கல்வி – திருக்குறள் உரை

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக. 391

படிக்க வேண்டியதை குறை இல்லாம நல்லா படிக்கணும். படிச்ச பிறகு அதுல சொல்லி இருக்கிற படி செய்யணும்..

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு. 392

எண், எழுத்து இரண்டும் நமக்கு கண்ணு மாதிரி.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர். 393

படிப்பு இல்லாட்டி கண்ணு இருந்தும் குருடன் போல தான்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில். 394

மனசு மகிழ்ந்து சந்திச்சு, “இனி எப்ப திரும்பப் பார்ப்போம்”னு ஏங்கிப் பிரியுற மாதிரி தான் படிப்பில் சிறந்தவங்க இருப்பாங்க.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர். 395

பணக்காரன் முன்னாடி பணிவா நிற்கிற ஏழை மாதிரி படிச்சவங்க கிட்ட இருந்து கத்துக்கிறவங்க தான் உயர்ந்தவங்க. அப்படி பணிவா இருந்து கத்துக்கிறதால ஒன்னும் மதிப்பு குறைஞ்சு போயிடுறது இல்ல. அப்படி கத்துக்காதவங்க தான் மதிப்பு இல்லாம போயிடுறாங்க.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு. 396

தோண்டத் தோண்ட கேணியில இருந்து தண்ணி ஊறுற மாதிரி, படிக்கப் படிக்க அறிவு வளரும்.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு. 397

படிச்சவங்களுக்கு எல்லா நாடும் ஊரும் சொந்த நாடு, ஊர் போல தான். அப்புறமும் ஏன்  சிலர் சாகும் வரைக்கும் படிப்பறிவு இல்லாம இருக்காங்க?

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து. 398

இந்தப் பிறவில கத்துக்கிறது, ஏழு பிறப்புக்கும் தொடர்ந்து வந்து உதவும்.

தாமின் புறுவது உலகின் புறக் கண்டு

காமுறுவர் கற்றறிந் தார். 399

படிச்சவங்க தனக்கு இன்பம் தர்ற படிப்பு உலகத்தில உள்ள எல்லாருக்கும் இன்பம் தர்றதைப் பார்த்து இன்னும் மேல மேல விரும்பிப் படிப்பாங்க.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை. 400

படிப்பு தான் சொத்து. மிச்சதெல்லாம் ஒன்னுமே இல்ல.

**

பார்க்கவும் – திருக்குறள் உரை பட்டியல்

**

எச்சரிக்கை : நிறைய மக்கள் திருக்குறள் உரை தேடி இந்தப் பதிவுக்கு வருவதால் இன்னும் கொஞ்ச நாளைக்கு திருக்குறள் உரையா போட்டுத் தாக்கப் போறேன் 🙂 !


Comments

3 responses to “கல்வி – திருக்குறள் உரை”

  1. marimuthu Avatar
    marimuthu

    the kural start with meaning local language

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      மாரிமுத்து, நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியலியே 🙁

  2. yamuna rani Avatar
    yamuna rani

    hello sir iam yamuna.naa oru tamil excibitionku kalanthuka poren.athula base ennana oru thirukurala erunthu oru story ready panni submit pannanu. are u get any idea plz reply