரியவில்லை. தமிழ்நாட்டில் எல்லாருக்கும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியவில்லை என்பதே முதல் பிரச்சினையாக இருக்க முடியும். ஒரு மொழியை வைத்துக்கொண்டே நன்றாக வாழும் இனங்கள், நாடுகள் இல்லையா? தமிழர் தொகையைக் காட்டிலும் இந்தி பேசுவோர் தொகை கூட அல்லவா..அவர்கள் பல மொழிகள் தெரியாததை ஒரு பிரச்சினையாக கருதுகிறார்களா? மூன்றாவதாக என்னென்ன மொழிகள் கற்க முனைகிறார்கள்? இதில் இந்தி பேசும் மாநில அரசுகளின் பங்கு என்ன?
Expatguru - //கேரளா, ஆந்திரா, கர்னாடகாவையே எடுத்துக்கொள்ளுங்களேன். மூன்றாவது மொழியாக ஹிந்தியை படித்ததால் அவர்கள் ஒன்றும் குறைந்து போய்விடவில்லையே//
மும்பையில் இந்திக் காரர்களின் வரவால், மராத்தி மொழி இரண்டாம் நிலைக்குச் செல்வதாகவும் மராதிக்காரர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைவதாகவும் கூக்குரல்கள் வருகின்றனவே? பெங்களூருவிலும் கன்னடத்தவர் இரண்டாம் நிலையிலேயே வாழ்வதாக சொல்கிறார்களே?
//தமிழ், தமிழ்’, என்று ஊருக்கு உபதேசம் செய்யும் அரசியல்வாதிகளின் வீட்டில் பாருங்கள், தத்தம் குழந்தைகளுக்கு ஹிந்தி சொல்லி கொடுத்திருப்பார்கள்.//
தமிழர்களுக்கு இந்தி அறிவில்லாததால் நாட்டரசியலில் பங்கு கொள்ள முடியாமல் போகிறது என்கிறீர்களா? அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைகளுக்கு மட்டும் இந்தி சொல்லிக் கொடுத்து வாய்ப்புகளை பறித்துக் கொள்கிறார்கள் என்கிறீர்களா?
இந்தி அறிவு அற்று, குடும்பப் பின்புலமும் அற்று, தங்கள் அரசியல் திறனால் மட்டும் நாட்டு அரசியலில் பங்கு கொண்ட எத்தனையோ பேரைக் காட்ட முடியும்.
அரசியலில் முந்துவதற்கு எவ்வளவோ திறன்கள் தேவை. மொழியறிவு உள்ளதால் மட்டுமே எவரும் முந்த முடியாது.
தாங்கள் ஈடுபடும் அரசியல் துறைக்கு இந்தி தேவை என்பதை உணர்ந்து அவர்கள் இந்தி கற்க முயல்வதைப் போல், ஏன் தங்கள் M. Sc படித்த நண்பர் முனையவில்லை? இந்தி தெரியாததால் இளைஞர்கள் பாழாய்ப் போகிறார்கள் என்பது ஏற்க முடியா வாதம். தமிழ்நாட்டிலேயே எத்தனையோ வேலை வாய்ப்புகள் உள்ளன. அதுவும் விற்பனைத் துறையில் உள்ளோருக்கு ஊருக்கு ஒரு மொழி தேவைப்படும். இந்தியை வைத்துக் கொண்டு தென்னக மாநிலங்களிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் காலம் தள்ள முடியாது.
மென்பொருள் துறையில் புதிது புதிதாக வரும் நுட்பங்கள், நிரலாக்க மொழிகளையும் கற்றுத் தங்களைத் தக்க வைப்பது போலவே, தங்கள் வேலைக்குத் தேவையான மொழியறிவையும் கற்றுத் தேர்வது ஒவ்வொருவர் பொறுப்பே. தேவையான மொழியைக் கற்க முனையாமல் காலத்துக்கும் அரசைக் குற்றம் சொல்வது பொறுப்பல்ல.
13 புருனோ // Jul 10, 2008 at 2:51 am
//புலி இந்தியாவின் தேசிய விலங்கு என்பதற்காக அதை எல்லாரும் வீட்டில் வைத்து வளர்க்கத் தேவை இல்லை. வளர்க்கவும் முடியாது. காட்டில் காணும்போது அடித்துக் கொல்லாமல் இருந்தால் சரி.//
14 கார்த்திக் // Jul 15, 2008 at 4:01 pm
புள்ளி விவரத்துடன் மிகவும் நன்றாக எழுதப்பட்ட முக்கியமான கட்டுரை. வேறு சில பொது தளங்களிலும் மீள்பதியும் படி கேட்டுக்கொள்கின்றேன். நன்றி
கார்த்திக்
15 ரவிசங்கர் // Jul 16, 2008 at 2:41 am
புருனோ -
கார்த்திக் - நன்றி.
16 ra.venkat ( Coimbatore) // Jul 19, 2008 at 2:43 pm
I have read this blog just now. I agree with your opinions about Tamil.
17 prabhakaran // Oct 6, 2008 at 8:29 am
hi
i am from dubai working in a foreign bank , thank you for your great work for this .. this is an execellent words…
Leave a Comment